நேர்முக விளையாட்டு

புத்தக விளையாட்டு மாதிரி இதையும் ஆக்கலாம். வாறீங்களா? என்னிடம் அக்னிபாரதி கேட்டிருக்கிற கேள்விகளும் என் பதிலும் இதோ.

1. சிங்களத்துச் சின்னக் குயிலாய் இருக்கிரீர்கள்...எனவே இந்தக் கேள்வி, கன்னத்தில் முத்தமிட்டால் ஷ்யாமா (நந்திதா தாஸ்...படம் பார்த்து இருப்பீர்கள் என்று நம்பிக்கை) போல் தீவிரவாதி ஆனால் என்ன செய்வீர்கள்?
என்னது குயிலா? ரத்தம் சதையாய் ஒரு பெண்! பறவையாக்குகிறீர்களே... :o) அதிலும் ஒரு நன்மைதான், பறவை என்றால் பயணச்சீட்டு எடுக்காமலே, அடுப்பை நூத்தோமா..வீட்டுக் கதவு பூட்டினோமா என்றெல்லாம் யோசிக்காமலே பயணம் போகலாம்.

தீவிரவாதி ஆனால் என்ன செய்வேன்? தீவிரவாதம்தான்! ;o)


2. மழை என்றால் எது நினைவுக்கு வரும்? மின்னலா, மேகமா, மண் வாசனையா?
நனைந்த பொழுதுகள் சில ஞாபகம் வரும்.


3. பகல் கனவா, ராக் கனவா? எது பிடிக்கும்? எது வரும்?
பகல்கனவு பிடிக்கும் ஆனா அடிக்கடி வருவது ராக்கனவு. என் கனவிலே வரும் சம்பவெல்லாம் வைத்து நான் ஒரு த்ரிலர் கதையே எழுதலாம். ஒருமுறை யாரோ என்னை துரத்திக் கொண்டு வர நானும் ஓட, என்னைச் சுட்டு விட்டார்கள். கழுத்தில் தோட்டா பாய்ந்திருக்கிறது. புண்ணில் ஒரே எரிவு...முழித்தால் snug as a bug ஆக என் கம்பளிக்குள்ளே. சந்தேகத்தில் கழுத்திலே கையும் வைத்துப் பார்த்த ஞாபகம்... என் கனவுகள் சொல்லி முடிவதில்லை.

அடிக்கடி எங்கேயாவது மலை உச்சி போன்ற இடங்களில் இருந்து ஓடிக்கொண்டிருக்கும் மிதிவண்டி சகிதம் காற்றில் மிதப்பது போலக் கீழே விழுவேன். காயம் வராது. என்ன அர்த்தம்?


4. கடவுள் உங்களிடம் தோன்றி, 'உன்னிடம் உள்ள எதாவது ஒன்றை எனக்குக் கொடு' என்றால் எதைத் தருவீர்கள்?
என் மறதியை தூக்கிக் கொடுத்துவிடுவேன்.


5. ஒருக்கால், நீங்கள் என்னை interview செய்ய நேர்ந்தால், முதல் கேள்வி என்னவாக இருந்திருக்கும்?
கடைசித் தேர்தலில் வாக்களித்தீர்களா? சரியாகவா அல்லது செல்லாத வாக்கா?


என் பங்குக்கு வசந்தன், துளசி, சாகரன், ஈழநாதன், மதி இவர்களைக் கேட்கிறேன்:

1. யாருடைய கண்ணிலும் தெரிய மாட்டீர்கள் (invisible) என்றால் என்னென்ன செய்வீர்கள்?


2. புதிதாய் எதோ ஒன்றைக் கண்டு பிடிக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். என்னவாக இருக்கும்?

3. உங்களுடைய முதல் ஞாபகம் என்ன?

4. உலக வரலாற்றிலே எந்தக் காலகட்டத்திற்குமோ, அல்லது குறித்த ஒரு சம்பவத்திற்கோ 'செல்ல' முடிந்தால், எந்தக் காலம்/சம்பவத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

5.கரப்பான் பூச்சிகளைப் பற்றி உங்கள் கருத்து?

எங்கே..பிள்ளைகள் ஐந்து பேரும் ஓடிப்போய் உங்கட வலைப்பதிவில வடிவா எழுதுங்கோ பாப்பம். நான் வந்து பாப்பன்..வடிவா எழுதியிருக்கிற ஆ(க்க)ளுக்கு ஒரு பின்னூட்டந் தருவன். :o)

இலக்கக்குறுவட்டில் படம் பார்க்கிறேன்

இதுவரை சில/பல காரணங்களுக்காக இப்போதைக்கு வேண்டாமென்று யோசித்திருந்த டிவீடி ப்ளேயரை போன கிழமை வாங்கியாச்சு. கடைக்குப் போன நேரம் கண்ணில் பட்ட இலக்கக்குறுவட்டையெல்லாம் ஆராய்ந்ததில் கிடைத்த ஒன்று "சிந்துபைரவி & மனதில் உறுதி வேண்டும்" இரண்டும் கொண்ட ஒரு வட்டு. முதலாவதாக ம.உ.வே. யைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

"50 - 50", "நான் ப்ராக்டிகலாப் பேசறவன்", "கெட்ட வார்த்தையால திட்டணும் போல இருக்கு" என்ற வசனங்கள் :o)

வைத்தியசாலை ஊழியராக வரும் அந்த நகைச்சுவை நடிகரின் பெயரென்ன? இள வயது (நோஞ்சான்) விவேக்குடன் (இதுதானாமே அறிமுகப்படம்?) கூடவே "எங்கேயோ பார்த்த" முகங்கள் - எஸ்பிபி, ரமேஷ் அர்விந்.

சுஹாசினி அழுத்தமாக "மிஸ். நந்தினி" என்று சொல்லிவிட்டுப் போக, பத்திரிகையாளர்/எழுத்தாளர் "Thankyou for the good news" என்பாரே..அப்போது சுஹாசினியின் முழியே முழி! அதோட நிற்பாட்டியிருக்கிறோம், இன்றைக்குப் போய் மிச்சம் பார்க்க வேணும்.

அரைகுறையாய்ப் பார்த்த தைரியத்தில் கேட்கிறேன், இந்தப் படத்தில் மீதிக்கதை என்கிற சாயத்திலா பிரகாஷ்ராஜ், சுஹாசினி, வினீத் நடித்து "நந்தினி" படம் வெளிவந்தது? கதாநாயகியின் பெயர் ஒரே பெயராக இருக்கிறதே..! அது சரி, அப்படியென்றால் வெளிவந்த படமெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா?..ராதா/ப்ரியா & ராஜா என்று நாயக நாயகிக்குப் பெயர் இருப்பதால்!

