கேட்டிருந்தால் பதில் என்னவாயிருந்திருக்கக் கூடும்?


வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் (எடுக்கிற வழியைப் பொறுத்து) 17-19கிமீ தூரம்தான். ஆனால் போக எடுக்கிற நேரமோ 25-60 நிமிசம் வரை வரும் - புறப்படும் நேரத்தைப் பொறுத்தது (கூடவே சமிக்ஞை விளக்குகளையும்) . காலையிலே 7.20க்கு முன்னரே வெளிக்கிட்டால் நேரத்தையும் எரிபொருளையும் வீணாக்காமல் அரை மணித்தியாலத்துக்குள் வேலைக்குப் போய் விடலாம். இதில் வாகனம் பறக்கும் வகையைச் சாரும். 7.20-7.45 என்றால் 40 நிமிடம். நடப்பன. அதுக்குப் பிறகென்றால் ஊர்வன தான். அதுவும் நத்தை வென்றுவிடும். எப்பிடியென்றாலும் ஏபிசி செவ்வியல் பண்பலை (நன்றி பிரபா) தான் கூட வருவது. அலட்டலில்லாது விளம்பரங்களில்லாது இசை மட்டுமே. எமா எயர்ஸ் தான் நிகழ்ச்சித் தொகுப்பாளர். பின்னேரம் வீடு வரும் போது ஜுலியா லெஸ்டர் வானலை வழியே கூட வருவா.

இப்படி இசை பொழிய, காட்சிகள் கண் நிறைக்க வாகனத்தோட சேர்ந்து மனதில் சில எண்ணங்களும்  ஓடிக் கொண்டிருக்கும். அப்பிடி இன்றைக்கு உறைச்சதுதான் பதிவுக்குக் காரணம்.

மற்ற மதங்களில் திருமணச் சடங்குகள் பற்றித் தெரியவில்லை. இந்து முறைப்படி திருமணம் நடக்கையில் ஒருவேளை பெற்றோரில் ஒருவரே மணமக்களுக்கு (பிரிந்தோ இறந்தோ திருமணத்திற்குச் சமுகமளிக்க முடியா நிலையிலோ) இருக்கும் பட்சத்தில் ஏன் வேறொரு தம்பதியரை 'கன்னிகாதானம்' செய்யவோ 'தானத்தை'ப் பெறவோ ஒழுங்கு செய்ய வேண்டி வருகிறது? பிள்ளையை வளர்த்த அம்மா/அப்பா தனியாளாய் இந்தச் சடங்கினைச் செய்தால் என்ன? ஏன் செய்வதில்லை அல்லது செய்ய அனுமதிக்கப்படுவதில்லை?

அப்பா இல்லாத காரணத்தால் எனது திருமணத்தில் அண்ணா/அண்ணி செய்தனர். அவர்கள் செய்ததில் ஒரு குறையுமேயில்லை. நான் அவரிடம்  நேரடியாகவோ அல்லது அம்மாவிடமோ (சரியாக யாரிடமென நினைவில்லை) அண்ணா செய்வது விருப்பம் என்று சொன்ன ஞாபகம். நான் அம்மாவைக் கேட்கவே இல்லை.  கேட்கத் தோன்றவே இல்லை. அதுதான் குறுகுறுக்கிறது. பெரியவர்களும் கேட்டிருப்பார்களா என்பது சந்தேகமே. விதவை, அதனால் திருமணச் சடங்கில் பங்கு பெறுவதற்கில்லை என்று நடைமுறை வாழ்க்கையில் நூற்றாண்டுக் காலமாய் கற்பிக்கப்பட்டு விட்டது. அதுவே இயல்பாகத் தோன்றியிருக்கிறது. அதனாலேயே நான் கேட்கவில்லை. அம்மாவைச் செய்யச் சொல்லி (குறைந்த பட்சம் கேட்டாவது) இருந்திருக்கலாமே என்று இப்ப தோன்றுகிறது. அப்ப சிந்திக்கவே இல்லை. அம்மா சடங்குகளில் கலந்து கொண்டதாய் நினைத்துப் பார்க்க, ஏன் அம்மாவும் எம்மியும் சேர்ந்து திருமணச் சடங்குகளைச் செய்திருந்தால் என்று நினைக்க நல்லாய்த் தான் இருக்கிறது.

கேட்டிருந்தாலும் அம்மா ஒத்துக் கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே எனத் தோன்றுகிறது. ஆனாலும் அம்மாவின் மறுப்பு காலங்காலமாக விதவைகளின் மீது சுமத்தப்பட்ட புறக்கணிப்பில் வேரூன்றியதாய் ஊரையும் அதன் பேச்சையும் குறித்துத் தேவையேயற்ற யோசனையில் முளைவிட்டதாய்த்தான்  இருந்திருக்கும். அப்படி இல்லாமல், எங்கேயாவது யாராவது ஒரு அம்மாவோ ஒரு அப்பாவோ தனியாளாய் இருந்தாலும்  பிள்ளையின் திருமணச் சடங்குகளினை நிறைவேற்றினால் எத்தனை பொருத்தமாய் அழகானதாய் இருக்கும். நடந்திருக்கிறது/நடக்கிறது/நடக்கும் என்று உறுதியாய் நம்புகிறேன்.

நேர அட்டவணையைக் காலம் போட, அதற்கேற்ப வாழ்க்கை பாடத்தை நடத்துகிறது.

