இறப்புப் பற்றிய என் குறிப்பு

மரணம் தொட்ட முதல் கணமென்று தம் வலைப்பதிவில் எழுதிக்கொண்டிருப்பவர்களோடு சேர்ந்து விபத்தைப் பற்றி எழுத முடியாதவாறு மரணம் தொட்ட பொழுதிலேயே அதனோடு போய் விட்ட கார்த்திகேயனுக்கு அஞ்சலி.

இறப்புத் தேவைதான். அல்லாவிடில் உலகின் சமநிலை குழம்பிவிடும். மரணம் குறித்த பயம் கிட்டத்தட்ட எல்லாருக்கும் மனதின் அடியில் உறங்கிக் கிடக்கும். அதை மேல் மட்டத்திற்குக் கொண்டுவருவது தன் வட்டத்தில் நிகழும் இழப்பே. சில வேளைகளில் சில மரணங்கள் நிம்மதியைத் தந்தாலும் பல வேளைகளில் மனக் கிலேசத்தையே உண்டு பண்ணுகின்றன. அதுவும் பழகிய ஒருத்தரின் மரணம் பல நாட்களுக்கு மனதில் தேங்கும்.

மரணமென்று எனக்கு அறிமுகமாகிய போது எனக்குப் பத்துப் பதினொரு வயதிருக்கலாம். முதலாவது எம்மியோடு கூடவே செல்லும் புத்தவிகாரையின் பிக்குவும் இரண்டாவதாக எனது ஆசிரிரியரின் தங்கையும். பிக்குவுக்குத் தலை பிளந்ததால் ஏற்பட்ட காயம் ஏற்படுத்திய மரணம். மருத்துவமனையிலிருந்தவரைப் பார்த்த ஞாபகம் இன்னும் அவ்வப்போது தலைகாட்டும். ஆசிரியரின் தங்கை நஞ்சுண்டு தற்கொலை. வீட்டே தான் அலறியடித்துக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். ஒன்றும் செய்யவேண்டிய தேவையிருக்கவில்லை. வழியிலேயே உயிர் பிரிந்திருந்தது. அதற்கு முதல் 3 நாட்களுக்கு முன்னர் தான் கல்வி+இன்பச் சுற்றுலா ரியூஷன் மாணவர்களோடு போய் வந்திருந்தார்கள். அதன் போதெல்லாம் உற்சாகமாய் இருந்த பெண். என்ன ஏதென்று தெரியவில்லை. அரளிவிதை கைகொடுத்திருந்தது அவவின் மரணத்தை நிறைவேற்ற. அவவின் கணவரைக் கண்கொண்டு பார்க்க இயலவில்லை. நெருங்கியவர்களின் இறப்பு எப்படிப் பாதிக்கும் என்று கண்கூடாகப் பார்த்து உணர்ந்து கொண்டேன் அவவின் கணவரையும் அண்ணாவையும் பார்த்து. இன்னும் ஞாபகமிருக்கிறது, எத்தனை பேருடைய நாவில் எத்துணை கதைகள் அவவைப் பற்றியும், அவவின் இறப்பிற்கான காரணி பற்றியும். அவர்களின் சொல்லும் செயலும் மனிதர்களைப் பற்றி அறிந்து கொள்ளக் காலாக இருந்தது.

நெருங்கிய உறவினர்களில் அறுவர் இறந்த போதும், அதில் மூவரின் செத்த வீட்டுக்குத் தான் போகக்கிடைத்தது. இறந்து போன அத்தையுடனான என் கடைசி ஞாபகம் எதற்கென்றே ஞாபகமில்லாத அவவுடனான அற்பச் சண்டை. மிகவும் பாதித்த மரணங்கள் இரண்டு. எம்மியினதும். ரீச்சரினதும். எம்மியைப் போன்றல்லாது ரீச்சரைக் கடைசியாகக் கூட பார்க்கக் கிடைக்கவில்லை. வெளிநாட்டு வாழ்க்கைக்குக் கொடுக்கும் விலையில் இதுவும் ஒன்று. ஆனால் காணாததும் ஒரு வகையில் நல்லதுதானோ! இனிமையாய் வழியனுப்பி வைத்த முகம் தானே மனதில் நிற்கிறது. அசைவின்றிக் கிடக்கும் அவவை என்னால் பார்த்திருக்க/அதை மனதில் உள்வாங்கியிருந்திருக்க முடியாது.

சில செத்த வீடுகள் களைகட்டும் - சில பல வேளைகளில் திராவகங்களின் உதவியொடும். ஆனாலும் சுற்றத்தின் அழகு மரணவீட்டில்தான் வெளிப்படும். தீர்மானிக்கும் காரணிகளில் முக்கியமானவை இறந்தவர் காட்டிய அன்பு & சொத்து. பழைய குடும்பக் கதைகள் வெளிவரும். சுவாரசியம் குன்றாது சொல்வதில் விண்ணர்கள் புண்ணியத்தில். கேட்பதற்கென்றே ஒரு கூட்டம் சுற்றியிருக்கும். சிலவேளைகளில் திருமணப்பேச்சுகளும் தொடக்கப்படும். ஒரு இறப்பு பலநாள் காணாதோருக்கு ஒரு சந்திப்புச் சந்தர்ப்பமாக அமைவதனாலாக இருக்கலாம்.

செத்த வீடுகளில் நான் செய்ததும் இப்போதும் செய்யத் தலைப்படுவதும் ஒன்றே ஒன்றுதான். ஏனென்று தெரியவில்லை - சவத்தை உற்றுப் பார்த்து நெஞ்சுக்கூடு ஏறி இறங்குகிறதா எனப் பார்ப்பேன்.. என்னதான் நான் ஊன்றிப் பார்த்தாலும், உற்றவர் அழுது அரற்றினாலும் மாண்டவர் மீண்டவராவதில்லை. போனவர் போனவர்தான். செத்தவீடு நடந்து கொஞ்ச நாளைக்கு இறப்பும் இருப்பும் பற்றிய கேள்விகள் & பயங்களால் மனம் நிரம்பியிருக்கும். நாள் போகப்போக உச்சத்திலிருந்து பழையபடி அவை அடிமனதுக்குக் குடிபெயரும்...இன்னொரு இறப்பு - தணலை ஊதி நெருப்பாக்குவது போன்று - அவற்றைத் தட்டியெழுப்பும் வரை.

இது மட்டும் நிச்சயமாய்த் தெரிகிறது: மரணம் மனிதரை மறப்பதில்லை, அவர்கள்தான் மரணத்தை மறந்து விடுகிறார்கள்.

பிஞ்சுமனம்

27ம் திகதி அபிநயாக்குப் பிறந்தநாள். எட்டாவது பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த முறையும் பெரியவர்களுக்கென்றும் குழந்தைகளுக்கென்றும் தனித்தனியே பிறந்தநாள் கொண்டாட்டம். விதம் விதமாய் கேக்கும் வேறு தின்பண்டங்களும் பெரியவர்களுக்கென்று உணவும் இருக்கும். இதற்கெனவே பிறந்தநாளுக்கு இன்னும் எத்தனை என்று நாட்கணக்குப் பார்ப்பாள். தம்பியினதுக்கும் நாட்கணக்குப்பார்ப்பது இவளே. அபிநயாக்குத் தம்பி இருந்தாலும் அவள் அம்மா செல்லந்தான். பிறந்த நாள் தொடக்கம் ஒரு வயது வரை ஒவ்வொரு நாளும் நிழற்படம் எடுத்ததும், வெட்டிய தலைமயிரில் கொஞ்சத்தை சிறிய டப்பாக்களில் போட்டு வைத்திருப்பதும் அம்மாவின் சிறப்புக் கவனிப்பில் சில.

