குண்டுவெடிப்பும் எரிச்சலும்

பாலியில்(Bali) குண்டு வெடித்தாலும் வெடித்தது ஊடகங்கள் தங்கள் பணியைச் செவ்வனே செய்யத்தொடங்கி விட்டன. 2002ல் வெடித்த குண்டின் இலக்குப் போலவே இந்த முறையுமா எனத்தெரியவில்லை. ஜமா இஸ்லமியாக் குழுவினர் தான் அக்குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

நான் சொல்ல வருவது அதைப் பற்றியன்று. குண்டு வெடித்ததாகச் செய்தி வந்தது வெள்ளியிரவு. சனி காலையில் செய்தியில் சொல்கிறார்கள் அவுஸ்திரேலிய/நியுசவுத் வேலஸ்(எதென்று சரிவர ஞாபகமில்லை) இஸ்லாமிய அமைப்பு இக்குண்டு வெடிப்புக் குறித்து தனது கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறதென்று. சகலவிதமான அமைப்புகளும் இந்தக்குண்டு வெடிப்புத் தொடர்பாக தமது விசனத்தையும் கண்டனத்தையும் தெரிவித்திருந்த வேளை, ஊடகங்கள் இஸ்லாமிய அமைப்பினரின் கண்டனச்செய்தியை மட்டும் தூக்கிப் பிடித்தமை ஊடகங்களின் பாரபட்சமான பார்வையையும், வேண்டாத, விஷ(ம)மான எண்ணங்களை மக்கள் மனதில் ஊன்ற வைக்கும் முயற்சியையுமே காட்டுகிறது. ஏற்கெனவே இஸ்லாமியர் = தீவிரவாதிகள் என்கிற எண்ணம் மக்களிடையே விதைக்கப்படுகிறது. கத்தோலிக்க, அங்லிக்கன், பௌத்த, இன்னும் எத்தனை மத அமைப்புகள் கண்டனச் செய்தியை வெளியிட்டிருக்கும்? ஏன் அவற்றைக் குறிப்பிடவில்லை? இஸ்லாம் மதத்தினர்தான் கண்டிக்கிறார்கள்; அவர்களைச் சார்ந்தவர்தான் செய்ததென அவர்களுக்கே சந்தேகம் வந்ததில்தான்/ தெரிந்ததில்தான் இவ்வாறு கண்டன அறிக்கையை வெளியிடுகிறார்கள் என்கிற நினைப்புகளுக்கு இடம் தரும்வகையில் தான் செய்தி சொன்ன விதம் அமைந்திருந்தது. குண்டு வெடிப்புக்குச் சூத்திரதாரிகள் பற்றிய ஊகங்கள் நிலவினாலும், இன்னும் சரியாக நிறுவப்படாத நிலையில் ஊடகங்கள் பொறுப்பற்றதனமாக, குறிப்பிட்ட சமூகத்தினரின் மீது காழ்ப்புணர்ச்சி வரும்வகையில் இவ்வாறு செய்தி வெளியிடுவது கண்டிக்கத்தக்கது.

பிரித்தானியரின் வழி வந்தவர்களென்று உறுதிப்படுத்திக்கொள்ள "Divide & Rule" உத்தியை ஊடகங்களின் மூலம் செயல்/வெளிப்படுத்துகிறார்களோ?

பெட்டகம்