தெரிந்தால் சொல்லுங்க

ஆடிக்கொண்டார்.. அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ..
ஆர நவமணி மாலைகள் ஆட, ஆடும் அரவம் படம் பிடித்தாட...

மீதிப்பாட்டு என்னதான் யோசித்தும் ஞாபகம் வரவில்லை. தெரிந்தால் சொல்கிறீர்களா?

அதோடு சேர்த்து இந்தப்பாட்டும்: கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி.. கையிலே வேல் பிடித்த கருணை சிவபாலனை.. (படத்தில வந்த அதேதானுங்கோ..)

நன்றி.

அவையள் எங்கண்ட ஆக்கள் இல்லை!

இன்னார் இந்தச் சாதியென்று சொல்லிஅவருடன் பழகுவதை ஊக்கப்படுத்துவதோ அல்லது தடுப்பதோ எங்கள் வீட்டில் நடந்ததில்லை. சாதி பற்றிய பேச்சு எழுந்ததும் ஓரிரண்டு தருணங்களில் எனது கேள்விகளால்தான்.

சாதியும் அது பற்றிய விளக்கமும் இல்லாத ஒரு வயதிலேயே எனது முதல் அனுபவம். ஞாபகமிருக்கிறது. வீட்டிலிருந்து நாங்கள் தேநீர் குடிப்போம். மாவிடிக்க வரும் இரண்டு ஆச்சிமார். செல்லாச்சி, தெய்வானை - இவர்களை "ஆச்சி" என்று விளித்தேன். (அவர்கள் போன பிறகு எனக்கு "அவைய ஆச்சி என்டெல்லாம் சொல்றேல. பேர் சொல்லலாம்" என்று அறிவுறுத்தினார்கள். அவ்வளவு வயசான ஆட்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடலாமெண்டா நான் ஏன் (15 வயசு மூத்த) மச்சாளை "தமயந்தி" என்டு பேர் சொல்லி கூப்பிடேலாது என்று கேட்டதற்குப் பரிசாய் முதுகில் மேள வாசிப்பும், "அது அப்பிடித்தான். சொன்னாக் கேட்கோணும்"மும் கிடைத்தன)

அவர்களின் சுருங்கின தோல், தொட்டுப் பார்க்கவே ஆசையாயிருக்கும். மரியாதையா ஆச்சி எண்டே சொல்லேலாதாம், இதில தொட்டா உதைதான். சேலையைக் குறுக்கில கட்டியிருப்பார்கள். கிளாசில்தான் இவர்களுக்கு பானங்கள் கொடுக்கப்படும். அதை ஒருதரும் தொடவும் கூடாது. அந்தக் கிளாசை நாங்கள் பாவிப்பதென்பது நினைத்தும் பார்க்க முடியாத ஒன்று. இதெல்லாம் தெரியாமல் நான் குதர்க்கமாய்க் கேள்வி கேட்டால் அம்மாவுக்குத்தான் பேச்சு விழும், "ஒண்டுஞ் சொல்லிக்குடுக்கிறேல்லையோ" என்று. அம்மா பாவம். ஏன் தனிக் கிளாசென்று கேட்டாலும் பீற்றிக் கொள்வார்கள் - "நாங்கள் கிளாசில குடுக்கிறம், எத்தினபேர் சிரட்டையில குடுக்கிறவை தெரியுமோ!" ('பூனைக்குட்டி சிரட்டையில தண்ணிய நக்கி நக்கிக் குடிக்கிற மாதிரிக் குடிப்பார்களா என்று சந்தேகம் வந்தாலும், கேட்டால் விழக்கூடிய அடியின் கனம் நாக்கை அடக்கும்) நினைத்துப் பார்க்கிறேன், இவர்களெல்லாம் இடம்பெயர்வின் போது சாதி பார்த்தா ஒன்றாய் வீடுகளில் தங்கியிருப்பார்கள்? சாப்பிட்டிருப்பார்கள்? இவர்களின் சாதியப் பார்வை உடைந்து சிதறியிராதா?

ஊரிலே இருக்கிறவரை விடுவோம். வெளிநாட்டுக்கு வந்துவிட்டாய். பிற சமூகங்களோடு இணைந்து கற்கிறாய்/செயல்படுகிறாய். ஆனாலும் அதே சாதிக் கண்ணாடி கொண்டுதானே உன் சமூகத்தைப் பார்க்கிறாய்.

ஒரு அன்ரி. பெண்ணுக்கு மாப்பிள்ளை வேண்டுமாம். ஆரேனும் நல்ல பெடியங்கள் இருந்தாச் சொல்லுங்கோ என்று என்னிடமும் என் தோழியிடமும் சொன்னா. உடனேயே ஞாபகம் வந்த ஒரு நண்பனைச் சொன்னோம். யாரென்று அவவுக்கும் தெரிந்திருந்தது.
"எனக்கும் தெரியும் அவைய, நல்ல பெடியன் தான்.. (மெல்லிய குரலில்) ஆனா எங்கட ஆட்களில்லை. அவை வேற".
என்ன சொல்கிறாவென்று தெளிவாயத் தெரிந்தாலும், வம்புக்கு "இல்லை அன்ரி. அவங்களும் சிலோன் தான்" என்றாள் என் தோழி. எனக்குத் தாளாத சிரிப்பு. பாவம் அன்ரிக்கு விளங்கவில்லை.
"இல்லை. அவை சிலோ
ன்தான். ஆனா வேறை". மென்று விழுங்குகிறார். நாங்களும் விடுவதாயில்லை.

"அப்ப என்ன சொல்றீங்க? அவையும் ஹின்டு. நல்ல boy. இதுக்கு மிஞ்சி என்ன அன்ரி?".
"இல்லையடா, உங்களுக்குத் தெரியாது, சாதி வேற"
"ஆ! ஷ்ரேயா..சா..ஆ..ஆ..தி வேறயாம்".. (ஆரம்பித்தோம்.) "நீங்க சாதி பாக்கிறனீங்களெண்டு தெரியாது அன்ரி எங்களுக்கு. அப்ப சிட்னியில நீங்க பழகிற எல்லாற்ற சாதியும் தெரியுமோ? பாத்தோ பழகிறனீங்கள்? ஊர் மாதிரி இங்கையும் புறிம்பாச் சாமான் வச்சிருக்கிறீங்களோ?" இன்னும் நிறைய அவவைக் கதைக்க விடாமல் கேட்டோம்.

எங்களிருவரின் கேள்விகளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லைப் போல. எதிர்பார்த்திருக்கவும் மாட்டா. "இல்ல, அப்பிடியெல்லாம் இல்ல" என்று தடுமாறிக் கொண்டிருந்தா. நேரமாகுதெண்டு அவவின் கணவர் வந்து கூப்பிட இதுதான் சான்ஸ் என்டு "வாறன் பிள்ளையள்" என்டிட்ட்டுப் போய்விட்டார். நாங்கள் சொல்லிச் சிரித்த போது, நாங்கள் அப்பிடி ஒரேயடியாப் போட்டுக் கேள்விகள் கேட்டிருக்கத் தேவையில்லையெண்டு தோழியின் அம்மா சொன்னா. "சாதி அன்ரி" கொஞ்சமாவது யோசித்திருப்பாவா என்பதே எங்களிருவருக்கும் உள்ள கேள்வி.

சாதி பார்க்கிற அன்ரி மாதிரியான ஆட்களைக் கண்டால், அவர்களது இந்தப் பழக்கம் வெளிப்பட்டால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அதுவும் சில வேளைகளிலே அவர்கள் பற்றிய விம்பம் சரிகையில். எவ்வளவுதான் படித்த பண்பாளராய் இருந்தாலும் சாதி பார்க்கத் தூண்டுவது எது? ஏன் பார்க்க வேண்டும்? மனிதர்கள் தாம் பிறப்பது எந்தப் பெற்றாருக்கென்று தீர்மானிக்க முடிவதில்லையே? எல்லாரும் சமந்தானே? பொருள்வசதி தவிரப்பார்த்தால் எல்லாரும் ஆசைகளும் மகிழ்ச்சியும் கவலையும் பெருமையும் தன்னம்பிக்கையும் உற்சாகமும் கனவுகளும் ஞாபகங்களும் நிறைந்தவர்கள் தானே? இதிலே எங்கே இவர் உயர்வென்றும் அவர் தாழ்வென்றும் சொல்லப்போயிற்று?

