பொற்பூ


ஒருத்தி இருக்கிறாள். பூவொன்று அவள் பெயர் கொண்டது. ஒரே ஒரு முறை சந்தித்திருக்கிறேன். 2012இன் மார்கழி மாதத்தில். அவளையும் அவளது அம்மாவையும் சந்திப்பது அதுவே முதல்முறை ஆனாலும் நெடு நாள் பழகியது போல உணர்ந்தேன். பெரியவர்கள் இருவரும் பேசி முடித்துக் கிளம்பும் போது 'அப்பாடா' என்று என்றாள். அவளுக்கு அலுப்படித்திருக்கிறது. ஆனாலும் பொறுத்துக் கொண்டு இருந்திருக்கிறாள். அழகாய் ஒரு ஊதா நிறச் சட்டை அணிந்திருந்தாள்.

அவளைப் பற்றி சின்ன சின்ன வெளிச்சத் திட்டுகளாய் அறியக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். இந்த வருடத்து இலையுதிர் காலத்தில் அப்படித் தெரிய வந்ததொன்று அவள் பூவிதழ் சேர்ப்பவளென்பதும். வெளியூரிலிருந்து பயணத்தின் பின் ஞாபகத்திற்காய் பொருளுள்ளவையைக் கொண்டு ஊர் திரும்புபவளாய் குடும்பத்தில் அவள் மட்டும்தான்.  செடி வேண்டாமென்று உதிர்த்த பூவிதழ்களும் மலை தூக்கிப் போட்ட சிறு கற்களும் மரத்திடமிருந்து விடை பெற்ற சருகுகளும் அவளது பொக்கிஷங்கள்.

அவளைச் சந்திக்கிற சந்தர்ப்பம் மீண்டும் வாய்த்தது. அவளுக்குத் தக்கதாக அவள் விரும்பக்கூடியதாக என்ன இருக்கும் என்று யோசித்த போது கையுயர்த்தின சிட்னியின் குளிர்காலத்து ஆடி மாதத்துத் தெளிந்த நீல வானில் பறந்த வண்ணக் கொடிகள். இலையுதிர்காலம் முடிந்த பிறகும் வழமையிலும் கொஞ்சம் பிந்தி மரத்தோடு தங்கியிருந்த வண்ண வண்ண இலைகள். அதைத்தவிர பொருத்தமாக வேறெதையும் அவளுடன் பகிர முடியாதென்று தோன்றியது. சிட்னிக்கென்றே தனி  வெளிச்சமிருக்கிறது. அதன் வானத்து நீலமும் தனி அழகானது. மரங்கள் எப்போதும் இனியவை.  குளிரோடு முகிலற்ற வானத்தையும் நிறம் மாறிய இலைகள் கொண்ட மரங்களையும் அனுபவித்துத்  தீராது . இலையுதிர்காலமும் குளிர்காலமும் அத்தனை அழகு.  பசிய இலைகள் நிறம் மாற மஞ்சளிலிருந்து கருஞ்சிவப்பு வரை இயற்கை தீட்டிய ஓவியம். பயணத்திற்கு நான்கு வாரங்கள் இருக்கத் தக்கதாகவே இலைகளைப் பறித்தும் பொறுக்கியும் சேகரித்தேன். பறிக்கும் போது மரங்களிடம் இது ஒரு சின்னப் பெண்ணுக்கு என்று மனதுக்குள்ளாகச் சொல்லிக் கொண்டது நினைவிருக்கிறது. பயணத் திகதிக்குக் கிட்டவாக இலைகள் இருக்காதென்று நினைத்தே சேர்த்தேன். எத்தனையோ இடங்களில் நாம் அப்படித்தான், இல்லையா? பற்றாதோ அற்றோ போய்விடும் என்று முட்டி மோதுகிறோம். உலர்ந்த காற்று நிறம் மாறாமல் என் ரோசா மொட்டுக்களை ஒரு பெட்டியில் வைத்திருக்க உதவுகிறது. அப்படித்தான் இலைகளும் இருக்குமென்று நினைத்தேன். இரண்டு வாரங்களில் பெரும்பாலானவை நிறம் மாறி விட்டன. நானும் பத்திரமாகப் புத்தகமொன்றுக்குள்ளும் வைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து நிறம் பூசிய இலைகள் மரங்களிலிருந்தன. என்னைப் பார்த்து என் நம்பிக்கையீனத்தைப் பழித்துச் சிரிப்பதற்காய்.

பயணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் போனேன். என்னோடு வேலை செய்யும் தோழியும் கூடவே வந்து இலை சேர்த்தார். இவற்றைக் கவனமாக பயணத்தில் வாசிக்கவென்றிருந்த புத்தகத்துக்குள் வைத்துக் கொண்டேன். அந்தப்பெண்ணை நான் காணும் நாள் வந்தது ஒரு வாரம் கழித்து. அவள் வரவில்லை. அவளது அம்மாவும் நானும் காலம் தூசியை படிவித்திருந்த தெருக்களில் நடந்தோம். இளங்காற்று வீச ஒரு குளத்தருகே இலைகளை அவரது பைக்குள்ளிருந்த ஒரு புத்தகத்துக்குள் இடம் மாற்றினோம். அவரவர் வழி சென்றோம்.

திரும்ப சிட்னி வந்து இரண்டு மாதமிருக்கும். மரங்கள் பற்றிய தன் ஒப்படைக்கு சிட்னியிலிருந்து அவளைப் பார்க்கச் சென்ற இலைகளைப்  பயன்படுத்தியிருந்தாள் என்று அவளது அம்மா படங்கள் அனுப்பியிருந்தார். ஒரு மேப்பிள் இலைக்கருகில் ஓக்  என்ற தலைப்பிட்டு ஓர் இலை கொண்ட படம் கண்டேன். அது வரை நானறிந்த ஓக் மரத்திலை படத்தில் கண்டதை விட சற்று வேறானது. எல்லாம் அறிந்தவர் போல அது ஓக் அல்லவென்று செய்தி அனுப்பினேன். அப்படித்தான் அந்த இலையின் பெயரென்று அறிந்த கதை சொன்னார் அந்தத் தோழி. ஓக் அல்லதென்றால் என்ன இலையென்று அறிந்து சொல்லச் சொன்னார். வர்ணனையில் கூகிளினால் பலன் கிடைக்கவில்லை. இலை சேர்க்க உதவினவரே இதற்கும் துணை வந்தார். சில்க்கி ஓக் (Silky Oak) என்று பெயர் சொன்னார் . எனக்கு அப்படியொரு மரத்தைத் தெரிந்திருக்கவில்லை. வேலைகளுக்கு நடுவில் அதைப் பற்றி தோழிக்கு ஒரு வரி சொன்னதோடு சரி. அடுத்தடுத்த நாட்களில் வேலையிலிருந்து வீடு செல்லும் பயணத்தை அந்த வேலைத்தலத் தோழியோடு பகிர்ந்து கொண்டேன். ஏதேதோ பேசிக் கொண்டு வந்தோம். திடீரென்று ஒரு மரத்தைக் காட்டிச் சொன்னார் அதுதான் உனக்குச் சொன்ன மரம் என்று. நான் திகைத்துப் போனேன். சிட்னியில் வந்திறங்கிய காலம் தொட்டு எனக்கு மிகவும் பிடித்த ஒரு மரம். உயர்ந்த பெருமரம். கரும்பச்சை இலைகள் கொண்டது. பூத்தால் இலை தெரியாது. அதன் பூக்களோ பொன். பெயரறிய நான் முயற்சித்ததே இல்லை. இலைகளைக் கவனித்ததும் கிடையாது என்றே தோன்றுகிறது. வெட்கமாய் இருந்தது. பிரியமாய் இருக்கும் சிலரைப் பற்றி அந்த அன்பே போதுமென்று நினைத்து அறியாமல் போவது போல இருந்தது. இன்னுமொரு நாள் அவரோடு பயணித்தேன். அம்மரங்கள் குறைந்து விட்டன  போலத் தோன்றுகிறது என்று அவர் சொன்னார். எத்தனை காண்கிறோமென எண்ணினோம். வேலையிலிருந்து வீடு செல்லும் வரை நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள். அதோ அதோ என்று போட்டி போட்டுக் கொண்டு எண்ணினோம். அம்மரங்களைப் பற்றிப் பேசித் தீரவில்லை எங்களுக்கு. பொற்பூ பூத்து பொற்துகள் சொரிபவை. மாலை வெயிலில் உருக்கி வார்த்த பொன்னாய் மரம் முழுதும் சூடிச் சிரித்தபடி அன்பே உருவாய்.

