எழுதி எத்தனையோ காலமாகிறது.
வகை: இன்றைய தருணம்
வகை: கதை
வகை: இன்றைய தருணம்
வகை: இயற்கை , மறக்காமலிருக்க
வகை: கிறுக்கினது
வகை: இப்பிடியும் நடந்துது , கிறுக்கினது , திரை
வகை: கிறுக்கினது
வகை: இன்றைய தருணம் , கிறுக்கினது , மறக்காமலிருக்க
வகை: இன்றைய தருணம் , கிறுக்கினது
வகை: கிறுக்கினது
இன்றைக்கு ரீடரில் வாசிக்கவென்று தொட்ட அனைத்தும் ஏதோவொரு விதத்தில் ரயிலையோ அல்லது ரயில் நிலையத்தையோ பேசின.
முதலில் பார்த்தது "இவள் என்பது பெயர்ச்சொல்" . அதில் காட்டியிருந்த ரயில் நிலையத்துப் படத்தைப் பார்த்ததும் எனக்குள் ஞாபகம் வரக்கூடிய ஒரே ரயில் நிலையமும் அதன் படியே வந்ததும் ஏறாவூர் ரயில் நிலையமே. (அதைத்தவிர இன்னொரு ஊரென்று நினைத்தால் ரயில் நிலையத்தோடு வருவது எம்மியின் தொரனாகொடவாகத்தானிருக்கும்.) எனது ஞாபகத்தில் இருக்கிற ஏறாவூர் ரயில் நிலையத்திற்கு மிகப் பொருத்தமாய் அமைந்திருந்தது அந்தப் படம். எனக்கு ஞாபகமிருந்து படத்தில் இல்லாமலிருந்தது தென்னோலையால் கட்டப்பட்ட தயிர்முட்டிகளே. விளையாடுவதற்குப் பொருத்தமேயில்லாத பிளற்போமில் விளையாடிய ஞாபகமிருக்கிறது. அங்கே என்னுடன் கூட விளையாடுபவர் ஓர் அக்கா. அங்கே பணிபுரியும் அவரது அப்பாவுக்கு உணவு கொண்டு வருவார். அல்லது அவரைப் பார்க்க வருவார். சித்ரா என்று பெயர். நீண்ட பின்னல். ஆளும் அவரது சிரிப்பும் அவ்வளவு அழகு.
அவரை நிறைய நாள் மறந்து போய், திடீரென்று ஏறாவூர் பற்றிய உரையாடலோ ஞாபகமோ ஏதொவொன்றில் திரும்பக் கண்டெடுத்தேன். விவரம் தேடிய போது சுவிசில் இருக்கிறார் என்று சொன்னார்கள். சுவிசுக்குப் போன போது தேடினால் சுவிசில் இருப்பதாய்ச் சொன்னது வேறொரு சித்ராவாம். தேடுபவர் இன்னும் ஏறாவூரிலாம். ஒரு சேர எமாற்றமும் நம்பிக்கையும் கலந்து உணர்ந்தேன். முழுக்கவும் இல்லையென்று ஆகவில்லையல்லவா!
எனக்கேற்பட்டவை ரயில் நிலையங்களுக்கு மிகவும் பொருந்தக் கூடிய உணர்ச்சிகள். பிரிவிற்கும் சந்திப்பிற்கும் அவற்றோடு கூட வரும் உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்குமே என ஏற்படுத்தப்பட்டவை விமான, ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள். பிரிவின் சோகமா, சந்திப்பின் சந்தோசமா/ஆசுவாசமா அல்லது தொமஸ் தோக் ரயிலைக் கண்ட என் ரோசாப்பூ மருமகளின் கண்களில் மின்னியது போன்ற பரவசமா.. எத்தனை உணர்ச்சிக் கலவைகள். கூடவே ரயில் நிலையத்திற்கு அப்பால் எங்கேயோ உள்ள கிராமத்திலிருந்து அம்மாவிடம் மருந்தெடுக்க வந்தவேளை கண்ட ரயிலைப் பார்த்து தனது தாயிடம் அது என்னம்மா என்று கேட்ட சிறுவனின் ஞாபகம் வருது. அது வந்தால், 90களின் இறுதியில் யாழ் போனபோது சோதனைச் சாவடிகளில் கண்ட தண்டவாளம் ஞாபகம்வரும். அங்கேயிருந்து மனம் பழையபடி எறாவூருக்கு வந்து ஐந்து சதத்தை எடுத்துத் தண்டவாளத்தில் வைத்துப்பார்க்கிற, அல்லது காந்தம் வைத்திருக்கும் செல்வம் அண்ணாவினதும் இன்பனண்ணாவினதும் பின்னாலேயே அலைந்து கொண்டிருக்கும் ஒரு சிறுமியிடம் வந்து நிற்கிறது. எண்ணங்களும் நினைவுகளும் ரயிலைப் போலத்தான் இல்லையா.. நீண்டு கொண்டே போகின்றன. தரித்து, மனிதர்களை ஏற்றி, இறக்கிப் பயணித்தபடிக்கு .
