ஓரினச் சேர்க்கை

இன்றைக்கு 2 பதிவுகள் படித்தேன். தோழியரில் ஒன்று. மற்றது பொடிச்சியினது. உடனடியாக மனம் "ஓரினச் சேர்க்கையாளர்" பற்றிய அறிமுகம் எனக்கு எப்ப ஏற்பட்டது என்பதை யோசித்தது. சரியாக குறிப்பிட முடியவில்லை. இலங்கையில் இருந்த போது எனக்கு இவை பற்றி தெரிந்திருந்திருக்கக் கூடும். ஞாபகமில்லை. ஒரு த.சே.வின் அறிமுகம் ஏற்பட்டது சிட்னியில் கல்லூரியில் தான். ஒரு பெண். அவவின் பாலியல் தெரிவு அவவின் சுதந்திரம் என்பதே என் கருத்தாக இருந்தது/ இருக்கிறது. ஒரு conservertive குடும்பத்திலிருந்து வந்த எனக்கு எப்படி இந்தக் கருத்து முதலிருந்தே மனதில் ஒரு விதமான குழப்பமும் இல்லாமல் தோன்றிற்று / வேரூன்றியது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சந்தோஷமாகவும் இருக்கிறது. இவர்களின் சேர்க்கைத் தெரிவு சரியானதா இல்லையா என்பதைப் பற்றி ஒரு தனிப்பட்ட கருத்து எனக்கு இல்லை. ஒரு விஷயத்தில் தனிப்பட்ட கருத்து இல்லாதிருத்தல் சாத்தியமா என்பது பற்றிப் பிறகு பார்க்கலாம். ஆனாலும் ஒரு சக மாணவியாக அவவின் பேச்சும் நடவடிக்கைகளும்(5 வார்த்தையில் ஒன்று "f***", பெண் தோழியுடனான உறவு பற்றிய விளக்கங்கள்) என்னால் சகிக்கக் கூடியதானவையாக இருந்ததில்லை. அதற்காக எப்பவும் அவவோடு அளவாகவே வைத்துக் கொள்வேன். அவள் தவறாக எடுத்துக் கொள்வதில்லை என்பது பெரிய ஆறுதல். ஆனால் வகுப்பின் வழமையான பகிடி சேட்டைகளில் சேர்ந்து முஸ்பாத்தி பண்ணியிமிருக்கிறேன்.

இரண்டாவது அறிமுகம் ஒரு ஆண்.அதே கல்லூரியில் இரண்டாமாண்டின் போது. ஓரளவுக்கு ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றி, அவர்கள் எதிர் நோக்கும் குழப்பங்கள் பிரச்சனைகள் பற்றி தெளிவு கிடைத்தது இவனது அறிமுகத்தினால் என்று சொல்லலாம். கொஞ்சம் அதிகப்படியான பெண்மையுடன் கூடிய பாவனை. உடல்வாகும் அப்படியே.. வளர்த்துக் கொண்டிருக்கும் தலைமயிர். Robert என்ற பெயருடையவன். நகம் வளர்த்து தெளிந்த நகப்பூச்சும் பூசியிருப்பான். முற்போக்குச் சிந்தனைகளுடையவன் என்று சொல்லலாம். இதே வகுப்பில் இருந்த சிலருக்கு இவன் அவர்களுடைய குழுவில் இடம் பெற்றது பிடிக்காமல் ஆசிரியரிடம் போய் இவனை குழுமாற்றம் செய்த "பெருமை" உண்டு. எங்கள் குழுவில் இவன் மட்டும்தான் ஆண். பெண்ணாக மாறப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டேயிருப்பான். நாங்களும் அவனுடம் இருந்து பெண்ணாக இருப்பதன் நன்மை தீமைகளை அலசி ஆராய்வோம். சிறுவயதிலிருந்தே தான் தனிமையாக உணர்ந்ததாகச் சொல்வான். Princess என்பதே பள்ளியில் அவனது பட்டப்பெயராக இருந்திருக்கிறது.

ஒரு நாள் வந்தான்..வாகன ஒட்டுநர் அனுமதிப்பத்திரத்தைக் காட்டினான். அதில் "Sarah" என்று பெயர் மாற்றப்பட்டிருந்தது. சட்டத்தின் முன் தான் ஒரு பெண் என்பதை நிலைநிறுத்தும் முயற்சியின் பலன் அது என்பதை தெளிவாக விளங்கப்படுத்தினான். கல்லூரிக்கும் தேவையான அத்தாட்சிகளைக் கொண்டுவந்து சேராவாக மாறிவிட்டான். தொடர்ந்த வாரத்தில் இதுவரை ஆண்களின் ஆடையில் வலம் வந்த சேரா முதன் முதலாக ஒரு நீண்ட பாவாடையும் ஒரு வடிவான் மேற்சட்டையும் அணிந்து வந்து, வகுப்பில் சலசலப்பை ஏற்படுத்தினாள். கிசுகிசுப்பான பேச்சுகளும் நமுட்டுச் சிரிப்புகளும் நிறைந்த அந்தக்கணத்து வகுப்பை போன்று நாராசமானதாக வேறொன்றும் அவளுக்கு இருந்திராது என்பது திண்ணம். எங்களுக்கு, அதாவது குழுவிலிருந்த பெண்களுக்கு சேராவை பெண்ணாய் பார்ப்பதில் பிரச்சனை இருக்கவில்லை.

இரண்டு மூன்று மாதங்கள் சென்றிருக்கும், வகுப்பிலே ஆசிரியர் இல்லாத சமயம் பார்த்து தீவிர "ஹோமோஃபோபிக்" ஒருவனுக்கும் இவனுக்கும் தர்க்கமேற்பட்டது.

