இரண்டாம் தரிப்பு II

ரெய்ன்(f)பால் நீர்வீழ்ச்சிக்குக் காலையில் போகவென்றிருந்த பயணம் பிற்பகல் இரண்டு/மூன்று மணி போலத்தான் சாத்தியமாயிற்று. ஷாவ்ஹௌசன் (சாருஹாசன் அல்ல) கன்ரோனில் ஜெர்மன் - சுவிஸ் எல்லைக்கருகில் இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சிதான் ஐரோப்பாவிலேயே பெரிதென்றார்கள். இரண்டு மூன்று வழிகளில் இவ்விடத்தை அடையலாம். இங்கே பாருங்கள்.


விரைவிலேயே பனிமூட்டம் சூழ்ந்துவிட்டதால் நிறைய நேரம் நிற்கவில்லை. நீர்வீழ்ச்சி ஆரம்பிக்குமிடத்திற்கும் ஏறவில்லை. கோடை காலத்திற்தான் செல்லலாம். மேலே ஒரு கோட்டையும் இருக்கிறதாம். படகுச் சவாரி போகலாம், அல்லது நடந்து மலையேறலாம். மலை ஏறுவதற்குமே வெவ்வேறு வழிகளுண்டாம். நாங்கள் அடிவாரத்திற்குப் போனோம். குட்டியொரு பாலமிருக்கிறது. கீழே பார்த்தால் தரை தெரியக்கூடியளவு தெளிந்த நீர். தரைதான் தெரியவில்லை... அவ்வளவிற்கு மீன்கள். சாப்பாட்டுப் புத்தி போகுமா.. எப்பிடிப் பிடிக்கலாம் என்றெல்லாம் ஆராயப்பட்டதுடன் பொரிச்சா சுவையாயிருக்குமென்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்பட்டது. கதையோடவே முடிஞ்சு போச்சு.. செயலிலே இறங்கவில்லை. அத்துடன் தப்பின மீன்கள். :O)

கடந்து அந்தப்பக்கம் கோட்டைக்குப் போனால் ஒரு ஞாபகச் சின்னக் கடையும் (பூட்டியிருந்தது) படகுத் துறையும், ஒரு உணவகமும் இருந்தன. தண்ணீரோ சில்ல்ல்!!. வீரம் காட்டவென்று தண்ணிருக்குள்ளிருந்து வெளியே தலை நீட்டிக் கொண்டிருந்த ஒரு பெரிய கல் மேலே நின்று படமெடுத்தோம். குளிர்காலத்தில் போவதில் சனமில்லாமல் ஆறுதலாய் இடம் பார்க்கக் கிடைத்தாலும், கோடைகாலத்திலே செய்யக்கூடியதாயிருக்கிற படகுச் சவாரியோ, மலையேறலோ இல்லாமல் போனது வருத்தமே.

இதுவரை இப்படி அழகான இடத்தைப் பனிமூட்டத்திற்கூடாகப் பார்க்கும் சந்தர்ப்பம் படங்களிலும் (கதாநாயகி அறிமுகம்/பாடல்)(இதற்கு நக்கலாக 'அழகிய தீயே'ல் கடைசியில் ஒரு காட்சி வைக்கப்பட்டதல்லவா. இன்னும் சிரித்துக் கொள்வேன் அதை நினைத்து) விளம்பரப் பிரசுரங்களிலும் மட்டுமே கிடைத்தது. படத்தைப் பார்த்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

ஷாவ்ஹௌசனில் படங்கள் வரையப்பட்ட பழங்காலத்து வீடுகளும் இருக்கின்றனவென்று அறியக்கிடைத்தது. செல்லவில்லை. விவரங்கள் கீழேயுள்ள சுட்டிகளிற் கிடைக்கும்.

