இருந்து பேசிக் கொண்டிருந்த போது மாமா கதைகள் சொல்லிக் கொண்டே போனார். ஒரே சிரிப்புத்தான். கூடவே இரண்டு புதிர்கள் சொன்னார்... மண்டையை உடைக்காத குறைதான். விடைகள் தெரியவில்லை.. நீங்களாவது சொல்லுங்களேன் (உங்கட புண்ணியத்தில நான் 'கெட்டிக்காரி' என்று பெயரை வாங்கிக் கொள்கிறேன்):
முதலாவது வலு எளிமையான கூட்டல்-கழித்தல் கணக்கு என்றார்.
"29 இல் 32 போனால் எவ்வளவு?"
-3, 29ல 32 போகாது இவையிரண்டும் தான் எங்கள் விடைகளாயிருந்தன. ஆனால் அந்த இரண்டும் பிழையாம். சய (-) இல்லையாம், சக (+) தானாம். 29ல 32 போகுமாம்.. (எங்க போகுமெண்டு கேட்கக் கூடாது)
இரண்டாவது கொஞ்சம் நீட்டுக் கதை.. புதிர் கடைசியில.
ஓர் ஊரில ஒரு குடியானவன் இருந்தானாம். அவனுடைய மனைவி இனியில்ல எண்டளவு சோம்பேறியாம். (backgroundல யாரப்பா அது....ஷ்!!!!)
குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தாவென்டு கேட்டால் "இப்பத்தான் வேலையெல்லாம் முடிச்சு வந்து கதிரையில குந்துறன்.. எழும்ப வைக்கிறீங்களா!" என்பாவாம்.
திருவாளர் குடியானவன் பார்த்தார்..இது வேலைக்காகாது என்டு, ஒரு வேலைக்காரியை கொணர்ந்தாராம். மனைவிக்கும் ஒரே சந்தோசமாம். என்ன வேலை சொன்னாலும் விரைவாய் முடித்தாளாம். போய் அரிசியைக் களைந்து உலை வை என்றாராம் மனைவி. ஒரே நிமிடத்திலே வந்து நின்றாளாம் "ஆச்சு!" என்று. மனைவிக்கோ வியப்பு. சரி அரிசி வெந்ததும் கஞ்சி வடித்து விட்டுச் சொல்லு என்று பாயிலே சரிந்தாராம் குட்டித் தூக்கத்துக்கு. படுத்துக் கண்ணை மூடவில்லை .. "ஆச்சு அம்மா". மனைவிக்கோ சந்தேகம். போய்ப்பார்த்தால் சோறு அவர் கேட்ட மாதிரியே. இப்படியே என்னத்தைச் செய்யச் சொன்னாலும் நிமிஷமாய் முடித்து விட்டு முன்னால் நின்றாளாம். தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டேஏஏஏ இருக்க வேண்டும். குடியானவன் மனைவிக்குச் சந்தேகம் - இவளைப் பார்த்தால் சாதாரணமாய்த் தெரியவில்லை என்று. கணவனிடம் சொன்னாளாம் தன் சந்தேகத்தை. அவன் மனைவியிடம் கலந்தாலோசிப்பது போலச் சொன்னானாம் "வயல் உழ உதவிக்கு யாருமில்லை.. பெண்ணே உனக்கு உழத்தெரியுமா? நாளைக்காலைக்கிடையில் நாற்றையும் நட்டுவிட வேண்டும்" என்று. ஆமென்று தலையாட்டிய வேலைக்காரி அடுத்த ஐந்தாம் நிமிடம் "ஆச்சு ஐயா" என்றாளாம். இவனுக்கும் சந்தேகம் பிடித்துக் கொண்டது.
