அழுவதா சிரிப்பதா ?

வார இறுதியில் நண்பரொருவரது வீட்டிற்குச் சென்றிருந்த போது, ஒளிப்பதிவு செய்யப்பட்ட (கனடாவில் நடந்த) நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கக் கிடைத்தது. இலங்கையரின் நிகழ்ச்சி தான்..யாழ் அன்பர்கள்தாம். நிகழ்ச்சி என்று ஒன்று நடந்தால், அது யாரால் நடாத்தப்படுகிறது/ஒழுங்கு செய்யப்பட்டது என்று மேடையில் ஒரு 'Banner' இருப்பது வழமை தானே..இங்கு இவர்களும் விதிவிலக்கல்ல. Banner பெரிய விஷயமல்ல..அதில் இருந்ததைப் பார்த்து எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. Banner இப்படிச் சொன்னது:

வட்டுக்கோட்டை
மூளாய் வீதி ஒன்றியம்


வட்டுக்கோட்டை ஒன்றியம் என்று பெயர் இருந்திருந்தால் அது அவ்வூரைச் சேர்ந்தவர்களுக்குரிய ஒன்றியமாக காணப்பட்டிருக்கும். இங்கு இவர்களோ, வட்டுக்கோட்டை என்கிற ஊர் அடையாளத்தையும் தாண்டி தாங்கள் வசித்த வீதியின் பெயராலே ஒன்றியமொன்றை அமைத்திருக்கிறார்கள். நல்ல காலம், வட்டுக்கோட்டை, மூளாய் வீதி, இல:46 ஒன்றியம் என்று ஒரு சங்கம் அமைக்காமல் விட்டுவிட்டார்கள்.அந்த மட்டில் தப்பினோம். (அப்படி இதுவரை நடக்காமல் காப்பாற்றிய பிள்ளையார் இந்த வீதியில் கோயில் கொண்டிருக்கிறாராம்.அதற்கு நிதி சேர்க்கத்தான் இந்நிகழ்ச்சி நடத்தப் பட்டுள்ளது.)

பி.கு 1: வட்டுக்கோட்டை, மூளாய் வீதி, இல:46 என்பது ஒரு எழுமாற்றான முகவரி. இங்கே வசித்த/வசிக்கிற யாரையும் எனக்குத் தெரியாது.

பி.கு 2: இது யாரையும் (குறிப்பாக - வட்டுக்கோட்டை- மூளாய் வீதி ஒன்றியத்தினரை) புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல.

மழையாமே...அதென்னது?

மழை - வரைவிலக்கணம்: வளி மண்டலத்தில் ஆவி வடிவில் காணப்படும் நீரானது ஒடுங்கி, வானிலிருந்து பூமிக்கு துளித்துளியாய் விழும்போது மழை எனப்படும்.

முன்னொரு காலத்தில் காணப்பட்டதும் இனிமேல் இருப்பதற்கான சாத்தியமும் இல்லையென நம்பப்பட்டதுமான "மழை" எனப்படும் ஒரு வானிலை, நாளை சிட்னிக்கு எதிர்வுகூறப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட இவ்வறிக்கையானது இவ்வானிலையை எதிபர்க்காத, இதற்கு ஆயத்தமற்ற குடிமக்களைத் தயார்ப்படுத்தும் பணியில் வரலாற்றாசிரியர்களைத் தீவிரமாக ஈடுபடுத்தியுள்ளது. இந்த மழையானது இதைப் போலவே பரிச்சயமற்ற "மேகங்கள்" எனப்படுவனவற்றின் தோற்றத்தின் பின் ஏற்படுமென வளிமண்டலவியற் திணைக்களத்தின் வானிலையாளர் சத்யா கிஷோர் தெரிவித்தார். திரு. சத்யா தெரிவித்ததற்கிணங்க, கரையோரப் பகுதிகளில் மழையை வினியோகிப்பற்கு முன்பதாக மேகங்கள் நாளை விடியலில் சிட்னியின் மேல் கூடுமென அறியப்படுகிறது. இம்மேகங்கள் கலைந்த பின்னர் மீண்டும் காணக் கிடைக்கும் என்பதால் பாதிக்கப்பட்ட இடங்களில் வதிவோர் 'காணாமற் போன நிழல்கள்' தொடர்பாக காவற்துறையினரை அணுக வேண்டாமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதே போன்றே வீட்டுரிமையாளர்களும் தாம் வளர்க்கும் தாவரங்கள் இம் மழை காரணமாக பச்சை போன்றதொரு நிறத்தில் காணப்பட்டால் அவற்றிற்கு நோயேற்பட்டுள்ளதோவென அஞ்ச வேண்டாமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மழை நேரடியாகப் படும் போது ஆட்களோ, கட்டடங்களோ ஈரமாகலாம். வாகன ஓட்டுநர்கள் தம் வாகனத்தில் காணப்படும் மழைத்தடுப்புச் செயலியை பரிச்சயப் படுத்திக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். ஒருவித பயனுமின்றி அமைந்திருப்பதால் வாகனத்தின் குடல்வால் எனச் செல்லமாக அழைக்கப்படும் கண்ணாடித்துடைப்பான் அனேகமான ஊர்திகளில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கருவி கண்ணாடியிற் படிகின்ற மழைத் துளிகளை அதனின்று நீக்குவதன் மூலம் சாரதிக்கு பாதையை தெளிவாகப் பார்க்க வழி செய்கிறது.

*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*


மழை என்று பெயர் வைத்து விட்டு, பதிவில் மழை பற்றி எழுதாமல் இருப்பது சரியாகப் படவில்லை. அதுதான், நேற்றைய The Daily Telegraph இல் ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையை என்னாலான வரைக்கும் மொழி பெயர்க்க முயற்சித்திருக்கிறேன். இதன் ஆங்கில (அசல்) வடிவம் இங்கே.