1. http://www.about.ch/cantons/schaffhausen/rheinfall/index.html
2. http://www.virtualtourist.com/travel/Europe/Switzerland/Kanton_Schaffhausen/Schaffhausen-690385/TravelGuide-Schaffhausen.html


வின்ரத்தூரிலிருந்து சுவிஸ்ரயிலெடுத்து இரண்டு மணி நேரத்தில் தூன் நகரை வந்தடைந்தோம். போன இடங்களிலெல்லாம் எங்களைச் சாப்பிட வைத்தே அழகு பார்த்தார்கள். தூனில்தான் கொஞ்சமாவது அதிலிருந்து விடுதலை; அடுத்தநாள் நாட்டுக்கோழி இறைச்சியென்று - அதற்குள்ளிருந்த முட்டைகளோட சேர்த்து - பரிமாறும் வரை :O(. சுட்ட மீனும் சலட்டும் சாப்பிட்டுவிட்டு பத்து நிமிட நடையிலுள்ள நகர் மையத்தைப் பார்க்கப்போனோம். நத்தார்ச் சோடனைகள் ஆரம்பித்திருந்தன. அடுத்தநாள் சந்தையாம். கடைகளின் எலும்புக்கூடுகளாய் சில stalls முளைத்திருந்தன. 12ம் நூற்றாண்டிலிருந்தே இருக்கிற கோட்டை கண்ணில் பட்டது. அடுத்தநாள் அதைப் பார்க்கப் போகிறதாய் முடிவு. கண்ணிற் பட்ட ஒரு மணிக்கூட்டுக் கடைக்குள் நுழைந்தோம். ஒரு அடி உயரமிருக்கும் ஒரு கடிகாரத்தைக் காட்டி விலை கேட்டோம்.. 20,000 சுவிஸ் பிராங்குகளாம்!!!! அடேயப்பா! கையாலேயே செய்யப்படுவதால் அவ்வளவு விலை.

அடுத்தநாள் மப்பும் மந்தாரமுமாய் விடிந்தது. சுவிஸில் கடைசி நாளென்பதால் மனம் சோர்ந்தும், கோட்டை & இன்னொரு நாடு (அடுத்தநாளாயினும்) பார்க்கப் போகிற உற்சாகமும் கலந்து மனம் ஒரு நிலையில்லாமல் இருந்தது. சந்தை & கோட்டையைப் பார்க்கப் போனோம்.

வகை வகையாய் சீஸ். தோற் பொருட்கள், ஆடைகள், நத்தார் அலங்காரங்கள், பூக்கள், காதணி/மாலைகள்/மோதிரங்கள், பிரம்புப் பொருட்கள் என்று பலதும் விற்கும் கடைகள். பிரம்புக் கூடையொன்றை ஒரு சிறு இயந்திரத்தினுதவியுடன் சில நிமிஷங்களிலேயே பின்னுகிறார் கடைக்காரக் கிழவர். அவருக்கு எதிர்த்தாற்போல் ஒரு சிறுகடை. பொன்னிறமாய் சிற்றுருவங்கள். கண் பார்த்ததும் கால் இழுத்துச் சென்றது. தேன் மெழுகாலான மெழுகுதிரிகள். சந்தையிலே கொஞ்சம் சீஸ் வாங்கிச் சாப்பிட்டு கோட்டை நோக்கி நடந்தோம்.

கோட்டையில் கீழ்த்தளத்தில் ஒரு 'சத்திரம்'. கோட்டையின் கீழ்த்தளப்பகுதியில் கொஞ்சத்தை இப்போது கடைகளாக்கி விட்டார்கள். குதிரைகள் ஏறுவதற்கென்று வைத்தவை போலிருந்த படிகளில் ஏறி நடுத்தளம் அடைய ஒரு பீரங்கி வரவேற்றது. அதிலேயே ராசா ராணியாய் முகம் வைத்துப் படமெடுக்க ஒரு ஓவியம். ராசா ராணி (வீரன், காதலி?)யின் முகங்களைத் திறந்து அந்த ஓட்டையிலே எங்கள் திருமுகங்களை வைத்துப் படமெடுக்கலாம். ஒரு சின்ன அருங்காட்சியகமும் இருக்கிறது. நாங்கள் போன அன்றைக்குப் பூட்டு. இன்னும் கொஞ்சம் படியேறிப் போக ராசாவின் சாப்பாட்டறை. இப்பவெல்லாம் விழாக்கள்/விருந்துகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. அன்றைக்கும் கதிரை-மேசைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள். வேலை செய்பவர்களை ஒரு knight மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.

