தண்டனை

அவுஸ்திரேலிய கிழக்கு நேரப்படி, இன்று காலை 9மணிக்கு (சிங்கப்பூர் காலை 6) அந்த இளைஞன் தூக்கிலிடப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பான்.

அவன், வான் ஙுவென். வழிதவறிய தனது இரட்டைச்சகோதரனின் வழக்குரைஞர் கடனைத் தீர்ப்பதற்காக சிங்கப்பூர் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் கடத்த முற்பட்டிருக்கிறான். சிங்கப்பூரின் சாங்கி விமானநிலையத்திலே 400கிராம் ஹெரோயின் சகிதம் பிடிபட்டதற்கான தண்டனையே மேற்சொன்னபடி நிறைவேற்றப்பட்டது.

நல்லதொன்றைச் செய்ய யோசித்தும், அதைச் செயற்படுத்த தவறான வழியைத் (தெரிந்தே) தேர்ந்தெடுத்ததே அவனுக்கு முடிவையும் தேடித்தந்தது. அவன் குற்றவாளி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. அவனுக்களிக்கப்பட்ட தண்டனை தான் உறுத்துகிறது. அவன் செய்ததற்கு சிறைத்தண்டனை போதும் என்பதே என் கருத்து. சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டிருந்தால் அது முடிந்ததும் வெளியே வந்து இதையே மீண்டும் செய்ய மாட்டானா என்ற கேள்விக்கு (ஆயுள் தண்டனை வழங்கலாம் என்பதைத்தவிர) என்னிடம் பதிலில்லை.

சிங்கப்பூருக்குள் போதைமருந்து கடத்துவோருக்கு மரணதண்டனையளிப்பதன் மூலம் அவ்வாறு செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு அச்சுறுத்தலை, தமது எண்ணத்தை நடைமுறைப்படுத்துவதில் ஒரு தயக்கத்தைக் காட்டும்படி வைக்கிறது சிங்கப்பூர். இந்தத் தண்டனை முறை அந்த எச்சரிக்கை விடுத்தலைச் செவ்வனே செய்கிறது என்பதில் சந்தேகமில்லை. மரண தண்டனைதான், ஆனாலும் தூக்கிலிட்டுக் கழுத்து முறிய, துடிதுடிக்கக் கொல்வதுதான் ஒரே வழியா? இதே எச்சரிக்கையை வேறு தண்டனை(கள்) மூலம் விடுக்க முடியாதா?

குறிப்பு: கடைசியாக மகனைக் கட்டித்தழுவ அனுமதி கேட்ட அவனது அம்மாவுக்கு, ஜோன் ஹவாட் (அவுஸ்திரேலியப் பிரதமர்) தனிப்பட்ட வேண்டுகோள் சிங்கப்பூருக்கு விடுத்தமையால், மகனது கைகளைப் பற்றிக்கொள்ள மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

14 படகுகள் :

ஒரு பொடிச்சி December 02, 2005 1:36 pm  

அப்பிடியெண்டா போதைப்பொருள் முதலாளிகள போடட்டுமே சட்டங்கள்?! அப்படியே எல்லாம் ஒழிந்திருமே!
பிள்ளையை இறுதியாய் அணைக்கிறதுக்குக்கூட நியாயம் சொல்லுறானுகள்.
எய்தவனிருக்க இடையிட ஆப்பிடுற அப்பாவிகளைக் கொல்லுகிறவர்களை முதலில இப்படி தூக்கில போட்டா உருப்படலாம்.
(கடத்தினதற்கு) அந்தப் பையனிற்கு அதிகபட்சம் எவ்வளவு கூலி கிடைத்திருக்கும்?!

Anonymous December 02, 2005 1:39 pm  

தண்டனகளின் கொடூரம் செய்யும் தப்பை விடப் பெரியது . மரணத் தண்டனை மனிதனின் உள்ள அனிமல் உள்ள எச்சம் என்பதே என் எண்ணம் . Singaporeயில் தண்டனைகள் பயங்கரம் எனபதால் ஒரு பயம் கொண்ட சமூகத்தைத் தான் உருவாக்கி இருக்க வேண்டும் .நீங்கள் சிங்கையில் வாழ்வதானால் உங்களால் சொல்லமுடியும் ,எப்படி பட்ட சமூக அமைப்பு என்று.

நண்பன் December 03, 2005 4:17 pm  

நானும் இந்த வழக்கைப் பற்றித் தினமும் படித்து வந்தேன். இது பற்றிய ஒரு விரிவான பின்னூட்டம் இடலாம் என்றிருந்தேன். அது பற்றிய செய்தி உங்களால் இடப்பட்டுவிட்டது. ஆனால், நெற்று இங்கு விடுமுறை. அதனால் செய்தித் தாள் வாசிக்கவில்லை.