பயணத்தில் எம்மீது படிந்து போகும் ரயில் வாசமாய் மனிதர்கள்..
கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது மழை. நனையாமல் பார்க்கும் போதும் நல்லாய்த்தான் இருக்கிறது. ஆனாலும், அடுத்த கட்டம் பற்றிச் சிந்திக்காது நனைந்து கொள்ளும் அழகில்லை. ஏன் அந்தச் சிறுபிள்ளை ஆசை அப்படியே (பலருக்கு) இருப்பதில்லை? சட்டைப்பையில் இருப்பதை நனையாமல் பற்றிக் கொண்டு குடைக்குள்ளோ கிடைத்த கூரையின் கீழோ எதற்கு மழையுடன் கண்ணாமூச்சி? நனைந்தால் சளி பிடிக்கும் காய்ச்சல் வரும் என்று குழந்தைகளுக்குப் பூச்சாண்டி காட்டி மழையுடன் போடும் ஆட்டத்தைக் கெடுப்பது ஏன்? ஒரு மனமார்ந்த நட்பின் இதத்தோடு தொட்டுப் பேச தடவிக்கொடுக்க, சந்தோசமாய் விளையாட, ஏன், எங்கெ யாரிருக்கிறார் என்று கவனிக்காமல் முத்தமிடக்கூட மழை துளித்துளியாய் சரஞ்சரமாய் இறங்கிவர அதைப் புறக்கணிப்பானேன்? எத்தனை விதமாக உருவெடுக்கிறது - மனிதரைப்போலவே. அது மட்டுமே போதாதா எந்தக் கணத்தையும் அழகாக்கிவிடுவதற்கு. மழை வருவது தெரிகிறதா உங்களுக்கு? அதன் அழைப்புக் கேட்கிறதா? அதன் தொடுகையை, நடனத்துக்கான அழைப்பை உணரமுடிகிறதா? உங்களால் அதனுடன் ஆட்டம் போட முடியாவிட்டாலும் பரவாயில்லை. அதன் ஆட்டத்தைப் பாருங்கள். மனதிலிருப்பதைப் பேசுங்கள். அதைக் கேட்பதற்கு மழையைப் போல வேறு யாருமில்லை, பேசாதிருந்தாலும் மழை ஒன்றும் சொல்லப்போவதில்லை. அதற்குத் தெரியும் மௌனமும் பேச்சுத்தானென்று.
என் இரவுகளிலே மழை. என் பகல்களிலும் காலை மாலைகளிலும் இடைப்பட்ட எவ்வேளைகளிலும். மேகத்திலிருந்து வராது விட்டாலும் ஒவ்வொரு விதமான மழை என்னைத் தொடர்ந்தபடியேதான் இருக்கிறது. எண்ணங்கள் குறிப்பிட்ட ஒருவரிலிருந்து துளியாய் ஆரம்பித்து பெருமழையாய் பலபேரை நினைவூட்டிப் போகும். சாரலாய்த் தொடங்கும் ஒரு நட்பின் தொலைபேசி அழைப்பு அடைமழைப்பேச்சு. இடியென முழங்கி வார்த்தையால் ஆலங்கட்டி மழைபோல் தாக்கும கோவங்கள். துளித்துளியாய் எண்ணிக்கையும் அளவும் அதிகரிக்கிற ஆசீர்வாதங்கள். மழை எப்போதும் எல்லாரையும் எதோவொரு வடிவில் தொடர்ந்தபடியேதானிருக்கிறது.
இலைகள் தெளிக்கும் பன்னீராய் தரை தொட்டு, கண்ணாடியில், கூரையில் எங்கும் நெளி நெளியாய் பளிங்குப் பாம்பாய் நெளிந்து ஓடுகிறது மேகத்திறங்கிய நீர். அதனோடு கூடவே நடனமாடியபடி இலையுதிர் காலத்துக் கடைசி நாளின் வண்ண இலைகள்.. சொல்லாமலேயே அவற்றோடு ஓடிப்போய்விடுகிறது மனம்.
