நான் பார்த்த கூத்து!

இன்டைக்கு மட்ச், டிவியப் போடு

நல்லகாலம் ஞாபகப்படுத்தினாய்... நான் போடுறன் நீ ****க்கு அடிச்சு அவனை வரச்சொல்லு.

மூன்றாமவன்: "ஏன் அடிக்கப் போறீங்க ..நோகும்" (இரண்டாமவன், "எல்லாரும் ஒருக்கச் சிரியுங்களன்டாப்பா, எவ்வளவு பெரிய பகிடி விட்டிருக்கிறான்" என்று சொல்லி மூன்றாமவனிடமிருந்து ஒரு அடியை வாங்கிக்கொண்டான்)

(அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான ஒருநாள் கிரிக்கற்போட்டி ஆரம்பித்திருந்தது)

பார்வையாளர்களைக் காட்டிக்கொண்டிருந்த போது ஒரே நேரத்தில் "சான்மான்" ஒரு கத்தல். கொஞ்ச நேரத்தில் "சங்கீதா" என்று இன்னோரு கூச்சல். (எனக்கென்னவோ சான்மானுக்குக் கிடைத்த கூச்சலை விட சங்கீதாவுக்கு இன்னும் உரக்கவும் உசாராகவும் கேட்டது போல இருந்தது. ஆனாலும், "பிரமை" என்று சொல்லிக்கொண்டேன்)

ஜயசூரிய விளாசத்தொடங்கியிருந்தார். கடைசி வரை பார்த்து விட்டு எழுந்து தேநீர் குடித்தார்கள். அவுஸ்திரேலிய ஆட்டம் தொடங்கியது. ஒவ்வொரு வீரராய் ஆட்டமிழந்ததும் பெருங்கூச்சல்.

"என்னதான் சிங்களவன் என்டு பேசினாலும், கிரிக்கட்டெண்டோடன ஏன்டா இலங்கைக்கு சப்போட் பண்ணிறம்?" என்று ஒரு புத்திஜீவி கேட்டார். விழுந்து விழுந்து சிரித்தார்களே தவிர, அவனுக்குப் பதில் சொல்லவில்லை. நானும் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அன்ட்ரூ சிமண்ட்ஸ் வந்து ஒரு சிக்ஸரைத் தூக்கி விட்டார்.. "ஐயோ.. வந்திட்டாண்டா அனுமான்".

விளம்பர இடைவேளை போட்டதும், அவசர அவசரமாக மற்றத் தொ.கா.நிலையத்திற்கு மாற்றினான் ஒருவன். "அடெய், விசரா இப்பத் திரும்பப் போடுவாங்கள்..ஏன்டா சனலை மாத்துறாய்?"

மாற்றினவன் சிரித்துக் கொண்டே "மச்சான்... வடிவாப்பார் ! இப்ப சொல்லு பாப்பம் எனக்கு விசரோ என்டு!!!" திரையிலே ஷரபோவா அழகாக டெனிஸ் ஆடிக்கொண்டிருந்தார்.

"என்ன நீட்டுக்காலடா இது!" (இந்த "இது", மிகக்குறுகியதொரு "இ"யும், பெருமூச்சுக்களின் தொகுப்பாய் "து" என்பதும் சேர்ந்த ஒன்று என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லைத்தானே!)

வெற்றிலை வைத்து அழைக்காத குறையாய், தொலைபேசியில் அழைத்து, அழைப்பை ஏற்று(!!) வந்தவன், "கிரிக்கற்றைப் பாக்காமல் என்னத்தையடா...." என்று ஆரம்பித்து "ஐயோ மரியாக்குஞ்சு, உந்த மெல்பேண் வெக்கைக்க உங்களை விளையாட வைச்சிட்டாங்களே" என்று தடாலடியா பிளேட்டை மாத்தினான். "அடப்பாவி" என்று கூட்டமாய்க் குரல் கொடுத்தார்கள்.

"உப்பிடிச் சின்னச்சின்ன சட்டையளும் காற்சட்டைகளும் போட்டுக்கொண்டுதான் விளையாடோணுமோடா? முழுக்கால், அற்லீஸ்ட் கால்வாசிக்கால் மறைக்கப் போடலாந்தானே?" - இது புத்திசீவி

"கால்காலை மறைக்கப்போடோணும் என்னடா, அதானே கேட்கிறாய்?"
"ஓம்..",
"சரிதானேயடா அப்ப, கால் தரை கால் எட்டிலொண்டு, போட்டிருக்கிறது அந்த சைசிலதான் இருக்கு"
சொல்லிவைத்தது போலத் தலையிலடித்துக் கொண்டார்கள்.