மரணதண்டனை அதிக பட்சம் தான். அதுவும் அந்த மனிதனின் கதை சற்று பரிதாபமானது தான்.

என்றாலும், மேற்கத்திய் நாடுகளில் குடியுரிமை பெற்றுவிட்டாலோ, அல்லது மேலை நாட்டின் குடிகள் என்றாலோ, தங்களுக்கு தனி மரியாதை தரப்படவேண்டும் என்ற எண்ணம் நிறைய மேல நாட்டவரிடமிருக்கிறது என்பது உண்மை. அதே போல தவறுகள் செய்தாலும்தங்களைத் தப்புவிக்க தங்கள் நாடு உதவும் என்ற தவறான எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது.

இந்த மமதையினால், பலரும் ஆசிய சமூகங்களின் அரசியல் சட்டங்களைத் துளியும் மதிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், தங்களை ஒரு super man அளவிற்கு மதிப்பு கொடுக்கும் நாடுகளுக்கு அவர்கள் விரும்பிச் செல்கிறார்கள் - தவறுகள் செய்வதற்காக.

இந்தியாவின் பல புராதான சுற்றுலா தளங்களில், இந்த வகையான ஆசாமிகள் போதையைப் புதைத்து கண்கள் சொருகிக் கிடைப்பதைப் பார்த்திருக்கிறேன். அதுபோல, இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்குச் சுற்றுலா செல்பவர்களின் நோக்கமும் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

இப்படி சாரிசாரியாகக் கிளம்பி வரும் இவர்களுக்கு, அவர்களது நாட்டின் அரசுகள் குறைந்த பட்சம் அறிவுரைகள் சொல்லி இருக்க வேண்டும். அடுத்த நாட்டின் சட்டங்களை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு சிறிய குண்டு அங்கு, இங்கு வெடித்தாலே, உடனே travel ban என்று முழங்கி, இல்லாத பயங்களையெல்லாம் உண்டாக்கி, அந்த நாடே ஒரு தீவிரவாத நாடு போல காட்ட முயற்சிக்கும் இந்த நாடுகள் தங்கள் பிரஜைகள் செய்யும் தவறுகளைக் கண்டிப்பதில்லை.

அது மட்டுமல்ல, இந்த மேலை நாடுகள் சட்டபூர்வமாக வாதம் செய்வதை விட்டு விட்டு, மிரட்டலில் ஈடுபடுகிறார்கள். ஆஸ்திரேலியாவின் வர்த்தக அமைப்பு - சிங்கப்பூரை தீண்டத்தகாதாக ஆக்க முயற்சித்ததையும் அறிவோம். பொருளாதார தடை விதிக்கப் போவதாக மிரட்டினர். இத்தகைய செயல்களுக்கு ஓர் அரசு பணிந்து போகாமல் இருப்பதெ உத்தமம்.

தூக்கிலிடப்பட்டவரின் கதை சோகமயமானது தான். தாய் தன் மகனை அரவணைக்க முடியாமல், போனது கொடுமை தான். ஆனால் சட்டத்தின் முன் பாசம் தொற்கத்தான் செய்ய வேண்டும். இல்லையென்றால் - ஒவ்வொரு கைதியும் ஒரு கதையை உண்டாக்க முடியும்.

மரண தண்டனை வேண்டுமா, வேண்டாமா, என்பதிப் பற்றி விவாதிக்கலாம். ஆனால், சிங்கப்பூர், தன் நாட்டின் சட்டத்தை அமுல்படுத்தியது சரியா, தவறா என்று விவாதிப்பது தவறான அணுகுமுறையாகும்.

கடந்த இரு நாட்களுக்கு முன், அமெரிக்கா தனது 1000மாவது மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது - 1977லிருந்து.

சிங்கப்பூரின் மீது கடும் கோபத்திலிருக்கும் ஆஸ்திரேலியா அல்லது அதன்பத்திரிக்கைகள் - ஒரு வார்த்தையாவது கண்டித்திருப்பார்களா - அமெரிக்காவின் சட்டங்களை?

(இந்தப் பின்னூட்டத்தை நான் ஒரு தனிப்பதிவாகவும் என் வலைப்பூவில் வைத்துக் கொள்கிறேன் நண்பரே..)

அன்பு December 03, 2005 4:56 pm  

நான் தேடிக்கொண்டிருந்த சுட்டியை ராஜ் ஏற்கனவே இட்டிருக்கிறார்...