மேலிருந்து படங்கள் எடுத்துக் கொண்ட பிறகு கீழிறங்கினோம். பழைய பாலத்தைப் பார்க்கப் போகிற வழியில் மதிலேறிச்(புத்தி போகாதே!!) சில படங்கள் எடுத்துக் கொண்டேன்.

பாலத்தடிக்கு நடந்தோம். தூனுக்கூடாக ஓடும் ஆறு வசந்த காலத்தில் பெருக்கெடுக்குமாம். குளிர்காலத்தில் கொட்டியுள்ள பனியெல்லாம் உருகியோட, ஆறு சந்தை வரை வரும். அதற்கேற்றபடி நீரோட்டத்தைக் கட்டுப்படுத்த மதகுகளை(சரியான பிரயோகம்தானா? அல்லது மடை என்று சொல்ல வேண்டுமா?) பொறி கொண்டு இயக்குகிறார்கள். அப்பொறிகள் கொண்டதொரு சிறிய மரப்பாலம் தான் பழைய பாலம். மேற்கூரையில் பாசி படர்ந்து போயிருந்தது. நீர் துள்ளிக் குதித்து ஓடி வருகிறது. ஒரேயொரு மடைக்கதவைத் திறந்து வைத்திருந்தார்கள் அன்று. ஆற்றில் பாண்/உரொட்டித் துண்டுகளை வீசினால் அன்னங்கள்/நீர்ப்பறவைகள் விரைந்து வருகின்றன. பின்புலமாய்க் கோட்டையும் வேறு கட்டிடங்களும். நடை பயில நல்லதொரு இடம்.

தூனில் பார்க்க இன்னுமொன்றிருக்கிறது. வொக்கர் பனோராமா (Wocher Panorama) எனப்படுகிற சுற்றிவர வரைந்த ஒரு ஓவியம். பத்தொன்பதாம் நூற்றாண்டு வாழ்க்கை பற்றியது. இது குறித்த மேலதிகத் தகவலுக்கு: http://www.thunersee.ch/en/excursions/all-around-thun/wocher-panorama.html

இப்படியெல்லாம் சுற்றிவிட்டு வீட்டே வந்து அடுத்த நாள் பயணத்திற்கு ஆயத்தமானோம்.

ஜேர்மனி. கத்திகளுக்குப் பேர்போன சொலிங்கனில் கால் பதித்தோம். எனக்கே மழை அலுக்குமென்று நான் எதிர்பர்க்கவில்லை. ஜெர்மன் வாசிகளுக்கு hats off. காற்றும் மழையும் ஊசியாக் குத்தின குளிரும்.. அப்பப்பா!!! கொட்டின மழையில் இடம் பார்க்க எங்கே போவது? கடைசியில் ஷ்வேப பான்(schwebe bahn) தான் பராக்குக் காட்டிற்று. வழமையாக் கீழே இருக்கிற தண்டவாளம் இதற்கு மேலே. தொங்கிக் கொண்டு ஓடுகிறது இந்த ரயில். கொஞ்சத் தூரத்துக்கு மேலே ரயிலோட கீழே ஆறோடுகிறது.

(இரவிலெடுத்த படம் தெளிவில்லை என்பதால் விக்கியில் பாருங்கள்.

