பார்த்தேன்..ரசித்தேன்

Jacquis Perrinன் நெறியாள்கையிலும் Bruno Coulaisன் இசையிலும் வெளிவந்துள்ள ஒரு நேபாள(most likely திபெத்திய) மொழிப்படம் 'ஹிமாலயா'. மனதை வருடும் மெல்லிய இசையும், அழகான காட்சியமைப்பும் கொண்ட இந்தப் படம் டின்லே தாத்தா தானியக் கதிர்களுக்கூடாக நடந்து வருவதுடன் ஆரம்பிக்கிறது. உப்பு வாங்கி வந்து அதை வேறோரிடத்திற்கு கொண்டு சென்று விற்று தானியம் வாங்கும் வாழ்க்கை. உப்பு பெற்று வரும் வழியில் டின்லேயின் மகன் இறந்து விடுகிறான். அவனது தோழனான 'கர்மா'வின் மேல் டின்லே சந்தேகப்படுகிறான். குரோதம் மனதில் கொழுந்து விட்டெரிகிறது. பரம்பரையாக அக்குடியினரின் தலைவர் பதவி டின்லேயின் குடும்பச் சொத்தாகவே இருந்து வருகிறது. டின்லேயின் பேரனோ பாலகன். தலைமைப் பதவிக்காகவே கர்மா தன் மகனை கொன்றான் என் நம்பும் டின்லே இந்த முறை caravanகளுக்கு நானே தலைமேயேற்கிறேன் என்று சொல்லி ஆயத்தப்படுத்துகிறான். சோதிடம் பார்த்து, நல்ல நாளில் புறப்படும் இவர்களது வழக்கத்தையும் மீறி கர்மா தனது இளவட்டத் தோழர்களுடன் முதலே புறப்படுகிறான். டின்லே, பிக்குவாக இருக்கும் தனது 2ம் மகனிடம் சென்று தன்னுடன் வருமாறு உதவி கோருகிறான். மகன் தயங்கவே அவனுக்கு ஏசிவிட்டு ஊருக்கு வந்து ஆயத்தங்களைச் செய்கிறான். மகன் 2 நாட்களில் வந்து சேர்கிறான். சோதிடர்கள் குறித்த நன்னாளில் டின்லேயினதும் அவனது சம வயதான 'கிழ' வட்டங்களினதும் பயணம் தொடங்குகிறது.

கர்மாவின் கூட்டத்தினரை எட்டிப் பிடித்தனரா, அவனுடன் சமாதானம் ஏற்பட்டதா என்பதும், வழியில் அவர்கள் கற்றுக் கொள்ளும் பாடங்களும், டின்லே, பிக்குவான இளைய மகன் , கர்மா, டின்லேயின் மருமகள் பேமா, பேரன் பசாங், . இவர்களது தனிப்பட்ட பயணங்களுமே கதை. சின்னச் சின்ன மனதைத் தொடும் காட்சிகள். மரம் என்றால் என்ன எனக் கேட்கும் பசாங், கர்மாவின் வில்வித்தை மீது அபார பிரமிப்புக் கொண்டவனாக இருக்கிறான். கர்மாவின் சிறுவயது தோழியாக டின்லேயின் மருமகள் பேமா. தான் குற்றமற்றவன் என்பதை டின்லேக்கு எடுத்து சொல்ல முயலுகின்ற,இளமைத் துடுக்கு நிறைந்த வீரனாக கர்மா....

நடித்தவர்கள் பாத்திரமாகவே ஒன்றிப் போயிருக்கிறார்கள். நீண்ட நாட்களின் பின் நிச்சயமாக கண்ணுக்கும் காதுக்கும் மனத்திற்கும் ஒரு விருந்து. கிடைத்தால் எடுத்துப் பாருங்கள்.

பி.கு: படத்தில் பணியாற்றியவர்கள் பற்றி இங்கே...

பெட்டகம்