நேற்றுக்காலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது. முன்னர் மலேசியாவைக் குறைகூறியதுபோலவே இந்தமுறையும் ஆஸ்திரேலியா (ஆனால் இந்த்முறை பிரதமரல்ல - உயர் சட்டத்துறை வல்லுனர்) நாகரீகமற்ற செயல் என்று கூறியுள்ளார். சட்டம் என்றொன்று இருப்பதால் அதற்கு கட்டுப்பட்டே இருக்கவேண்டியிருக்கிறது - அதற்கு மறுகருத்தில்லை.

செய்தியையும், வருத்தத்தையும் பகிர்ந்த்கொண்டமைக்கு நன்றி, ஷ்ரேயா.

Kanags December 03, 2005 11:52 pm  

சரியான பின்னூட்டல் நண்பனே. மனித வளத்தை மட்டும் நம்பி இருக்கும் சிங்கப்பூரின் சட்டதிட்டங்கள் சரியானது என்பதே எனது அப்பிப்பிராயம்.

`மழை` ஷ்ரேயா(Shreya) December 05, 2005 9:48 am  

அந்த முதலாளிகள் பிடிபட மாட்டார்கள் பொடிச்சி... இவன் செத்தால்தான் என்ன.. இன்னொரு மடையன் வருவான். பகடைகள் கிடைக்கும் வரை அவங்களுக்குக் கொண்டாட்டம்! வாழ்நாள் முழுதும் வலி தாய்க்குத்தான்.

அனானி - சிங்கப்பூரின் சமூகம் பயமுடையதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும், அந்நாடு தன்னைப் பாதுகாக்கத்தான் இந்தச் சட்டங்களையும் தண்டனைகளையும் செயற்படுத்துகிறது என்பது தெளிவு. தண்டனையளித்தது தவறல்லவே?

`மழை` ஷ்ரேயா(Shreya) December 05, 2005 9:55 am  

சுட்டிக்கு நன்றி ராஜ். சிங்கப்பூரும் அவுஸ்திரேலியா போன்றதொரு நாடுதான், இங்கே போலவே அங்கேயும் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறதென்பதை ஏனோ பலரும் (நண்பன் சொன்னது போல) உணர்வதாயில்லை. வான் ஙுவெனைக் காப்பாற்றுவதில் அவுஸ்திரேலிய அரசு போதுமான முயற்சி எடுத்துக் கொண்டதா என்றுதான் வாக்கெடுப்பு நடத்துகிறார்கள். :O|

`மழை` ஷ்ரேயா(Shreya) December 05, 2005 10:54 am  

நண்பரே, நீங்கள் சொல்வதுடன் நான் உடன்படுகிறேன்.

//அதே போல தவறுகள் செய்தாலும் தங்களைத் தப்புவிக்க தங்கள் நாடு உதவும் என்ற தவறான எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது.//

அதே. அதுதான் இன்னொரு நாட்டுக்குப் போய் அந்நாட்டுச் சட்டதிட்டங்களை abuse பண்ணலாமென எண்ண வைக்கிறது. எந்த நாடென்றாலும் தனது இறைமையைப் பாதுகாக்க, ஒழுங்கை நிலைநட்டத்தான் சட்டம் வைத்திருக்கிறது என்பது பற்றிப் பலரும் சிந்திப்பதில்லை. இங்கே பரவலான கருத்தும் அப்படித்தானிருக்கிறது. இந்த எண்ணந்தானே சிங்கப்பூருடனான வர்த்தகத் தொடர்புகளைத் துண்டிக்கச் சொல்லிக் கேட்கத் தூண்டியது? மக்களின் இப்படிப்பட்ட கருத்துக்குப் பிரதமர் ஜோண் ஹவார்ட் அளித்த பதில்:
I have told the prime minister of Singapore that I believe it will have an effect on the relationship on a people-to-people, population-to-population basis."

The prime minister said he felt sympathy for Nguyen's mother, and had been disappointed by Singapore's "clinical response" to Australia's request that she be allowed to hug her son before his death. The Singapore authorities had only allowed them to hold hands.

But Mr Howard has rejected calls for trade and military boycotts against Singapore, one of Australia's strongest allies in Asia. (சிங்கப்பூரை வர்த்தக ரீதியாக boycott பண்ணுதல் வெற்றியளிக்காது. உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்திலே இந்தப் புறக்கணிப்புக்கு இடமுமில்லை. தனிப்பட்ட புறக்கணிப்புகள் வேண்டுமானால், கொஞ்ச நாளைக்கு இடம்பெறலாம்..ஆனால் மனித இயல்பின்படி, பழையது மறந்து போகையில்??)

He (prime minister) added that the execution should serve as a warning to other young Australians.

"Don't imagine for a moment that you can risk carrying drugs anywhere in Asia without suffering the most severe consequences," he said.

