அறைக்குள் பூக்கள்


 அறையெங்கும் கமகமக்கிறது

 காற்றில் மிதக்கும் வாசனை.

கதவு திறந்திருக்கிறது

மரத்தில் உள்ள பூக்கள் அறைக்குள் நடமிடுகின்றன. 

இங்கே பூக்கள் பூக்கள் அல்ல. 

 


 

 

 

சேய்மை

முதலில் அம்மா மட்டுமே இருந்தார். அவருக்குள் நான் இருந்தேன். 
 
பிறகு, அவர் அதே ஊரில் வேலைக்குப் போவார், வீட்டில் எம்மியுடன் பத்திரமாய் நானிருந்தேன். 
அம்மா எப்போதும் இருந்தார் - பாடசாலையில் நானும் வைத்தியசாலையில் மருந்தாய் அம்மாவும் இருக்கையிலும், பக்கத்து நகருக்குப் போன போதும், விடுமுறைக்கு எம்மியுடன் போகும் நாட்களிலும், வண்டியேறி அம்மாவுடன் பயணம் போகையிலும். 
 
போர் எங்களூருக்கும் வந்து கதவைத் தட்டிய பொழுதிலும் அம்மா இருந்தார். பிறகு நாங்கள் அந்தச் சிறு தீவின் கிழக்கிலும் மேற்கிலுமாய் ஆனபோதும் எழுவான்கரையில் சூரியனோடு சேர்த்து அம்மாவும் இருந்தார். 
 
தீவின் படுவான்கரையில் மீண்டும் சேர்ந்து கொண்டோம். பதின்மத்தின் அத்தனையையும் நான் காட்ட, அம்மாவாய் மட்டுமே இருந்தார் அம்மா. அவரில்லாமல் -  தந்தைக்கொப்பான அண்ணனுடனே இருந்தாலும் கூட - நான் தவிப்பேன் என்பதை நோர்வேயிலுள்ள ஒரு கிராமமே  நினைவு தெரிந்த என் இருபதுகளின் ஆரம்பத்தில் முதலில் எனக்குச் சொன்னது. காலப்போக்கில் மனதின் அடுக்கொன்றில்  அந்த அறிதல் மறைந்து போயிற்று. அப்பொழுதும் அம்மா இருந்தார்.
 
குட்டித்தீவிலிருந்து அகன்று பெருந்தீவில் வாழ்வு என்றானது. அப்போதும் அம்மா இருந்தார். தொலைபேசியின் மறுமுனையிலும் கணினித் திரையிலும்.. அல்லாத போதுகளிலும்.
நினைவழிவு நோய் அம்மாவைப் பற்றிக் கொள்ள முன்பு இத்தனை இறுக்கமாய் நான் அம்மாவைப் பற்றிக்கொண்டதில்லை என்றே நினைக்கிறேன். அன்பும் பாசமும் இருந்தன. ஆனால் வாழ்க்கை என்முன் விரிந்து கிடந்தது. என்னிலும் 45 ஆண்டுகள் மூத்த அம்மாவுக்கு வயது போகிறது என்பது பற்றிச் சிந்தித்திராத காலம் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். 
 
அம்மா - சுதந்திரமாய்த் தன்னிறைவாய், எல்லாவற்றையும் தானே கவனிப்பவராயும் மற்றவருக்கும் செய்து தருபவராயும் இருந்தார். 
எங்கேயும் பயணிக்கத் தெரிந்த, 
எந்த அலுவலகத்திற்கும் போய் வேலைகளை முடிக்கத் தெரிந்த, 
பயமில்லாத, 
ஊக்குவிக்கிற, 
எல்லாருடைய பிறந்த நாட்களையும் ஞாபகம் வைத்திருந்து வாழ்த்து மடல் அனுப்பும்,
தொலைபேசுகிற, 
யாரையும் அன்புடனே எப்போதும் பார்க்கும் அம்மா கொஞ்சம் கொஞ்சமாய்க் காணாமல் போகத் தொடங்கினார். 180 பாகை மாற்றம். அவரில் தங்கியிருந்த எம்மில் அவர் சார்ந்து கொண்டார். அது புதியதாய் இருந்தது. அம்மா இருந்தார்.
 
என்னத்தை எப்படி எப்போது எங்கே செய்ய வேண்டுமென்று அம்மாவுக்குத் தெரியாமல் போனால் என்ன செய்வது? யோசித்திருக்கிறேன். 
அப்படியே அம்மா அவற்றைத் தெரியாதவரானார். அதுவும் புதியதாய் இருந்தது. அம்மா இருந்தார்.
 
வாழ்க்கையில் சில கேள்விகள் விடாமல் திரும்பத்திரும்பத் தோளில் தட்டும். அம்மா என்னை மறந்து போனால் என்ன செய்வது? இந்தக் கேள்வி என்னைப் பலநாட்கள் துரத்தியபடி இருந்தது. சில நாட்களில் எட்டிப்பிடித்து விடும். சில நாட்களில் அக்கேள்வியை எதிர்கொள்ளாவண்ணம் மனதைத்  திசைதிருப்பி விடுவேன்.  
அப்படியே அம்மா மறந்தும் போனார். அதுவும் புதிதாய் இருந்தது. 
'அம்மாவால் மறக்கப்படுதல்' எனும் பாதைவழியே பயணித்தல் என்பதுவும் விதிக்கப்பட்டதொரு வாழ்வனுபவமாகிற்று. 
அம்மாவே மறந்து விட்டால் குழந்தை என்ன செய்வது? தன்னிரக்கம் வழியும். அம்மாவும் அவரது அன்பும் அரவணைப்பும் ஆறுதலும் அறிவுரையும் தைரியமும் மிகவும் தேவைப்பட்ட காலகட்டத்தை அவையின்றிக் கடந்து கொண்டேன். 
அம்மா இல்லாது போய்க்கொண்டிருந்தார்.. ஆனாலும் இருந்தார்.

எனக்கு மிகவும் பிடித்த 'மொழி பெயர்த்த மௌனம்' கவிதையில் இப்படி எழுதியிருப்பார் கார்த்திக் வேலு: 
"... குழந்தைகளுக்குக் குளிப்பாட்டி, தலை சீவி, 
சட்டை அணிவித்து விடு. 
அவர்களுடன் நடை பயில்.."
தன்னையும் மறந்து காலத்தையும் கடந்து நிகழ்கணத்தில் மட்டும் வாழ்ந்திருந்த அம்மாவுடன் அதைத்தான் செய்தேன். மணிமுடி போன்றும் காதணிகளாயும் பூக்களை அவருக்கு அணிவித்தேன். அவர் அதுவரை ஒருபோதும் இட்டிரா மருதோன்றியையும்.
அதுவும் புதிதாக இருந்தது.  
அம்மா இல்லாதிருந்தார். ஆனாலும் இருந்தார்.
 
நடவாது போனார். படுக்கையிலானார். கையைத் தடவிக் கொடுத்தும், காலுக்கு எண்ணெய் பூசியும், பலருக்கு மருந்தாகவே இருந்தவரின் புண்ணுக்கு மருந்திட்டும், என்ன பேசுவதென்று தெரியாத பகல் வெக்கைப்பொழுதுகளில் சும்மா செல்லம் பொழிந்தும், சில நேரங்களில் வெறுமே கையைப் பற்றியபடியே உறங்கிப் போயும் அவர் அருகிருந்தேன்
புறப்படும் போது கொஞ்சிச் சொன்னேன் "கஷ்டப்படாதீங்க. போகோணுமெண்டா போங்க". 
அப்போதும் இருந்தார்.
 
வழியனுப்பிய போதில், தளைகளற்று, பேரன்பில் திளைத்திருக்கின்றார் அம்மா என்பது போலவும் ஏதோ அடுத்த கட்டத்திற்கு மெதுவாய் நகர்ந்திருக்கிறார் போலவும் தோற்றிற்று. இன்னும் இருக்கிறார் என்பதாய். 
 
அம்மா இல்லாமல்தான் இருந்தார்.. ஆனால் இருந்தார். அம்மா இல்லாது இருத்தல் என்பது புதினமான ஒன்றாக இருக்கிறது. மனம் துழாவுகிறது. பாதுகாப்பாய் உணரக்காணோம். அரண் இருந்த இடம் வெற்றிடமாய் வெறுமையாய் இருப்பது, பெயரறியா உணர்வுகளையும் சேர்த்து மிகவும் புதிதாய் அந்தரிப்பாய் அந்நியமாய் ஒண்ணாமல் இருக்கிறது.
அம்மா காணாமற்றுப் போய்விட்டார். 
இப்போ, சட்டை அணிவித்துத் தலைசீவிப் பூ வைத்துவிட அம்மா இல்லாமல் நான் என்ன செய்யட்டும்?   

என் அரசி

இன்றைக்கு அம்மாவின் 92ம் பிறந்தநாள்.  மற்றைய ஆண்டுகளை போலல்லாது முதல்முறையாக அம்மாவுக்குரிய வாழ்த்தை நான் மனத்திற்குள்ளே சொல்லிக்கொண்டேன். அவருக்குப் போய்ச் சேர்ந்திருக்கும்.  

பூவுலகில் அவரில்லை. ஆனாலும் நிறையப்பேரின் மனங்களில் வாழ்கிறார். கடந்த மாதம் ஏறாவூரில் நடந்த நினைவேந்தல் அதற்கு நல்லதோர் உதாரணம். வேலையொன்றைக் குறிப்பிட்டு, அதனைச் "செய்து தர இயலுமா" என்றே   பணியாளர்களிடம் கேட்கிற அம்மா, தன் விளையாட்டுப் பொருள்களாகிய வெற்றுக் குளிசை டப்பாக்களையும் சேலைன் போத்தல்களையும் பெற வேண்டிச் சில மாதங்களுக்கொருமுறை காய்ச்சலால் பீடிக்கப்படும் சிறுவனை அரவணைத்துப் பேசும் அம்மா, அம்மாவே மருந்து என நம்பும் உம்மாக்கள், போர்க்காலத் தட்டுப்பாட்டில், நோயாளர்களுக்குச் சுற்றுச்சூழலில் கிடைப்பதை வைத்துச் சிறப்புறச் சேவை செய்த அம்மா, அம்மாவைக் கண்டதும்  இரத்தம் படிந்த ஆயுதங்களைத் தாங்களாகவே கீழே போடும் /மடித்துக் கட்டிய சாரத்தைத் தழைய விடும் ஊரின் கத்தி/வாள் வீசும் 'வீரர்கள்' என்ற கோணங்களில் அம்மாவைப் பார்த்தோம். 

யாருமறியா இரவு மழைக்குக் காலைப் பூந்தோட்டம் சாட்சி என்று ரூமியின் கவிதை சொல்லும்.

எங்கள் ஊர். எங்கள் அம்மா.

அவருக்கு ஏறாவூர் மீதிருந்த அன்பு தெரியும். அப்படியே அம்மா மீது ஏறாவூருக்கும் என்று தெரியும், ஆனால் அது எந்தளவில் என்பதனை  நானோ  ஏன் அண்ணாவோ கூட நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது என்றே சொல்வேன். அன்றைக்கு ஏறாவூரின் சிம்மாசனமேறி அமர்ந்திருந்தார் அம்மா. பெயரிலும் 'ராணி' அல்லவா. 

அம்மா ஒரு ஆளுமை என்று நினைத்ததே இல்லை. ஆனால் இப்போது அது தெள்ளத்தெளிவாய் இருக்கிறது. அன்பும் அரவணைத்தலும் அவரது தனிப்பண்புகள். ஒரு நிபுணர்/திறமைசாலி ஒரு செயலைச் செய்யும் போது அது எளிதாக, 'இவ்வளவு தானா' என்பது போலத் தோன்றி, நாம் முற்படுகையில் கடினமாக இருக்குமல்லவா, அப்படித்தான் இவையும். அம்மாவுக்கு யார் எவர் என்று இல்லை, எல்லாரும் ஒன்றுதான். ஒத்து வரவில்லையா/அவர்களுக்கு விளங்கவில்லையா, பரவாயில்லை, அவர்களுக்கு நல்லது நினைத்து அப்படியே விட்டுவிடு என்பார். அதெப்படி என்றால் மிகவும் லேசான விஷயம் என்று பதில் வரும். 

எல்லாரிடமும் அன்பு காட்டவோ எல்லோரையும் அப்படியே நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்ளவோ  நம்மில் அனேகரால் முடிவதில்லை. என்னதான் முயன்றாலும் முட்டி மோதினாலும் அதில் இன்னும் நான் போவதற்கு நிறைய் ...யத் தூரம் இருக்கிறது. என்னைக் குறித்து அம்மா ஏமாற்றமடைந்து விடக்கூடாதே என்று தான் இப்போதெல்லாம் யோசிக்க வருகிறது. அப்படி இருப்பது உதவியாகக் கூட இருக்கிறது என்று சொல்லலாம். பிந்தித்தான் யோசிக்க நேர்ந்தாலும் சற்றாவது யோசிக்கிறேன் என்பது புரிகிறது.

வாழ்தல் என்பது எப்படி என்று  ஆற்றுப்படுத்தியிருக்கிறார். வாழலாம். 

பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா.   

