Showing posts with label போகுமிடம் வெகு தூரமில்லை. Show all posts
Showing posts with label போகுமிடம் வெகு தூரமில்லை. Show all posts

உலாத்தப் போக..

இந்தப் பதிவு நான் மறக்காமலிருப்பதற்காக.

பயணங்கள் சுகம் தருபவை. போய்ச் சேருமிடம் குறித்த பார்வையோடே பலர் பயணங்களை அணுகுகிறோம். அப்படியில்லாமல் பயணத்தையே இரசித்து முடிவுடம் போய்ச் சேருவோர் நம்மில் எத்தனை பேர்? பயணம் போகலாம் என்று நினைத்தவுடன் மனதில் தோன்றும் அந்த விவரிக்கவியலாப் பரபரப்பும், பயணத்திற்குத் தேவையான ஆராய்ச்சிகளில் இறங்கி முடிவெடுக்கும் போதும் ஏற்படும் கிளர்ச்சி என்பன இனிமையானவை. முடிவிடமடைந்ததும் வேறு விதமான உணர்ச்சிகளாக உருவெடுத்துக் கொள்பவை. பயணத்தை ஒழுங்கு படுத்தும் போதோ, அல்லது பயணித்துக் கொண்டிருக்க்ம் போது இருக்கும் எதிர்பார்ப்பு அங்கு போய்ச் சேர்ந்ததும், 'அடடா..வந்து விட்டோமே' என்றிருக்கும் எனக்கு. (நிறைய நாள் எதிர்பார்த்து திட்டமிட்டுப் போன ஐரோப்பியப் பயணம் அப்படித்தான் இருந்தது பாரிஸ் போயிறங்கின கொஞ்ச நேரத்துக்கு)

விமானப் பயணமே எனக்குப் பிடித்தமானது. சிலருக்குப் பயம், சிலருக்கு ஒன்றும் பண்ணாமல் உட்கார்ந்திருக்க வேண்டுமே என்ற சலிப்பு - எனக்கு இதெல்லாமில்லை. படத்தையோ அல்லது யன்னலுக்கூடாக முகிலோ நிலமோ வானமோ பார்த்து ரசித்து, பக்கத்தில் இருப்பவருடன் பேசி, பணியாளருக்கு மணிக்கொரு தரம் வெந்நீருக்காகத் தொல்லை கொடுத்து, தூங்கியெழுந்து நிறைக்கும் பயணம். இதில் பிடிக்காமலிருக்க, பயப்பட என்ன இருக்கிறது?

போக/பார்க்க நினைத்திருக்கிற இடங்கள்/நாடுகளைப் பட்டியலிட்டு வைக்க நினைத்தது தான் இப்பதிவின் ஆரம்பம். பட்டியல் ஒரு வித ஒழுங்கிலுமில்லை:

  • அவுஸ்திரேலியா
  • மொரோக்கோ
  • இலங்கை
  • நியுஸிலாந்து
  • இந்தியா
  • அந்தமான்-நிகோபார்
  • காஷ்மீர்
  • கம்போடியா
  • நேபாளம்
  • கிரேக்கம்
  • அயர்லாந்து
  • ஸ்கொட்லாந்து
  • வேல்ஸ்
  • வடதுருவம்
  • பிரான்ஸ்
  • சுவிட்சர்லாந்து
  • நோர்வே
  • டென்மார்க்
  • சுவீடன்
  • தாய்லாந்து
  • மாலைதீவு
  • கனடா
  • ஐஸ்லாந்து
  • கிரிபற்றி
  • எத்தியோப்பியா
  • தென்னாபிரிக்கா
  • எகிப்து
  • மடகாஸ்கர்
  • இந்தோனேசியா(பாலித் தீவு)
  • ஈரான்
  • துருக்கி
  • ஆப்கானிஸ்தான்
இன்னும் காணக் காண, படிக்கப்படிக்க என் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவரைப்போல வரையறுத்த திட்டம் இல்லாவிட்டாலும் எனக்கென்று மேலே சொன்ன இடங்களைப் பார்ப்பதற்கான திட்டமல்லாத பெருந்திட்டமிருக்கிறது. அதில் முக்கியமான பங்கு எங்கு என்ன எப்போது என்றெல்லாம் வகுத்துக் கொள்ளாமல் பயணிப்பது.

திடீரென்று முடிவெடுத்து வெளிக்கிடும் spontaneous பயணங்கள் இல்லவே இல்லாதளவுக்காய் வெகுவாய்க் குறைந்து விட்டன. வாழ்க்கைச் சுழலில் அப்பயணங்களால் வரும் வசதிக்குறைவுகள் கருத்தில் கொள்ளப்பட்டு பல நல்ல அனுபவங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறேன். ஹென்ரிக்கோவுக்கும் பேர்ணடெட்டுக்கும் மீண்டும் வாழ்த்துக்கள். அவர்கள் முடிவு சரியானது. (அவர்களைப் பற்றி இன்னொரு நாளைக்குக் கட்டாயம் பேச வேண்டும்)

--O-0-O--

பயணமென்று சொன்னதும் அண்ணாவுடன் போனவையே ஞாபகத்தில் மின்னுகின்றன. முக்கியமாக ஒரு பயணம். 1999ம் ஆண்டு - நான்கோ ஐந்து நாட்களுக்கு பன்னிரண்டு பேர் செல்லும் வாகனத்தில் பதினெட்டுப் பேர் போனோம். எங்கெங்கெல்லாமோ சுற்றினோம்..சுற்றிய இடமெல்லாம் வரலாற்றுச் சின்னங்கள் மிகுந்திருந்தன. மிகிந்தலை, பொலன்னறுவை, அனுராதபுரம், கதிர்காமம், சிகிரியா, பெயர் மறந்த இன்னும் வேறு இடங்கள். குளம்/ஆறு கண்டால் நிறுத்திக் குளித்துக் கும்மாளமிட்டு பக்கத்திலேயே எங்காவது ஒரு ஆச்சி வைத்திருந்த கடையில் கிடைக்கிற சோறு-கறியோ அல்லது பாண்-சம்பல்-வாழைப்பழம்-தேநீரோ அல்லது பழங்களோ உண்டோம். ஒரு நாள் அரைநிலவொளியில் vanக்குள் சிலர் தூங்க, மீதி துணி விரித்து குளத்தங்கரையில். இன்னொருநாள் அனுராதபுரத்துப் புத்தர்களையும் தாண்டி நிறையத்தூரம் போய் - எங்கள் குழுவிலிருந்த ஒருவரது அக்கா கற்பித்துக் கொண்டிருந்த பள்ளிக்கூடத்தில் இராத் தங்கினோம். தோட்டத்து மரவள்ளி கிண்டியெடுத்து அவித்து சம்பலுடன் உண்டோம். என் கிராமத்திலிருந்து வெளியேறிய சிங்களவர் சிலரும் எங்கள் குழுவிலிருந்தனர். என் கையெழுத்துப் புத்தகத்தில் அவர்களில் ஒருவர் தமிழில் எழுதித் தந்த 'இனன்களுக்கிடையிலான ஒற்றுமை ஓங்குக!' இன்னும் என்னிடமிருக்கிறது. அதைப் பார்த்துத் திருத்தி '
இனங்களுக்கிடையிலான ஒற்றுமை ஓங்குக!' என்று இன்னொரு தாளில் அவரிடமெழுதிக் கொடுத்த என் அபத்தமும் ஞாபகமிருக்கிறது.

தயிரும் கித்துள்பாணியும் நிறைந்த அந்த நாட்களில் எங்களுக்குள் தமிழ்-சிங்களப் பேதம் இருக்கவில்லை. சண்டை எங்கோ வேறொரு கிரகத்தில் நடந்து கொண்டிருந்தது. அதற்கும் எங்களுக்குமான தூரம் ஒன்றினாலும் எட்டிப்பிடிக்க முடியாதபடி நீண்டு போயிருந்தது.

என் கிராமத்தின் அழகுக்கு அடுத்தபடியாக, அங்கிருந்து புறப்பட்டதன் பிறகு,
நான் அழகான மனிதர்களையும் இடங்களையும் அப்பயணத்தின் போது கண்டுகொண்டேன். கல்முனை என்றால் என்ன, கம்பகா என்றால் என்ன..அன்பு மிக்க மனிதர்கள் எங்கேயும் அழகுதான்.