இலையுதிர்காலத்து வண்ணங்கள் என்னிடம் கொண்டு வந்து சேர்த்த வசந்த காலத்து ஓவியம். அதை அனுப்பிய, பூவின் பெயர் கொண்டவளுக்கு  என் அன்பு. பூவின் பூவாகிய அவளது அம்மாவுக்கும்.

அதுசரி, பூக்கள் அழகன்றி வேறெந்தத் தருணங்களைத் தரக்கூடும்?

ஏழே சுரமா?.. இன்னும் இருக்கா?


நான் ஐந்தாம் ஆண்டு படிக்கும் போது, வெள்ளைக் கலையுடுத்து  விபுலானந்தாக் கல்லூரிக்குப் படிக்கப் போய், தானும் படிச்சுக் கொண்டு எங்களுக்கும் வீணை படிப்பிச்சா வாசி அக்கா (வீணை வாசிச்சதால அந்தப் பெயரில்லை. வாசுகி, மருவி வாசி ஆகிவிட்டது). அதுதான் கர்நாடக சங்கீதம் என்று அறிமுகமானது. வீட்டில பெரியண்ணர் மேகமே மேகமே என்டு தமிழ்ப்பாட்டுப் போடுவார். சின்னண்ணர் இங்கிலிசில பாட்டுப் போடுவார். இரண்டாமாள்தான் எனக்கு மைக்கல் ஜக்சனையும் நுஸ்ரத் படே அலி கானையும் காட்டிவிட்டவர். அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் நிற்கட்டும். என்னண்டு உலகம் ஒரு பொசிபிள் சங்கீத பூஷணத்தை இழந்ததெண்டு சொல்லுறன். 

ஆறாமாண்டு படிக்கும் போது இசை, நடனம், சித்திரம் என்டு பிரிப்பார்கள். முதல்ல எல்லாரும் சங்கீதம் (மேனாட்டு, கர்நாடகம் என்டு அதுக்குள்ளே 2 வகை. பள்ளிக்கூடத்தைப் பொறுத்து இரண்டுமோ அல்லது ஒன்றோ இருக்கும்). பிள்ளைகள் முதல்ல சங்கீதம் என்டு போறது. ஆசிரியை பாடச் சொல்லிப் பார்த்து தனக்கு தொண்டைத்தண்ணி வத்தாத அளவில உள்ள பிள்ளைகள் வடிகட்டிட்டு மிச்சங்களை நடன வகுப்புக்கு அனுப்ப, அவவும் வடிகட்டிட்டு சித்திரத்துக்கு அனுப்பி விடுவா. நடனத்தும் சித்திரத்துக்கும் விரும்பியே போற ஆட்களுமுண்டு. சங்கீதம் தன்னட்டப் படிக்கிற தைரியத்திலயோ என்னவோ என்னட்ட வாசியக்கா சொன்னா சங்கீதத்துக்குப் போகச் சொல்லி. நானும் போனன். பாடினன். ஆசிரியை எனக்குச் சங்கீதம் வராது என்டு சொல்லி அனுப்பிவிட்டா. அது உண்மையா இல்லையா எண்டு தெரியாது, ஆனாலும் பாட வராது என்று மனதில பதிந்து விட்டது. வந்து வீணை வாத்திச்சிட்ட சொன்னா அவவிட அம்மா , எங்கட ஊருக்கே பாலர் வகுப்பு எடுத்தவக்கு கோவம் வந்திட்டு. அதென்னண்டு, நீ சளியோட போய் பாடினனியா என்டு கேட்டா!! பிறகு அபிநயம் கொஞ்ச நாள் பிடிச்சு பிறகு கொழும்பு வந்ததும் சித்திரத்துக்கு மாறி திட்டித்திட்டி சோமசுந்தரப் புலவரிட பேத்திட்ட பள்ளிக்கூடத்தில படிச்சு ஒரு சி ஐயும் சித்திரத்துக்கு எடுத்தாச்சு.