சில வருடங்களுக்கு முன்னாலே சாதி குறித்த ஒரு சூடான விவாதத்தின் போது அம்மா சொன்னா: "சாதி பாக்கிறது பிழையானது/தேவையில்லாததெண்டு தெரியுது. ஆனாலும் சின்னனில இருந்தே வந்த பழக்கம். கொஞ்சம் தயக்கம் இருக்கு. ஆனா அதுவும் இருக்கக் கூடாதெண்டு தெரியும். எப்பவுமே புதுசு புதுசா சரியானதுகளை உணர்ந்து கொண்டுதான் இருக்கிறம் என்ன!".
கடைசி வசனம் சத்தியமானது. நானும் புதிது புதிதாய்க் கற்றுக் கொண்டுதானிருக்கிறேன்.


சந்தேகம்: நாவலர் இந்தியாவிலிருந்தே இந்தச் சாதி வழக்கத்தைக் கொண்டு வந்தாரெனவும் அதன் பின்னரே இலங்கையில் மிக அழுத்தமாக வேரூன்றியதென்றும் என தோழியின் தந்தை சொல்வார். எந்தளவுக்கு இது உண்மை?

நேர மாற்றம்

மு.கு: தொலைக்காட்சிச் செய்தி பார்த்தலும் இணையத்திலேயும் அசல் வடிவிலேயும் பத்திரிகை வாசிப்பதும் என் தினப்படி நடவடிக்கைகள்.

--------------------------

சனிக்கிழமை பின்னேரம்:
"சாந்திக்கா.. நாளைக்காலையிலே எனக்கு ஏழு மணிக்கு வேக்கப் கோல் .. மறந்திராதிங்க"
"இல்லமா..மறக்காம கட்டாயம் தரேன். இல்லன்னா பலகாரம் செய்ய வீட்டுக்குத்தான் வரணும்"
"ஒகே..நாளைக்காலையிலெ பேசலாம்..போய்ட்டு வர்றோம்"

ஞாயிறு காலை, 07:15 மணி
முழிப்பு வந்திட்டுது. என்னடா இந்த சாந்திக்கா இன்னும் போன் பண்ணல்லயே...என்று யோசித்துக்கொண்டே எழும்புகிறேன். நாட்காட்டியைப் பார்த்தால், 26 மார்ச். ம்ம்..இன்றைக்கு ஏதோ நடக்கோணுமே என்பது தெரிகிறதே ஒழிய என்னவென்று ஞாபகம் வர்ற மாதிரிக் காணோம்.சரி, வரக்குள்ள வரட்டும் என்று விட்டாச்சு.

8 மணி.. சாந்திக்காவின் வேக்கப் கோல். அவவின் "குட் மானிங்..எழுந்துக்கலயா இன்னும்?"க்குப் பதில் சொல்லி தொலைபேசியை வைத்துவிட்டு, தன்னிச்சையாக தொ.காவைப் போட்டால் பொறி தட்டியது இன்றைக்கு நேரம் மாத்துற நாள் என்று. "ஒரு மணித்தியாலம் அதிகமாக இருக்கே.. அநியாயமா வெள்ளனவே எழும்பிட்டனே" என்று நொந்து கொண்டேன்.
என்றாலும் சந்தேகம்.. தொ.காவில் நேற்றுப் பார்த்த போதெல்லாம் நேர மாற்றத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே? ம்ம்ம்... சரி எதுக்கும் டிவில பாப்பம்.. சனல்10 மாத்தியிருக்கு. சனல்7 ஏன் பழைய நேரத்தையே போட்டுக்கொண்டிருக்கிறாங்கள்? போடு டெக்ஸ்ற்ற..அதில மாத்திருக்கிறான். சாந்திக்காவும் அதுதான் 8 மணிக்கு எழுப்பியிருக்கிறா..நேரம் மாறினா 8மணி 7 மணியாயிரும்.. சரிதானே!!
என்டாலும் ஒரு சந்தேகம், கணினியைப் போட்டேன்..அதிலயும் நேரம் மாறிட்டுது. அப்ப சரிதான். அடட.. இன்டைக்கு நல்லா நேரமிருக்கு. ஆறுதலாப் போகலாம் பலகாரம் சுட. இவன் சனல்7காரனுக்கு லூஸ். நேரம் மாத்தாம சனத்தைக் குழப்புறான்.

எடு வீட்டிலில இருக்கிற மணிக்கூடெல்லாம். அலாரம் மட்டுமே 4. (இதிலே முக்கியமாச் சொல்லோணும்: அலாரமும் மின்சூளும் (டோர்ச் லைட்) கொஞ்சம் வித்தியாசமான உருவங்கள் நிறங்களில கண்டா, எங்கட வீட்டில குடியேறிடும். தலையாட்டிக்கொண்டிருக்கிற அலாரம் தொடங்கி, வட்ட/சதுர/திருகிற/பொத்தான் அமத்திற மின்சூள் வரைக்கும் இருக்கு. ஒரு மியூசியமே இதுகளுக்காண்டித் தொடங்கலாம். தூக்கி எறிவமெண்டா அதுக்கு தடையுத்தரவு. அதிலயும் ஒரு அலாரம் இருக்கு. சரிய சனிக்கிழமையிலே காலமை 11 மணிக்கு அடிக்கும். எங்கெருந்து சத்தம் வருதென்டு இன்னும் கண்டுபிடிச்சுக் கொண்டிருக்கிறம்)

சரி, இனி அறைக்குள்ளே இருக்கிறதும், வரவேற்பறையிலிருக்கிறதும் குசினியில இருக்கிரதும் என்டு இன்னும் மூண்டு. மொபைல்லயும் மாத்தோணும்.. எடு அதுகளையும். இருந்து எல்லாத்திலயும் மாத்தியாச்சு.

குளிச்சு வெளிக்கிட்டு, (அப்பவும் சனல்7 நேரம் மாத்தல்ல, அசல் விசரங்கள்) காலமைச் சாப்பாடு சாப்பிடுறன்.. தொ.பே.அழைப்பு வருது.

"ஓய்! எங்கெ இருக்கே? புறப்பட்டுட்டியா இல்ல இன்னு வீட்லேயேதானா? பத்தேகால் மணி இப்போ! ..பலகாரம் 10மணிக்கு ஆரம்பிக்க என்று இருந்தோமே..என்ன ISSAT (Indian Srilankan Standarad Arrival Time) ஆ?"
"ஹையோ! ISSATலாம் இல்ல. இன்னைக்கு டேலைட் சேவிங்க்ஸ்க்கு நேரம் மாத்தினாங்களே.. தெரியாதா? நான் லேட் இல்ல. இப்பத்தான் ஒம்பதேகால்"

"அம்மா..தாயே.. இ-மெயில்,பேப்பர் வாசிக்கிறப்ப, டீவி பாக்கறப்ப கொஞ்சூண்டு கான்சன்ட்ரேட் பண்ணனும்மா..டைம் இந்த வாரம் மாத்தலே"
"...(என்ன உளர்றா)..."
"அதான் மெல்பேண்லே கொமன்வெல்த் கேம்ஸ் நடக்குதில்ல..அதனாலே அடுத்த வாரம்தான் டைம் மாத்துறாங்க. ராசாத்தி, உங்க நேரத்தை மாத்திட்டு தயவு செஞ்சு உடனடியா புறப்படுறீங்களா?!"
"போச்சுடா!!அப்ப நான் இன்டைக்கும் லேட்டா?" :O(

பிடிக்கவில்லை

எனக்கு மனிதர்களைப் பிடிக்கும். பிடிக்காத ஆட்களென்று பார்த்தால் (அதற்காக தீராத பிறவிப்பகை என்றெல்லாமில்லை) ஒருகை விரல் கொண்டு எண்ணிவிடக்கூடியளவு பேர்தான் தேறுவார்கள். நம் எல்லோருக்குமே வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பத்திலாவது ஒரு சக மனிதப்பிறவியின் மீது வெறுப்பு வந்திருக்கும். எனக்கு, அப்படியே வெறுப்பு வந்தாலும் அம்மனிதர்களுடனான அடுத்தடுத்த சந்திப்புகளில் நிகழ்பவைகளால் அநேகமான வேளைகளில் அந்த வெறுப்பின் தாக்கம் குறைந்துவிடும். புதிதாய்ப் பதிவு செய்கையில் பழையனவற்றைத் தூக்கிப்போடுவது மனித இயல்பா?

பிடிக்காமற் போவதற்கான எனது வகைப்படுத்தல்:

  • சிலரைப் பார்த்த(தா)லே பிடிக்கது.
  • சிலருடன் பேசியபின் பிடிக்காது. (கண்ணைப்பார்த்து/முகத்தைப்பார்த்துப் பேசாமை)
  • சிலருடன் ஆரம்பமே சரியாயிராது.
  • சிலரது பழக்கவழக்கங்கள்/குணங்கள் பிடிக்காது (ஆளைப் பிடிக்காமற் போவதற்கும் பழக்கவழக்கம்/குணங்களைப் பிடிக்காமற் போவதற்கும் வேறுபாடு உண்டெனத் தெரிந்தாலும் அதைச் செய்வதற்கு அறிவைச் சரியாய்ப் பிரயோகிப்பதில்லை!)