இரண்டாம் தரிப்பு II

ரெய்ன்(f)பால் நீர்வீழ்ச்சிக்குக் காலையில் போகவென்றிருந்த பயணம் பிற்பகல் இரண்டு/மூன்று மணி போலத்தான் சாத்தியமாயிற்று. ஷாவ்ஹௌசன் (சாருஹாசன் அல்ல) கன்ரோனில் ஜெர்மன் - சுவிஸ் எல்லைக்கருகில் இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சிதான் ஐரோப்பாவிலேயே பெரிதென்றார்கள். இரண்டு மூன்று வழிகளில் இவ்விடத்தை அடையலாம். இங்கே பாருங்கள்.


விரைவிலேயே பனிமூட்டம் சூழ்ந்துவிட்டதால் நிறைய நேரம் நிற்கவில்லை. நீர்வீழ்ச்சி ஆரம்பிக்குமிடத்திற்கும் ஏறவில்லை. கோடை காலத்திற்தான் செல்லலாம். மேலே ஒரு கோட்டையும் இருக்கிறதாம். படகுச் சவாரி போகலாம், அல்லது நடந்து மலையேறலாம். மலை ஏறுவதற்குமே வெவ்வேறு வழிகளுண்டாம். நாங்கள் அடிவாரத்திற்குப் போனோம். குட்டியொரு பாலமிருக்கிறது. கீழே பார்த்தால் தரை தெரியக்கூடியளவு தெளிந்த நீர். தரைதான் தெரியவில்லை... அவ்வளவிற்கு மீன்கள். சாப்பாட்டுப் புத்தி போகுமா.. எப்பிடிப் பிடிக்கலாம் என்றெல்லாம் ஆராயப்பட்டதுடன் பொரிச்சா சுவையாயிருக்குமென்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்பட்டது. கதையோடவே முடிஞ்சு போச்சு.. செயலிலே இறங்கவில்லை. அத்துடன் தப்பின மீன்கள். :O)

கடந்து அந்தப்பக்கம் கோட்டைக்குப் போனால் ஒரு ஞாபகச் சின்னக் கடையும் (பூட்டியிருந்தது) படகுத் துறையும், ஒரு உணவகமும் இருந்தன. தண்ணீரோ சில்ல்ல்!!. வீரம் காட்டவென்று தண்ணிருக்குள்ளிருந்து வெளியே தலை நீட்டிக் கொண்டிருந்த ஒரு பெரிய கல் மேலே நின்று படமெடுத்தோம். குளிர்காலத்தில் போவதில் சனமில்லாமல் ஆறுதலாய் இடம் பார்க்கக் கிடைத்தாலும், கோடைகாலத்திலே செய்யக்கூடியதாயிருக்கிற படகுச் சவாரியோ, மலையேறலோ இல்லாமல் போனது வருத்தமே.

இதுவரை இப்படி அழகான இடத்தைப் பனிமூட்டத்திற்கூடாகப் பார்க்கும் சந்தர்ப்பம் படங்களிலும் (கதாநாயகி அறிமுகம்/பாடல்)(இதற்கு நக்கலாக 'அழகிய தீயே'ல் கடைசியில் ஒரு காட்சி வைக்கப்பட்டதல்லவா. இன்னும் சிரித்துக் கொள்வேன் அதை நினைத்து) விளம்பரப் பிரசுரங்களிலும் மட்டுமே கிடைத்தது. படத்தைப் பார்த்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

ஷாவ்ஹௌசனில் படங்கள் வரையப்பட்ட பழங்காலத்து வீடுகளும் இருக்கின்றனவென்று அறியக்கிடைத்தது. செல்லவில்லை. விவரங்கள் கீழேயுள்ள சுட்டிகளிற் கிடைக்கும்.

1. http://www.about.ch/cantons/schaffhausen/rheinfall/index.html
2. http://www.virtualtourist.com/travel/Europe/Switzerland/Kanton_Schaffhausen/Schaffhausen-690385/TravelGuide-Schaffhausen.html


வின்ரத்தூரிலிருந்து சுவிஸ்ரயிலெடுத்து இரண்டு மணி நேரத்தில் தூன் நகரை வந்தடைந்தோம். போன இடங்களிலெல்லாம் எங்களைச் சாப்பிட வைத்தே அழகு பார்த்தார்கள். தூனில்தான் கொஞ்சமாவது அதிலிருந்து விடுதலை; அடுத்தநாள் நாட்டுக்கோழி இறைச்சியென்று - அதற்குள்ளிருந்த முட்டைகளோட சேர்த்து - பரிமாறும் வரை :O(. சுட்ட மீனும் சலட்டும் சாப்பிட்டுவிட்டு பத்து நிமிட நடையிலுள்ள நகர் மையத்தைப் பார்க்கப்போனோம். நத்தார்ச் சோடனைகள் ஆரம்பித்திருந்தன. அடுத்தநாள் சந்தையாம். கடைகளின் எலும்புக்கூடுகளாய் சில stalls முளைத்திருந்தன. 12ம் நூற்றாண்டிலிருந்தே இருக்கிற கோட்டை கண்ணில் பட்டது. அடுத்தநாள் அதைப் பார்க்கப் போகிறதாய் முடிவு. கண்ணிற் பட்ட ஒரு மணிக்கூட்டுக் கடைக்குள் நுழைந்தோம். ஒரு அடி உயரமிருக்கும் ஒரு கடிகாரத்தைக் காட்டி விலை கேட்டோம்.. 20,000 சுவிஸ் பிராங்குகளாம்!!!! அடேயப்பா! கையாலேயே செய்யப்படுவதால் அவ்வளவு விலை.

அடுத்தநாள் மப்பும் மந்தாரமுமாய் விடிந்தது. சுவிஸில் கடைசி நாளென்பதால் மனம் சோர்ந்தும், கோட்டை & இன்னொரு நாடு (அடுத்தநாளாயினும்) பார்க்கப் போகிற உற்சாகமும் கலந்து மனம் ஒரு நிலையில்லாமல் இருந்தது. சந்தை & கோட்டையைப் பார்க்கப் போனோம்.

வகை வகையாய் சீஸ். தோற் பொருட்கள், ஆடைகள், நத்தார் அலங்காரங்கள், பூக்கள், காதணி/மாலைகள்/மோதிரங்கள், பிரம்புப் பொருட்கள் என்று பலதும் விற்கும் கடைகள். பிரம்புக் கூடையொன்றை ஒரு சிறு இயந்திரத்தினுதவியுடன் சில நிமிஷங்களிலேயே பின்னுகிறார் கடைக்காரக் கிழவர். அவருக்கு எதிர்த்தாற்போல் ஒரு சிறுகடை. பொன்னிறமாய் சிற்றுருவங்கள். கண் பார்த்ததும் கால் இழுத்துச் சென்றது. தேன் மெழுகாலான மெழுகுதிரிகள். சந்தையிலே கொஞ்சம் சீஸ் வாங்கிச் சாப்பிட்டு கோட்டை நோக்கி நடந்தோம்.

கோட்டையில் கீழ்த்தளத்தில் ஒரு 'சத்திரம்'. கோட்டையின் கீழ்த்தளப்பகுதியில் கொஞ்சத்தை இப்போது கடைகளாக்கி விட்டார்கள். குதிரைகள் ஏறுவதற்கென்று வைத்தவை போலிருந்த படிகளில் ஏறி நடுத்தளம் அடைய ஒரு பீரங்கி வரவேற்றது. அதிலேயே ராசா ராணியாய் முகம் வைத்துப் படமெடுக்க ஒரு ஓவியம். ராசா ராணி (வீரன், காதலி?)யின் முகங்களைத் திறந்து அந்த ஓட்டையிலே எங்கள் திருமுகங்களை வைத்துப் படமெடுக்கலாம். ஒரு சின்ன அருங்காட்சியகமும் இருக்கிறது. நாங்கள் போன அன்றைக்குப் பூட்டு. இன்னும் கொஞ்சம் படியேறிப் போக ராசாவின் சாப்பாட்டறை. இப்பவெல்லாம் விழாக்கள்/விருந்துகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. அன்றைக்கும் கதிரை-மேசைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள். வேலை செய்பவர்களை ஒரு knight மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.