இப்படி இருக்கையிலே குடியானவன் வெளியூர்ச் சந்தைக்குப் போக வேண்டி வந்ததாம். வேலைக்காரியிடம் சொன்னானாம் "அம்மாவைப் பார்த்துக் கொள் நான் நாளைக்கு வந்து விடுவேன்". அவனும் போயாச்சு. இரவு இவர்களிருவரும் விளக்கின் திரி குறைத்துப் படுக்கையில் விழுந்தார்கள். மனைவிக்குத் திடீர்ச் சந்தேகம், கதவுக்குத் தாழ்ப்பாள் போட்டதாவென்று. "ஏடி, கதவுக்குத் தாழ்ப்பாள் போட்டதா?" .. கேட்கிறாள். வேலைக்காரிக்கோ தூக்கக் கலக்கம். எழுந்து பார்க்கச் சோம்பலில் (வீட்டுக்காரம்மாவுடன் கொஞ்ச நாளாய் இருக்கிறாளில்லையா.. பழக்க தோசம் போல!) கையை நீட்டுகிறாள். கை நீண்ண்ண்ண்டு போய் கதவுத்தாழ்ப்பாளைத் தடவிப்பார்க்க, வாய் சொல்கிறது, "ஆமாம்மா .. போட்டுத்தான் இருக்கு". கை நீண்டு போனதை குடியானவன் மனைவி அந்த மங்கல் வெளிச்சத்திலும் கண்டு விட்டாள். இது ஏதோ பேயென்று அவள் புரிந்து கொண்டாள். விடியும் வரையும் தூக்கமில்லை. பயம். கணவன் வரும் வரை பார்த்திருந்து அவன் வந்ததும் பிடித்துக்கொண்டாள். (முதலே பிடிச்சதுதானே என்றெல்லாம் சொன்னா நான் அழுதுருவேன்!)
அவனும் பேயைத் துரத்த என்ன வழி / என்ன வேலை கொடுத்தால் பேய் திரும்ப வராது என்டு யோசித்தானாம். பேயாகிய வேலைக்காரியைக் கூப்பிட்டானாம்.. "இந்தா, அம்மாவின் ஒரு தலைமுடி. இதை நெடுக்குவாக்கில் இரண்டாய்ப் பிளந்து கொண்டுவா". வேலைக்காரியும் அதைக் கொண்டு அடுப்படியில் போய் உட்கார்ந்தாளாம். பிரித்தாளாம் பின் கைகள் தட்டுவது (clapping) போல செய்து திரும்ப பிரித்தாளாம் (மாமா செய்து காட்டினார், முடிந்தவரை விளக்கமாய் எழுதியிருக்கிறேன்) .. இப்படியே இன்று வரை செய்து கொண்டே இருக்கிறாளாம்.
புதிர்: அவள் என்ன செய்கிறாள்? ஏன் குடியானவன் கேட்டதைச் செய்து முடிக்க முடியாமற் போயிற்று?
.... சொல்லுங்கப்பா!!! இல்லாட்டி என் தலைமுடிதான் போயிடும்!
புதிர்க்காலம்
வகை: புதிர் , விளையாட்டு
நான் பார்த்த கூத்து!
இன்டைக்கு மட்ச், டிவியப் போடு
நல்லகாலம் ஞாபகப்படுத்தினாய்... நான் போடுறன் நீ ****க்கு அடிச்சு அவனை வரச்சொல்லு.
மூன்றாமவன்: "ஏன் அடிக்கப் போறீங்க ..நோகும்" (இரண்டாமவன், "எல்லாரும் ஒருக்கச் சிரியுங்களன்டாப்பா, எவ்வளவு பெரிய பகிடி விட்டிருக்கிறான்" என்று சொல்லி மூன்றாமவனிடமிருந்து ஒரு அடியை வாங்கிக்கொண்டான்)
(அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான ஒருநாள் கிரிக்கற்போட்டி ஆரம்பித்திருந்தது)
பார்வையாளர்களைக் காட்டிக்கொண்டிருந்த போது ஒரே நேரத்தில் "சான்மான்" ஒரு கத்தல். கொஞ்ச நேரத்தில் "சங்கீதா" என்று இன்னோரு கூச்சல். (எனக்கென்னவோ சான்மானுக்குக் கிடைத்த கூச்சலை விட சங்கீதாவுக்கு இன்னும் உரக்கவும் உசாராகவும் கேட்டது போல இருந்தது. ஆனாலும், "பிரமை" என்று சொல்லிக்கொண்டேன்)
ஜயசூரிய விளாசத்தொடங்கியிருந்தார். கடைசி வரை பார்த்து விட்டு எழுந்து தேநீர் குடித்தார்கள். அவுஸ்திரேலிய ஆட்டம் தொடங்கியது. ஒவ்வொரு வீரராய் ஆட்டமிழந்ததும் பெருங்கூச்சல்.