கட்டாயம் பார்க்க வேண்டிய, வித்தியாசமான படைப்புகளின் (என்ன மொழியென்றாலும்) பெயர்களை அறியத்தரமுடியுமா?

பதிலைப் பெயர்த்தல்

நன்றிகள் நான்கு உங்கள் பொறுமை. ஒரு பூச்சி முகவரியாக்கப்படுகிறது ஆல் அபிவிருத்திக்குழு தீர்க்க இதழ்/வெளியீடு நீங்கள் எதிர்கொள்ளும். விருப்பம் தேனி ....

இல்லை..வேண்டாம், ஏற்கெனவே என் விளையாட்டு வினையாகி ஒரு சிலரைக் கிட்டத்தட்ட பாயை விறாண்டும் நிலைமைக்குக் கொண்டு வந்தது. இன்னும் கொஞ்ச நாளைக்கு விசப்பரீட்சைகள் வேண்டாம்! :o) (அதற்காக எதிர்காலத்தில் விஷப்பரீட்சைத் திட்டங்கள் கைவிடப்படும் என்பது பொருளல்ல!)

மேலே நான் பெயர்த்தது Blogger இன் தொழினுட்ப உதவியணி எனக்கு அனுப்பிய பதிலைத்தான். எதற்குப் பதில் போட்டார்கள்? கொஞ்ச நாளாவே எங்களைக் (கேட்காமலே) கேள்விக்குறியாக்குவது பற்றி அவர்களிடம் கேட்டிருந்தேன். அதற்குத்தான் பதில். பொதுமக்கள் பார்வைக்காக இங்கு வலையேற்றப்பட்டுள்ளது!

//Thanks for your patience. A bug is being addressed by the development team to resolve the issue you're having. Please be assured that the bug will be fixed soon. I apologize for any inconvenience it may have caused.//

என்ன அழகாக "உங்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இடையூறுகளுக்கு வருந்துகிறோம்" என்று சொல்கிறார்கள். இதைத்தான் "டிப்ளமசி" என்பதா? (அது எப்படி "dip"ல மசி? என்று கேட்க மாட்டேன்!!கேட்டா புதிசா பாய் வாங்க வேண்டி வந்திரும்!) ;o)

மன்னிப்பும் வேறு சிலவும்

விளையாட்டு சரியான கஷ்டமாகி விட்டது போல இருக்கு. ஏற்கெனவே என் விளையாட்டு வினையாகினதில வழக்குப்போடாத குறையா துளசி முறைப்பாடு! இன்னும் வேற யாருக்கும் சித்தம்/பித்தம் கலங்கியிருந்தா என்னை மன்னியுங்க! (உண்மையிலேயே அவ்வ்வ்வளவு கஷ்டமா இருக்கா?)வாசிக்கிற ஆக்களுக்கு விளையாட்டா இருக்கட்டும் என்று உலக அதிசயங்களை முக்கியமானவையா வைச்சுக் கொண்டு அவற்றைக் கண்டுபிடிக்கிறதுக்கு வழியாக இன்னும் கொஞ்சக் கேள்விகளையும் சேர்த்து வைச்சன். இப்ப விடைகளுக்கு வழி சொல்றேன். அந்தப்பதிவில போய் right click பண்ணி "Select All" என்று தேர்ந்தெடுங்கோ..விடை தெரியும்! ஆனா அதுக்கு முதல் எனக்குப் பதில் சொல்லீற்றுப் போங்க...

என்ட பெயர், புனை பெயர் என்டு தெரிஞ்சிருக்கும்(இல்லாட்டி இப்ப தெரிஞ்சு கொள்ளுங்க). ஏன் என்ட சொந்தப் பெயரில எழுதிறதில்லை?

வலைப்பதியத் தொடங்கிய போது, நான் என்னத்தையென்றாலும் உளறி வைக்கலாம்... சொந்தப்பெயரில இல்லாத வரைக்கும் என்றொரு நினைப்பு இருந்தது. ஆனா உண்மையான காரணம் அதுவல்ல என்று எனக்கே நல்லாத் தெரியும். என்ட பெயர் இல்லாத இடமில்லை. ஆங்கிலத்தில் சொல்லுவாங்களே "wornout" (தமிழ்ல என்ன?) என்று, அதுதான் என்னுடைய பெயரின் கதி. ஆனா, அம்மாக்கு கொஞ்ச நாள் எண்சாத்திரத்தில நம்பிக்கை வந்த படியால், என் பெயரின் ஆங்கில ஸ்பெலிங்கை மாத்தி கொஞ்சம் வித்தியாசம் ஆக்கப்பட்டது. அதாலதான் கொஞ்ச வித்தியாசமாவது தெரியும். சொன்னா நம்புவீங்களோ தெரியாது.. எனக்குத் தெரிஞ்சு, எப்போதும் என் வகுப்பில் என் பெயர் கொண்ட இன்னொருத்தி இருப்பா. என் பெயருடையவர்கள் 1..2..3 (பொறுங்க..எண்ணிப்பாத்திட்டு வாறன்)...கிட்டத்தட்ட 20 பேரைத் தெரியும். அப்படியொரு wornout பெயர் தான் என்னுடையது! அதனாலே தான் எங்கேயோ எப்பவோ ஷ்ரேயா என்று ஒரு முகமூடியைத் தூக்கி மாட்டினேன்.

இப்ப எதுக்கு இவ்வளவும் என்று கேட்கிறீங்களா...சொல்றன்..

இதுவரை இந்த ஷ்ரேயா என்கிற பெயர் எழுத்தில தான் என்னை குறிக்கக் கண்டிருக்கிறன். அதாவது யாராவது அஞ்சல் போட்டா "ஹாய் ஷ்ரேயா" அல்லது பின்னுட்டத்தில "சித்தம் கலங்கிடிச்சி ஷ்ரேயா". நேற்று, ஒருவர் தொலைபேசியில் அழைத்து "ஷ்ரேயா(வா)?" என்றார். எனக்கு ஒருகணம் "யாரைக் கேட்கிறார்" என்றுதான் தோன்றியது. பிறகுதான் 'அடே..நான்தான் ஷ்ரேயா!' என்று உறைத்தது. எனக்கு ஒரு சந்தேகம் (ஐயோ..ஓடாதீங்க), இவ்வளவு நாளாக (கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக) பாவிக்கிற ஒரு பெயர், என்னுடையதுதான் என்று ஏன் மனதில் பதியவில்லை?

