தார் இட்ட வீதியிலே கார் ஓட்டும் வேளையிலே...

"ப்ரூம்..ப்ரூம்"
"என்னடா நித்திரையில காரோடுறா"...

இப்படி ஆரம்பிக்கும் விளம்பரத்தை ஐரோப்பிய தமிழ் வானொலி(எதென்று மறந்து போச்சு) நேயர்கள் கட்டாயம் கேட்டிருப்பார்கள். அண்ணாவின் மூத்த மகள் அடிக்கடி சொல்லிச் சிரிப்பாள்.

நான் கேட்பது இதுதான்..யாராவது கணவரிடம் கார் ஓட்ட பழகுறீங்களா? நான் உங்களுடன் ஒத்துணர்கிறேன்(Empathize). ;o)

பயிலுனர் அனுமதி எடுத்து 1 வருஷத்திற்கும் மேலே. இன்னும் பயில்கிறேன். வாகனத்தை கையாளும் பக்குவம் வந்ததும் என்னிடம் பழகலாம் அது வரை பயிற்றுநரிடம் பழகு என்று கணவரும் சொல்ல சரியென்று தலையாட்டினதில் ஆரம்பித்தது. அனுமதி கிடைத்து 3- 4 மாதங்களின் பின் தான் வகுப்புக்கான ஒழுங்கெல்லாம் செய்து..பயிற்றுனரிடம் கிழமைக்கு 2 வகுப்பு படி ஆரம்பித்தேனா..5 மாதமாய் தேடிக் கொண்டிருந்த வேலை கிடைத்தது.

7 வகுப்போடு பயிற்சியும் நின்று போச்சு. வேலைக்குப் போனேன். கிடைக்கிற நேரத்தில் கணவரிடம் பழகலாம் என்றால் 10 வகுப்பு முடித்து விட்டு வந்தால்தான் காரைத் தொடவே விடுவேன் என்று மிரட்டல்! ஹ்ம்..இந்த பிறவியில் நமக்கு லைசென்ஸ் கிடைக்கது போல என்று நொந்து கொள்வேன். 2ஆவதாக இன்னொரு வேலை கிடைத்தது. அதற்குப் போனேன். 1 மணித்தியாலம் பேருந்துப் பயணம். எலும்பெல்லாம் ஏதோ குலுக்கல் போட்டியில் கலந்து கொண்டுள்ளது போலிருக்கும். தொடர்ந்து 6- 7 மணித்தியாலம் call centreல் வேலை. வீட்ட வந்தா விழுந்து படுக்கத்தான் சொல்லும். ஒருகட்டத்தில் காது வலியும் வந்து விடவே அந்த வேலையை விட்டேன்.

2 மாதம் வீட்டிலிருக்க வேண்டி வந்தது. இந்த இடைவெளியில் கார் பழகல் திரும்ப வித்தியாரம்பம். 10 வகுப்புக்கு பிறகு கணவரிடம் பழகலாம் தானே என்று புதிதாக 3 வகுப்பு முடித்தேன். அவரிடம் போனால்..இன்னும் 10 கிளாஸ் போ என்று வாரி விட்டார். நான் விட்டேனா, ஒரு வகுப்புக்கே $30. 3 வகுப்பு முடிய கணவரின் நண்பரிடம் போய், "அண்ணா, சொல்லித்தாங்க" என்று பிடியாய் பிடித்துக் கொண்டேன். அவருடன் 3 - 4 தடவை பயிற்சி. கணவருக்கு ரோசம் வந்து "வண்டியை கையாளத் தெரிகிறது உனக்கு" என்று சொல்லி பழக்க ஆரம்பித்தார். வந்தது வினை!ஓட்ட ஆரம்பித்து முதல் சில நிமிடங்களுக்கு வண்டி அதற்குரிய லேனை விட்டு வெளியே போகும்..உள்ளே வரும்..ஓட்டுனர் கதி அந்தோ!! அதோடு விடுவேனா..எனக்கும் பெரிய மைக்கல் ஷூமாக்கர் என்று நினைப்பு!அக்சிலரேட்டரை அழுத்துவது எனக்கே தெரியாம நடக்கும். வேகம் அதிகம் போனால் போச்சு!(உண்மைதானே!). அடுத்து வரும் ..ஆப்பு வைப்பதெற்கென்றே ஒரு ரௌண்டபவுட்.

"பொறு..பொறு.."
"அந்த வாகனம் தூரத்தில தான் வருது..நான் எடுக்கிறனே"
"நான் சொல்றன்..பொறு".

ஒருமாதிரி எல்லாம் சமாளித்து ஓடினாலும் எங்கேயாவது பிசகி கணவர் வாயிலிருந்து வார்த்தை கடைசியாய் கடுமையாய் வந்ததோ..தொலைந்தேன்! அட..கண்ணாடி இவ்வளவு ஊத்தையா இருக்குதே..கையில் நகம் வளர்ந்து விட்டது..வெட்டணும்..அந்த பூமரம் ஏன் பூக்கவில்லை..இரவு என்ன சாப்பாடு (வேறொன்னுமில்லை..இதெல்லாம் அவர் பக்கத்திலிருந்து திட்டு வரும்பொழுது ஷ்ரேயா மனதில் திரையிடப்படுபவை ..ஹிஹி!! ) அவர் பாட்டுக்கு அ(க)ர்ச்சனை செய்வார், நான் பாட்டுக்கு இதெல்லாம் யோசித்து விட்டு, கடைசியா..நான் செய்தது பிழைதான்/சரியென்றால் நியாயம் சொல்லிவிட்டு மறுபடியும் கியர் மாற்றி, ஓட்டத்தொடங்குவேன். அடுத்த கணை வரும்:

"உனக்கு சுரணையே இல்லையா??"
"கையிருப்பு முடிஞ்சு போச்சு போல..போகும்போது வூலியில் (பல்லங்காடி) 4- 5 கிலோ வாங்கிட்டுப் போவம்"

அங்கே ஒரு சிரிப்பு பூத்து எல்லாம் சுமுகமாகிவிடும்..அடியேன் அடுத்த வெட்டு வெட்டும் வரை அல்லது லேனுக்குளிருந்து வாகனம் கொஞ்சம் வெளியேறப் பார்க்கும் வரை...

மார்கழியிலிருந்து புது வேலைக்குப் போவதாலும், கணவருக்கு கணக்காய்வாளர்கள்(auditors) வந்ததாலும் என் காதும் அவரது இதயமும் இப்போதைக்கு சற்றே ஓய்வெடுக்கின்றன.

0 படகுகள் :

பெட்டகம்