Showing posts with label மறக்காமலிருக்க. Show all posts
Showing posts with label மறக்காமலிருக்க. Show all posts

குடும்பம் ஒரு குறுக்கெழுத்துப் புதிர்

 மூத்தண்ணனின் மகள் தன் இணையோடு வந்து தங்கியிருந்தாள். எங்கள் வீட்டின் மூத்த பேரப்பிள்ளை. அவள் எங்களுக்கு எத்தனை செல்லம் என்பது அவளுக்குப் புதினமாய் இருக்கிறது. அவள்  குழந்தையாயிருந்த போது எடுத்த ஒளிப்பதிவுக் காட்சிகளை பார்த்தபடி "I was such a brat and you all encouraged me" என்றாள். குழந்தைக்கு, அதுவும் ஒன்றோ இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான்  காணக்கிடைக்குமென்றால் அதைத்தானே செய்வோம்! 25 ஆண்டுகளின் பின் அவளோடு கிடைத்த 2 கிழமைகள் அற்புதமானவை. 

வேலை முடிந்து வீடு வரும் போது வீட்டில் ஆளிருக்கும். சிரிப்புச் சத்தமிருக்கும். அன்றைக்குப் போய் வந்த பயணத்தைப் பற்றிச் சொல்லுவார்கள் ஆளுக்கொரு புத்தகத்தில் நிறந்தீட்டியபடியே. அதற்கும் ஒரு நாள் செல்லமாய் அலுத்துக் கொண்டாள் .. "உங்கட நிறப்பேனைகளின் கூர் சிறிதாக இருக்கின்றது".. அவள் நீர்வர்ணங் கொண்டு அழகாய் வரைபவள். அடுத்தடுத்த நாளே ஒரு சிறு பொதியைத் தந்து "உங்களுக்கு, எங்களிடமிருந்து " என்று சொன்னாள். திறந்தால் தூரிகைப் பேனாக்கள் பல நிறங்களில். அதை வைத்து மூவரும் ஆளுக்கொரு புத்தகத்தில் நிறந்தீட்டியபடியே பல நாட்கள் எத்தனையோ பேசி எங்கள் பொழுதுகளை அழகாக்கிக் கொண்டோம்.  

அந்தக்காலத்து எங்களையும், இப்போதைய எங்களையும் வாழ்வையும் பற்றிப் பேசித் தீரவில்லை எங்களுக்கு. சில பல இயல்புகள் ஒரே போன்று இருக்கின்றன எங்களுள். ஒரு நாள் எதற்கோ விழுந்து விழுந்து சிரித்தாள்.. என் ரோசாப்பூ மருமகள்..அவளது 4 வயதில் சிரித்தது போன்றே கால் நூற்றாண்டு கழித்தும் அதே சிரிப்பு. சிரிப்பு மாறாதுதானே. 

அவர்கள் வந்து நின்ற நாட்களில் எனது நத்தார்க் கொண்டாட்டங்களும் வந்து போயின. ஒரு நாள் பிந்தி வீட்டுக்கு வந்தால் "இவ்வளவு நேரம் எங்க போயிட்டு வாறிங்க ?" என்று பகிடியாக அதட்டியதற்கு  "அப்பம்மாவே இப்படிக் கேட்டதில்லை" என்று நான் பதில் சொல்ல,  என் வீட்டில் முத்துகள் கொட்டிக் கிடந்தன.

அவளது இணை மக்ஸ். அவனே சமைத்தான், சுத்தப்படுத்தினான். இயல்பாய் இருக்கவும் மனம் விட்டுக் கதைக்கவும் முடிந்தது அவனோடு.  மென்மையாயும் வருத்தாமலும் ஓட்டமில்லாமலும் வாழ முனைகிற இளையோர்.

இரண்டு கிழமைகளை மிக மிக அழகாக்கி விட்டு அவர்களுடைய பயணத்தைக் தொடர்ந்திருக்கிறார்கள்.  மூன்று கிழமைகளில் பின் தொலைபேசினோம். அவள் எதோ தின்பண்டம் தயாரிப்பதைக் காட்டியபடியே மக்ஸ் என்னுடன் பேச இடையிடையில் அவளும் என்று பேசிக் கொண்டிருந்தோம். வேலை முடித்து வந்து தாங்கள் குறுக்கெழுத்துப் புதிர் செய்ததாகச் சொன்னாள். தங்களால் கண்டுபிடிக்கமுடியாத எதோ இரண்டு மூன்று சொற்களுக்குரிய துப்புச் சொல்லிக் கேட்டாள் ..ஒன்றைச் சரியாகச் சொன்னேன். அப்படியே ஆரம்பித்து அதைச் செய்து கொண்டிருந்தோம். தொலைபேசியில் பேசத்தான் வேண்டுமென்றில்லை குறுக்கெழுத்துப் புதிரும் செய்யலாம் என்று அன்றைக்குத்தான் எனக்குத் தெரியும். 