பதின்ம வயசில கிடைச்சார்கள் சசி அண்ணாவும் சியாமாண்ணாவும். இசையமைப்பார்கள், பள்ளிக்கூட கலைவிழாக்களில் கலக்குவார்கள். அவருக்கெல்லாம் பாட்டு எழுதிக் குடுத்திருக்கிறமாக்கும்! இப்பவும் ஞாபகமிருக்கு, ஒரு முறை எதோ பாடிக் காட்டச் சொன்னார். நான் சொன்னன் எனக்குப் பாட வராது என்டு. ஏன் சொன்னார், உண்மையாத்தான் சொன்னாரா என்டெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, அலெறிக்ஸ் ஐஸ்கிறீம் கடைக்குப் பக்கத்திலே இருந்த ஷகியின் வீட்டில் நாங்க இருந்த மேசையில் பின்னேர வெயில் விழுந்து கொண்டிருந்த நேரம் சியாமாண்ணா சொன்னார் "everyone can sing".

சிட்னி வந்ததும் வீணையைத் தொடங்கினேன். தொடங்கினேன் என்பதற்குப் பன்மை இருந்தால் அதைச் சொல்லுவது தான் இங்கே பொருத்தமாயிருக்கும். அப்பதான் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க அறிந்து கொண்டேன். பாட வராது. அதன் நுணுக்க அழகுகள் விளங்காது. ஆனாலும் பிடிக்கும். அருணா சாய்ராமும் பொம்பே ஜெயசிறியும் என்னோடு எங்கேயும் வந்தார்கள். வருகிறார்கள். கொஞ்ச நாளைக்கொரு தரம் கேட்கிற பாடல்களின் வகைகள் மாறும். முழு கர்நாடக சங்கீதத்திலிருந்து தனி வாத்தியம் போய் நாட்டியத்துக்கான பாடல் வகைளுக்குள் தாவி நாடு தாண்டி மொழி தாண்டி அறியாத இடமெல்லாம் போய், திரும்பவும் பழகியதொன்றிடமே வாரங்கள்/மாதங்கள் கழித்து வந்து சேர்வேன். சில நாட்களை ஒரே பாடலே நிறைத்ததுமுண்டு.அது எல்லாருக்கும் உள்ள அனுபவந்தானே!

முதுநிலை ஆய்வு செய்கிறா என்று பகிடி பண்ணுமளவுக்கு நான் மூஞ்சிப் புத்தகத்தில் குடியிருந்த காலம் அது. ஒரு நாள், நாலு வருசமிருக்கும், சியாமாண்ணா ஒரு பாட்டைப் பகிர்ந்திருந்தார். பாட்டைப் போய்ப் பார்த்தவள்தான். இன்னும் அவ்வகையில் சந்தோசமாகச் சிக்கிக் கிடக்கிறேன். அது பாகிஸ்தான் கோக்ஸ்டூடியோ (CokeStudio)பாட்டு. இசைத் திறமையை வெளிக் கொண்டு வர என்று கோககோலா நிறுவன ஆதரவில் நடக்கிற நிகழ்ச்சி. பார்த்ததும் அதிலிருந்த அத்தனையும் என்னை ஈர்த்தது. அதைப்பார்த்ததும் இந்தியாவின் கோக்ஸ்டூடியோ தேடிப் பார்த்தேன். இசையிருந்தது. திறமையிருந்தது. என்றாலும் ஏதோ ஒன்று குறைவது போல உணர்ந்தேன். ஒரு வித செயற்கைத் தன்மை நிகழ்ச்சி  முழுவதும் விரவிக்கிடந்தது என்னை அதிகம் ஈர்க்கவில்லை. பாக் இசைத்திருந்த விதம் வித்தியாசமாயிருந்தது. நாட்டுப்புற, சூபி, நாடோடிகள் மற்றும் தொழிலாளர்கள் பாடல்களோடு அன்றாட வாழ்வியல் சொல்லும் பாடல்களும் கொண்டதாக இருந்தது. கர்நாடக இசையை 'morning raga' படத்தில் காட்டுவது போல ஒரு கலவை. இளந்தலைமுறையை ஈர்ப்பதற்காய் இருக்கலாம் அவர்கள் இந்த கலவை முறையை தேர்ந்தது. சரி இதிலென்ன என்கிறீர்களா, அப்பாடலை வழ்மையாகப் பாடும் ஆட்களையும், அவர்களது ஆடை ஆபரணங்கள் அவர்கள் பாவிக்கிற வாத்தியங்களையும் சேர்த்துக் காட்டியிருப்பார்கள். செவிக்கும் கண்ணுக்கும் ஒரு சேர விருந்து. சாப்பாடு என்டு கடைக்கு ஒரு ஆள் போக அவர் எதிர்பார்த்த வழமையான சாப்பாடாய் இல்லாமல் விதம் விதமாய் இருந்தால் அவருக்கு எப்படி இருக்கும். அப்படி இருக்கிறது எனக்கு கோக் ஸ்டூடியோ. பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். பாடலின் பொருள் கூட பலவற்றிற்குக் கிடைக்கிறது. உண்மையான விருந்துதான். பாட்டுகளிலும் அதனைப் பாடுபவர்களின் தோற்றத்திலும் அவர்தம் உடை, ஆபரணங்களிலும் தான் எத்தனையெத்தனை நுணுக்கங்கள் வித்தியாசங்கள். இத்தனையும் ஒரே நாட்டுக்குள்!!! நிலத்திலுள்ள விரிப்புகளை அருகில் காட்டுகிறார்களில்லை என்ற குறைதான் எனக்கு. பழங்காலத்திலே பாவித்த நரம்பு, தோல், காற்று, கொட்டு வாத்தியங்களென்று கூடப் பார்க்க முடிகிறது. உண்மையில் வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறது கோக்ஸ்டூடியோ.