இன்னொன்றும் சொல்ல வேண்டும், இதுக்கும், மேலே சொன்னதுக்கும் சம்பந்தமில்லை. யாருடனாவது உரையாடும் போது (பேச்சு & எழுத்து) என்னையறியாமலே (95%) அல்லது உணர்ந்தே(5%) அவர்களைப்போல எனது கதை பேச்சு அமைந்து விடுகிறது. உதாரணத்துக்கு ஒரு ஒஸியுடன் கதைத்தால், அவுஸ்திரேலிய accentஉடன் ஆங்கிலம் வருகிறது. மலேசிய நண்பியொடு அவளைப் போன்று (முழுக்க இல்லாது விடினும் 50%) accentம் வருது. யாழ்ப்பாணத்தவர் என்றால் முழுக்க அந்தத் தமிழும், மட்டக்களப்பென்றால் அந்தத் தமிழும், இந்தியரென்றால் அவர் தமிழும் என் வாயிலிருந்து(இப்ப 'விளங்குதா' க்ருபா?) வருகிறது. (இப்போது எழுத்திலும்). இது ஏன்? சில பல வேளைகளில் உரையாடலின் முடிவிலேயே அல்லது அதைப்பற்றி மீள நினைத்துப் பார்க்கையிலேயே இப்படிச் செய்கிறேன் என உறைக்கும்.

ஏன் இப்படிச் செய்கிறேன்? நான் நானாக இருக்க விருப்பப்படவில்லையா?? யாராவது சொல்லுங்களேன்.

ஏ ஆராரோ...நீ யாரோ!

வாங்க வாங்க என்று அழைப்பிதழ் அனுப்பிக் கூப்பிட்டேன்..வந்திருக்கிறீங்க. நன்றி. ஏற்கெனவே கதிரையிலே இருப்பீங்க என்பதால உங்களை இருங்கோ என்று சொல்லப் போறதில்லை. சரி பதிவுக்கு வருவோம்..அதான் வந்திட்டோமே என்றெல்லாம் சொல்லாம..நான் சொல்றதைக் கேளுங்க.

இந்தப்பதிவு ஒரு சின்ன விளையாட்டா இருக்கப் போகுது. நீங்களெல்லாரும் கெட்டிக்காரர்தானே..இது ஒரு சுலபமான விளையாட்டு. இந்த விளையாட்டை "தொகுக்க" உதவிய ப்ரவீணாக்கும் (சு)நாமிக்கும் ;o) எனது நன்றிகள்.

சரி அடிப்படை இதுதான்: கட்டங்களுக்குள்ளே தரப்பட்டிருக்கும் தடயங்களை உபயோகித்து விடைகளைக் கண்டு பிடிக்கணும். பிறகு கட்டங்களுக்குக் கீழே நீங்க கண்டுபிடிச்சதை வச்சு என்ன செய்ய வேணும் என்று சொல்லியிருக்கிறேன். உதாரணம் தந்தா விளையாட்டின் சுவாரசியம் கெட்டுவிடும்(அதுக்காக குளிர்சாதனத்தில எல்லாம் சுவாரசியத்தைத் தூக்கி வைக்க முடியாது)(அடேயப்பா எவ்வளவு பெரிய பகிடி விட்டிருக்கிறன், ஏன் ஒருத்தரும் சிரிக்க மாட்டனென்டுறீங்க!)





அ) நபிகள் நாயகம் சொன்ன ஒரு பிரபல பொன்மொழி? சீனா சென்றாயினும் சீர்கல்வி தேடுக
ஆ) எதற்கும் அடித்தளம்/ஆதாரம் என்றதொன்று இருக்க வேண்டும் எனச் சொல்லும் பழமொழி? சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்


அ)விற்கும் ஆ)விற்கும் விடையைக் கண்டு பிடியுங்கள். இரண்டு விடைகளையும் ஒன்றாக வைத்துப் பார்த்தால் என்ன கிடைக்கிறது?சீனா+சுவர் = சீனப்பெருஞ்சுவர்
ஷ்ரேயாவுக்கு உதை என்பது சரியான பதில் அல்ல! :o)

ஒரு பிரபல பயணி இருந்தார். அவர் தன்னுடைய பயணங்களைப் பற்றி விரிவான குறிப்புகள் எழுதியிருந்தாலும், (அ + ஆ)வின் விடை பற்றி அக்குறிப்புகளில் மூச்சுக் கூட விடவில்லை. இந்தப்பயணி யார் எனக் கண்டு பிடிக்க வேண்டும். மார்க்கோ போலோ


இ) அந்தப் பயணியின் நாடு எது? இத்தாலி

ஈ)அரசன்/பசு + (அரசியர் உறைவிடம் - அந்தப்) = ??? கோ + (அந்தப்புரம் - புரம்)= கோபுரம்

இ) & ஈ) யின் விடைகளையும் (முன்னரைப் போலவே) சேர்த்துப் பார்த்தால், கிடைக்கும் விடை என்ன? இத்தாலி+கோபுரம் >> பீசா கோபுரம்
இப்ப நாங்க இன்னொரு இடத்திற்குப் போக வேண்டும். அதற்கு கண்டு பிடிக்க வேண்டியது:


உ) பாலைவன/வறள் பிரதேசங்களும் அவற்றின் பெருகும் தன்மைக்குமான சர்வதேச ஆண்டு (உதவி:- இதைப் பிரகடனப் படுத்திய குழுவில் ஒருவர் 'குளம்பி' தமையன்) 2006

ஊ) "ச" வருடங்களுக்கு ஒருமுறை வரும் கோலாகலம் ச=4, ஒலிம்பிக் போட்டி


உ)வும் ஊ)வும் கொள்ளையடித்தால் 'எங்கே'யென்று அர்த்தம்?? 2006 ஒலிம்பிக் -> டூரின்
கிரேக்கத்துக்கு வெளியே அதிக கிரேக்கர்களைக் கொண்டது அவுஸ்திரேலியாவிலுள்ள மெல்பேர்ண் நகரம். அதே போல நாம் அடுத்ததாகப் போக வேண்டிய தேசத்திலுள்ளதற்கு அடுத்தபடியாக அதன் முக்கிய அருங்கலைப் பொருட்கள் கொண்ட பிரபல அருங்காட்சியகம் (உ+ஊ)வின் விடையில் இருக்கிறது. அந்த நாடு எது?எகிப்து


எ)இந்த நாட்டின் பெயரைச் சொன்னதும் எல்லாருக்கும் நினைவு வருவதும் ஒன்றாகத்தான் இருக்கும். நினைவு வருவதில் "ஐந்து, முக்கால் உடன் தகரத்தில் மெய்யும் உகரமும் அத்துடனே வசந்தன் சின்ன வயதில் குடித்த பானமும் சேர்த்தால் வரும்" சொல் சிலவும் இருக்கின்றன. அதற்கு ஆங்கிலப் பெயர் என்ன? 5-எ, 3/4 = ழு, த், து, கள் >> ஹைரோக்ளிஃப்

ஏ)அவை சொல்வதைப் புரிந்து கொள்ள உதவிய முக்கிய பொருள் என்ன?(உதவி:இப்போது அது லண்டன் அருங்காட்சியகத்தில் இருக்கிறது) ரொசெட்டா கல்

ஐ)தான் இறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன், 1822 இல் (ஏ)யின் விடையாக வரும் பொருளில் இருந்ததை ஆராய்ந்து "பொழிப்புரை/விளக்கம்" வெளியிட்டவரின் பெயரென்ன? Jean Francois Champollion


அவருடைய நாட்டுக்குத் தான் போக வேண்டும்.


