என்ன சத்தம் இந்த நேரம்..அரட்டை ஒலியா?

கோயிலுக்கு போனால் சில/பல வேளைகளில் அங்கே சிலர் நடந்து கொள்ளும் விதம் இருக்கிறதே..சீ! என்று ஆகி விடும். பூசை நடந்து கொண்டிருக்கும்...இவர்களோ பக்கத்திலிருக்கும் தோழியிடம் நேற்றுப் போன கல்யாண வீட்டைப் பற்றியோ மகன்/மகள் செய்யும் வேலைகள் பற்றியோ அளந்து கொண்டிருப்பார்கள்.(வயது வந்தவர்களில் இந்த அநியாயத்தைச் செய்பவர்கள் 99.9% பெண்களே என்பது வருத்தத்துக்குரியது!). பதின் வயதினரைக் (teenagers) கேட்கவே வேண்டாம்..அம்மா நேற்று ஷொப்பிங் போக விடவில்லை என்பதிலிருந்து யாரை சைட் அடித்தார்கள் என்பது வரை அங்கே அரங்கேறும்(இவ்வயதினர்க்கு எதை எங்கே கதைப்பது என்கிற விவஸ்தையே இல்லை..திருவிழாவின் போது ஒருநாள் நடந்தது...முற்றிலும் உண்மை: ஒரு பெண் தன் தோழியிடம் சொன்னாளாம் "can you believe I'm still a virgin" என்று!! அவளுக்குப் பக்கத்தில் நின்று கொன்டிருந்த என் கணவரின் நண்பர் திரும்பி அவளைப் பார்த்து "Good for you" என்று சொன்னாராம். இயல்பாகவே இவர்களைப் பற்றிய கவலை எழுகிறது!). இவர்களுக்கு ஒரு விஷயத்தைக் கதைத்தே தீர வேண்டிய அவசியம் இருந்தால்:
(1) கோயிலில் வெளியே போய் கதைக்கலாம்.
(2) வீட்டிற்குப் போய் தொ(ல்)லைபேசியில் அலட்டலாம்.

மற்றவர்களும் கோயிலில் இருக்கிறார்களே, பூசை நடக்கிறதே மௌனமாக இருந்து கும்பிடுவோம் என்று ஏன் இவர்கள் நினைப்பதில்லை? எத்தனையோ முறை நான் திரும்பிப் பார்த்து "பூசை நடக்கிறது" என்று சொல்லியிருக்கிறேன். ஏதோ வேற்றுக்கிரகத்திலிருந்து வந்த ஒரு புதினமான உயிரினத்தைப் பார்ப்பது போல ஒரு பார்வை வீசுவார்கள்..பிறகு பூசை முடியும் வரை அல்லது சில வேளைகளில் கோயிலை விட்டுப் போகும் வரையும் கூட நான் ஏதோ செய்யக் கூடாததைச் செய்து விட்ட மாதிரி முறைத்துக் கொண்டேயிருப்பார்கள்!! சொல்லியும், ஒரு நிமிஷம் கடமைக்கு பேசாதிருந்து விட்டு மீண்டும் "கச்சேரியை" ஆரம்பிக்கிறவர்களும் உண்டு.

எப்படி, என்னத்தைச் சொன்னால் நம்மவர் இந்த மாதிரி நடந்து கொள்வது குறையும்? யாருக்காவது தெரியுமா?

பெட்டகம்