ஒலிம்பிக் தேசம் 2 (ஒ.தே 1)

சைக்ளேட்ஸ் நாகரிகம்

இந்நாகரிகத்தின் வரலாறு (தமிழ்ச்சங்கத்தைப் போன்று) 3 காலகட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. முதல்(கிமு 3000 - 2000), இடை(கிமு 2000 - 1500), கடை(கிமு 1500 - 1100).இந்நாகரிகத்தினர் உலகிற்கு விட்டுச் சென்ற சொத்துகளில் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடிப்பன பரிஸ் மார்பிளிலான சைக்ளேட் சிற்றுருவங்கள். இச்சிற்றுருவங்கள் மட்டுமல்லாது வெண்கலம், எரிமலைக் குழம்பிலிருந்து பெறப்படும் ஒருவகைக் கல்- இவற்றாலான ஆயுதங்கள், தங்கநகைகள், கல் & களிச் சாடிகள் சட்டிகள் போன்றவற்றையும் இக்காலத்திற்குரிய எச்சங்களிலிருந்து நாம் காணலாம். தேர்ச்சி பெற்ற மாலுமிகளான சைக்ளேட்ஸ் நாகரிகத்தினர் மைலோஸ், தேரா(தீரா)(தற்போதைய சன்டோரினி) நகரங்களை மையமாகக் கொண்ட மிகவும் செழிப்பானதோர் கடல்சார் வாணிபத்தை நடத்தினர். அவர்கள் தமது ஏற்றுமதிப் பொருட்களை ஆசியாமைனர், ஐரோப்பா, வட ஆபிரிக்கா,கிரீட், மற்றும் கிரேக்கப் பெருநிலம் ஆகியவற்றிற்கு அனுப்பினர். இவர்கள் ஏஜியன், அயனியன் கடற் துறைமுகங்களை தம் பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களாக கொண்டிருந்தனர். மேலும் இத்தாலி, ஸ்பெயின் போன்ற மேற்கு சந்தைகளுக்குரிய கடல்வழிப்பாதையை பினீஷியர்கள், மினோஅர்களுக்கு முன்னரே பயன்படுத்தினர். மினொஅன், மைசீனியன் நாகரிகங்களின் பாதிப்பு இந்நாகரிகத்தில் காணப்பட்டது. தேராவில் எற்பட்ட எரிமலை வெடிப்பினால் இந்நாகரிகம் அழிவுற்றது என வரலாற்றாசிரியர்கள் நினைக்கின்றனர். இந்த எரிமலை வெடிப்பு என்றுமில்லாத அளவுக்கு பேரழிவை உண்டாக்கியதொன்றாகக் கருதப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட தேரா, காணாமல் போனதாகக் கருதப்படும் "அட்லான்டிஸ்" இன் தலைநகரமாக நம்பப்படுகிறது.