அடுத்த முறை அதையே பாதி நேரம் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். வாழ்க்கையின் இனிமை எங்கெல்லாமிருந்து எட்டிப்பார்க்கிறது! 

 

பொற்பூ


ஒருத்தி இருக்கிறாள். பூவொன்று அவள் பெயர் கொண்டது. ஒரே ஒரு முறை சந்தித்திருக்கிறேன். 2012இன் மார்கழி மாதத்தில். அவளையும் அவளது அம்மாவையும் சந்திப்பது அதுவே முதல்முறை ஆனாலும் நெடு நாள் பழகியது போல உணர்ந்தேன். பெரியவர்கள் இருவரும் பேசி முடித்துக் கிளம்பும் போது 'அப்பாடா' என்று என்றாள். அவளுக்கு அலுப்படித்திருக்கிறது. ஆனாலும் பொறுத்துக் கொண்டு இருந்திருக்கிறாள். அழகாய் ஒரு ஊதா நிறச் சட்டை அணிந்திருந்தாள்.

அவளைப் பற்றி சின்ன சின்ன வெளிச்சத் திட்டுகளாய் அறியக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். இந்த வருடத்து இலையுதிர் காலத்தில் அப்படித் தெரிய வந்ததொன்று அவள் பூவிதழ் சேர்ப்பவளென்பதும். வெளியூரிலிருந்து பயணத்தின் பின் ஞாபகத்திற்காய் பொருளுள்ளவையைக் கொண்டு ஊர் திரும்புபவளாய் குடும்பத்தில் அவள் மட்டும்தான்.  செடி வேண்டாமென்று உதிர்த்த பூவிதழ்களும் மலை தூக்கிப் போட்ட சிறு கற்களும் மரத்திடமிருந்து விடை பெற்ற சருகுகளும் அவளது பொக்கிஷங்கள்.

அவளைச் சந்திக்கிற சந்தர்ப்பம் மீண்டும் வாய்த்தது. அவளுக்குத் தக்கதாக அவள் விரும்பக்கூடியதாக என்ன இருக்கும் என்று யோசித்த போது கையுயர்த்தின சிட்னியின் குளிர்காலத்து ஆடி மாதத்துத் தெளிந்த நீல வானில் பறந்த வண்ணக் கொடிகள். இலையுதிர்காலம் முடிந்த பிறகும் வழமையிலும் கொஞ்சம் பிந்தி மரத்தோடு தங்கியிருந்த வண்ண வண்ண இலைகள். அதைத்தவிர பொருத்தமாக வேறெதையும் அவளுடன் பகிர முடியாதென்று தோன்றியது. சிட்னிக்கென்றே தனி  வெளிச்சமிருக்கிறது. அதன் வானத்து நீலமும் தனி அழகானது. மரங்கள் எப்போதும் இனியவை.  குளிரோடு முகிலற்ற வானத்தையும் நிறம் மாறிய இலைகள் கொண்ட மரங்களையும் அனுபவித்துத்  தீராது . இலையுதிர்காலமும் குளிர்காலமும் அத்தனை அழகு.  பசிய இலைகள் நிறம் மாற மஞ்சளிலிருந்து கருஞ்சிவப்பு வரை இயற்கை தீட்டிய ஓவியம். பயணத்திற்கு நான்கு வாரங்கள் இருக்கத் தக்கதாகவே இலைகளைப் பறித்தும் பொறுக்கியும் சேகரித்தேன். பறிக்கும் போது மரங்களிடம் இது ஒரு சின்னப் பெண்ணுக்கு என்று மனதுக்குள்ளாகச் சொல்லிக் கொண்டது நினைவிருக்கிறது. பயணத் திகதிக்குக் கிட்டவாக இலைகள் இருக்காதென்று நினைத்தே சேர்த்தேன். எத்தனையோ இடங்களில் நாம் அப்படித்தான், இல்லையா? பற்றாதோ அற்றோ போய்விடும் என்று முட்டி மோதுகிறோம். உலர்ந்த காற்று நிறம் மாறாமல் என் ரோசா மொட்டுக்களை ஒரு பெட்டியில் வைத்திருக்க உதவுகிறது. அப்படித்தான் இலைகளும் இருக்குமென்று நினைத்தேன். இரண்டு வாரங்களில் பெரும்பாலானவை நிறம் மாறி விட்டன. நானும் பத்திரமாகப் புத்தகமொன்றுக்குள்ளும் வைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து நிறம் பூசிய இலைகள் மரங்களிலிருந்தன. என்னைப் பார்த்து என் நம்பிக்கையீனத்தைப் பழித்துச் சிரிப்பதற்காய்.

பயணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் போனேன். என்னோடு வேலை செய்யும் தோழியும் கூடவே வந்து இலை சேர்த்தார். இவற்றைக் கவனமாக பயணத்தில் வாசிக்கவென்றிருந்த புத்தகத்துக்குள் வைத்துக் கொண்டேன். அந்தப்பெண்ணை நான் காணும் நாள் வந்தது ஒரு வாரம் கழித்து. அவள் வரவில்லை. அவளது அம்மாவும் நானும் காலம் தூசியை படிவித்திருந்த தெருக்களில் நடந்தோம். இளங்காற்று வீச ஒரு குளத்தருகே இலைகளை அவரது பைக்குள்ளிருந்த ஒரு புத்தகத்துக்குள் இடம் மாற்றினோம். அவரவர் வழி சென்றோம்.

திரும்ப சிட்னி வந்து இரண்டு மாதமிருக்கும். மரங்கள் பற்றிய தன் ஒப்படைக்கு சிட்னியிலிருந்து அவளைப் பார்க்கச் சென்ற இலைகளைப்  பயன்படுத்தியிருந்தாள் என்று அவளது அம்மா படங்கள் அனுப்பியிருந்தார். ஒரு மேப்பிள் இலைக்கருகில் ஓக்  என்ற தலைப்பிட்டு ஓர் இலை கொண்ட படம் கண்டேன். அது வரை நானறிந்த ஓக் மரத்திலை படத்தில் கண்டதை விட சற்று வேறானது. எல்லாம் அறிந்தவர் போல அது ஓக் அல்லவென்று செய்தி அனுப்பினேன். அப்படித்தான் அந்த இலையின் பெயரென்று அறிந்த கதை சொன்னார் அந்தத் தோழி. ஓக் அல்லதென்றால் என்ன இலையென்று அறிந்து சொல்லச் சொன்னார். வர்ணனையில் கூகிளினால் பலன் கிடைக்கவில்லை. இலை சேர்க்க உதவினவரே இதற்கும் துணை வந்தார். சில்க்கி ஓக் (Silky Oak) என்று பெயர் சொன்னார் . எனக்கு அப்படியொரு மரத்தைத் தெரிந்திருக்கவில்லை. வேலைகளுக்கு நடுவில் அதைப் பற்றி தோழிக்கு ஒரு வரி சொன்னதோடு சரி. அடுத்தடுத்த நாட்களில் வேலையிலிருந்து வீடு செல்லும் பயணத்தை அந்த வேலைத்தலத் தோழியோடு பகிர்ந்து கொண்டேன். ஏதேதோ பேசிக் கொண்டு வந்தோம். திடீரென்று ஒரு மரத்தைக் காட்டிச் சொன்னார் அதுதான் உனக்குச் சொன்ன மரம் என்று. நான் திகைத்துப் போனேன். சிட்னியில் வந்திறங்கிய காலம் தொட்டு எனக்கு மிகவும் பிடித்த ஒரு மரம். உயர்ந்த பெருமரம். கரும்பச்சை இலைகள் கொண்டது. பூத்தால் இலை தெரியாது. அதன் பூக்களோ பொன். பெயரறிய நான் முயற்சித்ததே இல்லை. இலைகளைக் கவனித்ததும் கிடையாது என்றே தோன்றுகிறது. வெட்கமாய் இருந்தது. பிரியமாய் இருக்கும் சிலரைப் பற்றி அந்த அன்பே போதுமென்று நினைத்து அறியாமல் போவது போல இருந்தது. இன்னுமொரு நாள் அவரோடு பயணித்தேன். அம்மரங்கள் குறைந்து விட்டன  போலத் தோன்றுகிறது என்று அவர் சொன்னார். எத்தனை காண்கிறோமென எண்ணினோம். வேலையிலிருந்து வீடு செல்லும் வரை நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள். அதோ அதோ என்று போட்டி போட்டுக் கொண்டு எண்ணினோம். அம்மரங்களைப் பற்றிப் பேசித் தீரவில்லை எங்களுக்கு. பொற்பூ பூத்து பொற்துகள் சொரிபவை. மாலை வெயிலில் உருக்கி வார்த்த பொன்னாய் மரம் முழுதும் சூடிச் சிரித்தபடி அன்பே உருவாய்.