கலவரக் காடு


இது நீண்ட வார இறுதி. திரைப்படஙளுக்கென்றே வாய்த்தது போல இருக்கிறது. வெள்ளி பார்த்தது, இந்திப்படமொன்று. 'பாக் மில்க்கா பாக்'. அதற்குப் பிறகு, வித்யா பாலனின் படமென்று 'ஷாதி கி சைட் இபெக்ட்ஸ்' பார்க்கத் தொடங்கி வில்லங்கத்திற்குப் பார்த்து முடித்த பிறகு கண்ணில் பட்டதொரு படம். 'அமு'. அம்ரித் எனும் பெயரின் சுருக்கம். அம்முக்களெல்லாம் தெரிந்துதானா பெயர் சூட்டப்படுகிறார்கள்?

அதற்கடுத்துப் பார்த்தது, 'Life Goes On'.

அமு மற்றும் Life goes on இல் கொஞ்சம் செயற்கையாக நடிப்பு இருந்தாலும் கதைக் களனால் கவர்ந்தன. அமுவில் கொங்கனா சென் சர்மா. ஒரு வரியில் சொல்வதானால், தன் பெற்றோரைத் தேடும் ஒரு இளம்பெண் தான் அமுவின் கதை. மற்றதில் திடீரென குடும்பத்தலைவி இறந்தவுடன் குடும்பத்தினரின் தடுமாற்றங்கள். வங்காளக் கவிதை வரிகள் கொண்டு இறந்தவரின் நினைவைக் கொண்டு வந்த விதம் அழகு. இரண்டு படங்களிலும், பாக் மில்க்கா பாக் இலும் கலவரமும் வன்முறையும் வந்து போகின்றன.

பதிவு இருக்கிறது நனவிடை தோய்ஞ்சு தலை துவட்டாம சளி பிடிச்சதைச் சொல்லத்தானே.. நான் கலவரத்தைப் பற்றி என்ட அனுபவங்களை யோசித்தேன். 83 கலவரம் ஞாபகம் வந்தது. மாமி & குடும்பம் எங்களோட வந்து இருந்தது ஞாபகம். ஆனா ஓடுப்பட்டுத் திரியாததால எனக்கு அதின்ட தாக்கம் தெரியவில்லை. ஏறாவூரில் நிறையச் சிங்களவர்கள் இருந்தார்கள். 87 என்டு நினைக்கிறேன். பல சிங்களவ்ர்கள் வெட்டி, சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். பயத்திலே, என்னதான் ஊர் வைத்தியரா இருந்தாலும் அம்மாவை மீறி என்னவும் நடந்து விட்டாலும் என்று நினைத்து எம்மியை வெட்டுப்படாமலும் சுடுபடாமலும் தப்பியிருந்த மற்றச் சிங்களவர்களுடன் சேர்த்து அலிகார் பள்ளிக்கூடத்தில் தங்கவைத்தோம். எம்மியைப் போய்ப் பார்த்து வந்த ஞாபகமிருக்கிறது. பிறகு எம்மி வீட்ட வந்து விட்டா. பயம் கிளம்புகிற அளவில் வித்தியாசமிருக்கிறது என்று மனதில் அப்பத்தான் பதிந்திருக்க வேண்டும்.

அதற்குப் பிறகு 90ம் ஆண்டு. யாரும் யாரையும் நம்புவதாக இல்லை. ஊருக்கே பாலர் பாடசாலை நடத்தின ரீச்சரிட வீடு எரிந்து போய்க் கிடந்தது, மாமா அழுது நான் பார்த்த இரண்டு தரங்களில் அது முதலாவது. அங்கே இங்கேயென்டு இடம் மாறி கடைசியாகக் கொழும்பு வந்தோம். அம்மா மட்டக்களப்பில் இருந்தா. அம்மா மட்டக்களப்பிலிருந்து திரும்பவும் ஏறாவூருக்குப் போனதொரு நேரம் ஒராள் அம்மாட கையை பிடித்து 'ஐயோ என்ட சீதேவி, உங்கள வெட்டின என்டு சொன்னானுகளே' என்டு அழுததும் எங்களுக்கு வந்து சேர்ந்தது. ஒருசேர அம்மா மீது ஊர் கொண்டிருந்த அன்பிற்கும் ஊரைப் பிடித்திருந்த கலவரப் பிசாசிற்குமான உதாரணம். எத்தனை அன்பிருந்தும் மரியாதையிருந்தும் வெட்டப்படுவதற்குரிய சாத்தியமே ஓங்கியிருந்த நாட்கள்.

'அமு'வில், தன் குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டிருக்கும் ஒருவரைத் தனது உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தல் நிமித்தம் கொலை செய்வதும் அந்தக் குற்றவுணர்ச்சியுடனே வாழ்வதும் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும். மனம் ஒரு காடு. பல இடங்களில் எல்லாம் பின்னிப்பிணைந்து பதுங்குகிறதும் பாய்கிறதுமான மிருகங்களையும் சேர்த்தணைத்த இருளோடிருக்கிறது. ஆனாலும் சில இடங்களில் வெளிச்சம் விழுகிறது. தடங்கள் தெரிகின்றன.

Life Goes On இல் 'நாங்கள் ஓரிரவிலேதான் அவர்களை வெறுக்கத் தொடங்கினோமா? எங்களுடைய அயலவர்களாய் இருந்தவர்கள் அவர்கள். என்னுடைய தோழன் அவன், ஆனால் கலவரத்திலே எங்கள் வீட்டுக்கு தீ வைத்தவர்களில் அவனும் இருந்தான். எங்கள் மனங்களிலுள்ள இருளடைந்த முடிவிலாப் பள்ளத்தை நாங்கள் பார்க்க விரும்புவதில்லை' என்று உரையாடல் வரும்.

அதே படத்தில் காப்பதும் மறைப்பதும் அழிப்பதுமாய் சர்மிளா தாகூரின் பாத்திரம் ஒரு கலவரம்.

பெட்டகம்