"என்னதான் சிங்களவன் என்டு பேசினாலும், கிரிக்கட்டெண்டோடன ஏன்டா இலங்கைக்கு சப்போட் பண்ணிறம்?" என்று ஒரு புத்திஜீவி கேட்டார். விழுந்து விழுந்து சிரித்தார்களே தவிர, அவனுக்குப் பதில் சொல்லவில்லை. நானும் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அன்ட்ரூ சிமண்ட்ஸ் வந்து ஒரு சிக்ஸரைத் தூக்கி விட்டார்.. "ஐயோ.. வந்திட்டாண்டா அனுமான்".
விளம்பர இடைவேளை போட்டதும், அவசர அவசரமாக மற்றத் தொ.கா.நிலையத்திற்கு மாற்றினான் ஒருவன். "அடெய், விசரா இப்பத் திரும்பப் போடுவாங்கள்..ஏன்டா சனலை மாத்துறாய்?"
மாற்றினவன் சிரித்துக் கொண்டே "மச்சான்... வடிவாப்பார் ! இப்ப சொல்லு பாப்பம் எனக்கு விசரோ என்டு!!!" திரையிலே ஷரபோவா அழகாக டெனிஸ் ஆடிக்கொண்டிருந்தார்.
"என்ன நீட்டுக்காலடா இது!" (இந்த "இது", மிகக்குறுகியதொரு "இ"யும், பெருமூச்சுக்களின் தொகுப்பாய் "து" என்பதும் சேர்ந்த ஒன்று என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லைத்தானே!)
வெற்றிலை வைத்து அழைக்காத குறையாய், தொலைபேசியில் அழைத்து, அழைப்பை ஏற்று(!!) வந்தவன், "கிரிக்கற்றைப் பாக்காமல் என்னத்தையடா...." என்று ஆரம்பித்து "ஐயோ மரியாக்குஞ்சு, உந்த மெல்பேண் வெக்கைக்க உங்களை விளையாட வைச்சிட்டாங்களே" என்று தடாலடியா பிளேட்டை மாத்தினான். "அடப்பாவி" என்று கூட்டமாய்க் குரல் கொடுத்தார்கள்.
"உப்பிடிச் சின்னச்சின்ன சட்டையளும் காற்சட்டைகளும் போட்டுக்கொண்டுதான் விளையாடோணுமோடா? முழுக்கால், அற்லீஸ்ட் கால்வாசிக்கால் மறைக்கப் போடலாந்தானே?" - இது புத்திசீவி
"கால்காலை மறைக்கப்போடோணும் என்னடா, அதானே கேட்கிறாய்?"
"ஓம்..",
"சரிதானேயடா அப்ப, கால் தரை கால் எட்டிலொண்டு, போட்டிருக்கிறது அந்த சைசிலதான் இருக்கு"
சொல்லிவைத்தது போலத் தலையிலடித்துக் கொண்டார்கள்.
"எதைப்போட்டாலும் விளையாடினாச் சரிதானே" என்று ஒருவன் சொன்னதும் ஆமோதித்து பழையபடி கிரிக்கட்டுக்குத் திரும்பினார்கள்.
"எனக்குப்பசிக்குது" சாப்பாடெடுக்கப் போனான் ஒருவன்.
அன்ட்ரூ சிமண்ட்ஸ் ரன்னவுட்டாகிப் போனார். "அப்பாடா, இனி வெண்டிடலாம்" ஒரு துளி சந்தேகமுமின்றி வெளிப்பட்டது குரல்.
"டேய், நான் சாப்பாடெடுக்கப்போகத்தான் சிமண்ட்ஸ் அவுட்டாகினவன். நீங்களும் வந்து எடுங்கோடா!". சிரிப்பலை.
மற்றவனும் சாப்பாடெடுக்கப் போனான்.. க்ளார்க் பவிலியனை நோக்கி நடக்க ஆரம்பித்தார். தாங்கள் சாப்பாடு எடுக்கப்போனால் விக்கற் விழுமென்று எல்லாருக்குமே நம்பிக்கை வந்ததில் சமையலறைக்குள் போக்குவரத்து நெரிசல்.
கடைசியாய் ஒரு பந்திருக்கையில் மொத்தமாய் அவுஸ்திரேலிய அணி ஆட்டமிழந்ததும் உற்சாகமாய்க் கைதட்டி, நாளைக்குக் காணப்போகிற அவுஸ்திரேலிய நண்பர்களுக்கு என்ன சொல்வதென்று யோசித்துக் கொண்டே கலைந்து போனார்கள்.
