என்மொழி இன்மொழி

வேலைத் தலத்தில் என்னையும் சேர்த்து 3 இலங்கையர். அனேகமாக ஒன்றாகத்தான் மதிய உணவை உண்போம். மற்ற இருவரும் சிங்களவர் என்றாலும் எனக்காக முதலில் ஆங்கிலத்தில் தான் கதைத்தார்கள். என் சிங்கள(பேச்சுப் பழக்க)த்தை மறக்காதிருக்க வேண்டும் என்பதால் அவர்களுடன் சிங்களத்தில் கதைக்கத் தொடங்கினேன். இப்போது சாப்பாட்டு அறைக்குள் மற்றவர்கள் வந்தாலும் நாங்கள் மூவரும் சிங்களத்திலேயே தொடர்ந்தும் உரையாடுவோம். எங்கள் பட்டப்பெயர் : Sri Lankan Mafia!

இந்த மாஃபியாவிலே "ரங்கிக", நடந்த சம்பவங்களை சுவைபடச் சொல்லுவதில் விண்ணன்.ஒரு முறை இலங்கையில் தங்களது CIMA வகுப்பில் நடந்தததாம் என்று இதைச் சொன்னார்:

ஒரு மாணவன், இங்கிலாந்திலிருந்து திரும்பியவன். பிரிடிட்டிஷ் accent உடன் ஆங்கிலத்தில் கதைப்பதும், ஆசிரியரிடம் கேள்விகள் கேட்பதும் என்று பெரும் அலட்டல் பேர்வழியாம். மற்றவர்களெல்லாரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து இயலாக் கட்டத்தில் ஒரு நாள் அவனிடம் எப்போது இங்கிலாந்திற்குப் போனாய், எங்கே படித்தாய் என்று பூர்வீக விசாரணை நடத்தியிருக்கிறார்கள். தான் சாதாரண தரப் பரீட்சைக்கு (16 வயது) இலங்கையில் தோற்றிய பின்பு இங்கிலாந்து சென்றதாயும், இப்போ 7 - 8 வருடங்கள் இங்கிலாந்திலேயே இருந்து படித்து விட்டதால் சிங்களம் சுத்தமாக மறந்து விட்டதென்றும் சொல்லியிருக்கிறான். இவர்களும் ஒன்றும் பேசாமல் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து விட்டு "அப்படியா" என்று எல்லாத்தையும் கேட்டுக் கொண்டார்களாம்.

வகுப்பு நடப்பது கடற்கரைக்கு அண்மையில். மதிய உணவு இடைவேளையில் கடற்கரைக்குச் சென்று அலையில் விளையாடுவது வழக்கமாம். ஒருநாள் அலட்டல் மாணவனையும் அழைக்க, அவனும் கடற்கரைக்கு சென்றிருக்கிறான். மாணவர்களில் ஒருவன் அல.மாணவனின் காலணிகளை கழற்றியிருந்த இடத்திலிருந்து எடுத்து வந்து கடலுக்குள் எறிந்து விட்டானாம். அல. மா.வும் காலணிகளி மீட்க காற்சட்டை நனைந்து விடாமல் தூக்கிய படியே மெது மெதுவாக நீருக்குள் செல்லும் போது, காலணிகளை எறிந்த மாணவன் பின்னாலிருந்து இவனை பலமாக நீருக்குள் தள்ளி விட்டானாம்.

"புது அம்மோ" ( ஐயோ அம்மா) என்று சொல்லிக்கொண்டே அல.மா. நீருக்குள் விழுந்தானாம்.

அந்தச் சம்பவத்திற்குப் பின் வகுப்பில் யார் என்ன கேட்டாலும் முழுக்க முழுக்க சிங்களத்திலேயே பதில் சொல்வானாம்.

சொந்த மொழியை, பேசுவதில் இவ்வளவு வெட்கமும் தயக்கமும் எதற்கு? இங்கே அவுஸ்திரேலியாவில் பார்க்கிறேன், தமிழைப் பேசத் தெரியாது, அப்படியே தெரிந்தாலும் கதைப்பதற்கு வெட்கம் அல்லது ஆங்கிலத்தைக் கதைப்பது போல ஒரு accent உடன் பேசுகிறார்கள். பெற்றோரே "என்ட பிள்ளைக்கு தமிழ் தெரியாது " என்று பெருமையடிக்கும் போது முகத்திலே 2 விட வேண்டும் போல இருக்கும். இரண்டு மொழிகள் தெரிந்திருப்பதில் நன்மையே தவிர தீதில்லை. தமிழ்ப் பிள்ளைக்குத் தமிழ் வராது/தெரியாது, ஆனால் பள்ளியில் 2ம் பாடமாக பிரெஞ்சோ, சீனமோ படிக்கும், அதைப் பெருமையாகவும் கதைக்கும். இதை ஊக்குவிக்க இங்கே நிறையவே பெற்றோருமுண்டு.எங்கே போய் சொல்வது!

அறிவித்தல்

தமிழ் கற்பிக்க ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்கலாம் என்று சொன்னேன் தானே..அதற்கு டோண்டு ராகவன் தன்னாலியன்ற உதவி செய்வதாக கூறியுள்ளார். சந்திரவதனாவும் உதவுவதாக சொன்னா. இருவருக்கும் நன்றி. ஒருத்தரும் தமிழ் வாத்தியாரக முன்மொழியப்படவில்லை. எனவே நானே உருவாக்கப்போகிறேன். (தலையில் அடித்துக் கொள்ளும் சத்தம் நிறையவே கேட்கிறது! :0)). எனக்கு பள்ளிக்கூடத்தில் திட்டித் திட்டிப் படித்த இலக்கணம் கொஞ்சம் தான் ஞாபகத்திலிருக்கிறது. என்ன ஒழுங்கில் ஆரம்பிக்கலாம் என்பது பற்றி ஒரு மூளைப்புயல் நடத்திக் கொண்டிருக்கிறேன் ..எனக்குள்ளே. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன். இந்த வலைப்பதிவை (அடிப்படை தோற்றத்துடன்) உருவாக்கியிருப்பினும் இன்னும் பதிவுகள் எதுவும் இல்லை. அதிகாரபூர்வமாக தொடங்க சில நாட்கள்/ வாரங்கள் ஆகலாம். என்ன பெயர் வைக்கலாம் தலைப்பாக?யார் பதிவதாக போடலாம்?

என் கிறுக்கல் பலகையில் கேட்டிருப்பதை மீண்டும் இங்கே கேட்கிறேன். இலங்கையில் பள்ளிக்கூடத்தில் பாட நூல்கள் இலவசம். எனக்கு அப்புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள வசதியுண்டு. இந்தியாவில் பாடப்புத்தகங்கள் என்ன முறையில் விநியோகிக்கப்பட்டன?இலவசமாகவா அல்லது வாங்க வேண்டியிருந்ததா? குறிப்பாக ஏதாவது புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்டதா? இவற்றை எங்கே பெறலாம்? வலைப்பதிவரில் யாராவது தமிழை கல்லூரியில் பட்டப்படிப்பிற்காக அல்லது வேலை நிமித்தமாக படித்தவர்கள் இருக்கிறார்களா?

நிறையக் கேள்விகள் கேட்கிறேன்..உங்கள் கருத்துக்களை அறியத்தரவும்.


அறிவித்தல் 2: சிட்னி முருகன் கோயிலின் மஹோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகிறது. பூங்காவனம் சி.மு.இளைஞர் வட்டத்தினரால் வருடா வருடம் பொறுப்பேற்கப்பட்டு விமரிசையாக நடத்தப் பெறும் நிகழ்வு.. அதற்கு ஆயத்தம் செய்யுமுகமாக வரும் சனிக்கிழமை(19-மார்ச்) பலகாரம் தயாரிக்கப்பட இருக்கிறது. மத்தியானம் 1 மணி போல ஆரம்பிக்க யோசித்திருக்கிறோம். சிட்னி வாழ் இளைஞர்கள்/சிட்னி விருந்தாளிகள் விருப்பமிருந்தால் வந்து உதவலாம். மேலும் தகவல்களை இங்கே பெற்றுக் கொள்ளலாம். பாமினி எழுத்துரு தேவைப்படும்:

கற்போம் கற்பிப்போம்

சந்திரவதனாவின் பதிவில் இதை வாசித்ததும் ஒரு வாரமாக என் மனதில் நாளொரு மேனியும்(இது எப்படி சாத்தியம்..கூடு விட்டு கூடு பாய்கிறதா?) பொழுதொரு வண்ணமுமாக ( டியுலக்ஸ் பூச்சு உபயத்தில்) வளர்ந்து வந்த ஒரு எண்ணம் வலுப்பெற்றுள்ளது. சிறுவயதிலிருந்தே தமிழை படித்திருப்பதால் எங்களுக்கு இங்கே எண்ணங்களை எழுத்தில் பரிமாறிக் கொள்வது இலகுவாக இருக்கிறது. புலத்தில் வளரும் எங்கள் அடுத்த தலைமுறையினரின் தமிழறிவு எந்தளவில் இருக்கிறது? வகுப்புக்குப் போய் இருந்து 1 - 2 மணித்தியாலம் செலவழித்து, தான் உபயோகிக்காத மொழியைப் படிப்பதால் என்ன பயன் என்று தான் பல சிறார்கள் நினைக்கிறார்கள். இணைய மேய்தல் ஒரு பொழுது போக்காக இருக்கின்ற இவர்களுக்கும், தமிழ் படிக்க விரும்பும், தமிழில் கருத்துப் பரிமாற்றம் செய்ய விரும்பும் எவருக்கும் உதவியாக, கற்றலின் ஆரம்பமாக ஒரு தமிழ் கற்பிக்கும் பதிவினை உருவாக்குவோமா?