ஒ) ட்ரோய் போருக்கு காரணம் என்ன? பரிஸ், ஹெலனைக் கவர்ந்து சென்றமை

ஓ)அமெரிக்காவிலுள்ள சுதந்திரதேவி சிலையின் சட்ட வடிவமைப்பைச் செய்தவர்களுள் ஒருவர் கஸ்டாவ் ஈஃபிள்


ஒ)வும் ஓ)வும் போட்டா என்ன வருது?பரிஸ் நகரத்தில் ஈபிள் கோபுரம்

அதுக்கு முன்னாலே நின்று நடனமாடி காதல் பாட்டுப் பாடினவங்க இங்கேயும் போனாங்க...எங்கே??அதை நீங்கதான் கண்டுபிடிக்கணும்!


ஒள)காடு, மலை, நதிகள் எல்லாம் காதலின் சின்னமாம், அதனால குறிப்பா "இதை" தேவை இல்லை என்று அசித்து (அதான் "தல") பாடியிருக்கிறார். எதை தேவையில்லை என்று சொல்கிறார்? தாஜ்மகால்

ஃ)கேள்வி (ஒள)க்கு விடையாகக் கண்டுபிடிச்சதுக்குக் கிட்ட சலசலக்கும் ஆற்றைப் பற்றி ஒரு பாடல்,மிகப்பிரபலமான நடிகர் நடித்த,மணிரத்னத்தின் ஆஸ்தான (மாதவனுக்கு முதல்) நடிகரின் அறிமுகப்படத்தில் இடம்பெற்றது. ஆஸ்தான நடிகரின் பெயர்? பாடல்: யமுனையாற்றிலே... படம்: தளபதி நடிகர்:அரவிந்த்சுவாமி

(குறிப்பா ஏன் இவர் என்று விளங்கியிருக்கோணுமே ...ஹி..ஹி) ;o)

க்)அவரை கதாநாயகனாக பதவி உயர்த்திய திரைப்படம் எதுங்கோ? ரோஜா

ச்)அதே படத்திலேயே தமிழ்த் திரையுலகுக்கு முக்கியமான 2 பேர் அறிமுகமானாங்க. அவங்க யார் யார்? ஏ ஆர் ரஹ்மான், ஹரிஹரன்


கண்டுபிடிச்சிட்டீங்களா...அவங்கதான்..அவங்களேதான்..இவங்களுக்காக, இவங்க கூப்பிட்டு இங்கே வாறாங்களே!!..! (பார்க்கிறதுக்கு நானும் போறேனே!)

இதைச் சொல்லத்தான் உங்கள் எல்லாருக்கும் அழைப்பிதழ் வச்சு விளையாடக் கூப்பிட்டனான்!! :o). வர்ட்டா!

அழைப்பிதழ்

திருமண அழைப்பிதழ் இல்லை. (அது அனுப்பிய போது, வலைப்பதிவென்றாலே என்னென்றே தெரியவே தெரியாது!)இது வேற!

அன்புடையீர்,

நடக்கும் ஆங்கில 2005ம் ஆண்டு, தமிழுக்கு ஆனி மாதம், ஆங்கில 23ம் திகதி இணையத் தொடர்பு, விசைப்பலகையில் சுரதாவின் செயலி கொண்டு தட்டச்சும் கைகள் ஆகிய லக்கினங்கள் கூடும் சுபநேர சுப வேளையில் பதிவொன்றை வலையேற்ற ஷ்ரேயாவினாலும், அவருக்கு உதவும் ப்ளொகரினாலும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இத்தருணம் தாங்களையும் தங்கள் கண்கள் மற்றும் இணையத்தொடர்பு சமேதராக இவ்வலைப்பதிவுக்கு வருகை தந்து, பதிவினைப் பார்வையிடவும், பின்னர் நடக்கவிருக்கும் பின்னூட்ட உப(தை)சாரத்திலும் பங்குபற்றிச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இங்ஙனம்,

ஷ்ரேயா & Blogger

(இருவீட்டார் அழைப்பு)


சத்தியமா இது வரைக்கும் எழுதிய பதிவெல்லாத்தையும் குடந்தைச் சோதிடரிடம் போகாமல் நானாகவே எக்ஸெல் ஓலையில் சோழிகளைக் குலுக்கிப் போட்டு ஆராய்ந்ததில் தெரிய வந்ததாவது...

இதுவரை(79 பதிவுகளில்) பதிவுகள் அதிகமாக எழுதப்பட்டுள்ள

    திகதி: 4, 6, 10, 15, 16, 23

    நாள்: வியாழன் & வெள்ளி

    மாதம்: ஆனி


ஆனி மாதத்திற்குரிய 4, 6, 10, 15, 16ம் திகதிகள் ஏற்கெனவே கடந்து விட்டதால், அடுத்து இவை பொருந்தும் எனக் கணிக்கப்பட்ட நாளே அடுத்த பதிவிற்காகச் சிறப்பாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே..அழைப்பிதழை கொஞ்சம் வாசிச்சிட்டு..அடுத்த பதிவுக்கு ஒரு ஐடியாவையும் தந்திட்டு இப்ப போய்ட்டு, மறக்காம திரும்பி வாங்க!:o)

மி.மு.பி.கு: திகதிகள் ஆங்கிலத்தில் இருப்பதற்காகவோ அல்லது அழைப்பு விடுக்கும் ஒரு பகுதியினரின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதற்காகவோ என்னை யா..ஆ..ஆ..ரும் கண்டிக்கவோ, இப் பதிவைப் புறக்கணிக்கவோ முடியாது என தடைச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது!! அன்றைக்கு ஹர்த்தால்/பந்த் எனக் கூறி வலைப்பதிவை இழுத்து மூடுபவர்கள் மேல் இப்போதே கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

?????

பள்ளிக்கூடத்தில் ஆட்டோகிராஃப் பரிமாறிக் கொள்வது வழக்கம். அதிலே சிலவேளைகளில் இப்படி எழுதி வைப்போம்:

"நீ மட்டுந்தான் ????? என்று நினைக்காதே. நானும் ?????தான். நீ தனித்துப் போய் விடக்கூடாதே என்று!"

அதுதான் ஞாபகம் வந்தது - பின்னூட்டமிட்டுப் பார்த்தால், "சொன்னவர் ?????" என்று வந்திருக்கிறதைப் பார்க்க. நான் பெயர் மாத்தவில்லையே என்று வேறு கொஞ்ச நேரம் யோசித்தும் வைத்தேன். பொதுவான பிரச்சனையாக் கிடக்கு. Bloggerக்கு எழுதிப் போடுறதுதான் வழி போல!

