பூனை, நாயும், சில கோழிக்குஞ்சுகளும் I I

பெரியம்மா வீட்டில் எனக்குத் தெரிந்து எப்போதும் ஆடு, மாடு, நாய், பூனை, மைனா, கிளி, கோழி என்று ஒரு விலங்குப் படையே வீட்டில நிற்கும். பெரியப்பா காலமை எழும்பி தேத்தண்ணி குடிச்சிட்டு பலாவிலை குத்தப் போவார். அவரோட நடந்து நடந்து ஆட்டுக்கு கிளிசரியாக் குழை பிடுங்கி, கோழிக்கு தீன் போட்டு வாறது எவ்வளவு சுகம் தெரியுமா!

இப்ப போனால், பெரியம்மா-பெரியப்பா இல்லாத வீட்டில், மாடும் ஒற்றை மைனாவும் ஐந்தாறு கோழிகளும் இரண்டு நாய்களும் இரண்டோ மூன்று ஆடுகளுமே! பலாவிலைகளும் கம்பியில் கோர்க்க ஆளின்றி சும்மா விழுந்து கிடக்கின்றன. :O(

வாசற்படித் தூணில் அல்லது வீட்டின் பின்புறத்திலே கட்டிப் போடப்பட்டிருக்கும் நாய்கள். ஆண்டுக்கு ஒன்றிரண்டு தரம் மட்டுமே எங்களைக் கண்டாலும், ஞாபகம் வைத்திருந்துக்கும். உடம்பில் ஒரு துண்டு சதையையும் கேட்பதில்லை. நல்ல நாய்கள். தேவையான அளவு சாப்பாடு போட்ட பெரியம்மாக்கு ஒரு "ஓ".

அவவின் வீடு வடிவானது. "ட" வடிவில். முன் கூடத்தைத் தாண்டிப் போனால் கூட்டுக்குள்ளிருந்து "ராணி...ராணி" என்று பெரியம்மாவைக் கூப்பிடும் கிளிகள். வேறு சில சொற்களும் அவற்றுக்குத் தெரிந்திருந்தது. எனக்குத்தான் மறந்து போய்விட்டது. மைனாக்கள் பேசி அங்கே தான் நான் பார்த்தது. என்ன பேசின என்று கேட்கிறீங்களா? அதை யார் கேட்டது..நான் தான் வீட்டுக்குள்ளே போய் பயணப்பையை வைத்த கையோடு, பெரியம்மாக்கு முத்தம் கொடுத்து வீட்டு ஆட்டுக் குட்டிகளைப் பார்க்க ஒரே ஒட்டமாக ஓடி விடுவேனே! முகம் கழுவு / குளிச்சிட்டு வா - இதெல்லாம் என் காதுக்கு வந்து சேர முதல் காற்றில கரைந்து விடும். அப்படியே விழுந்தாலும் அதை யார் கேட்டது!

அங்கேயிருந்த ஒரு ஆட்டுக்கு என்னைப் பிடிப்பதில்லை. முட்ட வரும். முட்ட வரும் என்று சொல்லத்தான் இன்னொரு சம்பவம் ஞாபகம் வருது.

அப்ப எனக்கு 2 - 3 வயது இருக்குமாம். (அதென்னா இருக்கு"மாம்"? நடந்தது எனக்கு ஞாபகமில்லை..வீட்டில எம்மியும் அம்மாவும் சொல்லக் கேட்டது.) ஒரு நாள் வீட்டில சீனி முடிஞ்சிட்டுதாம்/அல்லது முடியிற தறுவாயில இருந்துதாம். வீட்டில எம்மியும் பெரியண்ணாவும் நானும் தானாம் அந்த நேரம் இருந்ததனாங்க. வேற வேலைகளும் வீட்டில இருந்த படியா எம்மி போய் பெரியண்ணாட்ட கேட்டிருக்கிறா கடைக்குப் போய் சீனி வாங்கி
வரச் சொல்லி. அவரும் ஒம் என்று சொன்னாராம். கொஞ்ச நேரத்தால பாத்தா ஆள் இன்னும் வீட்டிலயே புத்தகம் வாசிச்சுக் கொண்டிருந்தாராம்.

