மடல்

அன்புள்ள நண்பனுக்கு

நலம். நலமறிய ஆவல் என்றெல்லாம் வழமையான கடிதங்கள் போலே இது இல்லை. வெறுமனே நலவிசாரிப்பாக இருந்துவிட்டுப் போவதானால் எழுத வேண்டாமே.. தொலைபேசி இருக்கிறதே. குழப்புகிறேனா? கேட்பாய் என்கிற நம்பிக்கையில், கொஞ்சம் உரிமையாய் ஒரு விசயம் சொல்ல நினைத்திருக்கிறேன்.

நான் சொல்லப்போவதைச் சொல்ல எனக்கென்ன தகுதியிருக்கிறதென நீ யோசிப்பாய். தேவையான ஒன்றை எடுத்துச் சொ
ல்வதற்கு, அதைப் பின்பற்றிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. சரியானது எது என்று உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்வதற்கு முதற்படி முயற்சி எடுப்பவரும் எடுத்துச் சொல்லலாம். அதை நானே செய்யும் வரை உனக்கு எழுத விரும்பவில்லை.

ஞாபகமிருக்கிறதா.. நாங்கள் வகுப்புகளுக்குப் போன அழகு? 8 மணி வகுப்புக்கு நான் உன் வீட்டுக்கு 7.45 இற்கு வந்து உன்னை எழுப்பி, நீ வெளிக்கிட்டு வந்து நாங்கள் வகுப்புக்கு நடந்து போய்ச் சேர 8.30 ஆகும். மிஸ்சும் "உங்களுக்கு ஓட்டோ அனுப்பிறதா" என்று கேட்டு எத்தனை முறை அறிவுரை சொல்லியிருப்பா? அப்போதெல்லாம் சிரிப்போமே.

அந்த நேரந்தவறும் பழக்கம் இன்னும் இருக்கிறது. என்னிடம், உன்னிடம். இப்போதைய ஒருநாள் காலையை யோசித்துப் பார். ஒரு 10 நிமிட நித்திரையை விட முடியாமல், அடிக்கும் அலாரத்தின் தலையில் ஓங்கி ஒரு குட்டுப் போட்டு நிறுத்தி, ஐந்து நிமிடம், இன்னும் ஐந்து நிமிடமென்று எழுந்திருப்பதைத் தள்ளிப் போடுவோம். அந்த ஐந்துநிமிடங்களினது அருமை இன்னும் கொஞ்ச நேரத்தில் உணரப்படும். உனக்கே தெரியும். ஐந்து நிமிடமென்பது பத்தாகி, தற்செயலாய்க் கடிகாரம் பார்க்கையிலே புறப்பட நேரமாகிறதென்பது மூளையில் பதியும்.

அடித்துப் பிடித்து எழுந்து, காலைக்கடன் முடித்துப் புறப்படுகையிலேயே ஐந்து - பத்து நிமிடத் தாமதம் தலை காட்டியிருக்கும். ஓட்டமும் நடையுமாய் இளைக்க இளைக்க தொடர்வண்டி நிலையம் போய் மூடிக் கொண்டிருக்கும் வண்டியின் கதவு வழியே புகுந்து இருக்கையில் உட்கார்ந்தால் 40 நிமிட இளைப்பாறல். இல்லை, காரில் போகிறாயா வேலைக்கு? பிந்தி விட்ட அவசரம் காரை ஓட்டுவதில் தெரியும். எவ்வளவு பாதுகாப்பானது இந்த வண்டியோட்டல்? கவனக்குறைவுகளும், சிறுசிறு தாமதங்களும் ஏற்படுத்தும் எரிச்சலும் ஒரு அழகான காலையைக் குழப்பியிருக்கும். அலுவலகத்தை அடையும் போது இருக்கும் மனநிலையை நினைத்துப் பார்.