இலையுதிர்காலத்து வண்ணங்கள் என்னிடம் கொண்டு வந்து சேர்த்த வசந்த காலத்து ஓவியம். அதை அனுப்பிய, பூவின் பெயர் கொண்டவளுக்கு  என் அன்பு. பூவின் பூவாகிய அவளது அம்மாவுக்கும்.

அதுசரி, பூக்கள் அழகன்றி வேறெந்தத் தருணங்களைத் தரக்கூடும்?

ஏழே சுரமா?.. இன்னும் இருக்கா?


நான் ஐந்தாம் ஆண்டு படிக்கும் போது, வெள்ளைக் கலையுடுத்து  விபுலானந்தாக் கல்லூரிக்குப் படிக்கப் போய், தானும் படிச்சுக் கொண்டு எங்களுக்கும் வீணை படிப்பிச்சா வாசி அக்கா (வீணை வாசிச்சதால அந்தப் பெயரில்லை. வாசுகி, மருவி வாசி ஆகிவிட்டது). அதுதான் கர்நாடக சங்கீதம் என்று அறிமுகமானது. வீட்டில பெரியண்ணர் மேகமே மேகமே என்டு தமிழ்ப்பாட்டுப் போடுவார். சின்னண்ணர் இங்கிலிசில பாட்டுப் போடுவார். இரண்டாமாள்தான் எனக்கு மைக்கல் ஜக்சனையும் நுஸ்ரத் படே அலி கானையும் காட்டிவிட்டவர். அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் நிற்கட்டும். என்னண்டு உலகம் ஒரு பொசிபிள் சங்கீத பூஷணத்தை இழந்ததெண்டு சொல்லுறன். 

ஆறாமாண்டு படிக்கும் போது இசை, நடனம், சித்திரம் என்டு பிரிப்பார்கள். முதல்ல எல்லாரும் சங்கீதம் (மேனாட்டு, கர்நாடகம் என்டு அதுக்குள்ளே 2 வகை. பள்ளிக்கூடத்தைப் பொறுத்து இரண்டுமோ அல்லது ஒன்றோ இருக்கும்). பிள்ளைகள் முதல்ல சங்கீதம் என்டு போறது. ஆசிரியை பாடச் சொல்லிப் பார்த்து தனக்கு தொண்டைத்தண்ணி வத்தாத அளவில உள்ள பிள்ளைகள் வடிகட்டிட்டு மிச்சங்களை நடன வகுப்புக்கு அனுப்ப, அவவும் வடிகட்டிட்டு சித்திரத்துக்கு அனுப்பி விடுவா. நடனத்தும் சித்திரத்துக்கும் விரும்பியே போற ஆட்களுமுண்டு. சங்கீதம் தன்னட்டப் படிக்கிற தைரியத்திலயோ என்னவோ என்னட்ட வாசியக்கா சொன்னா சங்கீதத்துக்குப் போகச் சொல்லி. நானும் போனன். பாடினன். ஆசிரியை எனக்குச் சங்கீதம் வராது என்டு சொல்லி அனுப்பிவிட்டா. அது உண்மையா இல்லையா எண்டு தெரியாது, ஆனாலும் பாட வராது என்று மனதில பதிந்து விட்டது. வந்து வீணை வாத்திச்சிட்ட சொன்னா அவவிட அம்மா , எங்கட ஊருக்கே பாலர் வகுப்பு எடுத்தவக்கு கோவம் வந்திட்டு. அதென்னண்டு, நீ சளியோட போய் பாடினனியா என்டு கேட்டா!! பிறகு அபிநயம் கொஞ்ச நாள் பிடிச்சு பிறகு கொழும்பு வந்ததும் சித்திரத்துக்கு மாறி திட்டித்திட்டி சோமசுந்தரப் புலவரிட பேத்திட்ட பள்ளிக்கூடத்தில படிச்சு ஒரு சி ஐயும் சித்திரத்துக்கு எடுத்தாச்சு.

பதின்ம வயசில கிடைச்சார்கள் சசி அண்ணாவும் சியாமாண்ணாவும். இசையமைப்பார்கள், பள்ளிக்கூட கலைவிழாக்களில் கலக்குவார்கள். அவருக்கெல்லாம் பாட்டு எழுதிக் குடுத்திருக்கிறமாக்கும்! இப்பவும் ஞாபகமிருக்கு, ஒரு முறை எதோ பாடிக் காட்டச் சொன்னார். நான் சொன்னன் எனக்குப் பாட வராது என்டு. ஏன் சொன்னார், உண்மையாத்தான் சொன்னாரா என்டெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, அலெறிக்ஸ் ஐஸ்கிறீம் கடைக்குப் பக்கத்திலே இருந்த ஷகியின் வீட்டில் நாங்க இருந்த மேசையில் பின்னேர வெயில் விழுந்து கொண்டிருந்த நேரம் சியாமாண்ணா சொன்னார் "everyone can sing".