ஜேர்மனியில் நின்ற இரண்டு நாட்களும் கட்டாய் ஓய்வு போலத்தான். வெளியில் இறங்க முடியவில்லை. குளிர். இங்கிருந்து நோர்வே போகிற திட்டம். சிட்னியிலிருந்து விலை பார்த்த போது 30 யூரோ இருந்த விமானப் பயணச்சீட்டு 100 யூரோக்கும் மேலாலே எகிறியிருந்தது. ஒரு மாதம் முதல் பதிவு செய்வதற்குத்தானாம் அந்தக் குறைந்த விலை. அவசரப் பயணகாரருக்கு தண்டம்தான். சில நாட்கள் முன்னே பின்னே போகக்கூடும் என்று பதிவு செய்யாமல் விட்டதன் விளைவு ஆளுக்கு 100 யூரோக்கும் மேலாகக் கொடுத்து விமானச் சீட்டைப் பெற்றுக்கொண்டதுதான். விமானச் சீட்டு எடுப்பதானால் 3 - 4 வாரத்திற்கு முன்னரே வாங்குவது உத்தமம்.

இலையுதிர்/வசந்த காலம், பின்னிரவு/அதிகாலைப் பயணம், செவ்வாய்-வியாழக் கிழமைப் பயணம் என்பனவற்றைத் தேர்ந்தெடுத்தால் மலிவு விலை விமானச்சேவைகளின் பயணச்சீட்டுகளை இன்னும் மலிவாய்ப் பெறலாம். எல்லாவற்றையும் விட முக்கியமானது முன்பதிவு செய்தல். குறைந்தது 3 வாரங்களுக்கு முன்பாகவே.

நிறைய நாடுகள் போகிறீர்கள். ஒரே பயணச்சீட்டிலேயே எல்லாத் தரிப்பும் போட்டெடுத்தீர்களேயானால் இலகுவாக இருக்கலாம்; ஆனால் கட்டாயம் விலையாக இருக்கும். நடுக் கட்டங்களை தனிப்பயணங்களாய்க் கருதிப் பயணச் சீட்டு எடுப்பது பணப்பைக்குச் சேதம் விளைவிக்காது. உதாரணமாய் நான் சிட்னி-பரிஸ்-ஸூரிக்-உவுப்பர்ட்டால்-ஒஸ்லோ-பரிஸ்-சிட்னி பயணிக்கிறேனென வைத்துக் கொள்வோம். சிட்னி-பரிஸ் & பரிஸ்-சிட்னி மட்டுமே பிரதான சீட்டில் எடுத்துக் கொண்டு, பரிஸ்-ஸூரிக்-உவுப்பர்ட்டால்-ஒஸ்லோ-பரிஸ் பயணங்களை விமானம்/பேருந்து/ரயில் என்று விருப்பமான comboவில் போட்டெடுத்துக் கொண்டால் விலை குறைவாக இருக்கும்.

மலிவுவிலை விமானச் சேவை

சோதனைப்பதிவு

நானும் புது ப்ளொகர் வீடு கட்டித் தந்ததில குடியேறி சோதில கலந்திட்டேன்..

"இரை" மீட்டல் 3

சாப்பாட்டைப் பத்திக் கதைச்சித்திருந்தனான், நடுவுல உட்டுத்துப் பொயித்தன். குறை நினையாதங்க மனே.