இன்னொரு பிரச்சனை..இது எனக்கு மட்டுந்தான். (எனக்கு மட்டுமான பிரச்சனைகள் நிறைய இருக்கு!அதெல்லாம் சொல்லி உங்களை எதுக்கு பயப்பிடுத்துவான் :o)

இந்தச் சுட்டிக்கு போகேலாமக் கிடக்கு: http://www.balaji_ammu.blogspot.com. கனக்க கொம்பினேசனில எல்லாம் சுட்டிய மாத்திப் பாத்திட்டன்...வலையுலாவிக்குப் பிடிக்கேல்ல. எப்பிடி மாத்தி எழுதினாலும் உன்னை இந்த முகவரிக்குக் கூட்டிக் கொண்டு போகேலாது என்று முடிவாய்ச் சொல்லிவிட்டுது! தமிழ்மணத்தில முறையிட்டன்...பதில் சொன்ன 'செல்வா'க்கும் இந்தப் பிரச்சனை இருந்ததாம், ஆனால் சரியாகிட்டுதாம். பிரச்சனை ஏனென்று யாருக்காவது தெரியுமா? எப்பிடி நான் பாலாஜிட வலைப்பதிவை வாசிக்கிறது? வழி சொல்லுங்கோ!

மோப்ப சக்தி

மிருகங்களுக்கு ஆபத்தை அறியும் சக்தி உண்டென்பது தெரிந்த விசயம். ஆனாலும் இங்கிலாந்தில் நடந்த ஒரு சம்பவம், ஆராய்ச்சியாளர்களின் தலையைப் பிய்த்துக் கொள்ள வைக்கும் ஒரு பிரச்சனையை வேறு கோணத்திலிருந்து அணுக வைத்துள்ளது.

ஒரு பெண்மணிக்கு காலில் ஒரு மச்சம்(mole) புதிதாக தோன்றியிருக்கிறது. அவவோ அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவவின் செல்ல நாய்க்கு அதைக்கண்டு இருப்புக் கொள்ளவில்லை. கொஞ்சம் விட்டால் அவவின் செல்ல நாய் அந்த mole ஐ விறாண்டி பிய்த்துப் பிடுங்கி விடும் நிலைக்கு வந்துவிட்டதில் பெரிய தொல்லையாகி விட்டது அவவுக்கு. வைத்தியரிடம் போயிருக்கிறா. காலில் இருக்கிறதைக் கண்டால் அந்த நாய் படும் பாட்டைச் சொல்லியிருக்கிறார். வைத்தியர் அவவைப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அப்பெண்ணுக்கு ஆரம்பநிலை தோற்புற்றுநோய் இருந்தமை தெரியவந்தது. (நீங்கள் பையில் வைத்திருக்கும் உணவுப்பண்டத்துக்காக ஏதாவது நாய் உங்களைத் தொடர்ந்து முகர்ந்தபடியே வந்தால் நான் பொறுப்பில்லை! :o) )

இது தெரிந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சந்தேகம் முளைத்தது. ஒருவேளை புற்றுநோய்க் கலங்கள் ஒரு வித மணத்தை வெளியிடப் போய் அதைக் கொண்டு தான் அவவின் நாய்க்கு நிலைகொள்ளவில்லையோ என்று. விடுவார்களா...தொடங்கினார்கள் பரிசோதனையை. புற்றுநோய் உடைய ஒருவரிடமிருந்தும் நோயற்ற கொஞ்சப் பேரிடமிருந்தும் பெறப்பட்ட சிறுநீர் samplesஐ மோப்பம் பிடிக்க விட்டார்கள். நாய் 41% சரியாக புற்று நோயுடையவரின் சிறுநீர் sampleஐ முகர்ந்து பிடித்ததாம். இப்படி, நோயாளிகளின் சிறுநீரைக் கொண்டு புற்று நோய் இருக்கா இல்லையா என்று கண்டுபிடிக்க நாய்களை பயிற்றுவிக்கிறார்கள் இப்போது.

அவர்கள் வியந்த இன்னொரு விடயம்: பரிசோதனையின் போது குறித்த ஒரு (நோயற்ற ஒருவரது) sampleஐ நாய் முகர்ந்து காட்டி, அவர்கள் கவனத்தை ஈர்த்ததாம். ஒரு சந்தேகத்தில் அச்சிறுநீர் sample கொடுத்தவரைப் பரிசோதித்ததில் அவருக்குப் புற்றுநோய் இருந்தது அறியப்பட்டுள்ளது.

non-invasive புற்றுநோய் பரிசோதனை என்கிறார்கள்.

இது வரையில் நாய்கள் செல்ல/காவல் பிராணிகளாகவோ அல்லது மோப்பம் பிடிக்க காவல்/எல்லைப்பாதுகாப்பு/சுங்கப்பிரிவினராலோதான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இனிமேல் வைத்தியர்களாலும்!

என் புத்தக வாசம்!

புத்தகம் என்று எனக்கு 'முதல்' ஞாபகமிருப்பது ஒரு பெரிய எழுத்தில இருந்த நீதிக்கதைப்புத்தகம் தான். அதில் படங்களும் இருந்தது. இன்னுமொரு புத்தகம் - கதையோ பெயரோ ஞாபகமில்லாதது - ஒரு சேவலும் அதைப்பிடிக்கிறதுக்கு முயற்சிக்கிற நரியும் பற்றினது. குறிப்பாக ஒரு புத்தகத்தை ஞாபகப் படுத்த் முயற்சிக்கிறேன். ஆனால் அப்படிப்பட்ட முயற்சிகளுக்கே உரித்தான நக்கலுடன் பலனில்லாமல் ஞாபகப்படுத்தல் தொடர்கிறது. புத்தகத்திட பெயர் ஞாபகம் வராததுக்கு கதை மறந்து போனது முக்கிய காரணியாக இருக்கலாம். ஒரு மலையின் மேடான உச்சியில் ஒரு சிவப்புப் பழம் இருந்ததும் ஒரு மாடு சம்பந்தப்பட்டிருந்ததும் படத்தில் பர்த்த ஞாபகம். :o) (யாருக்காவது ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே??)

