என் புத்தக வாசம்!

புத்தகம் என்று எனக்கு 'முதல்' ஞாபகமிருப்பது ஒரு பெரிய எழுத்தில இருந்த நீதிக்கதைப்புத்தகம் தான். அதில் படங்களும் இருந்தது. இன்னுமொரு புத்தகம் - கதையோ பெயரோ ஞாபகமில்லாதது - ஒரு சேவலும் அதைப்பிடிக்கிறதுக்கு முயற்சிக்கிற நரியும் பற்றினது. குறிப்பாக ஒரு புத்தகத்தை ஞாபகப் படுத்த் முயற்சிக்கிறேன். ஆனால் அப்படிப்பட்ட முயற்சிகளுக்கே உரித்தான நக்கலுடன் பலனில்லாமல் ஞாபகப்படுத்தல் தொடர்கிறது. புத்தகத்திட பெயர் ஞாபகம் வராததுக்கு கதை மறந்து போனது முக்கிய காரணியாக இருக்கலாம். ஒரு மலையின் மேடான உச்சியில் ஒரு சிவப்புப் பழம் இருந்ததும் ஒரு மாடு சம்பந்தப்பட்டிருந்ததும் படத்தில் பர்த்த ஞாபகம். :o) (யாருக்காவது ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே??)

வாசிப்புப் பழக்கம் இத்தனையாம் வயதில்தான் தொடங்கியது என்றெல்லாம் குறிப்பாய்ச் சொல்லத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்து நான் வாசிக்காமல் இருந்ததில்லை. அம்மாவும் பெரியண்ணாவும் சாப்பிடும் போது இடக்கையால் புத்தகம் புரட்டுவார்கள். புத்தகம் இல்லாட்டி இருவருக்குமே சாப்பாடு இறங்காது. எனக்கும் முதலில் அப்படி ஒரு வியாதி இருந்தது. பிறகு கொஞ்ச நாள் விடுதியில் தங்கிப்படித்ததால் அப்பழக்கம் விட்டுப்போயிற்று. கையிலே புத்தகம் இருந்தால் வாய்க்குள்ளே என்ன போகுதென்றே தெரியாது. மற்ற வேளைகளிலும் புத்தகம் வாசிக்க உட்கார்ந்தால் வெளிச்சத்தம் ஒன்றும் கேட்காது(அம்மா கூப்பிடுவது உட்பட!பிறகு தடாரென்று ஒரு 'தட்டு' விழத்தான் அம்மா கூப்பிட்டிருக்கிறா என்று 'உறைக்கும்') :oD

விடுமுறைக்கு யாழ்ப்பாணம் போகும் போது நிறைய புத்தகம் வாங்கக்கிடைக்கும். பேருந்துத் தரிப்பிடத்தில் இறங்கி ஒரு நிமிட நடை தூரத்தில் பூபாலசிங்கம் புத்தகக்கடையில் கோகுலம், ரத்னபாலா, பாலமித்ரா, அம்புலிமாமா, நீதிக்கதைகள் கொஞ்சம், ஈசாப் கதைகள், முல்லா/பீர்பால்/தெனாலிராமன் கதைகள் என்றெல்லாம் நான் பொறுக்கிக் கொண்டிருக்க அம்மா பக்கத்திலுள்ள பழக்கடையில் வீட்டாருக்குத் திராட்சைப்பழம் வாங்குவா. கிட்டத்தட்ட 10 - 15 புத்தகம் தேறும். பொறுமை இருந்தால் விடுமுறை முழுக்க வாசிக்கலாம். என்னைப் போல 'கடுகதி' தரைவழிகளுக்கெல்லாம் இது யானை வாய்க்குச் சோளப்பொரி போல! எவ்வளவுதான் இழுத்து, மெதுவாக வாசித்தாலும் 2 நாளைக்குத் தான் அவ்வளவு புத்தகமும் வரும். இதெல்லாம் முடிய பாட்டி வீட்டில போய் நோண்டிறது. அங்கே நல்ல நல்ல புத்தகங்கள் இருந்தன. ஆனால் அப்ப சின்னனில் வாசித்தால் விளங்காது. பின்பு வளர்ந்த பிறகு போகிற போது புத்தக வேட்டைக்கு அவ்வளவாக நேரம் ஒதுக்க முடியவில்லை.

