ஒரு நாள் அமைதி

இன்றைக்கு

Peace One Dayயாம். ஐ.நா சபையினரால் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த நாள் செயல்முறைக்கு வரக் கொஞ்சம் அதிகப்படியான முயற்சி தேவைப்பட்டிருக்கிறது. எப்படி இந்த நாளைப்பற்றிய எண்ணம் வந்தது என்பதிலிருந்து எந்தெந்த நாட்டு / பாதுகாப்பு / கூட்டுறவுச் சபைகளின், சமயத்தலைவர்களை அணுகி, செப்.21 ஐ போர் நிறுத்தங்களுக்குரியதொரு நாளாகக் கொள்வதற்கு முயற்சிக்கப்பட்டது என்பதைப் பற்றியும், இந்த நாளின் முக்கியத்துவம், அது உணர்த்த விழையும் செய்தி என்பதையும் உள்ளடக்கிய ஒரு நிகழ்ச்சியை நேற்றிரவு அரைவாசியிலிருந்து பார்க்கக் கிடைத்தது. ஜெரமி, தனது எண்ணத்தைச் செயற்படுத்தக் கடந்து வந்த பாதையைப் பதிவு செய்திருக்கிறார். அதையே நிகழ்ச்சியாகத் தயாரித்திருந்தார்கள். ஒரு நாளைக்குப் போர் நிறுத்தமென்பது உணவு, மருத்துவ உதவி, தகவல், ஏனைய உதவிகள்/தேவைகள் போன்றவற்றைப் பெறுவதிலும் பகிர்வதிலும் அளப்பரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

2001ம் ஆண்டு செப். 11ம் திகதி நியூயோர்க்கிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் சமாதான மணியடித்து கோஃபி அனான் இந்த நாளைப்பற்றிப் பேசுவதாக இருந்த நேரத்திலே உலக வர்த்தக மையக் கட்டடங்களின் மீதான தாக்குதலால் அந்நிகழ்வு தள்ளிப்போடப்பட்டது. ஐ.நா சபையின் அங்கீகாரம் பெற்று இப்போது ஒரு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எல்லா நாடுகளுமல்ல. கடைப்பிடிக்கும் நாடுகளில் எல்லா அரசாங்கங்களுமல்ல. ஆனாலும் அரசு சாரா நிறுவனங்கள் (NGO), மாணவர் முன்னணிகள், மதக்குழுக்கள் போன்றோரால் இந்த "ஒருநாள் போர்நிறுத்தம்" பற்றிய விழிப்புணர்வு பரப்பப்படுகிறது. இவர்களின் நோக்கம் யுத்தத்தின் மூலம், வன்முறையின் மூலமன்றி வேறு வழியாலும் அமைதியைப் பெறலாம், நிலைநிறுத்தலாம் என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்லுதல். நம் சிறு பங்குக்கு, இந்த நாளைக் குறித்து நாம் என்ன செய்யலாம்?

பெட்டகம்