"எதைப்போட்டாலும் விளையாடினாச் சரிதானே" என்று ஒருவன் சொன்னதும் ஆமோதித்து பழையபடி கிரிக்கட்டுக்குத் திரும்பினார்கள்.

"எனக்குப்பசிக்குது" சாப்பாடெடுக்கப் போனான் ஒருவன்.

அன்ட்ரூ சிமண்ட்ஸ் ரன்னவுட்டாகிப் போனார். "அப்பாடா, இனி வெண்டிடலாம்" ஒரு துளி சந்தேகமுமின்றி வெளிப்பட்டது குரல்.

"டேய், நான் சாப்பாடெடுக்கப்போகத்தான் சிமண்ட்ஸ் அவுட்டாகினவன். நீங்களும் வந்து எடுங்கோடா!". சிரிப்பலை.

மற்றவனும் சாப்பாடெடுக்கப் போனான்.. க்ளார்க் பவிலியனை நோக்கி நடக்க ஆரம்பித்தார். தாங்கள் சாப்பாடு எடுக்கப்போனால் விக்கற் விழுமென்று எல்லாருக்குமே நம்பிக்கை வந்ததில் சமையலறைக்குள் போக்குவரத்து நெரிசல்.

கடைசியாய் ஒரு பந்திருக்கையில் மொத்தமாய் அவுஸ்திரேலிய அணி ஆட்டமிழந்ததும் உற்சாகமாய்க் கைதட்டி, நாளைக்குக் காணப்போகிற அவுஸ்திரேலிய நண்பர்களுக்கு என்ன சொல்வதென்று யோசித்துக் கொண்டே கலைந்து போனார்கள்.

இழவரசர்!!




மின்னஞ்சலில் வந்தது.
சரியாத்தானே தலைப்பை எழுதியிருக்கிறன்?

சாறு!

வழமை போலவே என் பிற்பகல் பழச்சாற்றை உறிஞ்சிக் கொண்டிருக்கிறேன். அப்பிள், வாழைப்பழம், கரட், இஞ்சியுடன் எப்போதேனும் தோன்றினால் மாம்பழமும் அரைத்த சாறு. இதைத் தட்டச்ச ஆரம்பிக்க இரண்டு மூன்று நிமிடங்களுக்கு முன்பு உள்ளெடுத்த ஒருவாய்ச்சாறு மின்னல் போன்று ஒரு ஞாபகத்தைக் கிளப்பிப் போனது. வந்த ஞாபகம் மின்னல் போல என்று சொல்கிறேன் ஏனென்றால் வந்த வேகத்திலேயே மறைந்தும் விட்டதனால்.

குழாயூடாக வாய்க்குள் வந்த அந்தக் கொஞ்சச் சாறு தட்டியெழுப்பிய ஞாபகம் எனது சிறுபருவத்துப் பரிச்சய வாசனைகளிலோ அல்லது சுவையிலோ ஒன்று என்பது மட்டும் தெரிகிறது. என்னவென்று ஞாபகப்படுத்திக் கொள்ள மீண்டும் மீண்டும் உறிஞ்சிச் சுவைக்கிறேன். வலுக்கட்டாயமாகச் செய்யப்படும் எதுவும் இயல்புமில்லை அத்துடன் எதிர்பார்க்கும் பலனைத் தருவதுமில்லை என்று உணர்த்திச் செல்கிறது என் தொண்டையில் இறங்கிக் கொண்டிருக்கும் பழச்சாறு.

இது ஒரு வெயில்காலம்

வேர்க்கிறதே என்று இலங்கையில் சலித்துக் கொள்வதுண்டு - காற்றின் ஈரப்பதனின் அருமை தெரியாமல். இங்கே சிட்னியின் கோடை சுட்டெரிக்கும். சராசரிக் கோடைகால வெப்பநிலை 35 - 37°C எனினும் குறைந்தது ஒரு பத்து நாட்களாவது 40°C யைத் தாண்டும். காற்றில் ஈரப்பதன் 10 - 20% இற்குள்தான் இருக்கும். உலர்ந்த காற்று வீசினால் பற்றியெரிகிற பெருநெருப்புக்குக் கிட்டே நிற்பது போலவும், காற்று வீசாமலிருந்தால் ஆளை வெதுக்கிவிடக்கூடிய வெக்கையுமாய் ஒன்றும் செய்யத் தோன்றாமல்/இயலாமல் எரிச்சல் தரும். வேர்த்தால் அதிசயம். அப்பிடியொரு வெயில்தான் முதலாந்திகதி சிட்னிக்கு வாய்த்தது. விடுமுறைக்கென்று நீண்டதூரம் சென்றிருப்பின் வழியில் ரேடியேட்டர்கள் செயலிழந்து போய் தவித்துப்போய் நின்ற பல வாகனங்களையும் மனிதரையும் கண்டிருக்கலாம். ஏதோ 2ம் திகதி முதல் இன்று வரை ஒரே மழை மூட்டமாய் இருக்கிறது. அதுசரி, முதலாந்திகதி ஆவியாகினதெல்லாம் (எந்த நீர்நிலையில இருந்து என்டெல்லாம் கேட்கக் கூடாது!) திரும்பிக் கீழே வரத்தானே வேணும்!