சிட்னி வந்ததும் வீணையைத் தொடங்கினேன். தொடங்கினேன் என்பதற்குப் பன்மை இருந்தால் அதைச் சொல்லுவது தான் இங்கே பொருத்தமாயிருக்கும். அப்பதான் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க அறிந்து கொண்டேன். பாட வராது. அதன் நுணுக்க அழகுகள் விளங்காது. ஆனாலும் பிடிக்கும். அருணா சாய்ராமும் பொம்பே ஜெயசிறியும் என்னோடு எங்கேயும் வந்தார்கள். வருகிறார்கள். கொஞ்ச நாளைக்கொரு தரம் கேட்கிற பாடல்களின் வகைகள் மாறும். முழு கர்நாடக சங்கீதத்திலிருந்து தனி வாத்தியம் போய் நாட்டியத்துக்கான பாடல் வகைளுக்குள் தாவி நாடு தாண்டி மொழி தாண்டி அறியாத இடமெல்லாம் போய், திரும்பவும் பழகியதொன்றிடமே வாரங்கள்/மாதங்கள் கழித்து வந்து சேர்வேன். சில நாட்களை ஒரே பாடலே நிறைத்ததுமுண்டு.அது எல்லாருக்கும் உள்ள அனுபவந்தானே!

முதுநிலை ஆய்வு செய்கிறா என்று பகிடி பண்ணுமளவுக்கு நான் மூஞ்சிப் புத்தகத்தில் குடியிருந்த காலம் அது. ஒரு நாள், நாலு வருசமிருக்கும், சியாமாண்ணா ஒரு பாட்டைப் பகிர்ந்திருந்தார். பாட்டைப் போய்ப் பார்த்தவள்தான். இன்னும் அவ்வகையில் சந்தோசமாகச் சிக்கிக் கிடக்கிறேன். அது பாகிஸ்தான் கோக்ஸ்டூடியோ (CokeStudio)பாட்டு. இசைத் திறமையை வெளிக் கொண்டு வர என்று கோககோலா நிறுவன ஆதரவில் நடக்கிற நிகழ்ச்சி. பார்த்ததும் அதிலிருந்த அத்தனையும் என்னை ஈர்த்தது. அதைப்பார்த்ததும் இந்தியாவின் கோக்ஸ்டூடியோ தேடிப் பார்த்தேன். இசையிருந்தது. திறமையிருந்தது. என்றாலும் ஏதோ ஒன்று குறைவது போல உணர்ந்தேன். ஒரு வித செயற்கைத் தன்மை நிகழ்ச்சி  முழுவதும் விரவிக்கிடந்தது என்னை அதிகம் ஈர்க்கவில்லை. பாக் இசைத்திருந்த விதம் வித்தியாசமாயிருந்தது. நாட்டுப்புற, சூபி, நாடோடிகள் மற்றும் தொழிலாளர்கள் பாடல்களோடு அன்றாட வாழ்வியல் சொல்லும் பாடல்களும் கொண்டதாக இருந்தது. கர்நாடக இசையை 'morning raga' படத்தில் காட்டுவது போல ஒரு கலவை. இளந்தலைமுறையை ஈர்ப்பதற்காய் இருக்கலாம் அவர்கள் இந்த கலவை முறையை தேர்ந்தது. சரி இதிலென்ன என்கிறீர்களா, அப்பாடலை வழ்மையாகப் பாடும் ஆட்களையும், அவர்களது ஆடை ஆபரணங்கள் அவர்கள் பாவிக்கிற வாத்தியங்களையும் சேர்த்துக் காட்டியிருப்பார்கள். செவிக்கும் கண்ணுக்கும் ஒரு சேர விருந்து. சாப்பாடு என்டு கடைக்கு ஒரு ஆள் போக அவர் எதிர்பார்த்த வழமையான சாப்பாடாய் இல்லாமல் விதம் விதமாய் இருந்தால் அவருக்கு எப்படி இருக்கும். அப்படி இருக்கிறது எனக்கு கோக் ஸ்டூடியோ. பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். பாடலின் பொருள் கூட பலவற்றிற்குக் கிடைக்கிறது. உண்மையான விருந்துதான். பாட்டுகளிலும் அதனைப் பாடுபவர்களின் தோற்றத்திலும் அவர்தம் உடை, ஆபரணங்களிலும் தான் எத்தனையெத்தனை நுணுக்கங்கள் வித்தியாசங்கள். இத்தனையும் ஒரே நாட்டுக்குள்!!! நிலத்திலுள்ள விரிப்புகளை அருகில் காட்டுகிறார்களில்லை என்ற குறைதான் எனக்கு. பழங்காலத்திலே பாவித்த நரம்பு, தோல், காற்று, கொட்டு வாத்தியங்களென்று கூடப் பார்க்க முடிகிறது. உண்மையில் வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறது கோக்ஸ்டூடியோ.

