விசரியென்கிற நான்...

விளையாடக் கூப்பிட்ட ராதா ஸ்றீராம், பிரபா, மலைநாடருக்கு நன்றி.. விசர்க்குணங்கள் இருக்குது என்டு தெரிஞ்சுதான் கூப்பிட்டிருக்கிறீங்க போல!! :O))

முதல்ல விளையாட்டுக்கு ஆள் சேர்த்திட்டு வாறன்..

யோகன் (பாரிஸ்)
சினேகிதி
மதி
கலை
அஞ்சலி

தங்களது சித்திர விசித்திர குணாம்சங்களைச் சொல்லுமாறு மேற்கூறியவர்களை இத்தால் அழைக்கிறேன்.


எனக்கு இருக்கிற சில விசித்திர குணம் (என்டு எனக்குப் படுபவை)

5. எதாவதொன்றில் ஆர்வம் வந்தால் அதுவே கதி. எப்படியும் 5- 6 வாரமெடுக்கும் அந்த அலை ஓய! பிறகு இன்னொருமுறை அதிலே ஆர்வம் வரும் வரை திரும்பிப் பார்ப்பதேயில்லை. மாறாத ஆர்வம் சிலவற்றில் இருக்கிறது. உதாரணத்துக்கு:

* ஆவணப்படங்கள் கண்டால் பார்க்கவே வேண்டும். வேற ஒன்றும் அந்த நேரத்தில் ஓடாது. பார்க்க முடியாவிட்டால் பதிவு செய்து பிறகு பார்ப்பேன். தொ.காவில சில நிகழ்ச்சிகளை அவற்றின் தலைப்பு/முடிவு இசைக்காகவே பார்க்க ஆரம்பித்ததும் உண்டு. (Sitting Ducks சலனக் கேலிச்சித்திரம், House தொடர்.. இன்னும் சில நிகழ்ச்சிகள்). தொ.கா. நிகழ்ச்சிகள் சிலவற்றுக்கு அடிமையாகவே கிடப்பதும் ஒரேயடியாய் அவற்றைப் பார்ப்பதை நிறுத்துவதும் உண்டு.

* அனுப்பும் வாழ்த்து மடல் அனேகமாக நானே செய்ததாய் இருக்கும். இதற்காகவே, காண்கிற பூக்கள், வித்தியாசமான அமைப்புடைய இலைகள் சேகரிப்பேன். பேரங்காடிக்குப் போய் என்னைத் தவற விட்டால் வந்த வழியில் எங்காவது புத்தக/கைவினைப் பொருள் கடை இருக்கிறதா என்று பார்த்து அதற்குள் நுழைந்தால் என்னைக் கண்டு பிடிக்கலாம். அந்தளவு புத்தக/கைவினை வெறி.


4. கோவம் வரும். ஏன் எதுக்கெண்டெல்லாம் இல்லை. சுள்ளென்று எரிந்து விழுவேன். ஆனால் மற்ற நேரங்களில், அமைதியின் உருவமாய் இருப்பவர்களுக்கே கோவம் வரும் சந்தர்ப்பத்தில், எனக்கே ஆச்சரியம் வரும் வகையில் அமைதியாய் பொறுமையாய் பொறுமையின் சிகரம் ஒரு எருமையாய் இருப்பேன். ஆக, கோவம் வரும். ஆனா எப்ப என்டு தெரியாது.

குறிப்பாக எரிச்சல் வருவது மேற்கத்தேய 'பெண்' வரையறையை தங்களுக்குக் கற்பித்துக் கொண்ட பல்கலைக் கழகம்/வேலை செல்லும் இங்கிருக்கும் பெண்களிடம்(அறிவு சார்பாய் இல்லாமல் தோற்றத்தில் அதிக ஈடுபாடு கொள்வது அதைக் கொண்டே மற்றவர்கள் மதிப்பிடுவது என்பதைச் சொல்கிறேன்.). உடைகளுக்கான கடைகளை விட புத்தகக் கடை பிடிக்கும் என்றும் பேருந்தில் நான் சுவர்ப்பூச்சு கொள்கலன்கள், உலக்கை மற்றும் தகரம் கொண்டு போனதையும் சொல்லி (முழுக்க முழுக்க "நான் எனது தேவைக்காக செய்திருக்கிறேன் பார், ஒரு வெட்கமும் இல்லை" என்று காட்ட என்று சொல்லிக் கொண்டாலும், அப்படிப்பட்ட தேவைகள் இங்கு 99% பேருக்கு வராது என்பதும் நினைவுக்கு வரும்) அவர்கள் முகம் ஆச்சரியத்தில் விரிவதைப் பார்க்க & அவர்களுடன் தர்க்கித்து கற்பிதங்களை உடைக்கப் பிடிக்கும்.