அம்மாவின் தம்பி - இந்திரன் மாமாக்கும் மேரி மாமிக்கும் குட்டிக் குழந்தை விரைவில் பிறந்துவிடும். அதுவும் இந்த வாரமே. குட்டிப்பாப்பாவைப் பார்க்கப் போகும் உற்சாகம் மனதில் நிரம்பியிருந்தது. காணும் எல்லாரிடமும் வரப்போகும் குட்டி பேபியைப் பற்றித்தான் கதை. உடனே தூக்குவேன்..வீட்டே கூட்டி வருவேன் தம்பியும் நானும் பேபியுடன் விளையாடுவோம் என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

வெட்டிய கேக்கைக் கொடுக்க வந்த அபிநயாவை இழுத்துப் பிடித்த ரேணு மாமியின் "எப்ப பேபி வரும்?" கேள்விக்கு "She came now, few minutes ago. we are going to see her after the party. we have the same birthday" என்று பதில் சொன்ன அபிநயா ரேணு மாமியின் நச்சு வசனங்களை எதிர்பார்த்திருக்கவில்லை.

"இன்டைக்குத்தான் அவக்கும் birthday. அப்ப இனி உமக்கு ஒரு partiesம் இருக்காது, இனி அவக்குத்தான் எல்லாம். same birthday என்ட படியா இனிமேல் no one will come to your party. everyone will go to her's."

முகஞ் சிறுத்துப் போனது அபிநயாக்கு. ஒன்றும் பேசாமல் நகர்ந்து விட்டாள்.

மருத்துவமனையில் புது வரவு அமுதாக்குட்டி "ஙா ஙா" என்று கை கால் ஆட்டிச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. எல்லாரும் கிட்டே போய்ப் பார்த்தார்கள். அபிநயா மட்டும் தள்ளியே நின்றிருந்தாள். மேரி மாமி "பேபி பாக்கல்லயா? துக்கி மடியில வைச்சிருக்கிறீங்களா?" என்று கேட்டதற்கு அமுதாக்குட்டியை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த அபிநயாவிடமிருந்து இல்லையென்ற தலையாட்டலே கிடைத்தது.

-- கற்பனையல்ல :O(

பிறந்தநாள் இன்று பிறந்தநாள்

தமிழ்மணத்துக்கு இன்று பிறந்த நாள். வலைப்பதிவர்களை மனதில் கொண்டு சொந்த நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு & போராடி (வீட்டில் பெற்ற "விழுப்புண்கள்" எத்தனையோ? ;O) )அந்த உழைப்பின் பயனாக தமிழ்மணத்தை உருவாக்கிய காசிக்கும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அனைத்து வலைப்பதிவர் சார்பிலும் நன்றி.

தமிழ்மணத்துக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்கின்ற இந்த நேரத்திலே, ஒரு வேண்டுகோள்: கொஞ்ச நாளைக்கு முன்பு போன்றதான அசிங்கங்கள் அன்றி அழகியவைகள் மட்டும் உலாவ வேண்டும் வலைப்பதிவுலகத்தில். சிந்திக்க வைப்பதாயும் தெளிவிப்பதாயும் கருத்துகள் வரவேண்டுமேயன்றி, தேவையற்று ஒருவரையோ அல்லது அவரது நம்பிக்கைகளையோ/கொள்கைகளையோ இழிவு படுத்தும் வண்ணமிராது கருத்துச் செறிவுள்ள (நாகரீகமான) விவாதங்களுக்குப் பதிவுகள் இட்டுச் செல்ல வேண்டும்.

மீண்டும் தமிழ்மணத்துக்கு வாழ்த்துக்கள்.

தேவையா?

ஆங்காங்கே தொட்டுத்தொட்டு கருத்துப் பரிமாறல் பெறும் நிகழ்வுதான். இன்றைக்கு என் பங்குக்கு:

போனமாதம் பருவமெய்திய(!?) பெண்ணுக்கு நீராட்டு விழா கடந்த வார இறுதியில் நடந்தது. கொண்டாட்டத்துக்குரிய ஆயத்தங்கள் 2 - 3 கிழ்மைகளுக்கு முதலே ஆரம்பித்து விட்டன. மணவறைக்குச் சொன்னதும், உணவுக்கும் பலகாரங்களுக்கும், வந்தோருக்குக் கொடுக்க பலகாரம் போடப் பையும் என்று தடல்புடல். போன கிழமை போய் சில பலகாரம் செய்ய உதவவும், வீட்டில் செய்த படியால் விளக்குகள் மினுக்குவது போன்ற உதவிகளுக்கும் சென்றிருந்தோம். முதலில் கவனித்தது, பருவமடைந்த பெண்ணுக்கு (ப.பெ என்று குறிப்பிடாமல் கற்பனையாய் "சுமதி" என்று பெயர் வைப்போமா) நடக்கவிருக்கும் விழாவில் இருந்த ஆர்வம். "I wanted to give out invitation, but amma & appa didn't agree" - உலக மகா கவலை 12 வயது சுமதிக்கு.

பலகாரஞ் சுட்டு, அதைப் பைகளில் போட்டுக் கொண்டிருந்த வேளையில் சுமதியின் இரு மச்சாள்மாருடன் (ஒரு 23 & 30 இருக்கும்) இருந்து கதைத்துக் கொண்டிருந்தேன். "வழ்மையாக எப்படி இதற்கு வாழ்த்துச் சொல்வது" என்று ஆரம்பித்தார்கள்.. "வாழ்த்துக்கள் / கெங்க்ராஜுலேஷன்ஸ் என்று சொல்வார்கள்" - இது சுமதியின் மாமி. எதற்கு பீரியட்ஸ் தொடங்கினதுக்கா? கொல் சிரிப்பு. ஆனாலும் அவர்கள் கேள்வி சிந்திக்க வைத்தது. இதற்குப் போயுமா வாழ்த்துச் சொல்வார்கள்? உண்மை..பெண்ணின் வாழ்வில் புதிய அத்தியாயம் தான் ..இனவிருத்திக்கு இன்றியமையாத உடல் மாற்றம்தான்..ஆனால் அதற்கு வாழ்த்துவானேன்? இப்படிக் கேள்வி கேட்பவர்களைக் கண்டால் எனக்குச் சந்தோசம்..ஏனா? நான் கேட்க வேண்டுமென்று நினைத்து கேட்க வேண்டிய நேரத்தில், கேட்க வேண்டியவர்களிடம் கேட்காமல் விட்டதையெல்லாம் இவர்கள் தயக்கமின்றிக் கேட்பது தான். இவர்களிடம் பாசாங்கில்லை. இதுவே மிகவும் பிடித்தமானதாயிருக்கிறது.

விழாவாக ஏன் கொண்டாட வேண்டும் என்பது பற்றியும் பேச்சு வந்தது. இந்தக்காலத்துக்குப் பொருத்தமில்லையே "என் பெண் வயதுக்கு வந்து விட்டாள் = திருமணத்துக்குத் தயார்" என்று அறிவிப்பது. அதற்கும் மாமி ஒருவர் தயாராகப் பதில் வைத்திருந்தா.(எப்படித்தான் 5 - 10 செக்கன் தாடுமாற்றத்துக்குள்ளானாலும் பதில்களைத் தயார்ப்படுத்துகிறார்களோ!!)

"முதல்தான் அதற்குச் செய்வது, இப்ப இயந்திரகதியாகிவிட்ட வாழ்க்கையில் உற்றார் உறவினரோடு சேர்ந்து களிக்க இது ஒரு சாட்டு..அவ்வளவே".

பதில் கேள்வி வந்தது: "அப்பிடி குடும்பத்தாரோடு கூடி மகிழ்வது தான் காரணமென்றால் இந்த மணவறை எதற்கு, வெளிக்கிடுத்தல்கள் எதுக்கு? சும்மா பிள்ளைக்கு comfortable ஆன உடுப்பைப் போட்டு சாப்பாட்டுக்கு மட்டும் கூப்பிடலாமே?"

மாமியிடம் பதிலில்லை.


- அக்கா.. what's the use of this "thingie" you are having?

- நிஷா..எனக்கு நிறைய ப்ரசன்ட்ஸ் வரப்போகுது. I hope I get a lot of make up stuff and money.

- wow..will you share with me..if you don't like the presents can I have them?

- No way. you'll have your own ceremony, then get your own stuff.

- (ஏமாற்றக் குரலில்)..ok..I am going to tell ப்ரியா மச்சாள் that I want makeup and I will ask .... from --- aunty and...