வகை: இப்பிடியும் நடந்துது , விளையாட்டு
குறுக்கெழுத்து II
கொஞ்சம் வித்தியாசமான குறுக்கெழுத்து.
ஆங்கிலத்திலே குறிப்புக்கள் தரப்பட்டுள்ளன. அவற்றிற்குப் பொருத்தமான தமிழ்ச்சொல்லை கட்டங்களில் இட வேண்டும்.(உதாரணமொன்று நிரப்பப்பட்டுள்ளது). செய்றீங்களா?
நிரை(இ.வ):
1. Slumber 2. Post 4. Particle 5. Night 6. Hindrance; Harm 7. Bend 8. Cooking 9. Reparation 11. Vessel 13. Limericks 14. Sin 15. Goat 17. Widow 18. Consent 20. Abbreviation Of Mister (Reversed)
நிரல்(மே.கீ):
1. Mind 3. Rapidity 4. Proximity 5. Parody 6. Tooth 7. Paddy Field 8. Occurence 10. Home 12. Disparity 15. Yes (Upside Down) 16. Our 19. Tree (Upside Down) 20. Moon
வகை: விளையாட்டு
குறுக்கால போற எழுத்துப் போட்டி
வலைப்பதிவர்களை வைத்து சும்மா ஒரு சின்ன விளையாட்டு. இதை உருவாக்குவது லேசுப்பட்ட காரியமில்லை என்று இன்றைக்குத்தான் விளங்கிச்சு. அலுவலகத்தில வேலை செய்யிறதை விட்டிட்டு இதைத்தான் முக்கியமாகச் செய்தனான். விடை காண உதவிக் குறிப்புகள் கீழே:
சரியாக விடை சொல்வோருக்கு ஒரு சிறப்புச் சுட்டி பரிசு! (நெத்திச் சுட்டியெல்லாம் இல்லைங்கோ..இது உங்களை ஒரு வலைப்பதிவுக்கு அழைத்துச் செல்லும்). அப்பிடியென்ன சிறப்பு என்று கேட்கிறீங்களா? (தமிழ்) வலைப்பதிவருக்கு வயது 6.
இடமிருந்து வலமாக:
1அண்டங்காக்கா கொண்டைக்காரி..(ரண்டக்க x 3)...16 பதிவுக்கு சொந்தக்காரி (ரண்டக்க x 3) :o)
4 சினேகிதியின் போட்டிகளின் பரிசு "இவரது" சமையல்
5 செல்ல(செல்வங்கள்)ங்கள் உடையவர்
7 முகத்தை மறைக்கப் போடுவது(திரும்பியுள்ளது)
11 பசு+அலை. குழம்பியுள்ளது.
13 பல்லவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கெதிராகக் (முதலில்) குரல் கொடுத்தவர்.
14 போனவார நட் - சத்திரம்(<--இது அவரே சொன்னது!) ;O)
16 அலுவலக க்ராபிக்ஸ் டிசைனர் பொய் சொல்கிறார் என்று முறையிடுபவர்.
18 படிக்கப் போறேன் என்று வலைப்பதிவுக்கு கைகாட்டி விட்டா. கொஞ்ச நாள் கவிதைப் போட்டிகள் நடத்தினவ.
19 வலைப்பதியும் ஒரு "தமிழ"னின் அடைமொழி
20 கோடு என்றும் அறியப்படும்
21 "தவம்" செய்து கவிதையெழுதி "சந்தைப்படுத்து"வார்.
22 "நறை"யில் ஒரு துளியில் நடப்புகள் சொல்லிப் போவார்
25 "குமிழி"களுக்கும் "சிதறல்"களுக்கும் சொந்தக்காரர்.
26 வலையில் "தமிழ்மணம்" வீசக் காரணமாயிருப்பவர்.
28 தோழன்(குழம்பியுள்ளார்)
30 இவரது வலைப்பதிவின் தலைப்பின் பொருள் "கடல் அலை"
மேலிருந்து கீழாக:
1 வசந்தனும் இவரும் ஒருவரே என்று மயக்கம் வருவதுண்டு
2 துளசி, இவரது மகளின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொன்னா
3.சக்தி என்னும் மதுவை உண்போமடா என்று கொஞ்ச நாளைக்கு முன் வரை சொல்லிக் கொண்டிருந்தார்
5 கடலுக்குள் தேடியெடுப்பது.(கீழிருந்து மேலாக)
6 பவித்ரா - இப்படியும் அறியப்படுவார்
8 வல்லமை தாராயோ என்கிறார், சீனத்தைப் பற்றி எழுதுகிறார்.