கொஞ்ச நாளாய்க் கவனிக்கிறேன், மிகவிரைவிலேயே (இவ்வளவு நாளும் இருந்ததை விடச் சற்று அதிகமாக)ஆட்களைப்பற்றிய அபிப்பிராயம் உருவாகி, என்னையறியாமலேயே வகைப்படுத்தல் ஆரம்பித்துவிடுகிறது. பார்த்த விதம் சரியில்லை, ஏன் இப்படிச் சத்தம்போடுகிறான்/ள், உதவவில்லை, கதைப்பது அறிவற்றதனமாய் உள்ளது - இப்படி (அநேகமாக) மிகச் சாதாரணமாய் கணக்கிலெடுக்கத் தேவையே இல்லாத விதயங்களெல்லாம் காரணிகளாய் அமைகின்றன. சிலவேளைகளில் மேற்கூறியவை எழுப்புவது எரிச்சலுணர்வாயிருப்பினும் அதையும் வெறுப்பெனக் கொள்கிறேன் போலவும் தோன்றுகிறது. என் சகிப்புத்தன்மை/பொறுமை இவையெல்லாம் தேய்கின்றனவோ? அறளை பெயருதோ??? :O(

எழுத ஆரம்பித்த நேரத்திலிருந்து இடையிடையே வேறு வேலைகளும் செய்ததால், பதிவு செய்ய நினைத்ததில் அரைவாசியே மேலே எழுதப்பட்டிருக்கிறது. மீதி மறந்து போய்விட்டது. இந்த வார இறுதியில் ஞாபகம் வந்தால் முழுமையாய் எழுதி மீள்பதிவு செய்வேன். இல்லாட்டி, இப்படியே.. அரைகுறையாய்!(இதுவும் பிடிக்கவில்லை)

பி.கு: இதை வகைப்படுத்துபவர் "அனுபவம்" என்று வகைப்படுத்தவும் , நன்றி.

நான் பார்த்த கூத்து!

இன்டைக்கு மட்ச், டிவியப் போடு

நல்லகாலம் ஞாபகப்படுத்தினாய்... நான் போடுறன் நீ ****க்கு அடிச்சு அவனை வரச்சொல்லு.

மூன்றாமவன்: "ஏன் அடிக்கப் போறீங்க ..நோகும்" (இரண்டாமவன், "எல்லாரும் ஒருக்கச் சிரியுங்களன்டாப்பா, எவ்வளவு பெரிய பகிடி விட்டிருக்கிறான்" என்று சொல்லி மூன்றாமவனிடமிருந்து ஒரு அடியை வாங்கிக்கொண்டான்)

(அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான ஒருநாள் கிரிக்கற்போட்டி ஆரம்பித்திருந்தது)

பார்வையாளர்களைக் காட்டிக்கொண்டிருந்த போது ஒரே நேரத்தில் "சான்மான்" ஒரு கத்தல். கொஞ்ச நேரத்தில் "சங்கீதா" என்று இன்னோரு கூச்சல். (எனக்கென்னவோ சான்மானுக்குக் கிடைத்த கூச்சலை விட சங்கீதாவுக்கு இன்னும் உரக்கவும் உசாராகவும் கேட்டது போல இருந்தது. ஆனாலும், "பிரமை" என்று சொல்லிக்கொண்டேன்)

ஜயசூரிய விளாசத்தொடங்கியிருந்தார். கடைசி வரை பார்த்து விட்டு எழுந்து தேநீர் குடித்தார்கள். அவுஸ்திரேலிய ஆட்டம் தொடங்கியது. ஒவ்வொரு வீரராய் ஆட்டமிழந்ததும் பெருங்கூச்சல்.

"என்னதான் சிங்களவன் என்டு பேசினாலும், கிரிக்கட்டெண்டோடன ஏன்டா இலங்கைக்கு சப்போட் பண்ணிறம்?" என்று ஒரு புத்திஜீவி கேட்டார். விழுந்து விழுந்து சிரித்தார்களே தவிர, அவனுக்குப் பதில் சொல்லவில்லை. நானும் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அன்ட்ரூ சிமண்ட்ஸ் வந்து ஒரு சிக்ஸரைத் தூக்கி விட்டார்.. "ஐயோ.. வந்திட்டாண்டா அனுமான்".

விளம்பர இடைவேளை போட்டதும், அவசர அவசரமாக மற்றத் தொ.கா.நிலையத்திற்கு மாற்றினான் ஒருவன். "அடெய், விசரா இப்பத் திரும்பப் போடுவாங்கள்..ஏன்டா சனலை மாத்துறாய்?"

மாற்றினவன் சிரித்துக் கொண்டே "மச்சான்... வடிவாப்பார் ! இப்ப சொல்லு பாப்பம் எனக்கு விசரோ என்டு!!!" திரையிலே ஷரபோவா அழகாக டெனிஸ் ஆடிக்கொண்டிருந்தார்.

"என்ன நீட்டுக்காலடா இது!" (இந்த "இது", மிகக்குறுகியதொரு "இ"யும், பெருமூச்சுக்களின் தொகுப்பாய் "து" என்பதும் சேர்ந்த ஒன்று என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லைத்தானே!)

வெற்றிலை வைத்து அழைக்காத குறையாய், தொலைபேசியில் அழைத்து, அழைப்பை ஏற்று(!!) வந்தவன், "கிரிக்கற்றைப் பாக்காமல் என்னத்தையடா...." என்று ஆரம்பித்து "ஐயோ மரியாக்குஞ்சு, உந்த மெல்பேண் வெக்கைக்க உங்களை விளையாட வைச்சிட்டாங்களே" என்று தடாலடியா பிளேட்டை மாத்தினான். "அடப்பாவி" என்று கூட்டமாய்க் குரல் கொடுத்தார்கள்.

"உப்பிடிச் சின்னச்சின்ன சட்டையளும் காற்சட்டைகளும் போட்டுக்கொண்டுதான் விளையாடோணுமோடா? முழுக்கால், அற்லீஸ்ட் கால்வாசிக்கால் மறைக்கப் போடலாந்தானே?" - இது புத்திசீவி

"கால்காலை மறைக்கப்போடோணும் என்னடா, அதானே கேட்கிறாய்?"
"ஓம்..",
"சரிதானேயடா அப்ப, கால் தரை கால் எட்டிலொண்டு, போட்டிருக்கிறது அந்த சைசிலதான் இருக்கு"
சொல்லிவைத்தது போலத் தலையிலடித்துக் கொண்டார்கள்.

"எதைப்போட்டாலும் விளையாடினாச் சரிதானே" என்று ஒருவன் சொன்னதும் ஆமோதித்து பழையபடி கிரிக்கட்டுக்குத் திரும்பினார்கள்.

"எனக்குப்பசிக்குது" சாப்பாடெடுக்கப் போனான் ஒருவன்.

அன்ட்ரூ சிமண்ட்ஸ் ரன்னவுட்டாகிப் போனார். "அப்பாடா, இனி வெண்டிடலாம்" ஒரு துளி சந்தேகமுமின்றி வெளிப்பட்டது குரல்.

"டேய், நான் சாப்பாடெடுக்கப்போகத்தான் சிமண்ட்ஸ் அவுட்டாகினவன். நீங்களும் வந்து எடுங்கோடா!". சிரிப்பலை.

மற்றவனும் சாப்பாடெடுக்கப் போனான்.. க்ளார்க் பவிலியனை நோக்கி நடக்க ஆரம்பித்தார். தாங்கள் சாப்பாடு எடுக்கப்போனால் விக்கற் விழுமென்று எல்லாருக்குமே நம்பிக்கை வந்ததில் சமையலறைக்குள் போக்குவரத்து நெரிசல்.

கடைசியாய் ஒரு பந்திருக்கையில் மொத்தமாய் அவுஸ்திரேலிய அணி ஆட்டமிழந்ததும் உற்சாகமாய்க் கைதட்டி, நாளைக்குக் காணப்போகிற அவுஸ்திரேலிய நண்பர்களுக்கு என்ன சொல்வதென்று யோசித்துக் கொண்டே கலைந்து போனார்கள்.

இழவரசர்!!




மின்னஞ்சலில் வந்தது.
சரியாத்தானே தலைப்பை எழுதியிருக்கிறன்?

சாறு!