வகை: கிறுக்கினது
நிறைய நாளாக(வருடங்கள் என்று சொல்லணுமோ!!) ஒரு உடற்பயிற்சியும் இல்லாமல் இருந்துவிட்டேன். உடம்பின் சீத்துவம் பென்னா (அண்ணர்) போன ஆண்டு வந்திருந்த போதுதான் ஓடி வெளிச்சுது. அந்தாள் இருக்கிறதே மலை நிறைஞ்ச நாட்டில. அவரிட வீட்டுக்குப் பின்னாலயும் முன்னாலும் பக்கவாட்டிலேயும் என்று மலை மயம். அது வழியே ஏறி இறங்கி அநியாயத்துக்கு fit ஆக இருந்திச்சு மனிசன். நம்ம ஏறி இறங்கினதெல்லாம் வீட்டில இருந்த படியிலயும் மனிசரிலயும்தான்!! அவரோட குன்றொன்று ஏறுவமென்று போனன். என்க்கும் மலையேறிறது விருப்பம். ஆனா மலை இல்லாத இடத்தில (அதாரது பென்டில் ஹில், செவன் ஹில்ஸ் எல்லாம் இருக்கே என்டுறது!!) நான் என்ன செய்ய!
சரி, பென்னா ஏறினார். நான் ஏறப் பார்த்தன். ம்கூம்... அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ என்டு நான் திரும்பி சிட்னிக்கு வந்திட்டேன். பென்னா காத்தோட சண்டை பிடிச்சு மலையேறின கதை கங்காரு கொவாலாப் பதிவில வாசிக்கக் கிடைக்கிறது. சந்தோசமா சைக்கிலும் ஓட spinning என்ட வகுப்புக்குப் போய் வண்ணம் காட்டினார். ஆனா தங்கச்சி ரோடிலே மட்டும் கிழமைக்கு ஒருதரம் போல சைக்கில் ஓட்டிட்டு விட்டுட்டா. இப்பிடி இருக்க, வீட்டிலே ஒரு நண்பன் தங்க வந்தான். இரண்டு மாதம் நாங்க உண்டு வளர்ந்தம். எங்களுக்கே சகிக்காம ஓகஸ்ட் மாசத்துக் குளிரையும் பொருட்படுத்தாம ஒவ்வொரு நாளும் 2 கிலோமீட்டர் (அதாவது செய்தமே!) நடந்து கொஞ்சம் வளைஞ்சு குனிஞ்சு நிமிர்ந்து உடற்பயிற்சி செய்தம். மிஞ்சிப் போனா 1 மாதம் தான். அவன் ஊருக்குப் போனதும் இங்க உடற்பயிற்சி நிறுத்த்ம்.
புது வேலையொன்றில சேர்ந்து நாலைஞ்சு கிழமையால நிமிர்ந்து பாத்தா அங்க இலவசமா ஒரு ஜிம் இருக்கு. விடுவமா.. 4 கிழமையா போறன். கொஞ்சம் குரொஸ் ட்ரெய்னர், கொஞ்சம் ட்ரெட்மில். இந்தக் கிழமை துடுப்பு வலிக்க ஆரம்பித்திருக்கிறேன். உடற்பயிற்சி செய்த முதல் கிழமை வேணாமென்று போய்விட்டது. ஆனாலும் விடுவதில்லை என்று உறுதி பூண்டிருக்கிறேன். கடந்த வாரமெல்லாம் உடற்பயிற்சி செய்து முடித்ததும் ஒரு .. என்ன சொல்லலாம், buzz.. ஒரு புத்துணர்ச்சி இருந்தது. இரண்டரைக் கிழமைப் பிரயத்தனத்தின் பின் இன்றைக்குத்தான் களைப்பில்லாமல் 1கி.மீ. முழுமையாக ஓட முடிந்திருக்கிறது. என் 5 கி.மீ. ஓட்ட இலக்கை விரைவில் அடைந்து விடுவேன் என்று நம்புகிறேன்.
இன்றைக்கு அப்படி நிறுத்தாமல் ஒடி முடித்ததும் ஒரு சந்தோசம் வந்தது பாருங்கள்.. இன்னமும் என்னில் ஒட்டியிருக்கு. இந்தப் பதிவிலே சொல்ல வந்ததே அதைப் பற்றித்தான். ஆனா வேற திக்கில் கொஞ்சம் போய்விட்டது. சின்னச் சின்னச் சந்தோசங்கள். ஒரு நாளின் வண்ணத்தையே மாற்றி விடுகிற நிகழ்வுகள். ஞாயிற்றுக் கிழமை அப்படி இரண்டு விதயங்கள். அன்றைக்கு என் சிட்னித் தங்கச்சியின் பிறந்தநாள் பரிசுக்கு புதையல் வேட்டை உருக் கொடுத்திருந்தோம். கூடச் செய்ய வேண்டியவர் விடுமுறையில் இந்தியாவில். ஒரு தடயம் நாங்கள் நினைத்ததை விட அவவுக்குக் கடினமாக அமைந்து விட்டது. கண்டு பிடித்ததும் குரலாலேயே துள்ளினா. அதுவும், எல்லாம் முடிந்த பிறகு அவ இறுக்கிக் கட்டிப் பிடிச்சு "இன்றைய நாளுக்கு நன்றி அக்கா" என்றதும் என்க்கு அதே சந்தோசத்தைத் தந்தது.