பாலர் பாடசாலைகளில், முதலாம் வகுப்புகளில் போன்று “ஆனா”, “ஆவன்னா” சொல்லி ஏடு தொடக்கி, கொஞ்சங் கொஞ்சமாய் சொற்களை அறிமுகப்படுத்தி, இலக்கணத்தையும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் முறையில் எழுத்தறிவிக்கலாம்.(இப்பிடியாவது, நேர் நேர், நேர் நிரை எல்லாம் எனக்கும் தெரியவரட்டுமே!!). இந்தப்பதிவில் சின்ன வகுப்புகளில் மாதிரி இடையிடையே சிறுவர் பாட்டுக்களையும் ( உ+ம் க.தோ. வெருளி, ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி..) சேர்த்துக் கொள்ளலாம்.

விளக்கங்களை ஆங்கிலத்தில் இடலாம். பிறகு தேவையேற்படின் பிரெஞ்சு, ஜேர்மன், மற்றும் வேறு மொழிகளிலும் விளக்கங்களைத் தரலாம். வலைவசம் (“கைவசம்” இப்படி உருமாறிவிட்டது!) மொழிபெயர்ப்பாளர் டோண்டு ராகவன் இருக்கிறார், அவரிடம் கேட்கலாம். (உங்களிடம் அனுமதி கேட்காமலே, உங்களிடம் உதவி கேட்கலாம் என்று எழுதி விட்டேன் டோண்டு ராகவன், மன்னிக்க வேண்டும்.) (நீங்க இனிமேல் தப்ப முடியாது :o) )

என்ன சொல்றீங்க? யாரைத் தமிழ் வாத்தியாராகப் போடலாம்?

ஓ போடுங்க!

சில நாட்கள்/வாரங்கள்/மாதங்கள் மிகவும் விரைவாக ஓடி மறைகின்றதா? இல்லாட்டி நான் அதனுடன் போட்டி போடுற வேகம் குறையவா? (சுசந்திகா / பீ.டி உஷா / மரியன் ஜோன்ஸ் / கதி ஃப்ரீமன் தரவழியா இருக்க வேணுமோ!!)

வீட்டில் இருக்கும் போது இப்படி இருப்பதில்லை (9 மணிக்கு பள்ளியெழுகின்ற வார இறுதிகள் இதற்குள் சேர்த்தியில்லை!!) ஒருவேளை வேலைக்குப் போவதால்தான் காலம் இப்படி (என் மாட்டேற்றுச் சட்டத்தில்..என் சார்பாக..ம்ம்..relativly :o) )கடுகதியில் ஓடி மறையுதா?

ஒரு வேலையை செய்யும் போது, அதாவது செய்யும் ஒரே விடயத்தையே கருத்தொருமித்துச் செய்யும் போது நேரம் போவது தெரிவதில்லை. இதற்கு, புத்தகம் வாசிப்பது(பாடப் புத்தகம் அல்ல), நித்திரை கொள்வது போன்றவை நல்ல உதாரணங்கள். (பி.கு: கலர் தெரப்பியும் இதிலே சேர்த்துக் கொள்ளப்படலாம் ;o) ). எதிர்மறையாக, இதெல்லாம் செய்ய வேண்டுமே என்று 4 - 5 விடயங்களை பட்டியல் போட்டுக் கொண்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்தால் ஒன்றுமே செய்படாது, நேரம் மட்டும் விட்டது தொல்லை என்று காணாமல் போயிருக்கும்.இது என் சார்பான நேரம் கழிதலின் வேகம் மட்டுமே. எனக்கு விரைவாக ஓடி மறைந்த ஒரு நாள் மற்றொருவருக்கு மிக நீண்டதான ஒன்றாக தோன்றலாம்..அது அவர் சார்பான நேரத்தின் வேகம். எல்லாருக்கும் பொதுவாக செலவழிந்து கொண்டிருக்கும் நேரமோ ஒரே வேகத்தில் தான் கழிகிறது.( உ+ம்: எனக்கு வேகமாக கழிந்த ஒரு நாளும் மற்றவரது நீ..ஈ..ண்ட நாளும் அதே 24 மணி நேரத்தைத் தான் கொண்டவை!)

எப்படி இவளிடமிருந்து தப்பியோடலாம்(உங்களைப் போலவே?)என்று சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தை இழுத்துப் பிடித்து, அலுவலகத்தில் பணியும், வீட்டில் "தார்மீகக் கடமைகளும்"(அடக்கி வாசிக்கிறதப் பற்றி ஷ்ரேயா கேள்விப்பட்டதேயில்லை!!) என்று செய்ய வேண்டியிருக்கிறது. ஆக இப்பிடியெல்லாம் நேரத்துடன் மல்லுக்கட்டும் போது, என்னுடைய இந்த வலைப்பதிவில் செலுத்தும் கவனம் மிகக் குறைவே. அதைப்பற்றி மனவருத்தமாக இருக்கிற போதெல்லாம் கை கொடுப்பது என்னுடைய "நாளைக்குச் கட்டாயம் செய்ய வேண்டும் / செய்து விடுவேன்" என்கிற சோம்பேறி மனப்பாங்கு தான்.(யாரது "நன்றே செய்வார்; அதை இன்றே செய்வார்" ங்கறது? ஷ்ஷ்!!).

அலுவலகம் / வீட்டுவேலைகள் /குடும்பம் இதெற்கெல்லாம் மத்தியில் பதிவுகளையும் கவனித்துக் கொள்ளும் எல்லா வலைப்பதிவாளர்களுக்கும் ஒரு பெரீ..ய்ய்..ய "ஓ"!.

பெயர்கள் பலவிதம்

பெயர்..இது இல்லாமல் ஒரு பணியாரப் படிவமும் நிரப்ப இயலாது. அதிலயும் இந்த குடும்பப்பெயர் இருக்கே..அதைப் போல தலையிடி பிடிச்ச விஷயம் வேற இல்ல. வெள்ளைக்காரனுக்கு குடும்பத்துக்கென்றே ஒரு பெயர் இருக்கும். அவனுக்கு என்று ஒரு பெயர் வைத்தாலும் திரு."குடும்பப்பெயர்" என்று கூப்பிட்டால் கட்டாயம் திரும்பிப் பார்ப்பான். ஆனால் எங்கள் நிலமை வேறு, குடும்பத்துக்கென்று (சில விதி விலக்குகள் உண்டு)தனிப் பெயர் இல்லை. அவரவருக்கென்று வைத்த பெயர்தான் அவர் சார்ந்த குடும்பத்துக்கும் பெயராகிறது. வெளிநாட்டில் படிவம் நிரப்புகையில் எப்படிப் போடுகிறீர்கள்? ஆண்களுக்குத் தான் தலை போகும் பிரச்சனையா இது தென்படுகிறது. (உதாரணத்துக்கு அப்பா:சின்னத்தம்பி, மகன்: யோகன் என்று வைத்துக் கொள்வோம்)மகன் தனது குடும்பப்பெயராய் அப்பாவின் பெயரைப் போட்டால் திரு. சின்னத்தம்பி என்று தான் விளிக்கப்படும். யோகனும் அப்பாவைத்தான் கூப்பிடுகிறார்கள் என்று தேமே என்று உட்கார்ந்திருப்பான். மாறிப்போடுவது தான் அவனுக்கு தன்னை விளிக்கிறார்கள் என்பதை உணர்த்தும். இங்கே பலர் அப்படித்தான் அப்பாவின் பெயரை முதல்/வைக்கப்பட்ட பெயராயும் தன் (உண்மையாக) வைக்கப்பட்ட பெயரை குடும்பப்பெயராகவும் இடம் மாற்றிக் கொள்கிறார்கள். அப்படி மாற்றாமல் தன் பெயர் தனக்கும் அப்பா பெயர் குடும்பப்பெயராகவும் வைத்துக் கொண்டிருக்கும் நம்மவரும் உளர்.

இந்த குடும்பப்பெயர் வழக்கம் எங்கிருந்து எதற்காகத் தோன்றியயது? ஒரே இனத்தவர்/ குடும்பத்தினரை இனங்காணவேண்டிய தேவை சண்டை/சொத்து இவற்றைத் தவிர வேறே எதற்கு இருந்தது? அந்தக் காலத்தில் பெண்களுக்கு இது ஒரு முக்கியமான அடையாளமாக இருந்திருக்க வேண்டும் என் நினைக்கிறேன். இப்பெண்கள், இன்னாருடைய மனைவி/மகள் என்று (அப்பெண்களின்) வாழ்வில் காணப்படும் ஆண்களை வைத்தே நோக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு பெண்ணானவள் எடை போடப்படும் போது முதலில் இன்னாருடைய மகள்/மனைவி என்று குடும்ப விவரம் அலசப்பட்ட பின்னரே அவளது accomplishments பார்க்கப்படுகின்றன. பெண்கள் ஒரு ஆணைச் சார்ந்து நின்ற காலத்திற்கு வேண்டுமானால் இது பொருந்தியிருக்கலாம். ஆனால் பெண்கள் சுயமாக நிற்கிற இந்தகாலத்தில் இப்படிப்பட்ட பார்வை பொருத்தமானதாகத் தோன்றவில்லை.

