கலவரக் காடு


இது நீண்ட வார இறுதி. திரைப்படஙளுக்கென்றே வாய்த்தது போல இருக்கிறது. வெள்ளி பார்த்தது, இந்திப்படமொன்று. 'பாக் மில்க்கா பாக்'. அதற்குப் பிறகு, வித்யா பாலனின் படமென்று 'ஷாதி கி சைட் இபெக்ட்ஸ்' பார்க்கத் தொடங்கி வில்லங்கத்திற்குப் பார்த்து முடித்த பிறகு கண்ணில் பட்டதொரு படம். 'அமு'. அம்ரித் எனும் பெயரின் சுருக்கம். அம்முக்களெல்லாம் தெரிந்துதானா பெயர் சூட்டப்படுகிறார்கள்?

அதற்கடுத்துப் பார்த்தது, 'Life Goes On'.

அமு மற்றும் Life goes on இல் கொஞ்சம் செயற்கையாக நடிப்பு இருந்தாலும் கதைக் களனால் கவர்ந்தன. அமுவில் கொங்கனா சென் சர்மா. ஒரு வரியில் சொல்வதானால், தன் பெற்றோரைத் தேடும் ஒரு இளம்பெண் தான் அமுவின் கதை. மற்றதில் திடீரென குடும்பத்தலைவி இறந்தவுடன் குடும்பத்தினரின் தடுமாற்றங்கள். வங்காளக் கவிதை வரிகள் கொண்டு இறந்தவரின் நினைவைக் கொண்டு வந்த விதம் அழகு. இரண்டு படங்களிலும், பாக் மில்க்கா பாக் இலும் கலவரமும் வன்முறையும் வந்து போகின்றன.

பதிவு இருக்கிறது நனவிடை தோய்ஞ்சு தலை துவட்டாம சளி பிடிச்சதைச் சொல்லத்தானே.. நான் கலவரத்தைப் பற்றி என்ட அனுபவங்களை யோசித்தேன். 83 கலவரம் ஞாபகம் வந்தது. மாமி & குடும்பம் எங்களோட வந்து இருந்தது ஞாபகம். ஆனா ஓடுப்பட்டுத் திரியாததால எனக்கு அதின்ட தாக்கம் தெரியவில்லை. ஏறாவூரில் நிறையச் சிங்களவர்கள் இருந்தார்கள். 87 என்டு நினைக்கிறேன். பல சிங்களவ்ர்கள் வெட்டி, சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். பயத்திலே, என்னதான் ஊர் வைத்தியரா இருந்தாலும் அம்மாவை மீறி என்னவும் நடந்து விட்டாலும் என்று நினைத்து எம்மியை வெட்டுப்படாமலும் சுடுபடாமலும் தப்பியிருந்த மற்றச் சிங்களவர்களுடன் சேர்த்து அலிகார் பள்ளிக்கூடத்தில் தங்கவைத்தோம். எம்மியைப் போய்ப் பார்த்து வந்த ஞாபகமிருக்கிறது. பிறகு எம்மி வீட்ட வந்து விட்டா. பயம் கிளம்புகிற அளவில் வித்தியாசமிருக்கிறது என்று மனதில் அப்பத்தான் பதிந்திருக்க வேண்டும்.

அதற்குப் பிறகு 90ம் ஆண்டு. யாரும் யாரையும் நம்புவதாக இல்லை. ஊருக்கே பாலர் பாடசாலை நடத்தின ரீச்சரிட வீடு எரிந்து போய்க் கிடந்தது, மாமா அழுது நான் பார்த்த இரண்டு தரங்களில் அது முதலாவது. அங்கே இங்கேயென்டு இடம் மாறி கடைசியாகக் கொழும்பு வந்தோம். அம்மா மட்டக்களப்பில் இருந்தா. அம்மா மட்டக்களப்பிலிருந்து திரும்பவும் ஏறாவூருக்குப் போனதொரு நேரம் ஒராள் அம்மாட கையை பிடித்து 'ஐயோ என்ட சீதேவி, உங்கள வெட்டின என்டு சொன்னானுகளே' என்டு அழுததும் எங்களுக்கு வந்து சேர்ந்தது. ஒருசேர அம்மா மீது ஊர் கொண்டிருந்த அன்பிற்கும் ஊரைப் பிடித்திருந்த கலவரப் பிசாசிற்குமான உதாரணம். எத்தனை அன்பிருந்தும் மரியாதையிருந்தும் வெட்டப்படுவதற்குரிய சாத்தியமே ஓங்கியிருந்த நாட்கள்.

'அமு'வில், தன் குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டிருக்கும் ஒருவரைத் தனது உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தல் நிமித்தம் கொலை செய்வதும் அந்தக் குற்றவுணர்ச்சியுடனே வாழ்வதும் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும். மனம் ஒரு காடு. பல இடங்களில் எல்லாம் பின்னிப்பிணைந்து பதுங்குகிறதும் பாய்கிறதுமான மிருகங்களையும் சேர்த்தணைத்த இருளோடிருக்கிறது. ஆனாலும் சில இடங்களில் வெளிச்சம் விழுகிறது. தடங்கள் தெரிகின்றன.

Life Goes On இல் 'நாங்கள் ஓரிரவிலேதான் அவர்களை வெறுக்கத் தொடங்கினோமா? எங்களுடைய அயலவர்களாய் இருந்தவர்கள் அவர்கள். என்னுடைய தோழன் அவன், ஆனால் கலவரத்திலே எங்கள் வீட்டுக்கு தீ வைத்தவர்களில் அவனும் இருந்தான். எங்கள் மனங்களிலுள்ள இருளடைந்த முடிவிலாப் பள்ளத்தை நாங்கள் பார்க்க விரும்புவதில்லை' என்று உரையாடல் வரும்.

அதே படத்தில் காப்பதும் மறைப்பதும் அழிப்பதுமாய் சர்மிளா தாகூரின் பாத்திரம் ஒரு கலவரம்.

பெட்டகம்