மேலிருந்து படங்கள் எடுத்துக் கொண்ட பிறகு கீழிறங்கினோம். பழைய பாலத்தைப் பார்க்கப் போகிற வழியில் மதிலேறிச்(புத்தி போகாதே!!) சில படங்கள் எடுத்துக் கொண்டேன்.

பாலத்தடிக்கு நடந்தோம். தூனுக்கூடாக ஓடும் ஆறு வசந்த காலத்தில் பெருக்கெடுக்குமாம். குளிர்காலத்தில் கொட்டியுள்ள பனியெல்லாம் உருகியோட, ஆறு சந்தை வரை வரும். அதற்கேற்றபடி நீரோட்டத்தைக் கட்டுப்படுத்த மதகுகளை(சரியான பிரயோகம்தானா? அல்லது மடை என்று சொல்ல வேண்டுமா?) பொறி கொண்டு இயக்குகிறார்கள். அப்பொறிகள் கொண்டதொரு சிறிய மரப்பாலம் தான் பழைய பாலம். மேற்கூரையில் பாசி படர்ந்து போயிருந்தது. நீர் துள்ளிக் குதித்து ஓடி வருகிறது. ஒரேயொரு மடைக்கதவைத் திறந்து வைத்திருந்தார்கள் அன்று. ஆற்றில் பாண்/உரொட்டித் துண்டுகளை வீசினால் அன்னங்கள்/நீர்ப்பறவைகள் விரைந்து வருகின்றன. பின்புலமாய்க் கோட்டையும் வேறு கட்டிடங்களும். நடை பயில நல்லதொரு இடம்.

தூனில் பார்க்க இன்னுமொன்றிருக்கிறது. வொக்கர் பனோராமா (Wocher Panorama) எனப்படுகிற சுற்றிவர வரைந்த ஒரு ஓவியம். பத்தொன்பதாம் நூற்றாண்டு வாழ்க்கை பற்றியது. இது குறித்த மேலதிகத் தகவலுக்கு: http://www.thunersee.ch/en/excursions/all-around-thun/wocher-panorama.html

இப்படியெல்லாம் சுற்றிவிட்டு வீட்டே வந்து அடுத்த நாள் பயணத்திற்கு ஆயத்தமானோம்.

ஜேர்மனி. கத்திகளுக்குப் பேர்போன சொலிங்கனில் கால் பதித்தோம். எனக்கே மழை அலுக்குமென்று நான் எதிர்பர்க்கவில்லை. ஜெர்மன் வாசிகளுக்கு hats off. காற்றும் மழையும் ஊசியாக் குத்தின குளிரும்.. அப்பப்பா!!! கொட்டின மழையில் இடம் பார்க்க எங்கே போவது? கடைசியில் ஷ்வேப பான்(schwebe bahn) தான் பராக்குக் காட்டிற்று. வழமையாக் கீழே இருக்கிற தண்டவாளம் இதற்கு மேலே. தொங்கிக் கொண்டு ஓடுகிறது இந்த ரயில். கொஞ்சத் தூரத்துக்கு மேலே ரயிலோட கீழே ஆறோடுகிறது.

(இரவிலெடுத்த படம் தெளிவில்லை என்பதால் விக்கியில் பாருங்கள்.

ஜேர்மனியில் நின்ற இரண்டு நாட்களும் கட்டாய் ஓய்வு போலத்தான். வெளியில் இறங்க முடியவில்லை. குளிர். இங்கிருந்து நோர்வே போகிற திட்டம். சிட்னியிலிருந்து விலை பார்த்த போது 30 யூரோ இருந்த விமானப் பயணச்சீட்டு 100 யூரோக்கும் மேலாலே எகிறியிருந்தது. ஒரு மாதம் முதல் பதிவு செய்வதற்குத்தானாம் அந்தக் குறைந்த விலை. அவசரப் பயணகாரருக்கு தண்டம்தான். சில நாட்கள் முன்னே பின்னே போகக்கூடும் என்று பதிவு செய்யாமல் விட்டதன் விளைவு ஆளுக்கு 100 யூரோக்கும் மேலாகக் கொடுத்து விமானச் சீட்டைப் பெற்றுக்கொண்டதுதான். விமானச் சீட்டு எடுப்பதானால் 3 - 4 வாரத்திற்கு முன்னரே வாங்குவது உத்தமம்.

இலையுதிர்/வசந்த காலம், பின்னிரவு/அதிகாலைப் பயணம், செவ்வாய்-வியாழக் கிழமைப் பயணம் என்பனவற்றைத் தேர்ந்தெடுத்தால் மலிவு விலை விமானச்சேவைகளின் பயணச்சீட்டுகளை இன்னும் மலிவாய்ப் பெறலாம். எல்லாவற்றையும் விட முக்கியமானது முன்பதிவு செய்தல். குறைந்தது 3 வாரங்களுக்கு முன்பாகவே.

நிறைய நாடுகள் போகிறீர்கள். ஒரே பயணச்சீட்டிலேயே எல்லாத் தரிப்பும் போட்டெடுத்தீர்களேயானால் இலகுவாக இருக்கலாம்; ஆனால் கட்டாயம் விலையாக இருக்கும். நடுக் கட்டங்களை தனிப்பயணங்களாய்க் கருதிப் பயணச் சீட்டு எடுப்பது பணப்பைக்குச் சேதம் விளைவிக்காது. உதாரணமாய் நான் சிட்னி-பரிஸ்-ஸூரிக்-உவுப்பர்ட்டால்-ஒஸ்லோ-பரிஸ்-சிட்னி பயணிக்கிறேனென வைத்துக் கொள்வோம். சிட்னி-பரிஸ் & பரிஸ்-சிட்னி மட்டுமே பிரதான சீட்டில் எடுத்துக் கொண்டு, பரிஸ்-ஸூரிக்-உவுப்பர்ட்டால்-ஒஸ்லோ-பரிஸ் பயணங்களை விமானம்/பேருந்து/ரயில் என்று விருப்பமான comboவில் போட்டெடுத்துக் கொண்டால் விலை குறைவாக இருக்கும்.

மலிவுவிலை விமானச் சேவை

இரண்டாம் தரிப்பு

-:சற்றே நீண்ட இடுகை, பஞ்சி பாராமல் எழுதச் சொல்லி பிரபா சொன்னதால் :O) :-

பரீ(நன்றி சிறி அண்ணா)யிலிருந்து அடுத்த நாடு நோக்கின பயணம். இந்தப்பயணம் ரயிலில். [ஐரோப்பாவில் ரயில், பேருந்து மூலம் பயணம் செய்வது பிரசித்தம். ஒவ்வொரு பிரதான நகரத்திலிருந்தும் இன்னொரு நகரத்திற்கு ரயிலோ பேருந்தோ செல்கிறது. பயன்படக்கூடிய சுட்டிகள் கீழே.]


ரயிலைப் பற்றி் - மிகவும் வசதியான இருக்கைகள். துப்பரவான கழிவறைகள்.பயணப்பொதிகளை வைப்பதற்கென்றே ஒவ்வொரு பெட்டியின் முன் பின் பகுதிகளில் தனியிடம். இரண்டு எதிரெதிர் இருக்கைகளுக்கு நடுவே ஒரு மேசை.(மடிக்கக்கூடியதாக இருக்கும்). முன்பதிவு செய்து வைத்திருந்தது TGVயில். இது ஒரு கடுகதி ரயில். பயணம் ஆரம்பித்துக் கொஞ்ச நேரத்தில்/குறிப்பிட்ட பகுதிகளில் பயணிகளை உட்கார்ந்திருக்கச் சொல்லி அறிவுறுத்தப்படுமாம். வண்டி மிக வேகமாகப் போவதால் சமநிலை தவறக்கூடும் என்பதாலேயே இப்படிச் சொல்லப்படுகிறது என்று எனக்குச் சொல்லப்பட்டது. நின்று பார்க்கத்தான் வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

கார் டு நோட் (Gare du Nord)இற்கு நாங்கள் போக்குவரத்து நெரிசலுக்கூடாக நீந்திப் போய்ச் சேர்ந்த போது நேரம் காலை 7.42. ரயிலோ 7.45இற்கு. சின்னையா சொல்லச் சொல்ல காலை ஆறரை வரை முதல்நாள் கடையில் எங்களுக்குத் தேவையானதைக் கேட்கத் தெரியாமல், எங்கள் நிறத்தில் தெரிந்த ஒருவரைப் பிடித்ததில் அவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்து தமிழும் தெரிந்தவராகி இருந்து விட்ட பாவத்தில், அவருதவியால் வாங்கிக் கொண்டு வந்த சிம் மை செல்பேசியில் போட்டு நோண்டிக்கொண்டிருந்துவிட்டுக் குளிக்கப்போன கண்ணன் வாங்கின திட்டை
நான் திரும்ப வாங்கவேண்டும் என்பதால் அவரை மட்டும் காருக்குள் விட்டுவிட்டு அடுத்தாய் வண்டி எத்தனைக்கு என்று பார்க்க கண்ணன், தம்பியுடன் சேர்ந்து நானும் ஓடினேன்.

