ஆசை ஆசை இப்பொழுது!

முதலில், என்னைப் போலவே ஆசைகளையுடைய கறுப்பிக்கு அவ எழுதின "கனவு" பதிவுக்காக பெரீய்ய்ய்யதொரு நன்றி. இந்த மாதிரி ஆசைகள் எனக்கு மட்டும் தான் இருக்கும் என இவ்வளவு நாளும் naive ஆக நினைத்துக் கொண்டிருந்த என்னை 'அப்படியல்ல' என்று உணர வைத்ததற்கு!

கறுப்பியைப்போலே எனக்கும் ஆசை..இலங்கையையும் இந்தியாவையும் அலுக்கும் வரை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று. இதைப்போலவே இன்னும் ஆசைகள் இருக்கு. நனவாக்குவது எந்தளவுக்குச் சாத்தியப்படும் என்றுதான் தெரியவில்லை. அம்மா ஆட்டுக்குட்டி என்று பிள்ளைகள் வாலைப்பிடிக்க முன்னம் இவற்றைச் செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் அவர்கள் வளர்ந்த பிறகுதான்!(பிள்ளைகள் கட்டாயம் பிறக்கும்..வாலைப்பிடிக்கும் என்று நினைப்பது நான் வளர்ந்த பின்னணியின் default எண்ணங்களில் ஒன்றா??)

தொல்பொருள் ஆராய்ச்சியிலும், பழங்கால அரண்மனை/கோயில்/குகை/சிற்பம்/கல்வெட்டு இதெல்லாம் பார்ப்பதிலும் ஈடுபாடு அதிகம். சரித்திரக் கதைகள் வாசித்தது இந்த ஆசைகளை அதிகரித்து விட்டது. பார்க்க வேண்டும் என்று நினைக்கும் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தொ.கா.பெட்டியில் இது சம்பந்தமாய் டொக்யுமென்ட்ரி போட்டார்களோ..அந்தப் பொழுதில் அதைப் பார்ப்பதைத் தவிர வேற வேலை ஒன்றும் நடவாது. நிறைவேற்றக் கடினம் அல்லது இன்னும் கொஞ்சம் காலம் தேவை என நான் கருதும் என் ஆசைகளை (இப்போதைய நிலவரப்படி) பட்டியலிட்டால்:

1. நாடுகள் சுற்றிப்பார்க்க வேண்டும்
2. இலங்கையில் சைக்கிளில் திரிய வேண்டும் + இடங்கள் பார்க்க வேண்டும்
3. இந்தியாவில் காலவரையறையன்றி சுற்றிப்பார்க்க வேண்டும்
4. தொல்பொருளாராய்ச்சி நடக்கும் இடத்தில் தங்கி, ஆராய்ச்சிக்குழுவில் இடம் பெற வேண்டும் (புதிதாய் எதாவது கண்டுபிடித்தல் மிகவும் விரும்பப்படும் :o)

மிக மிக முக்கியமாக: இவையெல்லாவற்றுக்கும் போதுமானளவு $$ வேண்டும்!! ;o)

எனக்குள் ஒரு கேள்வி. அதைக்கேட்க முன்:
எனக்கு - ஒரு வீட்டிலோ, யுனிற்/அப்பார்ட்மென்டிலோ - தனியே /என் நண்பிகளுடன் தங்கி வாழ வேண்டும் என்று ஒரு ஆசை இருந்தது(இப்பவும் சில வேளை தலை தூக்கும்!). ஆனால் அதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. திருமணம் முடித்து வெளிநாடு வந்துமாயிற்று. ஆசை எட்டிப்பார்க்கும். என் ஆசையை வாழும் , இங்கைத்தேய நண்ப நண்பிகளை பொறாமையுடன் பார்க்க வைக்கும். எனக்கும் அப்பிடி அவர்களைப்போல இருக்க ஒரு சந்தர்ப்பம் வந்தது. கணவர் கனடா போக வேண்டிய தேவை ஏற்பட்டது. 20 நாட்கள். ஆசை நிறைவேறிற்று. எப்படியெல்லாம் இருக்கும் என்று கற்பனை செய்தேனோ அப்படியே இருந்தது. சந்தோசமாக உணர்ந்தேன். அதற்காக திருமணவாழ்க்கை பிடிக்கவில்லை என்பது அர்த்தமல்ல. குடும்பத்தினரோடு கழிக்கும் நேரம்/ வாழ்க்கை தந்ததை விட நான் தனியே இருந்து சுதந்திரமாகச் செயற்பட்டது எனக்கு வித்தியாசமானதொரு அனுபவத்தைத் தந்தது. முக்கியமாக, நான் குறிப்பிட்ட எதையும் செய்யும் போது இன்னொருவரைக் கருத்தில் கொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை. அவருக்கு வசதிப்படுமா..விருப்பமான activity ஆக இருக்குமா என்றெல்லாம் யோசிக்காமல், carefree யாக இருக்க, எனக்கு விருப்பமானதெல்லாம், விரும்பியபோதெல்லாம் செய்யவும் முடிந்தது.( அடிப்படையில் சொல்லப்போனால் பொறுப்புகளற்றிருப்பது!)

சரி கேள்விக்கு வருகிறேன்: எந்த இடமாகவோ பயணமாகவோ இருந்தாலும், தனித்து அதைப் பார்க்க/பயணிப்பதற்கும் கூடவே இன்னும் ஆட்களுடன் பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கும். அனுபவம் கட்டாயம் வேறுபடும். நினைத்த மாத்திரத்தில் பயணம் கிளம்புவது சாத்தியமாவதில்லை. திருமணமானோர் பாடு கேட்கவே வேண்டாம்..பயணி தன்னை மட்டுமல்லாது குடும்பத்தவரையும் கருத்தில் எடுக்க வேண்டிய தேவை (மிகச் சிலரைத்தவிர) இருக்கிறது. தனி அனுபவம் பெற விரும்பும் ஒருவருக்கு (கறுப்பி / என்னைப் போல!) தனித்திருப்பதுதான் இதற்கு தீர்வாக முடியுமா? அல்லது ஆசைகளின் நிறைவை, கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி அதன் மூலம் பெறலாமா?

பெட்டகம்