அடுத்த அறையிலிருந்த சுமதியும் தங்கையும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது. இதுதான் பதிலா?

பொய்யெனப் பெய்யும் மழை

காரியங்கள் ஆக வேண்டியிருந்தால் சின்னதோ பெரிதோ பொய் சொல்லிவிட நேரும். (பொய்யென்றால் பொய்தானே..பிறகென்ன சின்னதும் பெரியதும்!)

யாரையாவது "நோக்கும்" படலம் நடைபெற்றால் அடுத்த கட்டத்துக்கு உதவும் என்று மின்னஞ்சலில் வந்தவற்றைத் தருகிறேன்.

  • அவளி(னி)டம் போய் "You are under arrest" என்று சொல்லுங்க. எதற்கு என்று கேட்கும் போது "என் உள்ளத்தைத் திருடியதுக்காக"

  • என்னுடைய தொலைபேசி இலக்கத்தைத் தொலைச்சிட்டேன்..உங்களுடையதை கடன் பெறமுடியுமா?

  • அவருடைய சட்டையில் இருக்கும் tag ஐத் திருப்பிப் பாருங்கள். என்ன செய்கிறீர்களெனக் கேட்கையில் "இல்ல..நீங்க "made in heaven" ஆ என்று பார்த்தேன்"

  • ஒரு பூவைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அவளுக்கு முன்னாலே நடந்து போய் சொல்லுங்க: "நீ எவ்வளவு அழகாயிருக்கிறாய் என்று இந்தப் பூவுக்குத் தெரியவில்லை..அதுதான் காட்டக் கொண்டுவந்தேன்"

  • ஆங்கில எழுத்துகளில் வரிசையை மாத்தீட்டாங்களே..தெரியுமா? "U"வையும் "I" யையும் சேர்த்துட்டங்களாம்

  • வழி தெரியாம தடுமாறி நிற்கிறீங்களா? ஏன் கேட்கிறேன் என்றா தேவதைகளை சொர்க்கத்திலிருந்து இவ்வளவு தூரத்தில் பார்ப்பது அரிது

  • "கண்டதும் காதல்" ல் உங்களுக்கு நம்பிக்கையுண்டா அல்லது நான் இன்னுமொருமுறை உங்களுக்கு முன்னால் நடக்க வேணுமா?

  • உங்கட இதயத்துக்கு வழி சொல்ல முடியுமா? உங்கட கண்ணிலே நான் காணாமப் போயிட்டன்.


>>உடல் /மன நலத்துக்குக் கேடு விளைவிக்கும் விதமான பின்விளைவுகளேற்படின் நான் பொறுப்பல்ல!<<

நன்றி சொல்லிப் பொழியும்

கடந்த 7 நாட்களும், அதற்கு முன்பும் என் பதிவுக்கு வந்து, நான் கிறுக்குவதையெல்லாம் வாசித்து கருத்துக்கள் சொல்லி ஊக்கப்படுத்தி வரும் அனைவருக்கும், தமிழ்மண நட்சத்திரமாக ஒளிர விட்ட மதி & தமிழ்மணத்தாருக்கும், சொந்த வேலை காரணமாக வலைப்பக்கம் வரமுடியாதென ஆகிய போது, கடைசி இரண்டு பதிவுகளையும் வலையேற்றிய துளசிக்கும் நன்றி.

மற்றுமொரு விளையாட்டுடன் மழை இன்னும் பொழியும்.

பார்வை

சின்ன வயதில் அம்மா அப்பா, ஆசிரியர்கள் என்று தொடங்கி மனதுக்குப்
பிடித்தவர்களை நம்முள்ளத்திலே மிக உயர்ந்த ஒரு அரியாசனம் போட்டு அதில் அமர்த்தி விடுகிறோம்.

அவர்களுக்குத் தெரியாததோ, செய்ய முடியாததோ ஒன்றுமேயில்லை என்ற அளவில் இருக்கும் அவர்கள் மீதான நம் கண்மூடித்தனமான நம்பிக்கை. யாராவது இவர்களைப்பற்றி - இருக்கிற நம்பிக்கையை சிதைக்கிற மாதிரி -
எதிர்க்கருத்துச் சொன்னார்களோ தொலைந்தார்கள். வளர்ச்சிதான் எம்மிலும்,
சுற்றியிருப்பவர்கள் & சூழல் பற்றிய எம் பார்வையிலும் எத்துணை
மாற்றத்தைக் கொண்டு வருகிறது! வளர வளர "அவர்களுக்கு எல்லாம் தெரியும் / இயலும்" என்கிற அசைக்க முடியாத(தாகக் கருதப்பட்ட) நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் காணத் தொடங்கும். ஆனாலும் அது எப்போதும் முழுதாகச் சிதைவதில்லை.

நாம் போட்டுக் கொடுத்த அரியாசனத்தில் தான் இன்னும் வீற்றிருப்பார்கள்.ஆனால் எமது பார்வை முதிர்ச்சியடைய அடைய, அந்த
அரியாசனத்தின் உயரம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து வருவது போலத் தோன்றும். அவர்களிலிருந்த அதே அன்பும் மதிப்பும் ஆரம்பகாலப் பிரமிப்பின்
& சிறுபிள்ளை நம்பிக்கையில் கொஞ்சத்தோடும் ஒரு ஓரத்தில் இன்னும்
இருக்கும். எட்டா உயரத்திலிருப்பவர் என்று அகலக்கண் விரித்துப்பார்க்கிற
அந்தப் பார்வை போய் எம்மைப்போலவே பார்க்கப்படும் காலம் வரும். அவர்களின் வாழ்க்கைக் கோட்பாடுகள் கொள்கைகள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் - இவற்றையெல்லாம் சீர்தூக்கி நாம் பார்க்கத் தொடங்குவோம்.

அப்படி நாம் பார்க்க வசதியாக அவர்களும் வாழ்ந்து வைத்திருப்பார்கள். ஏற்ற
இறக்கங்கள், எடுக்கப்பட்ட பலவிதமான முடிவுகளும், காரணங்களும்,
நம்பிக்கைகளும், பெற்றவையும் இழந்தவையும், ஏமாற்றங்கள்
எதிர்பார்ப்புகளுமென்று அங்கே ஒரு வாழ்க்கை, தொடர்ந்து கொண்டிருக்கும்
ஒரு இன்னிசைக்கச்சேரியைப்போல அரங்கேறிக் கொண்டிருக்கும்.

வாழ்க்கையை ஒரு விதமாகக் கணக்குப் போட நாம் கற்றிருப்போம்; அவர்கள் கற்றதும் செயல்படுத்தியதும் வித்தியாசமாக இருக்கும். அவர்களின் செயல்கள் காணும் போது மனம் சிலவேளைகளில் பெருமிதமும் மகிழ்ச்சியும், நன்றியுணர்வும், மற்றவேளைகளில் சலிப்பும் கசப்பும் ஆத்திரமும் என்று ஒவ்வொரு உணர்வாகக் கிளை தாவும்.

அவர்களும் மனிதர்கள்தான் என்று உணரக் காலம் தேவைப்படுகிறது. உணர்ந்தாலும் மனதில் ஏற்கெனவே அரியாசனத்தில் இருத்திய உருவத்துடன் ஒப்பிட்டு உண்மையை ஏற்க மனம் தயங்குகிறது. அப்படியே ஏற்றுக் கொண்டாலும், மனதில் சின்னதொரு ஏமாற்றம் தலைகாட்டுகிறது.

விம்பங்களின்றிப் பார்க்கும் கலையை நான் இன்னும் கற்கவில்லை!

இருவர் கேட்டவை.