  

 


காத்திருத்தலின் நிறம்

ஒரு பூ மதில் மேல் இருக்கிறது. இளவெயில் கொண்ட  ஒரு மாலைப்பொழுதோடு  கை கோர்த்தபடி புன்னைகையைப் பேசுகிறது அந்தப் பூ. தனதென்றோ இல்லையென்றோ சொல்லிவிட முடியாதவொன்றிற்காய் இதழ் விரிக்கிறது. குளிர்ந்த கைகளால், இதழ்களால்  என்று சொல்ல வேண்டுமோ.. காற்றை அளைகிறது. சொல்லித் தீர்க்க முடியாததொரு உணர்வில் ஒரு fado பாடலைப் போலத் திளைக்கிறது.

அரவணைப்பையும் புறக்கணிப்பையும் அறிந்த உணர்ந்த பூ அது. எத்தனை புறக்கணித்தாலும் அரவணைப்பை மட்டுமே பதிலாய்த்தர தர அது விழைகிறது. எரித்தாலும் பதிலுக்குக் குளிர்விக்கத்  தயங்காதது. எல்லாமறிந்த காற்றை மென்மையாய் ஏந்துவது. 

முற்றுப் பெறாதவொரு உரையாடலின் முழுமையற்ற ஞாபகம் அந்தப் பூ எதிர்பாராதவொரு கணத்தில் எங்கோ அடியாழத்திலிருந்து முகிழ்க்கின்றது . அதன் மீதியைத் தேடி,  பிரவகிக்கிற  எல்லா   நதிகளிலும் பூ நீந்துகிறது. மூழ்குகிறது. நதியை அறிந்து மீன்களோடும் பாசியோடும் கூழாங்கற்களோடும் கரையுமல்லாத நதியுமல்லாத சகதியோடும் தோழமை கொள்கிறது. அவை தம் ரகசியங்களைப்  பகிர்ந்து கொண்ட பிறகு பூ கரையேறுகிறது. இருந்த ஞாபகத்தையும் அந்த முடிவு காணா உரையாடலையும் ஒவ்வொரு நதியும் மறக்காமல் எடுத்துக்கொண்டு போய்விடுகிறது. பூவின் நிறத்தையும் கூட. 
 
ஒரே வாத்து எல்லாக்கரைகளிலும் பவழமல்லியை மிதித்துக்கொண்டு சிறகு உலர்த்தியபடி நடை பயில்கிறதை ஓரக்கண்ணால் பார்த்தபடி ரகசியங்கள் தொடர்ந்து இழைக்கப்படும் துண்டினால் தலை துவட்டிக் கொள்கிறது பூ.

நதி கழுவிக் கொண்டு போய்விடுகிற வண்ணத்தை மழை அழைத்துவரும் வானவில் மீண்டும் பூவுக்குப் பூசி விடுகிறது. எங்கும் சரியாய்ப் பொருந்தியிருந்தாலும்  ஞாபகம் முழுமையற்ற இடத்தில் மட்டும் வண்ணம் இருப்பதில்லை. பவழமல்லி மணக்கிற அவ்விடத்தில்தான் வண்ணத்தை விழுங்குகிற ஒரு வாத்தின் இறகின் தடமும் இருக்கிறது. ஆனாலும் அதனால் விழுங்கமுடியாத நிறமொன்றும்  உள்ளது. அது, காத்திருத்தலின் நிறம்.

காத்திருத்தலின் நிறம்  நீலம்; அதன்  நடனம் தாண்டவம். எனக்குத் தெரிந்த வரை.  
பூ காத்திருக்கிறது. நீல நிறத்தில். அருளல் ஆரம்பிக்கிற கணத்துக்காய். எப்போதும்போலவே எல்லாமுமாய்க் கூடவே  இருக்கிறது மழை.

ஒளித்தலும் வெளித்தலும்

 

காலை. யன்னற் கண்ணாடியோரம் அமர்ந்திருந்தேன். உள்ளங்காலைச்  சூடாக்கிய வெய்யில் கண்ணாடிக்கு வெளியேயிருந்த சிறு செடியின் இலைகளின் நிழல்களோடு சேர்ந்து என்மீது ஓடிப்பிடித்தும் கணுக்கால் முழங்கால் என்று ஏறியும் விளையாடியது. காலை வெய்யில்தான் எத்தனை இதமானது. கண்ணாடிக்கு அப்பாலிருந்த செடிக்கு சில யானாக்களைத் தொடுத்தது போல வளைந்து வளைந்து செல்லும் விளிம்பு கொண்ட இலைகள். அந்தப் பசிய இலைகளில் பட்டு, இதோ தொட்டு உணர்ந்து விடலாம் என்பது போல ஊறியிருந்தது மஞ்சள் வெய்யில். அவற்றின் மிக மெல்லிய நரம்புகள் கூட அப்படியே தெரிந்தன. சில இலைகளுக்குக் கொஞ்சமே வெய்யில் கிடைத்தது. கிடைத்தளவிற்குத தங்களைக் காட்டிக் கொண்டன அவை.  

மனிதர்களைப் பற்றி நினைத்தேன். இந்த இலைகளைப் போலத்தான் அவர்களும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுகிறார்கள். தம்மை வெளிப்படுத்துகிறார்கள். இரகசியங்கள் எல்லாரிடமும் இருக்கின்றன. 

அன்பும்.

மலர்தல்


எழுதுவதற்கெனக் காலையில் யோசித்து வைத்திருந்ததை ஓரமாய் வைத்துவிட்டு வேறொன்றைக் கையில் எடுத்திருக்கிறேன். புதிதில்லைத்தானே.

இங்கே ஒரு தோழி இருக்கிறார். எதிர்பார்த்தேயிருக்காத விதத்தில் வாழ்க்கை எங்கள் கொஞ்சப் பேருக்குச் சேர்த்து ஓங்கி ஒரு அறை விட்ட தருணத்தின் அடுத்தடுத்த நாட்களில் நாம் சந்தித்தோம்.  என் பெயரில் எனக்கு என்னைத் தவிர்த்தே இருபதுக்கும் மேற்பட்டோரைத் தெரியும் என்பதால் அரிய பெயர்களில் பெருவிருப்புண்டு. அவர் பெயரில் அவரை மட்டுமே நான் அறிவேன். உதிக்கும் சூரியனின் பெயர் கொண்டவர். நாங்கள் சூரியோதயம் காண்பதற்காக அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் கூட வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறோம். போன ஆண்டின் அநேக வார இறுதிகளை இப்படியான காலை அழகாக்கியது. வேறு இருவரும் வருவார்கள் - மாறி மாறி. ஆனாலும் அதிகம் இவரே. தன்னைத் தானே சந்திக்க அவரை நான் அழைத்துச் செல்கிறேன் என்கிற என் மொக்கை நகைச்சுவையையும் பொறுத்துக் கொண்டு வருவார். அலைவரிசை மிகவும் ஒத்துப் போகும். பேசாது கழிகின்ற பொழுதுகள் கூட இயல்பாகவே இருக்கும். பேச ஒன்றுமில்லாவிட்டால் அந்தரித்துப்போய் ஏதோவொன்றை யோசித்துத் தேடியெடுத்துப் பேசவேண்டிய தேவையொன்றை மனம் உணராமல் இருப்பது எத்தனை சுகம்! என்னவொரு வரம்! அது எங்களுக்கு வாய்த்திருக்கிறது.

கொஞ்சநாள் பரவாயில்லாமல் இருந்துவிட்டுத் திரும்பவும் பழைய பள்ளங்களுக்குள் போகிற மாதிரித்தான் கடந்த சில கிழமைகள் கழிகின்றன. மீள்தல் என்பது விக்கிரமாதித்தனையும் வேதாளத்தையும் ஒத்தது. மடுவுக்குள் மனம் கிடக்கிறதென்பதைப் புறச்சுட்டல்களின்றிக் கண்டு கொள்ளல் என்பதுவே ஒரு பெரிய படிதான். பிறகு தீர்மானித்துக் கொள்ளவேண்டியது கிடப்பதா எழும்புவதா என்று. கிடக்கத்தான் சொல்லும்.. அதுவும் எழுவதற்குத் தேவைப்படும் பலத்தையும் தொடர்முயற்சியையும் உணர்ந்த பிறகு, இன்னும் உரக்கச் சொல்லும்.. "கிட .. கஷ்டம்.. எதற்கு.. யாருக்காக.. ஏன்.. பலனில்லை..". இப்படிப் பல சொல்லும் அதே மனம்தான் விக்கிரமாதித்த முயற்சிகளுக்கு அடிப்படையாக 'எனக்காக' என்றும் கத்தும். அந்த ஒரு சொல்லுத்தான் ஊறும் முதல்  ஈரம். அப்படித்தானே எந்தப் பெரிய ஆறு(வது)ம் தொடங்குகிறது.

நிறைய நாட்களுக்குப்பின் போன கிழமை நீண்டதூரம் போகலாம் என்று நடக்கச் சென்றேன். வேனிற்காலம். பூத்துக் குலுங்கியும் கொட்டியும் எங்கும் அழகு கடை பரப்பி இருந்தது/இருக்கிறது. அதிலும் ஜக்கராண்டா என்கிற, ஊதாப்பூக்கள் கொண்டதொரு மரம் நான் நடக்கப் போன பகுதியில் நிறைய. சிட்னியில் இக்காலம் இந்த மரத்தின் பூத்திருவிழாவுக்குப் பெயர் பெற்றது. அன்றைக்கு 4 மணித்தியாலங்கள் மட்டுமே நடந்திருப்பேன். இளவெயிலும் குளிர்காற்றும் பூக்களும் மதில் மேலிருந்தபடி என்னைக் கண்ணெடுக்காமல் பார்த்திருந்த பூனையும் மனதை ஆற்றின. நடுவில் ஒரு பூங்காவில் ஊஞ்சலுமாடி, கம்பிவேலிக்கு அப்பால் இருந்த ஒரு செடி வகையையும் அதன் பூக்களையும் ரசித்து, வீசிய காற்றினால் அவற்றைக் கலங்கலில்லாமல் படமெடுக்க முடியாமல் கண்ணிலும் மனதிலும் மட்டும் தேக்கியெடுத்த பின் அந்த குளத்துக்குக் கிட்ட வந்து சேர்ந்தேன். தோழிதான் மனதில் வந்தார். அவருக்கும் பிடிக்கும் என்று தோன்றிற்று. 

தோழியைச் சந்திக்கும் வாய்ப்பு ன்றைக்கு அந்தக் குளத்துக்குக் கிடைத்தது.  அவர் குரலை மட்டுமே  கேட்டிருந்தாற் கூட அறியலாம் அவர் எத்தனை வியந்தும் மகிழ்ந்தும் அந்தக் குளத்திலிருந்த தாமரைகளைப் பார்த்தார் என்பதை. எனக்கு ஒலி-ஒளி இரண்டுமே கிடைத்தன.

உதிக்கும் சூரியனைப் பார்த்து மலரும் தாமரையைத் தெரியும். மாறி நடந்ததை இன்று நான் கண்டேன். மலர்கின்ற சூரியன் என்ன்ன்ன அழகு தெரியுமா?

குவளையைத் தாண்டி வழிகிறது வாஞ்சை

காலையில் மனதில் வருவதையெல்லாம் எழுதுமொரு பழக்கத்தை சில கிழமைகளாகக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கும் எழுதிக்  கொண்டிருக்கையில் தற்செயலாக நிமிர்ந்தபோது என் கண்ணிற்  பட்டது. என்  வழமையான குவளைதான். அறைக்குள் அதை எடுத்து வருவது மிகக்குறைவு. எப்படியோ இன்றைக்கு என்னுடன் கூடவே வந்து  விட்டது. ஒவ்வொரு நாளும் பாவிப்பதுதான்.. ஆனால் பலநாட்களாக நான் நினைத்துச் சுவைக்காத ஒன்றை அது இன்றைக்கு மீட்டியது. 


மனவழுத்தமும் உடைவும் நெருங்கிய இரு இளையோர்களின் இறப்பும் 2019 இனை மறக்க முடியாத ஆண்டாக மாற்றியிருந்தன. அவுஸ்திரேலியாவில் 'granny flat ' என்று சொல்லப்படும் வீட்டோடு (பெரும்பாலும்)இணைந்த ஒரு பகுதியில் குடியிருந்தேன். அந்தச் சிறுவீடு வசதி மிக்கது. வெளிச்சம் மிக்கது. படுக்கையறையின் உட்கூரை சாதாரணமாக இங்கு  இருப்பதை விட உயர்ந்தது. 'பெரிய' வீட்டையும் என் பகுதியையும் ஒரு  கதவுதான் பிரிக்கும். இந்தப்பக்கம் ஒரு சீவன்.  மற்றப்பக்கம் 3 சீவன்கள். அவற்றில் ஒன்றிடம் என்னைச்  சனி ஞாயிற்றுக்கிழமைகளில் எழுப்பும் அலாரம் இருந்தது. கட்டிலில் எழும்பி இருந்து என் கால் நிலத்தில் பட்டவுடன் அலாரம் ஓய்ந்துவிடும். அதற்கு நாலுகாலும் ஒரு வாலும்  என்று சொல்லத் தேவையில்லைத்தானே? நான் எழும்பி விட்டேன் என்று எப்படித்தான் தெரியுமோ...வீட்டில் மற்ற இருவரும் இந்த நாலு கால் ஆளின் மனிதப் பெற்றோர் - ஹானியே (அம்மா) +ஆதில் (அப்பா).  நன்றாகத்தான் எல்லாம் இருந்தன. 2020 மார்ச் மாதம் ஆதில் என்னிடம் வந்தான். நான் வசிக்கும் பகுதியில் இன்னும் ஒரு மாதத்தில் குழந்தைப் பராமரிப்புச் சேவையைத் தொடங்க முடிவெடுத்திருப்பதால் எனக்கு ஒரு மாதம் தவணை தர வந்திருந்தான். அந்தரப்பட்டுச் சொல்வது புரிந்தது. நானும் ஓம், பிரச்சனையில்லை இடம் பார்க்கிறேன், சங்கடப்படாதே என்று சொல்லி அனுப்பினேன். பிறகு ஒரு இருபது நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்து கதவைத் தட்டி, "உன்னை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வீட்டில் ஒரு அறையில் நீ வாடகைக்கு இருக்கலாம், இப்போதுள்ள பகுதியினைப் பிள்ளைகள் இல்லாதபோது பாவித்துக்கொள்" என்றும் சொன்னான். கொஞ்சநாள் இருந்து பார்த்துவிட்டு எனக்குச் சரிப்படவில்லையென்றால் நான் வேறிடம் பார்ப்பதென்று முடிவெடுத்தேன். ஒத்துக்கொண்டான்.