கடற்கரைக்குப் போனாக் கட்டாயம் இரிக்குமெண்டு சொன்ன சாமான் கொத்துரொட்டி. சில ஆக்கள் வீச்சு ரொட்டியெண்டுஞ் சொல்லுறவங்க. என்ன சாமான் என்டு விளக்கத் தேவல்லத்தானே... உருட்டி வைச்சிரிக்கிற மாவை நாலு சுழட்டுச் சுழட்டி விசுக்கினா விரிஞ்சி வாறத்த 'டங்கர டங்கர'யெண்டு போட்டிருக்கிற பாட்டுக்கு ஏத்த ஒரு தாளத்துக்குக் கோவா, முட்டை, இறைச்சி, வெங்காயம், பச்சக்கொச்சிக்கா எல்லாம் போட்டு கொத்தின ரொட்டி. என்னதான் களையெண்டாலும் அந்தப்பாட்டுக்கும் கொத்துரொட்டித் தாளத்துக்கும் கால் சும்மா தானா ஒரு ஆட்டம் போடப்பாக்கும். கவனமா இரிக்கோணும். சாப்பாட்டுப் பேப்பரில சுத்தி பிறகு பேப்பரில சுத்தித் தருவாங்க. சாப்பாட்டைக் கட்டுறதே தனிக்கலை. எவ்வளவுதான் முயற்சிச்சாலும் கடசில சொருகிறத்துக்கு எனக்கெண்டா பொக்கற் மாரி இரிக்கிறதேல்ல.

சாப்பாடுப் பார்சலப் பத்திக் கதைக்கக்குள்ளதான் ட்ரெயினில போகக்குள்ள கொண்டு போற சாப்பாட்டு ஞாவகம் வருது. அநேகமா இடியப்பப் பிரட்டலாத்தான் இரிக்கிற. பயணத்தண்டைக்கு விடிய ஒழும்பி இடியப்பம் புழிஞ்சி பிச்சி பிரட்டுவாங்க. ஆனா முட்டையோட நின்டிரும். இறைச்சி/மீனெல்லாம் பாவிக்கிறல்ல. அதைச் சிந்தாமக் கொள்ளாம மடில வச்சிச் சாப்பிடோணும். இல்லாட்டி பாண்/பணிஸ். முதலை பணிஸ்தான் பிள்ளையள் விரும்பித் தின்னிற. இல்லாட்டி கிறீம் பணிஸ். இப்ப இருக்கிற சீனி consciousness அப்ப எங்க கிடந்த!! [பாண்/பணிசுகள் சாப்பிடக்குள்ள வடிவா ஒரு பரிசோதனையும் செய்யலாம். தொடர்ந்து ஒரு ரெண்டு மூண்டு கிழமைக்கு சாப்பிட்டா வயிறு ஊதும். சாப்பிடல்லண்டா வயிறு குறைஞ்சிரும்.]

இந்தக் கொத்துரொட்டிய சும்மா வழிக்கடையில வாங்கிச் சாப்பிடல்லாம்.. அந்த மாரி இரிக்கும். [ருசியே செய்யிறவன்ட வேர்வை கலக்கிறதிலதான் வருது என்டு அண்ணா சொன்னாச் சரி, நமக்கு வாய்க்கால சாப்பாடு இறங்கா. "புள்ளைய ஏன் அரியண்டப் படுத்தா" என்டு வாங்கிக் கட்டுவாரு. என்டத்தையும் பங்கு போட்டுத் தின்றதான்.] கொழும்பில நல்லம் என்டா அது சரியற்காரன்ட(Chariot) கொத்துரொட்டிதான். நல்லாச் செய்திரிப்பான். விலையும் பரவால்ல. எங்கயோ கொட்டாஞ்சேனை/மருதானை/கோட்டைப் பக்கம் போனாலும் அண்ணாப்பிள்ளையர் வாங்கித்து வருவேர். அதுவும் நல்லா இரிக்கிற. என்ன கடையெண்டு எனக்குத் தெரியா.