"நீயெல்லாம் கடவுளுக்கு எதிரானாவன்"
"எதனை ஆதாரமாக வைத்து இப்படிச் சொல்கிறாய்"
"பைபிளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பாவிகள், தண்டிக்கப்படுவார்கள் என்றெல்லாம் சொல்லியிருக்கிறது"
"அதற்கு நான் என்ன செய்யட்டும்..நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்"
"அஹா! உன் செய்கைகளை ஆமோதிக்கும் கடவுளர் யாருமில்லை, அதனால் நீ கடவுள் பக்தியில்லை எனச் சொல்கிறாய்"
"என் காதலன் கத்தோலிக்கன்.அதற்கு என்ன சொல்கிறாய்"
"நரகத்திற்குப் போவான்"....

இப்படியே தொடர்ந்து பல அனாவசிய கோணங்களையும் தொட்ட அந்த விவாதம் கடைசியில் மற்றவன் "உன்னுடன் ஒரு அறையில் இருப்பதே என் மேல் ஏதோ ஊருவது போலுள்ளது" என்று சொல்லி வெளியேறியதில் முடிவுற்றது. அன்றைக்குத்தான் எனக்கு உறைத்தது, இப்படியும் மடத்தனமான ஆட்கள் இருக்கிறார்களே என்று. இவனும் சக மனிதன் தானே. உனக்கும் இவனுக்கும் செல்லப்பிராணியின் தெரிவில் வித்தியாசமிருக்கலாம்..உனக்கு நாயும் அவனுக்கு பூனையும் பிடிக்கலாம், அதற்காக தர்க்கம் செய்து,கீழ்த்தரமாக நடந்து கொள்வாயா?ஒருவனது தனிப்பட்ட விடயமான பாலியல் தெரிவு மட்டும் ஏன் இவ்வளவு விமர்சனத்திற்குள்ளாக வேண்டும்?

தப்பித் தவறி பழைய ஞாபகத்தில் Rob என்று கூப்பிட்டு நாக்கை கடித்து Sarah என்று நான் மாற்றியிருக்கிறேன்.ஒன்றும் பேசாது, அது பரவாயில்லை என்று சொல்லி, வேண்டுமென்று செய்யப்பட்ட தவறல்ல என்பதைப் புரிந்து கொண்டவள்.

ஆனாலும் அவனது "அவள்" மாற்றம், சுற்றியிருந்த எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. எதிர்ப்பாலர்மேல் ஈர்ப்பு இருப்பதையே நியதி என்று கண்டும் கேட்டும் வளர்ந்தோருக்கு இம்மாதிரியான பாலியல் தெரிவுகள் அதிர்ச்சியளிக்கும். ஒரு நாளும் காணாத ஒன்று, வழமைக்கு மாறான ஒன்றாக ஒருவருக்கு தோன்றுவது, இன்னொருவருக்கு மிகச் சாதாரணமான ஒன்றாக இருக்கும். ஆணொருவருக்கு பெண்ணில் ஈர்ப்பு வருகிறது. ஒரு ஆண் தன்னினச் சேர்க்கையாளருக்கு இது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்றாக இருக்கும். அடிப்படை வித்தியாசங்கள் தான் மனிதர்களை ஈர்க்கின்றன, வேறுபடுத்துகின்றன. இயல்பாகவே இருக்கும் வித்தியாசங்கள் போன்று ஒருவர் செய்யும் தெரிவுகளும் அவரை சமூகத்தில் அடையாளம் காட்டும். ஆனால் துரதிஸ்டவசமாக சமூகத்தின் அங்கத்தவர் என்ற முறையில், சக மனிதப்பிறவி என்னும் அடிப்படையில் தன்னினச் சேர்க்கையாளர்கள் பெரும்பாலானோரால் பார்க்கப்படுவதில்லை. அந்நியப்படுத்தப்பட்டு, அருவருக்கப்படும் நிலையே காணப்படுகிறது.

செய்வதற்கு உரிமையில்லாத செயலான பிறரின் அந்தரங்கத்தினுள் மூக்கை நுழைப்பதும், அதன் மீதான விமர்சனமும் தேவையற்றன. தெரிவுகள் தனிப்பட்டவை, அவற்றில் தலையிடுவதோ, விமர்சிப்பதோ நாகரிகமல்ல. அப்படியே விமர்சிக்கத்தான் வேண்டும், அதுதான் வாழ்வினைச் செலுத்துகிறது என்று நினைத்தால் அதை அழுக்கான அந்தரங்கங்களுக்குள் புதைத்துக் கொள்வது புத்தியான செயல்.

தார் இட்ட வீதியிலே கார் ஓட்டும் வேளையிலே...

"ப்ரூம்..ப்ரூம்"
"என்னடா நித்திரையில காரோடுறா"...

இப்படி ஆரம்பிக்கும் விளம்பரத்தை ஐரோப்பிய தமிழ் வானொலி(எதென்று மறந்து போச்சு) நேயர்கள் கட்டாயம் கேட்டிருப்பார்கள். அண்ணாவின் மூத்த மகள் அடிக்கடி சொல்லிச் சிரிப்பாள்.

நான் கேட்பது இதுதான்..யாராவது கணவரிடம் கார் ஓட்ட பழகுறீங்களா? நான் உங்களுடன் ஒத்துணர்கிறேன்(Empathize). ;o)

பயிலுனர் அனுமதி எடுத்து 1 வருஷத்திற்கும் மேலே. இன்னும் பயில்கிறேன். வாகனத்தை கையாளும் பக்குவம் வந்ததும் என்னிடம் பழகலாம் அது வரை பயிற்றுநரிடம் பழகு என்று கணவரும் சொல்ல சரியென்று தலையாட்டினதில் ஆரம்பித்தது. அனுமதி கிடைத்து 3- 4 மாதங்களின் பின் தான் வகுப்புக்கான ஒழுங்கெல்லாம் செய்து..பயிற்றுனரிடம் கிழமைக்கு 2 வகுப்பு படி ஆரம்பித்தேனா..5 மாதமாய் தேடிக் கொண்டிருந்த வேலை கிடைத்தது.