எங்கள் ஊரில் வெள்ளைக்காரன் வரமுதல் பெண்களுக்கு நிர்வாகத் தேவைகள் இருந்ததா என்பது சரியாகத் தெரியவில்லை. அப்படியே இருந்திருந்தாலும் செல்வி.சின்னத்தம்பி, திருமதி.தங்கத்தம்பியுமாக அடையாளங் காணப்பட்டிருக்க மாட்டார்கள் என்று (நான்) நினைக்கிறேன். ஒரு பெண் வெள்ளைக்காரனின் வழக்கப்படி திருமணத்திற்குப் பின் திருமதியாகிறாள்.அதாவது தன் குடும்பப்பெயராக இவ்வளவு நாளும் உபயோகித்த தந்தையின் பெயரை விட்டு, கணவனின் குடும்பப் பெயரைத் தன் குடும்பப் பெயராக ஏற்கிறாள். இதப் பழக்கம் எப்போதிருந்து எங்கள் சமூகத்துக்குள் புகுந்தது?

இங்கே, எனக்கு நடந்த 2 சம்பவங்கள் சொல்கிறேன்:

முதலாவது, திருமணம் முடித்தவுடன் வந்த வம்பு. எனக்கோ அப்பாவின் பெயர் இருந்த இடத்தில் கணவர் பெயரைப் போட விருப்பமில்லை. அம்மா(இத்தனைக்கும் படித்தவர்.வைத்தியர்) சொன்னா அது கட்டாயமாம் என்று. எங்கேயிருந்து அவவுக்கு அந்த எண்ணம் வந்ததோ தெரியவில்லை. தாங்கள் எல்லாம் அந்தக் காலத்திலேயே எப்ப கலியாணம் முடிய கணவரின் பெயரைத் தன் பெயருடன் இணைப்பது என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பர்களாம்.(வேறே நினைவே இருக்கவில்லை போல என்று கிண்டலடித்தேன்!)இது தான் முறை என்றெல்லம் பெரிய்ய்.ய்..ய்ய விரிவுரை. எனக்கோ விருப்பமில்லை. என் மச்சானின் மனைவி பெயர் மாற்றம் செய்து கொள்ளாதவர். அவரிடம் பேசுவது என்று முடிவாயிற்று. அவ இருக்கவில்லை, என் மச்சானுடன் தான் கதைக்க முடிந்தது. அவர் சொன்னார், அப்படி பெயர் மாற்றச் சொல்லும் ஒரு சட்டமும் இல்லை என்று. அவர் என் கணவரிடம் கேட்டார் "ஷ்ரேயா உம்முடைய பெயருக்கு மாறுவது உமக்கு விருப்பமா?" அதற்கு கணவர் சொன்னார்.."மாறிறது விருப்பம். ஆனா அது அவட விருப்பம்" என்று. இதற்குப் பின்னும் அம்மாவின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு "-" போட்டு அப்பாவின் பெயரையும் கணவர் பெயரையும் இணைத்துக் கொள்ளச் சம்மதித்தேன். ஆனால் இங்கே எல்லா உபயோகத்திற்கும் பாவிப்பது அப்பாவின் பெயரை மட்டுமே. அலுவலர்கள் கேட்டால் "உங்கள் படிவங்களில் என் குடும்பப்பெயர் முழுவதும் அடங்காது" என்று சொல்லிவிடுவேன்.அவர்களும் விட்டு விடுவார்கள். கணவர் இதப் பற்றி ஒன்றும் சொல்வதில்லை. உள்ளே அரிக்குமோ என்னவோ! :o)

சம்பவம் 2: இங்கே

ஆக எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள் ஒரு பெண் கல்யாணமானால் பெயரை மாற்ற வேண்டுமென்று.அது அந்தப்பெண்ணின் தெரிவு என்பது புரிவதில்லையா? பலவந்தமாக மாற்றச் செய்வது தனிமனித சுதந்திரத்தில்/உரிமையில் தலையிடுவதாகும் அல்லவா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?திருமணமாகும் போது பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டுமா? நீங்கள் ஆணாக இருக்குமிடத்து உங்கள் மனைவி உங்கள் பெயரை தன் குடும்பப்பெயராக இணைத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பீர்களா? ஏற்கெனவே திருமணமாகி, மனைவி பெயர் மாறியுள்ளவர்களின் கருத்து என்ன?பெயர் மாற்றிய/மாற்றாத/மாற்ற விரும்பாமல் மாற்றிய மனைவியரின் கருத்து என்ன? கொஞ்சம் சொல்லுங்களேன்..

கிறுக்க இடம் இல்லை!!

கிறுக்கல் பலகையின் சேவை இனிமேல் காசு கட்டினாத்தானாம், நீங்க அப்படி ஒரு சந்தா அங்கத்தவரென்றால் உங்களுக்குரிய சேவை தொடர்ந்து தடையின்றி வழங்கப்படும். இலவசமா எழுதித்தள்ளுறவங்க தொகை அதிகமானதால இந்த முடிவை நேற்றிலிருந்து செயல்படுத்திறாங்க.

புதுசா கிறுக்கல் பலகை தேடிறன்..நல்லதொன்று கிடைச்சா சொல்லுங்க!

ஓரினச் சேர்க்கை

இன்றைக்கு 2 பதிவுகள் படித்தேன். தோழியரில் ஒன்று. மற்றது பொடிச்சியினது. உடனடியாக மனம் "ஓரினச் சேர்க்கையாளர்" பற்றிய அறிமுகம் எனக்கு எப்ப ஏற்பட்டது என்பதை யோசித்தது. சரியாக குறிப்பிட முடியவில்லை. இலங்கையில் இருந்த போது எனக்கு இவை பற்றி தெரிந்திருந்திருக்கக் கூடும். ஞாபகமில்லை. ஒரு த.சே.வின் அறிமுகம் ஏற்பட்டது சிட்னியில் கல்லூரியில் தான். ஒரு பெண். அவவின் பாலியல் தெரிவு அவவின் சுதந்திரம் என்பதே என் கருத்தாக இருந்தது/ இருக்கிறது. ஒரு conservertive குடும்பத்திலிருந்து வந்த எனக்கு எப்படி இந்தக் கருத்து முதலிருந்தே மனதில் ஒரு விதமான குழப்பமும் இல்லாமல் தோன்றிற்று / வேரூன்றியது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சந்தோஷமாகவும் இருக்கிறது. இவர்களின் சேர்க்கைத் தெரிவு சரியானதா இல்லையா என்பதைப் பற்றி ஒரு தனிப்பட்ட கருத்து எனக்கு இல்லை. ஒரு விஷயத்தில் தனிப்பட்ட கருத்து இல்லாதிருத்தல் சாத்தியமா என்பது பற்றிப் பிறகு பார்க்கலாம். ஆனாலும் ஒரு சக மாணவியாக அவவின் பேச்சும் நடவடிக்கைகளும்(5 வார்த்தையில் ஒன்று "f***", பெண் தோழியுடனான உறவு பற்றிய விளக்கங்கள்) என்னால் சகிக்கக் கூடியதானவையாக இருந்ததில்லை. அதற்காக எப்பவும் அவவோடு அளவாகவே வைத்துக் கொள்வேன். அவள் தவறாக எடுத்துக் கொள்வதில்லை என்பது பெரிய ஆறுதல். ஆனால் வகுப்பின் வழமையான பகிடி சேட்டைகளில் சேர்ந்து முஸ்பாத்தி பண்ணியிமிருக்கிறேன்.

இரண்டாவது அறிமுகம் ஒரு ஆண்.அதே கல்லூரியில் இரண்டாமாண்டின் போது. ஓரளவுக்கு ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றி, அவர்கள் எதிர் நோக்கும் குழப்பங்கள் பிரச்சனைகள் பற்றி தெளிவு கிடைத்தது இவனது அறிமுகத்தினால் என்று சொல்லலாம். கொஞ்சம் அதிகப்படியான பெண்மையுடன் கூடிய பாவனை. உடல்வாகும் அப்படியே.. வளர்த்துக் கொண்டிருக்கும் தலைமயிர். Robert என்ற பெயருடையவன். நகம் வளர்த்து தெளிந்த நகப்பூச்சும் பூசியிருப்பான். முற்போக்குச் சிந்தனைகளுடையவன் என்று சொல்லலாம். இதே வகுப்பில் இருந்த சிலருக்கு இவன் அவர்களுடைய குழுவில் இடம் பெற்றது பிடிக்காமல் ஆசிரியரிடம் போய் இவனை குழுமாற்றம் செய்த "பெருமை" உண்டு. எங்கள் குழுவில் இவன் மட்டும்தான் ஆண். பெண்ணாக மாறப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டேயிருப்பான். நாங்களும் அவனுடம் இருந்து பெண்ணாக இருப்பதன் நன்மை தீமைகளை அலசி ஆராய்வோம். சிறுவயதிலிருந்தே தான் தனிமையாக உணர்ந்ததாகச் சொல்வான். Princess என்பதே பள்ளியில் அவனது பட்டப்பெயராக இருந்திருக்கிறது.

ஒரு நாள் வந்தான்..வாகன ஒட்டுநர் அனுமதிப்பத்திரத்தைக் காட்டினான். அதில் "Sarah" என்று பெயர் மாற்றப்பட்டிருந்தது. சட்டத்தின் முன் தான் ஒரு பெண் என்பதை நிலைநிறுத்தும் முயற்சியின் பலன் அது என்பதை தெளிவாக விளங்கப்படுத்தினான். கல்லூரிக்கும் தேவையான அத்தாட்சிகளைக் கொண்டுவந்து சேராவாக மாறிவிட்டான். தொடர்ந்த வாரத்தில் இதுவரை ஆண்களின் ஆடையில் வலம் வந்த சேரா முதன் முதலாக ஒரு நீண்ட பாவாடையும் ஒரு வடிவான் மேற்சட்டையும் அணிந்து வந்து, வகுப்பில் சலசலப்பை ஏற்படுத்தினாள். கிசுகிசுப்பான பேச்சுகளும் நமுட்டுச் சிரிப்புகளும் நிறைந்த அந்தக்கணத்து வகுப்பை போன்று நாராசமானதாக வேறொன்றும் அவளுக்கு இருந்திராது என்பது திண்ணம். எங்களுக்கு, அதாவது குழுவிலிருந்த பெண்களுக்கு சேராவை பெண்ணாய் பார்ப்பதில் பிரச்சனை இருக்கவில்லை.