வழமை போலவே என் பிற்பகல் பழச்சாற்றை உறிஞ்சிக் கொண்டிருக்கிறேன். அப்பிள், வாழைப்பழம், கரட், இஞ்சியுடன் எப்போதேனும் தோன்றினால் மாம்பழமும் அரைத்த சாறு. இதைத் தட்டச்ச ஆரம்பிக்க இரண்டு மூன்று நிமிடங்களுக்கு முன்பு உள்ளெடுத்த ஒருவாய்ச்சாறு மின்னல் போன்று ஒரு ஞாபகத்தைக் கிளப்பிப் போனது. வந்த ஞாபகம் மின்னல் போல என்று சொல்கிறேன் ஏனென்றால் வந்த வேகத்திலேயே மறைந்தும் விட்டதனால்.

குழாயூடாக வாய்க்குள் வந்த அந்தக் கொஞ்சச் சாறு தட்டியெழுப்பிய ஞாபகம் எனது சிறுபருவத்துப் பரிச்சய வாசனைகளிலோ அல்லது சுவையிலோ ஒன்று என்பது மட்டும் தெரிகிறது. என்னவென்று ஞாபகப்படுத்திக் கொள்ள மீண்டும் மீண்டும் உறிஞ்சிச் சுவைக்கிறேன். வலுக்கட்டாயமாகச் செய்யப்படும் எதுவும் இயல்புமில்லை அத்துடன் எதிர்பார்க்கும் பலனைத் தருவதுமில்லை என்று உணர்த்திச் செல்கிறது என் தொண்டையில் இறங்கிக் கொண்டிருக்கும் பழச்சாறு.

இது ஒரு வெயில்காலம்

வேர்க்கிறதே என்று இலங்கையில் சலித்துக் கொள்வதுண்டு - காற்றின் ஈரப்பதனின் அருமை தெரியாமல். இங்கே சிட்னியின் கோடை சுட்டெரிக்கும். சராசரிக் கோடைகால வெப்பநிலை 35 - 37°C எனினும் குறைந்தது ஒரு பத்து நாட்களாவது 40°C யைத் தாண்டும். காற்றில் ஈரப்பதன் 10 - 20% இற்குள்தான் இருக்கும். உலர்ந்த காற்று வீசினால் பற்றியெரிகிற பெருநெருப்புக்குக் கிட்டே நிற்பது போலவும், காற்று வீசாமலிருந்தால் ஆளை வெதுக்கிவிடக்கூடிய வெக்கையுமாய் ஒன்றும் செய்யத் தோன்றாமல்/இயலாமல் எரிச்சல் தரும். வேர்த்தால் அதிசயம். அப்பிடியொரு வெயில்தான் முதலாந்திகதி சிட்னிக்கு வாய்த்தது. விடுமுறைக்கென்று நீண்டதூரம் சென்றிருப்பின் வழியில் ரேடியேட்டர்கள் செயலிழந்து போய் தவித்துப்போய் நின்ற பல வாகனங்களையும் மனிதரையும் கண்டிருக்கலாம். ஏதோ 2ம் திகதி முதல் இன்று வரை ஒரே மழை மூட்டமாய் இருக்கிறது. அதுசரி, முதலாந்திகதி ஆவியாகினதெல்லாம் (எந்த நீர்நிலையில இருந்து என்டெல்லாம் கேட்கக் கூடாது!) திரும்பிக் கீழே வரத்தானே வேணும்!

இந்த வெயிலில் காய்ந்துபோய் நிற்கிற விக்ஸ்(யூகலிப்ரஸ்) மரமும் புற்களும் பற்றைகளும் பற்றியெரியத் தொடங்குவதும் இந்தக் கோடைகாலத்தில்தான். காட்டுத்தீ பின்வரும் முக்கியமான 3 காரணங்களால் ஆரம்பிக்கிறது:

- வேண்டாத வேலையாய் நெருப்பு வைப்பவர்கள்(firebugs)
- Campfire / Barbeque போட்டுக் கவனமின்மையால பறந்த நெருப்புப் பொறி
- மின்னல்

இந்த நெருப்பைக் கட்டுப்படுத்தவென்று குளிர்காலத்திலேயே சில பகுதிகளில் நெருப்பைக் கட்டுப்பாடாக எரித்து(backburning) முன்னெச்சரிக்கையாகச் செயற்படுவார்கள். காவற்றுறையினரும் (வசந்தன், கவனிச்சீங்களா?) firebugs இன் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிப்பர்.
அவுஸ்திரேலிய வெயில் பொல்லாதது. சூரியக்குளியல் செய்பவர்களுக்கெல்லாம் Slip Slop Slap என்று மேலாடை, களிம்பு பூசி, தொப்பியுமணியுமாறு நிதமும் அறிவுறுத்தப்படுகிறது. இல்லையோ.. பிறகு தோற்புற்றுநோய் வந்துவிடும். இப்போது புதிதாக (நியுஸீயில் போன்றே) கண்ணுக்குக் குளிர்கண்ணாடியும் அணியச் சொல்கிறார்கள். பார்வையைத் தொலைக்கும் வாய்ப்பும் அதிகமாகிறதாம் இந்த வெயிலால். எல்லாத்துக்கும் இந்த ஒஸோன் படலத்தின் பெரியதொரு ஓட்டைதான் காரணம்.

நான் அனுபவித்த மிகக்கூடிய & குறைந்த வெப்பநிலை(கள்?) - 12°C , 48.8°C. நீங்கள் அனுபவித்த அதிகூடிய & மிகக்குறைந்த வெப்பநிலை பற்றிச் சொல்லுங்களேன்?

பேரைச் சொல்லடா!


"ஹாய்"
குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தால், எங்கேயோ பார்த்த முகமமொன்று மெலிதாய் புன்னகை ஒன்றைச் சுமந்து கொண்டு. ("ம்ம்..யாரிது??) "ஹாய்"

"எப்பிடி இருக்கிறீங்க"
(அட..தமிழ்..) "நல்லா இருக்கிறன். நீங்க?"
"ஓக்கே."

வழமையான வேலைக்குப் போறீங்களா, எங்கே இருக்கிறீங்க என்கிற பரஸ்பர(இதற்குத் தமிழ் என்ன?) விசாரணைகள். (டேய்.. நீ என்னோட படிச்சனி என்டு தெரியுது.. பேரைச் சொல்லன்டா!!)

"உங்கட ஃபிரெண்ட்..ம்ம்..மாலினி எப்பிடி இருக்கிறா? இப்ப எங்க ஆள்?"
"அவ இப்ப ரஷ்யாவில படிக்கிறா."
"மலேசியாவிலதானே முதல் படிச்சவ"
"ஓம்.அது முடிச்சு இப்ப ரஷ்யாவில."
"அடுத்த தரம் கதைக்கேக்குள்ள/மெயில் போடேக்குள்ள நான் கேட்ட என்டு சொல்லுங்கோ."
(ஆரோட கதைச்சுக் கொண்டிருக்கிறனென்டு தெரியாம நான் முழிக்கிறன்..அவக்கு என்னண்டு விளங்கப்படுத்திறது!!) "ஓ! கட்டாயம்". (ட்ரெயினால இறங்க முன்னம் பேர் சொல்லுவாய் தானே?)

இது நடந்தது சில மாதங்களிருக்கும். அவனைத் தொடர்ந்து காண்பதுவும், இருவருக்கும் பொதுவான/தெரிந்த நட்புகளைப் பற்றிய செய்திப் பரிமாற்றமுமாயும் தொடரும் உரையாடல்கள். (அடேய்..பேரைச் சொல்லித் துலையனடா..). கதைத்ததிலிருந்து ஊகித்ததில் அவன் படித்த பள்ளிக்கூடத்தின் இணையத்தளம் போய் உயர்தரப் பரீட்சை எடுத்த வருடத்தின் படி தேடி, நிழற்படங்களைக் கூர்ந்து பார்த்தும் எந்தப் பயனுமில்லை.

திரும்பவும் ஹாய்கள் & நட்பு வட்டங்கள் பற்றிய பேச்சு. நானும் ஏதோ நினைப்பில் இரண்டு குமார்களையும் (குமர்கள் அல்ல!) இன்னுமொருத்தனையும் ஞாபகப்படுத்திக் கொண்டு, அந்த மூவரில் ஒருவன்தான் இவன் என்று தீர்மானித்தேன். திருவிழா நேரத்தில் ஏதோ ஒரு குமார் என்னோட வந்து கதைத்தானே.. முகம் மறந்து போச்சே!! சரி, இனிமேல் process of elimination தான்!

குமார்1 என்று எடுத்துக்கொண்டேன் அடுத்த முறை காணும் போது. பேசுகையில் சொன்னான் குமார்1 வருகிற மாசி மாதம் திருமண்ம் செய்து கொள்ளப்போகிறான் என்று. (அடப்பாவி, அது நீயில்லையா!)