7 வகுப்போடு பயிற்சியும் நின்று போச்சு. வேலைக்குப் போனேன். கிடைக்கிற நேரத்தில் கணவரிடம் பழகலாம் என்றால் 10 வகுப்பு முடித்து விட்டு வந்தால்தான் காரைத் தொடவே விடுவேன் என்று மிரட்டல்! ஹ்ம்..இந்த பிறவியில் நமக்கு லைசென்ஸ் கிடைக்கது போல என்று நொந்து கொள்வேன். 2ஆவதாக இன்னொரு வேலை கிடைத்தது. அதற்குப் போனேன். 1 மணித்தியாலம் பேருந்துப் பயணம். எலும்பெல்லாம் ஏதோ குலுக்கல் போட்டியில் கலந்து கொண்டுள்ளது போலிருக்கும். தொடர்ந்து 6- 7 மணித்தியாலம் call centreல் வேலை. வீட்ட வந்தா விழுந்து படுக்கத்தான் சொல்லும். ஒருகட்டத்தில் காது வலியும் வந்து விடவே அந்த வேலையை விட்டேன்.

2 மாதம் வீட்டிலிருக்க வேண்டி வந்தது. இந்த இடைவெளியில் கார் பழகல் திரும்ப வித்தியாரம்பம். 10 வகுப்புக்கு பிறகு கணவரிடம் பழகலாம் தானே என்று புதிதாக 3 வகுப்பு முடித்தேன். அவரிடம் போனால்..இன்னும் 10 கிளாஸ் போ என்று வாரி விட்டார். நான் விட்டேனா, ஒரு வகுப்புக்கே $30. 3 வகுப்பு முடிய கணவரின் நண்பரிடம் போய், "அண்ணா, சொல்லித்தாங்க" என்று பிடியாய் பிடித்துக் கொண்டேன். அவருடன் 3 - 4 தடவை பயிற்சி. கணவருக்கு ரோசம் வந்து "வண்டியை கையாளத் தெரிகிறது உனக்கு" என்று சொல்லி பழக்க ஆரம்பித்தார். வந்தது வினை!ஓட்ட ஆரம்பித்து முதல் சில நிமிடங்களுக்கு வண்டி அதற்குரிய லேனை விட்டு வெளியே போகும்..உள்ளே வரும்..ஓட்டுனர் கதி அந்தோ!! அதோடு விடுவேனா..எனக்கும் பெரிய மைக்கல் ஷூமாக்கர் என்று நினைப்பு!அக்சிலரேட்டரை அழுத்துவது எனக்கே தெரியாம நடக்கும். வேகம் அதிகம் போனால் போச்சு!(உண்மைதானே!). அடுத்து வரும் ..ஆப்பு வைப்பதெற்கென்றே ஒரு ரௌண்டபவுட்.

"பொறு..பொறு.."
"அந்த வாகனம் தூரத்தில தான் வருது..நான் எடுக்கிறனே"
"நான் சொல்றன்..பொறு".

ஒருமாதிரி எல்லாம் சமாளித்து ஓடினாலும் எங்கேயாவது பிசகி கணவர் வாயிலிருந்து வார்த்தை கடைசியாய் கடுமையாய் வந்ததோ..தொலைந்தேன்! அட..கண்ணாடி இவ்வளவு ஊத்தையா இருக்குதே..கையில் நகம் வளர்ந்து விட்டது..வெட்டணும்..அந்த பூமரம் ஏன் பூக்கவில்லை..இரவு என்ன சாப்பாடு (வேறொன்னுமில்லை..இதெல்லாம் அவர் பக்கத்திலிருந்து திட்டு வரும்பொழுது ஷ்ரேயா மனதில் திரையிடப்படுபவை ..ஹிஹி!! ) அவர் பாட்டுக்கு அ(க)ர்ச்சனை செய்வார், நான் பாட்டுக்கு இதெல்லாம் யோசித்து விட்டு, கடைசியா..நான் செய்தது பிழைதான்/சரியென்றால் நியாயம் சொல்லிவிட்டு மறுபடியும் கியர் மாற்றி, ஓட்டத்தொடங்குவேன். அடுத்த கணை வரும்:

"உனக்கு சுரணையே இல்லையா??"
"கையிருப்பு முடிஞ்சு போச்சு போல..போகும்போது வூலியில் (பல்லங்காடி) 4- 5 கிலோ வாங்கிட்டுப் போவம்"

அங்கே ஒரு சிரிப்பு பூத்து எல்லாம் சுமுகமாகிவிடும்..அடியேன் அடுத்த வெட்டு வெட்டும் வரை அல்லது லேனுக்குளிருந்து வாகனம் கொஞ்சம் வெளியேறப் பார்க்கும் வரை...

மார்கழியிலிருந்து புது வேலைக்குப் போவதாலும், கணவருக்கு கணக்காய்வாளர்கள்(auditors) வந்ததாலும் என் காதும் அவரது இதயமும் இப்போதைக்கு சற்றே ஓய்வெடுக்கின்றன.

பயம்

செய்து கொண்டிருக்கிறதெல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு, அம்மாவின் மடியில் போய் சுருண்டு கொள்ள/சாய்ந்து கொள்ள வேண்டும் போல எப்போதாவது உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? இன்றைக்கு ஒரு குறிப்பிட்ட காரணமுமின்றி அப்படிச் செய்ய வேணும் போல் மனதில் தோன்றிற்று.

