காலைப்பொழுது

அவர்களை நான் கண்டது ட்ரெயினைப் பிடிக்க அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் போது தான். அன்றைக்கு எழும்புவதற்குக் கொஞ்சம் பிந்தி விட்டது. தொடராக அப்படியே எல்லாச் செயல்களும் பிந்தி விட்டன. தொடர்வண்டியையாவது பிந்திப்போகாமல் பிடித்து விட வேண்டும் என்று ஓட்டமும் நடையுமாகச் சென்று கொண்டிருந்தேன்.

அப்பா முன்னுக்கு நடக்க, அக்காவும் தங்கையும் தம் பைகளை முதுகில் கொழுவிக் கொண்டு நடந்து வந்தார்கள். அப்பாவிடம் என்னவோ கேட்டா அக்கா. அப்பாவும் ஆமென்று சொன்னாரென நினைக்கிறேன். விரையும் என்னைப்பார்த்து புன்னகைத்தார். எங்களுடைய ஊரில் இந்தியத் துணைக்கண்டத்தவர் அதிகம். எங்கள் நிறத்தில் யாரைக் கண்டாலும் ஒரு புன்னகை. சிலர் பதிலுக்குச் சிரிக்காமலும் போவதுண்டு. இவர்களும் துணைக்கண்டத்தவர்தான். அவர் பார்த்துச் சிரித்ததற்கு பதிலாக ஒரு அவசரப் புன்னகையை நானும் உதிர்த்து விட்டு அவ்ர்களைக் கடக்கையில் காதில் "good morning" ஒருமித்த குரலில் கேட்டது.

அவர்கள் சொல்வார்கள் என்று எதிபார்க்கவில்லை. good morning இனித்தது. அவசரமாகத் திரும்பி அவர்களுக்கும் பதிலுக்கும் சொன்னேன். என் வியப்பு அப்பட்டமாக குரலில் தெரிந்தது. அதே வாரம் திரும்பவும் சில முறை கண்டேன். அப்பவும் ஒரு வெட்கம் கலந்த புன்சிரிப்புடன் காலை வணக்கம் சொன்னார்கள். பதிலுக்குச் சொல்லிப் போனேன்.

இன்றைக்குக் காலையில் அப்பா, அக்கா கேட்ட எதற்கோ கடுமையாகப் பதில் சொல்லிக் கொண்டு வந்தார். என்ன சொன்னாரெனத் தெரியவில்லை. அவவுக்கு முகமெல்லாம் கறுத்து அழுகை வரும்போல இருந்தது. இந்த நிலையில் காலை வணக்கம் சொன்னால் திரும்பிச் சொல்வார்களோ என்று எனக்குத் தயக்கம். ஒன்றுமே பேசாமல் தொங்கிய தலையோடு போகும் அந்த வாடிய பிஞ்சு முகத்தைப் பார்த்தபடி - கடுஞ்சொல் சொன்ன அப்பாவைத் மனதினுள் திட்டிக் கொண்டு - நான் மௌனமாக அவர்களைக் கடக்க..

"ஹலோ"...

பெட்டகம்