பிறகு கதைத்த சில சந்தர்ப்பங்களில் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. (சந்தித்த அன்று முழுக்க.. " பேரைச் சொல்லி அறிமுகம் செய்கிற பழக்கமில்லையா உனக்கு" என்று திட்டித் தீர்ப்பதுதான்!! முகம் மட்டும், "என்னைப் பார்த்திருக்கிறாய்.. எங்கெயென்று சொல்லு" என்று வேதாளமாய் கேள்வி கேட்கும்.)

நேற்றும் அதே "ஹாய்". சரி இன்டைக்கு உன் பெயர் அறியாமல் விடுவதில்லை. கொஞ்ச நேரம் பேசிய பின், மாலினியின் மின்னஞ்சல் முகவரி கேட்டதற்கு, "உம்மட ஃபோன் நம்பரைப் போட்டுத்தாரும். அனுப்பிறன் என்று செல்லிடப்பேசியைக் கொடுதுவிட்டு பெயர் தெரிந்துவிடும் என சந்தோசத்தில் மிதந்தால், "இந்தாங்கோ" என்று நீட்டியதில் இருந்தது அவனது இலக்கம் மட்டுமே!!! (ஐயோ!!!)

மாலினியிடம் பேசுகையில் "பெயர் தெரியாமல் பேசும்" கதை சொன்னால், ஜோக் ஒஃப் த இயர் என்று சிரிக்கிறாள். பிறகு அவளுடன் சேர்ந்து யோசித்தும் பிடிபடவில்லை. காலையிலே நடந்து போகும் போது மின்னலாய் பொறிதட்டியது. வீதியிலே துள்ளாத குறை. கடந்து போன எவரும் முகத்தில் என் சிரிப்பைக் கண்டு ஒரு மாதிரித்தான் பார்த்துப் போயிருப்பர். பெயர் தெரியாமத்தான் கதைச்சனான் இவ்வளவு நாளும் என்டு அவனுக்குத் தெரிஞ்சிருக்குமோ என்றொரு யோசனை வேறு வந்து தொலைத்தது.

இன்றைக்கும் கண்டேன். ஆனாலும் பெயர் சொல்லி அவனை விளிக்கவில்லை. எதற்கும் இருக்கட்டுமேயென அவன் மின்னஞ்சலைக் கேட்டேன்.

"என்ட பெயர் தெரியுந்தானே?" (அப்ப நான் பெயர் தெரியாமத்தான் கதைச்சனான் என்டது உனக்குத் தெரிஞ்சிருக்குமோ என்டு யோசிச்சது சரிதானா!! தெரியாம முழிக்கிறனென்டு கண்டா பேரைச் சொல்றதுதானே!!)
வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு "ஓமெண்டுதான் நினைக்கிறன்" "என்ன ஸ்பெலிங் பாவிக்கிறனீங்க? Gயா Kயா..."

வண்டி தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது!


பி.கு: கணவரும் தோழியும் சொன்னமாதிரி "பெயர் தெரியாமல்தான் இதுவரைக்கும் உன்னுடன் கதைத்தேன்" என்று ஒத்துக்கொண்டு அவனிடமே பெயரைக் கேட்காமலிருந்தது நல்லதென்றே தோன்றுகிறது. எல்லாம் நன்மைக்கே!?

அவசரமாக ஐடியா தேவை.

நேற்று ஒரு பெண்குழந்தை பெற்றெடுத்த, மூன்று மாதங்களே இங்கே தங்கப்போகும் என் தோழிக்கு, உபயோகப்படும்படி என்ன கொடுக்கலாம்? சொல்லுங்களேன்?

புதுத்தாய்மார் (மற்றவர்களால் கொடுக்கப்படக்கூடியதாக) என்ன விரும்புவார்கள்?

பார்ப்பதற்கு இன்றிரவு போகிறோம் நண்பர்களே, இன்னும் 5 மணித்தியாலத்திற்குள் பதில் சொல்லுங்களேன்...

குறிப்பு:

  • தாயும் சேயும் நலம்.
  • இங்கே கோடைகாலம் இப்போது.
  • புத்தகம் வாசிப்பதில் ஈடுபாடில்லை அவளுக்கு.
  • நிறைய ஆடைகளும் வந்துவிட்டனவாம் குழந்தைக்கு.

மனக்கறை

அழகானதொரு கடற்கரைப்புறம் அசிங்கமாகிப்போன கதை:

க்ரொனொலா: இரண்டு வாரங்களுக்கு முன்பு - பணிமுடிந்து நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு தன்னார்வ lifeguardகள் மத்தியதரைக்கடற்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் தோற்றமுடைய ஒரு குழுவினரால் "இது எங்களுக்கான கடற்கரை. இங்கு எங்கே வந்தாய்? போ" என்று பயமுறுத்தப்பட்டார்கள். "எல்லாருக்குமான கடற்கரையில், உங்களைப் பாதுகாக்கவே நாங்கள் செயல்படுகிறோம்" என்று பதில் சொன்னதற்கு பரிசு மூர்க்கமான தாக்குதல். தாக்கப்படுவதைக் கண்டு சண்டை விலக்க ஓடிவந்த மூன்றாவது lifeguardம் பலமாகத் தாக்கப்பட்டார்.

ஒரு வாரத்திற்கு முன்: கடற்கரையில் lifeguardகள் தாக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் மத்தியகிழக்கு நாடுகள்/மத்தியதரைக்கடற்பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள் போன்று தோற்றமுடையோர் தாக்கப்பட்டார்கள். காவலர் பாதுகாப்பளிக்க நேரிட்டது. lifeguard சங்கத்தினர் சில லெபனானியர்களுக்குத் தம் அலுவலகத்தில் பாதுகாப்பளித்தார்கள்.

அணிதிரண்ட அன்றிரவும், தொடர்ந்த இரவுகளிலும்: தம்மினத்தவர் தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நொருக்கப்பட்டு, வீடுகளுக்கு கற்களெறியப்பட்டன.

பதிலுக்குப் பதில் என்று தொடர்கிறது சிட்னியில்.

பதட்டம் நிலவுகிறதென்றும், பிரச்சனைப்பட்டார்களென்றும் சொல்கிற ஊடகங்கள், பிரச்சனைகளுக்கான அடிப்படைக் காரணங்கள் பற்றி அலட்டிக் கொள்வதாய்க் காணோம். சம்பந்தப்பட்டவர்கள்: லெபனான்/பக்கத்து நாடுகளிலிருந்து இங்கே வந்து குடியேறியோர்/இரண்டாம் தலைமுறை & வெள்ளையர். (ஆக, அவுஸ்திரேலியனை, இன்னொரு அவுஸ்திரேலியன் தாக்குகிறான்!). இந்த வெள்ளை அவுஸ்திரேலியர்களுக்கு இருப்பது ஊடகங்களாலும் அமெரிக்காவுக்கு வால் பிடிக்கும் அரசினாலும் புகட்டப்படும் செய்திகள். இவர்களுக்கு மத்தியகிழக்கு நாடுகள் / மத்தியதரைக்கடற்பிரதேசங்களிலிருந்து வந்தவர்களென்றால் ஒரு பீதி. தீவிரவாதியாக இருப்பானோ.. குண்டு வைப்பானோ என்று. அந்த பாதுகாப்பின்மையே ஒருவித மூர்க்கமான தற்காப்பு உணர்ச்சியை வளர்க்கிறது.

இங்கே, லெபனானியர்களைப் பற்றிய பொதுவான அபிப்பிராயம் நல்லதன்று. இளைஞர்கள் சிலர் சேர்ந்தால் பொது இடத்தில் intimidating ஆக நடந்து கொள்வதுண்டு. இது லெபனானியர்கள் மட்டுமல்ல என்றாலும், கொஞ்சம் வன்முறை அதிகமானவர்கள் என்று கருதப்படுவதால் இவர்களே முன்னிறுத்தப்படுகிறார்கள். குழு வன்புணர்வுச் சம்பவங்களும் நடந்துள்ளன. வன்புணர்ந்த குழுவினர் இச்சமூகத்தினர் என்பதும் ஒட்டுமொத்த சமூகத்தின் மீது வெறுப்பையும், ஒரு வித அச்சத்தையும் தோற்றுவித்திருக்கிறது. எந்தச் சமூகத்திலும் பிரச்சனைக்குரியவர்கள் சிறு அளவில் இருக்கத்தான் செய்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ளாமல் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த எல்லாருமே இப்படியானவர்கள் என முத்திரை குத்துவது எனக்கென்னவோ முட்டாள்தனமாகப் படுகிறது.