கொஞ்ச நாளைக்கு முன் ஒரு பதிவு போட்டு, கேள்வி கேட்கச் சொல்லிக்
கேட்டிருந்தேன். எங்கள் வலைப்பதிவர்கள் 1) எல்லாம் விளங்கியவராய் இருக்க வேண்டும் அல்லது ஒன்றுமே தெரியாதவராய் இருக்க வேண்டும் ஏனென்றால் இந்த இரண்டு சந்தர்ப்பத்திலேயும் தான் கேள்விகள் எழுமாம் என்று எங்கட கணக்கு வாத்தி சொல்லியிருக்கிறார். வலைப்பதிவர்களை (நானாவே) முதலாம் வகைக்குள்ள வரிசைப்படுத்துவம் என்று நினைச்சுக் கொண்டிருக்க, 3 பேர் வந்தாங்கள், கேள்வி கேட்கப் போறமெண்டு. அதிலயும் ஒராள் நான் உதாரணத்துக்குக் கேட்டிருந்த கேள்விய, திரும்ப என்னட்டயே கேட்கிறார். அதுக்குப் பதில் சொல்லப் போவதில்லை, கேட்டிருக்கிற எல்லாக் கேள்விக்கும் பதில் சொல்லப் போறதில்ல. ..ஏனா? அந்தப் பதிவில போட்ட நிபந்தனைகளை பாக்கல்லயா?

சரி முதலாவதா "எடுத்துக்" கொள்ளும் கேள்விகள் இரண்டும் பொடிச்சி கேட்டது.

ஷ்ரேயா என்டது சொந்தப்பெயரா? நான் மட்டக்களப்பு இருதயபுரத்தைச்
சேர்ந்தனானா என்டு கேட்கிறா. இல்லை பொடிச்சி. ஷ்ரேயா என்டுறது
சொந்தப்பெயரில்லை. நான் மட்டக்களப்புத்தான் (அதோட சேர்த்து
யாழ்ப்பாணமுந்தான்) ஆனால் இருதயபுரமில்லை

அடுத்த கேள்விகளெல்லாம் கேட்டது சுதர்சன் கோபால். இவர் கனக்கக்
கேட்டிருக்கிறார். மொத்தமே 7 கேள்வி (அதில ஒன்று "செல்லாது". மிச்சம் ஆறில 4 இவர் கேட்டா..இப்பிடித்தானே சொல்ல வேணும்?)

என்ன கேட்டவரா? முதல் கேட்டார் ஏன் எனக்கு மழை பிடிக்குமென்டு. சிலது ஏன் பிடிக்குமென்று சொல்ல ஏலாதுதானே.. அதுமாதிரிதான். ஆனா மழையில ரசிக்கிறதே கம்பி கம்பியா எங்கேயிருந்து தொடங்குது என்டு தெரியாம பெய்யிறதைத்தான்

அடுத்த கேள்வி கேட்டார், ஏன் மழையில நனைஞ்சதும் சிலருக்குத் தடிமன்
பிடிக்குதெண்டு. அது பாருங்க சுதர்சன், மழை பெய்யுது என்றால் நம்மில்
அநேகமானாக்கள் என்ன செய்வாங்க? மழையில் நனையாம ஒதுங்கப்பாப்பாங்க, நிறையப்பேர் ஒரே இடத்திலேயே ஒதுங்க நேரிடும் தானே..அப்ப ஏற்கெனவே தடிமன்/இன்ன பிற சுவாசத்தினால ஏற்படுற தொற்றுகள் மற்றவர்களுக்கு பரவுற வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே மழையில் கொஞ்சம் நனைந்திருக்கவும் கூடும்..2 நாளையால பக்கத்துல எங்களோட கூடவே மழைக்கு ஒதுங்கினவர் புண்ணியத்தில தடிமன் வந்தால்..மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுக் கொள்கிறோமாம் என்று அம்மா சொல்லிருக்கிறா.

அடுத்த கேள்வி..செயற்கை மழை எப்பிடி உருவாக்கப்படுது? இந்தக்
கேள்விக்குப் பதில்: செயற்கையாத்தான்!என்னது.. கேட்ட கடைசிக் கேள்விக்கு பதிலைக் காணோமா? முதலாம் பந்தி..கடைசி வரியை நீங்க வாசிப்பீங்களாம்..நான் அப்பிடியே ஓடிருவேனாம்... ;O)

பூனை, நாயும், சில கோழிக்குஞ்சுகளும் I I

பெரியம்மா வீட்டில் எனக்குத் தெரிந்து எப்போதும் ஆடு, மாடு, நாய், பூனை, மைனா, கிளி, கோழி என்று ஒரு விலங்குப் படையே வீட்டில நிற்கும். பெரியப்பா காலமை எழும்பி தேத்தண்ணி குடிச்சிட்டு பலாவிலை குத்தப் போவார். அவரோட நடந்து நடந்து ஆட்டுக்கு கிளிசரியாக் குழை பிடுங்கி, கோழிக்கு தீன் போட்டு வாறது எவ்வளவு சுகம் தெரியுமா!

இப்ப போனால், பெரியம்மா-பெரியப்பா இல்லாத வீட்டில், மாடும் ஒற்றை மைனாவும் ஐந்தாறு கோழிகளும் இரண்டு நாய்களும் இரண்டோ மூன்று ஆடுகளுமே! பலாவிலைகளும் கம்பியில் கோர்க்க ஆளின்றி சும்மா விழுந்து கிடக்கின்றன. :O(

வாசற்படித் தூணில் அல்லது வீட்டின் பின்புறத்திலே கட்டிப் போடப்பட்டிருக்கும் நாய்கள். ஆண்டுக்கு ஒன்றிரண்டு தரம் மட்டுமே எங்களைக் கண்டாலும், ஞாபகம் வைத்திருந்துக்கும். உடம்பில் ஒரு துண்டு சதையையும் கேட்பதில்லை. நல்ல நாய்கள். தேவையான அளவு சாப்பாடு போட்ட பெரியம்மாக்கு ஒரு "ஓ".

அவவின் வீடு வடிவானது. "ட" வடிவில். முன் கூடத்தைத் தாண்டிப் போனால் கூட்டுக்குள்ளிருந்து "ராணி...ராணி" என்று பெரியம்மாவைக் கூப்பிடும் கிளிகள். வேறு சில சொற்களும் அவற்றுக்குத் தெரிந்திருந்தது. எனக்குத்தான் மறந்து போய்விட்டது. மைனாக்கள் பேசி அங்கே தான் நான் பார்த்தது. என்ன பேசின என்று கேட்கிறீங்களா? அதை யார் கேட்டது..நான் தான் வீட்டுக்குள்ளே போய் பயணப்பையை வைத்த கையோடு, பெரியம்மாக்கு முத்தம் கொடுத்து வீட்டு ஆட்டுக் குட்டிகளைப் பார்க்க ஒரே ஒட்டமாக ஓடி விடுவேனே! முகம் கழுவு / குளிச்சிட்டு வா - இதெல்லாம் என் காதுக்கு வந்து சேர முதல் காற்றில கரைந்து விடும். அப்படியே விழுந்தாலும் அதை யார் கேட்டது!

அங்கேயிருந்த ஒரு ஆட்டுக்கு என்னைப் பிடிப்பதில்லை. முட்ட வரும். முட்ட வரும் என்று சொல்லத்தான் இன்னொரு சம்பவம் ஞாபகம் வருது.

அப்ப எனக்கு 2 - 3 வயது இருக்குமாம். (அதென்னா இருக்கு"மாம்"? நடந்தது எனக்கு ஞாபகமில்லை..வீட்டில எம்மியும் அம்மாவும் சொல்லக் கேட்டது.) ஒரு நாள் வீட்டில சீனி முடிஞ்சிட்டுதாம்/அல்லது முடியிற தறுவாயில இருந்துதாம். வீட்டில எம்மியும் பெரியண்ணாவும் நானும் தானாம் அந்த நேரம் இருந்ததனாங்க. வேற வேலைகளும் வீட்டில இருந்த படியா எம்மி போய் பெரியண்ணாட்ட கேட்டிருக்கிறா கடைக்குப் போய் சீனி வாங்கி
வரச் சொல்லி. அவரும் ஒம் என்று சொன்னாராம். கொஞ்ச நேரத்தால பாத்தா ஆள் இன்னும் வீட்டிலயே புத்தகம் வாசிச்சுக் கொண்டிருந்தாராம்.