இரண்டு கிழமைகளின்பின் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய வேண்டி வந்தது. கோவிட். முதல் மூன்று வாரங்களும் பகலிலே அந்தப்பக்கம் திருவாளர் நாலுகால் ஒருவால் சார்லியும் இந்தப்பக்கம் இரண்டுகால் நானுமாய் இருந்தோம். தெருவில் போகிறவர்களை பார்த்து அவன் குரைக்க அதனால் அவன் மீது நான் குரைக்க என்றும் (தனிமையினால் ஏற்படுகிறது என்று நான் உணர்ந்து கொள்ளாத) ஒரு வித அரியண்டமான உணர்வு என்றும் வேலையோடு சேர்ந்து நிரம்பின பொழுதுகள்.

முதலில் வந்தவள் ஸோயி. இரண்டு வயது. இந்தோனேசியப் பெற்றோர். இளஞ்சிவப்பு நிறம் மட்டுமே கொண்டவை அவளது ஆடைகள். நிறத்தின் கடுமை கூடிக்குறையுமே தவிர மாறவே மாறாது. அப்பா காலையில் அழைத்து வருவார். கத்தியழுது வழியனுப்புவாள். பிறகு ஹானியேவை ஒரு நாய்க்குட்டியைப் போலத் தொடர்ந்தபடி இருப்பாள். காலை விளையாடி, மதியம் சாப்பிட்டுத் தூங்கி எழுந்து மறுபடியும் விளையாடி முடித்துக் கொறிப்புக்கள் சாப்பிட்டு ஹானியேவுடன் வண்டியில் ஏறித் தன் வீடு செல்லும்மட்டும் என்னைப்  பார்ப்பாள் அன்றிப் பேச மாட்டாள். என்னுடன் பேச நிறைய நாட்கள் எடுத்தது அவளுக்கு. பிறகு இழுத்து வைத்துக் கதை சொல்வாள். வேறு எவரோடும் பேசக்கூட முடியாது.

இவளுக்குப் பின் வந்தாள் ஏழு மாதத்து ஆர்ட்டமிஸ் - பாரசீகத்து ஹானியேவின் மருமகள். பெயரைத் தட்டச்சும் போதே ஒரு பென்னாம் பெரிய புன்னகை விரிகிறது - முகத்திலும் நெஞ்சிலும். அடுத்த மாதம் வந்தது ஒரு வயதுடைய லூனா. நிலா. லெபனானும் இத்தாலியும் அவள் பூர்வீகத்தில். அழகிய பெரிய கண்கள். அடர்ந்து நீண்ட இமை. வாரத்தில் இடைவெளி விட்டு இரண்டு நாட்கள் மட்டுமே வருவாள். முதலிரண்டு நாட்கள் வீறிட்டு அழுது சிவந்த கண்களும் நனைந்து ஒட்டிய  இமைமயிர்களும் கமறிய குரலும் இன்னும் ஞாபகமிருக்கின்றன. இரண்டு பைகள் வைத்திருந்தாள். அணிந்துகொள்ளும் தூங்கும் பைகள்.

இப்படி ஒவ்வொருத்தராய் இன்னும் சிலரும் என் தோட்டத்துக்குள் புதிது புதிதாய்ப் பூத்தார்கள்.

அவர்கள் நித்திரை கொள்ளும் அறையாகிய என் முன்னாள் படுக்கையறைக்கு ஒரு அகன்ற வழுக்கிக் கதவு (sliding door ) இருந்தது. அதன் நிலையான கண்ணாடிக்கருகில் என் மேசை. இரண்டு தொட்டில்களையும் காணாதவண்ணம் சேணம் கட்டியது போல இருக்க வேண்டும். தப்பித் தவறிப் பார்த்துவிட்டால் போதும். கைகளைத் தூக்கிக் கொண்டு ஒரு மயக்கும் சிரிப்பை அள்ளித் தெளித்தபடி சிறை மீட்கச் சொல்வார்கள். மீட்காவிட்டாலும் மன்னித்தருளுவார்கள்.

ஒரு நாள், முதல் பந்தியில் சொன்ன என் குவளையில் இருந்ததெல்லாம் தீர்ந்து போக அதை நிரப்புவதற்காய் எழ முற்பட்டேன். அப்போதுதான் எழும்பி இருந்த லூனா ஒளிரும் என் திரையைத் தொட்டிலில் சட்டத்தைப் பிடித்தபடி நின்று பார்ப்பதைக்  கண்டேன். அப்படித்தான் நினைத்தேன். ஒள என்றாள். எனக்கு விளங்கவில்லை. திரையைப் பார்த்தேன். எக்ஸெல் என்னைப் பார்த்தது. குவளையைக் கையில் எடுத்ததும் அதைக் காட்டி மீண்டும் ஒள என்றாள். என்னடா இது வடிவேலுக்கு வந்த போட்டி என்று நினைத்துக் கொண்டது ஞாபகமிருக்கிறது. நீருக்குரிய அவளது சொல்லுமல்ல அந்த ஒள. அவள் மீண்டும் சொன்ன போதுதான்  எனக்கு ஓடி வெளித்தது அவள் குவளையில் குடியிருக்கும் ஆந்தைகளைச் சொல்கிறாள் என்று(owl). அந்தக் குவளையின் வெளிப்புறம் முழுதிலும் இருபத்திச் சொச்ச ஆந்தைகளும் பலவண்ண இலைகளும் மரக்கிளைகளில் அசையாதிருக்கின்றன.

அவ்வாந்தைகளுக்கு அன்று அதியற்புதமானதொரு நாள். நிலவு அவற்றைத் தொட்டது. ஒள ஒள என்று கண்கள் விரிய தன் பட்டான சுட்டுவிரல் கொண்டு ஒவ்வொன்றாய் அடையாளம் கண்டு அன்பைப் பூசியது. நிலவு தடவித்தரும் என்று எந்த ஆந்தைதான் யோசித்திருக்கும்?

ஆறும் மீனும்


எங்கோ ஒரு தொட்டியிலிருந்தபடி ஆற்றைக் கனவு காண்கிறது மீன்.
மழையைக் கரைத்தும் படுகையை வளைத்தும் 
ஆற்றை நீட்டிக்கும் மீன் அறியாததல்ல
ஆறு கடல் சேரும் நியதி.
நீச்சலில் அதன் அழகும்
செதிலிடுக்கில் அதன் வெம்மையும் என 
ஆற்றைக் கொண்டலைகிறது மீன்.
வெயில் தொட்டு ஆவியாகிற  ஆற்றையும் 
அது சேரப்  போகிற கடலையும்  கனவில் கேட்டு விதிர்க்கிறது.
கலைந்த கனவில் சுழித்தோடுகிறது அதன் ஆறு.

நிலவு வருகிறது கூடவே


எழுதி எத்தனையோ காலமாகிறது. 
இன்றைய நாளைக் குறித்து வைக்கத் தோன்றுகிறது.  அதைத் தனிப்படட முறையில் வைத்துக் கொள்ளலாமே எதற்கு பகிர என்றும் தோன்றாமலில்லை. ஆனாலும் இங்கே பதிகிறேன். 

தெளிந்த மனதாய் இருக்கிறது. நிறைய நாட்களுக்குப் பிறகு. வருடங்களென்று தான் சொல்ல வேண்டும் - முக்கியமாய் கடந்த இரண்டு/இரண்டரை ஆண்டுகள்.

மனதளவில் கொஞ்சங் கொஞ்சமாய் சுருங்கி, எல்லாரிடமுமிருந்து விலத்தி, சாப்பிடத் தோன்றாமல்/பிடிக்காமல் உடல் மெலிந்து, பிடித்தவை செய்யத் தோன்றாமல்/பிடிக்காமல், மரத்துப் போன மனதுடன் நாட்கள் கடந்தன. எதோ பிரச்சனை - நான் சரியாக இல்லை என்று எனக்குப் பிடிபட சில மாதங்கள் எடுத்தன. ஒரு நாள் காரணமேயில்லாமல் சக அலுவலர் எனக்குப் பிடித்த வகை சொக்லற் எனக்காகவென்றே வாங்கியதாகச் சொல்லி கையில் தந்து விட்டு நகர்ந்தார்.  கண்ணீரை  வழிய விடாதிருப்பதற்குப் பெரும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. ஆனாலும் முடியவில்லை. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாய்ஏனென்று விளங்காமல் நிறுத்தவும் முடியாமல் அழழென்று அழுதேன்.  
உடனடியாக உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை எனக்கு உணர்த்தியது ஒரு சொக்லற். 

அப்போதிருந்ததை விடவும் இருண்ட இடத்தில் என் மனம் பிறகு கிடந்திருக்கிறது. நல்ல காலத்திற்கு மீள முடியா இடங்களுக்குப் போக உந்தவில்லை என் எண்ணங்கள். ஆனாலும் அதற்கு மிக மிகக் கிட்டப் போயிருக்கிறேன் என்பது என் உளவியல் ஆலோசகருடனான சந்திப்புக்கள் எனக்குச் சொல்லின. 

எனக்குத் தெரிந்து ஒரு வருடத்திற்கும் மேலாய் என்ன ஏதென்று தெரியாமல், மனவுளைச்சலோடு மரத்துப் போன மனதுடன்  நாட்களைக் கடத்தியிருக்கிறேன். என் மனதினை /எண்ணங்களைக் கவனித்து உரிய முறையில் கையாளப் பழகியிராததன் விளைவு தான் இந்த பிந்திய "ஓடி வெளித்தல்". நான் உணராமலேயே என்னைத் தொலைத்து நாலைந்து வருடங்கள் ஓடியிருந்திருக்கின்றன..படிப்படியாக பாரத்தை ஏற்றியபடிக்கு.
உடல் சார் காரணங்களால் அல்லாமல் புறக் காரணிகளால்  ஏற்பட்ட மனவழுத்தம். 

எவ்வளவு நெருங்கினவர்களென்றாலும் சொல்ல முடியாது எதோ சரியில்லை என்று.. அவ்வளவு சிறந்தது என்  முகமூடி . உடம்பு மெலிவதை தவிர வேறெதுவும் வெளியில் தெரியாது. அதையும் கூட நான் எடை குறைக்கிறேன் என்று (தாமாக) எடுத்துக் கொண்டார்கள். 

முழுதாய் வெளி வந்து விட்டேனென்று சொல்வதற்கு இன்னும் நாளிருக்கிறது. ஆனாலும் அதற்குரிய பாதையில் பயணிக்கிறேன் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். 
கையைப் பிடித்துக் கடக்கும் சந்தர்ப்பங்களிலும், இருட்டென்றாலும் பாதை இருக்கிறதென்று தைரியம் சொல்லி வெளிச்சம் காட்டும் நேரங்களிலும், எனக்கு முதலே இந்தப்பாதை நடந்த அனுபவம் பகிரும் தருணங்களிலும் என வழிகாட்டிகளும் சக பயணிகளும் வாய்க்கப் பெற்றவள் நான். என் வாழ்விலுள்ளோர் மீது பெரும் வாஞ்சை பொங்குகிறது. நீங்களில்லாமல் நானில்லை (தமிழ் வாசிக்கத்  தெரியாது விட்டாலும் கூட உங்களிடம் இது வந்து சேரும்). 

உயிர்ப்பை  மீண்டும் உணரத்  தொடங்கியிருக்கிறேன். 

மழை வரும்.

இவரும் அவரும்


அவரைப் பார்த்தபடியே நின்றிருந்தார். கொண்டாட்டத்துக்கு வந்த இடத்தில் அவரைக் காணக்கூடும் என்பதே இவருக்குத் தோன்றியிருக்கவில்லை.  கடைசியாகக் கண்டு சில ஆண்டுகள் ஆகியிருந்தன. தன்னில் வரும் மாற்றம் பற்றி அறியாதவராய் நாட்களை  இவரைக் கொண்டு  நிரப்பி வழியனுப்புபவராய்  முன்னர் அவர் இருந்தார். என்ன  நடக்கிறது என்று அவர் உணர்ந்த போது இவர் வெகு தூரம் போய்விட்டிருந்தார். 