அலுவலகத்தில் வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறோமா? இல்லையே. காலை வந்தவுடன் செய்தி வாசிப்பு. ஒருதரம் வாசித்தவுடன் விடுகிறோமா என்ன! திரும்பத் திரும்ப பிபிசியும் சிட்னி மோர்னிங் ஹெரல்டும் பார்ப்பது அடிக்கடி பணியைக் குழப்பும். கிரிக்கெட் போட்டி நடந்தால் அதன் ஸ்கோர் பார்க்க, தனிப்பட்ட மின்னஞ்சல் அனுப்ப, வலைப்பதிவு பார்க்க, மின்/தொ.பே/வாயு இணைப்புகளுக்கும் இன்ன பிறவுக்குமான கட்டணங்கள் செலுத்த, வங்கித் தொடர்பாடல் என்று தனிப்பட்ட செயல்களுக்கு, அலுவலகப் பணி செய்ய வேண்டிய நேரத்தில் எடுத்துச் செலவழிக்கிறோம். இதுவும் ஒரு வகைக் களவுதான். களவென்பது கிடக்க, இது என்ன செய்யும் தெரியுமா? செய்து முடிக்க வேண்டிய பணி தலைக்கு மேல் குவியும். சொந்த வேலை செய்ததில் அலுவலக நேரம் ஓடியே போய்விட்டிருக்கும். ஐந்து மணிக்கும் பிறகும் உட்கார்ந்து வேலையைச் செய்வோம். பலர் இந்த விதயத்தில் பரவாயில்லை. ஒரு ஏழு மணிக்காவது வீடு போய்விடுகிறார்கள். நீ முடித்து விட்டுத்தான் வீடு திரும்புகின்றாய். எத்தனை மணியானாலும். வேலை முடித்து
விட்டே போகிறாய். இங்கே என்ன நடக்கிறது? தனிப்பட்ட வாழ்க்கைக்கான நேரத்தை எடுத்து வேலைக்கெனச் செல்வழிக்கிறாய். ஒருவிதத்தில் இது குற்றவுணர்ச்சியால் வரும் ஈடுகட்டலே.

வீட்டை அடைவதும், இரவுணவும், இளைப்பாறலும், நித்திரைக்குப் போவதும் தட்டிவிட்ட டொமினோக் கட்டைகள் போல ஒன்றன் பின் ஒன்றாய் பிந்திப் பிந்தி நடைபெறும்.நேரஞ் சென்று படுத்தால் அடுத்த நாள் காலை நேரத்துக்கு எழும்ப மனம் வராது. மீண்டும் மேலே சொன்னது அடுத்த நாளும் தொடரும். இது உடலுக்கோ மனதுக்கோ நல்லதல்ல. கடின வழியில் நான் உணர்ந்த பாடம் அது. உன் அருகாமை கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றத்துடன் உன் களைப்பு வீட்டாரால் புரிந்து கொள்ளப்படும்.

காலையில் நேரத்துக்கு எழும்புவதிலிருந்து பணியக வேலை முடித்த பிறகுதான் சொந்தவேலை (அல்லது உணவு இடைவேளையின் போது) என்று உறுதி கொண்டாயானால் ஐந்து மணிக்குப் பிறகு எவ்வளவோ நேரம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வாய். வேலை அதிகமான நாட்களில் இரவிரவாய் பணியகத்தி
லேயே கிடக்காமல் "எவ்வளவு வேலையென்றாலும் இத்தனை மணிக்கு வீட்டுக்குப் போய் விடுவேன்" என்று உறுதி எடுத்துக் கொள். இரவிரவாய்க் கண்முழித்து வேலை செய்த களை முழுதும் நீங்காமல் அடுத்த நாளும் வேலைக்கு வருவாயானால் அதிலே ஒரு பிரயோசனமும் இல்லை.

கேட்டால் சொல்வதென்ன? எல்லாம் குடும்பத்துக்குத் தான் மாடாய்/நாயாய் உழைக்கிறேன். நீ மிருகம் போலே உழைக்க வேண்டியதில்லை. மனிதனாய், குடும்பத்தை மனதிற் கொண்டவனாய் வாழ்ந்து கொள். போதும். யாருக்காக உழைக்கிறாயோ அவர்களே முக்கியமானவர்கள். உன் சம்பளம் மட்டுமே அங்கே எதிர்பார்க்கப்படுகிறதென்று நினைக்கிறாயா? உன்னைத் தவிர மற்றதெல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான். பணம் மட்டுமே தேவைகளை நிறைவேற்றிவிடுவதில்லை. உன் பணம் கொடுக்காத மனநிறைவை உன் அருகாமையோ அல்லது உன் கனிவான ஒரு வார்த்தையோ பெற்றுத்தந்துவிடும். கவனித்துப்பார்..உனக்கே தெரியவரும்.

இந்தக் கடிதம் பார்த்து "லெக்ச
டிக்கிறேன்" என்று நீ சொல்லக்கூடும். நான் உணர்ந்ததை, உரிமையுடன் சொல்லியிருக்கிறேன். கொஞ்சம் யோசித்துப் பார்ப்பாய் என்று நம்புகிறேன். நலமறிய ஆவல்.

இப்படிக்கு, மாறா அன்புடன்
தோ
ழி.

தெரிந்தால் சொல்லுங்க

ஆடிக்கொண்டார்.. அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ..
ஆர நவமணி மாலைகள் ஆட, ஆடும் அரவம் படம் பிடித்தாட...

மீதிப்பாட்டு என்னதான் யோசித்தும் ஞாபகம் வரவில்லை. தெரிந்தால் சொல்கிறீர்களா?