பயணச் சீட்டு விற்பனைப் பகுதிக்குப் போனால், அங்கிருந்த பெண் சொன்னதின் படி அடுத்த TGV அன்று மாலைதான். வேறென்ன வண்டியுள்ளது என்று விசாரித்தால், SNCF இருக்கிறது. ஆனால் பயண நேரம் அதிகம் என்றார். சரியென்று அதற்குரிய சீட்டை வாங்கினால், அது TGVயினதை விட 40யூரோ குறைய என்று சொல்லி அந்தக் காசை மீளத் தந்தார். ஆனால் 9.40க்கு ரயில் புறப்படுவதோ கார் லெ எஸ்ற்றிலிருந்து(Gare l'est). அங்கே போய் ரயிலேறினோம். இரண்டு மணித்தியாலங்களின் பின் கண்விழித்தேன். பிரான்சின் நகர்ப்புறம் மறைந்து புல்வெளிகள் நிறைந்த நாட்டுப்புறம் கண்ணில் பட்டது.



சில மணித்தியாலங்கள் போனதும் ரயில் சுவிஸிற்குள் நுழைந்தது. எனக்கு எந்தப் பக்கம் படமெடுப்பதென்றே தெரியவில்லை..அவ்வளவு அழகு. இந்தப்பக்கம் பார்த்தால் பச்ச்ச்சைப் புல்வெளிகள், அந்தப்பக்கம் மலைகள். இரண்டு பக்கங்களிலும் பச்சை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, கருஞ்சிவப்பு என்று இலையுதிர்காலம் நிறந்தீட்டின இலைகளுடன் மரங்கள். கோடையிலும் பார்க்க இலையுதிர் காலத்திற்றான் இந்நாடு அழகாயிருக்கும் என்று தோன்றுகிறது. சிறு நீர்நிலைகளும் அவற்றில் மீன்பிடிப்பவர்களும் அவர்கள் வசித்திருக்ககூடிய பண்ணை வீடுகளும் எங்களைக் கடந்து போன காட்சிகளுள் அடங்கும்.

பாசல் நகரை அடைந்து அடுத்த ரயிலேறி - சுங்க அதிகாரிகள்/காவலர் எங்கிருந்து வருகிறோம், எங்கு நிற்போம், எவ்வளவு நாட்களுக்கு என்று கேட்டுவிட்டு உள்ளே சுவிசுக்குள்ளே விடுகிறார்கள் - வின்ரத்தூர் நகரை அடைந்தோம். தங்கியிருந்த வீட்டில் சுவிஸிலேயே பிறந்து வளர்ந்த இரு சிறு பெண்கள். நல்ல்ல்லாவே தமிழ் கதைக்கிறார்கள்/எழுதுகிறார்கள்
/வாசிக்கிறார்கள்.

ஒரு பாலர் பாடசாலைக்கு அடுத்த நாள் போனோம். வகுப்பில் எத்தனை பிள்ளைகளோ அத்தனை பேரின் தாய்மொழியிலும் 'வணக்கம்' என்று சொல்லி ஒரு வரவேற்புப் பாடல் ஒவ்வொருநாட் காலையிலும் படிக்கப்படுமாம். நல்லம் என்ன? பாலர் பாடசாலைகளில் கரல்ஸ் பாடிப் போகிற வழக்கம் இருக்கிறது. Turnip கிழங்கினை சிறு மூடியுள்ள ஒரு சட்டி போல வெட்டிக் கொண்ட பின் - கிண்டியெடுத்த கிழங்கின் உள்ளீடு அவித்து ஒரு சூப் மாதிரிச் செய்யப்பட்டு ஊர்வலம் போவதற்கு முதல் நாள் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் - அதற்குள் மெழுகுதிரி வைத்து ஊர்வலம் போவார்கள்.. வீடு வீடாய் கரல் பாடிக் கொண்டு. அநேகமானோர் இனிப்புகள் பரிசளிப்பார்களாம். நாங்கள் போன அன்று இருவரும் ஊர்வலம் போய் வந்திருந்தார்கள்.

போய் நின்ற நாள் முதல் அங்கத்தேய வெண்ணெய்க்கட்டிகளையும் சொக்கிளேற்றையும் ஒரு கை பார்த்தோம். :O) பிரபல காப்புறுதி நிறுவனமான வின்ரத்தூர் க்ரூப் இந்நகரத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டது. வின்ரத்தூரின் பிரபல தேவாலயத்தைப் பார்க்கக் கிடைக்கவில்லை. ஆனால் புனித தந்தையர் பேதுரு+பவுலின் ஆலயத்தைப் போய்ப் பார்த்தேன். நடந்து போகக்கூடிய தூரத்தில் இருந்ததும் தனி ஆராய்ச்சிக்குக் காரணம். ஆனால் கமரா பிழையான தெரிவில் விடப்பட்டிருந்ததால் அநேகமான படங்கள் தெளிவாக வரவில்லை. :O



அமைதியான ஆலயத்தைச் சுத்தஞ் செய்தபடி ஒருவர். சுவர் முழுதும் விவிலியத்துக் கதைகள் சொல்லும் ஓவியங்கள். அத்துடன் வேலைப்பாடுடைய உட்கூரை. சிறு உருவங்கள் (புனிதர்களாயிருக்கலாம்) அமைந்த stained glass windows. விட்டு வரவே மனமில்லை. நீர்வீழ்ச்சி பார்க்கப் போவதென்றிருந்தபடியால் மனமில்லாமல் திரும்பினேன்.

சுட்டிகள்:
www.eurorailways.com
www.raileurope.com
www.eurostar.com
www.busabout.com
www.eurolines.com
www.europeforvisitors.com

முதல் தரிப்பு -II


அடுத்ததாய்ப் பார்க்கப்போன இடம் - வர்சாய் அரண்மனை. சொல்லத்தெரியாமல் வர்சாய்ல்ஸ் என்று வாசித்துக் கொண்டு திரிந்தேன். வரைந்து நிறந் தீட்டின மாதிரிப் புற்தரை. இதைப் பராமரிக்க எவ்வளவு மினக்கட வேணும்! மூன்று பக்கங்களிலும் அரண்மனைத் தோட்டங்கள்.


பரிசிலிருந்து, தனது அரசியல் குழப்பங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டிருக்கவென்று வந்து தங்கியிருந்தானாம் 14ம் லூயி மன்னன். அப்படியே படிப்படியாகக் கட்டிக் கட்டி 2600+ அறைகளும் பென்னாம் பெரிய தோட்டங்களுமுள்ளதாக இந்த அரண்மனை உருவெடுத்திருக்கிறது.


நாங்கள் போன நாளன்று அரசியரின் அறைகளிலொரு பகுதி திறந்திருந்தது. அதன் முகப்பில் தங்க முலாம் பூசிய கடிகாரம். விட்டால் எல்லவற்றுக்குமே தங்க முலாம் பூசியிருப்பார்கள் போல! காட்சிக்கு விக்ரொறீ, அடிலேய்ட் என்ற இருவர் பாவித்த பொருட்கள் சில இருந்தன. அவர்களின் பாவனையிலிருந்த பெரிய ஓவியங்கள், கட்டில், பியானோ, புத்தக அலுமாரி, கண்ணாடி என்று பலவித பொருட்கள் காட்சிக்கு வைத்திருந்திருந்தார்கள்.