3. சில இடங்களுக்கு முதல் முறையாகப் போனாலும் அவ்விடத்திற்கு முதலும் வந்திருந்த மாதிரித் தோன்றும். நண்பர்களிடம் சொன்னால் போன பிறப்பில் வந்திருப்பாய் என்று கேலி பண்ணுவார்கள். ஏனோ தெரியவில்லை பழைய காலத்து வீடுகள் கட்டிடங்கள் என்பவற்றிற்குப் போனால் அதிகமாகத் தோன்றும். வந்த மாதிரி இருக்கிறது தானே என்று அவ்விடத்தின் உள்ளமைப்புப் பற்றிக் கேட்டால் அம்போ! ஆக வெளியில மட்டும் பார்த்துப் போயிருக்கிறன் போல போன பிறப்பில!!! :O\


2. முந்தினதின் நீட்சியாக யாரைப் பார்த்தாலும் முதல்லே எங்கேயோ கண்ட மாதிரி இருக்கே என்று யோசிப்பது. எப்படியும் இதுவரை வாழ்நாளில் சந்தித்த/பார்த்திருந்த ஒருவருடன் புது முகத்தை ஒப்பிட்டுக் கொள்வது. அப்படி யாரையும் ஒத்திராத முகமா? கண்ணையோ மூக்கையோ காதையோ நெற்றியையோ ஒப்பிடத் தொடங்குவேன்!! புத்தம் புதிதாயே முகம் இருந்தால் மனதில் தேக்கிக் கொள்வேன்.. இன்னொரு ஆளைச் சந்தித்தால்/பார்த்தால் ஒப்பிடுவதற்கு!! :O))

இந்த வியாதி வர வர முற்றுகிறது என்று நினைக்கிறேன்.. வார இறுதியில் சந்தித்த ஒரு வயதுக் குட்டிப் பெண்ணைப் பார்த்து இவளை மாதிரியே யாரைத் தெரியும் என்று யோசித்து, கடைசியில் கண்டு பிடித்தேன்!!!


1. யாரோட கதைச்சாலும் அவங்கட வட்டார வழக்கில/ வேற்று நாடாயிருந்தா அந்த அக்சன்ற்றுடைய ஆங்கிலம் கதைப்பது. மாற்ற வேண்டும் என்டு முயற்சித்திருக்கிறேன். ஆனாலும் கவனிக்காம விட்ட பொழுதொன்றில மூளையும் குரல்வளையும் சதி பண்ணி விடும். சீனாக்காரனிட்டக் கதைச்சா அவன் சொல்லுற மாதிரியே "த்ரீ"க்குப் பதிலா "ட்ரீ/ட்லீ"யும், "ப்ரைட் ரைசு"க்குப் பதிலா "ப்லை லை" யும் தான் என்ட வாயில இருந்து வரும். இதே இத்தாலியனோட என்டா "இட்" "இத்" ஆகிறதும் நடக்கும். வேலையிடத்திலே பல நாடுகளைச் சேர்ந்த ஆட்கள் இருப்பதால் எனக்கும் வசதியாய் அமைந்து விடுகிறது!!(என்ன இதுவரை இந்த ஐரிஷ்/ஸ்கொட்டிஷ்/வெல்ஷ் அக்க்சன்ற்றுகள்தான் வராதாம்.) புதுசு புதுசாய் அக்சன்ற் கற்றுக்கொண்டு வீட்டே போய்/குட்டித்தோழர்களிடம் பேசிக்காட்டுவது பொழுது போக்கு. என் வீட்டு இல்லத்தரசன் யாரோடு பேசினாலும் தனது அக்சன்ற் / 95% இலங்கைத் தமிழிலேயே கதைப்பார். நான் அப்படியில்லைத்தானே.. ஒரு நாள் தமிழக நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அங்கிருந்த ஒரு (தமிழக)முதியவவுடன் பேசினேன். "உன்னோட வீட்டுக்காரர் பேசறது புரியலே, ஆனா நீ சரியா பேசறே" என்றாரே!!

இப்போதைக்கு இவ்வளவுதான் ஞாபகம் வந்தது. இந்த விசர் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? :O))

பெட்டகம்