இரண்டு மூன்று மாதங்கள் சென்றிருக்கும், வகுப்பிலே ஆசிரியர் இல்லாத சமயம் பார்த்து தீவிர "ஹோமோஃபோபிக்" ஒருவனுக்கும் இவனுக்கும் தர்க்கமேற்பட்டது.

"நீயெல்லாம் கடவுளுக்கு எதிரானாவன்"
"எதனை ஆதாரமாக வைத்து இப்படிச் சொல்கிறாய்"
"பைபிளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பாவிகள், தண்டிக்கப்படுவார்கள் என்றெல்லாம் சொல்லியிருக்கிறது"
"அதற்கு நான் என்ன செய்யட்டும்..நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்"
"அஹா! உன் செய்கைகளை ஆமோதிக்கும் கடவுளர் யாருமில்லை, அதனால் நீ கடவுள் பக்தியில்லை எனச் சொல்கிறாய்"
"என் காதலன் கத்தோலிக்கன்.அதற்கு என்ன சொல்கிறாய்"
"நரகத்திற்குப் போவான்"....

இப்படியே தொடர்ந்து பல அனாவசிய கோணங்களையும் தொட்ட அந்த விவாதம் கடைசியில் மற்றவன் "உன்னுடன் ஒரு அறையில் இருப்பதே என் மேல் ஏதோ ஊருவது போலுள்ளது" என்று சொல்லி வெளியேறியதில் முடிவுற்றது. அன்றைக்குத்தான் எனக்கு உறைத்தது, இப்படியும் மடத்தனமான ஆட்கள் இருக்கிறார்களே என்று. இவனும் சக மனிதன் தானே. உனக்கும் இவனுக்கும் செல்லப்பிராணியின் தெரிவில் வித்தியாசமிருக்கலாம்..உனக்கு நாயும் அவனுக்கு பூனையும் பிடிக்கலாம், அதற்காக தர்க்கம் செய்து,கீழ்த்தரமாக நடந்து கொள்வாயா?ஒருவனது தனிப்பட்ட விடயமான பாலியல் தெரிவு மட்டும் ஏன் இவ்வளவு விமர்சனத்திற்குள்ளாக வேண்டும்?

தப்பித் தவறி பழைய ஞாபகத்தில் Rob என்று கூப்பிட்டு நாக்கை கடித்து Sarah என்று நான் மாற்றியிருக்கிறேன்.ஒன்றும் பேசாது, அது பரவாயில்லை என்று சொல்லி, வேண்டுமென்று செய்யப்பட்ட தவறல்ல என்பதைப் புரிந்து கொண்டவள்.

ஆனாலும் அவனது "அவள்" மாற்றம், சுற்றியிருந்த எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. எதிர்ப்பாலர்மேல் ஈர்ப்பு இருப்பதையே நியதி என்று கண்டும் கேட்டும் வளர்ந்தோருக்கு இம்மாதிரியான பாலியல் தெரிவுகள் அதிர்ச்சியளிக்கும். ஒரு நாளும் காணாத ஒன்று, வழமைக்கு மாறான ஒன்றாக ஒருவருக்கு தோன்றுவது, இன்னொருவருக்கு மிகச் சாதாரணமான ஒன்றாக இருக்கும். ஆணொருவருக்கு பெண்ணில் ஈர்ப்பு வருகிறது. ஒரு ஆண் தன்னினச் சேர்க்கையாளருக்கு இது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்றாக இருக்கும். அடிப்படை வித்தியாசங்கள் தான் மனிதர்களை ஈர்க்கின்றன, வேறுபடுத்துகின்றன. இயல்பாகவே இருக்கும் வித்தியாசங்கள் போன்று ஒருவர் செய்யும் தெரிவுகளும் அவரை சமூகத்தில் அடையாளம் காட்டும். ஆனால் துரதிஸ்டவசமாக சமூகத்தின் அங்கத்தவர் என்ற முறையில், சக மனிதப்பிறவி என்னும் அடிப்படையில் தன்னினச் சேர்க்கையாளர்கள் பெரும்பாலானோரால் பார்க்கப்படுவதில்லை. அந்நியப்படுத்தப்பட்டு, அருவருக்கப்படும் நிலையே காணப்படுகிறது.

செய்வதற்கு உரிமையில்லாத செயலான பிறரின் அந்தரங்கத்தினுள் மூக்கை நுழைப்பதும், அதன் மீதான விமர்சனமும் தேவையற்றன. தெரிவுகள் தனிப்பட்டவை, அவற்றில் தலையிடுவதோ, விமர்சிப்பதோ நாகரிகமல்ல. அப்படியே விமர்சிக்கத்தான் வேண்டும், அதுதான் வாழ்வினைச் செலுத்துகிறது என்று நினைத்தால் அதை அழுக்கான அந்தரங்கங்களுக்குள் புதைத்துக் கொள்வது புத்தியான செயல்.

தார் இட்ட வீதியிலே கார் ஓட்டும் வேளையிலே...

"ப்ரூம்..ப்ரூம்"
"என்னடா நித்திரையில காரோடுறா"...

இப்படி ஆரம்பிக்கும் விளம்பரத்தை ஐரோப்பிய தமிழ் வானொலி(எதென்று மறந்து போச்சு) நேயர்கள் கட்டாயம் கேட்டிருப்பார்கள். அண்ணாவின் மூத்த மகள் அடிக்கடி சொல்லிச் சிரிப்பாள்.

நான் கேட்பது இதுதான்..யாராவது கணவரிடம் கார் ஓட்ட பழகுறீங்களா? நான் உங்களுடன் ஒத்துணர்கிறேன்(Empathize). ;o)

பயிலுனர் அனுமதி எடுத்து 1 வருஷத்திற்கும் மேலே. இன்னும் பயில்கிறேன். வாகனத்தை கையாளும் பக்குவம் வந்ததும் என்னிடம் பழகலாம் அது வரை பயிற்றுநரிடம் பழகு என்று கணவரும் சொல்ல சரியென்று தலையாட்டினதில் ஆரம்பித்தது. அனுமதி கிடைத்து 3- 4 மாதங்களின் பின் தான் வகுப்புக்கான ஒழுங்கெல்லாம் செய்து..பயிற்றுனரிடம் கிழமைக்கு 2 வகுப்பு படி ஆரம்பித்தேனா..5 மாதமாய் தேடிக் கொண்டிருந்த வேலை கிடைத்தது.

7 வகுப்போடு பயிற்சியும் நின்று போச்சு. வேலைக்குப் போனேன். கிடைக்கிற நேரத்தில் கணவரிடம் பழகலாம் என்றால் 10 வகுப்பு முடித்து விட்டு வந்தால்தான் காரைத் தொடவே விடுவேன் என்று மிரட்டல்! ஹ்ம்..இந்த பிறவியில் நமக்கு லைசென்ஸ் கிடைக்கது போல என்று நொந்து கொள்வேன். 2ஆவதாக இன்னொரு வேலை கிடைத்தது. அதற்குப் போனேன். 1 மணித்தியாலம் பேருந்துப் பயணம். எலும்பெல்லாம் ஏதோ குலுக்கல் போட்டியில் கலந்து கொண்டுள்ளது போலிருக்கும். தொடர்ந்து 6- 7 மணித்தியாலம் call centreல் வேலை. வீட்ட வந்தா விழுந்து படுக்கத்தான் சொல்லும். ஒருகட்டத்தில் காது வலியும் வந்து விடவே அந்த வேலையை விட்டேன்.

2 மாதம் வீட்டிலிருக்க வேண்டி வந்தது. இந்த இடைவெளியில் கார் பழகல் திரும்ப வித்தியாரம்பம். 10 வகுப்புக்கு பிறகு கணவரிடம் பழகலாம் தானே என்று புதிதாக 3 வகுப்பு முடித்தேன். அவரிடம் போனால்..இன்னும் 10 கிளாஸ் போ என்று வாரி விட்டார். நான் விட்டேனா, ஒரு வகுப்புக்கே $30. 3 வகுப்பு முடிய கணவரின் நண்பரிடம் போய், "அண்ணா, சொல்லித்தாங்க" என்று பிடியாய் பிடித்துக் கொண்டேன். அவருடன் 3 - 4 தடவை பயிற்சி. கணவருக்கு ரோசம் வந்து "வண்டியை கையாளத் தெரிகிறது உனக்கு" என்று சொல்லி பழக்க ஆரம்பித்தார். வந்தது வினை!ஓட்ட ஆரம்பித்து முதல் சில நிமிடங்களுக்கு வண்டி அதற்குரிய லேனை விட்டு வெளியே போகும்..உள்ளே வரும்..ஓட்டுனர் கதி அந்தோ!! அதோடு விடுவேனா..எனக்கும் பெரிய மைக்கல் ஷூமாக்கர் என்று நினைப்பு!அக்சிலரேட்டரை அழுத்துவது எனக்கே தெரியாம நடக்கும். வேகம் அதிகம் போனால் போச்சு!(உண்மைதானே!). அடுத்து வரும் ..ஆப்பு வைப்பதெற்கென்றே ஒரு ரௌண்டபவுட்.