சிறுவனோடு விளையாடிக் கொண்டிருந்தவரைக் கலைத்தது முன் வந்து நின்ற உருவம். நிமிர்ந்து பார்த்தார். இவர் அவரைக் கண்ட முதல் நாளில் முகம் நிறைத்திருந்த அதே சிரிப்பு கணத்தில் விரிந்தது . ஆச்சரியத்தின் சாயம் பூசிய முகம். இறுக்கக் கட்டிக் கொண்டார். அவர் சமநிலை கலைந்தது போல இவர் மெல்ல உணர்ந்தார்.  தன்னால் அவர் மனம் அலைவுறுவது தெரிந்து தான் விலத்தி இருந்தார். ஆனால் சில நாட்கள் படுத்தி எடுக்கும். ஒருவரை இந்தளவுக்குத் தன்னால் அலைக்கவும் மனம் உழலவும் செய்ய முயும் என்பதே பெரிய போதையாக இருக்கும். பூனை எலியைச் சீண்டுவது போல,   தூண்டில் போட்டு மீனைப் பிடிப்பது போல, வறண்ட மண் நோக்கி விழும் சில துளி மழை போல வருத்துவார். இவருக்குப் போதையை ஏற்றும் வகையிலேயே இவருக்கான அவரது இயல்பான பதிலோ நடவடிக்கையோ இருக்கும். இவரை என்றும் நோகாத அவரை அப்போது சற்றே வெறுக்கவும் செய்வார்.  பிறகு பாவமாயிருக்கும். வருத்தாமல் விலத்தி இருப்பார், நெடுநாட்களுக்குப் பிறகு திரும்பவும் போதை தேவைப்படும் வரை .

பரஸ்பரம் விசாரித்துக் கொண்டார்கள். அவரோ இறக்க முடியாதவற்றைச் சுமந்தபடி இருந்தார். இவருக்குத் தாளாத ஆச்சரியம் இப்படியும் ஒருவரால் இருக்க முடியுமா, தொடர்ந்து சுமக்க முடியுமா, எதற்காக  என்றெல்லாம் மருகினார். தொடர்ந்து எழுந்த படியிருந்த கேள்விகள் இவரில் இடப்பற்றாக்குறையால் திணறிக் கொண்டிருந்தன. அவரவர் திக்கில் திரும்பி நடந்த போது, தான் அறிந்தே விரும்பித் தோற்கும் ஒரே இடத்தை மீண்டும் உறுதி செய்தவராக அவர் புன்னகைத்தார்.  இறக்கி விட முடியாக் கேள்விகள் இவரில் கனக்கத் தொடங்கியிருந்தன.

2014ன் குறிப்புகள்


புத்தாண்டு பிறந்து விட்டது. ஒவ்வொருத்தரும் இந்த ஆண்டு புத்தகம் படிக்க, தவறாமல் உடற்பயிற்சி செய்ய, இனிப்பைக் குறைக்க,  பயணிக்க என்றெல்லாம் உறுதி பூண்டிருப்போம். போன வருடத்தில் செய்ததையே 2015இலும் தொடரலாம் என்றிருக்கிறேன் நான்.  அப்படிச் செய்தது அன்றன்றைய நாளில் என்னை மகிழ்வித்த, புன்னகைக்க வைத்த, ஓ!இதற்கு நன்றி என்று தோன்றிய ஒன்றோ சிலவோ பலதோ எதுவானாலும் குறித்து வைப்பது. கொஞ்சம் தினக்குறிப்பு மாதிரி.
எதையும் இலகுவாய் எடுத்துக் கொள்ளும் ஆள் நான். பலருக்கு மனதை வருத்தும் காரணங்களாக அமைபவற்றை என்னால் அலட்டிக் கொள்ளாமல் கடந்து போக முடியும். அப்படிப்பட்ட என்னை 2012 இன் இறுதிக் கால் (என் கவனமின்மையால்) கலைத்திருந்தது. என் இயல்பிலிருந்து மாறிப் போனேன். அது உறைத்ததும் அதிலிருந்து விடுபடவேண்டும் என்று விரும்பினேன். அதற்கு எப்போதும் மகிழ்ந்திருக்கும் கலையை மீளக கற்க வேண்டியிருந்தது. அன்றைய நாளை அதன் நிகழ்வுகளை எந்தளவுக்குக் கவனித்திருக்கிறேன்/அனுபவித்திருக்கிறேன் அல்லது எவை என்னைக் குழப்ப இடமளித்திருக்கிறேன் என்று பார்க்கவே  இந்தப்பயிற்சியைத் தேர்ந்தேன். ஆனால் பட்டியலில் இடம்பெறுபவை மேற்பந்தியில் சொன்ன வகைப்பாட்டுக்குள் வர வேண்டும். நல்லதை எடுத்துக் கொண்டு அல்லதை விட்டுவிடல். அவ்வளவுதான். ஒரு நாளில் அன்பான, அழகான, மகிழ்ச்சியான, நன்றிக்குரியதான அல்லது அமைதி தருவதான பல நிகழ்வுகள் நடக்கும். அதே நாளில் நாம் சினந்து எரிச்சல் பட்டு மனம் வருந்தி அலைக்கழிந்துமிருப்போம். அன்றிரவு அல்லது அடுத்த நாள் (சில வேளைகளில் வார, மாத, ஏன் ஆண்டுக்கணக்கிலும்) முன்னவற்றை விடப் பின்னவைக்குத்தான் தான் மனதில் அதிகம் இடம் கொடுக்கும் மனப்போக்கு நம்மில் பலருக்கும் இருக்கிறது. கனம் மிக்கது அந்த மனப்போக்கு. ஆனால் ஒரு இறகைப் போலே எங்கள் தோள்களில் அமர்ந்துகொள்ளவும் எண்ணங்களுக்கு ஏதோ எங்கள் தெரிவு போலவே தன் வண்ணத்தைப் பூசுவதே தெரியாமல் பூசவும் அதால் முடியும். மெல்ல மெல்ல அழுத்திச் சேற்றில் தள்ளிவிடும். சரியானதை எடுத்துச் சொல்லும் அமைச்சர்களில்லாத அரசின் நிலைதான் பிறகு. உணராமல் நாமும் உழப்பிக் கிடப்போம். என்னைப் பொறுத்தளவில் பயிற்சி பயனளித்தது என்றே சொல்வேன். முழு ஆண்டிலும் மிகச்சில நாட்களே எழுதவில்லை. அன்றிரவே எழுதவில்லையென்றால் அப்படியே விட்டேன். இந்த முறை கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாம் அந்த விதியை. அடுத்த நாள் வரை அனுமதிக்கிறேன் எனக்கு. 

நீஈஈஈல வானம், அனலடித்த பின் அள்ளிக் கொண்டு வீசும் குளிர்ந்த தென்காற்று, மழை, மரங்கள், காதல், குடும்பம், சுற்றம், புத்தகங்கள், அன்பு, பயணம், நட்பு, கொண்டாட்டம், நகைப்பு, நீச்சல், தேனீர், ஞாபகங்கள், இசை என 2014ஐ நிறைத்தவற்றுள் உறைய வைத்த வெட்டிய காய்கறிப் பொதிக்கான நன்றி நவிலலும் உண்டு. ஒரு சின்னச் சந்தோசமே போதுமாயிருக்கிறது. நிறைவளிக்கிறது. மிகவும் எளிமையான ஒரு சிந்தனையோட்டமோ என்று சந்தேகமும் வராமலில்லை. ஆனால் இப்படி இலகுவாய் சந்தோசப்பட்டுக் கொள்ளுவது பிடித்திருக்கிறது.

இதை எழுதின 2015ன் முதல் நாளினை இங்கே குறித்து வைக்கிறேன். சிட்னிக்குரித்தான வாணவேடிக்கைக் களியாட்டங்களுடன் அன்புக்குரியவர்களின் அருகாமையில் தொடங்கிய நாள். விடுமுறை நாளின் ஆறுதலான பகற்பொழுது. நட்பைக் கொண்டாடிய அருமையான மாலை. சாய அமர்ந்த போது தற்செயலாய் தொலையியக்கி மூலம் உயிர்பெற்ற தொலைக்காட்சியில் எங்களுக்கு மிகப்பிடித்த Edinburg Military Tattoo வின் 2014ம் ஆண்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து ஸூபின் மேத்தாவின் வழிநடத்தலில் Vienna Philharmonic Orchestra வின் நிகழ்ச்சியும் நிறைத்த அற்புத இரவுப்பொழுது. மனம் குறை கொண்டதும் நிகழ்ந்ததுதான் நேற்று. ஆனாலும் அதிக நேரமில்லை.. சொன்ன சந்தோஷங்களின் முன் அவை காணாமலே போய்விட்டன. 

உங்களுடைய புத்தாண்டு ஆரம்பம் எப்படி? 


-------
இப்படியெல்லாம் நேற்று செல்பேசியிலிருந்து எழுதிவிட்டு பிரசுரிக்கும் பொழுதில் தவறுதலாக அழித்துவிட்டேன். எரிச்சல் வந்தது உண்மை. ஆனாலும் இதைப் போன்றதொரு பதிவு எழுதப்பட்டு இல்லாமலானதும் முரண்நகைதான் இல்லையா? சிரித்துக் கொண்டே நாளைக்குத் திரும்ப எழுதுவோமென்று போய்ப் படுத்துக் கொண்டேன். இடுகையைத் திரும்ப இன்றைக்கு எழுதியிருக்கிறேன். கணினியிலிருந்து. எப்போதும் நிமிடங்களைச் சுவையாக்குவதற்கு ஏதாவது இருந்து கொண்டுதானிருக்கிறது. 

புத்தாண்டு வாழ்த்துக்கள் :O)


பொற்பூ


ஒருத்தி இருக்கிறாள். பூவொன்று அவள் பெயர் கொண்டது. ஒரே ஒரு முறை சந்தித்திருக்கிறேன். 2012இன் மார்கழி மாதத்தில். அவளையும் அவளது அம்மாவையும் சந்திப்பது அதுவே முதல்முறை ஆனாலும் நெடு நாள் பழகியது போல உணர்ந்தேன். பெரியவர்கள் இருவரும் பேசி முடித்துக் கிளம்பும் போது 'அப்பாடா' என்று என்றாள். அவளுக்கு அலுப்படித்திருக்கிறது. ஆனாலும் பொறுத்துக் கொண்டு இருந்திருக்கிறாள். அழகாய் ஒரு ஊதா நிறச் சட்டை அணிந்திருந்தாள்.

அவளைப் பற்றி சின்ன சின்ன வெளிச்சத் திட்டுகளாய் அறியக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். இந்த வருடத்து இலையுதிர் காலத்தில் அப்படித் தெரிய வந்ததொன்று அவள் பூவிதழ் சேர்ப்பவளென்பதும். வெளியூரிலிருந்து பயணத்தின் பின் ஞாபகத்திற்காய் பொருளுள்ளவையைக் கொண்டு ஊர் திரும்புபவளாய் குடும்பத்தில் அவள் மட்டும்தான்.  செடி வேண்டாமென்று உதிர்த்த பூவிதழ்களும் மலை தூக்கிப் போட்ட சிறு கற்களும் மரத்திடமிருந்து விடை பெற்ற சருகுகளும் அவளது பொக்கிஷங்கள்.

அவளைச் சந்திக்கிற சந்தர்ப்பம் மீண்டும் வாய்த்தது. அவளுக்குத் தக்கதாக அவள் விரும்பக்கூடியதாக என்ன இருக்கும் என்று யோசித்த போது கையுயர்த்தின சிட்னியின் குளிர்காலத்து ஆடி மாதத்துத் தெளிந்த நீல வானில் பறந்த வண்ணக் கொடிகள். இலையுதிர்காலம் முடிந்த பிறகும் வழமையிலும் கொஞ்சம் பிந்தி மரத்தோடு தங்கியிருந்த வண்ண வண்ண இலைகள். அதைத்தவிர பொருத்தமாக வேறெதையும் அவளுடன் பகிர முடியாதென்று தோன்றியது. சிட்னிக்கென்றே தனி  வெளிச்சமிருக்கிறது. அதன் வானத்து நீலமும் தனி அழகானது. மரங்கள் எப்போதும் இனியவை.  குளிரோடு முகிலற்ற வானத்தையும் நிறம் மாறிய இலைகள் கொண்ட மரங்களையும் அனுபவித்துத்  தீராது . இலையுதிர்காலமும் குளிர்காலமும் அத்தனை அழகு.  பசிய இலைகள் நிறம் மாற மஞ்சளிலிருந்து கருஞ்சிவப்பு வரை இயற்கை தீட்டிய ஓவியம். பயணத்திற்கு நான்கு வாரங்கள் இருக்கத் தக்கதாகவே இலைகளைப் பறித்தும் பொறுக்கியும் சேகரித்தேன். பறிக்கும் போது மரங்களிடம் இது ஒரு சின்னப் பெண்ணுக்கு என்று மனதுக்குள்ளாகச் சொல்லிக் கொண்டது நினைவிருக்கிறது. பயணத் திகதிக்குக் கிட்டவாக இலைகள் இருக்காதென்று நினைத்தே சேர்த்தேன். எத்தனையோ இடங்களில் நாம் அப்படித்தான், இல்லையா? பற்றாதோ அற்றோ போய்விடும் என்று முட்டி மோதுகிறோம். உலர்ந்த காற்று நிறம் மாறாமல் என் ரோசா மொட்டுக்களை ஒரு பெட்டியில் வைத்திருக்க உதவுகிறது. அப்படித்தான் இலைகளும் இருக்குமென்று நினைத்தேன். இரண்டு வாரங்களில் பெரும்பாலானவை நிறம் மாறி விட்டன. நானும் பத்திரமாகப் புத்தகமொன்றுக்குள்ளும் வைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து நிறம் பூசிய இலைகள் மரங்களிலிருந்தன. என்னைப் பார்த்து என் நம்பிக்கையீனத்தைப் பழித்துச் சிரிப்பதற்காய்.

பயணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் போனேன். என்னோடு வேலை செய்யும் தோழியும் கூடவே வந்து இலை சேர்த்தார். இவற்றைக் கவனமாக பயணத்தில் வாசிக்கவென்றிருந்த புத்தகத்துக்குள் வைத்துக் கொண்டேன். அந்தப்பெண்ணை நான் காணும் நாள் வந்தது ஒரு வாரம் கழித்து. அவள் வரவில்லை. அவளது அம்மாவும் நானும் காலம் தூசியை படிவித்திருந்த தெருக்களில் நடந்தோம். இளங்காற்று வீச ஒரு குளத்தருகே இலைகளை அவரது பைக்குள்ளிருந்த ஒரு புத்தகத்துக்குள் இடம் மாற்றினோம். அவரவர் வழி சென்றோம்.

திரும்ப சிட்னி வந்து இரண்டு மாதமிருக்கும். மரங்கள் பற்றிய தன் ஒப்படைக்கு சிட்னியிலிருந்து அவளைப் பார்க்கச் சென்ற இலைகளைப்  பயன்படுத்தியிருந்தாள் என்று அவளது அம்மா படங்கள் அனுப்பியிருந்தார். ஒரு மேப்பிள் இலைக்கருகில் ஓக்  என்ற தலைப்பிட்டு ஓர் இலை கொண்ட படம் கண்டேன். அது வரை நானறிந்த ஓக் மரத்திலை படத்தில் கண்டதை விட சற்று வேறானது. எல்லாம் அறிந்தவர் போல அது ஓக் அல்லவென்று செய்தி அனுப்பினேன். அப்படித்தான் அந்த இலையின் பெயரென்று அறிந்த கதை சொன்னார் அந்தத் தோழி. ஓக் அல்லதென்றால் என்ன இலையென்று அறிந்து சொல்லச் சொன்னார். வர்ணனையில் கூகிளினால் பலன் கிடைக்கவில்லை. இலை சேர்க்க உதவினவரே இதற்கும் துணை வந்தார். சில்க்கி ஓக் (Silky Oak) என்று பெயர் சொன்னார் . எனக்கு அப்படியொரு மரத்தைத் தெரிந்திருக்கவில்லை. வேலைகளுக்கு நடுவில் அதைப் பற்றி தோழிக்கு ஒரு வரி சொன்னதோடு சரி. அடுத்தடுத்த நாட்களில் வேலையிலிருந்து வீடு செல்லும் பயணத்தை அந்த வேலைத்தலத் தோழியோடு பகிர்ந்து கொண்டேன். ஏதேதோ பேசிக் கொண்டு வந்தோம். திடீரென்று ஒரு மரத்தைக் காட்டிச் சொன்னார் அதுதான் உனக்குச் சொன்ன மரம் என்று. நான் திகைத்துப் போனேன். சிட்னியில் வந்திறங்கிய காலம் தொட்டு எனக்கு மிகவும் பிடித்த ஒரு மரம். உயர்ந்த பெருமரம். கரும்பச்சை இலைகள் கொண்டது. பூத்தால் இலை தெரியாது. அதன் பூக்களோ பொன். பெயரறிய நான் முயற்சித்ததே இல்லை. இலைகளைக் கவனித்ததும் கிடையாது என்றே தோன்றுகிறது. வெட்கமாய் இருந்தது. பிரியமாய் இருக்கும் சிலரைப் பற்றி அந்த அன்பே போதுமென்று நினைத்து அறியாமல் போவது போல இருந்தது. இன்னுமொரு நாள் அவரோடு பயணித்தேன். அம்மரங்கள் குறைந்து விட்டன  போலத் தோன்றுகிறது என்று அவர் சொன்னார். எத்தனை காண்கிறோமென எண்ணினோம். வேலையிலிருந்து வீடு செல்லும் வரை நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள். அதோ அதோ என்று போட்டி போட்டுக் கொண்டு எண்ணினோம். அம்மரங்களைப் பற்றிப் பேசித் தீரவில்லை எங்களுக்கு. பொற்பூ பூத்து பொற்துகள் சொரிபவை. மாலை வெயிலில் உருக்கி வார்த்த பொன்னாய் மரம் முழுதும் சூடிச் சிரித்தபடி அன்பே உருவாய்.

இலையுதிர்காலத்து வண்ணங்கள் என்னிடம் கொண்டு வந்து சேர்த்த வசந்த காலத்து ஓவியம். அதை அனுப்பிய, பூவின் பெயர் கொண்டவளுக்கு  என் அன்பு. பூவின் பூவாகிய அவளது அம்மாவுக்கும்.

அதுசரி, பூக்கள் அழகன்றி வேறெந்தத் தருணங்களைத் தரக்கூடும்?

ஏழே சுரமா?.. இன்னும் இருக்கா?


நான் ஐந்தாம் ஆண்டு படிக்கும் போது, வெள்ளைக் கலையுடுத்து  விபுலானந்தாக் கல்லூரிக்குப் படிக்கப் போய், தானும் படிச்சுக் கொண்டு எங்களுக்கும் வீணை படிப்பிச்சா வாசி அக்கா (வீணை வாசிச்சதால அந்தப் பெயரில்லை. வாசுகி, மருவி வாசி ஆகிவிட்டது). அதுதான் கர்நாடக சங்கீதம் என்று அறிமுகமானது. வீட்டில பெரியண்ணர் மேகமே மேகமே என்டு தமிழ்ப்பாட்டுப் போடுவார். சின்னண்ணர் இங்கிலிசில பாட்டுப் போடுவார். இரண்டாமாள்தான் எனக்கு மைக்கல் ஜக்சனையும் நுஸ்ரத் படே அலி கானையும் காட்டிவிட்டவர். அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் நிற்கட்டும். என்னண்டு உலகம் ஒரு பொசிபிள் சங்கீத பூஷணத்தை இழந்ததெண்டு சொல்லுறன். 

ஆறாமாண்டு படிக்கும் போது இசை, நடனம், சித்திரம் என்டு பிரிப்பார்கள். முதல்ல எல்லாரும் சங்கீதம் (மேனாட்டு, கர்நாடகம் என்டு அதுக்குள்ளே 2 வகை. பள்ளிக்கூடத்தைப் பொறுத்து இரண்டுமோ அல்லது ஒன்றோ இருக்கும்). பிள்ளைகள் முதல்ல சங்கீதம் என்டு போறது. ஆசிரியை பாடச் சொல்லிப் பார்த்து தனக்கு தொண்டைத்தண்ணி வத்தாத அளவில உள்ள பிள்ளைகள் வடிகட்டிட்டு மிச்சங்களை நடன வகுப்புக்கு அனுப்ப, அவவும் வடிகட்டிட்டு சித்திரத்துக்கு அனுப்பி விடுவா. நடனத்தும் சித்திரத்துக்கும் விரும்பியே போற ஆட்களுமுண்டு. சங்கீதம் தன்னட்டப் படிக்கிற தைரியத்திலயோ என்னவோ என்னட்ட வாசியக்கா சொன்னா சங்கீதத்துக்குப் போகச் சொல்லி. நானும் போனன். பாடினன். ஆசிரியை எனக்குச் சங்கீதம் வராது என்டு சொல்லி அனுப்பிவிட்டா. அது உண்மையா இல்லையா எண்டு தெரியாது, ஆனாலும் பாட வராது என்று மனதில பதிந்து விட்டது. வந்து வீணை வாத்திச்சிட்ட சொன்னா அவவிட அம்மா , எங்கட ஊருக்கே பாலர் வகுப்பு எடுத்தவக்கு கோவம் வந்திட்டு. அதென்னண்டு, நீ சளியோட போய் பாடினனியா என்டு கேட்டா!! பிறகு அபிநயம் கொஞ்ச நாள் பிடிச்சு பிறகு கொழும்பு வந்ததும் சித்திரத்துக்கு மாறி திட்டித்திட்டி சோமசுந்தரப் புலவரிட பேத்திட்ட பள்ளிக்கூடத்தில படிச்சு ஒரு சி ஐயும் சித்திரத்துக்கு எடுத்தாச்சு.

பதின்ம வயசில கிடைச்சார்கள் சசி அண்ணாவும் சியாமாண்ணாவும். இசையமைப்பார்கள், பள்ளிக்கூட கலைவிழாக்களில் கலக்குவார்கள். அவருக்கெல்லாம் பாட்டு எழுதிக் குடுத்திருக்கிறமாக்கும்! இப்பவும் ஞாபகமிருக்கு, ஒரு முறை எதோ பாடிக் காட்டச் சொன்னார். நான் சொன்னன் எனக்குப் பாட வராது என்டு. ஏன் சொன்னார், உண்மையாத்தான் சொன்னாரா என்டெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, அலெறிக்ஸ் ஐஸ்கிறீம் கடைக்குப் பக்கத்திலே இருந்த ஷகியின் வீட்டில் நாங்க இருந்த மேசையில் பின்னேர வெயில் விழுந்து கொண்டிருந்த நேரம் சியாமாண்ணா சொன்னார் "everyone can sing".

சிட்னி வந்ததும் வீணையைத் தொடங்கினேன். தொடங்கினேன் என்பதற்குப் பன்மை இருந்தால் அதைச் சொல்லுவது தான் இங்கே பொருத்தமாயிருக்கும். அப்பதான் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க அறிந்து கொண்டேன். பாட வராது. அதன் நுணுக்க அழகுகள் விளங்காது. ஆனாலும் பிடிக்கும். அருணா சாய்ராமும் பொம்பே ஜெயசிறியும் என்னோடு எங்கேயும் வந்தார்கள். வருகிறார்கள். கொஞ்ச நாளைக்கொரு தரம் கேட்கிற பாடல்களின் வகைகள் மாறும். முழு கர்நாடக சங்கீதத்திலிருந்து தனி வாத்தியம் போய் நாட்டியத்துக்கான பாடல் வகைளுக்குள் தாவி நாடு தாண்டி மொழி தாண்டி அறியாத இடமெல்லாம் போய், திரும்பவும் பழகியதொன்றிடமே வாரங்கள்/மாதங்கள் கழித்து வந்து சேர்வேன். சில நாட்களை ஒரே பாடலே நிறைத்ததுமுண்டு.அது எல்லாருக்கும் உள்ள அனுபவந்தானே!

முதுநிலை ஆய்வு செய்கிறா என்று பகிடி பண்ணுமளவுக்கு நான் மூஞ்சிப் புத்தகத்தில் குடியிருந்த காலம் அது. ஒரு நாள், நாலு வருசமிருக்கும், சியாமாண்ணா ஒரு பாட்டைப் பகிர்ந்திருந்தார். பாட்டைப் போய்ப் பார்த்தவள்தான். இன்னும் அவ்வகையில் சந்தோசமாகச் சிக்கிக் கிடக்கிறேன். அது பாகிஸ்தான் கோக்ஸ்டூடியோ (CokeStudio)பாட்டு. இசைத் திறமையை வெளிக் கொண்டு வர என்று கோககோலா நிறுவன ஆதரவில் நடக்கிற நிகழ்ச்சி. பார்த்ததும் அதிலிருந்த அத்தனையும் என்னை ஈர்த்தது. அதைப்பார்த்ததும் இந்தியாவின் கோக்ஸ்டூடியோ தேடிப் பார்த்தேன். இசையிருந்தது. திறமையிருந்தது. என்றாலும் ஏதோ ஒன்று குறைவது போல உணர்ந்தேன். ஒரு வித செயற்கைத் தன்மை நிகழ்ச்சி  முழுவதும் விரவிக்கிடந்தது என்னை அதிகம் ஈர்க்கவில்லை. பாக் இசைத்திருந்த விதம் வித்தியாசமாயிருந்தது. நாட்டுப்புற, சூபி, நாடோடிகள் மற்றும் தொழிலாளர்கள் பாடல்களோடு அன்றாட வாழ்வியல் சொல்லும் பாடல்களும் கொண்டதாக இருந்தது. கர்நாடக இசையை 'morning raga' படத்தில் காட்டுவது போல ஒரு கலவை. இளந்தலைமுறையை ஈர்ப்பதற்காய் இருக்கலாம் அவர்கள் இந்த கலவை முறையை தேர்ந்தது. சரி இதிலென்ன என்கிறீர்களா, அப்பாடலை வழ்மையாகப் பாடும் ஆட்களையும், அவர்களது ஆடை ஆபரணங்கள் அவர்கள் பாவிக்கிற வாத்தியங்களையும் சேர்த்துக் காட்டியிருப்பார்கள். செவிக்கும் கண்ணுக்கும் ஒரு சேர விருந்து. சாப்பாடு என்டு கடைக்கு ஒரு ஆள் போக அவர் எதிர்பார்த்த வழமையான சாப்பாடாய் இல்லாமல் விதம் விதமாய் இருந்தால் அவருக்கு எப்படி இருக்கும். அப்படி இருக்கிறது எனக்கு கோக் ஸ்டூடியோ. பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். பாடலின் பொருள் கூட பலவற்றிற்குக் கிடைக்கிறது. உண்மையான விருந்துதான். பாட்டுகளிலும் அதனைப் பாடுபவர்களின் தோற்றத்திலும் அவர்தம் உடை, ஆபரணங்களிலும் தான் எத்தனையெத்தனை நுணுக்கங்கள் வித்தியாசங்கள். இத்தனையும் ஒரே நாட்டுக்குள்!!! நிலத்திலுள்ள விரிப்புகளை அருகில் காட்டுகிறார்களில்லை என்ற குறைதான் எனக்கு. பழங்காலத்திலே பாவித்த நரம்பு, தோல், காற்று, கொட்டு வாத்தியங்களென்று கூடப் பார்க்க முடிகிறது. உண்மையில் வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறது கோக்ஸ்டூடியோ.