வீட்டுக்குப் போக ஆயத்தப்படுத்துகையில் பலத்த மழை. மாமா நின்று நிதானமாய்ப் போங்கள் என்றார். ஆறு மணியாயிற்று, அவர் சாமி கும்பிடப் போனார். அவர் சாமி கும்பிடும் போது உடனிருப்பது ஒரு அலாதியான அனுபவம். என் பக்தியோ பெல் வளைவு மாதிரி. திருவிழாக் காலங்களில் உச்சத்தைத் தொடும். அவருடன் கூட நின்று சாமி கும்பிட்டு, தேவாரம் பாடி திருநீறும் பூசிக் கொண்டு புறப்பட்டேன். மழை சற்றே ஓய்ந்திருந்தது போல விளையாட்டுக் காட்டியது. அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு இரண்டு நிமிடங்களில்லை. கொட்டத் தொடங்கியது. அன்றைய நாளை அசை போட்டபோட்டபடியே ஒரு அமைதியான பாதையில் வந்து கொண்டிருந்தேன். ஒரு கிழவர் இருக்கையுள்ள உருட்டிக் கொண்டு போகிற நடையுதவி உபகரணத்தைத் மெல்ல்ல்ல்லத் தள்ளிக் கொண்டு நடந்து கொண்டிருந்தார். 70- 75 வயதுதானிருக்கும். ஒரு இளநீல சேர்ட் அணிந்திருந்தார். அதில் மழை நனைத்த தடங்கள் கொஞ்சம் கடும்நீலநிறமாகத் தெரிந்தது. எனக்கோ அவரைக் கண்டதும் அடே நனைந்து கொண்டு போகிறாரே, ஏதேனும் வருத்தம் வந்தால் என்ன செய்ய, பாவம் என்று தோணியது. ஏற்றிக்கொண்டு போய் விடலாமா என்றும் என்ன மாதிரியா ஆளோ என்றும் நான் இரண்டு விதமாக யோசித்து முடிப்பதற்குள் அவரைக் கடந்து போயிருந்தேன். கடைசியில் ஏற்றிக் கொள்ளலாம் என்று நினைத்து வாகனத்தைத் திருப்பிக் கொண்டு வந்து அவரிடம் "கொண்டு போய் விடவா, நனைந்து கொண்டு போகிறீர்களே" என்றால்", தன் தலையைச் சுட்டி "எனக்குத் தலையில் சுகமில்லை" என்றார் மனிதர். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. "என்னிடம் குடையிருக்கிறது; ஆனால் நனையப் பிடிக்கும் என்பதால் நடக்கிறேன். என்னைப் பற்றிக் கவலைப்படாதே" என்று சொல்லி மீண்டும் நடக்க ஆரம்பித்தார். என் உதட்டில் ஒட்டிக் கொண்ட புன்னகை வீடு வந்த பின்னும் அகலவில்லை. அன்றைய நாளை அரை நிமிடத்தில் மிகவும் அழகானதாக்கிப் போனார் அந்தக் கிழவர்.
இப்படிச் சின்னச் சின்னச் சந்தோசங்கள் போதுமானதாயிருக்கு வாழ்க்கையை அனுபவிக்க.
வகை: இப்பிடியும் நடந்துது , கிறுக்கினது
இருந்து பேசிக் கொண்டிருந்த போது மாமா கதைகள் சொல்லிக் கொண்டே போனார். ஒரே சிரிப்புத்தான். கூடவே இரண்டு புதிர்கள் சொன்னார்... மண்டையை உடைக்காத குறைதான். விடைகள் தெரியவில்லை.. நீங்களாவது சொல்லுங்களேன் (உங்கட புண்ணியத்தில நான் 'கெட்டிக்காரி' என்று பெயரை வாங்கிக் கொள்கிறேன்):
முதலாவது வலு எளிமையான கூட்டல்-கழித்தல் கணக்கு என்றார்.