அண்ணா பகிர்ந்தது ஜுக்னி. பாட்டில் ஆரிவ் லோகரின் உசாரோடு சேர்ந்து மீஷாவின் சிரிப்பு அள்ள்ளிக் கொண்டு போகும். 4ம் நிமிடத்தில் இரு வேறு தருணங்களில் வருவது, சேர்ந்து முத்துக்குளித்து அனுபவத்தைப் பகிரும் சந்தோசம். 07ம் நிமிடம் 47ம் நொடியில் மீஷா சிரிப்பார் பாருங்கள்.. அகிலன் கச்சேரியில் கஜனைப் பார்த்துப் புன்னகைப்பது பற்றிப் படலைக்காரர் சொல்லும் போது எனக்கு இதுதான் ஞாபகம் வரும். அடுத்து என்ன விளையாட்டெல்லாம் வரப்போகுது என்டு தெரிந்த ஒரு சிரிப்பு. இந்தப்பாட்டு ஒரு உதாரணம்தான். இதோட சேர்த்து piano guys என்று தேடி, ஒரு பியானோவும் ஒரு செலோவும் எங்கெல்லாம் போய் வருகின்றன எப்படியெல்லாம் நம்மை மயக்குகின்றன என்று பாருங்கள்.

சியாமாண்ணா சொன்ன 'எல்லாராலும் பாட முடியும்' என்பதற்கு அவர் சொன்ன சந்தர்ப்பத்தினையும் தாண்டிய பொருள் இன்றைக்கு எனக்குத் தெரியும். எல்லாருக்கும் பாட வரும். எல்லாருக்கும் பாட்டும் இருக்கிறது.   

அந்தர(ங்க)த்தில் மழை


டாலிங் ஹாபரின் சில்லிட்ட படிக்கட்டில்
என் இதயத்தையும் அவளிருந்த குமிழியையும்
அன்று நான் உடைத்துக் கொண்ட பின்
என் மீது வந்தமர்ந்து,
இப்பொழுதும்  என்னோடு ஒட்டிக்
கொண்டிருக்கிறது  அந்த மாய வண்ணத்துப்பூச்சி - அன்றைய இரவின்
ஈரலிப்புடனும்  மாறாத அதே கதகதப்புடனும்.

உடை(ந் )த்ததற்குப் பதிலாக
மீண்டுமொரு குமிழி செதுக்குகிற போதெல்லாம்
தன் வண்ணங்களையெல்லாம் உதிர்த்து அதிலே  பூசியபடி
சத்தமில்லாமல் கேட்கிறது அந்த வண்ணத்துப் பூச்சி - அந்தப்
பெண்ணை என்னசெய்து விட்டேனென்று.
அந்த ஒரு வினவலில் துண்டு துண்டாய்ச் சிதறுகிறது
வண்ணம் பூசிய புதுக்குமிழி. 

செதுக்கிச் செதுக்கிக் களைத்துப் போனாலும் 
வாளாவிருக்க விடாமல் துரத்துகிறது வண்ணத்துப் பூச்சி.
வாலை ஆட்டாமல்,
சிறு முனகல் தானும் இல்லாமல்,
காதுகளைத்  தொங்கவிட்டு,
தலையைச் சரித்து,
துளைக்கும் மினுமினுத்த கண்களால் மட்டும் என்னைத் தொடர்கிறது
துரத்தினாலும் போகாத அவளது நாய்க்குட்டி.

ஒரு அதிகாலையில்
தேநீரின் துணையோடு - உனக்கு
உண்மையைச் சொல்லும் துணிவு எனக்கு வரும்வரை
பெய்ய விரும்பாமலும் 
பெய்யாமலிருக்க முடியாமலும்
அந்தரத்தில் தொங்குகிறது மழை.