வீட்டிலே பஞ்ச தந்திரக் கதைகளுடன், மகாபாரதமும் இராமாயணமும் இருந்தன. நல்ல தடிப்பமான புத்தகங்கள். நிறையக் கிளைக்கதைகளோடு.பஞ்சதந்திரக்கதைகளில் "inherited" கதைகள் வாசித்துக் கொண்டு போகும் போது மூலக்கதை சிலவேளைக்களில் மறந்து விடும்..திரும்ப ஆரம்பிப்பதுமுண்டு! இராமாயணம் வாசித்து முடித்ததும் லவகுசரைப்பற்றி ஆர்வம் வந்து அம்மாவை நச்சரித்தேன். நிறைய நாள் லவகுசர் பற்றி புத்தகம் தேடி அலைந்தது ஞாபகமிருக்கிறது. கிடைக்கவில்லை. பிறகு பதினொரு வயதில் குடும்ப ஒன்றுகூடலுக்கு இந்தியா போன போதுதான் கிடைத்தனர் லவகுசர். பெரியண்ணாக்கு என்னை நன்றாகத் தெரியும் - புத்தகத்துக்கு என்னவும் செய்வேன் என்று. இந்தியாவில் தான் நிறையப் புத்தகங்கள் கிடைக்குமே..ஆ.வி/குமுதம், கோகுலம்(தமிழ்+ஆங்கிலம்), ரத்னபாலா, இன்னபிற சிறுவர் இதழ்கள்/புத்தகங்கள், மு.வரதராசனார் சரிதை, சிவகாமி சபதம் பொன்னியின் செல்வன், சாண்டில்யன் கதைகள் என்று நிறைய (லஞ்சமாக) வாங்கித் தந்து பல வேலைகள் (தேத்தண்ணி போட்டுக் கொடுப்பது, அவருடை உடுப்பு மடிப்பது etc..) செய்வித்துக் கொண்டார். :o) முன்வீட்டுப்பிள்ளைகளுடன் விளையாடவும் போகாமல் 2 நாட்கள் தொடர்ந்து சிவகாமி சபதத்தை வாசித்து முடித்தேன். (மற்ற எல்லாப் பெரிய புத்தகமும் கிட்டத்தட்ட அதே வேகத்தில் வாசித்தேன்...அவற்றை அண்ணா தன்னோடு கொண்டு போய் விடுவாரே!!).

திருக்குறள், நளதமயந்தி, சிலப்பதிகாரம், சீராளன் கதை, சீவகசிந்தாமணி, வரலாற்றுப் புத்தகங்கள், மட்டக்களப்புப் பேய்க்கதைகள் எல்லாம் 12 வயதிற்குள்ளாக வாசித்தேன். பதின்ம வயதும் வந்தது. கொழும்பு வாழ்க்கையும் வந்தது. விடுதியிலும் தங்கிப்படித்தேன். பள்ளிக்கூடத்தில் ஆங்கிலப்புத்தகங்கள் தாராளமாகக் கிடைக்கும். அப்படிக் கிடைத்தவற்றில் Nancy Drew, Hardy Boys அத்தனையும் வாசித்தேன். அதுவே பெரும்பான்மை வாசிப்பானதில் ஒரு கட்டத்தில் சலித்தும் போனது. ஆங்கில இலக்கியப் பாடத்துக்குக்கு பண்பியல் புத்தகங்கள்தான் முக்கியமாக இருந்தது. ஆங்கில ஆசிரியையிடம் கேட்டு எங்கள் வயதிற்குரிய பதிப்புக்களை பெற்று வாசித்தேன்..Mill on the Floss, Pride and Prejudice, Macbeth, இன்னும் பல. பள்ளிக்கூட மாணவர் விடுதியில் நூலகம் ஆரம்பித்தோம். அதில் Anne of Green Gables தொடரை வாசித்தேன். இப்படி இருக்கையில் ஒருநாள் ஒரு அரைவாசி கிழிந்த புத்தகம் அகப்பட்டது. தொடக்கமுமில்லை..முடிவுமில்லை. நடுவில் காடையர்/குண்டர்களின் அராஜகங்கள் விபரிக்கப்பட்டிருந்தன. என்ன முயன்றும் புத்தகப் பெயரை அறிய முடியவில்லை. புத்தகத்தையும் என்னால் மறக்க முடியவில்லை. (1997/1998 இல் 'பெண்களுக்கான ஆராய்ச்சி மைய'த்தில் (CENWOR)வேலை செய்கையில் தான் முழுப்புத்தகமும் வாசிக்கக் கிடைத்தது - "முறிந்த பனை").