9 நுனிப்புல் வெட்டுகிறார், "விடியல்" என்பது வடமொழியில் இவர் பெயருக்கு அர்த்தம்.
10 "கீர்த்திக்கு" இவரது பெயர் rhyme பண்ணும்
12 பன்மொழி அறிவார். மகர நெடுங்குழைகாதனின் பக்தர்
14 திருவாளர் அநாமதேயம். இவர் எழுதுவது பலசமயங்களில் இலகுவில் புரிவதில்லை.
15 வள்ளல் ஒருவர்
17 மண்டபத்திலே சிவனைக் கண்டு கதைத்தவர்.
18 பத்தி எழுத்தாளினி, கீழிருந்து மேலாக
20 தமிழில்: அறிவு, நிலவு; மலையாளத்தில்: போதும்; சிங்களத்தில்:போதாது
23 நிலவோடு கதைத்த பைத்தியம் (என்று கதை எழுதினார்) ;O)
24 யாழிசைக்கும் வலைப்பதிவர்
27 Mykirukkals என்று கவிதை எழுதுகிறார்
29 விவசாயி.
வகை: விளையாட்டு
ஏ ஆராரோ...நீ யாரோ!
வாங்க வாங்க என்று அழைப்பிதழ் அனுப்பிக் கூப்பிட்டேன்..வந்திருக்கிறீங்க. நன்றி. ஏற்கெனவே கதிரையிலே இருப்பீங்க என்பதால உங்களை இருங்கோ என்று சொல்லப் போறதில்லை. சரி பதிவுக்கு வருவோம்..அதான் வந்திட்டோமே என்றெல்லாம் சொல்லாம..நான் சொல்றதைக் கேளுங்க.
இந்தப்பதிவு ஒரு சின்ன விளையாட்டா இருக்கப் போகுது. நீங்களெல்லாரும் கெட்டிக்காரர்தானே..இது ஒரு சுலபமான விளையாட்டு. இந்த விளையாட்டை "தொகுக்க" உதவிய ப்ரவீணாக்கும் (சு)நாமிக்கும் ;o) எனது நன்றிகள்.
சரி அடிப்படை இதுதான்: கட்டங்களுக்குள்ளே தரப்பட்டிருக்கும் தடயங்களை உபயோகித்து விடைகளைக் கண்டு பிடிக்கணும். பிறகு கட்டங்களுக்குக் கீழே நீங்க கண்டுபிடிச்சதை வச்சு என்ன செய்ய வேணும் என்று சொல்லியிருக்கிறேன். உதாரணம் தந்தா விளையாட்டின் சுவாரசியம் கெட்டுவிடும்(அதுக்காக குளிர்சாதனத்தில எல்லாம் சுவாரசியத்தைத் தூக்கி வைக்க முடியாது)(அடேயப்பா எவ்வளவு பெரிய பகிடி விட்டிருக்கிறன், ஏன் ஒருத்தரும் சிரிக்க மாட்டனென்டுறீங்க!)