"பொறு..பொறு.."
"அந்த வாகனம் தூரத்தில தான் வருது..நான் எடுக்கிறனே"
"நான் சொல்றன்..பொறு".

ஒருமாதிரி எல்லாம் சமாளித்து ஓடினாலும் எங்கேயாவது பிசகி கணவர் வாயிலிருந்து வார்த்தை கடைசியாய் கடுமையாய் வந்ததோ..தொலைந்தேன்! அட..கண்ணாடி இவ்வளவு ஊத்தையா இருக்குதே..கையில் நகம் வளர்ந்து விட்டது..வெட்டணும்..அந்த பூமரம் ஏன் பூக்கவில்லை..இரவு என்ன சாப்பாடு (வேறொன்னுமில்லை..இதெல்லாம் அவர் பக்கத்திலிருந்து திட்டு வரும்பொழுது ஷ்ரேயா மனதில் திரையிடப்படுபவை ..ஹிஹி!! ) அவர் பாட்டுக்கு அ(க)ர்ச்சனை செய்வார், நான் பாட்டுக்கு இதெல்லாம் யோசித்து விட்டு, கடைசியா..நான் செய்தது பிழைதான்/சரியென்றால் நியாயம் சொல்லிவிட்டு மறுபடியும் கியர் மாற்றி, ஓட்டத்தொடங்குவேன். அடுத்த கணை வரும்:

"உனக்கு சுரணையே இல்லையா??"
"கையிருப்பு முடிஞ்சு போச்சு போல..போகும்போது வூலியில் (பல்லங்காடி) 4- 5 கிலோ வாங்கிட்டுப் போவம்"

அங்கே ஒரு சிரிப்பு பூத்து எல்லாம் சுமுகமாகிவிடும்..அடியேன் அடுத்த வெட்டு வெட்டும் வரை அல்லது லேனுக்குளிருந்து வாகனம் கொஞ்சம் வெளியேறப் பார்க்கும் வரை...

மார்கழியிலிருந்து புது வேலைக்குப் போவதாலும், கணவருக்கு கணக்காய்வாளர்கள்(auditors) வந்ததாலும் என் காதும் அவரது இதயமும் இப்போதைக்கு சற்றே ஓய்வெடுக்கின்றன.

பயம்

செய்து கொண்டிருக்கிறதெல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு, அம்மாவின் மடியில் போய் சுருண்டு கொள்ள/சாய்ந்து கொள்ள வேண்டும் போல எப்போதாவது உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? இன்றைக்கு ஒரு குறிப்பிட்ட காரணமுமின்றி அப்படிச் செய்ய வேணும் போல் மனதில் தோன்றிற்று.

அரிதாக எப்போதாவது எனக்கு ஒரு பயமும் வருவதுண்டு. ஒன்றுமே நடந்திராது, காரணமும் இருக்காது..ஆனாலும் ஏன் எதற்கென்று தெரியாமலே பயப்படுவேன். இது குளிர்காலத்தில் எற்படும் (winter blues) பாதிப்பல்ல. பதின் வயது முதலே இருக்கிறது என நினைக்கிறேன்.இந்த மாதிரி பயமாக இருக்கும் போதும் முதலில் சொன்னது போல அம்மாவின் மடியில் சுருண்டு கொள்ள அல்லது மிக நெருங்கியவர்களுடன் இருக்க வேண்டும் போலிருக்கும். சில சமயங்களில் 2- 3 நாட்களுக்கும் தொடரும் இந்தப் பயத்திற்குக் காரணம் யாருக்காவது தெரியுமா?

பவள மல்லிகை

பாட்டி வீடு. பெயரைச் சொல்வதை விட, புளியடியார் என்றால் தான் இன்னும் வடிவா ஊருக்குள்ளே தெரியும். ஒரு சிவப்பு பெரிய 'கேற்'. ஓட்டிக் கொண்டு வரும் (ஒரு அளவான) வேகத்தில சைக்கிள அதில் மோதினா, கொளுக்கியும் போடாமலிருந்தா, தகரத்தில அடி வாங்கின சத்தத்துடன் திறக்கும். படலையிலிருந்து வீட்டுக்கு 25மீ இருக்கும். 2 பக்கத்திலும் பூமரங்கள். நடுவிலே கொஞ்சம் வெண்மலும் செம்மணலும் கலந்த
நிறத்தில் பாதை. என்னென்ன பூமரம் என்றெல்லாம் ஞாபகமில்லை. போய் 8 ஆண்டுகளாகினதினால் என்று சாட்டு சொல்ல மாட்டேன். அங்கே போனபோதெல்லாம் விளையாட்டும், கிடைக்கிற விதம் விதமான சாப்பாடுமே பிரதானமாக மனதில் முன்னிற்கும். மச்சி(மச்சாள் வயதுக்கு நிறையவே மூத்தவ என்பதால் இப்படித்தான் கூப்பிடுவது)சின்னப்பிள்ளைகளுக்கு மேலதிக வகுப்பு எடுப்பா. அப்ப அங்கே நானும் போயிருந்து சம வயதுப் பிள்ளைகளுடன் இருந்து படிப்பேன். எல்லா நாளும் சரியாக தமிழும் எழுதி, கணக்கும் செய்து வந்திருந்தேன்...எப்பயாவது தடுக்குப்படவேணும் என்கிற நியதிப்படி பால் + சோறு = பால்ச்சோறு என்று எழுதி பிழை விட்டது நல்ல ஞாபகம். இதே வகுப்பிலிருந்த பையன் நான் இந்தச் சம்பவம் நடந்து 3- 4 வருடங்களுக்குப் பிறகு (அந்த சில வருட இடைவெளியில் 10- 11 வயதுக்குரிய வளர்ச்சி வர ஆரம்பித்திருந்தது) விடுமுறைக்கு பாட்டி வீட்ட போன போது மச்சாளைக் கேட்டான் "முதல் ஒராள் வருவாவே..அவா இப்ப வாறேல்லையோ" என்று. மச்சாள் சொன்னா "அவதான் இவ" என்று. அந்தப் பையனின் கண் விரிந்தது. சில வினாடிகள் இமைக்காது பார்த்தவன் "வளந்து போனா..அதுதான் அடையாளம் தெரியேல்ல" என்று சொல்லிவிட்டு, தந்த கணக்கை செய்ய தொடங்கி விட்டான். ஏனடா தன்னில் இப்படி வளத்தி இல்லை என்று யோசித்திருப்பானோ என்னவோ!! ;o)

வீட்டுக்குப் போகிற வழியில் பூமரம் நிற்கும்..என்னென்ன என்று தெரியாது என்று சொன்னேன் தானே, ஆனால் நல்ல வடிவானதாக இருக்கும்.கனாஸ் வாழை இருந்ததாக ஞாபகம். மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு நிறத்தில் பூக்களுடையது. அப்படியே நேரே போனால் வாசல்.இடப்பக்கமா முற்றம் தொடரும். முற்றத்திற்கும் வீட்டிலிருந்து இன்னொரு வாசல். ஒரு கூடத்தில் 2ம் சந்தித்து வலப்பக்கமுள்ள கதவுக்குள்ளால் போனால்வீட்டின் ஹோல் வரும். நுழைந்தவுடன் வலப்பக்கம் கேற்றை பார்க்கும் சாளரம். நேர் முன்னல் சாமியறை. அதுக்குப் பக்கத்தில் பாட்டி/மச்சாள்/அத்தையின் அறை. அதைத்தாண்டிப் போனால் மாமி&மாமாவின் ஒரே சாய்மணைக் கதிரை.கதிரைக்கு இடப்பக்கத்தில் ஒரு 3 அடி தள்ளி சாப்பாட்டு மேசை. அதுக்கும் இடப்பக்கமாக ஒரு சின்ன ஓடை.இதன் கதவு முதல் சொன்ன முற்றத்துக்குள் திறக்கும். இது தான் அந்த வீட்டிலேயே பிடித்த இடம்...சைக்கிள் வைக்கும் இடம் & புத்தக அடுக்கு இருந்த இடம்.

சாய்மணைக்கதிரை தாண்டினால் ஒரு சின்ன கூடம்.இதற்கு இடப்பக்கத்தில் சமையலறை.வலப்பக்கத்தில் மாமா/மாமியின் அறை. இதை தாண்டினா கொல்லைப்புறத்துக்கு போகும் வாசல்.தரை ஒரு 5 அடிக்கு 15 அடி சாணியால் மெழுகியிருக்கும்.இதில் இடப்புறம்தான் 2 வாங்கு மேசை போட்டு மச்சாள் வகுப்பு நடத்துவது. வலப்புறம் ஒரு குகை மாதிரி.அதற்குள் இல்லாத சாமானே இருக்காது!!! கிணறு வடமேற்கில் இருக்கும்(ஏன் அள்ளுமிடத்தில் தடுப்புச்சுவர் 99% கிணறுகளுக்கு இல்லை என்பது புரியாத புதிர். பாட்டி கண் தெரியாத காலத்தில் அதற்குள் தடுக்கி விழுந்து, பிறகு கதிரையொன்றைக் கட்டி இறக்கி தூக்கி எடுத்தார்கள்!!). கிணற்றடி வேலியில் கொவ்வைக் கொடி படர்ந்திருக்கும்.

கிணற்றுப்பக்கம் போகாமல் பின்புற வாசலிலிருந்து நேரே பார்த்தால்..ஆகா!!அந்த சின்ன பவள மல்லிகை(யாருக்காவது இதன் தாவரவியற் பெயர் தெரியுமா?) மரம் வெள்ளையா பூவுதிர்த்து பச்சையாய் இன்னும் பல பூக்கள் தலையில் சூடி நிற்கும் அழகு! பின்னேரத்தில் அதன் வாசம்..ம்ம்ம்...நினைத்துப் பார்க்கும் போது அதன் வாசம் இன்னும் என் மூக்கில்.