அரிதாக எப்போதாவது எனக்கு ஒரு பயமும் வருவதுண்டு. ஒன்றுமே நடந்திராது, காரணமும் இருக்காது..ஆனாலும் ஏன் எதற்கென்று தெரியாமலே பயப்படுவேன். இது குளிர்காலத்தில் எற்படும் (winter blues) பாதிப்பல்ல. பதின் வயது முதலே இருக்கிறது என நினைக்கிறேன்.இந்த மாதிரி பயமாக இருக்கும் போதும் முதலில் சொன்னது போல அம்மாவின் மடியில் சுருண்டு கொள்ள அல்லது மிக நெருங்கியவர்களுடன் இருக்க வேண்டும் போலிருக்கும். சில சமயங்களில் 2- 3 நாட்களுக்கும் தொடரும் இந்தப் பயத்திற்குக் காரணம் யாருக்காவது தெரியுமா?

பவள மல்லிகை

பாட்டி வீடு. பெயரைச் சொல்வதை விட, புளியடியார் என்றால் தான் இன்னும் வடிவா ஊருக்குள்ளே தெரியும். ஒரு சிவப்பு பெரிய 'கேற்'. ஓட்டிக் கொண்டு வரும் (ஒரு அளவான) வேகத்தில சைக்கிள அதில் மோதினா, கொளுக்கியும் போடாமலிருந்தா, தகரத்தில அடி வாங்கின சத்தத்துடன் திறக்கும். படலையிலிருந்து வீட்டுக்கு 25மீ இருக்கும். 2 பக்கத்திலும் பூமரங்கள். நடுவிலே கொஞ்சம் வெண்மலும் செம்மணலும் கலந்த
நிறத்தில் பாதை. என்னென்ன பூமரம் என்றெல்லாம் ஞாபகமில்லை. போய் 8 ஆண்டுகளாகினதினால் என்று சாட்டு சொல்ல மாட்டேன். அங்கே போனபோதெல்லாம் விளையாட்டும், கிடைக்கிற விதம் விதமான சாப்பாடுமே பிரதானமாக மனதில் முன்னிற்கும். மச்சி(மச்சாள் வயதுக்கு நிறையவே மூத்தவ என்பதால் இப்படித்தான் கூப்பிடுவது)சின்னப்பிள்ளைகளுக்கு மேலதிக வகுப்பு எடுப்பா. அப்ப அங்கே நானும் போயிருந்து சம வயதுப் பிள்ளைகளுடன் இருந்து படிப்பேன். எல்லா நாளும் சரியாக தமிழும் எழுதி, கணக்கும் செய்து வந்திருந்தேன்...எப்பயாவது தடுக்குப்படவேணும் என்கிற நியதிப்படி பால் + சோறு = பால்ச்சோறு என்று எழுதி பிழை விட்டது நல்ல ஞாபகம். இதே வகுப்பிலிருந்த பையன் நான் இந்தச் சம்பவம் நடந்து 3- 4 வருடங்களுக்குப் பிறகு (அந்த சில வருட இடைவெளியில் 10- 11 வயதுக்குரிய வளர்ச்சி வர ஆரம்பித்திருந்தது) விடுமுறைக்கு பாட்டி வீட்ட போன போது மச்சாளைக் கேட்டான் "முதல் ஒராள் வருவாவே..அவா இப்ப வாறேல்லையோ" என்று. மச்சாள் சொன்னா "அவதான் இவ" என்று. அந்தப் பையனின் கண் விரிந்தது. சில வினாடிகள் இமைக்காது பார்த்தவன் "வளந்து போனா..அதுதான் அடையாளம் தெரியேல்ல" என்று சொல்லிவிட்டு, தந்த கணக்கை செய்ய தொடங்கி விட்டான். ஏனடா தன்னில் இப்படி வளத்தி இல்லை என்று யோசித்திருப்பானோ என்னவோ!! ;o)

வீட்டுக்குப் போகிற வழியில் பூமரம் நிற்கும்..என்னென்ன என்று தெரியாது என்று சொன்னேன் தானே, ஆனால் நல்ல வடிவானதாக இருக்கும்.கனாஸ் வாழை இருந்ததாக ஞாபகம். மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு நிறத்தில் பூக்களுடையது. அப்படியே நேரே போனால் வாசல்.இடப்பக்கமா முற்றம் தொடரும். முற்றத்திற்கும் வீட்டிலிருந்து இன்னொரு வாசல். ஒரு கூடத்தில் 2ம் சந்தித்து வலப்பக்கமுள்ள கதவுக்குள்ளால் போனால்வீட்டின் ஹோல் வரும். நுழைந்தவுடன் வலப்பக்கம் கேற்றை பார்க்கும் சாளரம். நேர் முன்னல் சாமியறை. அதுக்குப் பக்கத்தில் பாட்டி/மச்சாள்/அத்தையின் அறை. அதைத்தாண்டிப் போனால் மாமி&மாமாவின் ஒரே சாய்மணைக் கதிரை.கதிரைக்கு இடப்பக்கத்தில் ஒரு 3 அடி தள்ளி சாப்பாட்டு மேசை. அதுக்கும் இடப்பக்கமாக ஒரு சின்ன ஓடை.இதன் கதவு முதல் சொன்ன முற்றத்துக்குள் திறக்கும். இது தான் அந்த வீட்டிலேயே பிடித்த இடம்...சைக்கிள் வைக்கும் இடம் & புத்தக அடுக்கு இருந்த இடம்.