குளிர் காலமென்றாலும் கூட்டம். கோடைக்கு நினைத்தும் பார்க்கேலாது என்று எண்ணுகிறேன்.


தோட்டங்களில் வேலை நடந்து கொண்டிருந்தது. சிலைகளை மூடியிருந்தார்கள். பூச்சாடிகள் இரண்டு ஆளுயரமாய் . அவற்றையும் மூடியிருந்தார்கள். குளிர்காலத்தில் பனி படிந்து/தங்கி விடக்கூடும் என்பதால்.

பெரிய பெரிய நிலைகளும் அவற்றைச் சுற்றிச் சிலைகளும் என்று பார்க்கப் பார்க்க ஆசையாக இருந்தது.

குட்டிக் குளங்களுக்கு நடுவே சிலைகள். கால் நோகும் வரை தோட்டத்தில் உலாவினதில், மரத்தாசை பிடித்த எனக்கு நிறையப் படங்கள் எடுக்கவும் வாய்ப்புக் கிடைத்தது.





இலையுதிர் காலம்/குளிர்காலம் என்றதால் சில மரங்கள் மொட்டையாயும், சில நிறம் நிறமாய் இலைகள் கொண்டும்.. படமெடுத்துத் தீரவில்லை!

போன இரண்டாம் நாடு பற்றி அடுத்த பதிவாய்ப் போடுகிறேன்.

முதல் தரிப்பு

முதலாவதாய்ப் போன நாடு பிரான்ஸ். போதவே போதாத ஆறே நாட்கள். படிகளும் croissantsம் நிறைந்த பரிஸ். அவசரத்துக்குப் போவதானால் கூட 30சதம் கொடுத்தாக வேண்டும் பொதுவிடங்களில். இப்படியே உழைத்து பெரும்பணக்காரராய்விடலாம் போல! பரிசில் கண்ட இன்னுமொன்று எல்லா வீட்டுக்கும் ஒரு குட்ட்ட்டி பலகணி இருப்பதுதான். ஆட்கள் நிற்கமுடியாது.. ஆனால் பூந்தொட்டிகள் உட்காரலாம்.


வழமையாக எல்லாரும் பார்கிற ஐபல் கோபுரம் பார்க்கப் போனோம். எனக்குத் தேவையாயிருந்த மாதிரி - நான் கோபுரத்தின் உச்சியைத் தொடுவது போல - படமெடுக்க என்னோடு சேர்ந்து வந்த இரண்டு படக்காரர்களாலேயும் முடியவில்லை. தடை செய்யப்பட்டிருந்தாலும், வளையத்தில் கோர்க்கப்பட்டிருக்கும் உலோகத்தாலான கோபுரச் சிற்றுருவங்களை 'சல் சல்'லென்றுபடி ஆட்டியபடி வழி மறிக்கும் சிறு வியாபாரிகள் நிறைந்திருந்தார்கள். பழங்காலத்தைய சிற்பங்கள்/சிலைகள்.

சுழித்துக் கொண்டோடும் 'சுகந்தமான' செய்ன் நதியைக் கடந்து போய் தொடர்ந்து வளைக்கும் 'ஸ' போல நெளிந்த வரிசையில் நுழைவுச் சீட்டு வாங்க சேர்ந்து கொண்டோம். நகர்ந்து போன வரிசையில் திடீரென ஆங்கிலம் கேட்டது - அதுவும் ஒஸி வழக்கில். எனக்கா இனியில்லையென்ற மகிழ்ச்சி. போன இரண்டு நாட்களுக்குள் பொறுக்கின 'bon jour', 'au revoir' 'merci', 'madamme', 'monsieur' என்பவற்றை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாத ஆளுக்கு தெரிஞ்ச இங்கிலிபீசைக் கேட்டால் சொல்லவும் வேணுமா!! ஹொக்கிப் போட்டியொன்றுக்காக வந்திருந்த 4 பெண்கள். நல்லா அளவளாவி, போட்டிக்கு ஊக்கப்படுத்தி விடைபெற்றோம்.


கோபுரத்திலே மேலே ஏறினால் படமெடுக்க பொக்கற்றிலிருந்து கையை எடுக்க முடியவில்லை. குளிரோ குளிர். ஆனால் என்ன காட்சி.. நெப்போலியன் கோட்டை/அணையாவிளக்கு,
வெள்ளைத் தேவாலயம், லூயி மன்னனின் கோட்டை எல்லாம் தெரிந்தன.





[பரிசில் நடந்து கொண்டே இருக்கலாம் போல. cobble stone பாதைகளில் பழங்காலத்தைய வாழ்க்கை முறைகளைப் பற்றிப் பேசியபடி, அகலமான பாதைகளைச் செப்பனிட்டவர்களைப்பற்றிச் சிந்தித்தபடி நடந்தோம். வழமையாய்ப் பார்க்கும் நிறங்களிலான வானம்தான்.. பார்க்க ஆசையாய் இருந்தது. வீசும் காற்றிலே கிளையிலிருந்து தரைக்கு இடம் மாறும் இலைகள்; தரையிலேயே இடம் மாறித்திரியும் சருகுகள்(ஆனால் நாளைக்காலையில் தெருவில் அவை இரா). தொடர்ந்து நடக்கச் சொன்ன இருபுறமும் மரம் வளர்த்த தெருக்கள். நடப்பதற்காகவே இன்னொருமுறை போக வேண்டும்.முதல் முதலாய்ப் போகும் ஆர்வத்துடன்.]

அன்றைகே வெள்ளைத் தேவாலயமும் போகக் கிடைத்தது. நகரின் உயரமான இடத்தில் அமைந்திருக்கிறது. அதன் பெயர்:La Basilique du Sacré Coeur.

வெள்ளைக் கட்டிடடமென்பதால் 'வெள்ளைத் தேவாலய'மாக்கி விட்டார்கள். வழமையாய் என்னை நிற்கச் செய்யும் stained glass windows. என்னதொரு கூரை.. 25 - 30 ஆள் உயரமிருக்கும். உள்ளுக்குள்ளே சலன/ஒளிப்படமெடுக்க அனுமதியில்லை. நிறைய ஓவியங்கள். கூரையில் பென்னாம்பெரியதொரு ஓவியம். பிறரால் உருக வைகப்படவென்றே மெழுகுதிரிகள்.

ஆலயத்தின் மாதிரி உருவைச் செய்து வைத்து "உங்கள் ஆலயத்தின் தண்ணீருக்கும் மின்சாரத்துக்கும் உதவுங்கள்" என்று தமிழ் உட்பட 15 - 20 மொழிகளில் எழுதி வைத்திருந்தார்கள். எல்லாம் தாண்டி வந்ததும் ஒரு ஒரு வேண்டுதல்/பிரார்த்தனைப் புத்தகம். தமிழில் கூட இருந்தது - கிடைத்திருக்கிற ஆசீர்வாதங்களுக்கு நன்றி சொல்லி, பிள்ளைக்கு நடக்கவிருக்கிற திருமணத்திற்கு ஆசி வேண்டி என்று பலதரப்பட்ட வேண்டல்கள், இறைஞ்சல்கள். மனதில் சொல்லக்கூடியதை 'வணக்கம் கடவுளே' என்று நானும் தாளையும் மையையும் வீணாக்கி வெளியேறிய பிறகுதான் ஞாபகம் வந்தது ஏனையோர் போட்டதுபோல முகவரி போடாமல் வந்தது. அடடா..யார் வணக்கம் சொன்னதென்று யேசு யோசித்திருப்பாரோ?

பயணியின் குறிப்புக்கள்

காணவில்லையென்று தேடின கனபேரின்.. சரி சரி.. மூன்று பேரின் அன்புக்கு நன்றி.