அன்னை என்னும் ஆலயம்

ஒரு ஊரிலே ஒரு சின்னப் பெடியன் இருந்தான்.பள்ளிக்கூடம் போவதென்றால் வேப்பங் கொழுந்தை விடக் கசக்கும் அவனுக்கு. பள்ளிக்குப் போகும் வழியில் வயலுக்கூடாகவும் போக வேண்டி வரும். ஒருநாள் பள்ளிக்குப் போகும் போது வரம்பில் தடுக்கி விழுந்து விட்டான். வெள்ளைச் சீருடையில் சேற்றோவியம்.வீடு திரும்பி, நடந்தது சொல்லி, வேறு சீருடை மாற்றி மீண்டும் பள்ளி நோக்கிய பயணம். மனதில் மின்னலாய் ஓர் எண்ணம். 30 நிமிடத்தில் பழைய சேற்றோவியக் கோலத்தில் வந்து நின்ற மகனைப் பார்த்த அம்மாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. "மகன்..உங்களுக்கு இருப்பது 3 சீருடைதான், இதுதான் சுத்தமானதும் கடைசியும், ஆகவே பத்திரமாகப் போ" என்று சொல்லி வழியனுப்புகிறா. மகனோ அடுத்த 30வது நிமிடத்தில் திரும்பி வந்தானாம்..இம்முறையும் சீருடையில் சேற்றோடு.பாடசாலைக்கும் நேரமாகி, சுத்தமான வேறு சீருடையும் இல்லாமற் போகவே அவன் அன்றைக்குப் பாடசாலைக்குப் போகவில்லை.

பெரிய சாதனையாக தன் 4 வயது தம்பியிடம் சொன்னானாம் "முதலாம் தரம் உண்மையாத்தான் விழுந்தனான், பிறகு வேணுமெண்டு தான் விழுந்தனான்" என்று. இதைக் கேட்ட தாயார் அவனது புத்தியை சிலாகித்துக் கொன்டாலும் வெளியே காட்டாமல் இவனை அழைத்து பள்ளிக்குப் போக வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினாராம்.

இச் சம்பவத்தில் வரும் சின்னப் பெடியன்: என் அண்ணா, தாயார்: எங்கள் செவிலித் தாயார்.

இப்படி நிறைய கதை சொல்லும் எங்கள் செவிலித் தாயார் ஒரு சிங்களப் பெண்மணி. 1963ம் ஆண்டு தொடக்கம் எங்கள் குடும்பத்தவர். இனப் பிரச்சனையின் போதும், கொழும்பிற்கு இடம் பெயர்கையிலும் இவர் காட்டிய மனவுறுதி அளப்பரியது. பல இராணுவத்தினர் கேட்டனர்.."நீ ஏன் இந்த தமிழ் ஆட்களுடன் இருக்கிறாய்?" என்று. அதற்கு அவரது மாறாத பதில் "என் குடும்பத்தினரோடு நான் இருக்கிறேன்..உனக்கு அதனால் ஏதாவது பிரச்சனையா?" அவனுக்கு அதற்குப் பதில் சொல்ல வராது.வாயடைத்துப் போய் நிற்பான்.

இவரது சமையல் எம் குடும்ப நண்பர்களிடையேயும், அம்மா வேலை செய்த வைத்தியசாலைகளிலுள்ள ஊழியர்களிடையேயும் மிகவும் பிரபலம். அண்ணாமார் விடுதியிற் தங்கிப் படித்த போது ஒவ்வொரு வார இறுதிக்கும் பல விதமான உணவுப் பண்டங்களோடு அவர்களைப் பார்க்கப் புறப்பட்டுவிடுவாராம். ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் எப்படிப்பட்டவர் என்பதை கணிக்கும் திறனுடையவர். அவர் சொல்லும் போது சிரிக்கும் நாம், அக்கூற்று பலருக்கும் மிகச் சரியாகப் பொருந்துவதை கண்டு வியந்துள்ளோம். வருடத்துக்கு ஒரிருமுறை ஊருக்குப் போய் வருவா. அம்மாவை விட்டு எத்தனை நாளும் இருக்க முடிகிற எங்களால், இவவை விட்டு இருக்க முடிவதில்லை. வழியனுப்பப் போகும் போது "என்னட்டயும் ticket இருக்கு, என்னையும் கூட்டிப் போங்க" என்று தன் கையிலுள்ள platform ticket ஐக் காட்டி அழுவாராம் பெரியண்ணா. ஊரிலிருந்து திரும்பும் போது, சமையல் சாகசங்களின் பலனாக அம்மாவின் கையில் குறைந்தது 2 வெட்டுக்காயமாவது இருக்கும். வந்தவுடன் எங்களைப் பார்த்து விட்டு "சூட்டி/புத்தாலா கெட்டு வெலா" (சின்னவள்/மகன்மார் மெலிந்து விட்டார்கள்) என்பார்("ஏதோ நான் சாப்பாடு குடுக்காத மாதிரி"<--அம்மா). அப்பாவின் கோபத்திற்கு ஆளாகும் போது அண்ணாக்கள் வேண்டிக் கொள்ளும் தெய்வமும் இவதான்.அன்னபூரணி + ஆபத்பாந்தவி / அனாதரட்சகி.

எம் குறைகள் அவர் கண்களுக்குத் தெரிவதேயில்லை. அவரைப் பொறுத்தவரையில் எங்களைப் போல் Angels இந்த உலகத்தில் யாருமில்லை. அவவுக்குத் தன் பிள்ளைகளை (என்னை, அண்ணாமாரை) யாரும் ஒன்றும் சொல்லக் கூடாது..அது அம்மாவேயாயினும்.அதே போலத்தான் எங்களுக்கும் - அவரிடம் குறை யாதுமில்லை;யாரும் வேறு மாதிரிச் சொன்னார்களோ, தொலைந்தார்கள். வீட்டிலே பண்டிகைக்கோ அல்லது வேறு எதற்காவதோ புதுத் துணி அல்லது பொருட்கள் வாங்குவது என்றால் அவவுக்கு என்ன வாங்கலாம் என்பதையே நாங்கள் முதலில் தீர்மானிப்போம். சில விஷயங்கள் நேரடியாக அம்மாவிடம் கேட்க முடியாதுவிடின் இவர் காதில் போட்டால் போதும், காரியம் 90% முடிந்தமாதிரித்தான். சகோதரிகள் (அம்மாவும் அவவும்) என்னதான் கதைப்பார்களோ, கிசுகிசுப்பாய் இரகசியக் கதைகளும் வயிறு குலுங்கும் சிரிப்புமாய்...இரவிரவாய்த் தொடரும்.