சாய்மணைக்கதிரை தாண்டினால் ஒரு சின்ன கூடம்.இதற்கு இடப்பக்கத்தில் சமையலறை.வலப்பக்கத்தில் மாமா/மாமியின் அறை. இதை தாண்டினா கொல்லைப்புறத்துக்கு போகும் வாசல்.தரை ஒரு 5 அடிக்கு 15 அடி சாணியால் மெழுகியிருக்கும்.இதில் இடப்புறம்தான் 2 வாங்கு மேசை போட்டு மச்சாள் வகுப்பு நடத்துவது. வலப்புறம் ஒரு குகை மாதிரி.அதற்குள் இல்லாத சாமானே இருக்காது!!! கிணறு வடமேற்கில் இருக்கும்(ஏன் அள்ளுமிடத்தில் தடுப்புச்சுவர் 99% கிணறுகளுக்கு இல்லை என்பது புரியாத புதிர். பாட்டி கண் தெரியாத காலத்தில் அதற்குள் தடுக்கி விழுந்து, பிறகு கதிரையொன்றைக் கட்டி இறக்கி தூக்கி எடுத்தார்கள்!!). கிணற்றடி வேலியில் கொவ்வைக் கொடி படர்ந்திருக்கும்.

கிணற்றுப்பக்கம் போகாமல் பின்புற வாசலிலிருந்து நேரே பார்த்தால்..ஆகா!!அந்த சின்ன பவள மல்லிகை(யாருக்காவது இதன் தாவரவியற் பெயர் தெரியுமா?) மரம் வெள்ளையா பூவுதிர்த்து பச்சையாய் இன்னும் பல பூக்கள் தலையில் சூடி நிற்கும் அழகு! பின்னேரத்தில் அதன் வாசம்..ம்ம்ம்...நினைத்துப் பார்க்கும் போது அதன் வாசம் இன்னும் என் மூக்கில்.

மாமி/அத்தை இதில் பூவெடுத்து சாமிக்கு வைப்பார்களோ என்னவோ! விடுமுறைக்குப் போகையில் என்னென்ன முஸ்பாத்தி பண்ணலாம் என்பதே யோசனையாக இருக்கும். பெரியம்மா பெரியப்பா பாட்டி, மாமி மாமா அத்தை மச்சாள் இவர்களெல்லாம் விடுமுறையின் அங்கங்கள். அவர்களை அவர்களாகவே, தனி நபர்களாக பார்த்ததேயில்லை. என் மனதில் அவரவருக்கென்று ஒரு பிம்பம். அதற்கூடாகவே பார்த்திருக்கிறேன். இப்போ யோசிக்கும் போது தான் மனதில் உறைக்கிறது. இன்னொருமுறை இன்ஷா அல்லா போகக் கிடைத்தால் மாமி, அத்தை, பெரியம்மா என்று நிறக்கண்ணாடி கொண்டு பார்க்காமல் அவர்களாகவே பார்ப்பேன் என தோன்றுகிறது. இலங்கையிலிருந்து புறப்பட்டதிலிருந்து நிறைய கற்றிருக்கிறேன். பிறரைப் பார்ப்பதிலும் ஒரு கொஞ்சம் தெளிவும், முதிர்ச்சியும் வந்துள்ளது என்றும் நினைக்கிறேன். இப்போது போய் பார்க்க முடிந்தால் ஒவ்வொருவரும் தங்களுக்கேயுரிய வாசம் வீசுகையில் அதை அப்படியே உணரக்கிடைக்கும்.

சமையல்.. சிறு குரைப்பு!

நீண்ட நாளைக்குப் பிறகு ஒரு உறவினரோடு கதைத்தோம்.(தொலைபேசி இணைப்பை மீட்டுக்கொண்டுள்ளோம்!) பேச்சு வாக்கில் நான் மீண்டும் வேலைக்குப் போவது பற்றியும் அதனால் நாளாந்த வாழ்க்கையில் ஏற்படும் மற்றங்கள் பற்றியும் கதைத்துக் கொண்டிருந்த போது என் கணவர் அவவிடம் சொன்னார் :”இவ சும்மாவே சமைக்கப் பஞ்சி, இப்ப வேலைக்கும் போய் வருவதில் சமையல் எல்லாம் அவசரச் சமையலாகவே இருக்குது” என்று. ஒலிபெருக்கியுள்ள தொலை பேசியாதலின் ஒரெ நேரத்தில் கதைக்க முடியும். ஓருவர் பேசி முடித்து நம்மிடம் தரும் வரை காத்திருக்கத் தேவயில்லை. கணவர் சொன்னதற்கு பதிலாக “சும்மாவே சமையல் என்றால் எட்டி நிற்கிற ஆள் நான், மற்றது வேலையால வந்தவுடனே சமைக்கவும் ஏலாதுதானே, களைப்பா இருக்கும். இவரைக் கேட்டா சிலநேரம் செய்து தருவார்” என்று நான் சொன்னேன். அதற்கு அந்த பெரியம்மா என்ன சொன்னா தெரியுமா..”பொம்பிளப் பிள்ளைகள் சமையல் விருப்பமில்லை, ஏலாது என்றெல்லாம் சொல்லப்படாது! ஆம்பிளப்பிள்ளையை, அதுவும் புருசனிட்ட சமைக்கச் சொல்லுறதா..என்ன பழக்கம்! விட்டா வீட்டையும் ஒழுங்குபடுத்தச் சொல்லி கேப்பீர் போல கிடக்கு” What the!!

