அம்மாவுக்கு ஓர் கடிதம்

அன்புள்ள அம்மா,

நாம் நலம். அதுபோல் நீங்களும் இருக்கக் கடவுளை வேண்டுகிறேன்.

என்னடா நேற்றுத்தானே தொலைபேசியில் கதைத்தாள்.. இன்றைக்குக் கடிதம் போடுகிறாளே என்று நீங்கள் நினைக்கலாம். கடிதம் போல் வராதுதானே அம்மா. கதைப்பவை மறந்து போகும், எழுத்திலிருப்பவை என்றும் இருக்கும்.

நான் வலைப்பதிகிறேனென உங்களுக்குச் சொல்லியிருக்கக்கூடும். இல்லாவிட்டால் இப்பொது தெரிய வந்திருக்கும். ஒன்றும் பெரிதாய் எழுதிக் கிழிப்பதில்லை. கைக்கு வந்ததைக் கிறுக்குவதுதான். என்னைப்போலவே நிறையப்பேர் வலைப்பதிகிறார்கள். ஒவ்வொரு விதமான எழுத்துகளும் கருத்துகளும் வெளிப்படுகின்றன. அப்படி ஒருவர் இன்றைக்கு அவரது அப்பாவைப் பற்றி எழுதியிருந்தார். அது இங்கே. மனதைக் கனக்கச் செய்த பதிவு. தனது அப்பாவைப் பற்றித் தெரிந்ததாக நினைத்ததெல்லாம் தெரியாததாகவே இருந்திருக்கிறது என்கிறார் அம்மா.

என் நிலைமையும் அப்படித்தான். கொஞ்ச நாட்களுக்கு முன் உங்களுக்குப் புத்தகங்கள் அனுப்பினேன் தானே..உங்களுக்குப் பிடித்ததாயிருக்க வேண்டுமேயென யோசித்து அவற்றைத் தேடியெடுக்க எனக்குப் பல நாட்கள் சென்றன. அம்மா என்கிற பாத்திரம் தவிர ஒரு பெண்ணாய் சுய விருப்பு வெறுப்புடைய மனிதராய் உங்களைப் பார்த்ததில்லையே நான். அதுதான் பெரிதாய் ஒன்றும் உங்களைப் பற்றிப் தெரியவில்லை.

உங்களை உடனே பார்க்க வேண்டும் போல இருக்கும். ஆனால் முடியாதே... அடுத்த ஆண்டு போகும் போது போய்ப் பார்ப்போம் என்று நினைத்திருந்த பெரியம்மா இறந்த பிறகு, உங்களைப் பார்க்க வேண்டும் என்கிற நினைப்புத் தீவிரமாகியிருக்கிறது. எனக்கும் உங்களுக்கும் வயது போகிறது. உடல்நிலையிலும் நினைவுகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட முன்பு இயலுமான அளவு நேரத்தை உங்களுடன் கழிக்க வேண்டும். சின்ன வயதில்
கிடைத்த நேரங்களின் அருமை தெரியவில்லை. எத்தனையோ முறைகள் உங்களை நான் காயப்படுத்தியிருக்கிறேன். பிழைகளை இப்பத்தான் உணர்ந்து கொண்டிருக்கிறேன். மன்னித்துவிடுங்கள். அப்பா இல்லாமல் போன பிறகு தனியாய் எங்கள் மூவரையும் வளர்த்தது எவ்வள்வு பெரிய விதயம் என்று இப்ப விளங்குகிறது.

எம்மியினதும் ரீச்சரினதும் இழப்புக்குப் பின் நீங்கள் இன்னும் அமைதியாகி விட்டது போலத் தோன்றுகிறது. உண்மையா? இவர்களிருவரும் தவிர, மாமியைத் தவிர்த்து - நீங்கள் யாருடனும் மனந்திறந்து பேசியதை நான் கண்டதில்லை. சகோதரிகளைப் போன்ற நண்பிகளின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. நினைத்த நேரம் மின்னஞ்சலிலோ தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளக் கூடிய நிலையில் இலங்கையிலுள்ள என் தோழிகளையே நான் மிஸ் பண்ணுகிறேன். பொங்கி வரும் உணர்வுகளை, எண்ணங்களை உடனே பகிர்ந்து கொள்ள முடியாமற் போகிற போது மிகவும் தவித்துப் போகிறேன். பகிர விரும்புபவற்றை கொஞ்ச நேரத்திற்கென்றாலும் மனதில் பூட்டி வைத்திருப்பது கடினமான செயலாக இருக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள் அம்மா?