வாசிப்புப் பழக்கம் இத்தனையாம் வயதில்தான் தொடங்கியது என்றெல்லாம் குறிப்பாய்ச் சொல்லத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்து நான் வாசிக்காமல் இருந்ததில்லை. அம்மாவும் பெரியண்ணாவும் சாப்பிடும் போது இடக்கையால் புத்தகம் புரட்டுவார்கள். புத்தகம் இல்லாட்டி இருவருக்குமே சாப்பாடு இறங்காது. எனக்கும் முதலில் அப்படி ஒரு வியாதி இருந்தது. பிறகு கொஞ்ச நாள் விடுதியில் தங்கிப்படித்ததால் அப்பழக்கம் விட்டுப்போயிற்று. கையிலே புத்தகம் இருந்தால் வாய்க்குள்ளே என்ன போகுதென்றே தெரியாது. மற்ற வேளைகளிலும் புத்தகம் வாசிக்க உட்கார்ந்தால் வெளிச்சத்தம் ஒன்றும் கேட்காது(அம்மா கூப்பிடுவது உட்பட!பிறகு தடாரென்று ஒரு 'தட்டு' விழத்தான் அம்மா கூப்பிட்டிருக்கிறா என்று 'உறைக்கும்') :oD

விடுமுறைக்கு யாழ்ப்பாணம் போகும் போது நிறைய புத்தகம் வாங்கக்கிடைக்கும். பேருந்துத் தரிப்பிடத்தில் இறங்கி ஒரு நிமிட நடை தூரத்தில் பூபாலசிங்கம் புத்தகக்கடையில் கோகுலம், ரத்னபாலா, பாலமித்ரா, அம்புலிமாமா, நீதிக்கதைகள் கொஞ்சம், ஈசாப் கதைகள், முல்லா/பீர்பால்/தெனாலிராமன் கதைகள் என்றெல்லாம் நான் பொறுக்கிக் கொண்டிருக்க அம்மா பக்கத்திலுள்ள பழக்கடையில் வீட்டாருக்குத் திராட்சைப்பழம் வாங்குவா. கிட்டத்தட்ட 10 - 15 புத்தகம் தேறும். பொறுமை இருந்தால் விடுமுறை முழுக்க வாசிக்கலாம். என்னைப் போல 'கடுகதி' தரைவழிகளுக்கெல்லாம் இது யானை வாய்க்குச் சோளப்பொரி போல! எவ்வளவுதான் இழுத்து, மெதுவாக வாசித்தாலும் 2 நாளைக்குத் தான் அவ்வளவு புத்தகமும் வரும். இதெல்லாம் முடிய பாட்டி வீட்டில போய் நோண்டிறது. அங்கே நல்ல நல்ல புத்தகங்கள் இருந்தன. ஆனால் அப்ப சின்னனில் வாசித்தால் விளங்காது. பின்பு வளர்ந்த பிறகு போகிற போது புத்தக வேட்டைக்கு அவ்வளவாக நேரம் ஒதுக்க முடியவில்லை.

வீட்டிலே பஞ்ச தந்திரக் கதைகளுடன், மகாபாரதமும் இராமாயணமும் இருந்தன. நல்ல தடிப்பமான புத்தகங்கள். நிறையக் கிளைக்கதைகளோடு.பஞ்சதந்திரக்கதைகளில் "inherited" கதைகள் வாசித்துக் கொண்டு போகும் போது மூலக்கதை சிலவேளைக்களில் மறந்து விடும்..திரும்ப ஆரம்பிப்பதுமுண்டு! இராமாயணம் வாசித்து முடித்ததும் லவகுசரைப்பற்றி ஆர்வம் வந்து அம்மாவை நச்சரித்தேன். நிறைய நாள் லவகுசர் பற்றி புத்தகம் தேடி அலைந்தது ஞாபகமிருக்கிறது. கிடைக்கவில்லை. பிறகு பதினொரு வயதில் குடும்ப ஒன்றுகூடலுக்கு இந்தியா போன போதுதான் கிடைத்தனர் லவகுசர். பெரியண்ணாக்கு என்னை நன்றாகத் தெரியும் - புத்தகத்துக்கு என்னவும் செய்வேன் என்று. இந்தியாவில் தான் நிறையப் புத்தகங்கள் கிடைக்குமே..ஆ.வி/குமுதம், கோகுலம்(தமிழ்+ஆங்கிலம்), ரத்னபாலா, இன்னபிற சிறுவர் இதழ்கள்/புத்தகங்கள், மு.வரதராசனார் சரிதை, சிவகாமி சபதம் பொன்னியின் செல்வன், சாண்டில்யன் கதைகள் என்று நிறைய (லஞ்சமாக) வாங்கித் தந்து பல வேலைகள் (தேத்தண்ணி போட்டுக் கொடுப்பது, அவருடை உடுப்பு மடிப்பது etc..) செய்வித்துக் கொண்டார். :o) முன்வீட்டுப்பிள்ளைகளுடன் விளையாடவும் போகாமல் 2 நாட்கள் தொடர்ந்து சிவகாமி சபதத்தை வாசித்து முடித்தேன். (மற்ற எல்லாப் பெரிய புத்தகமும் கிட்டத்தட்ட அதே வேகத்தில் வாசித்தேன்...அவற்றை அண்ணா தன்னோடு கொண்டு போய் விடுவாரே!!).

திருக்குறள், நளதமயந்தி, சிலப்பதிகாரம், சீராளன் கதை, சீவகசிந்தாமணி, வரலாற்றுப் புத்தகங்கள், மட்டக்களப்புப் பேய்க்கதைகள் எல்லாம் 12 வயதிற்குள்ளாக வாசித்தேன். பதின்ம வயதும் வந்தது. கொழும்பு வாழ்க்கையும் வந்தது. விடுதியிலும் தங்கிப்படித்தேன். பள்ளிக்கூடத்தில் ஆங்கிலப்புத்தகங்கள் தாராளமாகக் கிடைக்கும். அப்படிக் கிடைத்தவற்றில் Nancy Drew, Hardy Boys அத்தனையும் வாசித்தேன். அதுவே பெரும்பான்மை வாசிப்பானதில் ஒரு கட்டத்தில் சலித்தும் போனது. ஆங்கில இலக்கியப் பாடத்துக்குக்கு பண்பியல் புத்தகங்கள்தான் முக்கியமாக இருந்தது. ஆங்கில ஆசிரியையிடம் கேட்டு எங்கள் வயதிற்குரிய பதிப்புக்களை பெற்று வாசித்தேன்..Mill on the Floss, Pride and Prejudice, Macbeth, இன்னும் பல. பள்ளிக்கூட மாணவர் விடுதியில் நூலகம் ஆரம்பித்தோம். அதில் Anne of Green Gables தொடரை வாசித்தேன். இப்படி இருக்கையில் ஒருநாள் ஒரு அரைவாசி கிழிந்த புத்தகம் அகப்பட்டது. தொடக்கமுமில்லை..முடிவுமில்லை. நடுவில் காடையர்/குண்டர்களின் அராஜகங்கள் விபரிக்கப்பட்டிருந்தன. என்ன முயன்றும் புத்தகப் பெயரை அறிய முடியவில்லை. புத்தகத்தையும் என்னால் மறக்க முடியவில்லை. (1997/1998 இல் 'பெண்களுக்கான ஆராய்ச்சி மைய'த்தில் (CENWOR)வேலை செய்கையில் தான் முழுப்புத்தகமும் வாசிக்கக் கிடைத்தது - "முறிந்த பனை").