"29 இல் 32 போனால் எவ்வளவு?"
-3, 29ல 32 போகாது இவையிரண்டும் தான் எங்கள் விடைகளாயிருந்தன. ஆனால் அந்த இரண்டும் பிழையாம். சய (-) இல்லையாம், சக (+) தானாம். 29ல 32 போகுமாம்.. (எங்க போகுமெண்டு கேட்கக் கூடாது)
இரண்டாவது கொஞ்சம் நீட்டுக் கதை.. புதிர் கடைசியில.
ஓர் ஊரில ஒரு குடியானவன் இருந்தானாம். அவனுடைய மனைவி இனியில்ல எண்டளவு சோம்பேறியாம். (backgroundல யாரப்பா அது....ஷ்!!!!)
குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தாவென்டு கேட்டால் "இப்பத்தான் வேலையெல்லாம் முடிச்சு வந்து கதிரையில குந்துறன்.. எழும்ப வைக்கிறீங்களா!" என்பாவாம்.
திருவாளர் குடியானவன் பார்த்தார்..இது வேலைக்காகாது என்டு, ஒரு வேலைக்காரியை கொணர்ந்தாராம். மனைவிக்கும் ஒரே சந்தோசமாம். என்ன வேலை சொன்னாலும் விரைவாய் முடித்தாளாம். போய் அரிசியைக் களைந்து உலை வை என்றாராம் மனைவி. ஒரே நிமிடத்திலே வந்து நின்றாளாம் "ஆச்சு!" என்று. மனைவிக்கோ வியப்பு. சரி அரிசி வெந்ததும் கஞ்சி வடித்து விட்டுச் சொல்லு என்று பாயிலே சரிந்தாராம் குட்டித் தூக்கத்துக்கு. படுத்துக் கண்ணை மூடவில்லை .. "ஆச்சு அம்மா". மனைவிக்கோ சந்தேகம். போய்ப்பார்த்தால் சோறு அவர் கேட்ட மாதிரியே. இப்படியே என்னத்தைச் செய்யச் சொன்னாலும் நிமிஷமாய் முடித்து விட்டு முன்னால் நின்றாளாம். தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டேஏஏஏ இருக்க வேண்டும். குடியானவன் மனைவிக்குச் சந்தேகம் - இவளைப் பார்த்தால் சாதாரணமாய்த் தெரியவில்லை என்று. கணவனிடம் சொன்னாளாம் தன் சந்தேகத்தை. அவன் மனைவியிடம் கலந்தாலோசிப்பது போலச் சொன்னானாம் "வயல் உழ உதவிக்கு யாருமில்லை.. பெண்ணே உனக்கு உழத்தெரியுமா? நாளைக்காலைக்கிடையில் நாற்றையும் நட்டுவிட வேண்டும்" என்று. ஆமென்று தலையாட்டிய வேலைக்காரி அடுத்த ஐந்தாம் நிமிடம் "ஆச்சு ஐயா" என்றாளாம். இவனுக்கும் சந்தேகம் பிடித்துக் கொண்டது.
இப்படி இருக்கையிலே குடியானவன் வெளியூர்ச் சந்தைக்குப் போக வேண்டி வந்ததாம். வேலைக்காரியிடம் சொன்னானாம் "அம்மாவைப் பார்த்துக் கொள் நான் நாளைக்கு வந்து விடுவேன்". அவனும் போயாச்சு. இரவு இவர்களிருவரும் விளக்கின் திரி குறைத்துப் படுக்கையில் விழுந்தார்கள். மனைவிக்குத் திடீர்ச் சந்தேகம், கதவுக்குத் தாழ்ப்பாள் போட்டதாவென்று. "ஏடி, கதவுக்குத் தாழ்ப்பாள் போட்டதா?" .. கேட்கிறாள். வேலைக்காரிக்கோ தூக்கக் கலக்கம். எழுந்து பார்க்கச் சோம்பலில் (வீட்டுக்காரம்மாவுடன் கொஞ்ச நாளாய் இருக்கிறாளில்லையா.. பழக்க தோசம் போல!) கையை நீட்டுகிறாள். கை நீண்ண்ண்ண்டு போய் கதவுத்தாழ்ப்பாளைத் தடவிப்பார்க்க, வாய் சொல்கிறது, "ஆமாம்மா .. போட்டுத்தான் இருக்கு". கை நீண்டு போனதை குடியானவன் மனைவி அந்த மங்கல் வெளிச்சத்திலும் கண்டு விட்டாள். இது ஏதோ பேயென்று அவள் புரிந்து கொண்டாள். விடியும் வரையும் தூக்கமில்லை. பயம். கணவன் வரும் வரை பார்த்திருந்து அவன் வந்ததும் பிடித்துக்கொண்டாள். (முதலே பிடிச்சதுதானே என்றெல்லாம் சொன்னா நான் அழுதுருவேன்!)