அருந்ததி ராயின் "God of Small things" தொடக்கத்தில் கொஞ்சம் இழுபட்டாலும், நன்றாக இருந்தது.பிறகு ரமணி சந்திரனின் கதைகள் வாசித்தேன். ஆங்கில காதல் கதைப் புத்தகமான Mills & Boon இன் தமிழாக்கமாக இருந்ததாலும், பெரிதாக அதிலிருந்து 'பெற' ஒன்றுமிருக்காததாலும் அவற்றை வாசிப்பதை நிறுத்தி, லஷ்மிக்குத் தாவினேன். அவவின் கதைகளின் முடிவுகள் ஊகிக்கக் கூடியதாக இருந்தமை பிடிக்கவில்லை. அவவையும் விட்டு, சிவசங்கரி, அனுராதா ரமணன் வாசித்தேன். என்னென்ன வாசித்தேன்..பிடித்ததா என்று ஒன்றும் ஞாபகமில்லை. வந்தா இந்துமதி. அதுவரை வாசித்தவற்றிலிருந்து அவவின் படைப்புகள் வித்தியாசப்பட்டிருந்தமை கவர்ந்தது. ஒன்றிரண்டு தவிர, கிடைத்தவை அனைத்தையும் முழுவீச்சில் வாசித்து முடித்தேன். இவற்றுடன் கைக்குக் கிடைக்கும் எல்லாச் சஞ்சிகைகளும் என் வாசிப்புக்கு இரையாகும். கொஞ்சம் வித்தியாசமான வாசிப்பைத் தந்தது என் மச்சான் வீட்டிலிருந்த புத்தகங்கள்தான். பெண்ணியம், நவீனத்துவம் என்று பல புதுச் சொற்களும் அவை சார்ந்த படைப்புகளும் அறியப்பெற்றேன். மல்லிகை இதழும் அங்கே தான் அறிமுகமானது. வாசிக்க கஷ்டமாக இருக்கிறதென நானாகவே தீர்மானித்து வாசிக்காமல் விட்டு "அட! விட்டுட்டமே" என இப்ப வருந்தும் படைப்பு "தாய்". தினமுரசு வாரப்பத்திரிகையில் மொழிபெயர்ப்பாக வெளிவந்தது. மொழிபெயர்ப்புகள் எளிமையான நடையில் இருப்பதில்லை என்பது எனது கருத்து. இங்கே இப்போது "விலங்குப்பண்ணை" ஒரு இலவச தமிழ்ப்பத்திரிகையில் வெளிவருகிறது. எத்தனை பேர் வாசிக்கிறார்களோ தெரியவில்லை!

இங்கேயுள்ள வாசிகசாலையில் நிறைய ஆங்கிலப்புத்தகங்கள் (7 daughters of Eve, The Alchemist, The Last Ride,The Dead Sea Scrolls, Mistress of Spices, தொல்பொருளியல் சம்பந்தமான புத்தகங்கள், Dean Koontz & Stephen King படைப்புகள்) எடுத்து வாசிப்பதுண்டு. அவுஸ்திரேலியாவுக்கு வந்த புதிதில் ஒருவரைச் சந்திக்கக் கிடைத்தது. 2004ல் இணையத்தில் வாசிக்கும் வரை அவரைப்பற்றியோ அல்லது அவர் படைப்புகளைப் பற்றியோ தெரியாது. "வாசிக்கிற பழக்கம் இருக்கோ" என அவர் கேட்டதற்கு ஆமென்றேன். "நல்லது. அப்பத்தான் பலதையும் அறியலாம்" என்றார். தொடர்ந்த 2/3 சந்திப்புக்களிலும் அவருடன் கதைத்திருக்கிறேன். அவர் எஸ்.பொ. நல்ல படைப்புகள் தாங்கி 'கலப்பை' என்றொரு காலாண்டு சஞ்சிகை வெளிவருகிறது. இலங்கையில் போன்று தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பதில்லை இங்கே. யார் வீட்டிலாவது போய் "தமிழ்ப்புத்தகம் என்ன இருக்கு?" என்றால் ஆ.வி/குமுதத்தைத் தான் நீட்டுகிறார்கள். " இவையல்ல..புத்தகம்?" என்று அழுத்திக் கேட்டால் வினோதமான பிராணியைப்போல பார்க்கிறார்கள்! :o(

இப்போது வாசித்துக்கொண்டிருப்பவை:
- பெரிய புராணம் ஒரு ஆய்வு
- Memoirs of a Geisha.

என் அடுத்த வாசிப்புகள்:
- கோயில் நூலகத்திலிருந்து எடுத்து வர இருக்கும் ஈழத்துப்பூராடனாரின் 'தமிழழகி'

- Da Vinci Code (இன்னும் வாசிக்கவில்லையா என்று புருவம் உயர்த்துபவர்களுக்கு: நான் நூலகத்தில் இதற்கு முன்பதிவு செய்து 7 மாதமாகிறது!!)

0 படகுகள் :

பெட்டகம்