நினைவில் பறவைகள்

ஏதேதோ யோசித்துக் கொண்டேயிருந்தேன். சங்கிலியின் கண்ணிகளாய் தொடுத்துத் தொடுத்துப் பறவைகளில் வந்து நின்றது. தெரிந்த பறவைகளைப் பட்டியலிட்டுக் கொண்டு போன போதுதான் பலதையும் மறந்து போனது உறைத்தது. (நல்லகாலம் கணினி பக்கத்திலிருக்கிறதில் பதிவிடுகிறேன்) ஞாபகம் வந்த பறவைகள்:

  • காகம்
  • சிட்டுக்குருவி
  • மயில்
  • குயில்
  • மைனா
  • பருந்து
  • வாத்து
  • கோழி
  • தாரா
  • அன்னம்
  • Cockatoo
  • மீன்கொத்தி
  • மரங்கொத்தி
  • தூக்கணாங்குருவி
  • ஆள்காட்டிக்குருவி
  • புறா
  • தீக்கோழி
  • Lyre Bird
  • அண்டங்காக்கா
  • Robin
  • கிளி
  • செண்பகம்
  • நாரை
  • கொக்கு
  • ஆந்தை
  • Humming bird
  • வான்கோழி
  • Kiwi
எவை மேலே இல்லாமல் பறந்து போயின?

உலாத்தப் போக..

இந்தப் பதிவு நான் மறக்காமலிருப்பதற்காக.

பயணங்கள் சுகம் தருபவை. போய்ச் சேருமிடம் குறித்த பார்வையோடே பலர் பயணங்களை அணுகுகிறோம். அப்படியில்லாமல் பயணத்தையே இரசித்து முடிவுடம் போய்ச் சேருவோர் நம்மில் எத்தனை பேர்? பயணம் போகலாம் என்று நினைத்தவுடன் மனதில் தோன்றும் அந்த விவரிக்கவியலாப் பரபரப்பும், பயணத்திற்குத் தேவையான ஆராய்ச்சிகளில் இறங்கி முடிவெடுக்கும் போதும் ஏற்படும் கிளர்ச்சி என்பன இனிமையானவை. முடிவிடமடைந்ததும் வேறு விதமான உணர்ச்சிகளாக உருவெடுத்துக் கொள்பவை. பயணத்தை ஒழுங்கு படுத்தும் போதோ, அல்லது பயணித்துக் கொண்டிருக்க்ம் போது இருக்கும் எதிர்பார்ப்பு அங்கு போய்ச் சேர்ந்ததும், 'அடடா..வந்து விட்டோமே' என்றிருக்கும் எனக்கு. (நிறைய நாள் எதிர்பார்த்து திட்டமிட்டுப் போன ஐரோப்பியப் பயணம் அப்படித்தான் இருந்தது பாரிஸ் போயிறங்கின கொஞ்ச நேரத்துக்கு)

விமானப் பயணமே எனக்குப் பிடித்தமானது. சிலருக்குப் பயம், சிலருக்கு ஒன்றும் பண்ணாமல் உட்கார்ந்திருக்க வேண்டுமே என்ற சலிப்பு - எனக்கு இதெல்லாமில்லை. படத்தையோ அல்லது யன்னலுக்கூடாக முகிலோ நிலமோ வானமோ பார்த்து ரசித்து, பக்கத்தில் இருப்பவருடன் பேசி, பணியாளருக்கு மணிக்கொரு தரம் வெந்நீருக்காகத் தொல்லை கொடுத்து, தூங்கியெழுந்து நிறைக்கும் பயணம். இதில் பிடிக்காமலிருக்க, பயப்பட என்ன இருக்கிறது?

போக/பார்க்க நினைத்திருக்கிற இடங்கள்/நாடுகளைப் பட்டியலிட்டு வைக்க நினைத்தது தான் இப்பதிவின் ஆரம்பம். பட்டியல் ஒரு வித ஒழுங்கிலுமில்லை:

  • அவுஸ்திரேலியா
  • மொரோக்கோ
  • இலங்கை
  • நியுஸிலாந்து
  • இந்தியா
  • அந்தமான்-நிகோபார்
  • காஷ்மீர்
  • கம்போடியா
  • நேபாளம்
  • கிரேக்கம்
  • அயர்லாந்து
  • ஸ்கொட்லாந்து
  • வேல்ஸ்
  • வடதுருவம்
  • பிரான்ஸ்
  • சுவிட்சர்லாந்து
  • நோர்வே
  • டென்மார்க்
  • சுவீடன்
  • தாய்லாந்து
  • மாலைதீவு
  • கனடா
  • ஐஸ்லாந்து
  • கிரிபற்றி
  • எத்தியோப்பியா
  • தென்னாபிரிக்கா
  • எகிப்து
  • மடகாஸ்கர்
  • இந்தோனேசியா(பாலித் தீவு)
  • ஈரான்
  • துருக்கி
  • ஆப்கானிஸ்தான்
இன்னும் காணக் காண, படிக்கப்படிக்க என் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவரைப்போல வரையறுத்த திட்டம் இல்லாவிட்டாலும் எனக்கென்று மேலே சொன்ன இடங்களைப் பார்ப்பதற்கான திட்டமல்லாத பெருந்திட்டமிருக்கிறது. அதில் முக்கியமான பங்கு எங்கு என்ன எப்போது என்றெல்லாம் வகுத்துக் கொள்ளாமல் பயணிப்பது.