இந்த வெயிலில் காய்ந்துபோய் நிற்கிற விக்ஸ்(யூகலிப்ரஸ்) மரமும் புற்களும் பற்றைகளும் பற்றியெரியத் தொடங்குவதும் இந்தக் கோடைகாலத்தில்தான். காட்டுத்தீ பின்வரும் முக்கியமான 3 காரணங்களால் ஆரம்பிக்கிறது:

- வேண்டாத வேலையாய் நெருப்பு வைப்பவர்கள்(firebugs)
- Campfire / Barbeque போட்டுக் கவனமின்மையால பறந்த நெருப்புப் பொறி
- மின்னல்

இந்த நெருப்பைக் கட்டுப்படுத்தவென்று குளிர்காலத்திலேயே சில பகுதிகளில் நெருப்பைக் கட்டுப்பாடாக எரித்து(backburning) முன்னெச்சரிக்கையாகச் செயற்படுவார்கள். காவற்றுறையினரும் (வசந்தன், கவனிச்சீங்களா?) firebugs இன் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிப்பர்.
அவுஸ்திரேலிய வெயில் பொல்லாதது. சூரியக்குளியல் செய்பவர்களுக்கெல்லாம் Slip Slop Slap என்று மேலாடை, களிம்பு பூசி, தொப்பியுமணியுமாறு நிதமும் அறிவுறுத்தப்படுகிறது. இல்லையோ.. பிறகு தோற்புற்றுநோய் வந்துவிடும். இப்போது புதிதாக (நியுஸீயில் போன்றே) கண்ணுக்குக் குளிர்கண்ணாடியும் அணியச் சொல்கிறார்கள். பார்வையைத் தொலைக்கும் வாய்ப்பும் அதிகமாகிறதாம் இந்த வெயிலால். எல்லாத்துக்கும் இந்த ஒஸோன் படலத்தின் பெரியதொரு ஓட்டைதான் காரணம்.

நான் அனுபவித்த மிகக்கூடிய & குறைந்த வெப்பநிலை(கள்?) - 12°C , 48.8°C. நீங்கள் அனுபவித்த அதிகூடிய & மிகக்குறைந்த வெப்பநிலை பற்றிச் சொல்லுங்களேன்?

பேரைச் சொல்லடா!


"ஹாய்"
குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தால், எங்கேயோ பார்த்த முகமமொன்று மெலிதாய் புன்னகை ஒன்றைச் சுமந்து கொண்டு. ("ம்ம்..யாரிது??) "ஹாய்"

"எப்பிடி இருக்கிறீங்க"
(அட..தமிழ்..) "நல்லா இருக்கிறன். நீங்க?"
"ஓக்கே."

வழமையான வேலைக்குப் போறீங்களா, எங்கே இருக்கிறீங்க என்கிற பரஸ்பர(இதற்குத் தமிழ் என்ன?) விசாரணைகள். (டேய்.. நீ என்னோட படிச்சனி என்டு தெரியுது.. பேரைச் சொல்லன்டா!!)

"உங்கட ஃபிரெண்ட்..ம்ம்..மாலினி எப்பிடி இருக்கிறா? இப்ப எங்க ஆள்?"
"அவ இப்ப ரஷ்யாவில படிக்கிறா."
"மலேசியாவிலதானே முதல் படிச்சவ"
"ஓம்.அது முடிச்சு இப்ப ரஷ்யாவில."
"அடுத்த தரம் கதைக்கேக்குள்ள/மெயில் போடேக்குள்ள நான் கேட்ட என்டு சொல்லுங்கோ."
(ஆரோட கதைச்சுக் கொண்டிருக்கிறனென்டு தெரியாம நான் முழிக்கிறன்..அவக்கு என்னண்டு விளங்கப்படுத்திறது!!) "ஓ! கட்டாயம்". (ட்ரெயினால இறங்க முன்னம் பேர் சொல்லுவாய் தானே?)