அண்ணாவின் மகள், பார்த்த மாத்திரத்திலேயே தன்னிடம் ஒட்டிக் கொண்டது(அம்மாவிடம் அவள் சேர 1 மணித்தியாலம் எடுத்தது) அவருக்கு தனி மகிழ்ச்சி/பெருமை. தனது சுருங்கிய தோலை அவள் தொட்டுப் பார்ப்பதையும் பத்திரிகை வாசிக்கும் போது கைக்கும் பத்திரிகைக்குமுள்ள இடைவெளிக்குள்ளால் தலை புகுத்தி அவள் தன்னைப் பார்ப்பதையும் நிறையவே ரசித்தார். ஸ்ரியானி எனும் இயற்பெயர் கொண்டாலும் நாங்களும், எம்மூடாக அவரைத் தெரிந்தவர்களும் அண்ணா அவருக்குச் சூட்டிய "எம்மி" என்கிற பெயராலே தான் அவரை விளிப்போம்.

3 பிள்ளைகளையும் சோடியாகப் பார்க்கக் கிடைக்கும் என்பதனால் 2001 இல் நடந்த என் திருமணம் அவருக்கு விசேடமான மகிழ்ச்சியைக் கொடுத்தது. என் திருமணத்திற்கு முதல் நாளன்று எம்மிடையேயிருந்து, இந்த மண்ணிலிருந்து மறைந்த எம் எம்மிக்கு என் அஞ்சலிகள்.

அவவைத் தந்த கடவுளுக்கு நன்றி.

"அன்னை என்னும் ஆலயம்...அன்பில் வந்த காவியம்"

இங்கே சாத்திரம் பார்க்கப்படும்

கைரேகை சாத்திரம் என்று சொல்லப்படுவது கையிலே காணப்படும் ரேகைகளைப் பார்த்துச் சொல்லப்படுவது(அதனால் தான் அதுக்கு கைரேகை சாத்திரம் என்று பெயர்!!). உள்ளங்கையின் தன்மை, வடிவம், முக்கியமாக அதிலே குறுக்கும் மறுக்கும் தலை போகும் வேலையாய் ஓடித் திரியும் கோடுகள்..இவை எல்லாமாய்ச் சேர்ந்து சாத்திரம் சொல்பவருக்கு வீட்டிலே சோற்றுக்கு வழி செய்கின்றன. உங்கள் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லக் கூடியனவாம் இக் கோடுகள். முக்கியமான 3 ரேகைகளாவன..ஆயுள்(life), தலை(head),இருதயம்(heart).இவையே ஒருவரின் உடல்நலம், வாழ்நாள்,முக்கிய(ஆளுமை) குணங்கள், வாழ்விலேற்படும் முக்கிய மாற்றங்கள் என்பவற்றைக் குறிக்கின்றன. கையில் காணப்படும் மெல்லிய அல்லது தெளிவற்ற கோடுகளும் ஒருவரின் வாழ்வைப் பற்றிய முழுமையான விளக்கத்தைப் பெற கவனமாக (சாத்திரக்காரரால்) பார்க்கப்படும்.

என்னடா திடீரென்று கைரேகை சாத்திர விளக்கம் சொல்கிறேனே என்று பார்க்கிறீர்களா?என்ன நடந்தது என்றால் என் தோழி(ப.கு.க.தி தோழி) ஒரு கைரேகைச் சாத்திரம் சொல்லும் தளத்திற்கு சுட்டி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தாள். சரி online இல் எப்படி கணிக்கப் போகிறார்கள் என்று பார்க்கப் போனேனா..போய் முதலாவது submit ஐ அழுத்தியவுடனேயே பிரச்சனை. என்ன..அதிலே கேட்டிருந்தது என் கையில் இல்லை, அவ்வளவுதான். சரி, உங்களுக்கு என்ன சொல்கிறார்கள் என்று பின்னூட்ட ரேகையில் தெரிவிக்கவும்.

பி.கு: கைவிரல் ரேகை ஒவ்வொருத்தருக்கும் வேறுவேறுதானே..அது போல உதட்டு ரேகையும் ஆளுக்காள் வேறுபடுமாம்.(ரொம்ப அவசியம்! என்று நீங்க சொல்வது கேட்கிறது!!) ;O)

கள்ளனும் காசிநாதரும்

என்னுடைய அண்ணாமார் படித்தது, மட்டக்களப்பில் Central College என அறியப்படும் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் தான் . சின்ன வயதிலிருந்தே அவர்கள் விடுதியில் தங்கிப் படிக்க நேரிட்டது. அவர்கள் படிக்கும் போது தலைமையாசிரியராய் இருந்தவர் பிரின்ஸ் காசிநாதர். (1990 களில் பாராளுமன்றத்திற்கு மட்டக்களப்பு பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டவர்). இவரைப் பற்றி இலங்கை நண்பர்கள் அறிந்திருக்கக்கூடும். மிகவும் கண்டிப்பானவர். ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது எனக்கு இவரை யாரெனத் தெரியாது. நான் உள்ளே விடவில்லையாம். "உங்களை யாரென்று தெரியாது, அம்மா வரும் வரைக்கும் உங்களை உள்ளுக்கு விட முடியாது" என்று சொல்லி அவரை வெளியில் காக்க வைத்த 'பெருமை' என்னையே சாரும்.(நன்றி! நன்றி!!)

சொல்ல வந்ததை விட்டு விட்டு என் பெருமை பேசிக் கொண்டிருக்கிறேன். காசிநாதர் கண்டிப்பானவர் என்று சொன்னேன் தானே..விடுதியில் தங்கிப் படித்த ஒரு மாணவன் சரியான தெறிப்பாம்.( தெறிப்பு: குழப்படி என்றும் சுண்டுதல் என்றும் இரு பொருள்படும். கிழக்கின் வட்டார வழக்கு). ஒரு நாள் விடுதி மேலாளருக்குத் தெரியாமல் திரைப்படம் பார்க்கச் சென்றுவிட்டான் என்பதை யாரோ ஒரு 'நலம் விரும்பி' மேலாளருக்குத் தெரிவிக்க, அதை அவர் போய் காசிநாதரிடம் அறிவிக்க.. வந்தது வினை. ஐயா ஆறுதலாக படமெல்லாம் பார்த்துவிட்டு விடுதிக்கு திரும்பினாரா, அடுத்த நாள் தலைமையாசிரியரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது.