இங்கே சிட்னிக்கு உங்களைக் கூப்பிட்டுக் கொள்ளலாமே என்று நிறையப் பேர் கேட்டு விட்டார்கள். நானும் உங்களைக் கூப்பிட்டிருக்கிறேன். ஆனாலும் எப்போதுமே முழுமனத்தோடல்ல. அங்கே இருக்கும் சுதந்திரம் இங்கே வராதம்மா. நினைத்த நேரம் பேருந்தில் ஏறிப்போய் தியான நிலையத்தில் இருந்து விட்டு வரலாம்..வேலைக்குப் போகலாம், போய் வருகிற வழியில் மரக்கறிக் கடையில் தேவையானதை வாங்கி விட்டு கைப்பையையோ, குடையையோ மறந்து விட்டுவிட்டு வரலாம்!

பிறர் கை எதிர் பாராது தனியே செயற்பட உங்களால் அங்கே முடியும். ஆனால் இங்கே வந்து அப்படியல்ல. வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடைக்கும் பல பெற்றாரைப் பார்த்திருக்கிறேன். அப்படி நீங்கள் அடைந்து கிடக்க வேண்டியதில்லை என்று தோன்றியதாலேயே உங்களைக் கூப்பிடவில்லை. நான் கூப்பிட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

பிள்ளைகள் வளர்ந்த பிறகு பெற்றோருக்குக் கிட்ட இருப்பது பெற்றாரை அம்மா - அப்பா என்கிற பாத்திரத்திலே மட்டுமல்லாமல், தனி மனிதராயும் பார்க்கக் கற்றுக் கொடுக்கும் என்று நினைக்கிறேன். என்ன நினைக்கிறீங்க?

முதலெல்லாம் அடிக்கடி "எப்ப வாறாய்" என்று கேட்பீர்கள்" இப்போது கேட்பதில்லையே? ஏன்? கேட்காததும் நல்லதுக்குதானோ...எனக்கும் குற்ற உணர்ச்சி வராது. "இப்ப டிரெக்ட் லைனில கதைக்கிறன்..பிறகு கார்டில எடுக்கிறன்" என்றதுடன் சேர்த்துச் சொல்லும் அவசர 5 - 10 சொற்களும், கடிதங்கள் இல்லாமல் வரும் வாழ்த்து மடல்களுமன்றி அடுத்த முறை இன்னும் நிறைய நேரம் கதைக்க வேண்டும் என நினைப்பதும் வாழ்த்து மடலுடன் 10 வரிக் கடிதமும் இரண்டு படங்களுமாவது அனுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வாழ்வதும் வேறெதைத்தருமெனக்கு?

வழக்கம் போல அல்லாமல் கடிதம் கொஞ்சம் கனத்துப் போய் விட்டது. உண்மை பேசினதினாலேயோ என்னவோ.. மனப்பளுவை ஏந்தாத ஒரு அன்பான கடிதத்தில் மீண்டும் சந்திப்போம். பத்திரமாக இருந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு
அன்பு மகள்

15 படகுகள் :

Pavals August 10, 2005 5:18 pm  

//பிறர் கை எதிர் பாராது தனியே செயற்பட உங்களால் அங்கே முடியும். ஆனால் இங்கே வந்து அப்படியல்ல. வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடைக்கும் பல பெற்றாரைப் பார்த்திருக்கிறேன். அப்படி நீங்கள் அடைந்து கிடக்க வேண்டியதில்லை என்று தோன்றியதாலேயே உங்களைக் கூப்பிடவில்லை. நான் கூப்பிட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்களா?//

...

துளசி கோபால் August 10, 2005 7:14 pm  

என்ன, எல்லாரும் மனசைக் கனக்க வைக்கணுமுன்னு கங்கணம் கட்டிக்கிட்டீங்களா?
போங்க ஷ்ரேயா.

எனக்கு ரொம்ப 'கில்டி'யா இருக்கு.

கலை August 10, 2005 8:12 pm  

கடிதம் மனதை மிக ஆழமாய் தொடுகிறது. துளசி சொன்னதுபோல் மனசைக் கனக்கச் செய்கிறது.
//பிள்ளைகள் வளர்ந்த பிறகு பெற்றோருக்குக் கிட்ட இருப்பது பெற்றாரை அம்மா - அப்பா என்கிற பாத்திரத்திலே மட்டுமல்லாமல், தனி மனிதராயும் பார்க்கக் கற்றுக் கொடுக்கும் என்று நினைக்கிறேன்.//
இதுவும் உண்மைதான்.