மாமி/அத்தை இதில் பூவெடுத்து சாமிக்கு வைப்பார்களோ என்னவோ! விடுமுறைக்குப் போகையில் என்னென்ன முஸ்பாத்தி பண்ணலாம் என்பதே யோசனையாக இருக்கும். பெரியம்மா பெரியப்பா பாட்டி, மாமி மாமா அத்தை மச்சாள் இவர்களெல்லாம் விடுமுறையின் அங்கங்கள். அவர்களை அவர்களாகவே, தனி நபர்களாக பார்த்ததேயில்லை. என் மனதில் அவரவருக்கென்று ஒரு பிம்பம். அதற்கூடாகவே பார்த்திருக்கிறேன். இப்போ யோசிக்கும் போது தான் மனதில் உறைக்கிறது. இன்னொருமுறை இன்ஷா அல்லா போகக் கிடைத்தால் மாமி, அத்தை, பெரியம்மா என்று நிறக்கண்ணாடி கொண்டு பார்க்காமல் அவர்களாகவே பார்ப்பேன் என தோன்றுகிறது. இலங்கையிலிருந்து புறப்பட்டதிலிருந்து நிறைய கற்றிருக்கிறேன். பிறரைப் பார்ப்பதிலும் ஒரு கொஞ்சம் தெளிவும், முதிர்ச்சியும் வந்துள்ளது என்றும் நினைக்கிறேன். இப்போது போய் பார்க்க முடிந்தால் ஒவ்வொருவரும் தங்களுக்கேயுரிய வாசம் வீசுகையில் அதை அப்படியே உணரக்கிடைக்கும்.

சமையல்.. சிறு குரைப்பு!

நீண்ட நாளைக்குப் பிறகு ஒரு உறவினரோடு கதைத்தோம்.(தொலைபேசி இணைப்பை மீட்டுக்கொண்டுள்ளோம்!) பேச்சு வாக்கில் நான் மீண்டும் வேலைக்குப் போவது பற்றியும் அதனால் நாளாந்த வாழ்க்கையில் ஏற்படும் மற்றங்கள் பற்றியும் கதைத்துக் கொண்டிருந்த போது என் கணவர் அவவிடம் சொன்னார் :”இவ சும்மாவே சமைக்கப் பஞ்சி, இப்ப வேலைக்கும் போய் வருவதில் சமையல் எல்லாம் அவசரச் சமையலாகவே இருக்குது” என்று. ஒலிபெருக்கியுள்ள தொலை பேசியாதலின் ஒரெ நேரத்தில் கதைக்க முடியும். ஓருவர் பேசி முடித்து நம்மிடம் தரும் வரை காத்திருக்கத் தேவயில்லை. கணவர் சொன்னதற்கு பதிலாக “சும்மாவே சமையல் என்றால் எட்டி நிற்கிற ஆள் நான், மற்றது வேலையால வந்தவுடனே சமைக்கவும் ஏலாதுதானே, களைப்பா இருக்கும். இவரைக் கேட்டா சிலநேரம் செய்து தருவார்” என்று நான் சொன்னேன். அதற்கு அந்த பெரியம்மா என்ன சொன்னா தெரியுமா..”பொம்பிளப் பிள்ளைகள் சமையல் விருப்பமில்லை, ஏலாது என்றெல்லாம் சொல்லப்படாது! ஆம்பிளப்பிள்ளையை, அதுவும் புருசனிட்ட சமைக்கச் சொல்லுறதா..என்ன பழக்கம்! விட்டா வீட்டையும் ஒழுங்குபடுத்தச் சொல்லி கேப்பீர் போல கிடக்கு” What the!!

ஏன் பெண்களுக்கு பிடிக்காததை மறுக்கும் அல்லது செய்யாமல் விடும் உரிமை இல்லையா? ஆண் சமைப்பதில், வீட்டு வேலைகளில் பங்கேற்பதை இன்னும் தரக்குறைவான செயலாகத்தானா கருதுகிறோம்?இந்த பெரியம்மா இப்படிப்பட்ட கருத்தை கொண்டிருக்க என்ன காரணம் இருக்கக் கூடும்? ஒரு வேளை பெரியப்பா, தான் எப்போதாவது சமைக்க வேண்டி வந்து விடும் என்று நினைத்து இப்படி சொல்லிக் கொடுத்தாரா– கல்யாணமான் புதிதில்? :o)

அல்லது சிறு வயதிலிருந்தே பழக்கப்பட்ட, மனதில் ஊறவைக்கப்பட்ட ஒரு விடயமா?இந்த மனநிலை முதன் முதலில் யாரால் புகுத்தப்பட்டிருக்கும் என்று யோசிக்கிறேன். காலக்கிரமத்தில் வாழ்வில் ஒரு அங்கமாக ஆண் வெளி வேலைக்கும் பெண் வீட்டு வேலைகள் & குடும்பதிற்கும் என்று மனதில் ஊறி விட்டது. இந்தக் கட்டை உடைத்து வெளிவர முயற்சிக்கிற வேளையில், அதற்கு தடைக்கல்லாக நாமே இருக்கிறோம். தலைமுறை தலைமுறையாக இருந்து வரும் சில பழக்கங்கள், நடைமுறைகள் மாற்றப்பட வேண்டியவை தான் என உணரப்பட்டாலும் பெரும்பான்மையினர் அம்மாற்றத்தைக் கொண்டுவரும் முயற்சியில் ஈட்டுபாடு காட்டுவதும் இல்லை, காட்டுவோரை முன்னெடுத்துச் செல்ல விடுவதுமில்லை. சமையல், வீட்டுவேலை, குழந்தை வளர்ப்பு என்பவற்றில் குறிப்பிடத்தக்களவு ஆணின் பங்களிப்பு தற்போது காணப்படுகிறது. ஆனாலும் இந்த பகிர்வு மனப்பான்மை புலம் பெயர்ந்தவர்களிடமோ அல்லது நகர் வாழ் இளைஞர்களிடமோ தான் அதிகளவில் காணப்படுகிறது என்றே நினைக்கிறேன். சாதாரண மத்தியதரக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, மணந்துள்ள ஒரு சராசரி ஆணின் குடும்ப வாழ்வில் அவனுடைய பங்களிப்பானது வருமானம் சார்ந்ததாக மதிக்கப்படுகிற சூழ்நிலையில் அவனுக்கு வீட்டு வேலைகள், குழந்தை பராமரிப்பு/ வளர்ப்பு என்பனவற்றை மனைவியுடன் பகிர்ந்து செய்யலாமே என்கிற மனப்பாங்கு வருமா?

இப்படி ஆண், பெண் இருவரும் பால் சார்ந்த தங்கள் கடமைகளுக்கு அப்பால், ஒரு குடும்பமாக ஒன்றிணைத்து பார்க்கப்படுவது எப்போது? அவர்களது பால் சார்ந்த கடமைகளை அவர்கள் நிறைவேற்றும் அல்லது நிறைவேற்றாத முறைகளாலன்றி, அவர்களை அவர்களாகவே - சக மனிதர்களாக – பார்ப்பது எப்போ?

என்னதான் சொன்னாலும் “எப்பிடி செய்யிறதென்று மறந்து போச்சு” என்று சொல்லிக் கொண்டே கணவர்கள் தயாரிக்கும் உணவின் சுவையே தனி என்பது பாவம்! பெரியம்மா அறியாத ஒன்றாகவே இருக்கப் போகிறது!! ;o)

பிறந்த நாட்கள்


சந்திர வதனாவின் அதிசயம் பார்த்ததும் இது ஞாபகத்திற்கு வந்தது.

என்னுடன் படித்த தோழியின் பிறந்த நாளும் என் அப்பாவின் பிறந்த நாளும் ஒரே நாள்.
என்னுடைய பிறந்த நாளும் அவளது தந்தையின் பிறந்த நாளும் ஒரே நாள்.

இருக்கிறதே 365 (366) நாள்தான்..இதில்தானே எல்லாருடைய பிறந்த நாட்களும் வரவேண்டும், ஆனாலும் ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே ஏற்படுகின்ற சில எழுமாறான இப்படிப்பட்ட ஒற்றுமைகள் வியக்க வைக்கின்றன.

ஒன்றும் பலதும்

ஒருசொல் பல பொருள் தெரியும்…(உதாரணமாக 'அணை' = தடுப்பு(அணைக்கட்டு), அணைத்தல் (மேல்kind இதை செய்ய முடியாம தான் புலம்புறாங்க ;o) ) , நூர்த்தல்(விளக்கை அணைத்தல்) இப்படி..