"டேய்! நீ படம் பாக்க போனியாமே?"
"ஐயோ! இல்ல சேர்!"
"உண்மையைச் சொல்லு...எந்தத் தியேட்டருக்கு போனனீ?"
"நான் போகல்ல சேர்!"
"படம் நல்லா இருந்ததா?"
"எனக்கு தெரியா சேர், நான் போகல்ல"

எத்தனையோ விதமாகக் கேட்டும் மாணவன் பிடி கொடுக்கவில்லை. "சரி! உன்னை நம்புறன்.. நீ போ!" என்றதுதான் தாமதம், தப்பினோம்! என்று மாணவன் வெளியேறும் போது

"படத்துக்கு போனது போனனீ..ஏன்டா செருப்பில்லாம போனாய்?"
"இல்ல சேர்..செருப்பு போட்டுட்டுத் தான் போனனான்"

அன்றைக்கு பிரம்புக்கு வேலை தான்! =O)

கவிதை என்ற பெயரில்..

பள்ளிக்கூடத்தில் தமிழ் மன்றம் நடத்தி வந்தோம். A/L படிக்கும் போது தமிழ் மீடியத்துக்குப் பொறுப்பான ஆசிரியையிடம் கெஞ்சி கூத்தாடி அனுமதி வாங்கி , பிறகு அவவையே தலைமையாசிரியையிடம் தூது அனுப்பி ஒருமாதிரி கஷ்டப் பட்டு அனுமதி எடுத்து ஒரு கலைவிழா நடத்தினோம். அதிலே ஒரு புத்தகம் வெளியிடுவது என்று முடிவெடுத்து அதற்கு கதை கவிதை கட்டுரை என்றெல்லாம் சேகரித்து வெளியிட்டோம். அதிலே பெரிய கவிஞி என்ற நினைப்பில் நான் எழுதிக் கொடுத்து வெளிவந்தது தான், எனக்கு நினைவு தெரிந்து முதல் முதலாய் நான் கிறுக்கிய கவிதை. அண்ணா சொல்வார் நான் சின்ன வயதிலேயே(அடடா...child prodigy!) கவிதை ஒன்று சொன்னேன்/எழுதினேன் என்று. எனக்கு ஞாபகமில்லை. 'எனக்குப் பசிக்குது, கடையில சாப்பாடு இருக்குது' என்று தொடருமாம், மீதி மறந்து விட்டார் (நல்ல காலம்...சின்ன அண்ணாவைக் கேட்க வேண்டும் என்று சொல்லவில்லை!!)

கலைவிழாவின் ஞாபக இதழில் வந்த என் 'கவிதை' எதைப் பற்றி என்று மறந்து விட்டேன்..புத்தகமும் கைவசமில்லை பார்த்து இங்கே தட்டச்ச.(தப்பினேன் என்று யாரோ சொல்வது கேட்பது போல ஒரு பிரமை!) =O)

பள்ளிக்கூடத்தில் கடைசி நாளுக்குச் சற்று முன், A/L பரீட்சைக்கு முன், எல்லோரும் ஆட்டோகிராஃப் பரிமாறிக் கொள்வது வழக்கம். அதிலே எழுதும் போது எல்லோருக்கும் தாங்கள் பெரிய கவிதாயினிகள் என்ற நினைப்புத் தான் (நானும் விதி விலக்கல்ல). உரியவரிடம் திரும்பி வரும்போது நிறைய 'நிலாப் பெண்'களும், 'உன் ஆயிரத்தொரு ஞாபகத்திலே என்னையும் ஒன்றாக்கு!' என்று கேட்பவர்களும் 'மரணப் படுக்கையிலும் பழகிய மணித்துளிகளை மறக்காத இன்னுயிர்த் தோழி'களும் அந்தச் சின்னப் புத்தகத்துக்குள்ளே குடி வந்திருப்பார்கள். உணர்வுகளையெல்லாம் தெரிவிக்கத் துடிக்கின்ற காலமும் வயதும் அது.

பள்ளிகூடத்திலிருந்து விலகுகிறோம் என்பதே எனக்கும் இன்னும் பலருக்கும் பெரிய தாக்கமாய் இருந்தது. கவிதையா இல்லை வசன நடையா என்ற தெளிவில்லாத ஒரு நடையில் அப்போது நான் எழுதியதுதான் இது:

பள்ளி வாழ்க்கை பருவ காலம்
பாதி வாழ்க்கையின் வசந்த காலம்
வசந்தம் தரு நாள் மாறிய போதும்
வாடாமலராய் நினைவுகள் நிலைக்கும்
பள்ளியில் பயின்ற காலங்கள்
வாழ்க்கைச் சோலையின் இனிய கோலங்கள்
காலங்கள் மாறலாம்...கோலங்கள் அழியுமா?
குறும்புடன் பேசி, குழப்படிகள் செய்து
கூடி மகிழ்ந்த அந்த மின்னல் வாழ்க்கை -
இனியும் வருமா? இன்பங்கள் தருமா?
எத்தனை எத்தனை நினைவு மீன்கள்
என் ஞாபக நீரோடையில்!
இதய உதட்டில் மென்வருடலாய்
வண்ணத்துப்பூச்சிகள் - MC யின்
ஞாபக வர்ணங்கள் என்றும் எனக்குள்ளே.



இதற்குப் பிறகு நான் கவிதை என்ற பெயரில் ஒரு முயற்சியும் செய்ததாய் ஞாபகமில்லை.

என்ன சத்தம் இந்த நேரம்..அரட்டை ஒலியா?

கோயிலுக்கு போனால் சில/பல வேளைகளில் அங்கே சிலர் நடந்து கொள்ளும் விதம் இருக்கிறதே..சீ! என்று ஆகி விடும். பூசை நடந்து கொண்டிருக்கும்...இவர்களோ பக்கத்திலிருக்கும் தோழியிடம் நேற்றுப் போன கல்யாண வீட்டைப் பற்றியோ மகன்/மகள் செய்யும் வேலைகள் பற்றியோ அளந்து கொண்டிருப்பார்கள்.(வயது வந்தவர்களில் இந்த அநியாயத்தைச் செய்பவர்கள் 99.9% பெண்களே என்பது வருத்தத்துக்குரியது!). பதின் வயதினரைக் (teenagers) கேட்கவே வேண்டாம்..அம்மா நேற்று ஷொப்பிங் போக விடவில்லை என்பதிலிருந்து யாரை சைட் அடித்தார்கள் என்பது வரை அங்கே அரங்கேறும்(இவ்வயதினர்க்கு எதை எங்கே கதைப்பது என்கிற விவஸ்தையே இல்லை..திருவிழாவின் போது ஒருநாள் நடந்தது...முற்றிலும் உண்மை: ஒரு பெண் தன் தோழியிடம் சொன்னாளாம் "can you believe I'm still a virgin" என்று!! அவளுக்குப் பக்கத்தில் நின்று கொன்டிருந்த என் கணவரின் நண்பர் திரும்பி அவளைப் பார்த்து "Good for you" என்று சொன்னாராம். இயல்பாகவே இவர்களைப் பற்றிய கவலை எழுகிறது!). இவர்களுக்கு ஒரு விஷயத்தைக் கதைத்தே தீர வேண்டிய அவசியம் இருந்தால்:
(1) கோயிலில் வெளியே போய் கதைக்கலாம்.
(2) வீட்டிற்குப் போய் தொ(ல்)லைபேசியில் அலட்டலாம்.