கயல்விழி August 10, 2005 8:17 pm  

கனமான பதிவு ஷ்ரேயா.
பல பிள்ளைகளின் நிலை இது தானோ??

எல்லாரும் இங்கு வந்தால் பெற்றோருக்கு சுதந்திரம் இல்லை என்ற ஒரு சாட்டை சொல்கிறார்கள். இது தாங்கள் செய்த செய்கின்ற தவறிக்கு நாகரீகமான பதிலோ?? ஏன் என்றாலட பிள்ளைகளை நினைத்து ஏங்கி தவித்து கோயில் கோயிலா அலைகிற நிறைய தாய் மாரை நான் கண்டிருக்கிறன். அப்படிப்பட்ட தாய்மார் தந்தைமார் சுதந்திரத்தை பார்ப்பார்களா பிள்ளைகளுடன் வாழவேண்டும் என்று பார்ப்பார்களா? தொலைபேசியிலும் கடிதத்திலும் பகிரப்படுகின்ற அன்பு அருகில் பகிரப்படுவது போல வருமா? இல்லைத்தானே.!

வீ. எம் August 10, 2005 11:46 pm  

manadhai kanakka seitha nalla thoru padhivu shreya..

V M

இரா. செல்வராசு (R.Selvaraj) August 11, 2005 3:05 am  

ஷ்ரேயா, அருமையான கனமான ஒரு கடிதம் எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்வது நிச்சயமாய்ப் புரிகிறது.

`மழை` ஷ்ரேயா(Shreya) August 11, 2005 8:54 am  

ராசா, துளசி, கலை அக்கா, கயல்விழி, வீ எம், மஞ்சுளா, செல்வராஜ் - நன்றி.

எனக்கு இது ஒரு சாட்டல்ல கயல்விழி. :O|

அவவைக் கூப்பிட்டு என்னுடனே கூட வைத்துக் கொள்ள ஆசைதான். ஆனாலும் , உடம்பு இயலுமாக இருக்கிற நேரத்திலே அவ தன் பாட்டுக்குச் சுதந்திரமாக விரும்பிய மாதிரிச் செயற்படுகிறா. "பாசமாக அம்மாவை என்னுடன் வைத்துக் கொள்கிறேன்" என்று சொல்லி இங்கே கூட்டி வந்து - கூண்டுக்கிளி போல அவவை வைத்திருந்து - அதைக் கெடுக்க எனக்கு விருப்பமில்லாமல் இருக்கிறது. இன்னொருவர் உதவி தேவைப்படுகிறது என்றால் தனியே விட மாட்டோம்தானே!

`மழை` ஷ்ரேயா(Shreya) August 11, 2005 8:56 am  

//தொலைபேசியிலும் கடிதத்திலும் பகிரப்படுகின்ற அன்பு அருகில் பகிரப்படுவது போல வருமா? இல்லைத்தானே//

இல்லைத்தான். நீங்கள்சொல்வது மிகவும் சரி கயல்விழி.

Anonymous August 11, 2005 4:38 pm  

கயல்விழி சொல்வது போல, இந்தச் சாட்டுகளெல்லாம் பிள்ளைகளின் குற்றவுணர்ச்சிக்கு ஒரு வடிகால்தான் என்று நினைக்கிறேன். ஆனா..அதே நேரம் பெத்தவுங்களும் பொறுப்புகள் இல்லாதே சுதந்திரமா வாழ ஆசைப்படவும் கூடும் இல்லையா? confusing..confusing!! :-(

மனதில் நிற்கும் பதிவு.

Anonymous August 11, 2005 6:18 pm  

இன்னிக்கு பல பதிவுகள் மனதைப் பிழியும்படி இருந்தன அக்கா. உங்களுடையதும்தான்.

Anonymous August 11, 2005 10:28 pm  

ஷ்ரேயா, நல்ல கடிதம். நான் என் அம்மாவைக் கூப்பிட்டு பேசினேன். உங்கள் எம்மி பற்றிய பதிவையும் படித்தேன். நன்று.