வான் ஙுவெனும் சரி, ஷப்பெல் கோர்பியும் சரி, அவுஸ்திரேலியர்கள் என்றுதான் பொது மக்களால் பார்க்கப்பட்டார்கள்; அவர்கள் செய்தது பின்தள்ளப்பட்டது. ஒரு அவுஸ்திரேலியரை எப்படி இன்னொரு நாடு தண்டிக்கலாமென்பதே அவர்கள் சிந்தனை. ஒரு அவுஸ்திரேலியர் போய் எப்படி இன்னொரு நாட்டுச் சட்டத்துக்குப் புறம்பாக செயற்படலாம், அந்நாட்டுச் சட்டத்தை மீறலாம் என்பது பற்றி யோசிப்பதில்லை.

என்னைப்பொறுத்தவரையில், வான் ஙுவென் செய்தது தவறு. தண்டை பெற்றது சரி. அளிக்கப்பட்ட தண்டனை மிக அதிகம்.கொடூரமானதும் கூட.

அமெரிக்கச் சட்டங்களைப்பற்றிக் கதைத்தார்கள் - மேலோட்டமாக. ஆழத்துக்குப் போக மாட்டார்கள் - இங்கே அரசு தொடக்கம் ஊடகம் வரை எல்லாமே அமெரிக்க சார்புடையன (என்பது எனது கருத்து).

`மழை` ஷ்ரேயா(Shreya) December 05, 2005 11:01 am  

அன்பு & Kanags - சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும். மறுக்கவில்லை. ஆனாலும், தண்டனை உச்சபட்சமானதாக இருக்கிறது. எனக்கு மரண தண்டனை உடன்பாடில்லை. குற்றவாளி இறந்து போனால், 1) திருந்துவதற்கான வாய்ப்பு அல்லது 2)செய்ததனைப் பற்றிச் சிந்தித்தல் (remorse)நடைபெறுவது எப்படி?

Kanags December 05, 2005 6:33 pm  

//எனக்கு மரண தண்டனை உடன்பாடில்லை. குற்றவாளி இறந்து போனால், 1) திருந்துவதற்கான வாய்ப்பு அல்லது 2)செய்ததனைப் பற்றிச் சிந்தித்தல் (remorse)நடைபெறுவது எப்படி?//

வாசிக்க:
http://padippakam.blogspot.com/2005/11/blog-post_21.html

`மழை` ஷ்ரேயா(Shreya) December 06, 2005 3:12 pm  

சுட்டிக்கு நன்றி Kanags. திகைத்துப் போனேன். என்ன சொல்வதெனத் தெரியவில்லை.

திருந்துவதற்குத்தானே தண்டனை? அதற்கான வாய்ப்புகள் அளித்தலில் மிகப்பெரும் தயக்கம் தெரிகிறது. எங்கே போய் விடும் இந்தச் சூழல்? :O|

Anonymous December 08, 2005 6:50 am  

தண்டனை என்பது திருந்துவதற்கு மட்டும்தான், எந்த ஒரு தனி நபருக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ ஒரு உயிரை பறிக்க உருமையில்லை!
ஒருவண் ஒரு குற்றத்தை இழைக்க எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்!(அறியாமை, ஆத்தாமை, மணநிலை கோளாறு, விரத்தி, இ.ப)
இன்றும் பல நாடுகளில் மரணதண்டனை இருப்பது வருத்த தக்கது! காட்டு மிராண்டி செயல் என்று சொண்னால் இன்றி அமையாதது?

`மழை` ஷ்ரேயா(Shreya) December 08, 2005 12:30 pm  

//தண்டனை என்பது திருந்துவதற்கு மட்டும்தான், எந்த ஒரு தனி நபருக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ ஒரு உயிரை பறிக்க உருமையில்லை!
//

அதே.

//காட்டு மிராண்டி செயல் என்று சொண்னால் இன்றி அமையாதது//

புரியவில்லை நண்பரே. "காட்டு மிராண்டி செயல் என்று சொன்னால் தவறாகாது" என்று சொல்ல வந்தீர்களா?

மதுமிதா December 08, 2005 2:14 pm  

ஆஹா ஸ்ரேயா இராமநாதன் பதிவில் பதிலிட்டு வந்தா
அதே பதிலோட பொடிச்சி இங்க.

தண்டனை அளிக்கப்படவேண்டும்
இவர்களை உபயோகப் படுத்திக்கொள்பவர்களுக்கு.

தண்டனை,மரணதண்டனை குறித்து நீங்கள் சொல்வது மனிதாபிமான அடிப்படையில் ஏற்புடையது ஸ்ரேயா கடைசி சந்தர்ப்பமேனும் அளிக்கப்படணும் திருந்துபவனுக்கு.

ஆனால் செத்தாலும் திருந்தமாட்டேனென இருப்பவர்களை என்ன செய்ய இயலும்.

பெட்டகம்