எம்மி (எம்மி யாரென்று தெரியாதவர்கள் இங்கே
பார்க்கவும்) சொல்லிச் சொல்லி அலுத்துப் போய் "தங்கச்சியப் பாத்துக் கொள்ளு" என்டிட்டு கடைக்கு வெளிக்கிட்டிருக்கிறா. எங்கட ஆள் என்ன செய்தார்...புத்தகம் வாசிக்கிறார். தங்கச்சிக்காரி விளையாடிக் கொண்டிருக்கிறா. புத்தக மன்னன் அதை வாசிச்சு முடிச்சிட்டு நிமிர்ந்தா... "ஞானம்..தங்கச்சிய காணம்!".

வீடெல்லாம் தேடி ..தெருவெல்லாம் தேடிக் களைச்சு பயத்தில வேர்த்து விறுவிறுத்துப் போய் இருக்கிறாராம் எம்மி வரேக்குள்ள. இங்கே இப்பிடிக் களேபரம் ஆகுமென்று தெரியாம திறந்திருந்த படலையால வெளியில போன குட்டி ஷ்ரேயா தத்தக்க பித்தக்க என்று நடந்து போயிருக்கிறா. ஒரு மாடு முட்ட ஆயத்தமா வந்துதாம். தெருவில நின்ற ஒரு ஆள் உடன தூக்கி எடுத்திட்டாராம். ஆரடா பிள்ளை .. தனிய "வீரமா" நடந்து வருது என்று பார்த்ததில அதில நின்ற ஒருவருக்குத் தெரிந்து விட்டது. இது வைத்தியரம்மாட பிள்ளை என்று கண்டு கொண்டதில் வீட்டிலே கொண்டு வந்து விட்டார்களாம். (இல்லாட்டி இன்றைக்கு நட்சத்திரமாக இருந்து இப்படியெல்லாம் எழுதி உங்களை இம்சைப் படுத்தக் கிடைச்சிருக்குமா!) அன்றைக்கு அண்ணாப்பிள்ளையர் நல்லா வாங்கியிருப்பார்! இப்படிக் கூத்துக் காட்டியும், இவரின் "கொதி" வேலையை அப்பாவிடம் போட்டுக் கொடுத்தும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாலும், அவர் செல்லம்தான்.

சரி..சரி பெரியம்மாவின் ஆடு முட்ட வரும்...ஓடி வந்து விடுவேன். பிறகென்ன.. கோழிகளைத் துரத்துவதும்..தப்பியோட முயற்சிக்கும் பூனையை வலுக்கட்டாயமா தூக்கிக் கொண்டு திரிவதும் என்று மிச்சப் பொழுதுகள் போகும். மிருகங்களோடு கதைப்பது ஒரு அலாதி இன்பம். திருப்பிக் கதைக்க மாட்டா. சில வேளைகளில் ஆசிரியை - மாணவர் விளையாடும் போது "கணக்கு சரியாச் செய்யாத மொக்கு ஆட்டுக் குட்டிக்கு" மெல்லிய குட்டும் விழும். கொஞ்ஞ்ஞ்ஞ்சம் பொறுங்க!!! நான் குட்டினதைப் போய் அம்மாடச் சொல்லியிருக்குமோ ஆட்டுக் குட்டி? அம்மா ஆடு "குட்டினால் முட்டுவேன்" என்று நினைச்சுக் கொண்டுதான் எனக்குக் கிட்ட வந்திருக்க வேணும். :O|


ஆனாலும் எதிர்பார்ப்புகளின்றி அன்பு செலுத்துறதில ஆடு, மாடு, நாய், பூனைகளுக்கு இணையில்லை...என்ன சொல்றீங்க!

அம்மாவுக்கு ஓர் கடிதம்

அன்புள்ள அம்மா,

நாம் நலம். அதுபோல் நீங்களும் இருக்கக் கடவுளை வேண்டுகிறேன்.

என்னடா நேற்றுத்தானே தொலைபேசியில் கதைத்தாள்.. இன்றைக்குக் கடிதம் போடுகிறாளே என்று நீங்கள் நினைக்கலாம். கடிதம் போல் வராதுதானே அம்மா. கதைப்பவை மறந்து போகும், எழுத்திலிருப்பவை என்றும் இருக்கும்.

நான் வலைப்பதிகிறேனென உங்களுக்குச் சொல்லியிருக்கக்கூடும். இல்லாவிட்டால் இப்பொது தெரிய வந்திருக்கும். ஒன்றும் பெரிதாய் எழுதிக் கிழிப்பதில்லை. கைக்கு வந்ததைக் கிறுக்குவதுதான். என்னைப்போலவே நிறையப்பேர் வலைப்பதிகிறார்கள். ஒவ்வொரு விதமான எழுத்துகளும் கருத்துகளும் வெளிப்படுகின்றன. அப்படி ஒருவர் இன்றைக்கு அவரது அப்பாவைப் பற்றி எழுதியிருந்தார். அது இங்கே. மனதைக் கனக்கச் செய்த பதிவு. தனது அப்பாவைப் பற்றித் தெரிந்ததாக நினைத்ததெல்லாம் தெரியாததாகவே இருந்திருக்கிறது என்கிறார் அம்மா.

என் நிலைமையும் அப்படித்தான். கொஞ்ச நாட்களுக்கு முன் உங்களுக்குப் புத்தகங்கள் அனுப்பினேன் தானே..உங்களுக்குப் பிடித்ததாயிருக்க வேண்டுமேயென யோசித்து அவற்றைத் தேடியெடுக்க எனக்குப் பல நாட்கள் சென்றன. அம்மா என்கிற பாத்திரம் தவிர ஒரு பெண்ணாய் சுய விருப்பு வெறுப்புடைய மனிதராய் உங்களைப் பார்த்ததில்லையே நான். அதுதான் பெரிதாய் ஒன்றும் உங்களைப் பற்றிப் தெரியவில்லை.

உங்களை உடனே பார்க்க வேண்டும் போல இருக்கும். ஆனால் முடியாதே... அடுத்த ஆண்டு போகும் போது போய்ப் பார்ப்போம் என்று நினைத்திருந்த பெரியம்மா இறந்த பிறகு, உங்களைப் பார்க்க வேண்டும் என்கிற நினைப்புத் தீவிரமாகியிருக்கிறது. எனக்கும் உங்களுக்கும் வயது போகிறது. உடல்நிலையிலும் நினைவுகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட முன்பு இயலுமான அளவு நேரத்தை உங்களுடன் கழிக்க வேண்டும். சின்ன வயதில்
கிடைத்த நேரங்களின் அருமை தெரியவில்லை. எத்தனையோ முறைகள் உங்களை நான் காயப்படுத்தியிருக்கிறேன். பிழைகளை இப்பத்தான் உணர்ந்து கொண்டிருக்கிறேன். மன்னித்துவிடுங்கள். அப்பா இல்லாமல் போன பிறகு தனியாய் எங்கள் மூவரையும் வளர்த்தது எவ்வள்வு பெரிய விதயம் என்று இப்ப விளங்குகிறது.

எம்மியினதும் ரீச்சரினதும் இழப்புக்குப் பின் நீங்கள் இன்னும் அமைதியாகி விட்டது போலத் தோன்றுகிறது. உண்மையா? இவர்களிருவரும் தவிர, மாமியைத் தவிர்த்து - நீங்கள் யாருடனும் மனந்திறந்து பேசியதை நான் கண்டதில்லை. சகோதரிகளைப் போன்ற நண்பிகளின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. நினைத்த நேரம் மின்னஞ்சலிலோ தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளக் கூடிய நிலையில் இலங்கையிலுள்ள என் தோழிகளையே நான் மிஸ் பண்ணுகிறேன். பொங்கி வரும் உணர்வுகளை, எண்ணங்களை உடனே பகிர்ந்து கொள்ள முடியாமற் போகிற போது மிகவும் தவித்துப் போகிறேன். பகிர விரும்புபவற்றை கொஞ்ச நேரத்திற்கென்றாலும் மனதில் பூட்டி வைத்திருப்பது கடினமான செயலாக இருக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள் அம்மா?