கலை August 11, 2005 10:47 pm  

//எல்லாரும் இங்கு வந்தால் பெற்றோருக்கு சுதந்திரம் இல்லை என்ற ஒரு சாட்டை சொல்கிறார்கள். இது தாங்கள் செய்த செய்கின்ற தவறிக்கு நாகரீகமான பதிலோ??//

//பெற்றோர்கள், சுதந்திரத்தை எதிர்பார்ப்பதில்லை. குழந்தைகளின் அருகாமையையே எதிபார்க்கிறார்கள்.//

//கயல்விழி சொல்வது போல, இந்தச் சாட்டுகளெல்லாம் பிள்ளைகளின் குற்றவுணர்ச்சிக்கு ஒரு வடிகால்தான் என்று நினைக்கிறேன்.//

பல பெற்றோர்களின் நிலமை இதுவல்ல என்பதும் உண்மையே. பிள்ளைகள் தங்களுடன் பெற்றோரைக் கூட்டி வைத்துக் கொள்ள விரும்பி, விசாவும் எடுத்த பின்னர் கூட வரமாட்டோம் என்று இருக்கும் பெற்றோரும் உண்டு. இதற்கு காரணம் சுதந்திரம் போய் விடும் என்பது மட்டுமல்ல, கடைசி காலத்தில் அறிமுகம் இல்லாத ஒரு இடத்தில், தெரிந்த பலரையும் விட்டு விட்டு, இருக்க வேண்டும், புதிய நாட்டின் கால நிலை பிடிக்காமல் இருக்கலாம், இப்படி பல காரணக்களால் பல பெற்றோர்கள் பிள்ளைகள்மேல் பாசம் இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து இருக்க ஆசை இருந்தாலும், அதைத் ட்தவிர்க்கவே விரும்புகிறார்கள். இது நிஜத்தில் கண்ட உண்மைதான்.

நற்கீரன் August 11, 2005 11:21 pm  

இக் கடுதத்தில் எந்த மறைப்பும் இல்லை. வெறும் மனது உண்மையுடன் பேசுகின்றது.
எப்படி திறந்த வெளியில் இப்படி உங்களின் வாழ்க்கையை உலாவ விட முடிகின்றது?
துணிவு.
வஞ்சகதன்மை இன்மை.
இப்பிடியும் மனிதர்கள் பலர் இருக்கின்றார்கள் என்பதுவே ஒருவித நம்பிக்கை தருகின்றது.

`மழை` ஷ்ரேயா(Shreya) August 12, 2005 9:00 am  

நற்கீரன் - திறந்த வெளியில் வாழ்க்கையை உலாவ விட முக்கிய காரணிகளாக இருப்பவை, என் நிலமையிலேயே பலரும் இருக்கிறார்கள் என்று கண்டதும், என் ஆதங்கம் கட்டாயம் புரிந்து கொள்ளப்படும் என்பதுமே. அத்துடன், பல வலைப்பதிவர்கள் ஏதோ நிறைய நாள் நெருங்கிப் பழகியவர்கள் போல (என்னால்) உணரப்படுவதுமே.

தங்கமணி - நீங்கள் அம்மாவுடன் கதைத்தது மகிழ்ச்சி. அடுத்த முறை கதைக்கும் போது அன்புடன் கேட்டதாகச் சொல்லுங்கள்.

கலை அக்கா, மூர்த்தி, அனுஷா - நன்றி.

அனுஷா - இதில் குழம்ப ஒன்றுமில்லை. இருபகுதிக்குமே அருகருகில் இருக்க வேண்டும் என்கிற ஆசை இருந்த போதும், என்னுடையது போன்றோ, கலை அக்கா சொல்வது போன்றதான காரணிகளே செயற்படுத்தப்படலைத் தீர்மானிக்கின்றன.

இதிலிருந்து மீண்டும் அறியப்படுவது ஒன்றுதான் - வெளிநாட்டு வாழ்க்கை ஒரு தங்கக்கூண்டு. அதற்குள்ளே இருக்கும் இருமனதான பறவைகளாய் நாங்கள். :O(

Unknown August 10, 2007 1:09 pm  

/தொலைபேசியிலும் கடிதத்திலும் பகிரப்படுகின்ற அன்பு அருகில் பகிரப்படுவது போல வருமா? இல்லைத்தானே//

உண்மைதான். ஆனால், வெளிநாடுகளுக்கு கூட்டி வந்து 1-2 மாதம வைத்திருந்து அனுப்பினால்தான் அவர்களுக்கும் நன்றாக இருக்கும். இங்குள்ள வாழ்க்கை முறை வேறு, நமது சொந்த ஊரில் வேறு.

அதனால்தான் கிராமத்தில் உள்ள என் பெற்றோரை அழைத்து வந்து இந்த ஜெயிலில் அடைக்க விரும்பவில்லை!

இது கண்டிப்பாக சாக்கு அல்ல!்

பெட்டகம்