அறிக்கை / சுற்று நிருபம்

வணக்கம்,

இன்றைய அறிக்கை, வாசிப்பது நீங்கள்.

தென் துருவ வலைப்பதிவர் சங்கத்தின் சுயம்புத் (தான் தோன்றி) தலைவர் வசந்தனின் குணாதிசயங்கள் ஒரு அரசியல்வாதியினதைப் போன்றே இருப்பதைக் கண்டு தென் துருவ வலைப்பதிவர் பலரும்(!!!) அதிர்ச்சியடைந்துள்ளதாக அறியப்படுகிறது.

கடந்த மாதம் மெல்பேண் நகரில் இவர் கூட்டிய சந்திப்பொன்றில் தென் துருவ வலைப்பதிவர் சங்கத்திற்குத் (தான் தோன்றி) தலைவராக தன்னைப் பிரகடனப் படுத்திக் கொண்டது யாவரும் (சரி சரி..அநேகமானோர்) அறிந்ததே! இதனையடுத்து ஏனைய நகரங்களில் இருப்பவையனைத்தும் கிளைச்செயலகங்களெனவும் அவை சந்திப்புகளை நடத்த முன்னர் தம்மிடம் அனுமதி பெற வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார். இவர்களது அறிவிப்புக்கு முதலேயே சந்திப்பொன்றை க்றைஸ்ட்சர்ச் நரகத்தில் மன்னிக்கவும் நகரத்தில் ஒழுங்கு செய்திருந்த துளசிக்கு இது பேரிடியாக அமைந்தது. துளசி, தென் துருவத்திலிருந்து வலைப்பதிவுலகிற்கு அளப்பரிய சேவையாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரால் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்திப்பைக் குழப்ப/திசைதிருப்ப சிட்னியில் ஒழுங்கு செய்யப்பட்ட வலைப்பதிவர் சந்திப்பொன்றின் சூத்திரதாரி தான் தோன்றி தலைவர் வசந்தனேயாவார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. தன்னிடம் அனுமதி பெறாமல் வலைப்பதிவர் சந்திப்பொன்று தென் துருவத்தில் நடக்கவிருந்தமை இவருக்குப் பொறுக்கவில்லை என மேலும் அறியப்படுகிறது. (சிட்னி சந்திப்பைப் பற்றியதொரு விபரம் பிந்தியதொரு அறிக்கையில் தரப்படும்)

இச்சந்திப்பினை உண்மையான ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த ஷ்ரேயாவுடன் தனிமடலில் தொடர்பு வசந்தன் அவர் 16ம் திகதி இரவு சிட்னி வருவதாயும் தொலைபேசுவதாயும் தெரிவித்திருக்கிறார். அச்சந்திப்பிற்கான நாள், நேரம், இடம் என்பவற்றிற்குரிய தீர்மானங்களை வசந்தனிடமே விட்டிருந்த ஷ்ரேயாவுக்கு நேற்றுக் காலை மின்னஞ்சலில் அதிர்ச்சி காத்திருந்தது. அதன் உள்ளடக்கத்தைப் பற்றி ஷ்ரேயா சொன்னதாவது:

முதலில் தான் வந்து சிட்னியில் ஒரு கிழமை தங்கப்போவதாயும், எப்போது சந்திப்பை வைத்துக் கொள்ளாலாமென்றும் கேட்டார். எனக்கு வசதியான நேரத்தை அவருக்குத் தெரியப்படுத்தினேன். தலைவர் என்ற மரியாதையிலும், சிட்னி விருந்தோம்பற் பண்பிலும் சந்திப்பைக் குறித்த கடைசித் தீர்மானங்களை அவரிடமே விட்டிருந்தேன். யோசித்துச் சொல்வதாய்ச் சொல்லியிருந்தார். இந்த தகவற் பரிமாற்றமெல்லாம் தனிமடலிலேயே நடைபெற்றது. இம்மடல்களிலே தனது ஆலோசகர்கள் சரியில்லை எனவும், அவர்களை @#$%^!* எனவும் விளித்திருந்தார். சங்கத்தின் தலைமைக் குழுவில் இல்லாத ஏனைய உறுப்பினர்களைச் சந்திப்பதில் வசந்தனுக்கிருந்த தயக்கம் அவரது தனிமடலில் நன்கு வெளிப்பட்டது. மேலும் "தலைவர்" என்கிற கெறுவில் தான் அவரது மடல்களும், தொடர்பாடலும் அமைந்திருந்தன.

தனது பாதுகாப்பிற்கு சிட்னியில் உத்தரவாதமில்லையெனவும் தனக்கு இப்போது சோதனைக் காலமென்ற படியாலும் தான் சிட்னிக்கு வருவதற்கில்லை எனவும் தனக்குப் பதிலாக @#$%^!* என ஏளனமாகக் குறிப்பிடப்பட்ட ஆலோசகர்/ சங்கச் செயலாளர் சயந்தனை அனுப்பி வைப்பதாயும் வசந்தன் அறிவித்துள்ளார். க்றைஸ்ட்சர்ச் மாநாட்டிற்கு ஆதரவாக நடந்து கொண்டமைக்காக சிட்னி சந்திப்பு ஏற்பாட்டாளரைக் குறித்து அதிருப்தி கொண்டிருந்த வசந்தன், சிட்னி சந்திப்பைப் பற்றித் தொடர்ந்து மடல்களெல்லாம் அனுப்பியது, அவரைக் குழப்பி, ஏமாற்றி, அவர் முகத்தில் கரி பூசுவதற்காகவே எனப் பரவலாக நம்பப்படுகிறது.

சங்க உறுப்பினர்களைச் சந்திப்பதில் தயக்கமும் சிட்னி அலுவலகம் அவரது பாதுகாப்பை உறுதி செய்யாதது போன்றதொரு பொய்மைத் தோற்றமும் காட்டும் தலைவரின் வார்த்தைகள் குறித்து கிளைச் செயலகங்கள் விசனம் தெரிவித்துள்ளன. தலைவருக்குக் கண்டனம் தெரிவிக்கும் அதேவேளை அவருடைய சோதனைகளை எதிர்கொள்ள நல்வாழ்த்துக்களையும், சிட்னிக்கு வருகை தரவிருக்கும் அன்பிற்கும் பெருமதிப்புக்குமுரிய செயலாளர் சயந்தனை மகிழ்வுடன் வரவேற்பதாகவும் சிட்னி அலுவலகம் வெளியிட்டுள்ள இவ்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

இக்கண்டன அறிக்கை வெளியிடப்படுகிறதெனத் தெரிய வந்ததும் வசந்தன் சிட்னிக் கிளையலுவலகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்வறிக்கை வெளிவராது தடுக்க முயற்சித்தார். அது கைகூடாமற் போனதினால் தனது பெயரில் களங்கமேதும் வந்து விடாவிடாதிருக்கும் பொருட்டே (சுயநல நோக்கிலேயே) தனது வலைப்பதிவில் ஒரு ஒரு கற்பனையான உள்ளிடுகையை இட்டுள்ளார் என்பதை இத்தால் சிட்னி கிளையலுவலகம் உறுத்திப்படுத்துகிறது.

பெட்டகம்