ஏன் பெண்களுக்கு பிடிக்காததை மறுக்கும் அல்லது செய்யாமல் விடும் உரிமை இல்லையா? ஆண் சமைப்பதில், வீட்டு வேலைகளில் பங்கேற்பதை இன்னும் தரக்குறைவான செயலாகத்தானா கருதுகிறோம்?இந்த பெரியம்மா இப்படிப்பட்ட கருத்தை கொண்டிருக்க என்ன காரணம் இருக்கக் கூடும்? ஒரு வேளை பெரியப்பா, தான் எப்போதாவது சமைக்க வேண்டி வந்து விடும் என்று நினைத்து இப்படி சொல்லிக் கொடுத்தாரா– கல்யாணமான் புதிதில்? :o)

அல்லது சிறு வயதிலிருந்தே பழக்கப்பட்ட, மனதில் ஊறவைக்கப்பட்ட ஒரு விடயமா?இந்த மனநிலை முதன் முதலில் யாரால் புகுத்தப்பட்டிருக்கும் என்று யோசிக்கிறேன். காலக்கிரமத்தில் வாழ்வில் ஒரு அங்கமாக ஆண் வெளி வேலைக்கும் பெண் வீட்டு வேலைகள் & குடும்பதிற்கும் என்று மனதில் ஊறி விட்டது. இந்தக் கட்டை உடைத்து வெளிவர முயற்சிக்கிற வேளையில், அதற்கு தடைக்கல்லாக நாமே இருக்கிறோம். தலைமுறை தலைமுறையாக இருந்து வரும் சில பழக்கங்கள், நடைமுறைகள் மாற்றப்பட வேண்டியவை தான் என உணரப்பட்டாலும் பெரும்பான்மையினர் அம்மாற்றத்தைக் கொண்டுவரும் முயற்சியில் ஈட்டுபாடு காட்டுவதும் இல்லை, காட்டுவோரை முன்னெடுத்துச் செல்ல விடுவதுமில்லை. சமையல், வீட்டுவேலை, குழந்தை வளர்ப்பு என்பவற்றில் குறிப்பிடத்தக்களவு ஆணின் பங்களிப்பு தற்போது காணப்படுகிறது. ஆனாலும் இந்த பகிர்வு மனப்பான்மை புலம் பெயர்ந்தவர்களிடமோ அல்லது நகர் வாழ் இளைஞர்களிடமோ தான் அதிகளவில் காணப்படுகிறது என்றே நினைக்கிறேன். சாதாரண மத்தியதரக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, மணந்துள்ள ஒரு சராசரி ஆணின் குடும்ப வாழ்வில் அவனுடைய பங்களிப்பானது வருமானம் சார்ந்ததாக மதிக்கப்படுகிற சூழ்நிலையில் அவனுக்கு வீட்டு வேலைகள், குழந்தை பராமரிப்பு/ வளர்ப்பு என்பனவற்றை மனைவியுடன் பகிர்ந்து செய்யலாமே என்கிற மனப்பாங்கு வருமா?

இப்படி ஆண், பெண் இருவரும் பால் சார்ந்த தங்கள் கடமைகளுக்கு அப்பால், ஒரு குடும்பமாக ஒன்றிணைத்து பார்க்கப்படுவது எப்போது? அவர்களது பால் சார்ந்த கடமைகளை அவர்கள் நிறைவேற்றும் அல்லது நிறைவேற்றாத முறைகளாலன்றி, அவர்களை அவர்களாகவே - சக மனிதர்களாக – பார்ப்பது எப்போ?

என்னதான் சொன்னாலும் “எப்பிடி செய்யிறதென்று மறந்து போச்சு” என்று சொல்லிக் கொண்டே கணவர்கள் தயாரிக்கும் உணவின் சுவையே தனி என்பது பாவம்! பெரியம்மா அறியாத ஒன்றாகவே இருக்கப் போகிறது!! ;o)

பிறந்த நாட்கள்


சந்திர வதனாவின் அதிசயம் பார்த்ததும் இது ஞாபகத்திற்கு வந்தது.

என்னுடன் படித்த தோழியின் பிறந்த நாளும் என் அப்பாவின் பிறந்த நாளும் ஒரே நாள்.
என்னுடைய பிறந்த நாளும் அவளது தந்தையின் பிறந்த நாளும் ஒரே நாள்.

இருக்கிறதே 365 (366) நாள்தான்..இதில்தானே எல்லாருடைய பிறந்த நாட்களும் வரவேண்டும், ஆனாலும் ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே ஏற்படுகின்ற சில எழுமாறான இப்படிப்பட்ட ஒற்றுமைகள் வியக்க வைக்கின்றன.

ஒன்றும் பலதும்

ஒருசொல் பல பொருள் தெரியும்…(உதாரணமாக 'அணை' = தடுப்பு(அணைக்கட்டு), அணைத்தல் (மேல்kind இதை செய்ய முடியாம தான் புலம்புறாங்க ;o) ) , நூர்த்தல்(விளக்கை அணைத்தல்) இப்படி..

ஒரு வசனத்திற்கு 3 பொருள் கண்டு பிடித்தார் எங்கள் கணித ஆசிரியர். (சொல்லாததுக்கே அர்த்தம் கண்டுபிடிக்கிற இந்த நாளில் இதெல்லாம் பெரிய விஷயமா என்று கேட்கிறீர்களா..அதுவும் சரிதான். சரி சரி கதைக்குப் போவம் வாங்க). வீட்டுப்பாடம் செய்து வரச் சொல்லியிருந்தார். அன்றைக்கு வகுப்பில் மாணவர் வரவும் சற்று குறைந்திருந்தது. ஓரு மாணவனை எழுப்பி “வீட்டுப்பாடம் செய்தாயா?” என்று கேட்க அவனும் அரிச்சந்திர மூர்த்தியாகி “நான் வீட்டுப்பாடம் செய்து கொண்டு வரயில்ல சேர்” என்று சொன்னான். அதற்கு ஆசிரியர் “எனக்கு விளங்கவில்லை ..நீ சொன்ன வசனத்துக்கு 2 பொருள் வருது.. நீ எதை சொல்லுகிறாய் என நான் எப்படி தெரிந்து கொள்வது?” என்று சொல்லி, அந்த 2 விளக்கங்களையும் சொன்னார்