அண்ணா பகிர்ந்தது ஜுக்னி. பாட்டில் ஆரிவ் லோகரின் உசாரோடு சேர்ந்து மீஷாவின் சிரிப்பு அள்ள்ளிக் கொண்டு போகும். 4ம் நிமிடத்தில் இரு வேறு தருணங்களில் வருவது, சேர்ந்து முத்துக்குளித்து அனுபவத்தைப் பகிரும் சந்தோசம். 07ம் நிமிடம் 47ம் நொடியில் மீஷா சிரிப்பார் பாருங்கள்.. அகிலன் கச்சேரியில் கஜனைப் பார்த்துப் புன்னகைப்பது பற்றிப் படலைக்காரர் சொல்லும் போது எனக்கு இதுதான் ஞாபகம் வரும். அடுத்து என்ன விளையாட்டெல்லாம் வரப்போகுது என்டு தெரிந்த ஒரு சிரிப்பு. இந்தப்பாட்டு ஒரு உதாரணம்தான். இதோட சேர்த்து piano guys என்று தேடி, ஒரு பியானோவும் ஒரு செலோவும் எங்கெல்லாம் போய் வருகின்றன எப்படியெல்லாம் நம்மை மயக்குகின்றன என்று பாருங்கள்.

சியாமாண்ணா சொன்ன 'எல்லாராலும் பாட முடியும்' என்பதற்கு அவர் சொன்ன சந்தர்ப்பத்தினையும் தாண்டிய பொருள் இன்றைக்கு எனக்குத் தெரியும். எல்லாருக்கும் பாட வரும். எல்லாருக்கும் பாட்டும் இருக்கிறது.   

கேட்டிருந்தால் பதில் என்னவாயிருந்திருக்கக் கூடும்?


வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் (எடுக்கிற வழியைப் பொறுத்து) 17-19கிமீ தூரம்தான். ஆனால் போக எடுக்கிற நேரமோ 25-60 நிமிசம் வரை வரும் - புறப்படும் நேரத்தைப் பொறுத்தது (கூடவே சமிக்ஞை விளக்குகளையும்) . காலையிலே 7.20க்கு முன்னரே வெளிக்கிட்டால் நேரத்தையும் எரிபொருளையும் வீணாக்காமல் அரை மணித்தியாலத்துக்குள் வேலைக்குப் போய் விடலாம். இதில் வாகனம் பறக்கும் வகையைச் சாரும். 7.20-7.45 என்றால் 40 நிமிடம். நடப்பன. அதுக்குப் பிறகென்றால் ஊர்வன தான். அதுவும் நத்தை வென்றுவிடும். எப்பிடியென்றாலும் ஏபிசி செவ்வியல் பண்பலை (நன்றி பிரபா) தான் கூட வருவது. அலட்டலில்லாது விளம்பரங்களில்லாது இசை மட்டுமே. எமா எயர்ஸ் தான் நிகழ்ச்சித் தொகுப்பாளர். பின்னேரம் வீடு வரும் போது ஜுலியா லெஸ்டர் வானலை வழியே கூட வருவா.

இப்படி இசை பொழிய, காட்சிகள் கண் நிறைக்க வாகனத்தோட சேர்ந்து மனதில் சில எண்ணங்களும்  ஓடிக் கொண்டிருக்கும். அப்பிடி இன்றைக்கு உறைச்சதுதான் பதிவுக்குக் காரணம்.

மற்ற மதங்களில் திருமணச் சடங்குகள் பற்றித் தெரியவில்லை. இந்து முறைப்படி திருமணம் நடக்கையில் ஒருவேளை பெற்றோரில் ஒருவரே மணமக்களுக்கு (பிரிந்தோ இறந்தோ திருமணத்திற்குச் சமுகமளிக்க முடியா நிலையிலோ) இருக்கும் பட்சத்தில் ஏன் வேறொரு தம்பதியரை 'கன்னிகாதானம்' செய்யவோ 'தானத்தை'ப் பெறவோ ஒழுங்கு செய்ய வேண்டி வருகிறது? பிள்ளையை வளர்த்த அம்மா/அப்பா தனியாளாய் இந்தச் சடங்கினைச் செய்தால் என்ன? ஏன் செய்வதில்லை அல்லது செய்ய அனுமதிக்கப்படுவதில்லை?

அப்பா இல்லாத காரணத்தால் எனது திருமணத்தில் அண்ணா/அண்ணி செய்தனர். அவர்கள் செய்ததில் ஒரு குறையுமேயில்லை. நான் அவரிடம்  நேரடியாகவோ அல்லது அம்மாவிடமோ (சரியாக யாரிடமென நினைவில்லை) அண்ணா செய்வது விருப்பம் என்று சொன்ன ஞாபகம். நான் அம்மாவைக் கேட்கவே இல்லை.  கேட்கத் தோன்றவே இல்லை. அதுதான் குறுகுறுக்கிறது. பெரியவர்களும் கேட்டிருப்பார்களா என்பது சந்தேகமே. விதவை, அதனால் திருமணச் சடங்கில் பங்கு பெறுவதற்கில்லை என்று நடைமுறை வாழ்க்கையில் நூற்றாண்டுக் காலமாய் கற்பிக்கப்பட்டு விட்டது. அதுவே இயல்பாகத் தோன்றியிருக்கிறது. அதனாலேயே நான் கேட்கவில்லை. அம்மாவைச் செய்யச் சொல்லி (குறைந்த பட்சம் கேட்டாவது) இருந்திருக்கலாமே என்று இப்ப தோன்றுகிறது. அப்ப சிந்திக்கவே இல்லை. அம்மா சடங்குகளில் கலந்து கொண்டதாய் நினைத்துப் பார்க்க, ஏன் அம்மாவும் எம்மியும் சேர்ந்து திருமணச் சடங்குகளைச் செய்திருந்தால் என்று நினைக்க நல்லாய்த் தான் இருக்கிறது.

கேட்டிருந்தாலும் அம்மா ஒத்துக் கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே எனத் தோன்றுகிறது. ஆனாலும் அம்மாவின் மறுப்பு காலங்காலமாக விதவைகளின் மீது சுமத்தப்பட்ட புறக்கணிப்பில் வேரூன்றியதாய் ஊரையும் அதன் பேச்சையும் குறித்துத் தேவையேயற்ற யோசனையில் முளைவிட்டதாய்த்தான்  இருந்திருக்கும். அப்படி இல்லாமல், எங்கேயாவது யாராவது ஒரு அம்மாவோ ஒரு அப்பாவோ தனியாளாய் இருந்தாலும்  பிள்ளையின் திருமணச் சடங்குகளினை நிறைவேற்றினால் எத்தனை பொருத்தமாய் அழகானதாய் இருக்கும். நடந்திருக்கிறது/நடக்கிறது/நடக்கும் என்று உறுதியாய் நம்புகிறேன்.

நேர அட்டவணையைக் காலம் போட, அதற்கேற்ப வாழ்க்கை பாடத்தை நடத்துகிறது.

கலவரக் காடு


இது நீண்ட வார இறுதி. திரைப்படஙளுக்கென்றே வாய்த்தது போல இருக்கிறது. வெள்ளி பார்த்தது, இந்திப்படமொன்று. 'பாக் மில்க்கா பாக்'. அதற்குப் பிறகு, வித்யா பாலனின் படமென்று 'ஷாதி கி சைட் இபெக்ட்ஸ்' பார்க்கத் தொடங்கி வில்லங்கத்திற்குப் பார்த்து முடித்த பிறகு கண்ணில் பட்டதொரு படம். 'அமு'. அம்ரித் எனும் பெயரின் சுருக்கம். அம்முக்களெல்லாம் தெரிந்துதானா பெயர் சூட்டப்படுகிறார்கள்?

அதற்கடுத்துப் பார்த்தது, 'Life Goes On'.

அமு மற்றும் Life goes on இல் கொஞ்சம் செயற்கையாக நடிப்பு இருந்தாலும் கதைக் களனால் கவர்ந்தன. அமுவில் கொங்கனா சென் சர்மா. ஒரு வரியில் சொல்வதானால், தன் பெற்றோரைத் தேடும் ஒரு இளம்பெண் தான் அமுவின் கதை. மற்றதில் திடீரென குடும்பத்தலைவி இறந்தவுடன் குடும்பத்தினரின் தடுமாற்றங்கள். வங்காளக் கவிதை வரிகள் கொண்டு இறந்தவரின் நினைவைக் கொண்டு வந்த விதம் அழகு. இரண்டு படங்களிலும், பாக் மில்க்கா பாக் இலும் கலவரமும் வன்முறையும் வந்து போகின்றன.

பதிவு இருக்கிறது நனவிடை தோய்ஞ்சு தலை துவட்டாம சளி பிடிச்சதைச் சொல்லத்தானே.. நான் கலவரத்தைப் பற்றி என்ட அனுபவங்களை யோசித்தேன். 83 கலவரம் ஞாபகம் வந்தது. மாமி & குடும்பம் எங்களோட வந்து இருந்தது ஞாபகம். ஆனா ஓடுப்பட்டுத் திரியாததால எனக்கு அதின்ட தாக்கம் தெரியவில்லை. ஏறாவூரில் நிறையச் சிங்களவர்கள் இருந்தார்கள். 87 என்டு நினைக்கிறேன். பல சிங்களவ்ர்கள் வெட்டி, சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். பயத்திலே, என்னதான் ஊர் வைத்தியரா இருந்தாலும் அம்மாவை மீறி என்னவும் நடந்து விட்டாலும் என்று நினைத்து எம்மியை வெட்டுப்படாமலும் சுடுபடாமலும் தப்பியிருந்த மற்றச் சிங்களவர்களுடன் சேர்த்து அலிகார் பள்ளிக்கூடத்தில் தங்கவைத்தோம். எம்மியைப் போய்ப் பார்த்து வந்த ஞாபகமிருக்கிறது. பிறகு எம்மி வீட்ட வந்து விட்டா. பயம் கிளம்புகிற அளவில் வித்தியாசமிருக்கிறது என்று மனதில் அப்பத்தான் பதிந்திருக்க வேண்டும்.

அதற்குப் பிறகு 90ம் ஆண்டு. யாரும் யாரையும் நம்புவதாக இல்லை. ஊருக்கே பாலர் பாடசாலை நடத்தின ரீச்சரிட வீடு எரிந்து போய்க் கிடந்தது, மாமா அழுது நான் பார்த்த இரண்டு தரங்களில் அது முதலாவது. அங்கே இங்கேயென்டு இடம் மாறி கடைசியாகக் கொழும்பு வந்தோம். அம்மா மட்டக்களப்பில் இருந்தா. அம்மா மட்டக்களப்பிலிருந்து திரும்பவும் ஏறாவூருக்குப் போனதொரு நேரம் ஒராள் அம்மாட கையை பிடித்து 'ஐயோ என்ட சீதேவி, உங்கள வெட்டின என்டு சொன்னானுகளே' என்டு அழுததும் எங்களுக்கு வந்து சேர்ந்தது. ஒருசேர அம்மா மீது ஊர் கொண்டிருந்த அன்பிற்கும் ஊரைப் பிடித்திருந்த கலவரப் பிசாசிற்குமான உதாரணம். எத்தனை அன்பிருந்தும் மரியாதையிருந்தும் வெட்டப்படுவதற்குரிய சாத்தியமே ஓங்கியிருந்த நாட்கள்.

'அமு'வில், தன் குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டிருக்கும் ஒருவரைத் தனது உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தல் நிமித்தம் கொலை செய்வதும் அந்தக் குற்றவுணர்ச்சியுடனே வாழ்வதும் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும். மனம் ஒரு காடு. பல இடங்களில் எல்லாம் பின்னிப்பிணைந்து பதுங்குகிறதும் பாய்கிறதுமான மிருகங்களையும் சேர்த்தணைத்த இருளோடிருக்கிறது. ஆனாலும் சில இடங்களில் வெளிச்சம் விழுகிறது. தடங்கள் தெரிகின்றன.

Life Goes On இல் 'நாங்கள் ஓரிரவிலேதான் அவர்களை வெறுக்கத் தொடங்கினோமா? எங்களுடைய அயலவர்களாய் இருந்தவர்கள் அவர்கள். என்னுடைய தோழன் அவன், ஆனால் கலவரத்திலே எங்கள் வீட்டுக்கு தீ வைத்தவர்களில் அவனும் இருந்தான். எங்கள் மனங்களிலுள்ள இருளடைந்த முடிவிலாப் பள்ளத்தை நாங்கள் பார்க்க விரும்புவதில்லை' என்று உரையாடல் வரும்.

அதே படத்தில் காப்பதும் மறைப்பதும் அழிப்பதுமாய் சர்மிளா தாகூரின் பாத்திரம் ஒரு கலவரம்.

பூனைக்கு வாத்தென்று பெயர்


என்னுடைய உலகத்திலே உனக்குப் பெயர் முட்டாள் வாத்து. ஆனாலும் பல நாட்களாய் எனக்குத் தெரியும் நீ பூனைதானென்று. எங்காவது பூனைக்கு வாத்தென்று பெயர் வைத்ததைக் கேள்விப்பட்டிருக்கிறாயா? அதற்கென்ன, பெயர்தானே.. இருந்துவிட்டுப் போகட்டும்.

யாரும் பார்க்காத நேரங்களில் பதுங்கிப் பதுங்கி மெல்ல நுழைந்து பின்னர் தைரியமாய் கண்முன்னே உலா வரும் பூனைக்குட்டியைக் கண்டதும் அட! என்று கவனிப்போமே... அது போலத்தான் உன் மீதான பிரியமும்.