ஒரு வசனத்திற்கு 3 பொருள் கண்டு பிடித்தார் எங்கள் கணித ஆசிரியர். (சொல்லாததுக்கே அர்த்தம் கண்டுபிடிக்கிற இந்த நாளில் இதெல்லாம் பெரிய விஷயமா என்று கேட்கிறீர்களா..அதுவும் சரிதான். சரி சரி கதைக்குப் போவம் வாங்க). வீட்டுப்பாடம் செய்து வரச் சொல்லியிருந்தார். அன்றைக்கு வகுப்பில் மாணவர் வரவும் சற்று குறைந்திருந்தது. ஓரு மாணவனை எழுப்பி “வீட்டுப்பாடம் செய்தாயா?” என்று கேட்க அவனும் அரிச்சந்திர மூர்த்தியாகி “நான் வீட்டுப்பாடம் செய்து கொண்டு வரயில்ல சேர்” என்று சொன்னான். அதற்கு ஆசிரியர் “எனக்கு விளங்கவில்லை ..நீ சொன்ன வசனத்துக்கு 2 பொருள் வருது.. நீ எதை சொல்லுகிறாய் என நான் எப்படி தெரிந்து கொள்வது?” என்று சொல்லி, அந்த 2 விளக்கங்களையும் சொன்னார்

1. வீட்டுப்பாடம் செய்து கொண்டு வரவில்லை (அதாவது..செய்யவேயில்லை)
2. வீட்டுப்பாடம் செய்து கொண்டு வரவில்லை (செய்த பாடத்தை கொண்டு வர மறந்தாச்சு)

வகுப்பு சிரிக்க ஆரம்பிக்க, ஆசிரியர் தொடர்ந்து..”நீ வகுப்புக்கு வந்திருக்கிறாய் அதனால இந்த கடைசி விளக்கம் உனக்குப் பொருந்தாது! என்று சொல்லி இதையும் சொன்னார்
வீட்டுப்பாடம் செய்து கொண்டு வரவில்லை!!

கணக்கு ஆசிரியர் எத்தனை கொம்பினேஷன் ஏலும் என்று பார்த்திருக்கிறார் போல!


பி.கு: அவர் 4 பொருள் சொன்ன மாதிரி ஒரு ஞாபகம்….ஆனாலும் 3 தான் இப்ப நினைவிற்கு வந்தது. 4 வதை கண்டுபிடிச்சா சொல்லுங்க..திருத்தி விடுகிறேன்.

மனவருத்தம்

சென்ற கார்த்திகை மாதத்தில் ஒரு நாள் வீட்டுக் கணினியில் வலை மேய ஆயத்தமாகும் போது ( நான் இன்னும் dial-upதான்) திடேரென்று பார்த்தால் ஒரு பிக்கினி அணிந்த பெண்ணின் படம் கணினித் திரையின் வலது மூலையில் வந்திருந்தது. என்னடா இது இவ்வளவு பாதுகாப்பு போட்டிருந்தும் எரிதமாக குறிப்பிட்ட தளத்திற்கான சுழற்றி(dialer) தரவிறக்கியிருக்கிறதே என நொந்து கொண்டே அதை கணினியிலிருந்து நீக்கியிருந்தேன். அப்போது ஒன்றும் பிரச்சனையாக மனதில் தோன்றவில்லை. பிறகு 2- 3 நாடகளில் கணவர் வந்து தான் கணினியில் ஏதொ வேலை செய்து கொண்டிருக்கும் போது நான் மேலே குறிய படியே சுழற்றி தெரிந்ததாயும் தான் அதை நீக்கியதாயும் குறிப்பிட்டார். இப்படியான பாலியல் தளங்களுக்குச் செல்லும் பழக்கமோ தேவையோ எங்களிருவருக்கும் இல்லை.அப்பத்தான் கணவர் சொன்னார் எங்கள் வீட்டிற்கு வந்து தங்கியுள்ள உறவினரின் விளையாட்டாக இருக்குமென்று. நான் நம்பவில்லை..எரிதம் பற்றி,வலையுலாவி அபகரிக்கப்படுவது பற்றி அறிந்திருப்பதால் அப்படியான ஒரு நிகழ்வாக இருக்கலாம் என கணவரிடம் கூறியிருந்தேன்.

தனக்கும் அவை பற்றித் தெரியுமெனவும், தான் உறவினருக்குக்கென்று கொடுத்திருந்த பயனர் பெயருக்குரிய குக்கீஸ் ஐ பார்த்ததாகவும் சொன்னார். அதில் முழுக்கவும் பாலியல் தளங்களே இருந்ததாம். இந்த அண்ணாவின்(இந்த வார்த்தைக்கு தகுதியானவரே இல்லை அவர்!) அறையில் தான் கணினி இருந்தது..ஆகவே நல்ல வசதியாக போய் விட்டது அவருக்கு. எங்கள் சீப்பு,பவுடர்,கிறீம் எல்லாமும் அதே அறைக்குள். ஆகவே இரவில் படுக்க முன்பு கிறீம் போட எடுக்கச் செல்லும் பாசாங்கில் அவரது அறைக் கதவை தட்டி உள் நுழைந்தால் கணினித் திரையில் கடைசிச் சாளரம் குறுகிச் செல்வது தெரியும். நான் அறையிலிருந்து வெளியேறும் வரை வேறு ஒன்றுமே வலை மேய்வதில்லை அவர்.ஏன் வலை தொடர்பை ஏற்படுத்தி வோல்பேப்பரையே பார்க்கிறார் என நானும் கேட்டதில்லை!!

இதற்குப் பிறகு கணவர் அவரிடம் பேசி சில நாட்கள் இல்லாமலிருந்தது. பிறகு இப்போ மீண்டும் தொடங்கியுள்ளது.உறவினரது சொந்த அண்ணனே "இவன் பொறுப்பில்லாதவன்..சரியான சோகுசுப் பேர்வழி" என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். சரியான படிப்புமில்லை.7ம் வகுப்புடன் நிறுத்தியவர். நியூசிலாந்தில் கடந்த 5- 6 ஆண்டுகளாக இருந்தவர். 36 வயதாகிறது. எல்லாருக்கும் திருமணம் செய்து வைத்தீர்கள் ..எனக்கும் செய்து வையுங்கள் என தொல்லை கொடுக்க, அதை தாங்க மாட்டாமல் பெற்றோரும் இந்தியாவில் BCom பட்டதாரியான, 12 வயது குறைந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவ்வளவிலும் நல்ல விஷயம் சீதனம் வாங்காதது. இப்போ இங்கே வந்துள்ளார்.. மனைவி இன்னும் இந்தியாவில்.

சரியான படிப்பில்லாததால் வேலை கிடைக்கவில்லை. ஏதாவது தொழில்சார் கல்வி கற்றுக்கொள் என்ற கணவருக்கு தொண்டை காய்ந்தது தான் மிச்சம். இப்போ இன்னொரு உறவினது கடையில் சில நாட்களும் ஹொட்டேல் ஒன்றில் மிச்ச நாட்களுமாய் வேலை செய்கிறார். மனைவி வந்தால் தேவைப்படும் என சேமிப்பு பழக்கமெல்லாம் கிடையாது. உடற்பயிற்சிக்கு ஜிம்மிற்கு செல்வதும், கடனட்டையில் ப்ரான்ட் பொருட்கள் வாங்குவதுமே பொழுது போக்கு. தொலை பேசி அட்டை இருக்கையில் அதிலும் கதைத்து..இன்னும்.. நேரடி தொடர்பிலும் கதைத்து, வந்த பில் கட்டப்படவில்லை. அப்படி ஒரு தொகையை தொலைபேசிக்கு யாரும் ஒரே மாதத்தில் கட்டி நான் கேள்விப்பட்டதில்லை. கட்டணம கட்டாததால் எங்கள் வீட்டில் தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார்கள். அன்றைக்கு ஒரு நாள் காலை 10 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு வீடு வந்தால் எங்கோ தண்ணிர் சத்தம்..குளியலறையில் கேட்பாரற்று சுடுநீர் ஓடுகிறது..பிற்பாடு விசாரித்ததில் அவர் 1 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டதாய் சொன்னார். ஏன் டென்சன் ஆகுறீங்க?என்று கேட்கிறார்.தொலைபேசிக்கட்டணத்தை எப்படி பெறுவது என்று தெரியவில்லை!!! ஒவ்வொரு நாளும் இரவில் நான் சுத்தம் செய்யும் சமையலறை எப்படி வேலை முடிந்து வீட்டிற்குப் போனால் குப்பையாகிறது என்பது, தெரிந்த ஆனாலும் புரியாத, மாயம்.

அந்தப்பெண் வருவதற்குரிய குடிவரவு வேலைகளை போன மாதம் தான் செய்தார். இவர் வந்ததோ ஒக்டோபரில்.கல்யாணம் எவ்வளவு பொறுப்பான விஷயம் என்பது இவருக்கு விளங்கவில்லை. உடல் தேவைக்காகத் தான் அவசரப்பட்டாரோ என நினைக்கத் தோன்றுகிறது. சேமிப்பொ, முறையான நடத்தையோ, பழக்கவழக்கங்களோ இல்லாத பொறுப்பில்லா மகனென அறிந்தும் திருமணம் செய்து கொடுத்த பெற்றோரை..அறிந்தே ஒரு பெண் வாழ்வில் கை வைத்துள்ள இவர்களை என்ன செய்வது?சரியாக விசாரித்தறியாமல் சீதனம் இல்லாததற்காய் தலையை நீட்டிய அப்பெண்ணின் குடும்பத்தை என்ன சொல்வது??

எழுதி விளையாடு பாப்பா 2



நடுக்கட்டத்தில் உள்ள எழுத்து கண்டுபிடிக்கப்படும் அனைத்து சொற்களிலும் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதை நேற்று சொல்ல மறந்து விட்டேன்...மன்னிக்கவும்..

