கள்ளனும் காசிநாதரும்

என்னுடைய அண்ணாமார் படித்தது, மட்டக்களப்பில் Central College என அறியப்படும் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் தான் . சின்ன வயதிலிருந்தே அவர்கள் விடுதியில் தங்கிப் படிக்க நேரிட்டது. அவர்கள் படிக்கும் போது தலைமையாசிரியராய் இருந்தவர் பிரின்ஸ் காசிநாதர். (1990 களில் பாராளுமன்றத்திற்கு மட்டக்களப்பு பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டவர்). இவரைப் பற்றி இலங்கை நண்பர்கள் அறிந்திருக்கக்கூடும். மிகவும் கண்டிப்பானவர். ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது எனக்கு இவரை யாரெனத் தெரியாது. நான் உள்ளே விடவில்லையாம். "உங்களை யாரென்று தெரியாது, அம்மா வரும் வரைக்கும் உங்களை உள்ளுக்கு விட முடியாது" என்று சொல்லி அவரை வெளியில் காக்க வைத்த 'பெருமை' என்னையே சாரும்.(நன்றி! நன்றி!!)

சொல்ல வந்ததை விட்டு விட்டு என் பெருமை பேசிக் கொண்டிருக்கிறேன். காசிநாதர் கண்டிப்பானவர் என்று சொன்னேன் தானே..விடுதியில் தங்கிப் படித்த ஒரு மாணவன் சரியான தெறிப்பாம்.( தெறிப்பு: குழப்படி என்றும் சுண்டுதல் என்றும் இரு பொருள்படும். கிழக்கின் வட்டார வழக்கு). ஒரு நாள் விடுதி மேலாளருக்குத் தெரியாமல் திரைப்படம் பார்க்கச் சென்றுவிட்டான் என்பதை யாரோ ஒரு 'நலம் விரும்பி' மேலாளருக்குத் தெரிவிக்க, அதை அவர் போய் காசிநாதரிடம் அறிவிக்க.. வந்தது வினை. ஐயா ஆறுதலாக படமெல்லாம் பார்த்துவிட்டு விடுதிக்கு திரும்பினாரா, அடுத்த நாள் தலைமையாசிரியரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது.

"டேய்! நீ படம் பாக்க போனியாமே?"
"ஐயோ! இல்ல சேர்!"
"உண்மையைச் சொல்லு...எந்தத் தியேட்டருக்கு போனனீ?"
"நான் போகல்ல சேர்!"
"படம் நல்லா இருந்ததா?"
"எனக்கு தெரியா சேர், நான் போகல்ல"

எத்தனையோ விதமாகக் கேட்டும் மாணவன் பிடி கொடுக்கவில்லை. "சரி! உன்னை நம்புறன்.. நீ போ!" என்றதுதான் தாமதம், தப்பினோம்! என்று மாணவன் வெளியேறும் போது

"படத்துக்கு போனது போனனீ..ஏன்டா செருப்பில்லாம போனாய்?"
"இல்ல சேர்..செருப்பு போட்டுட்டுத் தான் போனனான்"

அன்றைக்கு பிரம்புக்கு வேலை தான்! =O)

பெட்டகம்