அதோடு சேர்த்து இந்தப்பாட்டும்: கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி.. கையிலே வேல் பிடித்த கருணை சிவபாலனை.. (படத்தில வந்த அதேதானுங்கோ..)

நன்றி.

அவையள் எங்கண்ட ஆக்கள் இல்லை!

இன்னார் இந்தச் சாதியென்று சொல்லிஅவருடன் பழகுவதை ஊக்கப்படுத்துவதோ அல்லது தடுப்பதோ எங்கள் வீட்டில் நடந்ததில்லை. சாதி பற்றிய பேச்சு எழுந்ததும் ஓரிரண்டு தருணங்களில் எனது கேள்விகளால்தான்.

சாதியும் அது பற்றிய விளக்கமும் இல்லாத ஒரு வயதிலேயே எனது முதல் அனுபவம். ஞாபகமிருக்கிறது. வீட்டிலிருந்து நாங்கள் தேநீர் குடிப்போம். மாவிடிக்க வரும் இரண்டு ஆச்சிமார். செல்லாச்சி, தெய்வானை - இவர்களை "ஆச்சி" என்று விளித்தேன். (அவர்கள் போன பிறகு எனக்கு "அவைய ஆச்சி என்டெல்லாம் சொல்றேல. பேர் சொல்லலாம்" என்று அறிவுறுத்தினார்கள். அவ்வளவு வயசான ஆட்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடலாமெண்டா நான் ஏன் (15 வயசு மூத்த) மச்சாளை "தமயந்தி" என்டு பேர் சொல்லி கூப்பிடேலாது என்று கேட்டதற்குப் பரிசாய் முதுகில் மேள வாசிப்பும், "அது அப்பிடித்தான். சொன்னாக் கேட்கோணும்"மும் கிடைத்தன)

அவர்களின் சுருங்கின தோல், தொட்டுப் பார்க்கவே ஆசையாயிருக்கும். மரியாதையா ஆச்சி எண்டே சொல்லேலாதாம், இதில தொட்டா உதைதான். சேலையைக் குறுக்கில கட்டியிருப்பார்கள். கிளாசில்தான் இவர்களுக்கு பானங்கள் கொடுக்கப்படும். அதை ஒருதரும் தொடவும் கூடாது. அந்தக் கிளாசை நாங்கள் பாவிப்பதென்பது நினைத்தும் பார்க்க முடியாத ஒன்று. இதெல்லாம் தெரியாமல் நான் குதர்க்கமாய்க் கேள்வி கேட்டால் அம்மாவுக்குத்தான் பேச்சு விழும், "ஒண்டுஞ் சொல்லிக்குடுக்கிறேல்லையோ" என்று. அம்மா பாவம். ஏன் தனிக் கிளாசென்று கேட்டாலும் பீற்றிக் கொள்வார்கள் - "நாங்கள் கிளாசில குடுக்கிறம், எத்தினபேர் சிரட்டையில குடுக்கிறவை தெரியுமோ!" ('பூனைக்குட்டி சிரட்டையில தண்ணிய நக்கி நக்கிக் குடிக்கிற மாதிரிக் குடிப்பார்களா என்று சந்தேகம் வந்தாலும், கேட்டால் விழக்கூடிய அடியின் கனம் நாக்கை அடக்கும்) நினைத்துப் பார்க்கிறேன், இவர்களெல்லாம் இடம்பெயர்வின் போது சாதி பார்த்தா ஒன்றாய் வீடுகளில் தங்கியிருப்பார்கள்? சாப்பிட்டிருப்பார்கள்? இவர்களின் சாதியப் பார்வை உடைந்து சிதறியிராதா?

ஊரிலே இருக்கிறவரை விடுவோம். வெளிநாட்டுக்கு வந்துவிட்டாய். பிற சமூகங்களோடு இணைந்து கற்கிறாய்/செயல்படுகிறாய். ஆனாலும் அதே சாதிக் கண்ணாடி கொண்டுதானே உன் சமூகத்தைப் பார்க்கிறாய்.

ஒரு அன்ரி. பெண்ணுக்கு மாப்பிள்ளை வேண்டுமாம். ஆரேனும் நல்ல பெடியங்கள் இருந்தாச் சொல்லுங்கோ என்று என்னிடமும் என் தோழியிடமும் சொன்னா. உடனேயே ஞாபகம் வந்த ஒரு நண்பனைச் சொன்னோம். யாரென்று அவவுக்கும் தெரிந்திருந்தது.
"எனக்கும் தெரியும் அவைய, நல்ல பெடியன் தான்.. (மெல்லிய குரலில்) ஆனா எங்கட ஆட்களில்லை. அவை வேற".
என்ன சொல்கிறாவென்று தெளிவாயத் தெரிந்தாலும், வம்புக்கு "இல்லை அன்ரி. அவங்களும் சிலோன் தான்" என்றாள் என் தோழி. எனக்குத் தாளாத சிரிப்பு. பாவம் அன்ரிக்கு விளங்கவில்லை.
"இல்லை. அவை சிலோ
ன்தான். ஆனா வேறை". மென்று விழுங்குகிறார். நாங்களும் விடுவதாயில்லை.