இங்கே சிட்னிக்கு உங்களைக் கூப்பிட்டுக் கொள்ளலாமே என்று நிறையப் பேர் கேட்டு விட்டார்கள். நானும் உங்களைக் கூப்பிட்டிருக்கிறேன். ஆனாலும் எப்போதுமே முழுமனத்தோடல்ல. அங்கே இருக்கும் சுதந்திரம் இங்கே வராதம்மா. நினைத்த நேரம் பேருந்தில் ஏறிப்போய் தியான நிலையத்தில் இருந்து விட்டு வரலாம்..வேலைக்குப் போகலாம், போய் வருகிற வழியில் மரக்கறிக் கடையில் தேவையானதை வாங்கி விட்டு கைப்பையையோ, குடையையோ மறந்து விட்டுவிட்டு வரலாம்!

பிறர் கை எதிர் பாராது தனியே செயற்பட உங்களால் அங்கே முடியும். ஆனால் இங்கே வந்து அப்படியல்ல. வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடைக்கும் பல பெற்றாரைப் பார்த்திருக்கிறேன். அப்படி நீங்கள் அடைந்து கிடக்க வேண்டியதில்லை என்று தோன்றியதாலேயே உங்களைக் கூப்பிடவில்லை. நான் கூப்பிட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

பிள்ளைகள் வளர்ந்த பிறகு பெற்றோருக்குக் கிட்ட இருப்பது பெற்றாரை அம்மா - அப்பா என்கிற பாத்திரத்திலே மட்டுமல்லாமல், தனி மனிதராயும் பார்க்கக் கற்றுக் கொடுக்கும் என்று நினைக்கிறேன். என்ன நினைக்கிறீங்க?

முதலெல்லாம் அடிக்கடி "எப்ப வாறாய்" என்று கேட்பீர்கள்" இப்போது கேட்பதில்லையே? ஏன்? கேட்காததும் நல்லதுக்குதானோ...எனக்கும் குற்ற உணர்ச்சி வராது. "இப்ப டிரெக்ட் லைனில கதைக்கிறன்..பிறகு கார்டில எடுக்கிறன்" என்றதுடன் சேர்த்துச் சொல்லும் அவசர 5 - 10 சொற்களும், கடிதங்கள் இல்லாமல் வரும் வாழ்த்து மடல்களுமன்றி அடுத்த முறை இன்னும் நிறைய நேரம் கதைக்க வேண்டும் என நினைப்பதும் வாழ்த்து மடலுடன் 10 வரிக் கடிதமும் இரண்டு படங்களுமாவது அனுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வாழ்வதும் வேறெதைத்தருமெனக்கு?

வழக்கம் போல அல்லாமல் கடிதம் கொஞ்சம் கனத்துப் போய் விட்டது. உண்மை பேசினதினாலேயோ என்னவோ.. மனப்பளுவை ஏந்தாத ஒரு அன்பான கடிதத்தில் மீண்டும் சந்திப்போம். பத்திரமாக இருந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு
அன்பு மகள்

பூனை, நாயும், சில கோழிக்குஞ்சுகளும் I

எனக்குத் தெரிந்து எங்கள் வீட்டில் ஒரு நாய், ஒரு பூனை. இவ்வளவும் தான் வளர்கையில் செல்லப்பிராணிகள். அவற்றுக்கும் எனக்குமான தொடர்பை பள்ளிக்கூடத்தில் ஆசிரியை எழுதச் சொல்லும் "எனது செல்லப்பிராணி" கட்டுரையின் 5 வசனங்களில் அடக்கி விடலாம். அவ்வளவு நெருக்கம். அதற்காக நாய்/பூனை பிடிக்காதென்றில்லை. பிடிக்கும் என்றுமில்லை. கிட்டே வந்தால்..கடிக்க முயற்சிக்காவிட்டால் தடவிக் கொடுப்பேன்.

எங்கள் பூனை (பெயர் ஞாபகமில்லை..அதனால் இப்போதைக்கு 'பூனை' என்றே வைத்துக் கொள்வோம்.) வீட்டிற்கு வந்தது எப்படி என்று சொல்கிறேன். நாங்கள் இருந்தது அரச உத்தியோகத்தவருக்கென்று ஒதுக்கப்பட்ட மனையொன்றில்.(குவார்ட்டர்ஸ்) பக்கத்தில் ஓரளவு பெரிய காணி. அதற்குள் ஒரு கிணறு(இல்லை..பூனை இதற்குள் இருந்து எடுக்கப்படவில்லை!!) ஏனோ தெரியவில்லை, ஒரு சிறிய (2 அடி X 4 அடி) செவ்வகத் துவாரம் தவிர்த்து கிணற்றின் மேல் புறம் மூடப்பட்டிருக்கும். வழக்கம் போல கிணற்றுவாசிகள்: தவளைகள் & ஒன்றிரண்டு மீன்கள்.கிணற்றிற்கு10 - 15 மீற்றர் தள்ளி ஊர் மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு. அதற்குப் பக்கத்தில் ஒரு பனை மரம். அப்பாலே 4 அடி எடுத்தால் தெரு. தெருவிலிருந்து வீட்டிற்கு வரும் ஒரு வழி இந்த வெளிநோயளர் பிரிவைத் தாண்டி வருவது. ஒரு நாள் எங்கள் வீட்டுக் கருணைக்கந்தன், பிராணிகளின் உயிர்காப்போன் , போனதொரு பிறவியில் சிபிமன்னனாயிருந்திருக்கக்கூடிய எனது சின்னண்ணா (இதை வாசிச்சா எனக்கு இருக்கு!;O) ) அவ்வழியால் நடந்து வந்துகொண்டிருக்கையில் வழக்கமா எல்லாப் பூனையும் கத்துற மாதிரியே 'மியாவ்..மியாவ்' என்று சத்தம் கேட்டிருக்கிறது. சத்தம் வருகிறது...உருவத்தைக் காணவில்லை. தேடியதில் கண்டு பிடித்தது எங்கே தெரியுமா? பனைமரத்தில்!! அம்மரம் மற்றப் பனைகளோடு ஒப்பிடுகையில் கொஞ்சம் குட்டையானது. யாரையோ பிடித்து மரத்திலிருந்து பூனையை இறக்கினார்களாம். வீட்டில் வைத்துப் பராமரித்தார் அண்ணா. அவருக்கு பூனைகள் என்றால் நல்ல விருப்பம் என நினைக்கிறேன். (ஆனால் தவளையைக் கண்டால் வேறே வினையே வேண்டாம்!! கரப்பானைக் கண்டால் (வீராவேசம்(!?) வரும் வரை) நான் செய்வது போல கதிரையிலிருந்து இறங்க மாட்டார்!!) :OD அதுதான் பூனை வந்த கதை.

நாய் இருந்தது என்று சொன்னேன் தானே..நாய் எப்படி வீட்டே வந்தது..யாரேனும் காப்பாற்றினார்களா என்றெல்லாம் தெரியாது. சூரன் என்று பெயர் வைத்திருந்தார்கள் அண்ணாமார். நல்ல முசுப்பாத்தி. ஒருநாள், ஆளுயர நிலைக்கண்ணாடி, இரண்டு இழுப்பறைகள் கொண்ட ஒரு சின்ன தளபாடம்(Dressing table) இருக்கிற அறைக்குள்ளே போய்விட்டது. வெளியே எவ்வளவு கூப்பிட்டும் வரவில்லை. கண்ணாடிக்கு முன்னுக்குப் போய் நின்றது தான் தாமதம் குரைக்க ஆரம்பித்தது. நிறுத்தவே முடியவில்லை. கண்ணாடியை நகங்களால் கீறி வைத்தது. (கண்ணாடியின் வீரத்தழும்புகளை இன்றக்கும் காணலாம்!!).