திடீரென்று முடிவெடுத்து வெளிக்கிடும் spontaneous பயணங்கள் இல்லவே இல்லாதளவுக்காய் வெகுவாய்க் குறைந்து விட்டன. வாழ்க்கைச் சுழலில் அப்பயணங்களால் வரும் வசதிக்குறைவுகள் கருத்தில் கொள்ளப்பட்டு பல நல்ல அனுபவங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறேன். ஹென்ரிக்கோவுக்கும் பேர்ணடெட்டுக்கும் மீண்டும் வாழ்த்துக்கள். அவர்கள் முடிவு சரியானது. (அவர்களைப் பற்றி இன்னொரு நாளைக்குக் கட்டாயம் பேச வேண்டும்)

--O-0-O--

பயணமென்று சொன்னதும் அண்ணாவுடன் போனவையே ஞாபகத்தில் மின்னுகின்றன. முக்கியமாக ஒரு பயணம். 1999ம் ஆண்டு - நான்கோ ஐந்து நாட்களுக்கு பன்னிரண்டு பேர் செல்லும் வாகனத்தில் பதினெட்டுப் பேர் போனோம். எங்கெங்கெல்லாமோ சுற்றினோம்..சுற்றிய இடமெல்லாம் வரலாற்றுச் சின்னங்கள் மிகுந்திருந்தன. மிகிந்தலை, பொலன்னறுவை, அனுராதபுரம், கதிர்காமம், சிகிரியா, பெயர் மறந்த இன்னும் வேறு இடங்கள். குளம்/ஆறு கண்டால் நிறுத்திக் குளித்துக் கும்மாளமிட்டு பக்கத்திலேயே எங்காவது ஒரு ஆச்சி வைத்திருந்த கடையில் கிடைக்கிற சோறு-கறியோ அல்லது பாண்-சம்பல்-வாழைப்பழம்-தேநீரோ அல்லது பழங்களோ உண்டோம். ஒரு நாள் அரைநிலவொளியில் vanக்குள் சிலர் தூங்க, மீதி துணி விரித்து குளத்தங்கரையில். இன்னொருநாள் அனுராதபுரத்துப் புத்தர்களையும் தாண்டி நிறையத்தூரம் போய் - எங்கள் குழுவிலிருந்த ஒருவரது அக்கா கற்பித்துக் கொண்டிருந்த பள்ளிக்கூடத்தில் இராத் தங்கினோம். தோட்டத்து மரவள்ளி கிண்டியெடுத்து அவித்து சம்பலுடன் உண்டோம். என் கிராமத்திலிருந்து வெளியேறிய சிங்களவர் சிலரும் எங்கள் குழுவிலிருந்தனர். என் கையெழுத்துப் புத்தகத்தில் அவர்களில் ஒருவர் தமிழில் எழுதித் தந்த 'இனன்களுக்கிடையிலான ஒற்றுமை ஓங்குக!' இன்னும் என்னிடமிருக்கிறது. அதைப் பார்த்துத் திருத்தி '
இனங்களுக்கிடையிலான ஒற்றுமை ஓங்குக!' என்று இன்னொரு தாளில் அவரிடமெழுதிக் கொடுத்த என் அபத்தமும் ஞாபகமிருக்கிறது.

தயிரும் கித்துள்பாணியும் நிறைந்த அந்த நாட்களில் எங்களுக்குள் தமிழ்-சிங்களப் பேதம் இருக்கவில்லை. சண்டை எங்கோ வேறொரு கிரகத்தில் நடந்து கொண்டிருந்தது. அதற்கும் எங்களுக்குமான தூரம் ஒன்றினாலும் எட்டிப்பிடிக்க முடியாதபடி நீண்டு போயிருந்தது.

என் கிராமத்தின் அழகுக்கு அடுத்தபடியாக, அங்கிருந்து புறப்பட்டதன் பிறகு,
நான் அழகான மனிதர்களையும் இடங்களையும் அப்பயணத்தின் போது கண்டுகொண்டேன். கல்முனை என்றால் என்ன, கம்பகா என்றால் என்ன..அன்பு மிக்க மனிதர்கள் எங்கேயும் அழகுதான்.

பெட்டகம்