மனவருத்தம்

சென்ற கார்த்திகை மாதத்தில் ஒரு நாள் வீட்டுக் கணினியில் வலை மேய ஆயத்தமாகும் போது ( நான் இன்னும் dial-upதான்) திடேரென்று பார்த்தால் ஒரு பிக்கினி அணிந்த பெண்ணின் படம் கணினித் திரையின் வலது மூலையில் வந்திருந்தது. என்னடா இது இவ்வளவு பாதுகாப்பு போட்டிருந்தும் எரிதமாக குறிப்பிட்ட தளத்திற்கான சுழற்றி(dialer) தரவிறக்கியிருக்கிறதே என நொந்து கொண்டே அதை கணினியிலிருந்து நீக்கியிருந்தேன். அப்போது ஒன்றும் பிரச்சனையாக மனதில் தோன்றவில்லை. பிறகு 2- 3 நாடகளில் கணவர் வந்து தான் கணினியில் ஏதொ வேலை செய்து கொண்டிருக்கும் போது நான் மேலே குறிய படியே சுழற்றி தெரிந்ததாயும் தான் அதை நீக்கியதாயும் குறிப்பிட்டார். இப்படியான பாலியல் தளங்களுக்குச் செல்லும் பழக்கமோ தேவையோ எங்களிருவருக்கும் இல்லை.அப்பத்தான் கணவர் சொன்னார் எங்கள் வீட்டிற்கு வந்து தங்கியுள்ள உறவினரின் விளையாட்டாக இருக்குமென்று. நான் நம்பவில்லை..எரிதம் பற்றி,வலையுலாவி அபகரிக்கப்படுவது பற்றி அறிந்திருப்பதால் அப்படியான ஒரு நிகழ்வாக இருக்கலாம் என கணவரிடம் கூறியிருந்தேன்.

தனக்கும் அவை பற்றித் தெரியுமெனவும், தான் உறவினருக்குக்கென்று கொடுத்திருந்த பயனர் பெயருக்குரிய குக்கீஸ் ஐ பார்த்ததாகவும் சொன்னார். அதில் முழுக்கவும் பாலியல் தளங்களே இருந்ததாம். இந்த அண்ணாவின்(இந்த வார்த்தைக்கு தகுதியானவரே இல்லை அவர்!) அறையில் தான் கணினி இருந்தது..ஆகவே நல்ல வசதியாக போய் விட்டது அவருக்கு. எங்கள் சீப்பு,பவுடர்,கிறீம் எல்லாமும் அதே அறைக்குள். ஆகவே இரவில் படுக்க முன்பு கிறீம் போட எடுக்கச் செல்லும் பாசாங்கில் அவரது அறைக் கதவை தட்டி உள் நுழைந்தால் கணினித் திரையில் கடைசிச் சாளரம் குறுகிச் செல்வது தெரியும். நான் அறையிலிருந்து வெளியேறும் வரை வேறு ஒன்றுமே வலை மேய்வதில்லை அவர்.ஏன் வலை தொடர்பை ஏற்படுத்தி வோல்பேப்பரையே பார்க்கிறார் என நானும் கேட்டதில்லை!!

இதற்குப் பிறகு கணவர் அவரிடம் பேசி சில நாட்கள் இல்லாமலிருந்தது. பிறகு இப்போ மீண்டும் தொடங்கியுள்ளது.உறவினரது சொந்த அண்ணனே "இவன் பொறுப்பில்லாதவன்..சரியான சோகுசுப் பேர்வழி" என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். சரியான படிப்புமில்லை.7ம் வகுப்புடன் நிறுத்தியவர். நியூசிலாந்தில் கடந்த 5- 6 ஆண்டுகளாக இருந்தவர். 36 வயதாகிறது. எல்லாருக்கும் திருமணம் செய்து வைத்தீர்கள் ..எனக்கும் செய்து வையுங்கள் என தொல்லை கொடுக்க, அதை தாங்க மாட்டாமல் பெற்றோரும் இந்தியாவில் BCom பட்டதாரியான, 12 வயது குறைந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவ்வளவிலும் நல்ல விஷயம் சீதனம் வாங்காதது. இப்போ இங்கே வந்துள்ளார்.. மனைவி இன்னும் இந்தியாவில்.

சரியான படிப்பில்லாததால் வேலை கிடைக்கவில்லை. ஏதாவது தொழில்சார் கல்வி கற்றுக்கொள் என்ற கணவருக்கு தொண்டை காய்ந்தது தான் மிச்சம். இப்போ இன்னொரு உறவினது கடையில் சில நாட்களும் ஹொட்டேல் ஒன்றில் மிச்ச நாட்களுமாய் வேலை செய்கிறார். மனைவி வந்தால் தேவைப்படும் என சேமிப்பு பழக்கமெல்லாம் கிடையாது. உடற்பயிற்சிக்கு ஜிம்மிற்கு செல்வதும், கடனட்டையில் ப்ரான்ட் பொருட்கள் வாங்குவதுமே பொழுது போக்கு. தொலை பேசி அட்டை இருக்கையில் அதிலும் கதைத்து..இன்னும்.. நேரடி தொடர்பிலும் கதைத்து, வந்த பில் கட்டப்படவில்லை. அப்படி ஒரு தொகையை தொலைபேசிக்கு யாரும் ஒரே மாதத்தில் கட்டி நான் கேள்விப்பட்டதில்லை. கட்டணம கட்டாததால் எங்கள் வீட்டில் தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார்கள். அன்றைக்கு ஒரு நாள் காலை 10 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு வீடு வந்தால் எங்கோ தண்ணிர் சத்தம்..குளியலறையில் கேட்பாரற்று சுடுநீர் ஓடுகிறது..பிற்பாடு விசாரித்ததில் அவர் 1 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டதாய் சொன்னார். ஏன் டென்சன் ஆகுறீங்க?என்று கேட்கிறார்.தொலைபேசிக்கட்டணத்தை எப்படி பெறுவது என்று தெரியவில்லை!!! ஒவ்வொரு நாளும் இரவில் நான் சுத்தம் செய்யும் சமையலறை எப்படி வேலை முடிந்து வீட்டிற்குப் போனால் குப்பையாகிறது என்பது, தெரிந்த ஆனாலும் புரியாத, மாயம்.

அந்தப்பெண் வருவதற்குரிய குடிவரவு வேலைகளை போன மாதம் தான் செய்தார். இவர் வந்ததோ ஒக்டோபரில்.கல்யாணம் எவ்வளவு பொறுப்பான விஷயம் என்பது இவருக்கு விளங்கவில்லை. உடல் தேவைக்காகத் தான் அவசரப்பட்டாரோ என நினைக்கத் தோன்றுகிறது. சேமிப்பொ, முறையான நடத்தையோ, பழக்கவழக்கங்களோ இல்லாத பொறுப்பில்லா மகனென அறிந்தும் திருமணம் செய்து கொடுத்த பெற்றோரை..அறிந்தே ஒரு பெண் வாழ்வில் கை வைத்துள்ள இவர்களை என்ன செய்வது?சரியாக விசாரித்தறியாமல் சீதனம் இல்லாததற்காய் தலையை நீட்டிய அப்பெண்ணின் குடும்பத்தை என்ன சொல்வது??

பெட்டகம்