மினோஅன்
கிரீட்டின் மினோஅன் நாகரிகம் கிழக்கிலிருந்த எகிப்திய, மொசப்பொத்தேமிய(ஈராக்) நாகரிகங்களின் தாக்கத்தைக் கொண்டிருந்தது. இதுவரை ஐரோப்பாவிற் காணப்பட்ட எந்த ஒரு நாகரிகத்தையும் விட சிறந்ததாக விளங்கியது. சைக்ளேட்ஸ் நாகரிகத்தைப் போன்றே இத்ன் வரலாற்றையும் தொல்பொருளாராய்ச்சியாளர் 3 காலப்பகுதிகளாகப் பிரிக்கின்றனர். முதல் (கிமு 3000- 2100), இடை(கிமு 2100- 1500), கடை(கிமு 1500- 1100). முதல்(கிமு 3000- 2100) காலகட்டத்தில் நியோலித்திக் வாழ்க்கை முறையின் பல அம்சங்கள் இன்னும் புழக்கத்தில் இருந்தன. படிப்படியாக கிட்டத்தட்ட கிமு 2500ம் ஆண்டளவில் மக்கள், நோசோஸ்சை ஆண்ட மினோஸ் என்ப்படும் புராண அரசனின் பெயரால் அறியப்பட்ட தனித்தன்மை வாய்ந்ததொரு நாகரிகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இடைக்காலத்தை(கிமு 2500 - 1500) மினோஅன் பொற்காலம் எனலாம். அப்போது அவர்கள் அழகிய வேலைப்பாடுகளுடைய மட்பாண்டங்கள், உலோகவேலைகள், என்பனவற்றை தமது தொழிற்திறமை, கற்பனை என்பனவற்றை மூலமாகக் கொண்டு தயாரித்தனர். தனது இறுதிக்காலத்தில் வர்த்தகரீதியாகவும் இராணுவரீதியாகவும் வீழ்ச்சியுற்றது. இதற்குக் காரணமாயிருந்தது கிரேக்கப்பெருநிலத்தைச் சேர்ந்த மைசீனிய நாகரிகத்தின் வளர்ச்சியாகும். டோரியன் ஆக்கிரமிப்பாளர்களும், இயற்கை அனர்த்தங்களும் கிரீட் தீவைச் சூறையாடி அதன் திடீர் அழிவுக்குக் காரணமாயின. சைக்ளேட்ஸ் நாகரிகத்தினரைப் போலவேஇவர்களும் சிறந்த கடல் வல்லரசாக விளங்கினர். பினீஷியர்கள், கிரேக்கர்களுக்கு இவர்களே கடல்துறை முன்னோடிகள். இவர்களது பொருட்களும் மத்தியதரைக்கடற் பிரதேசத்தை தமது சந்தையாக கொண்டிருந்தன. எகிப்தியர்களால் மிகவும் மதிக்கப்பட்ட, போற்றப்பட்ட polychrome கமரெஸ் பாண்டங்களின் உற்பத்தி இடைக்காலத்தில் செழித்தது. கிமு 1700ம் ஆண்டளவில் நொசொஸ், ஃபீஸ்டொஸ், மாலியா, சேக்ரோஸ் எனும் இடங்களீல் பெரும் பூமியத்திர்ச்சி ஏற்பட்டது. இதனால் அழிந்த அரண்மனைகளை மீளக்கட்டும் போது அவற்றை ஒரு சிக்கலான கட்டமைப்பில் பல இரகசியப்பாதைகள், அடுக்குமாடிகள் உடையதாயும், அரச புரங்கள், ஊழியர் தங்குமிடம், வரவேற்புக்கூடங்கள், களஞ்சிய அறைகள், பட்டறைகள் என்பனவற்றுடன் உயர்தரமான, முன்னேற்றமடைந்த கழிவுநீர் அகற்றுவதற்கான கால்வாய் கட்டுமானமும் கட்டப்பட்டது. மினோஅன் ஈரச்சுதை(fresco) ஓவியங்கள் இவ்வரண்மனைகளின் உட்புறங்களை அலங்கரித்தன(இவற்றை தற்போது இராக்லியொன் தொல்பொருளாராய்ச்சி அருங்காட்சியகத்தில் காணலாம்). ஈரச்சுதை ஓவியங்கள் சாதாரணர் வீட்டிலும் காணப்பட்டன. இவ் ஓவியங்களில் சமய ஊர்வலங்கள், விளையாட்டுகள், எருதுச்சண்டை, தாவரங்கள், கடல் என்பன இடம்பெற்றன. இந்நாகரிகத்தினர் வாழ்வில், இயற்கையில் கொண்டிருந்த விருப்பை, ஈடுபாட்டைவெளிப்படுத்துவதிலும் மகிழ்ச்சியான, அமைதியான மக்கள் என்பதைக் காட்டுவதிலும் இந்த ஓவியங்கள் முக்கிய பங்கு வக்கின்றன. மினொஅன் நாகரிகத்தினர் கல்வியறிவுடையவர்களாகத் திகழ்ந்தனர். இவர்களுடைய ஆரம்ப எழுத்து வடிவம் எகிப்திய 'ஹைரோகிளிஃப்' ஐ ஒத்திருந்தது. பின்னர் கோட்டு வடிவ எழுத்திற்கு முன்னேறினர். இதனை தொல்பொருளாய்வாளர் Linear A என அழைக்கின்றனர். இவ் எழுத்து வடிவம் இன்னும் decipher பண்ணப்படவில்லை. இந்த எழுத்து வியாபார ஒப்பந்தங்கள், கொடுக்கல்வாங்கல்கள், அரச களஞ்சியத்திலிருந்த பொருட்களின் பட்டியல் என்பனவற்றை குறித்து வைக்க மட்டுமே பயன்பட்டது எனவும் தனிமனித கருத்துக்கள் இவ்வெழுத்துருவில் பதியப்படவில்லை எனவும் கருதப்படுகிறது. இந்நாகரிகத்தின் கிமு1500க்குப் பின்னான அழிவு மைசீனிய ஆக்கிரமிப்பாளரால் மட்டுமன்றி சைக்ளேட்ஸ் தீவுகளில் ஒன்றான தேராவில் ஏற்பட்ட எரிமலைக் குமுறலால் தூண்டப்பட்டு ஏற்பட்ட பூமியதிர்ச்சி தன்பங்கிற்கு உருவாக்கிய பேரலைகளால் ஏற்பட்டதும் என வரலாற்றாசியர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