அண்ணா பகிர்ந்தது ஜுக்னி. பாட்டில் ஆரிவ் லோகரின் உசாரோடு சேர்ந்து மீஷாவின் சிரிப்பு அள்ள்ளிக் கொண்டு போகும். 4ம் நிமிடத்தில் இரு வேறு தருணங்களில் வருவது, சேர்ந்து முத்துக்குளித்து அனுபவத்தைப் பகிரும் சந்தோசம். 07ம் நிமிடம் 47ம் நொடியில் மீஷா சிரிப்பார் பாருங்கள்.. அகிலன் கச்சேரியில் கஜனைப் பார்த்துப் புன்னகைப்பது பற்றிப் படலைக்காரர் சொல்லும் போது எனக்கு இதுதான் ஞாபகம் வரும். அடுத்து என்ன விளையாட்டெல்லாம் வரப்போகுது என்டு தெரிந்த ஒரு சிரிப்பு. இந்தப்பாட்டு ஒரு உதாரணம்தான். இதோட சேர்த்து piano guys என்று தேடி, ஒரு பியானோவும் ஒரு செலோவும் எங்கெல்லாம் போய் வருகின்றன எப்படியெல்லாம் நம்மை மயக்குகின்றன என்று பாருங்கள்.

சியாமாண்ணா சொன்ன 'எல்லாராலும் பாட முடியும்' என்பதற்கு அவர் சொன்ன சந்தர்ப்பத்தினையும் தாண்டிய பொருள் இன்றைக்கு எனக்குத் தெரியும். எல்லாருக்கும் பாட வரும். எல்லாருக்கும் பாட்டும் இருக்கிறது.   

கேட்டிருந்தால் பதில் என்னவாயிருந்திருக்கக் கூடும்?


வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் (எடுக்கிற வழியைப் பொறுத்து) 17-19கிமீ தூரம்தான். ஆனால் போக எடுக்கிற நேரமோ 25-60 நிமிசம் வரை வரும் - புறப்படும் நேரத்தைப் பொறுத்தது (கூடவே சமிக்ஞை விளக்குகளையும்) . காலையிலே 7.20க்கு முன்னரே வெளிக்கிட்டால் நேரத்தையும் எரிபொருளையும் வீணாக்காமல் அரை மணித்தியாலத்துக்குள் வேலைக்குப் போய் விடலாம். இதில் வாகனம் பறக்கும் வகையைச் சாரும். 7.20-7.45 என்றால் 40 நிமிடம். நடப்பன. அதுக்குப் பிறகென்றால் ஊர்வன தான். அதுவும் நத்தை வென்றுவிடும். எப்பிடியென்றாலும் ஏபிசி செவ்வியல் பண்பலை (நன்றி பிரபா) தான் கூட வருவது. அலட்டலில்லாது விளம்பரங்களில்லாது இசை மட்டுமே. எமா எயர்ஸ் தான் நிகழ்ச்சித் தொகுப்பாளர். பின்னேரம் வீடு வரும் போது ஜுலியா லெஸ்டர் வானலை வழியே கூட வருவா.

இப்படி இசை பொழிய, காட்சிகள் கண் நிறைக்க வாகனத்தோட சேர்ந்து மனதில் சில எண்ணங்களும்  ஓடிக் கொண்டிருக்கும். அப்பிடி இன்றைக்கு உறைச்சதுதான் பதிவுக்குக் காரணம்.