அ) நபிகள் நாயகம் சொன்ன ஒரு பிரபல பொன்மொழி? சீனா சென்றாயினும் சீர்கல்வி தேடுக
ஆ) எதற்கும் அடித்தளம்/ஆதாரம் என்றதொன்று இருக்க வேண்டும் எனச் சொல்லும் பழமொழி? சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்
அ)விற்கும் ஆ)விற்கும் விடையைக் கண்டு பிடியுங்கள். இரண்டு விடைகளையும் ஒன்றாக வைத்துப் பார்த்தால் என்ன கிடைக்கிறது?சீனா+சுவர் = சீனப்பெருஞ்சுவர்
ஷ்ரேயாவுக்கு உதை என்பது சரியான பதில் அல்ல! :o)
ஒரு பிரபல பயணி இருந்தார். அவர் தன்னுடைய பயணங்களைப் பற்றி விரிவான குறிப்புகள் எழுதியிருந்தாலும், (அ + ஆ)வின் விடை பற்றி அக்குறிப்புகளில் மூச்சுக் கூட விடவில்லை. இந்தப்பயணி யார் எனக் கண்டு பிடிக்க வேண்டும். மார்க்கோ போலோ
இ) அந்தப் பயணியின் நாடு எது? இத்தாலி
ஈ)அரசன்/பசு + (அரசியர் உறைவிடம் - அந்தப்) = ??? கோ + (அந்தப்புரம் - புரம்)= கோபுரம்
இ) & ஈ) யின் விடைகளையும் (முன்னரைப் போலவே) சேர்த்துப் பார்த்தால், கிடைக்கும் விடை என்ன? இத்தாலி+கோபுரம் >> பீசா கோபுரம்
இப்ப நாங்க இன்னொரு இடத்திற்குப் போக வேண்டும். அதற்கு கண்டு பிடிக்க வேண்டியது:
உ) பாலைவன/வறள் பிரதேசங்களும் அவற்றின் பெருகும் தன்மைக்குமான சர்வதேச ஆண்டு (உதவி:- இதைப் பிரகடனப் படுத்திய குழுவில் ஒருவர் 'குளம்பி' தமையன்) 2006
ஊ) "ச" வருடங்களுக்கு ஒருமுறை வரும் கோலாகலம் ச=4, ஒலிம்பிக் போட்டி
உ)வும் ஊ)வும் கொள்ளையடித்தால் 'எங்கே'யென்று அர்த்தம்?? 2006 ஒலிம்பிக் -> டூரின்
கிரேக்கத்துக்கு வெளியே அதிக கிரேக்கர்களைக் கொண்டது அவுஸ்திரேலியாவிலுள்ள மெல்பேர்ண் நகரம். அதே போல நாம் அடுத்ததாகப் போக வேண்டிய தேசத்திலுள்ளதற்கு அடுத்தபடியாக அதன் முக்கிய அருங்கலைப் பொருட்கள் கொண்ட பிரபல அருங்காட்சியகம் (உ+ஊ)வின் விடையில் இருக்கிறது. அந்த நாடு எது?எகிப்து
எ)இந்த நாட்டின் பெயரைச் சொன்னதும் எல்லாருக்கும் நினைவு வருவதும் ஒன்றாகத்தான் இருக்கும். நினைவு வருவதில் "ஐந்து, முக்கால் உடன் தகரத்தில் மெய்யும் உகரமும் அத்துடனே வசந்தன் சின்ன வயதில் குடித்த பானமும் சேர்த்தால் வரும்" சொல் சிலவும் இருக்கின்றன. அதற்கு ஆங்கிலப் பெயர் என்ன? 5-எ, 3/4 = ழு, த், து, கள் >> ஹைரோக்ளிஃப்
ஏ)அவை சொல்வதைப் புரிந்து கொள்ள உதவிய முக்கிய பொருள் என்ன?(உதவி:இப்போது அது லண்டன் அருங்காட்சியகத்தில் இருக்கிறது) ரொசெட்டா கல்
ஐ)தான் இறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன், 1822 இல் (ஏ)யின் விடையாக வரும் பொருளில் இருந்ததை ஆராய்ந்து "பொழிப்புரை/விளக்கம்" வெளியிட்டவரின் பெயரென்ன? Jean Francois Champollion
அவருடைய நாட்டுக்குத் தான் போக வேண்டும்.
ஒ) ட்ரோய் போருக்கு காரணம் என்ன? பரிஸ், ஹெலனைக் கவர்ந்து சென்றமை
ஓ)அமெரிக்காவிலுள்ள சுதந்திரதேவி சிலையின் சட்ட வடிவமைப்பைச் செய்தவர்களுள் ஒருவர் கஸ்டாவ் ஈஃபிள்
ஒ)வும் ஓ)வும் போட்டா என்ன வருது?பரிஸ் நகரத்தில் ஈபிள் கோபுரம்
அதுக்கு முன்னாலே நின்று நடனமாடி காதல் பாட்டுப் பாடினவங்க இங்கேயும் போனாங்க...எங்கே??அதை நீங்கதான் கண்டுபிடிக்கணும்!