இங்கே கோடை ஆரம்பிக்க உலகத்தின் வடபாதியில் குளிர்காலம் ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட ஒரு கார்த்திகை மாதத்தில் அமைந்தது என் வாழ்வின் முதலாவது பெரிய (பள்ளிக்காலம் தவிர்த்த) விடுமுறை & பயணம். பயணிப்பது ஒரு கலை. முதன்மையான அடிப்படைப் பாடங்கள் சில இப்பத்தான் கற்றிருக்கிறேன். இலக்கின்றிப் போக வேண்டும் என்கிற ஆசையிருந்தாலும், இந்த முறை இலக்கு வைத்துத் தான் புறப்பட்டோம். எனக்கும் ஒரு ஞாபகமாய் இருக்கட்டுமென்று நினைத்து
க் குறிப்பேடொன்றைக் கொண்டலைந்தேன். ஆனாலும், எப்பொழுதும் நடப்பது போல அரைகுறை வேலைதான். கடைசி 11 - 12 நாட்கள் பதியப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னாலெல்லாம் போன இடம் வந்த இடமென்றும் அந்த நாட்களில் என்ன நினைத்துக் கொண்டேன், எதைப் பற்றி சிந்தித்தேனென்றும் எழுதியிருக்கிறேன். ஒவ்வொருதாளாய் படமெடுத்து வலையேற்றலாமோவென்று யோசித்து, வேண்டாமென்று, நான் மிகவும் ரசித்த இடங்கள் பற்றிய என் குறிப்புகளை மட்டும் படங்களுடன் வலையேற்றுகிறேன்.

இடம் பார்த்ததை விட ஆட்கள் பார்த்ததுதான் அதிகம் என்றாலும் ஐந்து வாரங்களில் மொத்தம் 6 நாடுகளில் திரியக் கிடைத்தது. அதிலே எப்படியும் 7 நாட்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் பயணிப்பதிலேயே கழிந்து விட்டன. ஆக நான்கு வாரங்களில் ஆறு நாடுகள். நினைத்த வலைப்பதிவர் சந்திப்புகளில் ஒன்றைத்தான் நிறைவேற்ற முடிந்தது. ஆனால், அந்தக் கதைக்கு அவரது நாட்டுக்கு வரும் வரை பொறுக்க வேண்டும். :O)

வழமையாக உல்லாசப்பயணிகளின் காலடி பட்டுத் தேய்ந்து போன தெருக்களினதும், சில முக்கிய இடங்களினதும் விருந்தினர் வரிசையிலே நாங்களும் இணைந்து கொண்டோம். உல்லாசப் பயணித் தடம் நிரம்பாத இடங்களையும் பார்த்தோம். இயற்கையை ரசித்தபடியும், வியந்தபடியும் கழிந்த பயணங்கள். பாரிஸில் நின்ற போது சின்னையாவிடமிருந்து (மூதூர்த் தோட்டத்தில் வேட்டையாடப் போவாராம்.. அந்தக்காலத்தில்) உக்கிளான் என்கிற சிறு மான் வகை பற்றி அறிந்து கொண்டேன். நண்டு பிடிக்கப் போகிற கதை சொன்ன போதும் ஒரு புதுச் சொல் அறிந்து கொண்டேன்.. ஆனால் பிறகு மறந்து விட்டது. அவரிடம் கேட்டால் என்ன சொன்னாரென்று அவருக்கும் ஞாபகமில்லை.

மனித இயல்புகள் & வாழ்வைப் பற்றியும் காலவோட்டம் பற்றியும் கூட நிறையக் கற்றுக் கொண்டதொரு பயணமாக இருந்தது. பயணிக்கும் போது மனதைத் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். உள்ளே நுழைந்து இனிதாய் நிறைக்கும் அனுபவங்கள் எதிர்பாராதனவாய் இருக்கும். அட! என்று வியந்து நின்று நிதானமாய் அனுபவிக்கிற நாட்கள் நீண்டு கொள்ளும்.

எப்போதுமே ஏதோ ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்று கொண்டுதானே இருக்கிறோம்?
வாழ்வதே பயணிப்ற்குத்தானோ என்றும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன். :O)

ஆசை ஆசை இப்பொழுது!

முதலில், என்னைப் போலவே ஆசைகளையுடைய கறுப்பிக்கு அவ எழுதின "கனவு" பதிவுக்காக பெரீய்ய்ய்யதொரு நன்றி. இந்த மாதிரி ஆசைகள் எனக்கு மட்டும் தான் இருக்கும் என இவ்வளவு நாளும் naive ஆக நினைத்துக் கொண்டிருந்த என்னை 'அப்படியல்ல' என்று உணர வைத்ததற்கு!

கறுப்பியைப்போலே எனக்கும் ஆசை..இலங்கையையும் இந்தியாவையும் அலுக்கும் வரை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று. இதைப்போலவே இன்னும் ஆசைகள் இருக்கு. நனவாக்குவது எந்தளவுக்குச் சாத்தியப்படும் என்றுதான் தெரியவில்லை. அம்மா ஆட்டுக்குட்டி என்று பிள்ளைகள் வாலைப்பிடிக்க முன்னம் இவற்றைச் செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் அவர்கள் வளர்ந்த பிறகுதான்!(பிள்ளைகள் கட்டாயம் பிறக்கும்..வாலைப்பிடிக்கும் என்று நினைப்பது நான் வளர்ந்த பின்னணியின் default எண்ணங்களில் ஒன்றா??)

தொல்பொருள் ஆராய்ச்சியிலும், பழங்கால அரண்மனை/கோயில்/குகை/சிற்பம்/கல்வெட்டு இதெல்லாம் பார்ப்பதிலும் ஈடுபாடு அதிகம். சரித்திரக் கதைகள் வாசித்தது இந்த ஆசைகளை அதிகரித்து விட்டது. பார்க்க வேண்டும் என்று நினைக்கும் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தொ.கா.பெட்டியில் இது சம்பந்தமாய் டொக்யுமென்ட்ரி போட்டார்களோ..அந்தப் பொழுதில் அதைப் பார்ப்பதைத் தவிர வேற வேலை ஒன்றும் நடவாது. நிறைவேற்றக் கடினம் அல்லது இன்னும் கொஞ்சம் காலம் தேவை என நான் கருதும் என் ஆசைகளை (இப்போதைய நிலவரப்படி) பட்டியலிட்டால்:

1. நாடுகள் சுற்றிப்பார்க்க வேண்டும்
2. இலங்கையில் சைக்கிளில் திரிய வேண்டும் + இடங்கள் பார்க்க வேண்டும்
3. இந்தியாவில் காலவரையறையன்றி சுற்றிப்பார்க்க வேண்டும்
4. தொல்பொருளாராய்ச்சி நடக்கும் இடத்தில் தங்கி, ஆராய்ச்சிக்குழுவில் இடம் பெற வேண்டும் (புதிதாய் எதாவது கண்டுபிடித்தல் மிகவும் விரும்பப்படும் :o)

மிக மிக முக்கியமாக: இவையெல்லாவற்றுக்கும் போதுமானளவு $$ வேண்டும்!! ;o)

எனக்குள் ஒரு கேள்வி. அதைக்கேட்க முன்:
எனக்கு - ஒரு வீட்டிலோ, யுனிற்/அப்பார்ட்மென்டிலோ - தனியே /என் நண்பிகளுடன் தங்கி வாழ வேண்டும் என்று ஒரு ஆசை இருந்தது(இப்பவும் சில வேளை தலை தூக்கும்!). ஆனால் அதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. திருமணம் முடித்து வெளிநாடு வந்துமாயிற்று. ஆசை எட்டிப்பார்க்கும். என் ஆசையை வாழும் , இங்கைத்தேய நண்ப நண்பிகளை பொறாமையுடன் பார்க்க வைக்கும். எனக்கும் அப்பிடி அவர்களைப்போல இருக்க ஒரு சந்தர்ப்பம் வந்தது. கணவர் கனடா போக வேண்டிய தேவை ஏற்பட்டது. 20 நாட்கள். ஆசை நிறைவேறிற்று. எப்படியெல்லாம் இருக்கும் என்று கற்பனை செய்தேனோ அப்படியே இருந்தது. சந்தோசமாக உணர்ந்தேன். அதற்காக திருமணவாழ்க்கை பிடிக்கவில்லை என்பது அர்த்தமல்ல. குடும்பத்தினரோடு கழிக்கும் நேரம்/ வாழ்க்கை தந்ததை விட நான் தனியே இருந்து சுதந்திரமாகச் செயற்பட்டது எனக்கு வித்தியாசமானதொரு அனுபவத்தைத் தந்தது. முக்கியமாக, நான் குறிப்பிட்ட எதையும் செய்யும் போது இன்னொருவரைக் கருத்தில் கொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை. அவருக்கு வசதிப்படுமா..விருப்பமான activity ஆக இருக்குமா என்றெல்லாம் யோசிக்காமல், carefree யாக இருக்க, எனக்கு விருப்பமானதெல்லாம், விரும்பியபோதெல்லாம் செய்யவும் முடிந்தது.( அடிப்படையில் சொல்லப்போனால் பொறுப்புகளற்றிருப்பது!)