பிடுங்குப்பாடாக (நன்றி வசந்தன்) இருக்கிறதைப் பற்றி லெபனானியரொருவர் பத்திரிகைக்கு "எப்போதும் ஒரு படி குறைவாகவே நடத்த/பார்க்கப்பட்டோம்; குழு வன்புணர்வுச் சம்பவங்கள் நடந்த போது ஒட்டுமொத்தமாக(அந்த ஒரு சிலர் காரணமாக) எங்கள் சமூகம் ஒதுக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்டோம். இப்படியானவற்றால் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம்." என்று சொல்கிறார். கடைசியாக அவர் சொல்லியிருப்பது என்ன தெரியுமா? "வன்முறைக்குக் காரணம் முஸ்லிம் லெபனானியர்கள்தான்; அவர்களுடனான பிரச்சனை அவர்களுடனேயே பேசித்தீர்க்கப்படவேண்டிய ஒன்று. அதனால் கிறிஸ்துவ லெபனானியர்களான எங்களைப் பலிகடாவாக்காதீர்கள்". இது எப்படி இருக்கு?

கடற்கரை எல்லாருக்குமானது; தனிப்பட்ட குழுவுக்கோ அதைச் சார்ந்தவர்களோ மட்டுமானதல்ல என, வாழ்க்கை முறையைக் காக்க வெளிக்கிட்டவர்கள் - lifeguards மீதான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் - வன்முறைக்கு எதிரானதாக ஒலிக்கத் தொடங்கியது எப்படி/எப்போது இனவெறி சாற்றும் ஒன்றாக முகம் மாற்றித் தடம் மாறியது என்று தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறார்கள்.

இனவெறி எல்லாருக்குமில்லை. இருக்கிற சிலர் அதை வெளிக்காட்ட நல்லதொரு சந்தர்ப்பமாகவே இதைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு வெள்ளையர் அல்லாதோர் எவரும் அவரவர் சொந்த நாட்டிற்குத் திரும்ப வேண்டியவரே. அவுஸ்திரேலியா ஒரு பல்கலாச்சார நாடு என்பதோ, வேறு நாட்டிலிருந்து வந்து இங்கு வாழ்வோர் நாட்டுக்குச் செய்யும் பங்களிப்பைப் பற்றியோ இவர்கள் சிந்திப்பதில்லை. இவர்கள் ஒருபுறமென்றால், மறுபுறத்தில் இங்கே வந்து வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டுள்ளோரின் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட சமூகத்தினர் ஊடகங்கள், அரசு புண்ணியத்தில் சாதாரண சராசரி மனிதர்களாய், குடிமக்களாய்ப் பார்க்கப் படாமல் விடப்படுகையில், அதன் காரணமாக ஏற்படும் ஆத்திரம், காழ்ப்புணர்ச்சி என்பவற்றால் ஆட்கொள்ளப்பட்டு வேண்டாத செய்கைகள்/பேச்சு/எண்ணங்களுடையவர்களாக மாற்றப்பட்டவர்களாய் காணப்படுகிறார்கள்.

அத்தகைய கொஞ்சப்பேரின் முட்டாள்தனத்தாலும் குறுகிய மனப்பாங்கினாலும் ஒரு வேண்டாத சிறு பொறியாய் ஆரம்பித்தது பெரிதாய்ப் பரவுகிறது. கடுமையான சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலே இந்தப்பிரச்சனையை கட்டுமீறிப்போவதிலிருந்து உடனடியாய்த் தடுக்கும். நாளாந்த நடவடிக்கையோ வாழ்க்கையோ கொஞ்சம் பாதிக்கப்பட்டாலும், உடனடியாக மேலும் இனவெறி தூண்டும் வன்முறைச் சம்பவங்கள் நடக்காதிருக்கும்படி கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல், காவலர்களுக்கு இன்னும் கூடிய அதிகாரங்கள் அளிக்கப்படல் போன்றவை வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கையையும் தீவிரத்தையும் குறைக்க உதவும்.

ஆனால், என்னதான் அதிகாரங்கள் வழங்கப்பட்டாலும், சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டாலும் இருபகுதியினருமே பதிலுக்குப் பதில் என்று நடந்து கொண்டால் ஒரு நாளும் முடிவு வராது. Political correctness பார்த்து, நோகாமல் நொய்யாமல் தீர்வு காண்பதென்பது முடியாது. இரு தரப்புமே பிரச்சனை இருபக்கமும் இருக்கிறதென்பதை உணர்ந்து அதைப் பற்றித் தெளிவாகப் பேசி தீர்க்கமான முடிவெடுத்து அதனைச் செயற்படுத்த முற்படும் வரை, இப்போது க்ரொனலாவிலும் மரூப்ராவிலும் நடப்பது தொடர்ந்து வேறு வேறு இடங்களில் வெவ்வேறு வடிவங்களில் தலைதூக்கி, ஊடகங்களுக்குச் சிலநாள் தீனியாய் இருக்குமேயன்றி சுமுகமான உறவுள்ள சமூகம் உருவாகும் சூழ்நிலை தராது.

தண்டனை

அவுஸ்திரேலிய கிழக்கு நேரப்படி, இன்று காலை 9மணிக்கு (சிங்கப்பூர் காலை 6) அந்த இளைஞன் தூக்கிலிடப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பான்.

அவன், வான் ஙுவென். வழிதவறிய தனது இரட்டைச்சகோதரனின் வழக்குரைஞர் கடனைத் தீர்ப்பதற்காக சிங்கப்பூர் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் கடத்த முற்பட்டிருக்கிறான். சிங்கப்பூரின் சாங்கி விமானநிலையத்திலே 400கிராம் ஹெரோயின் சகிதம் பிடிபட்டதற்கான தண்டனையே மேற்சொன்னபடி நிறைவேற்றப்பட்டது.

நல்லதொன்றைச் செய்ய யோசித்தும், அதைச் செயற்படுத்த தவறான வழியைத் (தெரிந்தே) தேர்ந்தெடுத்ததே அவனுக்கு முடிவையும் தேடித்தந்தது. அவன் குற்றவாளி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. அவனுக்களிக்கப்பட்ட தண்டனை தான் உறுத்துகிறது. அவன் செய்ததற்கு சிறைத்தண்டனை போதும் என்பதே என் கருத்து. சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டிருந்தால் அது முடிந்ததும் வெளியே வந்து இதையே மீண்டும் செய்ய மாட்டானா என்ற கேள்விக்கு (ஆயுள் தண்டனை வழங்கலாம் என்பதைத்தவிர) என்னிடம் பதிலில்லை.

சிங்கப்பூருக்குள் போதைமருந்து கடத்துவோருக்கு மரணதண்டனையளிப்பதன் மூலம் அவ்வாறு செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு அச்சுறுத்தலை, தமது எண்ணத்தை நடைமுறைப்படுத்துவதில் ஒரு தயக்கத்தைக் காட்டும்படி வைக்கிறது சிங்கப்பூர். இந்தத் தண்டனை முறை அந்த எச்சரிக்கை விடுத்தலைச் செவ்வனே செய்கிறது என்பதில் சந்தேகமில்லை. மரண தண்டனைதான், ஆனாலும் தூக்கிலிட்டுக் கழுத்து முறிய, துடிதுடிக்கக் கொல்வதுதான் ஒரே வழியா? இதே எச்சரிக்கையை வேறு தண்டனை(கள்) மூலம் விடுக்க முடியாதா?

குறிப்பு: கடைசியாக மகனைக் கட்டித்தழுவ அனுமதி கேட்ட அவனது அம்மாவுக்கு, ஜோன் ஹவாட் (அவுஸ்திரேலியப் பிரதமர்) தனிப்பட்ட வேண்டுகோள் சிங்கப்பூருக்கு விடுத்தமையால், மகனது கைகளைப் பற்றிக்கொள்ள மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

குறுக்கெழுத்து II

கொஞ்சம் வித்தியாசமான குறுக்கெழுத்து.

ஆங்கிலத்திலே குறிப்புக்கள் தரப்பட்டுள்ளன. அவற்றிற்குப் பொருத்தமான தமிழ்ச்சொல்லை கட்டங்களில் இட வேண்டும்.(உதாரணமொன்று நிரப்பப்பட்டுள்ளது). செய்றீங்களா?

நிரை(இ.வ):

1. Slumber 2. Post 4. Particle 5. Night 6. Hindrance; Harm 7. Bend 8. Cooking 9. Reparation
11. Vessel 13. Limericks 14. Sin 15. Goat 17. Widow 18. Consent 20. Abbreviation Of Mister (Reversed)


நிரல்(மே.கீ):

1. Mind 3. Rapidity 4. Proximity 5. Parody 6. Tooth 7. Paddy Field 8. Occurence 10. Home 12. Disparity 15. Yes (Upside Down) 16. Our 19. Tree (Upside Down) 20. Moon

இது கொலைகளின் கதை

மு.கு: இளகிய மனதுடையவர்கள் இதை வாசிக்க வேண்டாம்..பிறகு என்னுடன் சண்டைக்கும் வர வேண்டாம்.