மைசீனியர்
மினோஅன் நாகரிகத்தின் வீழ்ச்சியும் மைசீனிய நாகரிகத்தின் அசுர வளர்ச்சியும் சமகாலத்தில் நடந்துள்ளன. கிமு 1900- 1100 வரை ஆயுளை கொண்டிருந்த மைசீனிய நாகரிகத்தின் உச்சகட்டமாக பொற்காலமாக கிமு1500- 1200 வரையான காலத்தைச் சொல்லலாம். இந்நாகரிகத்தின் பெயர்க் காரணம் மைசினீ எனப்படும் புராதன நகரம். ஒரு பொது ஆட்சியாளரின் கீழ் அமைதியாக இருந்ததை குறிப்பதாக நகரங்களை சுற்றி மதில்களோ சுவர்களோ அற்ற மினொஅர்களின் அரசாங்கத்தைப் போலன்றி மைசீனிய நாகரிகத்தில் பல சுதந்திர குறு நில ஆட்சிகள் காணப்பட்டன. கொரிந்த், பைலோஸ், திரைன்ஸ் இவற்றுடன் பலம்மிக்க மைசினீயும் இச்சுதந்திர குறுநிலங்களுக்குள் சில. இலகுவில் தற்காத்துக் கொள்ளக்கூடியதான மலையுச்சிகளிலே மதிலாற் சூழப்பட்ட அரண்மனைகள் காணப்பட்டன. மைசீனியர்களின் முதுசொம் தங்கநகைகள், அழகுக்கலைப் பொருட்கள் என்பன. இவற்றை தற்போது அதென்ஸிலுள்ள தொல்பொருளாராய்ச்சி அருங்காட்சியத்தில் காணலாம். இவர்களுடைய எழுத்து Linear B என அறியப்படுகிறது. இதனை decipher பண்ணிய மொழி ஆய்வாளர்களால் கிரேக்க மொழியின் ஆரம்ப வடிவம் என இது அறியப்பட்டுள்ளது. கிரேக்கக் கடவுளரின் முன்னோடிகளை இம்மக்கள் வணங்கியுள்ளனர். போர்வீரராய் விளங்கிய இந்நாகரிகத்தினர் மறுபிறப்பில் நம்பிக்கை உடையவராய் இருந்தனர். கிமு 1500ம் ஆண்டளவில் மினொஅன் இடங்கள் அழிக்கப்படுகையில் மைசீனியர்களும் ஒரு சில இடங்களைத் தாக்கியுள்ளனர். மைசீனிய குறுநிலங்கள் சேர்ந்து ட்ரோயை எதிர்த்துப் போர் தொடுத்தமை குறிப்பிடத்தக்கது. மைசீனிய நாகரிகத்தின் தாக்கம் கிரீட்டையும் தாண்டி எகிப்து, மொசப்பொதேமியா, இத்தாலி வரை சென்றிருந்தது என்பதற்கு அவ்விடங்களில் தொல்பொருளாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் சான்று பகர்கின்றன. இந்த மைசீனிய நாகரிகம் இத்தாலி, லிபியா, அருகேயிருந்த கிழக்குப் பிரதேசங்கள் என்பனவற்றிற்குப் பரவியது. உள்நாட்டுப் பூசல்களாலும் டோரியர்களின் கிமு1100ம் ஆண்டளவிலான படையெடுப்பினாலும் இந்நாகரிகம் அழிவுற்றது. இதன் மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஏஜியன் தீவுகள், சைப்ரஸ் மற்றும் லிபியாவுக்கு இடம் பெயர்ந்தனர்.

பெட்டகம்