மற்ற மதங்களில் திருமணச் சடங்குகள் பற்றித் தெரியவில்லை. இந்து முறைப்படி திருமணம் நடக்கையில் ஒருவேளை பெற்றோரில் ஒருவரே மணமக்களுக்கு (பிரிந்தோ இறந்தோ திருமணத்திற்குச் சமுகமளிக்க முடியா நிலையிலோ) இருக்கும் பட்சத்தில் ஏன் வேறொரு தம்பதியரை 'கன்னிகாதானம்' செய்யவோ 'தானத்தை'ப் பெறவோ ஒழுங்கு செய்ய வேண்டி வருகிறது? பிள்ளையை வளர்த்த அம்மா/அப்பா தனியாளாய் இந்தச் சடங்கினைச் செய்தால் என்ன? ஏன் செய்வதில்லை அல்லது செய்ய அனுமதிக்கப்படுவதில்லை?

அப்பா இல்லாத காரணத்தால் எனது திருமணத்தில் அண்ணா/அண்ணி செய்தனர். அவர்கள் செய்ததில் ஒரு குறையுமேயில்லை. நான் அவரிடம்  நேரடியாகவோ அல்லது அம்மாவிடமோ (சரியாக யாரிடமென நினைவில்லை) அண்ணா செய்வது விருப்பம் என்று சொன்ன ஞாபகம். நான் அம்மாவைக் கேட்கவே இல்லை.  கேட்கத் தோன்றவே இல்லை. அதுதான் குறுகுறுக்கிறது. பெரியவர்களும் கேட்டிருப்பார்களா என்பது சந்தேகமே. விதவை, அதனால் திருமணச் சடங்கில் பங்கு பெறுவதற்கில்லை என்று நடைமுறை வாழ்க்கையில் நூற்றாண்டுக் காலமாய் கற்பிக்கப்பட்டு விட்டது. அதுவே இயல்பாகத் தோன்றியிருக்கிறது. அதனாலேயே நான் கேட்கவில்லை. அம்மாவைச் செய்யச் சொல்லி (குறைந்த பட்சம் கேட்டாவது) இருந்திருக்கலாமே என்று இப்ப தோன்றுகிறது. அப்ப சிந்திக்கவே இல்லை. அம்மா சடங்குகளில் கலந்து கொண்டதாய் நினைத்துப் பார்க்க, ஏன் அம்மாவும் எம்மியும் சேர்ந்து திருமணச் சடங்குகளைச் செய்திருந்தால் என்று நினைக்க நல்லாய்த் தான் இருக்கிறது.

கேட்டிருந்தாலும் அம்மா ஒத்துக் கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே எனத் தோன்றுகிறது. ஆனாலும் அம்மாவின் மறுப்பு காலங்காலமாக விதவைகளின் மீது சுமத்தப்பட்ட புறக்கணிப்பில் வேரூன்றியதாய் ஊரையும் அதன் பேச்சையும் குறித்துத் தேவையேயற்ற யோசனையில் முளைவிட்டதாய்த்தான்  இருந்திருக்கும். அப்படி இல்லாமல், எங்கேயாவது யாராவது ஒரு அம்மாவோ ஒரு அப்பாவோ தனியாளாய் இருந்தாலும்  பிள்ளையின் திருமணச் சடங்குகளினை நிறைவேற்றினால் எத்தனை பொருத்தமாய் அழகானதாய் இருக்கும். நடந்திருக்கிறது/நடக்கிறது/நடக்கும் என்று உறுதியாய் நம்புகிறேன்.

நேர அட்டவணையைக் காலம் போட, அதற்கேற்ப வாழ்க்கை பாடத்தை நடத்துகிறது.

கலவரக் காடு


இது நீண்ட வார இறுதி. திரைப்படஙளுக்கென்றே வாய்த்தது போல இருக்கிறது. வெள்ளி பார்த்தது, இந்திப்படமொன்று. 'பாக் மில்க்கா பாக்'. அதற்குப் பிறகு, வித்யா பாலனின் படமென்று 'ஷாதி கி சைட் இபெக்ட்ஸ்' பார்க்கத் தொடங்கி வில்லங்கத்திற்குப் பார்த்து முடித்த பிறகு கண்ணில் பட்டதொரு படம். 'அமு'. அம்ரித் எனும் பெயரின் சுருக்கம். அம்முக்களெல்லாம் தெரிந்துதானா பெயர் சூட்டப்படுகிறார்கள்?

