வந்தேறுகுடிகளா?

இலங்கையில் நாகர்களும் இயக்கர்களும்(இவர்களது வழித்தோன்றல்கள்தான் வேடர்களா?) இருந்தார்கள். பிறகு நாடு கடத்தப்பட்ட விஜயன் வந்திறங்கியதிலிருந்து புதிதாக ஒரு இனத்தவர். புதியவர்களே சிங்களவர்கள். இப்படித்தான் எங்கள் வரலாற்றுப் பாடத்தில் படித்திருக்கிறோம். ஏற்கெனவே தீவின் வடபாலிருந்த நாகர்களைத் தமிழரென சிங்கள வரலாற்றறிஞர்கள் பலர் ஏற்றுக் கொள்வதில்லை.

இப்போதும் பல சிங்களவரைக் கேட்டால் தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றுதான் சொல்வார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை - வரலாற்றுப் புத்தகத்தில் இருப்பதுதானே அவர்களுக்குத் தெரியும். அப்போ வடக்கில் இருந்த நாகர்கள் யார் எனக் கேட்டால் முழிப்பார்கள். வரலாற்றுப் புத்தகங்களில், (எந்த நூற்றாண்டுகளென மறந்து விட்டேன்) இன்னின்ன நூற்றாண்டுகளில் ஏற்பட்ட தென்னிந்தியப் படையெடுப்பின் போது (உதாரணம் ராஜ ராஜ சோழன்) வந்த படைகளில் இருந்தவர்களிற் பலர் - இலங்கையரை மணம் செய்து - இலங்கையிலேயே குடியேறியமை என்று குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் தான் முதலில் இலங்கைக்குத் தமிழர் வந்தனராம். அதற்குப் பிறகு பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் தேயிலை / கோப்பித் தோட்டங்களில் வேலைக்காக அமர்த்தப்பட்டு, இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் தமிழர்கள் வந்தமை.

இவ்விரண்டு காரணிகளாலுமே இலங்கையில் தமிழ்க்குடியேற்றம் உண்டாயிற்று என்பதே வரலாற்றுப் பாடங்களினது அசைக்க முடியாத கூற்று. இந்த எண்ணம்/நிலைப்பாடு அரசியல்வாதிகளினால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களில் மட்டுமல்லாது, ஆவணங்கள், இணையத்திலும் இலங்கை வரலாறு எனத் தேடினால் மேற்கூறிய விதத்திலேயே இலங்கை (தமிழரது) வரலாறு விபரிக்கப்படும். இதனை படித்தவர்களும் நம்புவதுதான் வேடிக்கை. இலங்கையிலே விஜயனின் வரவுக்கு முன்னமிருந்தே வாழ்ந்து வந்த நாகர்களின் வழி வந்தவரே தமிழர் என்பது எனது நம்பிக்கை. இது சரியா பிழையா?

இங்கே எனது அலுவலகத்தில் இரண்டு தென்னிந்தியர் உளர். அதில் ஒருவர் கொஞ்ச நாளைக்கு முதல் "தென்னிந்தியாவில் உங்களது மூதாதையரின் இடம் என்ன?" என்று கேட்டார். எனக்கு முதலில் விளங்கவில்லை. தெரியாது என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். (இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து கடலால் இலங்கை பிரிக்கப்பட்டு எத்த்த்தனை ஆயிரம் ஆண்டுகள். இதிலே அம்மம்மாட அம்மம்மாட (x 250)......அம்மம்மாட ஊர் எதுவென்று கேட்டால் எனக்கு எப்படித் தெரியும்!!) பிறகு தான் விளங்கிற்று, அவர் பிரிட்டிஷாரால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட தென்னிந்தியர்களின் வழித்தோன்றல்களில் ஒருவராக என்னை நினைத்திருக்கிறார். போய்ச் சொன்னேன், "அப்படியல்ல. நான் இலங்கைத் தமிழ்". அவருக்கோ குழப்பம்.."பிரிட்டிஷாரால் கொண்டு போகப்பட்டவர்கள் தானே இலங்கையில் தமிழர் " என்று கேட்டார். இலங்கை வரலாறு சொல்ல வேண்டியதாயிற்று (என் version :o) ). ஆனாலும் அவர் முழுக்க convince ஆகின மாதிரித் தெரியவில்லை.

மற்றத் தென்னிந்தியருடன் கதைக்கும் போது, அதிலும் இலங்கை வரலாறு மூக்கை நுழைத்தது. தமிழர் குடியேற்றம் தென்னிந்தியப் படையெடுப்பின் (மீண்டும், ராஜ ராஜ சோழன்) போது, தமிழ்ப்போர்வீரர்கள் இலங்கையில் குடியேறின போது தான் ஆரம்பித்தது என்றே இவர் சொல்கிறார். (இவர்தான் இராணுவத்தில் இருந்தவர்..அதனால் இப்படி யோசித்திருக்கக் கூடும்)

எது சரி? நான் நினைப்பதுவா? முதலில் குறிப்பிட்ட இந்திய நண்பரது எண்ணமா? இரண்டாவது இந்திய (இராணுவ) நண்பரின் கூற்றா? அல்லது இவர்கள் இருவரும் சொல்வதைச் சேர்த்துச் சொல்லும் இலங்கை வரலாற்றுப் புத்தகமா?

பெட்டகம்