எம்மி (எம்மி யாரென்று தெரியாதவர்கள் இங்கே
பார்க்கவும்) சொல்லிச் சொல்லி அலுத்துப் போய் "தங்கச்சியப் பாத்துக் கொள்ளு" என்டிட்டு கடைக்கு வெளிக்கிட்டிருக்கிறா. எங்கட ஆள் என்ன செய்தார்...புத்தகம் வாசிக்கிறார். தங்கச்சிக்காரி விளையாடிக் கொண்டிருக்கிறா. புத்தக மன்னன் அதை வாசிச்சு முடிச்சிட்டு நிமிர்ந்தா... "ஞானம்..தங்கச்சிய காணம்!".

வீடெல்லாம் தேடி ..தெருவெல்லாம் தேடிக் களைச்சு பயத்தில வேர்த்து விறுவிறுத்துப் போய் இருக்கிறாராம் எம்மி வரேக்குள்ள. இங்கே இப்பிடிக் களேபரம் ஆகுமென்று தெரியாம திறந்திருந்த படலையால வெளியில போன குட்டி ஷ்ரேயா தத்தக்க பித்தக்க என்று நடந்து போயிருக்கிறா. ஒரு மாடு முட்ட ஆயத்தமா வந்துதாம். தெருவில நின்ற ஒரு ஆள் உடன தூக்கி எடுத்திட்டாராம். ஆரடா பிள்ளை .. தனிய "வீரமா" நடந்து வருது என்று பார்த்ததில அதில நின்ற ஒருவருக்குத் தெரிந்து விட்டது. இது வைத்தியரம்மாட பிள்ளை என்று கண்டு கொண்டதில் வீட்டிலே கொண்டு வந்து விட்டார்களாம். (இல்லாட்டி இன்றைக்கு நட்சத்திரமாக இருந்து இப்படியெல்லாம் எழுதி உங்களை இம்சைப் படுத்தக் கிடைச்சிருக்குமா!) அன்றைக்கு அண்ணாப்பிள்ளையர் நல்லா வாங்கியிருப்பார்! இப்படிக் கூத்துக் காட்டியும், இவரின் "கொதி" வேலையை அப்பாவிடம் போட்டுக் கொடுத்தும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாலும், அவர் செல்லம்தான்.

சரி..சரி பெரியம்மாவின் ஆடு முட்ட வரும்...ஓடி வந்து விடுவேன். பிறகென்ன.. கோழிகளைத் துரத்துவதும்..தப்பியோட முயற்சிக்கும் பூனையை வலுக்கட்டாயமா தூக்கிக் கொண்டு திரிவதும் என்று மிச்சப் பொழுதுகள் போகும். மிருகங்களோடு கதைப்பது ஒரு அலாதி இன்பம். திருப்பிக் கதைக்க மாட்டா. சில வேளைகளில் ஆசிரியை - மாணவர் விளையாடும் போது "கணக்கு சரியாச் செய்யாத மொக்கு ஆட்டுக் குட்டிக்கு" மெல்லிய குட்டும் விழும். கொஞ்ஞ்ஞ்ஞ்சம் பொறுங்க!!! நான் குட்டினதைப் போய் அம்மாடச் சொல்லியிருக்குமோ ஆட்டுக் குட்டி? அம்மா ஆடு "குட்டினால் முட்டுவேன்" என்று நினைச்சுக் கொண்டுதான் எனக்குக் கிட்ட வந்திருக்க வேணும். :O|


ஆனாலும் எதிர்பார்ப்புகளின்றி அன்பு செலுத்துறதில ஆடு, மாடு, நாய், பூனைகளுக்கு இணையில்லை...என்ன சொல்றீங்க!

பெட்டகம்