அதற்கடுத்துப் பார்த்தது, 'Life Goes On'.

அமு மற்றும் Life goes on இல் கொஞ்சம் செயற்கையாக நடிப்பு இருந்தாலும் கதைக் களனால் கவர்ந்தன. அமுவில் கொங்கனா சென் சர்மா. ஒரு வரியில் சொல்வதானால், தன் பெற்றோரைத் தேடும் ஒரு இளம்பெண் தான் அமுவின் கதை. மற்றதில் திடீரென குடும்பத்தலைவி இறந்தவுடன் குடும்பத்தினரின் தடுமாற்றங்கள். வங்காளக் கவிதை வரிகள் கொண்டு இறந்தவரின் நினைவைக் கொண்டு வந்த விதம் அழகு. இரண்டு படங்களிலும், பாக் மில்க்கா பாக் இலும் கலவரமும் வன்முறையும் வந்து போகின்றன.

பதிவு இருக்கிறது நனவிடை தோய்ஞ்சு தலை துவட்டாம சளி பிடிச்சதைச் சொல்லத்தானே.. நான் கலவரத்தைப் பற்றி என்ட அனுபவங்களை யோசித்தேன். 83 கலவரம் ஞாபகம் வந்தது. மாமி & குடும்பம் எங்களோட வந்து இருந்தது ஞாபகம். ஆனா ஓடுப்பட்டுத் திரியாததால எனக்கு அதின்ட தாக்கம் தெரியவில்லை. ஏறாவூரில் நிறையச் சிங்களவர்கள் இருந்தார்கள். 87 என்டு நினைக்கிறேன். பல சிங்களவ்ர்கள் வெட்டி, சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். பயத்திலே, என்னதான் ஊர் வைத்தியரா இருந்தாலும் அம்மாவை மீறி என்னவும் நடந்து விட்டாலும் என்று நினைத்து எம்மியை வெட்டுப்படாமலும் சுடுபடாமலும் தப்பியிருந்த மற்றச் சிங்களவர்களுடன் சேர்த்து அலிகார் பள்ளிக்கூடத்தில் தங்கவைத்தோம். எம்மியைப் போய்ப் பார்த்து வந்த ஞாபகமிருக்கிறது. பிறகு எம்மி வீட்ட வந்து விட்டா. பயம் கிளம்புகிற அளவில் வித்தியாசமிருக்கிறது என்று மனதில் அப்பத்தான் பதிந்திருக்க வேண்டும்.

அதற்குப் பிறகு 90ம் ஆண்டு. யாரும் யாரையும் நம்புவதாக இல்லை. ஊருக்கே பாலர் பாடசாலை நடத்தின ரீச்சரிட வீடு எரிந்து போய்க் கிடந்தது, மாமா அழுது நான் பார்த்த இரண்டு தரங்களில் அது முதலாவது. அங்கே இங்கேயென்டு இடம் மாறி கடைசியாகக் கொழும்பு வந்தோம். அம்மா மட்டக்களப்பில் இருந்தா. அம்மா மட்டக்களப்பிலிருந்து திரும்பவும் ஏறாவூருக்குப் போனதொரு நேரம் ஒராள் அம்மாட கையை பிடித்து 'ஐயோ என்ட சீதேவி, உங்கள வெட்டின என்டு சொன்னானுகளே' என்டு அழுததும் எங்களுக்கு வந்து சேர்ந்தது. ஒருசேர அம்மா மீது ஊர் கொண்டிருந்த அன்பிற்கும் ஊரைப் பிடித்திருந்த கலவரப் பிசாசிற்குமான உதாரணம். எத்தனை அன்பிருந்தும் மரியாதையிருந்தும் வெட்டப்படுவதற்குரிய சாத்தியமே ஓங்கியிருந்த நாட்கள்.

'அமு'வில், தன் குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டிருக்கும் ஒருவரைத் தனது உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தல் நிமித்தம் கொலை செய்வதும் அந்தக் குற்றவுணர்ச்சியுடனே வாழ்வதும் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும். மனம் ஒரு காடு. பல இடங்களில் எல்லாம் பின்னிப்பிணைந்து பதுங்குகிறதும் பாய்கிறதுமான மிருகங்களையும் சேர்த்தணைத்த இருளோடிருக்கிறது. ஆனாலும் சில இடங்களில் வெளிச்சம் விழுகிறது. தடங்கள் தெரிகின்றன.