என்னதான் பதுங்கினாலும் பூனை அலட்சியம் மிகுந்தது. அதிகாரம் பண்ணுவது. நாய்க்குட்டியைப் போல வாலாட்டுவதோ கண்டதும் துள்ளி தலைகால் தெரியாமல் சுற்றி வருவதோ இல்லை. தனக்குத் தேவையான போதில் மட்டும் வந்து கவனம் பெறுவது. எப்போதும் இருக்கும் அக்கறையை அதற்குத் தேவையான பொழுதிலே மட்டும் விரும்பி வந்து ஏற்பது. அந்த நேரத்தில் மட்டுமே பெருங்கருணை கொண்டு நம்மையும் ஒரு பொருட்டாய் மதிப்பது. வலிந்து உன் கவனம் ஈர்ப்பதில் என் முயற்சிகள் பெரும்பாலும் பலிப்பதில்லை. பழங்காலத்தில் பூனைகள் கடவுளராம். எந்தக் காலத்திலும் கடவுள் மனம் வைத்தால்தானே பேரின்பம் கிட்டுகிறது! நீயாய் வந்தாலும் அலட்சியப்படுத்தினாலும் உன் மீதான என் பிரியம் என்றைக்கும். அது உனக்கும் தெரியும், அதை நீ எப்படி  விளங்கிக் கொண்டிருக்கிறாய்?

பூனைக்குட்டியொன்று மடியில் இருக்கையில் எத்தனை மென்மையாய் இதமாய் ஆறுதலாய் இருக்கிறது. நீயும் உன்னைக் குறித்த நினைப்புகளும் ஞாபகங்களும் அப்படியே. சில்லிட்டுக் குறுகிப் போகும் நேரங்களிலெல்லாம் மன மடியில் கதகதப்பாய் உன்னைக்  கொண்டிருக்கிறேன். என்னையே எனக்கு அறிமுகப்படுத்துகிறாய். பலப்படுதலின் ஊற்றாயிருக்கிறாய். என்னையும் என் பொழுதுகளையும் உயிர்ப்பித்திருக்கிறாய். மெத்தென்ற அதே பாதத்தில் தான் கீறும் நகமும் மறைந்திருக்கிறது. உனது சில சொற்களிலே நான் உடைந்து உயிர்வலிப்பதும் பூனை விளையாட்டில் வெகு இயல்பாய் அடங்கிவிடுகிறது.

உனக்கானவை, உன்னால் நானறிந்த எனது நீலப் பூக்கள். ஆனால் பூனைக்குப் பூக்களால் ஆவதொன்றுமில்லை.

வருத்தும் எதுவுமே வன்முறைதான்


சமீபத்தில் இலங்கைப் பயணம் போயிருந்தேன். மகிழ்ச்சியாகக் கழிந்த சில நாட்களின் பின்னர் ஓர் ஊருக்குச் சென்றேன்.  பலவருடங்களாக எதிர்கொள்ளாத ஒன்றை முன்னிலும் கீழ்த்தரமான வடிவில் சந்திக்க நேர்ந்தது.  11 வயதுச் சிறுவனும்  17  வயதுச் சிறுமியும் நானும் நடந்து கொண்டிருந்தோம். சிறுவன் எங்களிலும் பார்க்க ஒரு ஐந்தாறு மீற்றர் முன்னால். போகிற வழியில் ஒரு  பெரிய   பெட்டிக்கடை. அங்கே நின்றிருந்தவர்களை நாங்கள் கவனிக்கவில்லை எம் பாட்டில் பேசிக் கொண்டு வந்து கொண்டிருந்ததால்.

சரியாக கடையை நாங்கள் கடக்கவும் அந்தக் குழுவிலிருந்து  " பார்க்க குப்பென்டு  இருக்கு.  கொண்டே வைச்சு என்னவும் செய்யலாம் போல இருக்கு" என்று ஒரு குரல் எழுந்தது. அதற்குச் சொல்லுவதற்கு என்னிடம் பதிலிருந்தது. ஆனாலும், அவர்களைக் கடந்து வந்துவிட்டதும், நான் அங்கிருந்து புறப்பட்ட பின்பும்  அப்பெண் தொடர்ந்து அவ்வழியால் சென்று வர வேண்டியதன் அவசியம் இருப்பதும் (அவரது உள/உடல் பாதுகாப்புக்காக), அதற்குப் பதில் சொல்லி விஷயத்தை வளர்க்க & எங்களைத்  தாழ்த்திக் கொள்ள விரும்பாததுமே நாங்கள் பதிலிறுக்காமல்  கடந்து வரக் காரணங்களாய் அமைந்தன."பொம்பிளைகளுக்கு 'நல்ல' மரியாதை" என்பதைத்  தாண்டி வேறொன்றையும் எங்களுக்குள்ளே  பேசிக்  கொள்ளவில்லை. இதை வாசிக்கிற நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் எப்படி நாங்களிருவரும் உணர்ந்திருப்போம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை - உங்களுக்கே தெரியும். ஆணாக இருக்கும் பட்சத்தில், உங்கள் அந்தரங்கத்தை உங்களது விருப்பின்றி ஒருவர் தொடுவது போன்று x 1000 என்று  உதாரணமாகச்  சொல்லலாம்.

பல பெண்களுக்கு இப்படியான வதைச் சொற்பிரயோகங்கள் கேட்பதென்பது துரதிர்ஷ்டவசமாக அன்றாட நிகழ்வாக அமைந்து விடுகிறது. சொற்களைக் கணக்கில் எடுக்காமல் கடந்து விடலாம்தானே என்று சொல்லலாம். சொல்லும் வதைக்கும்தானே ? பேசாமலிருக்கிறார்கள்.. அதனால் இப்படியானதை விரும்புகிறார்கள் என்று எடுத்துக் கொண்டால்?  சொல் ஒரு நாளைக்குச் செயலாக மாறுகிற போது?

பெண்களை நோக்கி இப்படி  நடந்து கொள்வது ஏன்? பெண்ணை ஒரு சக மனிதராய் பார்க்காது மறைப்பது என்ன? எனக்குத் தோன்றுவது (இதைச் செய்கிற ஆணிடம் தன்னம்பிக்கை/ சுயமரியாதை இல்லாமை, ஈகோ பிரச்சனை  என்பனவற்றையெல்லாம் தாண்டி) அடிப்படையாய் பெண் என்றால் ஒரு ஆணுக்குரிய மரியாதையைத் தரத் தேவையில்லை .. அவள் ஒரு படி குறைந்தவள் என்கிற பொதுப்புத்தியில் படிந்துள்ள கருத்து. யாரும் குறிப்பாக உங்களை இருத்தி வைத்து 'பெண் என்றால் ஆணிலும் குறைந்தவள்' என்றோ 'அவளுக்கு மரியாதை தரத் தேவையில்லை' என்றோ தனிவகுப்பு எடுத்துச் சொல்லித்தர வேண்டியதில்லை. செய்வதுமில்லை.  எங்களைச் சுற்றி வீட்டிலிருந்து  அலுவலகம் வரை அப்படித்தான் மனதில் படிய வைக்கப்பட்டிருக்கிறது பெரும்பாலான இடங்களில். அப்படிச் சிந்தனை இருக்கிறது என்பதையே பலர் உணர மாட்டார்கள். இதுவும் வன்முறைதான். அடிப்பது, வெட்டுவது, இரத்தம் என்பது மட்டுமே வன்முறையல்ல. வருத்தும் எதுவுமே வன்முறைதான். மரியாதை இருந்தால் பெண்ணை வதைக்கிற எதற்கும் - சொல்லோ, செயலோ, கருத்தோ எதுவாயினும் - சரியாகச் சிந்திக்கிற யாரும் உடன்போக மாட்டார்கள். இங்கே சொல்லுகிற மரியாதை என்பதை  பேருந்தில் எழுந்து இடம் கொடுப்பது அல்லது ஆசிரியருக்கு வணக்கம் சொல்லுவது போல என்று எடுத்துக் கொண்டால் நீங்கள் போக வேண்டிய தூரம் அதிகம் :O).


பெண்ணை நுகர்வுப் பண்டமாய் இவ்வுலகமே பார்க்கிறது. 'சந்தைப்படுத்தலில்' பெண்ணின் நிலை எப்படி என்பது தெரியும்தானே? கொஞ்ச நாளைக்கு முன் பார்க்கக் கிடைத்த, காட்சிகளால் கோபப்படுத்திய காணொளி கீழே. காணொளி இந்தியாவை மையமாகக் கொண்டதாயினும் எல்லா நாடுகளிலும் இதைப் போன்ற ஆபத்தான கருத்துப்பாடு சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.