மற்றவர்களும் கோயிலில் இருக்கிறார்களே, பூசை நடக்கிறதே மௌனமாக இருந்து கும்பிடுவோம் என்று ஏன் இவர்கள் நினைப்பதில்லை? எத்தனையோ முறை நான் திரும்பிப் பார்த்து "பூசை நடக்கிறது" என்று சொல்லியிருக்கிறேன். ஏதோ வேற்றுக்கிரகத்திலிருந்து வந்த ஒரு புதினமான உயிரினத்தைப் பார்ப்பது போல ஒரு பார்வை வீசுவார்கள்..பிறகு பூசை முடியும் வரை அல்லது சில வேளைகளில் கோயிலை விட்டுப் போகும் வரையும் கூட நான் ஏதோ செய்யக் கூடாததைச் செய்து விட்ட மாதிரி முறைத்துக் கொண்டேயிருப்பார்கள்!! சொல்லியும், ஒரு நிமிஷம் கடமைக்கு பேசாதிருந்து விட்டு மீண்டும் "கச்சேரியை" ஆரம்பிக்கிறவர்களும் உண்டு.

எப்படி, என்னத்தைச் சொன்னால் நம்மவர் இந்த மாதிரி நடந்து கொள்வது குறையும்? யாருக்காவது தெரியுமா?

சூ! மந்திரக்காளி

வேலையில் இருந்தபடியே "இரவுச் சாப்பாடு என்ன" என்று இந்த மனம் முன்னோக்கி (அடடா..!!) சிந்திக்க (சமையல் என்றாலே 'ஒவ்வாமை' <--அதான் allergy!!; அதுக்குள்ளே planning வேறே!) காளான் குழம்பு, முருங்கைகாய் வெள்ளை/பால் கறி, முட்டைப் பொரியல் செய்யலாம் என்று (கஷ்டப்பட்டு) நினைத்து வைத்திருந்தேன். வேலையிலிருந்து pick பண்ணும் போதே அன்புக் கணவர் திருவாய் மலர்ந்தார் "எனக்கு இன்றைக்கு 'ஜனனி'யில மீன் மசாலா தோசை தான் வேணும்"

மனதிற்குள் "அப்பாடா! இன்றைக்கு சமைக்கிறதிலிருந்து தப்பினோம்"
(என்றாலும் காட்டிக் கொள்ளாமல்) வெளியே சத்தமாக : "நான் இன்றைக்கு இதெல்லாம் சமைக்க என்று நினைச்சனான்"...list வாசித்தேன்
கணவர் திடீரென்று வெளியில் தலை நீட்டிப் பார்த்து "மழைக்கு இருட்டுதம்மா" ( நான் "நற நற")

வேலையிலிருந்து கிட்டத்தட்ட ஒரு 20 நிமிட drive இல் தான் (என் வயிற்றில் பால் வார்த்த)ஜனனி உணவகம் இருக்கிறது. driving....

அங்கே போனால்...பூட்டப்பட்டிருக்கிறது என்று சொல்லும் பலகை தொங்குகிறது. ஜனனி உட்பட பல இலங்கை உணவகங்கள் திங்கட் கிழமைகளில் திறப்பதில்லை. மனக்குரல் "ஐய்யய்யோ...சமைக்கணுமோ??"

கணவர் முகம் =O( . "சரி, உன் நண்பி சொன்னாளே, அந்த 'ராம்ஸ்' கடைக்குப் போவம்"
(வயிற்றில் மீண்டும் பால்+தேன் ;O) )

ராம்ஸை தேடியதுதான் மிச்சம்...கண்டே பிடிக்க முடியவில்லை (அட ராமா!!). பிறகென்ன..."மந்திரக்கோல் ஒன்று என்னிடம் இருந்தால் அதை ஒரு "விசுக்கு" விசுக்கி விதம் விதமா சாப்பாடு வரச் செய்யலாம் என்ன!" என்று நிறைவேறாத ஆசையெல்லாம் வெளிப்பட 3 மாடி (மூச்சு வாங்க) ஏறி, கதவு திறந்து, வீட்டிற்கு வந்து அவர் அரிசி போட... நான் கறி சமைக்க...(என்ன சிரிப்பு?)

நல்லா சாப்பிட்டு வந்து கணினிக்கு முன்னாலிருந்து இதை தட்டச்சுகிறேன்.
மனம்:" நாளைக்கு சமைக்கணுமே...என்ன கறி வைக்கலாம்?"
நாளைய பிரச்சனை நாளைக்கு! என்று யாராவது இந்த "மனத்துக்கு" சொல்லுங்களேன்!

மீண்டும் ஒரு முறை சந்திப்போமா...