1. வீட்டுப்பாடம் செய்து கொண்டு வரவில்லை (அதாவது..செய்யவேயில்லை)
2. வீட்டுப்பாடம் செய்து கொண்டு வரவில்லை (செய்த பாடத்தை கொண்டு வர மறந்தாச்சு)

வகுப்பு சிரிக்க ஆரம்பிக்க, ஆசிரியர் தொடர்ந்து..”நீ வகுப்புக்கு வந்திருக்கிறாய் அதனால இந்த கடைசி விளக்கம் உனக்குப் பொருந்தாது! என்று சொல்லி இதையும் சொன்னார்
வீட்டுப்பாடம் செய்து கொண்டு வரவில்லை!!

கணக்கு ஆசிரியர் எத்தனை கொம்பினேஷன் ஏலும் என்று பார்த்திருக்கிறார் போல!


பி.கு: அவர் 4 பொருள் சொன்ன மாதிரி ஒரு ஞாபகம்….ஆனாலும் 3 தான் இப்ப நினைவிற்கு வந்தது. 4 வதை கண்டுபிடிச்சா சொல்லுங்க..திருத்தி விடுகிறேன்.

மனவருத்தம்

சென்ற கார்த்திகை மாதத்தில் ஒரு நாள் வீட்டுக் கணினியில் வலை மேய ஆயத்தமாகும் போது ( நான் இன்னும் dial-upதான்) திடேரென்று பார்த்தால் ஒரு பிக்கினி அணிந்த பெண்ணின் படம் கணினித் திரையின் வலது மூலையில் வந்திருந்தது. என்னடா இது இவ்வளவு பாதுகாப்பு போட்டிருந்தும் எரிதமாக குறிப்பிட்ட தளத்திற்கான சுழற்றி(dialer) தரவிறக்கியிருக்கிறதே என நொந்து கொண்டே அதை கணினியிலிருந்து நீக்கியிருந்தேன். அப்போது ஒன்றும் பிரச்சனையாக மனதில் தோன்றவில்லை. பிறகு 2- 3 நாடகளில் கணவர் வந்து தான் கணினியில் ஏதொ வேலை செய்து கொண்டிருக்கும் போது நான் மேலே குறிய படியே சுழற்றி தெரிந்ததாயும் தான் அதை நீக்கியதாயும் குறிப்பிட்டார். இப்படியான பாலியல் தளங்களுக்குச் செல்லும் பழக்கமோ தேவையோ எங்களிருவருக்கும் இல்லை.அப்பத்தான் கணவர் சொன்னார் எங்கள் வீட்டிற்கு வந்து தங்கியுள்ள உறவினரின் விளையாட்டாக இருக்குமென்று. நான் நம்பவில்லை..எரிதம் பற்றி,வலையுலாவி அபகரிக்கப்படுவது பற்றி அறிந்திருப்பதால் அப்படியான ஒரு நிகழ்வாக இருக்கலாம் என கணவரிடம் கூறியிருந்தேன்.

தனக்கும் அவை பற்றித் தெரியுமெனவும், தான் உறவினருக்குக்கென்று கொடுத்திருந்த பயனர் பெயருக்குரிய குக்கீஸ் ஐ பார்த்ததாகவும் சொன்னார். அதில் முழுக்கவும் பாலியல் தளங்களே இருந்ததாம். இந்த அண்ணாவின்(இந்த வார்த்தைக்கு தகுதியானவரே இல்லை அவர்!) அறையில் தான் கணினி இருந்தது..ஆகவே நல்ல வசதியாக போய் விட்டது அவருக்கு. எங்கள் சீப்பு,பவுடர்,கிறீம் எல்லாமும் அதே அறைக்குள். ஆகவே இரவில் படுக்க முன்பு கிறீம் போட எடுக்கச் செல்லும் பாசாங்கில் அவரது அறைக் கதவை தட்டி உள் நுழைந்தால் கணினித் திரையில் கடைசிச் சாளரம் குறுகிச் செல்வது தெரியும். நான் அறையிலிருந்து வெளியேறும் வரை வேறு ஒன்றுமே வலை மேய்வதில்லை அவர்.ஏன் வலை தொடர்பை ஏற்படுத்தி வோல்பேப்பரையே பார்க்கிறார் என நானும் கேட்டதில்லை!!

இதற்குப் பிறகு கணவர் அவரிடம் பேசி சில நாட்கள் இல்லாமலிருந்தது. பிறகு இப்போ மீண்டும் தொடங்கியுள்ளது.உறவினரது சொந்த அண்ணனே "இவன் பொறுப்பில்லாதவன்..சரியான சோகுசுப் பேர்வழி" என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். சரியான படிப்புமில்லை.7ம் வகுப்புடன் நிறுத்தியவர். நியூசிலாந்தில் கடந்த 5- 6 ஆண்டுகளாக இருந்தவர். 36 வயதாகிறது. எல்லாருக்கும் திருமணம் செய்து வைத்தீர்கள் ..எனக்கும் செய்து வையுங்கள் என தொல்லை கொடுக்க, அதை தாங்க மாட்டாமல் பெற்றோரும் இந்தியாவில் BCom பட்டதாரியான, 12 வயது குறைந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவ்வளவிலும் நல்ல விஷயம் சீதனம் வாங்காதது. இப்போ இங்கே வந்துள்ளார்.. மனைவி இன்னும் இந்தியாவில்.