அருந்ததி ராயின் "God of Small things" தொடக்கத்தில் கொஞ்சம் இழுபட்டாலும், நன்றாக இருந்தது.பிறகு ரமணி சந்திரனின் கதைகள் வாசித்தேன். ஆங்கில காதல் கதைப் புத்தகமான Mills & Boon இன் தமிழாக்கமாக இருந்ததாலும், பெரிதாக அதிலிருந்து 'பெற' ஒன்றுமிருக்காததாலும் அவற்றை வாசிப்பதை நிறுத்தி, லஷ்மிக்குத் தாவினேன். அவவின் கதைகளின் முடிவுகள் ஊகிக்கக் கூடியதாக இருந்தமை பிடிக்கவில்லை. அவவையும் விட்டு, சிவசங்கரி, அனுராதா ரமணன் வாசித்தேன். என்னென்ன வாசித்தேன்..பிடித்ததா என்று ஒன்றும் ஞாபகமில்லை. வந்தா இந்துமதி. அதுவரை வாசித்தவற்றிலிருந்து அவவின் படைப்புகள் வித்தியாசப்பட்டிருந்தமை கவர்ந்தது. ஒன்றிரண்டு தவிர, கிடைத்தவை அனைத்தையும் முழுவீச்சில் வாசித்து முடித்தேன். இவற்றுடன் கைக்குக் கிடைக்கும் எல்லாச் சஞ்சிகைகளும் என் வாசிப்புக்கு இரையாகும். கொஞ்சம் வித்தியாசமான வாசிப்பைத் தந்தது என் மச்சான் வீட்டிலிருந்த புத்தகங்கள்தான். பெண்ணியம், நவீனத்துவம் என்று பல புதுச் சொற்களும் அவை சார்ந்த படைப்புகளும் அறியப்பெற்றேன். மல்லிகை இதழும் அங்கே தான் அறிமுகமானது. வாசிக்க கஷ்டமாக இருக்கிறதென நானாகவே தீர்மானித்து வாசிக்காமல் விட்டு "அட! விட்டுட்டமே" என இப்ப வருந்தும் படைப்பு "தாய்". தினமுரசு வாரப்பத்திரிகையில் மொழிபெயர்ப்பாக வெளிவந்தது. மொழிபெயர்ப்புகள் எளிமையான நடையில் இருப்பதில்லை என்பது எனது கருத்து. இங்கே இப்போது "விலங்குப்பண்ணை" ஒரு இலவச தமிழ்ப்பத்திரிகையில் வெளிவருகிறது. எத்தனை பேர் வாசிக்கிறார்களோ தெரியவில்லை!

இங்கேயுள்ள வாசிகசாலையில் நிறைய ஆங்கிலப்புத்தகங்கள் (7 daughters of Eve, The Alchemist, The Last Ride,The Dead Sea Scrolls, Mistress of Spices, தொல்பொருளியல் சம்பந்தமான புத்தகங்கள், Dean Koontz & Stephen King படைப்புகள்) எடுத்து வாசிப்பதுண்டு. அவுஸ்திரேலியாவுக்கு வந்த புதிதில் ஒருவரைச் சந்திக்கக் கிடைத்தது. 2004ல் இணையத்தில் வாசிக்கும் வரை அவரைப்பற்றியோ அல்லது அவர் படைப்புகளைப் பற்றியோ தெரியாது. "வாசிக்கிற பழக்கம் இருக்கோ" என அவர் கேட்டதற்கு ஆமென்றேன். "நல்லது. அப்பத்தான் பலதையும் அறியலாம்" என்றார். தொடர்ந்த 2/3 சந்திப்புக்களிலும் அவருடன் கதைத்திருக்கிறேன். அவர் எஸ்.பொ. நல்ல படைப்புகள் தாங்கி 'கலப்பை' என்றொரு காலாண்டு சஞ்சிகை வெளிவருகிறது. இலங்கையில் போன்று தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பதில்லை இங்கே. யார் வீட்டிலாவது போய் "தமிழ்ப்புத்தகம் என்ன இருக்கு?" என்றால் ஆ.வி/குமுதத்தைத் தான் நீட்டுகிறார்கள். " இவையல்ல..புத்தகம்?" என்று அழுத்திக் கேட்டால் வினோதமான பிராணியைப்போல பார்க்கிறார்கள்! :o(

இப்போது வாசித்துக்கொண்டிருப்பவை:
- பெரிய புராணம் ஒரு ஆய்வு
- Memoirs of a Geisha.

என் அடுத்த வாசிப்புகள்:
- கோயில் நூலகத்திலிருந்து எடுத்து வர இருக்கும் ஈழத்துப்பூராடனாரின் 'தமிழழகி'

- Da Vinci Code (இன்னும் வாசிக்கவில்லையா என்று புருவம் உயர்த்துபவர்களுக்கு: நான் நூலகத்தில் இதற்கு முன்பதிவு செய்து 7 மாதமாகிறது!!)

பெருமூச்சு!

வெந்த புண்ணில் வேலைப் பாச்சுற மாதிரி துளசி ஒரு வேலை செய்து போட்டா! ஹ்ம்ம்..!! அவ சொல்லுறதை சொல்லிட்டுப் போய்ட்டா...என்ட மனம் படுற பாடு எனக்குத் தானே தெரியும்.


அப்பிடி என்னதான் செய்தா/சொன்னா என்று சுட்டில போய் பாத்துட்டு வந்திருப்பீங்க. பாக்காதவர்களுக்கு: வலைப்பதிவர்கள் இப்ப விளையாடிக் கொண்டிருக்கிற விளையாட்டாம் (நான் இதை தட்டச்சி முடிக்க முதல் அவங்க விளையாடியே முடிஞ்சு போம்!) என்று என்னையும் இழுத்து விட்டா இந்த துளசி(க்கா/ம்மா). அவங்கவங்கட புத்தக அலுமாரில என்னென்ன இருக்கு, இப்ப என்ன வாசிச்சுக் கொண்டிருக்கிறாங்க என்று எழுத வேணுமாம். எல்லாருக்கும் புத்தக அலுமாரி என்டா எனக்கு அது புத்தக 'அழு'மாரி! வேறென்ன பின்ன..இருக்கிற ரெண்டிலயும் நிறைஞ்சு வழியிறது கணவரது முகாமத்துவம், கணக்கியல் மற்றது என்னுடைய கணினி சம்பந்தப்பட்ட புத்தகங்கள் தான். இதெல்லாத்தையும் விட்டிட்டுப் பாத்தா கொஞ்ச கணினி, பொருளாதார, ஆ.வி/குமுதம் , ரீடர்ஸ் டைஜஸ்ட், 3 குறுக்குத் தையல் டிசைன் இதழ்களும் இரண்டு பேருடைய பாடக்குறிப்புகளும் ஆங்கில அகராதியும் என்சைக்ளோபீடியாவும் மிச்ச இடத்தில் முக்கால்வாசியை ஆக்கிரமிச்சுக் கொண்டிருக்கும்.