அவனும் பேயைத் துரத்த என்ன வழி / என்ன வேலை கொடுத்தால் பேய் திரும்ப வராது என்டு யோசித்தானாம். பேயாகிய வேலைக்காரியைக் கூப்பிட்டானாம்.. "இந்தா, அம்மாவின் ஒரு தலைமுடி. இதை நெடுக்குவாக்கில் இரண்டாய்ப் பிளந்து கொண்டுவா". வேலைக்காரியும் அதைக் கொண்டு அடுப்படியில் போய் உட்கார்ந்தாளாம். பிரித்தாளாம் பின் கைகள் தட்டுவது (clapping) போல செய்து திரும்ப பிரித்தாளாம் (மாமா செய்து காட்டினார், முடிந்தவரை விளக்கமாய் எழுதியிருக்கிறேன்) .. இப்படியே இன்று வரை செய்து கொண்டே இருக்கிறாளாம்.
புதிர்: அவள் என்ன செய்கிறாள்? ஏன் குடியானவன் கேட்டதைச் செய்து முடிக்க முடியாமற் போயிற்று?
.... சொல்லுங்கப்பா!!! இல்லாட்டி என் தலைமுடிதான் போயிடும்!
வகை: புதிர் , விளையாட்டு
வீட்டில் வளர்க்கவென்று ஆசையாக எத்தனையோ பூமரங்கள். எல்லாத்தையும் கொண்டு வந்து வைக்க முடிகிறதா என்ன? அதாலேயே 2-3 மரங்கள்/செடிகளைத் தீர்மானித்திருந்தோம்.
எங்கேயும் ட்ரைவ் போனால் வந்தால் "அங்க பார்.. அந்த பூ வடிவாயிருக்கு".. "நிறம் நல்லாருக்கு".. "செழிச்சு வளருது" இத்தியாதிதான் கார் முழுக்க ஒவ்வொரு நிறத்திலும் அழகிலும் அளவிலும் உதிர்ந்துபோய்க் கிடக்கும். அடிக்கடி போய் வருகிற வழியென்றால் எந்த வீட்டிற்கு முன்னால்(தெருவருகே.. வீட்டு மதிலுக்கு உள்ளே அல்ல) என்ன மரம், அதில் பூ என்ன நிறம் என்றெல்லாம் மனப்பாடம்.
ஒரு சுபயோக சுபகமுகூர்த்தத்தில் ஹாட்வெயார் கடையில் போய் தாவரம் வெட்டும் கத்திரி ஒரு அரையடி நீளத்திலும், வேர் வர ஊக்குவிக்கும் ஒருவிதத் தூளும் வாங்கி வைத்தாயிற்று. மாலை மயங்கக் கிளம்பினால் இருட்டின பிறகு வண்டியை நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்துப் பதுங்கிப் போய் வெட்டிக் கொண்டு வந்து வண்டிக்குள் ஏறிக் கிளம்ப வேண்டியது. (களவெடுத்து வைச்சாத்தானாம் மரம் செடியெல்லாம் நல்ல்ல்ல்லா செழிச்சு வருமாம். நல்லாத்தான் சொல்லி வைச்சிருக்கிறாங்க!! ஹிஹி)
[கொண்டு வந்து வீட்டிலே ஒரு பூந்தொட்டிக்குள் மண் நிரப்பி வெட்டி வந்ததின் அடியை நீரில் நனைத்து வாங்கின தூளில் தொட்டு மண்ணுக்குள் ஊன்றி விட்டு கண்ணும் கருத்துமா.. நீங்க ஒவ்வொருநாளும் தண்ணி (மற்றதில்லப்பா!!) குடிக்கிறீங்களோ இல்லையோ கடமையா நட்டதுக்குத் தண்ணி குடுத்து வந்தாஆஆஆஆ.... ஒரு 5-7 கிழமைக்குப் பிறகு கொஞ்சம் புது உயிர் காட்டும். இலை வரும். (வரணும்.. வர வைப்பமுல்ல!!!).
வேர் பிடிச்சிட்டுதெண்டா 10-12 கிழமைக்குப் பிறகு குட்ட்ட்டியா ஒரு மொட்டு வரும். அதக் கண்ட நாள் முதல் எப்ப பெரிசாகிப் பூக்கும் என்டு பார்க்க வேண்டியது. எங்கட அவதி அதுக்கெங்க விளங்க!! ஆஆஆறுதலா ஒரு 2.5 - 3 கிழமையா மொட்டாயிருந்து கடைசியா ஒரு நாள் பூ விரிஞ்சு சிரிக்கும்.