என்னதான் கொத்துரொட்டியத் திண்டாலும், பசியெண்டா முதல்ல என்ன ஞாவகம் வரும்? சோறும் கறியும் தானே? [நமக்கென்ன பஸ்ற்றாவும் நூடுல்சுப்பும் அப்பெங்க தெரிஞ்ச?அதென்னண்டு தெரியா இனி இல்லண்ட பசி வந்தா நாம ஏன் சாப்பிட லேசான, உடன வயித்த நிறப்பிற சாப்பாட்டத் தேடுற?] மத்தியானச் சாப்பாட்டுக்கு ரெண்டிடம். ஒன்டு மஜஸ்ற்றிக் சிற்றிக்குள்ள. மற்றது கொள்ளுப்பிட்டில க்றீன் கபின்/பகோடா(Pagoda. பக்கோடா இல்ல). ஒரு சிங்கள ஊரில போய் மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டா எப்பிடியான கறி இரிக்குமோ அப்பிடியான சாப்பாடு மஜஸ்ற்றிக் சிற்றிக்குள்ள இருக்கிற கடையில. கடையிர பேர்தான் மறந்துத்தன். விலாசா கிச்சனோ என்னயோ. எனக்கு ஞாவகமா போஞ்சி, வாழப்பூ, கறணக் கிழங்கு(சமைச்சொழியும் மட்டும் வெட்டினாளுக்கு கை கடிக்கும்), மரவள்ளிக்கிழங்கு, பிலாக்கா, பிஞ்சுப் பிலாக்கா (பொலொஸ்),கோழிறச்சி, மீன்/கணவா/றால் குழம்பு/ பொரியல்,கத்தரிக்கா, வெண்டிக்கா, கரவில(பீர்க்கங்கா என்டு நினைக்கன்) சீனிசம்பல், தேங்காப்பூ சம்பல், சட்னி,லீக்ஸ், கீரை ஏதாவது என்டு நிறையக் கறி இரிக்கும். விருப்பமான சோறு - சிவப்பு, வெள்ளை - கேட்டெடுக்கல்லாம். கறியளக் காட்டக் காட்ட போட்டுத்தருவாங்க. இலையிலதான் சாப்பாடு போடுவாங்க. இலைய வட்டில்ல வச்சித் தருவாங்க. அத நாம பிறகு கரண்டி/முள்ளுக்கரண்டியால சாப்பிடுற. :O)

அங்க அப்பிடியெண்டா கிறீன் கபினில நீங்க போய் நிண்டு எடுத்து வரோணும். என்ன கறி மாறினாலும் இவனிட்ட கட்டாயம் நெத்தலிக் கருவாட்டுப் பொரியலும் பப்படமும் தேங்காப்பூச் சம்பலும் சட்னியும் பருப்பும் கீரையும் இருக்கும். இருந்து சாப்பிடுறதுக்கு நல்ல தோதான இடம். வெள்ளை உடுப்புப் போட்ட waiter/server. அரைவட்டமா இருக்கை (சுவரோட கட்டிச் சீமெந்து போட்டது) போட்ட வட்ட மேசை நாலைஞ்சு. (மற்றக் கதிர மேசையளும் இரிந்ததான்..) பின்னுக்கு சுவரில பழங்காலத்திய முறையில கீறின/அச்செடுத்த ஓவியம். நல்ல நிழலா இருக்கும். பக்கத்தால காலிவீதி கிடக்கெண்டு மறந்தே பொய்த்திரும். பிறகு சாப்பிட ஐஸ்கிறீம், வட்டிலப்பம், பழக் கலவை இல்லாட்டி தயிரும் கித்துள் பாணியும்.

கித்துள் பாணியப்பற்றிச் சொல்லோணும். நல்ல இனிப்பான பாணி. நான் முதல் இதத் தென்ன மரத்திலருந்துதான் எடுக்கிறண்டு நினைச்சித்திருந்த. அப்பிடியில்ல. கித்துள் (Caryota Urens) என்டே ஒரு மரங் கிடக்கு.