"அப்ப என்ன சொல்றீங்க? அவையும் ஹின்டு. நல்ல boy. இதுக்கு மிஞ்சி என்ன அன்ரி?".
"இல்லையடா, உங்களுக்குத் தெரியாது, சாதி வேற"
"ஆ! ஷ்ரேயா..சா..ஆ..ஆ..தி வேறயாம்".. (ஆரம்பித்தோம்.) "நீங்க சாதி பாக்கிறனீங்களெண்டு தெரியாது அன்ரி எங்களுக்கு. அப்ப சிட்னியில நீங்க பழகிற எல்லாற்ற சாதியும் தெரியுமோ? பாத்தோ பழகிறனீங்கள்? ஊர் மாதிரி இங்கையும் புறிம்பாச் சாமான் வச்சிருக்கிறீங்களோ?" இன்னும் நிறைய அவவைக் கதைக்க விடாமல் கேட்டோம்.

எங்களிருவரின் கேள்விகளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லைப் போல. எதிர்பார்த்திருக்கவும் மாட்டா. "இல்ல, அப்பிடியெல்லாம் இல்ல" என்று தடுமாறிக் கொண்டிருந்தா. நேரமாகுதெண்டு அவவின் கணவர் வந்து கூப்பிட இதுதான் சான்ஸ் என்டு "வாறன் பிள்ளையள்" என்டிட்ட்டுப் போய்விட்டார். நாங்கள் சொல்லிச் சிரித்த போது, நாங்கள் அப்பிடி ஒரேயடியாப் போட்டுக் கேள்விகள் கேட்டிருக்கத் தேவையில்லையெண்டு தோழியின் அம்மா சொன்னா. "சாதி அன்ரி" கொஞ்சமாவது யோசித்திருப்பாவா என்பதே எங்களிருவருக்கும் உள்ள கேள்வி.

சாதி பார்க்கிற அன்ரி மாதிரியான ஆட்களைக் கண்டால், அவர்களது இந்தப் பழக்கம் வெளிப்பட்டால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அதுவும் சில வேளைகளிலே அவர்கள் பற்றிய விம்பம் சரிகையில். எவ்வளவுதான் படித்த பண்பாளராய் இருந்தாலும் சாதி பார்க்கத் தூண்டுவது எது? ஏன் பார்க்க வேண்டும்? மனிதர்கள் தாம் பிறப்பது எந்தப் பெற்றாருக்கென்று தீர்மானிக்க முடிவதில்லையே? எல்லாரும் சமந்தானே? பொருள்வசதி தவிரப்பார்த்தால் எல்லாரும் ஆசைகளும் மகிழ்ச்சியும் கவலையும் பெருமையும் தன்னம்பிக்கையும் உற்சாகமும் கனவுகளும் ஞாபகங்களும் நிறைந்தவர்கள் தானே? இதிலே எங்கே இவர் உயர்வென்றும் அவர் தாழ்வென்றும் சொல்லப்போயிற்று?

சில வருடங்களுக்கு முன்னாலே சாதி குறித்த ஒரு சூடான விவாதத்தின் போது அம்மா சொன்னா: "சாதி பாக்கிறது பிழையானது/தேவையில்லாததெண்டு தெரியுது. ஆனாலும் சின்னனில இருந்தே வந்த பழக்கம். கொஞ்சம் தயக்கம் இருக்கு. ஆனா அதுவும் இருக்கக் கூடாதெண்டு தெரியும். எப்பவுமே புதுசு புதுசா சரியானதுகளை உணர்ந்து கொண்டுதான் இருக்கிறம் என்ன!".
கடைசி வசனம் சத்தியமானது. நானும் புதிது புதிதாய்க் கற்றுக் கொண்டுதானிருக்கிறேன்.


சந்தேகம்: நாவலர் இந்தியாவிலிருந்தே இந்தச் சாதி வழக்கத்தைக் கொண்டு வந்தாரெனவும் அதன் பின்னரே இலங்கையில் மிக அழுத்தமாக வேரூன்றியதென்றும் என தோழியின் தந்தை சொல்வார். எந்தளவுக்கு இது உண்மை?

பெட்டகம்