இது நடந்தது சில மாதங்களிருக்கும். அவனைத் தொடர்ந்து காண்பதுவும், இருவருக்கும் பொதுவான/தெரிந்த நட்புகளைப் பற்றிய செய்திப் பரிமாற்றமுமாயும் தொடரும் உரையாடல்கள். (அடேய்..பேரைச் சொல்லித் துலையனடா..). கதைத்ததிலிருந்து ஊகித்ததில் அவன் படித்த பள்ளிக்கூடத்தின் இணையத்தளம் போய் உயர்தரப் பரீட்சை எடுத்த வருடத்தின் படி தேடி, நிழற்படங்களைக் கூர்ந்து பார்த்தும் எந்தப் பயனுமில்லை.

திரும்பவும் ஹாய்கள் & நட்பு வட்டங்கள் பற்றிய பேச்சு. நானும் ஏதோ நினைப்பில் இரண்டு குமார்களையும் (குமர்கள் அல்ல!) இன்னுமொருத்தனையும் ஞாபகப்படுத்திக் கொண்டு, அந்த மூவரில் ஒருவன்தான் இவன் என்று தீர்மானித்தேன். திருவிழா நேரத்தில் ஏதோ ஒரு குமார் என்னோட வந்து கதைத்தானே.. முகம் மறந்து போச்சே!! சரி, இனிமேல் process of elimination தான்!

குமார்1 என்று எடுத்துக்கொண்டேன் அடுத்த முறை காணும் போது. பேசுகையில் சொன்னான் குமார்1 வருகிற மாசி மாதம் திருமண்ம் செய்து கொள்ளப்போகிறான் என்று. (அடப்பாவி, அது நீயில்லையா!)

பிறகு கதைத்த சில சந்தர்ப்பங்களில் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. (சந்தித்த அன்று முழுக்க.. " பேரைச் சொல்லி அறிமுகம் செய்கிற பழக்கமில்லையா உனக்கு" என்று திட்டித் தீர்ப்பதுதான்!! முகம் மட்டும், "என்னைப் பார்த்திருக்கிறாய்.. எங்கெயென்று சொல்லு" என்று வேதாளமாய் கேள்வி கேட்கும்.)

நேற்றும் அதே "ஹாய்". சரி இன்டைக்கு உன் பெயர் அறியாமல் விடுவதில்லை. கொஞ்ச நேரம் பேசிய பின், மாலினியின் மின்னஞ்சல் முகவரி கேட்டதற்கு, "உம்மட ஃபோன் நம்பரைப் போட்டுத்தாரும். அனுப்பிறன் என்று செல்லிடப்பேசியைக் கொடுதுவிட்டு பெயர் தெரிந்துவிடும் என சந்தோசத்தில் மிதந்தால், "இந்தாங்கோ" என்று நீட்டியதில் இருந்தது அவனது இலக்கம் மட்டுமே!!! (ஐயோ!!!)

மாலினியிடம் பேசுகையில் "பெயர் தெரியாமல் பேசும்" கதை சொன்னால், ஜோக் ஒஃப் த இயர் என்று சிரிக்கிறாள். பிறகு அவளுடன் சேர்ந்து யோசித்தும் பிடிபடவில்லை. காலையிலே நடந்து போகும் போது மின்னலாய் பொறிதட்டியது. வீதியிலே துள்ளாத குறை. கடந்து போன எவரும் முகத்தில் என் சிரிப்பைக் கண்டு ஒரு மாதிரித்தான் பார்த்துப் போயிருப்பர். பெயர் தெரியாமத்தான் கதைச்சனான் இவ்வளவு நாளும் என்டு அவனுக்குத் தெரிஞ்சிருக்குமோ என்றொரு யோசனை வேறு வந்து தொலைத்தது.

இன்றைக்கும் கண்டேன். ஆனாலும் பெயர் சொல்லி அவனை விளிக்கவில்லை. எதற்கும் இருக்கட்டுமேயென அவன் மின்னஞ்சலைக் கேட்டேன்.

"என்ட பெயர் தெரியுந்தானே?" (அப்ப நான் பெயர் தெரியாமத்தான் கதைச்சனான் என்டது உனக்குத் தெரிஞ்சிருக்குமோ என்டு யோசிச்சது சரிதானா!! தெரியாம முழிக்கிறனென்டு கண்டா பேரைச் சொல்றதுதானே!!)
வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு "ஓமெண்டுதான் நினைக்கிறன்" "என்ன ஸ்பெலிங் பாவிக்கிறனீங்க? Gயா Kயா..."

வண்டி தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது!


பி.கு: கணவரும் தோழியும் சொன்னமாதிரி "பெயர் தெரியாமல்தான் இதுவரைக்கும் உன்னுடன் கதைத்தேன்" என்று ஒத்துக்கொண்டு அவனிடமே பெயரைக் கேட்காமலிருந்தது நல்லதென்றே தோன்றுகிறது. எல்லாம் நன்மைக்கே!?

பெட்டகம்