Kingdom Plantae - Plants
Subkingdom Tracheobionta - Vascular plants
Superdivision Spermatophyta - Seed plants
Division Magnoliophyta - Flowering plants
Class Liliopsida - Monocotyledons
Subclass - Arecidae
Order - Arecales
Family - Arecaceae (Palm family)
Genus - Caryota L. (fishtail palm)
Species - Caryota urens L. (jaggery palm)

தென்னையிட விட்டத்தில மூண்டில ஒரு பங்குக்குத்தான் வரும். 15 - 20m உய..ரமா வளரும். கொண்ட பனை(கொண்டைப் பனை?), கூன்டல்பனை(கூடல் பனையெண்டு கேள்விப்பட்டிருக்கிறன்.. அதா இதெண்டு தெரியல்ல), திப்பிலி என்டு தமிழில சொல்லுறதாமெண்டு இந்தப்பக்கம் சொல்லுது.

"This and other large Caryota species are sources of sago, fibre and toddy (fermented sap). The genus is the only one within the palm family with bi-pinnate (doubly divided) leaves. Caryotas are monocarpic, that is, when the flowering stem has finished fruiting it dies. The fruit is filled with crystals that cause severe irritation and should not be handled" - என்டுது இந்த ஊர் Royal Botanic Gardens தளம். கிட்டத்தான் கிடக்கு.. போய்ப் படம் எடுத்து வந்து இணைக்கிறன்.

கித்துள் பாணி, கித்துள் மரத்திட பூவை (பாளை?) வெட்டி எடுக்கிற. பாளையிட அடில வெட்டி மூலிகைக் கலவை கொஞ்சம் பூசிற. இப்பிடிப் பூசிறது பாளை முதிராமத் தடுக்கும். ரெண்டு நாளைக்குப் பிறகு பாளையச் சேத்துக் கட்டி நுனிகள வெட்டிருவாங்க. கீழ ஒரு பானைய/முட்டிய வைச்சா பிறகென்ன, பாணி அறுவடைதான். நேரடியா மரத்திலருந்து வாறதால அப்பிடியே சத்தும் இரிக்கும். இப்ப என்னண்டா நிறைய விக்கோணும் என்டதால சீனியக் கலந்தும் விக்கிறாங்க. வாங்கக்குள்ள பாத்து வாங்கோணும். (வாயில வைக்க மட்டும் எப்பிடி வித்தியாசம் கண்டு பிடிக்கிறண்டு எனக்குத் தெரியா). கித்துள் பாணியைக் காய்ச்சினா சக்கரை. பாணில மாதிரியே இதிலயும் சீனி கலக்கிறாங்களாம் இப்ப. சக்கரை வாங்கக்குள்ள கடும் நிறமாயும் மென்மையாவும் இருக்கிறதுதான் நல்ல சக்கரை. சீனி போட்ட சக்கரை நிறங் குறைஞ்சி கடிக்க/உடைக்க ஒண்ணாம கடினமா இரிக்கும். அத வாங்கப்படா!

தென்னையிலிருந்து கள்ளு எடுக்கிற மாதிரியே கித்துள் மரத்திலருந்து கள்ளும், தென்னந் தும்பிலருந்து கயிறு செய்யிறது மாதிரி கயிறும் செய்வாங்களாம். கயிறு மட்டுமில்ல, கூடைகள், தூரிகை செய்யக்கூடப் பாவிக்கிற. மரமும் நல்ல உறுதியா இருக்கிறவடிவா வீட்டுச் சாமான்/உத்திரம் செய்றவங்க.

எனக்குத் தெரிஞ்ச கித்துள் பாணிக் கதை இவளவுந்தான். ஆருக்கும் மேலதிக விவரம்/நான் சொன்னதில திருந்தங்கள் தெரிஞ்சாச் சொல்லுங்க.


அ.சொ.பொ.வி:
-----------------------
பச்சக் கொச்சிக்கா - பச்சை மிளகாய்
கடிக்க/உடைக்க ஒண்ணாம - கடிக்க/உடைக்க முடியாமல்
பாண் - bread
பணிஸ் - bun
வாயில வைக்க மட்டும் - வாயில் வைக்கும் வரை

பெட்டகம்