நேற்றைய புதிருக்கு விடை: உளி,இளை,இடை,ஆளி,ஆடி,ஆவி,இடு,இவை, ஆட்டி,விளை,விடு,இட்டு,விட்டு,விடை,இயை,விளையாடு,வாடி, வாளி,வாட்டி,விடாய்,விளையாட்டு

இன்றைய புதிர்

ல்ற்
ம்
ய்ச்


எழுதி விளையாடு பாப்பா

இங்கே ஆங்கில நாளிதழொன்றில் வரும் இந்தப்புதிர் விளையாட்டு தமிழில் எந்தளவிற்குச் சாத்தியமென்று தெரியவில்லை. அவர்களுக்கோ 26 எழுத்துக்களுடன் சுலபமாக முடிந்து விடும், தமிழிலோ 247 அழகிய எழுத்துக்கள். அது மட்டுமன்றி உயிர், மெய், உயிர்மெய் என மூன்று வகை எழுத்துக்கள்.இங்கே அவ்வாறு மூன்றாகப் பிரிக்காமல் உயிர், மெய் என இரண்டாக மட்டுமே தந்திருக்கிறேன்.9 கட்டங்களிலுமுள்ள எழுத்துக்கள் அனைத்தையும் ஒருமுறை மட்டுமே பாவித்து 9 எழுத்துக்களாலான சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும். கண்டுபிடிக்கும் ஏனைய சொற்கள் 3 அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும். தந்த சுட்டியில் போய்ப் பார்த்தால் விளையாட்டினை சுலபமாக விளங்கிக் கொள்ளலாம்.

நான் கண்டு பிடித்துள்ள சொற்கள்: மழை, அது, அதை, அமைதி,அமை,அமைத்து,அழை,அழி, அமிழ்,அளி,அழுத்தி,அமிழ்த்து,அளித்து,தளி,அழைத்தும்,அளை,மழைத்துளி(ம்+அ+ழ்+ஐ+த்+த்+உ+ள்+இ= 9 எழுத்துக்கள்)

ம்ள்த்
த்ழ்


உதாரண்ம் விளங்கியிருக்குமென நினைக்கிறேன். விளையாட்டிற்குப் போவமா?கீழுள்ளதில் சொற்களைக் கண்டுபிடியுங்கள்.
ட்
ள்
ய் ட்வ்


உங்களுக்கும் ஏதாவது 9 எழுத்துள்ள சொல் இப்புதிரில் இடம்பெற விரும்பினால் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

விக்கிரமாதித்தன்

முதலில் விக்கிரமாதித்தன் கதைகள் அறிமுகமானது அம்புலி மாமாவின் மூலம்.(2ம் தரம் அறிமுகமாகாது...ஏற்கெனவே தெரியும் என்பதால்..ஹி..ஹி)அப்போதெல்லாம் "அடே எவ்வளவு வீரன், புத்திசாலியாக இந்த வேதாளத்திற்கு பதில் சொல்கிறானே" என்ற வியப்பும் அதோடு கூடவே "இந்த வேதாளம் எப்போதடா இவன் கையிலிருந்து பறக்காதுவிடும்"என்ற நினைப்பும் கதை வாசிக்கும் போது கூடவே வரும். சமீபத்தில் விக்கிரமாதித்தன் கதை என்கிற முழுக்கதைத் தொகுப்பு ஒன்று கிடைத்தது. இதை வாசித்த பிறகு மேல்வீட்டிலிருந்தவன்(!) தெருவுக்கு வந்து விட்டான்.

வேறென்ன பின்னே!!...எங்கே போனாலும் அவனுக்கு கிடைக்கும் வெற்றியில் மகிழ்ந்து குறிப்பிட்ட கதையில் வரும் மாந்தர் தத்தம் மக(ள்க)ளையோ சகோதரி(களை)யோ இவனுக்கு கொடுப்பார்களாம்..இவனும் அவர்களுடன் "உல்லாசமாக" காலம் கழிப்பானாம்(சரியான "அலைச்சல்" ஆளாக இருந்திருப்பான் போலிருக்கிறது!!). இவனது முந்தைய மனைவிகளும் இவன் கூட்டிக் கொண்டு வருகிறவர்களை (அதாவது புதுமனைவிகளை)அன்புடன் வரவேற்பார்களாம். எந்தப் பெண்ணுக்கு இதற்கு மனம் வரும்?இந்த அழகில், பெண்ணுக்கு வகுத்திருக்கும் நியதி என்று வேறு 1008 வெறுப்பேற்றும் விஷயங்கள்!! (இவதான் இதுகளைப் பற்றி வடிவா நறுக்கென்று எழுத சரியான ஆள்!!)

காளி பக்தனாம்..இப்படிப் பட்டவனுக்கு நினைத்த மாத்திரத்திலேயே அவவும் காட்சி கொடுப்பாவாம்!!அட அட அட!!! இன்னும் எழுதலாம் புத்தகத்திலிருந்த மேதா விலாசங்களை..சும்மா ஏன் நற நறத்து இரத்த அழுத்தத்தை கூட்டிக்கொள்ள?

வாழ்வியல் அல்லது உங்கள் நடத்தை!

நீங்கள் செய்யும் செயல்களை எடுத்துக் கொள்ளுங்கள்...ஏதாவது ஒன்று..ம்ம்?

இப்போது உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்...நான் செய்ய போகும் / செய்து கொண்டிருக்கும்/செய்து விட்ட இந்தச் செயலை ஒரு ஒளிவு மறைவுமின்றி என் பெற்றோரிடம் என்னால் சொல்ல முடியுமா?இதையே "ஒரு சிறு மாற்றமும் இன்றி பின்பற்று" என என் பிள்ளைகளிடம் சொல்ல முடியுமா என்னால்??

இரண்டு கேள்விக்குமே உங்கள் பதில் ஆம் என்றால் உங்கள் நடத்தையில் பிரச்சனை இல்லை. இதுதான் நீங்கள் கடைப்பிடிக்கவேண்டிய Code of conduct. ஒரு நாளும் பிழை செய்ய மாட்டீர்கள்.

இதுதான் இந்துமதம் சொல்லும்..தர்மா!

இன்று TRAC இல் uncleஜெகா சொன்னது!

சிறுவர்களும் சிறுவர் பாடல்களும்


தோழி வீட்டில் இந்த வார இறுதியில் நடக்கவிருக்கும் TRAC இற்கு கோலம் செய்து கொண்டிருந்தோம். அப்போது அவர்களது வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்களில் ஒரு 3 வயதுப் பிள்ளையும் இருந்தா. ஒரு பாட்டுப் பாடிக் காட்டுங்கோ என்று தோழியின் தந்தை கேட்க ஆங்கில சிறுவர் பாடலான Twinkle Twinkle Little Star என்பதை பாடிக் காட்டியது பிள்ளை. அதற்கு அவர் "அப்பிடி இல்லை..இப்பிடி பாட வேணும்" என சொல்லி கர்நாடக இசை பாணியில் ஆலாபனையெல்லாம் செய்து பாடிக் காட்டினார். குழந்தை சிரிக்க ஆரம்பித்தது. "கிளுகிளு" என்று என்ன ஆனந்தமான சிரிப்பு! என்னதான் இருந்தாலும் சின்னப் பிள்ளைகளின் சிரிப்பின் வசீகரமே தனி!!

இதற்குப் பின் பேச்சு இலங்கையில் கற்றுத் தரப்படும் ஆங்கில சிறுவர் பாட்டுகளைப் பற்றித் திரும்பியது. தனது ஆசிரிய நண்பர் சொன்னதாக தோழியின் தந்தை சொன்னார்..மேற் சொன்ன அதே Twinkle Twinkle Little Star பாட்டை கற்பித்துவிட்டு அதன் அர்த்தமும் சொல்லிக் கொடுத்திருக்கிறார் முதல் நாள். அடுத்த நாள் வகுப்பில் பாடிய போது ஒரு பிள்ளை பாடிற்றாம் " Twinkle Twinkle Little Star.....like a diamond in the 'கை' " என்று. இன்னும் சிரிப்பு என்னவென்றால் அது நகைக்கடை உரிமையாளரின் பிள்ளையாம்! சொன்னது சரிதானே!!

தோழியின் தந்தையே தொடர்ந்தார்..ஒருநாள் வேலை நிமித்தம் வெளியிற் சென்ற போது ஒரு சிறுவன் பாலர் பாடசாலை முடிந்து வீட்டிற்குச் செல்கையில் படித்த பாட்டை பாடிக் கொண்டு போயிருக்கிறான். என்ன பாடுகிறான் என்று அறியும் ஆவலில் அவனுக்கு சற்று நெருக்கமாக பின்னாலேயே நடந்து சென்றாராம். அவன் பாடுகிறான் "கூப்பிட்ட பின் little toffee தின்..." இவருக்கோ பாட்டின் ராகம் ஞாபகம் வந்தாலும் இவன் என்ன பாடுகிறான் எனப் புரியவில்லை. பிறகு தான் விளங்கியதாம் "Ding dong bell..pussy's in the well, who put her in, little Tommy thin..." என்று.

பிறமொழி சொற்களை தெளிவாகவும் அர்த்தத்துடனும் கற்பிக்காவிட்டால் இப்படித்தான் போலிருக்கிறது!

அலையே..நீ அலையாதிருக்கக் கடவது!


ஏற்கனவே அலை பாய்ந்த நிலையில் இருக்கின்ற எம்மேல் ஏன் இந்த அலை பாய்ந்தது?

இயலுமான உதவியை இங்கிருந்தே செய்து விட்டு, அது போய் சேரவும், இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்கும், ஏனையோருக்கு இழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்திக்குமாக என்று வேண்டுதல்கள் நிறைந்த கனத்த மனதுடன் வலம் வருகிறோம்.

இலங்கை-இந்தியாவுக்குச் சென்று மீட்பு / நிவாரண பணிகளில் ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? மருத்துவச் சேவை போன்று அத்தியாவசிய துறைகளில் பயிற்சியுள்ளவர்கள் மட்டுமா இங்கிருந்து செல்லலாம்? தயவு செய்து அறியத் தரவும்.

பெட்டகம்