ஒள)காடு, மலை, நதிகள் எல்லாம் காதலின் சின்னமாம், அதனால குறிப்பா "இதை" தேவை இல்லை என்று அசித்து (அதான் "தல") பாடியிருக்கிறார். எதை தேவையில்லை என்று சொல்கிறார்? தாஜ்மகால்
ஃ)கேள்வி (ஒள)க்கு விடையாகக் கண்டுபிடிச்சதுக்குக் கிட்ட சலசலக்கும் ஆற்றைப் பற்றி ஒரு பாடல்,மிகப்பிரபலமான நடிகர் நடித்த,மணிரத்னத்தின் ஆஸ்தான (மாதவனுக்கு முதல்) நடிகரின் அறிமுகப்படத்தில் இடம்பெற்றது. ஆஸ்தான நடிகரின் பெயர்? பாடல்: யமுனையாற்றிலே... படம்: தளபதி நடிகர்:அரவிந்த்சுவாமி
(குறிப்பா ஏன் இவர் என்று விளங்கியிருக்கோணுமே ...ஹி..ஹி) ;o)க்)அவரை கதாநாயகனாக பதவி உயர்த்திய திரைப்படம் எதுங்கோ? ரோஜா
ச்)அதே படத்திலேயே தமிழ்த் திரையுலகுக்கு முக்கியமான 2 பேர் அறிமுகமானாங்க. அவங்க யார் யார்? ஏ ஆர் ரஹ்மான், ஹரிஹரன்
கண்டுபிடிச்சிட்டீங்களா...அவங்கதான்..அவங்களேதான்..இவங்களுக்காக, இவங்க கூப்பிட்டு இங்கே வாறாங்களே!!..! (பார்க்கிறதுக்கு நானும் போறேனே!)
இதைச் சொல்லத்தான் உங்கள் எல்லாருக்கும் அழைப்பிதழ் வச்சு விளையாடக் கூப்பிட்டனான்!! :o). வர்ட்டா!
வகை: இப்பிடியும் நடந்துது , விளையாட்டு
எழுதி விளையாடு பாப்பா 2
நடுக்கட்டத்தில் உள்ள எழுத்து கண்டுபிடிக்கப்படும் அனைத்து சொற்களிலும் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதை நேற்று சொல்ல மறந்து விட்டேன்...மன்னிக்கவும்..
நேற்றைய புதிருக்கு விடை: உளி,இளை,இடை,ஆளி,ஆடி,ஆவி,இடு,இவை, ஆட்டி,விளை,விடு,இட்டு,விட்டு,விடை,இயை,விளையாடு,வாடி, வாளி,வாட்டி,விடாய்,விளையாட்டு
இன்றைய புதிர்
|
வகை: விளையாட்டு
எழுதி விளையாடு பாப்பா
இங்கே ஆங்கில நாளிதழொன்றில் வரும் இந்தப்புதிர் விளையாட்டு தமிழில் எந்தளவிற்குச் சாத்தியமென்று தெரியவில்லை. அவர்களுக்கோ 26 எழுத்துக்களுடன் சுலபமாக முடிந்து விடும், தமிழிலோ 247 அழகிய எழுத்துக்கள். அது மட்டுமன்றி உயிர், மெய், உயிர்மெய் என மூன்று வகை எழுத்துக்கள்.இங்கே அவ்வாறு மூன்றாகப் பிரிக்காமல் உயிர், மெய் என இரண்டாக மட்டுமே தந்திருக்கிறேன்.9 கட்டங்களிலுமுள்ள எழுத்துக்கள் அனைத்தையும் ஒருமுறை மட்டுமே பாவித்து 9 எழுத்துக்களாலான சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும். கண்டுபிடிக்கும் ஏனைய சொற்கள் 3 அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும். தந்த சுட்டியில் போய்ப் பார்த்தால் விளையாட்டினை சுலபமாக விளங்கிக் கொள்ளலாம்.
நான் கண்டு பிடித்துள்ள சொற்கள்: மழை, அது, அதை, அமைதி,அமை,அமைத்து,அழை,அழி, அமிழ்,அளி,அழுத்தி,அமிழ்த்து,அளித்து,தளி,அழைத்தும்,அளை,மழைத்துளி(ம்+அ+ழ்+ஐ+த்+த்+உ+ள்+இ= 9 எழுத்துக்கள்)
|
உதாரண்ம் விளங்கியிருக்குமென நினைக்கிறேன். விளையாட்டிற்குப் போவமா?கீழுள்ளதில் சொற்களைக் கண்டுபிடியுங்கள்.
|
உங்களுக்கும் ஏதாவது 9 எழுத்துள்ள சொல் இப்புதிரில் இடம்பெற விரும்பினால் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
வகை: விளையாட்டு