http://youtu.be/Rt1Rhd_sRhg

கடைசியில் திரையில் இடது பக்கமிருப்பவர் சொல்லுவது சரியெனத் தோன்றுகிறதா அபத்தமாயிருக்கிறதா உங்களைப் போறுத்தவரை? பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை விட பதுங்க வைப்பது சரியானதாய்ப் படுகிறதா? ஒரு 4 வயதுச் சிறுமிக்கே தனது  உடல் & அதன் நீட்சியாக உயிரும் குறித்தான பாதுகாப்பில்லாத போது (அண்மையில்  நடந்தது) பெண்களுக்கான நம்பிக்கை எதிலிருந்து வரும்? நாங்கள் வாழும் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு சிறு வயதிலிருந்தே மரியாதை என்பது எப்பாலருக்கும் உரியது/சமமானது என்பது  பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

~~~~~~~~~~~

பெப்ரவரி 14. பெண்கள்  வன்முறைக்கெதிராக எழுவதைக் குறிக்க எடுத்துக் கொண்ட நாள். One Billion Rising (100 கோடி பெண்கள் எழுக) நிகழ்வு. இந்தத் தளத்தில் பாருங்கள்.  பெண்களுக்கு மரியாதை அளிக்கிற, எந்தப் பெண்ணுக்கும் பாதுகாப்பான ஒரு சூழலை அமைக்கிற ஒருவராக இருக்கிறீர்களா?

அந்தர(ங்க)த்தில் மழை


டாலிங் ஹாபரின் சில்லிட்ட படிக்கட்டில்
என் இதயத்தையும் அவளிருந்த குமிழியையும்
அன்று நான் உடைத்துக் கொண்ட பின்
என் மீது வந்தமர்ந்து,
இப்பொழுதும்  என்னோடு ஒட்டிக்
கொண்டிருக்கிறது  அந்த மாய வண்ணத்துப்பூச்சி - அன்றைய இரவின்
ஈரலிப்புடனும்  மாறாத அதே கதகதப்புடனும்.

உடை(ந் )த்ததற்குப் பதிலாக
மீண்டுமொரு குமிழி செதுக்குகிற போதெல்லாம்
தன் வண்ணங்களையெல்லாம் உதிர்த்து அதிலே  பூசியபடி
சத்தமில்லாமல் கேட்கிறது அந்த வண்ணத்துப் பூச்சி - அந்தப்
பெண்ணை என்னசெய்து விட்டேனென்று.
அந்த ஒரு வினவலில் துண்டு துண்டாய்ச் சிதறுகிறது
வண்ணம் பூசிய புதுக்குமிழி. 

செதுக்கிச் செதுக்கிக் களைத்துப் போனாலும் 
வாளாவிருக்க விடாமல் துரத்துகிறது வண்ணத்துப் பூச்சி.
வாலை ஆட்டாமல்,
சிறு முனகல் தானும் இல்லாமல்,
காதுகளைத்  தொங்கவிட்டு,
தலையைச் சரித்து,
துளைக்கும் மினுமினுத்த கண்களால் மட்டும் என்னைத் தொடர்கிறது
துரத்தினாலும் போகாத அவளது நாய்க்குட்டி.

ஒரு அதிகாலையில்
தேநீரின் துணையோடு - உனக்கு
உண்மையைச் சொல்லும் துணிவு எனக்கு வரும்வரை
பெய்ய விரும்பாமலும் 
பெய்யாமலிருக்க முடியாமலும்
அந்தரத்தில் தொங்குகிறது மழை.

இன்றைய தருணம்


இன்றைக்கு நல்ல வானிலை. இதமான வெயில், சுகமான தென்றல். கார் கழுவலாம் என்று நேற்றே யோசித்திருந்தேன். கராஜிலிருந்து வெளியில் எடுத்து வாகாய் நிழலில் நிறுத்தி ஸ்பொன்ஞ்சும் நீரும் கொண்டு கழுவ ஆரம்பிக்கையில் மனம் கட்டுக்குள் இருக்கவில்லை. அலைபாயும் தனது தொழிலை அது செவ்வனே செய்து கொண்டிருந்தது.  அதன் போக்கில் விட்டுவிட்டு கை மட்டும் காரைக் கழுவிக் கொண்டிருந்தது.   சுற்றியலைந்து களைத்த பின் நான் வாகனம் கழுவிக் கொண்டிருந்த இடத்துக்கே என் மனம் திரும்பியது. கழுவக் கழுவ அற்றுப் போய்க் கொண்டிருந்த வாகனத்துத் தூசியைப் போலவே எண்ணங்களும் மனதிலிருந்து கலைந்து போக, ஒரு கட்டத்தில் அங்கே வண்டியும் நானும் மட்டுமே மிஞ்சியிருந்தோம். அதைக் கழுவி விடுவது மட்டுமே தலையாய பணியாக இருந்தது. இன்றைக்குத்தான் வண்டியின் சரியான நிறத்தைப் பார்த்தேன் என்று சொன்னால் நம்பக் கஷ்டப்படுவீர்களோ தெரியவில்லை. காரினை மட்டுமே கண்டு புலன்களில் அதனை நிறைத்துக் கொண்ட நாளில் அதன் வண்ணத்தை சரியாகப் பார்த்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை எனக்கு.

நாங்கள் குளிப்பது போலத்தான் வாகனக் குளியலும். முதலில் நீர் வார்த்து, பின் சவர்க்காரம் தேய்த்து, நீர் கொண்டு அலசிய பின் துவட்டிக் கொள்வது.
வாகனம் கழுவ என்றிருக்கிற திரவத்தை ஒரு வாளியில் இட்டு அது நுரைக்க நுரைக்க நீர் நிரப்பி எடுத்துக் கொள்ள வேண்டும். நுரையில் விரும்பியபடிக்கு அளைந்து விளையாடிக் கொள்ளலாம். முழங்கை வரை வாளிக்குள் அமிழ்த்தி ஸ்பொஞ்சினை நனைத்து காரின் ஒவ்வொரு பகுதியாக தேய்த்துக் கழுவினேன். வாகனம் கழுவுவதென்பது ஒரு முழு உடற்பயிற்சி. குனிந்து நிமிர்ந்து வளைந்து எட்டியெல்லாம் வேலை செய்ய வேண்டி வரும். காரில் ஒவ்வொரு பகுதியாகத்தான் நுரைக் கரைசல் கொண்டு கழுவிய பின் நீர் கொண்டு அலசி அதற்கென இருக்கிற துணியால் துடைக்க வேண்டும். இங்கே தான் நம் குளியலும் வாகனக் குளியலும் வித்தியாசப்படுகின்றன. நம்மைப் போல் தலை முதல் கால் வரை ஒரே தடவையில் நுரை குளித்து அலம்பிக் கொள்ள முடியாது. அப்படியாக  ஒவ்வொரு பகுதியையும் தேய்த்து நுரை போகக் கழுவி துடைத்தும் விட்ட பின் கொஞ்சமாய்ப் படுகிற இளஞ்சூட்டு வெயிலில் செல்லம் போல நின்றிருந்தது.

சில்லுகளைக்  (wheel hub) கழுவும் போது தான் கொஞ்சம் கிரீசும் தூசும் நகத்தினடியில் ஒளிந்துகொண்டன. எல்லாம் கழுவி முடிக்கும் வரை வேறொரு சிந்தனையுமில்லாமல் இருந்தது அழகான  உணர்வாய் இருந்தது. தியானம் போல. கனவுகளில்லாத நித்திரை போல. 

வீட்டுக்குள் வந்த பின்னர் மனம் உணர்ந்த நிறைவும் நகத்தினடியிலிருந்த அழுக்கும்தான் வாகனம் கழுவினதற்குச் சாட்சியாக இருந்தன. கைகளைச் சுத்தப்படுத்திக் கொண்ட பின் வெயில் கொட்டிக் கிடந்த புல்லில் கிடந்து புத்தகம் வாசித்தேன். கார்திக் வேலுவின் 'மொழி  பெயர்த்த மௌனம் ' கவிதை நினைவுக்கு வந்தது. இலக்கியச்  சந்திப்புக்கு எதைக் கொண்டு செல்ல என்று இதுவரை இருந்த  குழப்பம் தீர்ந்தது. 

சந்திப்பிற்குப் போகும் வழியில் எதிர்பாராத ஒரு அழகான நிலவைக் கண்டேன். உதட்டில் புன்னகையொன்று வந்து குந்திக் கொண்டது. பூமிக்கு மிகவும் அண்மையில் நிலவு வரும் காலத்துப் பூரணைக்கு அடுத்த நாள். பெரியதொரு பந்து. கோழிக் குஞ்சினதை விடக் கொஞ்சம் அழுத்தம் கூடின மஞ்சள் நிறத்தில். அடிவானத்தில் சில மரங்களின் பின்னால் முகில்களோடு  மறைந்து விளையாடிய வட்டப் பந்து. சந்திப்பு நடக்கும் இடத்திற்கு நிலவைக்  கண்டு ஐந்து நிமிடங்களுக்குள் போய் விட்டேன். அங்கு நின்றவருக்குக் காட்டுவதற்கிடையில் மஞ்சள் வெளிறி பந்தும் சற்றே மேலேறி விட்டிருந்தது. கொஞ்ச நேரம் நிலவையே ரசித்துக் கொண்டிருந்தோம். மூன்றாவமர் வர, அவருக்குக்கும் காட்டினோம். சந்திப்பு முடிந்து கலையும் போது நிலவு உயரத்தில் சின்னதொரு வெண்பந்தாகிச் சிரித்துக் கொண்டிருந்தது. 

முன்னமே தெரிந்திருந்தாலும் பல வேளைகளில் உணர்ந்தாலும் இப்போ கொஞ்ச நாட்களாக திரும்பத் திரும்ப எனக்கு நினைவுறுத்தப்படுகிறது ஒரு நாளினையும் வாழ்க்கையையும் அழகாக்குவது எதிர்பாராமல் வரும் சின்னச்சின்னத்  தருணத்துச்  சந்தோசங்கள்தான் என்று. அதையே கொஞ்ச நேரம் சந்திப்பில் பேசிக் கொண்டிருந்தோம். தேவதேவனின் கவிதையொன்றைப்  பற்றிப் பகிர்ந்து கொண்டார் ஒருவர்.

வேறெதையும் எழுதாவிட்டாலும், இன்றைய என் நாளை  அழகாக்கிய கார் கழுவினதும் நிலவைப் பார்த்ததும் போன்ற தருணங்களைச் சில நாட்களுக்கொருமுறையாவது  இங்கே பதிந்து வைக்கும் உத்தேசம்.

உங்கள் நாட்கள் எதனாலானவை? 

வாழ்வதற்கு ஒரு வண்ணம்


உங்களுக்கென்று மிகப் பிடித்த ஒரு (அல்லது சில/பல) நிறங்கள் இருக்குமல்லவா? எனக்கும் சில நிறங்களிருக்கின்றன. என் மனநிலையைப் பொறுத்து ஒவ்வொரு நேரங்களிலும் ஒவ்வொரு நிறம் - பச்சை நிறமே பாட்டிலே வருவது போல. ஆனாலும் 80 - 85% அது ஒரு குறிப்பிட்ட நீலம். அதை நான் என் இருபதுகளின் ஆரம்பத்தில் கண்டு கொண்டேன். இன்றுவரை அதுவே எனக்கு மிகப் பிடித்தமான நிறமாயிருக்கிறது. 


கிட்டடியில் களை பிடுங்க வேண்டி வந்தது. களை என்று தெரியும். வளரவிடக் கூடாதென்று தெரியும். ஆனாலும் அழகாயிருக்கிறது என்று வளரவிட்டுவிட்டேன். பார்த்துப் பார்த்து வளர்த்த ஒரு செடியினடியில் முளைத்தது. பார்த்ததன் சீத்துவம் இவ்வளவுதானா என்று நீங்கள் கேட்கக் கூடும். ஆனால் கொஞ்ச நாள் செடியினைக் கவனிக்க முடியாமல் போய்விட்டது. அதனோடு வழமை போல பேசி, தருகிற பழத்திற்கு நன்றி சொல்லவில்லை. எப்படியோ களையும் வந்துவிட்டது. சும்மாவும் இல்லை, கொடியோடு சேர்ந்து அதுவும் கிடுகிடென வளர்ந்தபடி. செடிக்குப் போகவேண்டிய சத்தினைக் களை உறிஞ்சுவதைக் கவனித்தேன். களையை பேசாமல் விட்டால் என்ன என்று தோன்றிய ஒரு பொழுதில்தான் அதனால் செடிக்கேற்படும் சத்துக்குறைபாட்டையும் பூக்கள் குறைந்ததையும் காண நேர்ந்தது. 


அழகாய்த்தானிருந்தாலும் களையைப் பிடுங்கி எறிய வேண்டும் என்று புரிந்த தருணத்தைப் போல ஒரு சின்ன ஆனால் தெட்டத் தெளிவான ஒர் கணத்தில் தான் எனக்கு மிகப் பிடித்தமான நீல நிறத்தை நான் கண்டுகொண்டேன். ஒரு வகை நீலம். மிக அழகான நீலம். அதைப் போல காண்கிற போதெல்லாம் பக்கத்திலிருக்கும் ஆளைக்கூப்பிட்டு, இது மாதிரி ஆனா இதுவல்ல என்று சொல்ல வைக்கிற, எனக்குள் கண்டெடுத்து, எனக்கு வெளியே நான் தேடுகிற நீலம் எனக்கேயானது. எத்தனையோ காட்சிகளில் என் மனக்கண்ணில் தன்னை வெளிப்படுத்துவது. எனக்குப் பல உணர்வுகளை அளிப்பது. என்னைப்பற்றியோ பொதுவாக வாழ்க்கை பற்றியோ நினைத்தால் கட்டாயம் படிவது இந்த நீலம் தான். எனது நீலம்.


அட! இப்படி நடந்துவிட்டதே என்று கடந்து போனதைப் பற்றியோ, நாளைக்கு/இனி வரும் நாட்களில் என்ன நடக்கும் என்றோ யோசித்து அதிலேயே மூழ்கிப் போய்விடாமல் வாழ்க்கை என்பது அதன் வழியில் வாழ்ந்து பார்க்கத்தான் என்பது என் எண்ணம். எத்தனை எத்தனை மனிதர்கள், உணர்ச்சிகள், அனுபவங்கள், காட்சிகள்! என்றோ ஒரு நாளைக்குத் தெரியும் நினைத்துக் கொண்டதும் நடந்து கொண்டதும் சரியா என்று. அதற்கிடையில் எனக்குத்தான் என்னைப்பற்றிக் கணக்கில்லாச் சந்தேகங்களும் கேள்விகளும்.ஒரு இலக்குமில்லாமல் நகர்கிறேன் போலத் தோன்றுகிறது. 


இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டமைப்புப் பிடிக்காமல் ஆனால் முழுதும் அந்தக் கட்டுகளைத் தகர்த்து வந்து விடவும் முடியாமல் என்னவாய் இருக்க வேண்டும் என சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதின் தெளிவற்ற சித்திரம் தான் நான். வியாபார உலகிலே பார்த்தால் குறிப்பிட்ட இலக்கு வைத்து அதை நோக்கிச் செயல்பட்டு வெற்றியடைகிறார்கள். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் அதைப் பின்பற்றலாம் என்றே தோன்றுகிறது. என்ன செய்ய இப்படி நடந்து விட்டது/இப்பிடித்தான் நடக்கும் என்று இல்லாமல் நாமாய் முடிவெடுத்துச் செயல்படுத்தி - கஷ்டமாயிருந்தால் தான் என்ன, செய்து பார்ப்பதுதான்! - அதன் படிக்கு வாழ்க்கையைக் கொண்டு போனால்? எங்கள் வழியை முழுக்க நாங்களே தீர்மானித்துக் கொள்வது என்று வந்துவிட்டால் எங்கள் முடிவுகளுக்கும் செயல்களுக்கும் முற்றுமுழுதாக நாமே பொறுப்பு. சற்றுப் பயமுறுத்தும் ஒரு செயல் அல்லவா? எங்களுக்கு நாங்கள்தான் பொறுப்பு. வேறு யாரிலும் பொறுப்பைச் சாட்டிவிடவோ குறை சொல்லவோ முடியாது. அப்படிச் செய்வதனால் இசைந்து போகும் இயல்புக்கு முதல் வேட்டு. நாம் இசைந்து போகத்தான் பழக்கப்பட்டிருக்கிறோம். குடும்பத்துக்கு, பள்ளிக்கு, நண்பர்களுக்கு, அலுவலகத்திற்கு, இனத்திற்கு, மொழிக்கு, மதத்திற்கு என்று ஒரு முடிவில்லாத பட்டியல். வித்தியாசமாய் இருப்பது வேண்டாததாய்ப் பார்க்கப்படும். ஒதுக்கி வைக்கப்படுவோமோ என்று ஒரு பயம். அதுதான் உள்ளூர ஆட்டுவிக்கிறது. 


அந்தப் பயத்தை ஒதுக்கி வைத்து விட்டு எங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் கொண்டு, எவ்வள்வு இலகுவானதென்று கணிக்காமல், கடினமானதாயே இருந்தாலும் எங்களுக்கென்று ஒரு பாதையைத் அமைத்துக் கொள்ள வேண்டும். கடினமாயிருக்கும் பாதையின் பயணமும் இலக்கினை அடைந்தவுடன் வரும் மகிழ்ச்சியும் தரும் சாதனை உணர்விற்கு அளவுகோலில்லை. எந்தவித 'ரிஸ்க்'ம் வாழ்க்கையில் இல்லாமல் இருக்கிறதன் ஆபத்து நமக்கென்று ஒரு பாதையை அமைத்து அதில் வரும் இடர்களைச் சந்தித்துத் தோல்வியடைவதிலும் பார்க்க மிகமிக மோசமானது.  


எனக்காய் இந்த உலகில் எங்கோ காத்துக் கொண்டிருக்கிறது எனது நீலம். அதனை தேடிப் போகிறேன் நான். கண்டடைந்தால் அகத்திலும் புறத்திலும் நீலம். இல்லையேல் அகத்தில் மட்டும். எப்படியும் என் நீலம் என்னிடமிருக்கும்..



பெட்டகம்