சரியான படிப்பில்லாததால் வேலை கிடைக்கவில்லை. ஏதாவது தொழில்சார் கல்வி கற்றுக்கொள் என்ற கணவருக்கு தொண்டை காய்ந்தது தான் மிச்சம். இப்போ இன்னொரு உறவினது கடையில் சில நாட்களும் ஹொட்டேல் ஒன்றில் மிச்ச நாட்களுமாய் வேலை செய்கிறார். மனைவி வந்தால் தேவைப்படும் என சேமிப்பு பழக்கமெல்லாம் கிடையாது. உடற்பயிற்சிக்கு ஜிம்மிற்கு செல்வதும், கடனட்டையில் ப்ரான்ட் பொருட்கள் வாங்குவதுமே பொழுது போக்கு. தொலை பேசி அட்டை இருக்கையில் அதிலும் கதைத்து..இன்னும்.. நேரடி தொடர்பிலும் கதைத்து, வந்த பில் கட்டப்படவில்லை. அப்படி ஒரு தொகையை தொலைபேசிக்கு யாரும் ஒரே மாதத்தில் கட்டி நான் கேள்விப்பட்டதில்லை. கட்டணம கட்டாததால் எங்கள் வீட்டில் தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார்கள். அன்றைக்கு ஒரு நாள் காலை 10 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு வீடு வந்தால் எங்கோ தண்ணிர் சத்தம்..குளியலறையில் கேட்பாரற்று சுடுநீர் ஓடுகிறது..பிற்பாடு விசாரித்ததில் அவர் 1 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டதாய் சொன்னார். ஏன் டென்சன் ஆகுறீங்க?என்று கேட்கிறார்.தொலைபேசிக்கட்டணத்தை எப்படி பெறுவது என்று தெரியவில்லை!!! ஒவ்வொரு நாளும் இரவில் நான் சுத்தம் செய்யும் சமையலறை எப்படி வேலை முடிந்து வீட்டிற்குப் போனால் குப்பையாகிறது என்பது, தெரிந்த ஆனாலும் புரியாத, மாயம்.

அந்தப்பெண் வருவதற்குரிய குடிவரவு வேலைகளை போன மாதம் தான் செய்தார். இவர் வந்ததோ ஒக்டோபரில்.கல்யாணம் எவ்வளவு பொறுப்பான விஷயம் என்பது இவருக்கு விளங்கவில்லை. உடல் தேவைக்காகத் தான் அவசரப்பட்டாரோ என நினைக்கத் தோன்றுகிறது. சேமிப்பொ, முறையான நடத்தையோ, பழக்கவழக்கங்களோ இல்லாத பொறுப்பில்லா மகனென அறிந்தும் திருமணம் செய்து கொடுத்த பெற்றோரை..அறிந்தே ஒரு பெண் வாழ்வில் கை வைத்துள்ள இவர்களை என்ன செய்வது?சரியாக விசாரித்தறியாமல் சீதனம் இல்லாததற்காய் தலையை நீட்டிய அப்பெண்ணின் குடும்பத்தை என்ன சொல்வது??

எழுதி விளையாடு பாப்பா 2



நடுக்கட்டத்தில் உள்ள எழுத்து கண்டுபிடிக்கப்படும் அனைத்து சொற்களிலும் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதை நேற்று சொல்ல மறந்து விட்டேன்...மன்னிக்கவும்..

நேற்றைய புதிருக்கு விடை: உளி,இளை,இடை,ஆளி,ஆடி,ஆவி,இடு,இவை, ஆட்டி,விளை,விடு,இட்டு,விட்டு,விடை,இயை,விளையாடு,வாடி, வாளி,வாட்டி,விடாய்,விளையாட்டு

இன்றைய புதிர்

ல்ற்
ம்
ய்ச்


எழுதி விளையாடு பாப்பா

இங்கே ஆங்கில நாளிதழொன்றில் வரும் இந்தப்புதிர் விளையாட்டு தமிழில் எந்தளவிற்குச் சாத்தியமென்று தெரியவில்லை. அவர்களுக்கோ 26 எழுத்துக்களுடன் சுலபமாக முடிந்து விடும், தமிழிலோ 247 அழகிய எழுத்துக்கள். அது மட்டுமன்றி உயிர், மெய், உயிர்மெய் என மூன்று வகை எழுத்துக்கள்.இங்கே அவ்வாறு மூன்றாகப் பிரிக்காமல் உயிர், மெய் என இரண்டாக மட்டுமே தந்திருக்கிறேன்.9 கட்டங்களிலுமுள்ள எழுத்துக்கள் அனைத்தையும் ஒருமுறை மட்டுமே பாவித்து 9 எழுத்துக்களாலான சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும். கண்டுபிடிக்கும் ஏனைய சொற்கள் 3 அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும். தந்த சுட்டியில் போய்ப் பார்த்தால் விளையாட்டினை சுலபமாக விளங்கிக் கொள்ளலாம்.

நான் கண்டு பிடித்துள்ள சொற்கள்: மழை, அது, அதை, அமைதி,அமை,அமைத்து,அழை,அழி, அமிழ்,அளி,அழுத்தி,அமிழ்த்து,அளித்து,தளி,அழைத்தும்,அளை,மழைத்துளி(ம்+அ+ழ்+ஐ+த்+த்+உ+ள்+இ= 9 எழுத்துக்கள்)

ம்ள்த்
த்ழ்


உதாரண்ம் விளங்கியிருக்குமென நினைக்கிறேன். விளையாட்டிற்குப் போவமா?கீழுள்ளதில் சொற்களைக் கண்டுபிடியுங்கள்.
ட்
ள்
ய் ட்வ்


உங்களுக்கும் ஏதாவது 9 எழுத்துள்ள சொல் இப்புதிரில் இடம்பெற விரும்பினால் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

பெட்டகம்