இவனுக்கு மட்டும் மிருக வைத்தியர் வந்து போவா. பூனையை ஏனென்றும் இல்லை(அதை நாங்க துளசி மாதிரி அக்கறையா ஒன்றும் பார்த்துக்கொள்ளுறதுமில்ல. அது தன்பாட்டுக்குச் சுத்திவிட்டு வந்து போடுறதைச் சாப்பிடும். அடுப்புக்குக் கிட்ட படுத்துக் கிடக்கும்..பிறகு திரும்ப ஊர்சுத்தப் போகும்.) அந்த வைத்தியருக்கு ஒரு கால் போலியோவோ ஏதோ வந்து, கொஞ்சம் சூம்பினது போலிருக்கும். இழுத்து இழுத்துதான் நடப்பா. வடிவான நீட்டுப் பாவாடை(காலை மறைப்பதற்காக?) தான் அணிவா. ஒன்றின் டிசைன் இன்னும் ஞாபகமிருக்கிறது. கடும்நீல நிறப் பின்னணியில் சின்னச்சின்னதாக மயிலிறகு வரைந்திருந்தது. அவவுக்கு வடிவாக இருக்கும்.

சூரன் ஒருநாள் எழும்பக் கஷ்டப்பட்டு அதன் கூட்டுக்குள்ளேயே படுத்துக் கிடந்தது. கண்ணைப் பார்த்தால் கருவிழியில் வெண்படலம் தெரிந்தது. ஆளனுப்பி மிருக வைத்தியரைக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். அவ பார்த்து விட்டுச் சொன்னா இரவு பாம்பு கடித்திருக்கிறதென்று. அன்றைக்கே சூரன் செத்துப் போனான்.

அதற்குப் பிறகு வடிவான மஞ்சள், சாம்பல் நிறங்களில், கோழிக்குஞ்சுகள் 10 வாங்கி வளர்த்தேன். அம்மாவின் "மருந்தக'த்துக்கு வெளியே ஒரு கூடடித்து கம்பி வலை போட்டு பத்துக் குஞ்சையும் குடி வைத்தோம். காலையில் திறந்து விடுவதும், பிறகு பள்ளிக்கூடத்தால் வந்து கொஞ்ச நேரம் விளையாடிக் கூட்டில் அடைப்பதும் (அடைக்க முயற்சிப்பதும்) தான் என் வேலை. நடுவில் தீனி போட்டு, பருந்து கொத்திக் கொண்டு போகாமல், யாரும் களவெடுக்காமல் பார்த்துக் கொள்வது இவ!
ஒருநாள் இரவு யாரோ பத்தையும் களவெடுத்துப் போய் விட்டார்கள். :O( ஒரே அழுகை.

அதுக்குப் பிறகு வீட்டில மிருகங்கள் வளர்க்கவில்லை. ஆனா மிருகங்களோடு விளையாட்டுக்குக் குறைவிருக்கவில்லை.

(தொடரும்)

குறுக்கால போற எழுத்துப் போட்டி



வலைப்பதிவர்களை வைத்து சும்மா ஒரு சின்ன விளையாட்டு. இதை உருவாக்குவது லேசுப்பட்ட காரியமில்லை என்று இன்றைக்குத்தான் விளங்கிச்சு. அலுவலகத்தில வேலை செய்யிறதை விட்டிட்டு இதைத்தான் முக்கியமாகச் செய்தனான். விடை காண உதவிக் குறிப்புகள் கீழே:


சரியாக விடை சொல்வோருக்கு ஒரு சிறப்புச் சுட்டி பரிசு! (நெத்திச் சுட்டியெல்லாம் இல்லைங்கோ..இது உங்களை ஒரு வலைப்பதிவுக்கு அழைத்துச் செல்லும்). அப்பிடியென்ன சிறப்பு என்று கேட்கிறீங்களா? (தமிழ்) வலைப்பதிவருக்கு வயது 6.



இடமிருந்து வலமாக:

1அண்டங்காக்கா கொண்டைக்காரி..(ரண்டக்க x 3)...16 பதிவுக்கு சொந்தக்காரி (ரண்டக்க x 3) :o)

4 சினேகிதியின் போட்டிகளின் பரிசு "இவரது" சமையல்

5 செல்ல(செல்வங்கள்)ங்கள் உடையவர்

7 முகத்தை மறைக்கப் போடுவது(திரும்பியுள்ளது)

11 பசு+அலை. குழம்பியுள்ளது.

13 பல்லவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கெதிராகக் (முதலில்) குரல் கொடுத்தவர்.

14 போனவார நட் - சத்திரம்(<--இது அவரே சொன்னது!) ;O)

16 அலுவலக க்ராபிக்ஸ் டிசைனர் பொய் சொல்கிறார் என்று முறையிடுபவர்.

18 படிக்கப் போறேன் என்று வலைப்பதிவுக்கு கைகாட்டி விட்டா. கொஞ்ச நாள் கவிதைப் போட்டிகள் நடத்தினவ.

19 வலைப்பதியும் ஒரு "தமிழ"னின் அடைமொழி

20 கோடு என்றும் அறியப்படும்

21 "தவம்" செய்து கவிதையெழுதி "சந்தைப்படுத்து"வார்.

22 "நறை"யில் ஒரு துளியில் நடப்புகள் சொல்லிப் போவார்

25 "குமிழி"களுக்கும் "சிதறல்"களுக்கும் சொந்தக்காரர்.

26 வலையில் "தமிழ்மணம்" வீசக் காரணமாயிருப்பவர்.

28 தோழன்(குழம்பியுள்ளார்)

30 இவரது வலைப்பதிவின் தலைப்பின் பொருள் "கடல் அலை"



மேலிருந்து கீழாக:


1 வசந்தனும் இவரும் ஒருவரே என்று மயக்கம் வருவதுண்டு

2 துளசி, இவரது மகளின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொன்னா

3.சக்தி என்னும் மதுவை உண்போமடா என்று கொஞ்ச நாளைக்கு முன் வரை சொல்லிக் கொண்டிருந்தார்

5 கடலுக்குள் தேடியெடுப்பது.(கீழிருந்து மேலாக)

6 பவித்ரா - இப்படியும் அறியப்படுவார்

8 வல்லமை தாராயோ என்கிறார், சீனத்தைப் பற்றி எழுதுகிறார்.

9 நுனிப்புல் வெட்டுகிறார், "விடியல்" என்பது வடமொழியில் இவர் பெயருக்கு அர்த்தம்.

10 "கீர்த்திக்கு" இவரது பெயர் rhyme பண்ணும்

12 பன்மொழி அறிவார். மகர நெடுங்குழைகாதனின் பக்தர்

14 திருவாளர் அநாமதேயம். இவர் எழுதுவது பலசமயங்களில் இலகுவில் புரிவதில்லை.

15 வள்ளல் ஒருவர்

17 மண்டபத்திலே சிவனைக் கண்டு கதைத்தவர்.

18 பத்தி எழுத்தாளினி, கீழிருந்து மேலாக

20 தமிழில்: அறிவு, நிலவு; மலையாளத்தில்: போதும்; சிங்களத்தில்:போதாது

23 நிலவோடு கதைத்த பைத்தியம் (என்று கதை எழுதினார்) ;O)

24 யாழிசைக்கும் வலைப்பதிவர்

27 Mykirukkals என்று கவிதை எழுதுகிறார்

29 விவசாயி.

நட்சத்திரம் பார்க்கலையோ..நட்சத்திரம்!

எழுதுகிறவர்களை ஊக்குவிக்கவும், அவர்களது பதிவுகளுக்குக் கொஞ்சம் கூடுதல் கவனிப்பு அளிக்கப்படவுமாக என்று "மண்டைக்குள் & பதிவில் சரக்கு உள்ளவர்கள்" வாராவாரம் தமிழ்மண நட்சத்திரமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பெருந்தலைகளெல்லாம் வந்து போகிற இடத்தில, என்னை நட்சத்திரமாக்கி வேடிக்கை பாக்க நினைச்சிருக்கிறாங்க! ம்ம்..வாற சந்தர்ப்பத்தை ஏன் விட? மதி எனக்கு முதலில் அஞ்சல் அனுப்பிக் கேட்ட போது உண்மையான பெயரைச் சொல்ல வேண்டும் என்கிற காரணத்தினாலும் (ஏதோ சாட்சி பாதுகாப்பு திட்டத்துல இருக்கிறவ மாதிரிக் கதைக்கிறா!:O) ) என்ன எழுதப்போகிறேன் என்று தெரியாத காரணத்தினாலும் முடியாது என்று சொல்லிவிட்டேன். இந்த முறை, இனிமேல் அடுத்த வாய்ப்பு வருமோ இல்லையோ என்று தெரியாததால் ஓமென்று தலையாட்டிவிட்டேன். இப்பவும் என்ன எழுதப் போகிறேன் என்று தெரியவில்லை.

