மன்னிப்பும் வேறு சிலவும்

விளையாட்டு சரியான கஷ்டமாகி விட்டது போல இருக்கு. ஏற்கெனவே என் விளையாட்டு வினையாகினதில வழக்குப்போடாத குறையா துளசி முறைப்பாடு! இன்னும் வேற யாருக்கும் சித்தம்/பித்தம் கலங்கியிருந்தா என்னை மன்னியுங்க! (உண்மையிலேயே அவ்வ்வ்வளவு கஷ்டமா இருக்கா?)வாசிக்கிற ஆக்களுக்கு விளையாட்டா இருக்கட்டும் என்று உலக அதிசயங்களை முக்கியமானவையா வைச்சுக் கொண்டு அவற்றைக் கண்டுபிடிக்கிறதுக்கு வழியாக இன்னும் கொஞ்சக் கேள்விகளையும் சேர்த்து வைச்சன். இப்ப விடைகளுக்கு வழி சொல்றேன். அந்தப்பதிவில போய் right click பண்ணி "Select All" என்று தேர்ந்தெடுங்கோ..விடை தெரியும்! ஆனா அதுக்கு முதல் எனக்குப் பதில் சொல்லீற்றுப் போங்க...

என்ட பெயர், புனை பெயர் என்டு தெரிஞ்சிருக்கும்(இல்லாட்டி இப்ப தெரிஞ்சு கொள்ளுங்க). ஏன் என்ட சொந்தப் பெயரில எழுதிறதில்லை?

வலைப்பதியத் தொடங்கிய போது, நான் என்னத்தையென்றாலும் உளறி வைக்கலாம்... சொந்தப்பெயரில இல்லாத வரைக்கும் என்றொரு நினைப்பு இருந்தது. ஆனா உண்மையான காரணம் அதுவல்ல என்று எனக்கே நல்லாத் தெரியும். என்ட பெயர் இல்லாத இடமில்லை. ஆங்கிலத்தில் சொல்லுவாங்களே "wornout" (தமிழ்ல என்ன?) என்று, அதுதான் என்னுடைய பெயரின் கதி. ஆனா, அம்மாக்கு கொஞ்ச நாள் எண்சாத்திரத்தில நம்பிக்கை வந்த படியால், என் பெயரின் ஆங்கில ஸ்பெலிங்கை மாத்தி கொஞ்சம் வித்தியாசம் ஆக்கப்பட்டது. அதாலதான் கொஞ்ச வித்தியாசமாவது தெரியும். சொன்னா நம்புவீங்களோ தெரியாது.. எனக்குத் தெரிஞ்சு, எப்போதும் என் வகுப்பில் என் பெயர் கொண்ட இன்னொருத்தி இருப்பா. என் பெயருடையவர்கள் 1..2..3 (பொறுங்க..எண்ணிப்பாத்திட்டு வாறன்)...கிட்டத்தட்ட 20 பேரைத் தெரியும். அப்படியொரு wornout பெயர் தான் என்னுடையது! அதனாலே தான் எங்கேயோ எப்பவோ ஷ்ரேயா என்று ஒரு முகமூடியைத் தூக்கி மாட்டினேன்.

இப்ப எதுக்கு இவ்வளவும் என்று கேட்கிறீங்களா...சொல்றன்..

இதுவரை இந்த ஷ்ரேயா என்கிற பெயர் எழுத்தில தான் என்னை குறிக்கக் கண்டிருக்கிறன். அதாவது யாராவது அஞ்சல் போட்டா "ஹாய் ஷ்ரேயா" அல்லது பின்னுட்டத்தில "சித்தம் கலங்கிடிச்சி ஷ்ரேயா". நேற்று, ஒருவர் தொலைபேசியில் அழைத்து "ஷ்ரேயா(வா)?" என்றார். எனக்கு ஒருகணம் "யாரைக் கேட்கிறார்" என்றுதான் தோன்றியது. பிறகுதான் 'அடே..நான்தான் ஷ்ரேயா!' என்று உறைத்தது. எனக்கு ஒரு சந்தேகம் (ஐயோ..ஓடாதீங்க), இவ்வளவு நாளாக (கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக) பாவிக்கிற ஒரு பெயர், என்னுடையதுதான் என்று ஏன் மனதில் பதியவில்லை?

இன்னொன்றும் சொல்ல வேண்டும், இதுக்கும், மேலே சொன்னதுக்கும் சம்பந்தமில்லை. யாருடனாவது உரையாடும் போது (பேச்சு & எழுத்து) என்னையறியாமலே (95%) அல்லது உணர்ந்தே(5%) அவர்களைப்போல எனது கதை பேச்சு அமைந்து விடுகிறது. உதாரணத்துக்கு ஒரு ஒஸியுடன் கதைத்தால், அவுஸ்திரேலிய accentஉடன் ஆங்கிலம் வருகிறது. மலேசிய நண்பியொடு அவளைப் போன்று (முழுக்க இல்லாது விடினும் 50%) accentம் வருது. யாழ்ப்பாணத்தவர் என்றால் முழுக்க அந்தத் தமிழும், மட்டக்களப்பென்றால் அந்தத் தமிழும், இந்தியரென்றால் அவர் தமிழும் என் வாயிலிருந்து(இப்ப 'விளங்குதா' க்ருபா?) வருகிறது. (இப்போது எழுத்திலும்). இது ஏன்? சில பல வேளைகளில் உரையாடலின் முடிவிலேயே அல்லது அதைப்பற்றி மீள நினைத்துப் பார்க்கையிலேயே இப்படிச் செய்கிறேன் என உறைக்கும்.

ஏன் இப்படிச் செய்கிறேன்? நான் நானாக இருக்க விருப்பப்படவில்லையா?? யாராவது சொல்லுங்களேன்.

பெட்டகம்