பத்துத் தரம் போய்ப் பார்க்கச் சொல்லும். உலக மகா சோகம், கிட்டத்தட்ட 18-20 நாள் ஆயத்தப்பட்டுப் பூக்கிற பூ ஒரே நாளில வாடிடுறது தான். என்ன செய்ய.. அடுத்த மொட்டு.. காத்திருப்பு. ]
இப்பிடி "சேகரிச்ச" / "கடன் வாங்கின" / "சுற்றுச் சூழலை மேம்படுத்த நாங்க செய்கிற செயல்" களால சேர்த்தது செவ்வரத்தை/செம்பருத்தியை மட்டும். நாலைந்து நிறங்களில் இரண்டு வகைகளில் (அடுக்கு, தனியிதழ்) கிட்டத்தட்ட 10-15 கந்துகள். இப்ப 2 பிரச்சனை. முதலாவது, எந்தக் கந்து என்ன நிறம் என்டுறதுதான். அதாவது பரவாயில்ல .. பூப்பூத்ததும் தீர்ந்துவிடும். இரண்டாம் பிரச்சனை தான் மண்டைக் குடைச்சல்:
சிவப்பா இருந்தாத்தானே "செம்பருத்தி/ செவ்வரத்தை" .. நாங்க இளஞ்சிவப்பு, மஞ்சள், செம்மஞ்சள், ஊதா நிறங்களில வைச்சிருக்கிறமே.. அதை எப்பிடிச் சொல்லுறது?
அந்த மரம் ஏன் அப்படிச் சொன்னது? இரவு முழுக்க யோசித்துக் கொண்டிருந்தேன்.
வழமையில் அதைக் கடந்து போகிற ஒவ்வொரு காலையிலும் மரத்தைத் தடவ வேண்டுமென்ற எண்ணம் எழுந்தாலும் பார்வையால் மட்டும் தடவி மனதுக்குள்ளேயே அதனுடன் கதைத்துப் போகிற என்னைப் பார்த்து அது எதுவும் சொன்னதில்லை. கண்டுகொண்டதாயும் தெரியவில்லை. அது தன்னை வெளிப்படுத்தியதென்று நான் கண்டது காற்று வீசினால் தன்னைக் கொஞ்சம் சிலுப்பிக் கொள்ளுவதை மட்டுமே. அதன் கீழ் நின்று குறைந்தது இரண்டு பேராவது நின்று புகைத்துக் கொண்டிருப்பார்கள் அந்தக் காலைப் பொழுதிலேயே. எரிச்சலாய், கோவமாய் வரும். தங்கள் உடல்நலத்தைக் கெடுப்பது மட்டுமில்லாமல் மரத்துக்கும் கஸ்டத்தைக் கொடுக்கிறார்களே என்று. ஆனாலும் சத்தமின்றிப் பூட்டிக் கொள்ளும் என் வாயைச் சுமந்தபடி மரத்தைக் கடந்து போகப் பழகியிருந்தன என் கால்கள். மரமோ எதையுமே பொருட்படுத்தியதாகத் தோன்றவில்லை. தன்னில் படுகிற வெயிலைக் குடித்து, நாட்களை இலைகளாக்கியபடி அங்கேயே நின்று கொண்டிருந்தது.
கொஞ்சம் வெள்ளனப் புறப்பட்டிருந்தேன். மரத்தைக் கடந்த போது வழமை போல ஏனோவென்று நின்று கொண்டிருந்தது. அதைத் தடவிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் என்னை வெகுவாக அலைக்கழித்தது. வழமை போல நான் கேட்க மாட்டேனோ என்று நினைத்து அந்த எண்ணமே என்னை இழுத்துக் கொண்டு போய் மரத்தடியில் விட்டது. இப்போதும் கூட என்னைக் கண்டு கொள்ளாத மரத்தைத் தடவியபடியே நின்றுகொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் ஒரு கிளையொன்றைத் தாழ்த்தி வாளாவிருந்த என் மற்றக் கையுடன் கோர்த்துக் கொண்டது மரம். மிருதுவான ஆனால் உறுதியான கிளை. எப்போது கேட்டாலும் வசீகரிக்கிற பாட்டினை இலைகள் பாடிக் கிடந்தன. மென்மையாய்ச் சிரித்துக் கொண்டது மரம். அதன் சிரிப்பும் இலைகளின் பாட்டினைப் போலவே வசீகரமுடையதாயிருந்தது.