Life Goes On இல் 'நாங்கள் ஓரிரவிலேதான் அவர்களை வெறுக்கத் தொடங்கினோமா? எங்களுடைய அயலவர்களாய் இருந்தவர்கள் அவர்கள். என்னுடைய தோழன் அவன், ஆனால் கலவரத்திலே எங்கள் வீட்டுக்கு தீ வைத்தவர்களில் அவனும் இருந்தான். எங்கள் மனங்களிலுள்ள இருளடைந்த முடிவிலாப் பள்ளத்தை நாங்கள் பார்க்க விரும்புவதில்லை' என்று உரையாடல் வரும்.

அதே படத்தில் காப்பதும் மறைப்பதும் அழிப்பதுமாய் சர்மிளா தாகூரின் பாத்திரம் ஒரு கலவரம்.

பூனைக்கு வாத்தென்று பெயர்


என்னுடைய உலகத்திலே உனக்குப் பெயர் முட்டாள் வாத்து. ஆனாலும் பல நாட்களாய் எனக்குத் தெரியும் நீ பூனைதானென்று. எங்காவது பூனைக்கு வாத்தென்று பெயர் வைத்ததைக் கேள்விப்பட்டிருக்கிறாயா? அதற்கென்ன, பெயர்தானே.. இருந்துவிட்டுப் போகட்டும்.

யாரும் பார்க்காத நேரங்களில் பதுங்கிப் பதுங்கி மெல்ல நுழைந்து பின்னர் தைரியமாய் கண்முன்னே உலா வரும் பூனைக்குட்டியைக் கண்டதும் அட! என்று கவனிப்போமே... அது போலத்தான் உன் மீதான பிரியமும்.

என்னதான் பதுங்கினாலும் பூனை அலட்சியம் மிகுந்தது. அதிகாரம் பண்ணுவது. நாய்க்குட்டியைப் போல வாலாட்டுவதோ கண்டதும் துள்ளி தலைகால் தெரியாமல் சுற்றி வருவதோ இல்லை. தனக்குத் தேவையான போதில் மட்டும் வந்து கவனம் பெறுவது. எப்போதும் இருக்கும் அக்கறையை அதற்குத் தேவையான பொழுதிலே மட்டும் விரும்பி வந்து ஏற்பது. அந்த நேரத்தில் மட்டுமே பெருங்கருணை கொண்டு நம்மையும் ஒரு பொருட்டாய் மதிப்பது. வலிந்து உன் கவனம் ஈர்ப்பதில் என் முயற்சிகள் பெரும்பாலும் பலிப்பதில்லை. பழங்காலத்தில் பூனைகள் கடவுளராம். எந்தக் காலத்திலும் கடவுள் மனம் வைத்தால்தானே பேரின்பம் கிட்டுகிறது! நீயாய் வந்தாலும் அலட்சியப்படுத்தினாலும் உன் மீதான என் பிரியம் என்றைக்கும். அது உனக்கும் தெரியும், அதை நீ எப்படி  விளங்கிக் கொண்டிருக்கிறாய்?

பூனைக்குட்டியொன்று மடியில் இருக்கையில் எத்தனை மென்மையாய் இதமாய் ஆறுதலாய் இருக்கிறது. நீயும் உன்னைக் குறித்த நினைப்புகளும் ஞாபகங்களும் அப்படியே. சில்லிட்டுக் குறுகிப் போகும் நேரங்களிலெல்லாம் மன மடியில் கதகதப்பாய் உன்னைக்  கொண்டிருக்கிறேன். என்னையே எனக்கு அறிமுகப்படுத்துகிறாய். பலப்படுதலின் ஊற்றாயிருக்கிறாய். என்னையும் என் பொழுதுகளையும் உயிர்ப்பித்திருக்கிறாய். மெத்தென்ற அதே பாதத்தில் தான் கீறும் நகமும் மறைந்திருக்கிறது. உனது சில சொற்களிலே நான் உடைந்து உயிர்வலிப்பதும் பூனை விளையாட்டில் வெகு இயல்பாய் அடங்கிவிடுகிறது.

உனக்கானவை, உன்னால் நானறிந்த எனது நீலப் பூக்கள். ஆனால் பூனைக்குப் பூக்களால் ஆவதொன்றுமில்லை.

பெட்டகம்