நான் 4 பள்ளிக்கூடங்களில் படித்திருக்கிறேன். பள்ளிக்கூடத்தில் என்னோடு ஒன்றாகப் படித்த சில தோழிகளை தேடிப் பிடிக்க வேண்டும்; அவர்கள் இப்போது எங்கே, எப்படி இருக்கிறார்களோ , மீண்டும் ஒரு முறை அவர்களச் சந்திக்கக் கிடைத்தால் எவ்வளவு நல்லாக இருக்கும் என்றெல்லாம் மனம் கற்பனை வளர்க்கிறது. இனி, காணாமல் போனவர் விபரம் =O)

தோழி 1:

தேடுகின்ற முதல் தோழிக்கு பிரசாந்தி என்று பெயர்.(அவர்கள் சாய் பாபா பக்தர்கள்).என்னோடு முதல் பள்ளிகூடத்தில் முதலாம் ஆண்டு முதல் 4ம் ஆண்டு வரையும், பிறகு 2ம் பள்ளிக்கூடத்தில் 7ம் ஆண்டு வரையும் படித்தவள். 1990ம் ஆண்டு, பிரச்சனையால் நாங்கள் கொழும்புக்கு குடிபெயர்ந்தோம். ஊருக்குத் திரும்பவும் 1994ம் ஆண்டு ரயிலில் போய் விட்டு வரும் போது நடுவில் ஒரே இரயில் நிலையத்தில் கொழும்பு-->மட்டக்களப்பு & மட்டக்களப்பு-->கொழும்பு இரண்டு புகைவண்டியும் நிறுத்த நேர்ந்தது. தண்ணீர் / உடல் உபாதை என்று பலரும் இறங்கி ஏறிக் கொண்டிருந்த போது நாங்கள் சந்தித்துக் கொண்டோம். (காதல் கதையில் எழுதுற மாதிரி இருக்கு lol) அவசர நலவிசாரிப்புகளின் பரிமாற்றம். அவளைக் கடைசியாகக் கண்டது நான் மீண்டுமொருமுறை ஊருக்குப் போன போது(ஆண்டு சரியாக ஞாபகமில்லை). ஆனாலும் நான் அறிமுகப்படுத்தாமலே சரியாக அடையாளம் தெரிந்து கொண்டாள். 1999 இல் கேள்விப்பட்டேன் அவள் லண்டனில் தன் சகோதரி(கள்)உடன் வசிப்பதாக. விபரம் தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்?

தோழி 2:

இவள் பெயர் யசோதா ('யசோதரா'வாக கூட இருக்கலாம்). இவள் தொடர்பற்றுப் போனது 1990ம் ஆண்டுடன். ஒழுங்காக, சினேகமாய்த் தான் பழகினோம். எங்கள் வகுப்பில் 4/5 பிள்ளைகள்...ஒருவருடன் ஒருவர் கோபம். இவள் இந்தப் பக்கம் வந்தால், அவள் வகுப்பின் மற்றப் பக்கத்தால் செல்வாள்.(இதற்கும், தோழிக்கும் என்ன சம்பந்தம் என்று எரிச்சல் படாமல்...வாசியுங்கள்) அப்போது 11/12 வயது இருக்கும். ஒருவருடன் கோபம் போடுவது fashion என்று நினைத்தேனோ என்னவோ..இதுவரை காரணம் ஞாபகமில்லை...யசோதாவுடன் கண்ணைக் கட்டி கோபம். (நல்ல காலம் பாம்பு வந்து கொத்தவில்லை!! =O)) . பிரச்சனையும் வந்து கொழும்பிற்கும் வந்தாயிற்று. திரும்ப ஊருக்குப் போன சமயத்தில் இன்னொரு நண்பியிடம் கேட்டேன்..."யசோ எப்பிடி?". ஏன்டா கேட்டோம் என்று ஆகிவிட்டது.......1990ம் ஆண்டுப் பிரச்சனையில் அம்மாவையும் அப்பாவையும் அந்தப் பெண் இழந்து விட்டாளாம், அவளும் தங்கையும் மாமாவுடன் தான் இப்போது வசிக்கிறார்கள் என்றும் அறிந்தேன். இந்தத் தோழியை எப்படியாவது சந்தித்து விட வேண்டும்...

ஏன்??

ஒரு ஊரிலே ஒரு மாடு இருந்ததாம். ஒரு நாள் அது ஊரைச் சுற்றி வரும் போது ஒரு கடையின் கதவின் முன் நின்று கதவை நக்கிற்றாம், ஏன்??

நன்றி: லவன், 1999

மாமியும் மருமகளும்

வந்தியத் தேவன் 55 சொற்களில் எழுதியதை வாசித்த போது மாமி அம்மாவுக்குச் சொன்னது ஞாபகம் வந்தது.மாமி கனடாவால் 8/10 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருந்த சமயம் அது. கனடா வர்ணனை முடிந்து என் மச்சா(ள்+ன்), கனடாவிலே இருக்கும் மாமியின் சகோதரியின் பிள்ளைகளைப் பற்றிக் கதை வந்தது. மச்சானின் திருமணம் நடந்து ஒரு வருடமும், மச்சானுடைய சித்தி மகளுக்கு திருமணம் முடிந்து 8 - 9 மாதங்களும் ஆகியிருந்தது. மருமக்களை பற்றிக் கேட்டதற்கு மாமி சொன்னா:

"என்னத்த சொல்றது?தங்கச்சிட மருமகன் தங்கமான பெடியன். சுதாவை ஒரு வேலையும் தனியா செய்ய விடுறதில்லை.எல்லா வேலைக்கும் உதவி செய்வார். காலையில தேத்தண்ணி போட்டு குடுக்கிறதும் அவர்தான். அதுக்கு இருக்குது எனக்கு வந்த மருமகள்...ஒரு வேலையும் செய்யாது. அவவுக்கு காலை coffee பிரசாத் போட்டு குடுத்து எழுப்புவான். சமையலும் அரைவாசி அவன் தான்."

சுதாவுக்கு கணவர் செய்வதை சிலாகிக்கும் மாமியால், அதையே தான், தன் மகன் மருமகளுக்குச் செய்கிறான் என்று உணர முடியவில்லை. பாசம் கண்ணை மறைப்பது என்பது இதுதானா?

(இத்தனைக்கும் மாமி ஒரு ஆசிரியை!)

மழை வருது..மழை வருது...குடை கொண்டு வா!!