"மழை பெய்ததே, உனக்குத் தெரியுமா?" என்றது. நனைந்திருந்த அதன் இலைகளைத் தொட்டுத் தொட்டுப் பார்த்த போது கீச்சத்தினால் நெளிந்து என் மேல் நீர்த்துளி தெளிக்க கெக்கட்டம் விட்டுச் சிரித்தது. "அழுக்குப் போகத் தேய்த்துக் கொண்டேன்" என்றது. நான் கவனித்திருக்கவேயில்லை. வழமையில் கடந்து போகும் போது "பாவம்! சிகரட் புகையும் வாகனப் புகையும் வேறு தூசி புழுதியும் பட்டு அழுக்கேறிக் கிடக்கிறதே" என்று தவறாமல் யோசிக்கிற நான் அது சுத்தமாயிருந்ததை ஏன் கவனிக்காமல் விட்டேன்? துக்கமாயிருந்தது. வெண்ணிறத்தாளில் ஒரு பெரிய கரும்புள்ளி வைத்து "என்ன தெரிகிறது?" என்று ஆசிரியர் கேட்ட போது "கரும்புள்ளீ" என்று வகுப்பில் எல்லாருமாய்ச் சொன்ன ஞாபகம் வந்து பிடித்துக் கொண்டது. சுற்றியுள்ள உலகம் இயங்கத் தொடங்கியது. புகை பிடிக்க ஆயத்தமாய் ஒருவன் சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் மரத்துடன் கோர்த்திருந்த கையை இறுக்கிக் கொண்டேன். இலைகள் பாட்டை நிறுத்தி அசையாதிருந்தன. நான் என்னை விடுவித்துக் கொண்டு விடை பெற்றுக் கொண்ட போதுதான் மரம் அதைச் சொன்னது. "எனக்கு இங்கிருக்கப் பிடிக்கவில்லை".
ஒன்றும் பேசாமல் வாய் இருக்க கால்கள் தங்கள் வேலையைச் செய்யத் தொடங்கியிருந்தன. அடுத்த நாள் மரத்துடன் கைகளைக் கோர்த்தபடி நானா அதைச் சொன்னேன்? "விரும்பின இடத்துக்குப் போவன் அப்ப".
அன்றிரவு மரத்துடனிருந்தேன். வேளை வந்தது போல, தன் இடத்திலிருந்து அசைய முற்பட்டது. முடியவில்லை. அதன் வேர்களைக் கொங்கிறீற் பிடித்துக் கொண்டிருந்தது. பெரும் பிரயத்தனப்பட்டு வேர்களை மீட்டுக் கொண்டது மரம். அதன் பிறகு மிக லாகவமாக ஏதோ நீரில் நீந்துவது போல மண்ணினூடாயும் தெருவினூடாயும் நீந்தி நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. கூடவே நானும் நடந்து கொண்டிருந்தேன். கடற்கரையில் வேறு சில மரங்களினருகில் அதன் பயணம் முடிவிற்கு வந்தது. வேர்களை மண்ணிற்குள் ஆழமாய் நுழைத்துத் தன்னை நிறுத்திக் கொண்டது.
விடியத் தொடங்கியிருந்தது. சூரியன் மேலெழ மரத்தில் பூக்களைக் கண்டேன். அவை உடனேயே கனிகளாயின. கனிகள் புத்தகங்களாய் இருந்தன. ஒன்றை என் மடியில் தந்தது மரம். அலைகள் கால் தொட இலைகளின் பாட்டினைக் கேட்டபடி வாசிக்க ஆரம்பித்தேன், அதில் "ஒவ்வொரு நாளும் கடந்து போகிற இவள் ஏன் வந்து வருடவோ, கை கோர்த்துக் கொள்வதோ இல்லை?" என்ற கேள்வியுடன் ஆரம்பித்தது முதலாம் அத்தியாயம்.
மரத்தைக் காணவில்லையென அதன் பழைய இடத்தில் யாரும் தேடிய சுவடே இருக்கவில்லை. ஒற்றைப் பறவையொன்று மட்டும் மண்ணைக் கிளறியபடி நின்று கொண்டிருந்தது. ஒரு வேளை அதற்கான தண்ணீர் மரத்தின் இலைகளிலிருந்து சொட்டியிருந்திருக்கக் கூடும்.
வகை: கிறுக்கினது
Copyright 2009 - மழை - funcionando con orgullo en Blogger
Theme designed by: Ray Creations , HostingITrust.com , Raycreations.net