பகல் பலது வீட்டிலே கழிந்த போது ஆசையில் எடுத்து/வாங்கி வந்து பார்த்துப் பார்த்து தேவையறிந்து உரமிட்டு வளர்த்ததுவும், பள்ளிக்குப் போகையிலேயும் பாசத்துடன் கவனித்ததுவுமாய் இருந்த என் செல்லச் செடிகள்... ( "இவ்வளவு மரம் ஏன் வளர்க்கிறீங்க? கரப்பொத்தான் எல்லாம் வரும்". "இல்லை அப்பிடி ஒன்டும் வராது. நான் கவனமாப் பார்ப்பன்")

வாடிப்போய்த் தண்டுடன் இலையில்லாமல் நின்று வளர்ச்சி நிறுத்தப் போராட்டம் நடத்தின வாழைக்குத் தலை வெட்டி, ("ஐயோ! ஏன் வெட்டுறீங்க? ஒரேயடியா சாகப்போகுது". "இல்ல.. இப்பிடி வெட்டினா வருமாம்..--- சொன்னவ ".) இலைகள் வர, விசேட நாளுக்கெல்லாம் தலைவாழை கிடைத்ததுவும்..("அப்பவே சொன்னன் தானே! :O) ")

தாவரமும் அதன் வளர்ப்பும் பற்றி நண்பியின் ஆர்வம் தொற்றியதில் அது பற்றிய வகுப்புகளுக்குப் போனதொரு ("அவக்கு back yard இருக்கு, அவ அதுக்கு மரம் வைப்பா. உம்மட நிரம்பின பல்கனியில இனியெங்க இடம்?". "இல்லையில்ல, எப்பிடிப் பராமரிக்க என்டு படிக்கத்தான் நான் போறன்") ஆர்வக் கோளாற்றுக் காலத்தில் வாங்கின பூந்தொட்டிகளும், சிலபல செடிகளும் ஏற்கனவே இருந்த பலகணித் தாவரக் குடும்பத்தில் கலந்தனவே. ( "இன்டைக்கு இவ்வளவும்தானா?". ":O ")

சமையலறையின் சேதன மீதிகள் போட்டு வளர்த்ததில் ஒன்றாய் நன்றாக கிளையும், கிளையில் இலையும் விட்டு, கரப்பொத்தான் தொடங்கி சிலந்தி வரை பலதுக்கும் புகலிடமாய் ("அப்பவே சொன்னன்..இதெல்லாம் போடாதையும் என்டு!கேட்டாத்தானே!! ") நின்ற இரட்டைப்பிறவிக் கருவேப்பிலையை வகுப்புக்குப் போய் பெற்றதாக நினைத்துக்கு கொண்ட அசட்டறிவின் காரணமாய்ப் பிரித்து, துணையிழந்த சோகத்தில் அவற்றை ஆழ்த்தியதும் ("வீண் வேலைகள் செய்யிறது"), அத்துடனே பக்கத்தில் நின்ற அழகான கானேஷன் தண்ணீர் தண்ணீரென அலறியது கேட்காமல், அதை தொண்டை வற்றச் சருகாக்கியதும், எனதருமைச் சிலந்திப் புல்லும் அதே கதிக்காளாகியதும்.. :O(

தேயிலையும், முட்டைக் கோதும் போட்டு வளர்த்த ரோசாச்செடியெல்லாம்வெறும் முள்ளாகி நின்று ("ரோசாப்பூவெண்டா எப்பிடி இருக்கும்?" .."Grrrr"), வளரப் பார்த்த வத்தகை, வான் பார்த்து, பூமி ஆராய்ந்து, வராமலே போனதுவும் என்று தாவர சங்கமத்துள் பலதும் வளர்த்திளைத்தேன் நான் - மெய்யே கள்ளியொன்று என்றறிந்து இன்புற்றேன். ( "எல்லாம் போய் இப்ப இதுவா!")

கவனியாது விட்டாலும், இன்னும் இருக்கிறேன் பார் என்று காட்டி மகிழ வைக்கும் அன்பான கள்ளிச்செடிகளுக்கும் (" நல்லகாலம், ஒன்டும் செய்யாம விட்டிருக்கிறீர்..உயிரோட நிற்குது", ":O("), வீட்டுக்குள்ளே இருப்பதனால் தப்பிப் பிழைத்திருக்கும் மூங்கிலுக்கும் துணையாய் நேற்றுக் கிடைத்த Kangaroo Paw வுக்கு "மேற்தட்டு" வாழ்க்கை வெறுப்பது எப்பவோ.. அன்றைக்கு மீண்டும் ஒரு கொலை நடந்திருக்கும்.

இருக்கிறது..இல்லை?

இருக்கும் பொருள் :

  • இருப்பது போன்று தோற்றம் உடையது
  • இருப்பது போன்று தோற்றமற்றது. (புலன்களால் உணர முடியாததாய் இருப்பது)

இல்லாத பொருள்:

  • இருப்பது போன்ற தோற்றம் தரக்கூடியது.

சாப்பாடு, சட்டை & சாயம்

நல்லகாலம் , மூச்சு விடுவது ஒரு தன்னிச்சையான செயல்... இல்லாட்டி இருக்கிற வேலைக்குள்ளே அதைச் செய்ய மறந்து போய், நிறைவேறாத ஆசை உள்ள ஆவி/பேயாய் (<--இப்பவே இதுதான் என்டு பெயர்!!) உலாவாமல்(நன்றி சில பல சினிமா & கதைகள்)..உங்களைப் பாட வைக்க (வேறென்னத்தை.. "சோதனை மேல் சோதனை" தான்!) திரும்பவும் வந்திருக்கிறேன்.

தெ.து.வ.ப.ச.செ. - மன்னிப்புக் கேட்கிறேன்.. எனக்குத் தொலைபேச முயற்சித்தீர்கள். ஆனாலும் அந்த நேரத்துச் சூழ்நிலைகளால் பதிலளிக்க முடியவில்லை! விரைவில் தொடர்பு கொள்கிறேன்.


------------------------------------------------------------------

சரி, விதயத்துக்கு வருவோம்...இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை என்று வானொலி, தொ.காவில் சொல்வது போல வாசிக்கவும்! >>> இன்றைய எரிச்சல்..வழங்குவோர்: பிரம்மகுமாரிகள் ராஜயோக நிலையம். (கலை - hint, hint!! ;o)

முக்கியமாக இவர்கள் கடைப்பிடிப்பதில் இரண்டை (என் பார்வையும் கலந்து சொல்கிறேன்) தாமே அல்லது "7 நாள் உபதேசம் பெற்ற" தங்கள் கூட்டத்தினர் சமைத்தாலொழிய இவர்கள் வேறிடத்தில், வேறு யார் வீட்டிலும் "சமைக்கப்பட்ட" உணவை உண்பதில்லை. பழமோ, பொதி செய்யப்பட்டிருப்பதிலிருந்து எவ்வித மாற்றமுமின்றிப் பரிமாறக்கூடியதாய் இருக்கும் உணவு/பானங்களைத் தவிர "ஞானம்" பெறாதவர் வீட்டில் உண்ணார்கள். ஏனா? நல்ல கேள்வி கேட்டீர்கள்!

"ஞானம்" பெறாதவர்கள் 1. உணவு தயாரிப்பு முறை அறியாதவர்கள் (அதாவது நல்ல எண்ணங்களோடே சமைக்க வேண்டும் என அறியாதவர்கள்) 2. அதனால், என்ன எண்ணங்கள் மனத்தில் ஓடிக்கொண்டிருக்க சமைத்தார்கள் என்று தெரியாமையால், தற்செயலாய், தேவையற்ற/வீணான எண்ணவோட்டம் அந்த நேரத்தில் அவர்கள் மனதில் இருந்திருந்தால் அது உணவு மூலமாக தம்மை வந்தடையும். இது இவர்களது "தூய்மையைக் கெடுக்குமாம்". உடன்படுகிறேன்.. எண்ணங்கள் உணவின் தன்மையில் மாற்றமேற்படுத்துமென.


இவர்களே சமைப்பார்கள்..ஆனால் உள்ளி (பூண்டு), வெங்காயம் - இவை சமையலில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டா. ஏனென்ற கேள்வி வருகிறதா? இந்த உள்ளி, வெங்காயம் இவை பாலுணர்வைத் தூண்டுமாம். அந்தந்த வயதில் இயல்பாய் நிகழ்வதற்கு, இவர்கள் ஏன் வலுக்கட்டாயமாக அணைபோட முயற்சிக்கிறார்கள்? அல்லது வெங்காயம், உள்ளி போட்டு சாப்பிட்டுக்கொண்டு இருந்தவரை இவர்களுக்கு அதீதமான பாலுணர்ச்சிதான் இருந்ததா!