அன்று மாமா,மாமி ஊரிலிருந்து வருவதாக இருந்தது. ஆனால் இரவு 8.30 ஆகியும் வரவில்லை. நாங்கள் நாடகம் பார்க்க தொ.கா.வின் முன்னால் இருந்து விட்டோம்.வழமையாக தொடர்ந்து பார்க்கின்ற நாடகம்...அம்மா அதிலேயே ஒன்றிப் போயிருந்தா. ஒரு கதா பாத்திரம் எங்கோ சென்று திரும்பும்பொழுது பலத்த மழை பெய்கிறது. ஒரு கொட்டிலில் அவசரத்திற்கு ஒதுங்குகிறார்.
அப்போது பார்த்து gate இல் தட்டிச் சத்தம் கேட்டது. அப்போது நாங்கள் இருந்த வீட்டில் வாசல்கதவோடு தான் TV யை வைத்திருந்தோம்.TVக்குப் பக்கத்திலேயே ஒரு சின்ன மேசை. அதில் தான் அம்மாவின் Handbag குடை எல்லாம் வைப்பது வழக்கம். gate இல் தட்டிச் சத்தம் கேட்டது தான் தாமதம் அம்மா TV யிலிருந்து பார்வையை விலக்காமலே வாசலுக்குப் போனார்.திடீரென்று எதோ ஞாபகம் வந்தவர் போல ஓடி வந்து TV பக்கத்திலிருந்த மேசையில் வைத்திருந்த தன் குடையை எடுத்து விரித்துக் கொண்டு gate ஐ திறக்கப் போனார். உள்ளே வந்த மாமா மாமிக்கோ ஏன் அம்மா மழை பெய்யாத போது "நனைந்து விடுவீர்கள்" எனக் குடை விரித்துப் பிடிக்கிறார் என விளங்கவில்லை...அம்மாவிடம் கேட்டார்கள், அப்போது தான் அம்மாவுக்கு உறைத்தது..தான் TVயில் மழை பார்த்து விட்டு உண்மையாகவே பெய்கிறது என நினத்துக் குடை பிடித்திருக்கிறா என்று. பிறகு அங்கே பெய்தது சிரிப்பு மழைதான்!

சரவணபவனில் மகாராஜா

ஒரு நாள் சதீசும் மற்றைய 4/5 நண்பர்களும் நல்லாக பியர்+வேறு உற்சாக பானங்கள் அருந்தி விட்டு, கொழும்பு-வெள்ளவத்தையில் இருக்கும் சரவணபவன் சைவ உணவகத்திற்கு போனார்களாம். அங்கே உணவு பரிமாறுபவர்கள்(waiters) தமிழ்ப் படங்களில் வரும் அரச சேவகர் போல் தலைப்பாகை அணிந்திருப்பார்கள். நண்பர் கூட்டத்திற்கு நல்ல பசி+வெறி. waiter வருவார் என்று பொறுமையாய் காத்திருக்க, கூட்டத்தில் ஒருவன் கையைத் தட்டி "யாரங்கே" என்று சொல்லவும், waiter வரவும் சரியாய் இருந்திருக்கிறது.

"அரசன் நான் வந்து எவ்வளவு நேரம் காத்திருப்பது, உடனே 10 தோப்புக்கரணம் போடு!" என்று சொல்லியிருக்கிறான். waiter ம் இவர்களை humour பண்ண நினைத்து "சரி மகாராஜா" என்று ஒரு தோப்புக்கரணம் மட்டும்போட்டிருக்கிறார். பிறகு "என்ன உணவு வேண்டும்" எனக் கேட்டு எல்லோரது ஓடரையும் எடுத்துக்கொண்டிருக்க, மீதி தோப்புக்கரணம் போடவில்லையென்று மகாராஜாவுக்கு கோபம் வந்துவிட்டது. ரகளை பெரிதாக முன்பு இதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முகாமையாளர் ஒடி வந்து waiterஐ காப்பாற்றி விட்டராம். "எனக்கே சாப்பாடு தராமல் துரத்தி விட்டார்களே"என்று திரும்பி வருகையில் மகாராஜா ஒரே புலம்பலாம்!

இப்போது இந்தக் கூட்டத்திலுள்ள ஒருவருக்கும் அங்கே அனுமதி இல்லை என்று கேள்வி =O).

ஹலோ... யார் கதைக்கிறது?

இது நடந்து இப்ப ஒரு 10 / 11 வருசம் இருக்கும். ஒரு நாள் என் நண்பி வீட்டில் (வழக்கம் போல் முழு நாளும்) இருந்து "சல்"லடித்துக் கொண்டு இருந்தோம். திடீரென தொலைபேசி சிணுங்க தோழியின் தம்பி எடுத்தான். நண்பிக்கு அழைப்பு. நாங்கள் இருந்த அறைக்குள் வந்தான்,

தம்பி: ஷ்ரேயா அக்கா ....நீங்க போன்ல
நண்பி: என்ன?

(நண்பியும் நானும்...!?!?!?) (ஏனென்றால் அவளது நண்பியர் கூட்டத்தில் ஷ்ரேயா என்ற பெயரில் 2 பேர் தான். என் பெயர் + அப்பா பெயர் = "ஷ்ரேயா மழைப்பெண்" என்று வைத்துக் கொள்வோம்)

நண்பி "இவன் என்ன உளறுறான்" என்ற படியே போய் தொலைபேசியை எடுத்து,

நண்பி: ஹலோ யார் கதைக்கிறது?

தொ.பே.குரல் என்ன சொல்லிற்றோ.. நண்பி ரிசீவரை பொத்திக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள். சிரித்த சிரிப்பில் அவளுக்கு கண்ணீர் வந்து விட்டது.என்னிடம் தொலை பேசியை நீட்டினாள்.

நான்: ஹலோ

தொ.பே குரல்: ஹலோ...

நான்: யாரோட கதைக்க வேணும்?

தொ.பே குரல்: கௌரியோட

நான்: நீங்க யார் கதைக்கிறது?

தொ.பே குரல்: ஷ்ரேயா கதைக்கிறன்

நான்: ஷ்ரேயாவா? எந்த ஷ்ரேயா?

தொ.பே குரல்: ஷ்ரேயா மழைப்பெண்

நான்: நான் ஷ்ரேயா மழைப்பெண் கதைக்கிறன்...

தொ.பே.யை வைத்து விட்டார்கள். அன்றைக்குச் சிரித்த சிரிப்பிற்கு அளவு கணக்கில்லை. பிறகு தான் தெரிய வந்தது - என் நண்பியோடு சினேகமாக விரும்பிய (காதலிக்க அல்ல!) பையன் தான் தனது அக்காவிடம் சொல்லி அப்படி தொலைபேசியிருக்கிறான் என்று!! இப்போது அவன் எங்கள் நல்ல நண்பன்.

இப்போதும் இதைச் சொல்லி அவனைக் கடிப்போம், எனக்கு ஒரு ஆசை..இதை அவன் மனைவியிடம் சொல்லிச் சிரிக்க!!

ப்ரில்லியன்ட் டியூப் லைட்?

