குப்பை

முன்னிரவில் தொலைபேசுபவர்களே
என் இரவுகளைக் கெடுக்காதீர்கள்
அவை எனக்குச் சொந்தமானவை
உங்கள் கதைகளென் இரவுகளைத் தின்னுகின்றன.

என் காலைகளும் மாலைகளும் அழகானவை.
களவாடாதீர்கள்.
உங்கள் கதைகள் - எங்கும் கொண்டு சேர்க்காத
அந்தப்படிகளில் ஏறிக் களைக்க
எனக்கு நேரமில்லை.
பொழுதுகள் கரைத்து - ஒன்றுமில்லாததைத்
துரத்த நான் வரவில்லை.


ஒரு மாட்டைப் போல அசை போட்டுக் கொள்ள
என்னிடம் கனவுகளும் இனிமையான தருணங்களும்
ஏன் வலிகளும் கூட.

என் பகல்களையும் நான் விரும்புகிறேன்
அவற்றை நிரப்புபவற்றின் பட்டியல்
மிக நீண்டது.
அதில் நீங்களில்லை.
அதனால்
என் பகற்பொழுதைக் கலைக்காதீர்கள்.

உங்கள் கரிசனங்களும் அரைகுறைக் கேள்வி ஞானங்களும்
உண்மையாயிருக்கக் கூடியதாயினுங் கூட உங்கள் அக்கறையும்
வேண்டாம்.
என் இரவுகளையும் என் இயல்புகளையும்
என் நம்பிக்கைகளையும் என் பகல்களையும் தின்பதற்காய்
வேட்டைமிருகங்களாய் அவிழ்க்காதீர்கள்
உங்கள் வார்த்தைகளை.
அவற்றைக் கலைத்துப் போடட்டும்
காற்று.
என்னுலகில் இருக்கிற மனிதரில்
எனக்கின்னும் நம்பிக்கையிருக்கிறது.
இருட்டிலோ வெளிச்சத்திலோ - எவரும்
மனிதர்தான் தேவரில்லை.
கண்ணாமூச்சியாட்டத்தில்
எப்போதும் தட்டுப்பட்டுத் தப்பியோடுகிறது
பிரபஞ்சத்து நியதி.

நான் naive ஆகவே இருந்துவிட்டுப் போகிறேன்.
எனக்கிருக்கிற குழப்பங்கள் போதும் - நான்
குப்பைகள் சேர்க்க விரும்பவில்லை.

குப்பைவண்டி வெள்ளிதான் வரும்.

பெட்டகம்