வெள்ளை ஆடைதான் அணிவார்கள். அதிலும் முழுக்கைச் சட்டை. அதிலும் சேலை அணிவோர் - கேட்கவே வேண்டாம். கழுத்தோடு ஒட்டிய இரவிக்கைக்கழுத்து, முழுக்கை, சாதாரண இரவிக்கை போன்று இடுப்படியில் நிற்காமல் இன்னும் நீளமாய். ஆக மொத்தம் இரவில பார்த்தீர்களோ - தெரியாத ஒருவருக்கு lift கொடுத்து, அவர் காரை விட்டு இறங்கி நுழைந்த இடம் றொக்வூட் சவக்காலை என்று கண்ட ஒரு மாமாவுக்குப் போல - உங்களுக்கும் காய்ச்சல் வருவது சர்வ நிச்சயம்.

ஏன் இந்த நீட்டு ப்ளவுஸ்? சேலை கட்டினால் இடுப்புத் தெரியுமல்லவா? அப்பிடி இடுப்புத் தெரிவது கூடவே இருந்து தியானம் பயில்வோர்க்கு(பெண்கள் முன்னால் அமர ஆணகள் பின்னாலாம், மாறியே அமர்ந்தாலும் தியான நிலையத்தில் காண்கிற மற்ற நேரங்கள்!!) இடைஞ்சலாக..கவனத்தைக் குலைப்பதாக இருக்ககூடாதாம்.

எனக்கு விளங்கவில்லை, ஏற்கெனவே உள்ளி, வெங்காயமின்றிச் சாப்பிடுபவர்கள் & தியானத்திற்கென வருபவர்கள், கேவலம் ஒரு சின்னத்துண்டு தசையால் கவனம் சிதறுவதா? அப்ப இவர்கள் கவனம் தியானத்தில் இல்லையா? அப்படியானால் (இவர்கள் சொற்படி பார்த்தால்) உள்ளி, வெங்காயம் சாப்பிடுபவருக்கும், "பாலுணர்வு தூண்டப்படாமல் இருக்கும்" இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? மனிதன் மனிதன் தான். அவனது அடிப்படை இயல்புகளைக் குலைத்து, அதற்குச் சாயம்
பூசுவானேன்?

சொல்ல விரும்புவது

என் அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய வலைப்பதிவாளர்களே, வணக்கம்.

இன்றைக்கு நான் சொல்லப்போவது உங்களுக்கு முக்கியத்துவமில்லாத செய்தி.. ஆனாலும் நீங்கள் "சொல்லவில்லையே நீ" என்று சொல்லிவிடாமல் இருப்பதற்காக நான் சொல்வது என்னவென்றால்: ஏற்கெனவே திட்டமிட்டு இருந்தபடி சரியாக அவுஸ்திரேலிய நேரம் 12 ஒக்டோபர் 2005, 02:00 முதல் நடைமுறைப்படுத்தப்படும் சில செயற்பாடுகள்/நடைமுறைகள் காரணமாக கிட்டத்தட்ட 2 - 3 கிழமைக்கு இந்தப்பக்கம் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உங்களுக்கு (நிகழ சந்தர்ப்பமே இல்லாத) மனவருத்தங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.(அடடே.. யாராவது வந்து corporate report எழுத கூட்டிட்டுப் போங்களேன்!! ;O)

புதிய செயற்பாடுகளை சரிவர மண்டைக்குள்ளே செலுத்தி (வசந்தன் - அந்த குளுக்கோசும் வீவாவும் இப்போ பயன்படும்! அன்பளிப்பு தாராளமாக ஏற்றுக்கொள்ளப்படும்!!) என்னென்ன செய்ய வேண்டும், எவ்வெப்போது செய்ய வேண்டும் என்பதையும் பழகியெடுத்து, சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக் கொஞ்சம் காலம் தேவைப்படுகிறது. அதனால்... "இரண்டு கிழமையாவது நிம்மதி" என்று சந்தோசப் படுகிறவர்களும் "ரொம்ப முக்கியம் இது" என்று அங்கலாய்ப்பவர்களும் "அடடா!!" என்று கவலைப்படுபவர்களும் (இது ஒரே ஒருவர் தான் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!! ;O) ) ஒரு சில கோப்பை ரசங்களை (ரசம் - அவரவர் விருப்பத்தைப் பொறுத்து சுவை/நிறம்/மணம்/குணம் வேறுபடலாம்) அருந்தி மனதை ஆற்றிக்கொள்ளுங்கள்!

மீண்டும் கொஞ்ச நாளையால் சந்திக்கலாம்.

சம்பந்தமில்லாத பின்குறிப்பு: 125ம் பதிவு இந்த அறிவித்தலா!?! :O(

காணவில்லை!


தேடிச் chocolate நிதந் தின்று,
மழலைக் கதை பல பேசி,
களிப்புடனே புரண்டெழுந்து, குழப்படி மிக;
பிறர் மகிழக் குறும்புச் செயல்
புரியு மிந்தக் குட்டி வம்பனை...

பல நாளாய்க் காணோ மடா!!!

குண்டுவெடிப்பும் எரிச்சலும்

பாலியில்(Bali) குண்டு வெடித்தாலும் வெடித்தது ஊடகங்கள் தங்கள் பணியைச் செவ்வனே செய்யத்தொடங்கி விட்டன. 2002ல் வெடித்த குண்டின் இலக்குப் போலவே இந்த முறையுமா எனத்தெரியவில்லை. ஜமா இஸ்லமியாக் குழுவினர் தான் அக்குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

நான் சொல்ல வருவது அதைப் பற்றியன்று. குண்டு வெடித்ததாகச் செய்தி வந்தது வெள்ளியிரவு. சனி காலையில் செய்தியில் சொல்கிறார்கள் அவுஸ்திரேலிய/நியுசவுத் வேலஸ்(எதென்று சரிவர ஞாபகமில்லை) இஸ்லாமிய அமைப்பு இக்குண்டு வெடிப்புக் குறித்து தனது கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறதென்று. சகலவிதமான அமைப்புகளும் இந்தக்குண்டு வெடிப்புத் தொடர்பாக தமது விசனத்தையும் கண்டனத்தையும் தெரிவித்திருந்த வேளை, ஊடகங்கள் இஸ்லாமிய அமைப்பினரின் கண்டனச்செய்தியை மட்டும் தூக்கிப் பிடித்தமை ஊடகங்களின் பாரபட்சமான பார்வையையும், வேண்டாத, விஷ(ம)மான எண்ணங்களை மக்கள் மனதில் ஊன்ற வைக்கும் முயற்சியையுமே காட்டுகிறது. ஏற்கெனவே இஸ்லாமியர் = தீவிரவாதிகள் என்கிற எண்ணம் மக்களிடையே விதைக்கப்படுகிறது. கத்தோலிக்க, அங்லிக்கன், பௌத்த, இன்னும் எத்தனை மத அமைப்புகள் கண்டனச் செய்தியை வெளியிட்டிருக்கும்? ஏன் அவற்றைக் குறிப்பிடவில்லை? இஸ்லாம் மதத்தினர்தான் கண்டிக்கிறார்கள்; அவர்களைச் சார்ந்தவர்தான் செய்ததென அவர்களுக்கே சந்தேகம் வந்ததில்தான்/ தெரிந்ததில்தான் இவ்வாறு கண்டன அறிக்கையை வெளியிடுகிறார்கள் என்கிற நினைப்புகளுக்கு இடம் தரும்வகையில் தான் செய்தி சொன்ன விதம் அமைந்திருந்தது. குண்டு வெடிப்புக்குச் சூத்திரதாரிகள் பற்றிய ஊகங்கள் நிலவினாலும், இன்னும் சரியாக நிறுவப்படாத நிலையில் ஊடகங்கள் பொறுப்பற்றதனமாக, குறிப்பிட்ட சமூகத்தினரின் மீது காழ்ப்புணர்ச்சி வரும்வகையில் இவ்வாறு செய்தி வெளியிடுவது கண்டிக்கத்தக்கது.

பிரித்தானியரின் வழி வந்தவர்களென்று உறுதிப்படுத்திக்கொள்ள "Divide & Rule" உத்தியை ஊடகங்களின் மூலம் செயல்/வெளிப்படுத்துகிறார்களோ?

தெ.து.வ.ச.நி.கி.ச. க்கு வாழ்த்து!

நாளை தொடக்கம் நாளையன்றை வரை நடக்கவிருக்கும் நியூஸிலாந்து வலைப்பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேற வாழ்த்துக்கள்.

சந்தித்துக் கொள்ளப்போகிறவர்களே, சிட்னி சந்திப்புப் போல அல்லாது விரைவிலே (சுடச்சுட) படங்களை வலையேற்றுங்கள்! ;O)

பெட்டகம்