சரி கேள்விக்கு வருகிறேன்: எந்த இடமாகவோ பயணமாகவோ இருந்தாலும், தனித்து அதைப் பார்க்க/பயணிப்பதற்கும் கூடவே இன்னும் ஆட்களுடன் பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கும். அனுபவம் கட்டாயம் வேறுபடும். நினைத்த மாத்திரத்தில் பயணம் கிளம்புவது சாத்தியமாவதில்லை. திருமணமானோர் பாடு கேட்கவே வேண்டாம்..பயணி தன்னை மட்டுமல்லாது குடும்பத்தவரையும் கருத்தில் எடுக்க வேண்டிய தேவை (மிகச் சிலரைத்தவிர) இருக்கிறது. தனி அனுபவம் பெற விரும்பும் ஒருவருக்கு (கறுப்பி / என்னைப் போல!) தனித்திருப்பதுதான் இதற்கு தீர்வாக முடியுமா? அல்லது ஆசைகளின் நிறைவை, கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி அதன் மூலம் பெறலாமா?

பயணங்கள் முடிவதில்லை

எழுதுற பைத்தியம் விட்டுவிட்டது நாம் தப்பினோம் என்று நினைத்தவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். கொஞ்சம் இடைவெளி விட்டா இப்பிடியெல்லாம் மனக்கோட்டை கட்டக் கூடாதுங்கோ! ;o)

ஜூலையில் போகவிருந்து (Country linkக்கு $240 தானமளித்து)தடைப்பட்ட மெல்பேர்ண் பயணம், சாமத்தியப்பட்ட மருமகளின் புண்ணியத்தில் நிறைவேறிற்று. கணவருக்கு வெள்ளி இரவு விரிவுரைஇருந்தபடியால் விழா நடக்கும் நாளன்றே(சனிக்கிழமை) காலைபுறப்பட்டு அன்றிரவே திரும்புவதாக திட்டமிட்டு விமான பயணஒழுங்கெல்லாம் செய்தோம். காலை 11 இலிருந்து மதியம் 2 வரை விழா. விமானம் புறப்படும் நேரம் காலை 6 மணி. போய்ச்சேர 1 1/2மணித்தியாலம் எடுக்கும். வீட்டிலிருந்து 40 நிமிட ட்ரைவ்+புறப்பட 45 நிமிடத்திற்கு முன்னர் வி. நிலையத்தில் நிற்க வேண்டியது என எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு காலை 3 மணிக்கு அடியேன் எழுந்திருக்கவேண்டி ஏற்பட்டது. முதல் நாளே கொண்டு போக வேண்டிய பொருட்களை எடுத்து வைத்து விட்டதால் பிரச்சனை இருக்கவில்லை. குளித்துவெளிக்கிட்டு கணவரை எழுப்பி வெளிக்கிட வைத்து வழமையான் தேநீர் ஊற்றுதல்+சாமான் எல்லாம் வைத்தாயிற்றா என்ற சரி பார்த்தல்களுடன் நேரம் கழிந்தது.

வீட்டிலிருந்து புறப்பட்டு விமான நிலைய நீண்ட கால தரிப்பிடத்தில் கார் நிறுத்தி 15 நிமிடத்திற்கொரு முறை வரும் Shuttle பேருந்துக்குக் காத்து நின்றோம். ஒரு குடும்பம் வந்தது. 3பையன்களும் அம்மா அப்பாவும். "Come here darling" - சின்னவனைத் (2 - 3வயது)தூக்கி மடியில் இருத்திக் கொண்டா அம்மா. அவன் நழுவி விடுபட்டுஅப்பாவிடம் ஓடிச் சென்றான். அம்மாவுக்கு யாரையாவது தூக்கிவைத்திருக்க வேண்டும் போல..2ம் மகனைக் கூப்பிட்டு "You can't be warm in that" என்று சரியாக இருந்த ஜக்கெற்றைச் சரி செய்து மடியில்இருத்தி கொண்டா. சற்றே வெட்கத்தில் நெளிந்தாலும் தாயின்மடியிலேயே இருந்து கொண்டான். பேருந்து வந்தது. விமான நிலையத்தில் வழமையான பாதுகாப்பு பரிசோதனை. ஒரு மெட்டல் டிடெக்டருக்கூடாக போகவேண்டுமல்லவா..நானும் போனேன்....யப்பா..கீக் கீக் என்று ஒருஅலறல்.பாதுகாப்பு அதிகாரி பயந்து போனார். ஏதாவது உலோகசாமான் அணிந்திருக்கிறாயா என்று கேட்டார்..தாலிக்கொடியையும் தாலிகோர்த்திருந்த சங்கிலியையும் கழற்றி அவர் கையில் கொடுத்து விட்டுமறுபக்கம் வந்து வாங்கிக்கொண்டேன். "நீர் தாலி கோர்த்திருந்த சங்கிலியை கழற்றியிருக்கத் தேவையில்லை. எங்கட கல்ச்சர் படி நான் கழற்றக்கூடாது என்று சொன்னால் அவை உம்மள force பண்ண ஏலாது" என்றுஎன் பாதி மொழிந்தார். (எனக்கு இதிலெல்லாம் பெரிய "இப்பிடித்தான்செய்ய வேணும், இது செய்யக் கூடாது" கள் இல்லை) பாதுகாப்பு அதிகாரிதனது கடமையை செய்ய நான் ஒத்துழைத்தேன்..அவ்வளவுதான்.(உங்கள் கருத்து என்ன?கழற்றலாமா..கூடாதா??)

பயணம் இனிதாக இருந்தது.கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்குப் பின்னான விமானப் பயணம். வி.பயணம் ஒரு தனி சுகம்தான்.. இல்லையா??

