கவிதை என்ற பெயரில்..

பள்ளிக்கூடத்தில் தமிழ் மன்றம் நடத்தி வந்தோம். A/L படிக்கும் போது தமிழ் மீடியத்துக்குப் பொறுப்பான ஆசிரியையிடம் கெஞ்சி கூத்தாடி அனுமதி வாங்கி , பிறகு அவவையே தலைமையாசிரியையிடம் தூது அனுப்பி ஒருமாதிரி கஷ்டப் பட்டு அனுமதி எடுத்து ஒரு கலைவிழா நடத்தினோம். அதிலே ஒரு புத்தகம் வெளியிடுவது என்று முடிவெடுத்து அதற்கு கதை கவிதை கட்டுரை என்றெல்லாம் சேகரித்து வெளியிட்டோம். அதிலே பெரிய கவிஞி என்ற நினைப்பில் நான் எழுதிக் கொடுத்து வெளிவந்தது தான், எனக்கு நினைவு தெரிந்து முதல் முதலாய் நான் கிறுக்கிய கவிதை. அண்ணா சொல்வார் நான் சின்ன வயதிலேயே(அடடா...child prodigy!) கவிதை ஒன்று சொன்னேன்/எழுதினேன் என்று. எனக்கு ஞாபகமில்லை. 'எனக்குப் பசிக்குது, கடையில சாப்பாடு இருக்குது' என்று தொடருமாம், மீதி மறந்து விட்டார் (நல்ல காலம்...சின்ன அண்ணாவைக் கேட்க வேண்டும் என்று சொல்லவில்லை!!)

கலைவிழாவின் ஞாபக இதழில் வந்த என் 'கவிதை' எதைப் பற்றி என்று மறந்து விட்டேன்..புத்தகமும் கைவசமில்லை பார்த்து இங்கே தட்டச்ச.(தப்பினேன் என்று யாரோ சொல்வது கேட்பது போல ஒரு பிரமை!) =O)

பள்ளிக்கூடத்தில் கடைசி நாளுக்குச் சற்று முன், A/L பரீட்சைக்கு முன், எல்லோரும் ஆட்டோகிராஃப் பரிமாறிக் கொள்வது வழக்கம். அதிலே எழுதும் போது எல்லோருக்கும் தாங்கள் பெரிய கவிதாயினிகள் என்ற நினைப்புத் தான் (நானும் விதி விலக்கல்ல). உரியவரிடம் திரும்பி வரும்போது நிறைய 'நிலாப் பெண்'களும், 'உன் ஆயிரத்தொரு ஞாபகத்திலே என்னையும் ஒன்றாக்கு!' என்று கேட்பவர்களும் 'மரணப் படுக்கையிலும் பழகிய மணித்துளிகளை மறக்காத இன்னுயிர்த் தோழி'களும் அந்தச் சின்னப் புத்தகத்துக்குள்ளே குடி வந்திருப்பார்கள். உணர்வுகளையெல்லாம் தெரிவிக்கத் துடிக்கின்ற காலமும் வயதும் அது.

பள்ளிகூடத்திலிருந்து விலகுகிறோம் என்பதே எனக்கும் இன்னும் பலருக்கும் பெரிய தாக்கமாய் இருந்தது. கவிதையா இல்லை வசன நடையா என்ற தெளிவில்லாத ஒரு நடையில் அப்போது நான் எழுதியதுதான் இது:

பள்ளி வாழ்க்கை பருவ காலம்
பாதி வாழ்க்கையின் வசந்த காலம்
வசந்தம் தரு நாள் மாறிய போதும்
வாடாமலராய் நினைவுகள் நிலைக்கும்
பள்ளியில் பயின்ற காலங்கள்
வாழ்க்கைச் சோலையின் இனிய கோலங்கள்
காலங்கள் மாறலாம்...கோலங்கள் அழியுமா?
குறும்புடன் பேசி, குழப்படிகள் செய்து
கூடி மகிழ்ந்த அந்த மின்னல் வாழ்க்கை -
இனியும் வருமா? இன்பங்கள் தருமா?
எத்தனை எத்தனை நினைவு மீன்கள்
என் ஞாபக நீரோடையில்!
இதய உதட்டில் மென்வருடலாய்
வண்ணத்துப்பூச்சிகள் - MC யின்
ஞாபக வர்ணங்கள் என்றும் எனக்குள்ளே.



இதற்குப் பிறகு நான் கவிதை என்ற பெயரில் ஒரு முயற்சியும் செய்ததாய் ஞாபகமில்லை.

பெட்டகம்