அங்கே போல இங்கேயும்!!

லண்டனில் குண்டு வெடித்தாலும் வெடித்தது, எல்லா இடத்திலும் பாதுகாப்பைப் பலப்படுத்துகிறார்கள். அங்கே தொடர்வண்டியில் குண்டுகள் வெடித்ததற்கு மறுநாளும்,தொடர்ந்து ஒன்றிரண்டு நாட்களுக்கும் இங்கே தொடர்வண்டி நிலையங்களில் காவல் அதிகாரிகள் நின்றிருந்தார்கள். பிறகு காணவில்லை.

இங்கே எடுத்துள்ள ஒரு ஆய்வின் படி அவுஸ்திரேலியர்களுக்கு, தாங்கள் பயங்கரவாதிகளின் இலக்காக இருப்பதாகத் தோன்றவில்லையாம். ஆனாலும் பிரதமர் அண்ணாச்சி அமெரிக்காவுக்கு வால் பிடிப்பதை விடவில்லை. பெரியண்ணா செய்கிறார்..நானும் செய்யப்போறேன் மனப்பாங்குதான். லண்டனில் போலே, அமெரிக்காவில் போலே ஒரு தாக்குதல் இங்கேயும் இடம் பெறுமானால் அதற்கு: அரசு அமெரிக்காவுக்குத் துணை போவதும், சிறு செய்தியையும் ஊதிப் பெரிசாக்கும் ஊடகங்களுமே இரு பிரதான காரணிகளாக இருக்கும்.

தேசிய அடையாள அட்டை கொடுக்கப்பட வேண்டும் என்பதும் இவ்வரசின் நிலைப்பாட்டில் ஒன்று. ஆனாலும் அதற்கு பெருமளவு ஆதரவு கிட்டியிருக்கவில்லை. லண்டன் குண்டு வெடிப்பின் பின்னர் தேசிய அடையாள அட்டை இருக்க வேண்டியது கட்டாயம் என்னும் எண்ணம் சற்றே வலுப்பெற்றுள்ளது. இனிமேல் பேருந்து, நீருந்து(ferry), தொடர்வண்டிப் பயணிகளின் பைகள் எழுமாற்றுச் சோதனைக்கு(random checks) உட்படுத்தப்படுமாம். அதற்கு, பாதுகாப்பிற்கு ஓரளவு உத்தரவாதம் என்பதால் ஆதரவும், தனிமனித சுதந்திரத்தில் தலையிடுகிறார்கள் என்ற காரணத்தினால் எதிர்ப்பும் சம அளவில் மக்களிடையே காணப்படுகிறது. இன்றைக்கு காலையில் தொடர்வண்டி நிலையத்தில் பயணச்சீட்டுச் சரிபார்க்கும் பொறியின் அருகில் நின்று கொண்டு காவலர்கள் எழுமாறாக ஒருவரைத் தம்மருகில் அழைத்து பையைக் காட்டச் சொல்லிக் கேட்கிறார்கள். ஆளை அடையாளம் காண வாக ஓட்டுனர் அனுமதிப்பத்திரத்தையும் வாங்கிப் பார்க்கிறார்கள். தேசிய அடையாள அட்டை வரும் காலம் மிகத் தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது!

பெட்டகம்