விமானம் தரையிறங்கி நாங்கள் வெளியில் கால் பதித்தோம் ஒரு மணம் மூக்கைத் தாக்கியது. என்னடா மணக்குது என்றால்..பச்சைப் புல்!! மெல்பேர்ணின் பிரதான வி.நிலையமன்றி இது இன்னுமொரு சிறிய வி.நிலையம். கட்டடத்துக்குள்ளே வந்து முன்பதிவு செய்த வாகனத்தின் சாவியை பெற்றுக்கொண்டோம். (இணையம் எவ்வளவு வசதிகளை அளிக்கிறது!!). வாகனம் தேடி கதவு திறந்து சில்ல்ல்லென்ற காலைக்குளிருக்கு இதமாய் சூடு பரவ பயணமானோம். டன்டினொங் வந்ததும் அவளுக்கு என்ன கொடுப்பது என்ற பிரச்சனை மீண்டும் தலை தூக்கிற்று. காசு குடுப்பம், விருப்பமானது அவள் வாங்கட்டும், சின்னப்பிள்ளை தானே- இது நான். கணவரோ " நீங்க அத்தை. நகை கொடுக்கிறது தான்பெட்டர்..மற்றது நகையெண்டா வச்சும் பாவிக்கலாம் தானே". இங்கே ஒன்று சொல்ல வேண்டும்..எனக்கும் தங்க நகைக்கும் எட்டாத தொலைவு. ஏனோ வெள்ளி, தகர(இமிட்டேஷனை அம்மா அப்படித்தான் சொல்வா) நகைகளிலிருக்கும் ஆர்வத்தில் துளிதானும் தங்கத்தில் இல்லை. சரி..ஒருமாதிரியாக காசே கொடுப்பதென்று தீர்மானித்து அண்ணா வீடு நோக்கிச் சென்றோம். அழகாய் கோலம் அணிந்து வாசல் வரவேற்றது. அன்பளிப்பைக் கொடுத்து கொஞ்சி விட்டு வெளிக்கிடப் போனேன். ஏற்கெனவே பிளீற்றுகள் எடுத்து மடித்ததால் ..யுரேக்கா!! பிளீற் பிரச்சனை -இல்லவே இல்லை. புறப்பட்டோம் மண்டபத்துக்கு. விழா பற்றி அண்ணா சொன்னதிலிருந்து 2 ஆச்சரியங்கள் எனக்கு.
(1) நிவேக்குட்டி(இந்தமருமகள்)இந்த வெளிக்கிடுதல்கள், மண்டபத்தில்விழாவைத்தல்களுக்கு விரும்பி ஒத்துக் கொண்டது (2) சாமத்தியச் சடங்கு மண்டபம் எடுத்து கொண்டாடும் அளவில்இருப்பது. (ஏன் பழங்காலத்தில் பெரிதாய் விழாவெடுத்துக்கொண்டாடினார்கள்..அந்தக் காலத்தில் அதற்கான தேவை என்பவற்றையெல்லாம் எம்மக்கள் வசதியாக மறந்து விட்டார்கள் போல)
சரி.. விழாவில் அத்தையையும் பெரிய மனுஷியாக மதித்து ஆராத்தி எடுக்கச் சொன்னார்கள். அத்தைக்கும் சந்தோசம்..வடிவாய் எடுத்தா. நன்றாக நடந்தது விழா. என் கணவரும் அண்ணாவும் ஏதோ தேவைக்காக வெளியில் சென்றிருந்தார்கள். தூரத்து உறவினரான ஒரு அண்ணாவிடம் கதைத்துக் கொண்டிருந்தேன். அவரது தங்கைகளும் நானும் நல்ல தோழிகள்.இவரும் நல்ல முஸ்பாத்தியாக கதைப்பார். திருமணம் நிச்சயமாகினது பற்றி, கிட்டடியில் ஊர் போய் வந்தது பற்றி மற்றும்பல விஷயங்களும் சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தோம். ஆனாலும் இருவரும் மறந்து விட்டோம் தமிழனுக்கு குறுக்குப் புத்தியுண்டு என்று!விழா முடிந்து எல்லாம் ஒதுக்கி வைத்து ஆறி அமர்கையில்அதிலிருந்த மாமிகள் இன்னொருவரது சேலையைப்பற்றியும் தத்தமதைப்பற்றியும் மும்முரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.பக்கத்திலிருந்த அக்கா/மாமிஅந்த அண்ணாவைக் காட்டிக் கேட்டா "அவர் உங்களுக்குஎன்னமுறை?அண்ணையோ?". சிரிப்பு வந்தது. இல்லை..தெரிந்தவர் என்றுசொல்லி இன்னும் குழப்பிவிட குறுக்குப்புத்தி யோசித்தது. வாய் "ம்ம்..அண்ணாமுறைதான்" என்றது. மாமி சொன்னா "அப்ப சரி".

அட இதை மறந்து விட்டேனே..மத்தியான சாப்பாட்டு நேரத்தில் கணவருடன் மேல் குறிப்பிட்ட அண்ணா, சந்திரன் அண்ணா,அவரது துணைவி & இன்னும் 3 -4 பேருடன் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் அண்ணாவையும் கணவன் - மனைவி என தவறாகப் புரிந்துகொண்டாவாம் என்று ஒரு மாமி சொல்ல அவவின் தோழி என் கணவரைப் பார்த்து"அப்ப உங்களுக்கு நல்லம் என்ன..வேற பெட்டைகளைப் பார்க்கலாம்" என்றா.என்னவருக்கு "ஏறி" விட்டது. ஆனாலும் அடக்கிக் கொண்டு சீ..எனக்கு என்ரமனிசி போதும்" என்றார்.

விழா முடிந்து வீட்டுக்கு வந்ததும் நான் தூ.உ.அண்ணாவிடம் அந்த மாமி, இவர் என்ன முறை எனக் கேட்டதைச் சொன்னேன். சிரிசிரியென்றுசிரித்தார். பிறகு அவ ஏன் அப்படிக் கேட்டா என்பதன் காரணத்தைச் சொன்னார். அவ அந்த அண்ணாவுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் பெண்ணின் உறவினராம். "தன் உறவினப் பெண்ணைக் கட்டப் போகிறவன் என்ன இன்னோருத்தியோடு சிரித்துக் கதைக்கிறானே" என்ற அக்கறையாம்!! இப்பிடியான கூத்துகளுடன் நன்றாகக் கழிந்தது நாள். கணவரது நண்பர் கனடாவிலிருந்து குடி பெயர்ந்துள்ளார். அவரையும் எங்களின்மெல்பேர்ண் விசிற்றில் அடக்கத் திட்டமிட்டு அங்கே சென்றோம். இரவுச்சாப்பாட்டிற்கு நிற்கவில்லை, அவர்களுடன் செலவழித்த நேரம் காணாது என்று ஒரே முறைப்பாடு. அங்கிருந்து விமான நிலையத்திற்குச் சென்றால் செக்-இன் முடிந்து 12 நிமிடங்கள் ஆகி விட்டது. பயணச்சீட்டில்குறிப்பிட்டிருந்தார்கள் 30 நிமி.க்கு முன்னமே வந்துவிடும்படி. அதையார் பார்த்தது! கணவரோ காரை ஒப்படைக்க பக்கத்துக் கட்டடத்துக்குப் போய் விட்டார். எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் பணிப்பெண் மசியவில்லை. அவளது நிலையும் எனக்கு விளங்கியதால் சரியென்று விட்டுவிட்டு அருகிலிருந்த கதிரையில் அமர, கணவரும் வந்து என்னிடம்விஷயமறியவும் சரியாக இருந்தது. அவளிடம் ஏற்கெனவே நான் முன்னெச்சரிக்கையாக சொல்லி வைத்ததால் என்னவரின் சாம பேத தண்ட உபாயங்களையெல்லாம் இயல்பாகக் கையாண்டாள் அப்பெண். பிறகென்ன..உபரியாக $164 கட்டி மறுநாட் காலை பயணத்திற்குப் பதிவு செய்து, மீண்டும் கார் எடுத்து நண்பர் வீடு நோக்கிப் பயணித்தோம். காலையில் தவறவிட்ட ஓர் விளம்பரம் கண்ணில் பட்டது.(அதை சொல்ல முதல் 3 விஷயம். நாங்கள் போன வி.நிலையத்தின் பெயர் Avalon. நகரிலிருந்து 30 நிமிடம் தள்ளி உள்ளது.இங்கே அவுஸ்திரேலியாவில் Have *** (அட.. wild card!) என்பதை ஸ்லாங் ஆக "avva*** என்பார்கள். உதாரணத்துக்கு: have a good day என்பது 'avva good day" ஆக மாறும்.)

இதுதான் விளம்பரம்: "Avalong flight ahead?next time fly Virgin Blue"

தலைக்கு மேலே ரொம்ப ப்ரைட்டாக பல்ப் ஒளிர்ந்திருக்கு!!

நண்பர் வீடு வந்து, பலகதை பேசி இரவல் இரவாடையில் படுக்கப் போகையில் 12 மணி. 5 மணிக்கு (ஞாயிற்றுக்கிழமையிலும் சாமம் வழியே எழும்ப வேண்டி இருக்கு!!) எழும்பி குளித்து வெளிக்கிட்டு, சரியான நேரத்துக்கு வி.நிலையம் வந்து, உலோகப் பறவையில் ஏறி, சிட்னியில் தரையிறங்கினோம். சிட்னி விமான நிலையத்திலேயே காலையுணவை முடித்துக் கொண்டு ஷட்டில் பஸ் எடுத்து நீ.கா.த.இலிருந்து காரெடுத்து அவனுக்கு $30 அழுது, வீடு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் அத்தானோ கல்லுப்போல உறுதியாய் இருக்க மெல்லியலாள் (என்ன சிரிப்பு?ம்ம்??) நான் பாழும் Flu க்கு விருந்தோம்பினேன். நேற்றுத்தான் கொஞ்சமாய் மீண்டு வந்து வேலைக்குத் திரும்பியுள்ளேன்.

பி.கு: பவித்ரா போல எனக்கும் தொடர் எழுத (90% மொழிபெயர்ப்புத்தான் என்றாலும்) வார்த்தை முட்டுது. நேரமும் வார்த்தையோடு சேர்ந்து கொண்டு இரட்டை முட்டு!! என்றாலும்..ஒலிம்பிக் தேசம் வரும்....வரும்..வரும்..வரும்..வரும்.வரும் வரும் வரும்வரும்வரும்.....


பெட்டகம்