அதெல்லா.. ஆ..ஆ..த்துக்கும் பிறகு ஒரு 3 - 7% வீதம் மிச்சம். இதுக்குள்ளதான் 'புத்தகங்கள்'.
கவனமா நோண்டிப்பாத்ததில:

சிவகாமி இன்னும் அவட சபதத்தோட மாமல்லரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறா.(இவவோட சேர்த்து புத்தகக்டையில இருந்தது காணும் என்டு கூட்டிகொண்டு வந்த வந்தியத்தேவன், குந்தவை, வானதி, அருண்மொழி எல்லாரும் இலங்கையிலே நிண்டிட்டாங்கள்.)

பாரதியாரும் கவிதை பாடிக்கொண்டிருக்கிறார்.

சத்தியமா இந்த பாரதியார் கவிதையும் சிவகாமி சபதமும் ஆ.வி/குமுதமும்தவிர வேற ஒரு தமிழ்ப்புத்தகமும் வீட்டில இல்லை! (அண்ணியிட மாமாட நினைவுப் புத்தகம் தான் 4வது) வந்து..இந்த எண்கணிதச் சாத்திரப் புத்தகத்தையும் இதுக்குள்ளே சேர்க்கலாமோ?

ஒரு இந்து சமயப் புத்தகம் "Dance of Siva"
மாண்டூக்கிய உபநிஷதம்
மைக்கல் ஜக்சன்ட Moon Walking
ஸ்டீபன் கிங்கின் IT
In the footsteps of Eve
2 - 3 ISKON புத்தகங்கள்.
The Twentieth Train to Auchswitz


இவ்வளவுந்தான் என்ட 'அழு'மாரியில.

எல்லாரும் எல்லாரையும் கூப்பிட்டிட்டாங்க. நான் என்ட பங்குக்கு இந்த விளையாட்டில பங்கு கொள்ள இன்னும் அழைபடாதவர்களையும் வசந்தனையும் க்ருபாவையும்(இவங்களை யாரும் எனக்கு முன்னமே கூப்பிட்டிருந்தா நான் பொறுப்பில்ல.) கூப்பிடுறன்.

சரி அழைப்பிதழ் அனுப்பியாச்சு!

அங்க இலங்கையில வீட்டில இருந்த புத்தகங்கள்...ஹ்ம்ம்...பெருமூச்சுத்தான் விடேலும். அடுத்த முறை போககிடைச்சா எல்லாப்புத்தகங்களையும் சுருட்டிக் கொண்டு வாற திட்டத்தில இருக்கிறன். அம்மாட்ட சொல்லிடாதீங்க...உஷ்ஷ்!! அடுத்த பதிவில எப்பிடி வாசிப்புப் பழக்கம் தொடங்கினது..வளந்தது என்டு இந்தப் பதிவுக்கு ஒரு prequelம் இப்ப என்ன வாசிச்சுக் கொண்டிருக்கிறன் என்று ஒரு sequel உம் 2 in 1ஆகத் தாறன்.

நாயே..!

எனக்கு நண்பன் ஒருவன் இருக்கிறான். இருவருக்கிடையிலும் வாயில் நாய் மாடு பண்டி குரங்கு என்று சகல மிருகங்களும் தாராளமாக வந்து போகும்.

ஒரு நாள் அவன் சொன்ன/செய்த எதற்கோ பதிலாக நான் கொஞ்சம் இரைந்து கதைத்து விட்டேன். அவன் என்னை கேட்டான் "ஏன் இப்பிடி நாய் மாதிரிக் குலைக்கிறாய்?"

அவன் அப்படி கேட்டதற்கு நான் சொன்னேன்: நீ என்னை நாய் என்று திட்டுவதால் தான் நான் குலைக்கிறேன்"

அதற்கு அவன்: "உன்னை எப்பவாவது அப்பிடி ஏசியிருக்கிறனா நாயே!"


அதைக் கேட்டதும் எனக்குச் சிரிப்பு வந்தது. நான் சிரிக்கத் தொடங்கியதும் கோபம் வந்து விட்டது அவனுக்கு. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு தான் அவனுக்கே தான் சொன்னது உறைத்தது. பிறகென்ன..ஒரே சிரிப்புத்தான்!

உன்னை 1 கேட்பேன்..

இதெல்லாம் தேசத்துக்கு மிகவும் முக்கியமான கேள்விகளா என்றெல்லாம் ஆராயாமல்..பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

1. முகில்களின் நிறை அளக்கப்படுவதுண்டா? எப்படி அளக்கிறார்கள்?

2. கவலையாக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.நண்பர் வந்து தேற்றுகிறார்.."இதுக்கெல்லாம் போய் கவலைப்படாதே...எத்தனை பேர் உன்னை விட கஷ்டமான நிலமையில் இருக்கிறாங்க என்று யோசி". பேச்சுக்கு உங்களை விட கஷ்டத்தில் "க" என்பவர் இருப்பதாக வைத்துக் கொண்டால், அவருக்கும் ஒரு நண்பர் வந்து (உங்களூக்கு உங்கள் நண்பர் சொன்னது போலவே) தேறுதல் சொல்லலாம் தானே...அப்போ உங்களுக்கு "க" போல "க" வுக்கு "ப" என்று ஒரு ஆள் வரக்கூடும். "ப" வுக்கு ஒரு "ச" இருப்பார்.(என்னை "நீ போய் 'சா' " என்று சொல்லக்கூடாது ஆமா!!)இப்படியே போனா யார்தான் அந்த மகா..ஆ..ஆ துர்பாக்கியசாலி?தேற்றுவதற்கு நண்பர் இல்லாதவரா?

3. "அ" ஒரு விதவை. "அ" வை திரு."எ" திருமணம் செய்தால், "எ" விதவைக்கு வாழ்வளித்தவர் எனப்படுவார். ஆனால் அதே "எ" ஒரு தபுதாரனாயிருந்து "அ" அவரைத் திருமணம் செய்து கொண்டால் "அ" 2ம்(2/3/4 எது வேணா போட்டுக்கொள்ளலாம்) தாரம். அது எப்படி? ஏன் "அ" "எ"க்கு வாழ்வளித்தவராகக் கூறப்படுவதில்லை?

இனிமேலும் கேட்கப்படும்...(ஏன் ஓடுறீங்க??) ;o)

பெட்டகம்