( "ஐயோ..ஷ்ரேயாவா இ.வா.ந!! யாராரை நட்சத்திரமாக்கிறதெண்டு யோசிக்கிறதில்லையா" என்பவர்கள் மதியை தொடர்பு கொள்ளலாம்!! நீங்க அப்பிடி நினைக்கிறீங்களோ இல்லையோ..எங்கட கணினிக்கே நான் நட்சத்திரமாகிறது பிடிக்கல்ல. படுத்து விட்டது! அப்பாடா! என்றெல்லாம் அவ்வளவு கெதீல மூச்சு விடாதீங்க. இருக்கவே இருக்கு..அலுவலகக் கணினி!!! ) யாரங்கே!!..ஓட முயற்சிக்கிறவங்களையெல்லாம் பிடித்துக் கட்டி வையுங்கள்! ஓட முயற்சிக்காதவர்களுக்கு "க்ருபா" செலவில் கரும்புச்சாறு! ;O)


வலைப்பதியத் தொடங்கின புதிதில் என்னென எழுதலாம் என்று யோசித்த போது, மனதுக்கு வந்தது, நடந்த/கேள்விப்பட்ட சில நகைச்சுவைச் சம்பவங்களை எழுதலாமென்று. ஆனாலும் அதை முசிப்பாத்தியாக எழுதும் கலை இன்னும் எனக்குக் கைவரவில்லை என்றே தோன்றுகிறது. தொடர்ந்து எழுத எழுத, என்ன எழுதலாம் என்பது தன்னாலேயே பிடிபட்டு விடும் என்றார்கள் முன்னோடிகள். நானும் ஒன்றரை வருடமாக எழுத முயற்சிக்கிறேன். ஓரளவுக்கு என் பதிவுகளில் இடுபவை பற்றிய தெளிவு இருந்தாலும் இன்னும் "என்ன எழுதலாம்" என்கிற அந்த ஆரம்ப கால மயக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆகவே ..நீங்கள் எதிர்பார்த்தது போல எனது பதிவுகள் அமையாதிருந்தால் குறை கொள்ள வேண்டாம்..இப்போது எழுதுவதை/எழுதப்பட்டுள்ளதைப் பார்த்து, வாசித்து அதை எப்படி இன்னும் சிறப்புறச் செய்யலாம், என்று சொல்லுங்கள். என் எழுத்தையும் என்னையும் சீர்ப்படுத்திக் கொள்ள உங்கள் கருத்துக்கள் உளிகளாய் உதவும்.

பின்னூட்டத்தில் சந்திப்போம்.

அங்கே போல இங்கேயும்!!

லண்டனில் குண்டு வெடித்தாலும் வெடித்தது, எல்லா இடத்திலும் பாதுகாப்பைப் பலப்படுத்துகிறார்கள். அங்கே தொடர்வண்டியில் குண்டுகள் வெடித்ததற்கு மறுநாளும்,தொடர்ந்து ஒன்றிரண்டு நாட்களுக்கும் இங்கே தொடர்வண்டி நிலையங்களில் காவல் அதிகாரிகள் நின்றிருந்தார்கள். பிறகு காணவில்லை.

இங்கே எடுத்துள்ள ஒரு ஆய்வின் படி அவுஸ்திரேலியர்களுக்கு, தாங்கள் பயங்கரவாதிகளின் இலக்காக இருப்பதாகத் தோன்றவில்லையாம். ஆனாலும் பிரதமர் அண்ணாச்சி அமெரிக்காவுக்கு வால் பிடிப்பதை விடவில்லை. பெரியண்ணா செய்கிறார்..நானும் செய்யப்போறேன் மனப்பாங்குதான். லண்டனில் போலே, அமெரிக்காவில் போலே ஒரு தாக்குதல் இங்கேயும் இடம் பெறுமானால் அதற்கு: அரசு அமெரிக்காவுக்குத் துணை போவதும், சிறு செய்தியையும் ஊதிப் பெரிசாக்கும் ஊடகங்களுமே இரு பிரதான காரணிகளாக இருக்கும்.

தேசிய அடையாள அட்டை கொடுக்கப்பட வேண்டும் என்பதும் இவ்வரசின் நிலைப்பாட்டில் ஒன்று. ஆனாலும் அதற்கு பெருமளவு ஆதரவு கிட்டியிருக்கவில்லை. லண்டன் குண்டு வெடிப்பின் பின்னர் தேசிய அடையாள அட்டை இருக்க வேண்டியது கட்டாயம் என்னும் எண்ணம் சற்றே வலுப்பெற்றுள்ளது. இனிமேல் பேருந்து, நீருந்து(ferry), தொடர்வண்டிப் பயணிகளின் பைகள் எழுமாற்றுச் சோதனைக்கு(random checks) உட்படுத்தப்படுமாம். அதற்கு, பாதுகாப்பிற்கு ஓரளவு உத்தரவாதம் என்பதால் ஆதரவும், தனிமனித சுதந்திரத்தில் தலையிடுகிறார்கள் என்ற காரணத்தினால் எதிர்ப்பும் சம அளவில் மக்களிடையே காணப்படுகிறது. இன்றைக்கு காலையில் தொடர்வண்டி நிலையத்தில் பயணச்சீட்டுச் சரிபார்க்கும் பொறியின் அருகில் நின்று கொண்டு காவலர்கள் எழுமாறாக ஒருவரைத் தம்மருகில் அழைத்து பையைக் காட்டச் சொல்லிக் கேட்கிறார்கள். ஆளை அடையாளம் காண வாக ஓட்டுனர் அனுமதிப்பத்திரத்தையும் வாங்கிப் பார்க்கிறார்கள். தேசிய அடையாள அட்டை வரும் காலம் மிகத் தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது!

கேளுங்கள் - (ஒருவேளை) தரப்படும்!

சில கேள்விகளுக்கு பதிலளிக்கலாம் என்று யோசித்தேன். இலகுவாய் அலுவலகத்திலிருந்து பதிவு போட வேற ஒன்றும் ஞாபகம் வருதில்லையே! கேள்விகளை நானே கேட்டு பதிலையும் நானே போட்டா நல்லாயிருக்காது. அதனாலே...

டும்டும்டும் (வேற ஒன்றுமில்ல..முரசொலி)

"மீரா ஜஸ்மின் - சதா" ஒப்பிடுக என்று (அறிவுபூர்வமாக!!) கேட்காமல் சும்மா கேள்விகளைக் கேளுங்க. இங்க பின்னூட்டத்தில கேட்டாலும் சரி..தனிமடலிலே கேட்டாலும் சரி.

இங்கே முக்கியம்: கேட்டல் மட்டுமே^ (^ என்றால் நிபந்தனைகளுக்குட்பட்டது என்றும், அவை கீழே நுண்ணிய எழுத்தில் தரப்பட்டுள்ளன என்றும் அர்த்தம்)(நிபந்தனைகள் சின்ன எழுத்திலதான் இருக்கணும் என்பது நிபந்தனைகளின் சொல்லப்படாத நிபந்தனை. அதற்கேற்ப சின்ன எழுத்தில் தரப்பட்டுள்ளது!)


^கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும் இந்த வாரக்கடைசியில் அல்லது அடுத்த வாரம் இங்கே பதிக்கப்படும். கேட்கப்படும் எல்லாக் கேள்விகளும் பதில் பெறும் என்றில்லை. (தலைப்பை ஒருமுறை பார்க்கவும்!)

அதாவது: கடமையைச் செய்..பலனை எதிர்பாராதே! ;o)

பெட்டகம்