தோழி வீட்டிற்குப் போயிருந்தேன். கெட்டிக்காரர்களைப் பற்றி கதை வந்தது. சில வேளைகளில் அவர்களுக்கு மிக இலகுவான விஷயத்தையும் விளங்கிக் கொள்ள சிரமமாக இருக்கிறது என்பதைப் பற்றி தோழியின் தங்கை சொன்னாள். அவளது வகுப்பில் ஒருத்தி இருக்கிறாளாம்...பேச்சுக்கு அவள் பெயர் கவிதா என்று வைத்துக் கொள்வோம்.

உதாரணம் 1:
மாணவி 1: என் அம்மாக்கு ஸ்பீடிங் டிக்கெட் வந்திருக்கு
கவிதா: ஏன்?என்ன செய்தாங்க?


உதாரணம் 2:
மாணவி 1: நான் தலை மயிரை ப்ளீச் பண்ணப் போகிறேன்
கவிதா:என்ன கலர்க்கு?

நம்மிடையே நிறைய கவிதாக்கள்.

நானும் இந்த டியூப் லைட் கேள்வியெல்லாம் கேட்டு சிரிப்புக்கு ஆளாகியிருக்கிறேன்.(நான் brilliant என்று சொல்லவில்லை!) என் அனுபவம் ஒன்று:

தோழி: இந்த புதன்கிழமை என் பேரன்ட்ஸ் வெடிங் அனிவசரி.
நான்: அம்மாவுக்கும் அப்பாவுக்குமா?
(சுற்றியிருந்த நண்பர் கூட்டம் "கொல்" சிரிப்பு!)(நானும் ஒப்புக்கு சிரித்து வைத்தேன்! வேறென்ன செய்ய?)

நானும் மைக்கல் ஜாக்சனும்

9ம் ஆண்டில் நான் வேறு ஒரு பாடசாலையில் சேர்ந்தேன்.
எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது - என் வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகளில் சிலர் ஒரு கூட்டமாக இருந்து ஆங்கிலத்தில் கதைத்துக் கொண்டிருந்தார்கள். நான் அது வரை படித்திருந்தது தமிழில்."என்னடா இது, அம்மா திடீரென்று English medium இல் கொண்டு வந்து சேர்த்து விட்டாவே" என்று எனக்குள்ளேயே நினைத்துப் பயந்து போனேன்.அம்மாவை ஏசாத குறை! ஆசிரியர் வந்து தமிழில் பாடம் நடத்தத் தொடங்கிய பின்தான் நிம்மதியாயிற்று.


அன்றே இன்னொரு சம்பவமும் நடந்தது.
எனக்குப் பக்கத்திலிருந்த பெண் "do you listen to English songs?" என்று கேட்டாள். ஏனோ "yes "என்று சொல்லி விட்டேன்.அடுத்த கேள்வி வந்தது..." Do you have black or white?"
நான் யோசிக்கிறேன் - என்னத்தில் கறுப்பா வெள்ளையா இருக்கிறது எனக் கேட்கிறாள் இவள் என்று!(அப்போது எனக்குத் தெரியாது என்னிடம் Michael Jackson பாடிய Black or white பாட்டைப் பற்றித் தான் கேட்கிறாள் என்று!!) இல்லை என்று சொன்னால் என்ன நினைப்பாளோ என்பதற்காக "white" என்னிடம்இருக்கிறது என்று சொன்ன ஞாபகம்.என்னை ஒரு மாதிரிப் பார்த்தாள். வேறு ஒன்றும் சொல்லவில்லை. நாள் போகப் போக நாங்கள்நல்ல நண்பிகளாகி விட்டோம்.இந்தச் சம்பவம் அவளுக்கு நினைவிருக்குமோ தெரியவில்லை. (என்னத்தைக்
கேட்டாள் எனக்குத் தெரியவில்லையே என்ற வீராவேசத்திலும், இவள் கேள்வி கேட்டால்சொல்வதற்கும் என்றே வீட்டில் ஆங்கிலப் பாட்டு கேட்டதும் வானொலியில் english station பிடித்து வைத்திருந்ததும் தனிக்கதை.)

பழைய குருடி கதவைத் திறடி

என் தோழிக்கு தங்கிலீஷ் தான் தாய்மொழி. நாங்கள் "suம்மா" என்றால் அவள் "Chuம்மா" என்பாள். இதனாலேயே கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவதுண்டு. ஒருமுறை எங்கோ போயிருந்த போது அளவான உயரத்துடனிருந்த வாசலைக் கடக்கையில் ஐந்தடி உள்ள அவள் தன் தலையைக் குனிந்து கொண்டதைக் கண்ட நான் சொன்னேன் "நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கிறது" என்று. அவளுக்கு நான் சொன்னது விளங்கவில்லை...

தோழி: What is பிழைப்பு?

நான்: Living / life

தோழி: What does that have to do with my rememberance?

நான்: ???

முழித்த அனுபவத்தில் உவமை சொல்வதையே நிறுத்தி விட்டேன். நேற்று மின்னஞ்சல் பண்ணும்போது "Pazhaya kurudi kathavai thiradi" (பழைய குருடி கதவைத் திறடி) என்று எதற்காகவோ எழுதி அனுப்பினேன்...வந்ததே பதில்...ஆகா!
"why is the old blind person stealing the door? pleae explain"
எனக்கும் முதலில் விளங்கவில்லை....

ப.கு.க.திறடி என்பதை ப.கு.க.திருடி என்று வாசித்ததால் வந்த வினை!

திருவிழா

திருவிழாவின் 6ம் நாள் இன்று. எங்களுடைய, பக்கத்திலிருக்கும் , ஊர்க்கள் தான் இன்றைய உபயகாரர்கள். ஒவ்வொரு நாளும் மேள, நாதஸ்வரக் கச்சேரி சுவாமி வீதிவலத்திற்குப் பின் நடக்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்திற்கு தொடராதா என ஏங்க வைப்பதிலேயே குறியாய்
இருக்கிறhர்கள். நான் இவர்களிடம் வைத்திருப்பது பிரமிப்புக் கலந்த மரியாதை.

எனக்குப் பிடித்த பலவற்றில் முதலிடம் வானத்திலிருந்து நீளும் வெள்ளித் துளிச்சரங்களுக்கே!

அடடா கவிதை மாதிரி எல்லாம் வருதே!!LOL =O)

பெட்டகம்