பிஞ்சுமனம்

27ம் திகதி அபிநயாக்குப் பிறந்தநாள். எட்டாவது பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த முறையும் பெரியவர்களுக்கென்றும் குழந்தைகளுக்கென்றும் தனித்தனியே பிறந்தநாள் கொண்டாட்டம். விதம் விதமாய் கேக்கும் வேறு தின்பண்டங்களும் பெரியவர்களுக்கென்று உணவும் இருக்கும். இதற்கெனவே பிறந்தநாளுக்கு இன்னும் எத்தனை என்று நாட்கணக்குப் பார்ப்பாள். தம்பியினதுக்கும் நாட்கணக்குப்பார்ப்பது இவளே. அபிநயாக்குத் தம்பி இருந்தாலும் அவள் அம்மா செல்லந்தான். பிறந்த நாள் தொடக்கம் ஒரு வயது வரை ஒவ்வொரு நாளும் நிழற்படம் எடுத்ததும், வெட்டிய தலைமயிரில் கொஞ்சத்தை சிறிய டப்பாக்களில் போட்டு வைத்திருப்பதும் அம்மாவின் சிறப்புக் கவனிப்பில் சில.

அம்மாவின் தம்பி - இந்திரன் மாமாக்கும் மேரி மாமிக்கும் குட்டிக் குழந்தை விரைவில் பிறந்துவிடும். அதுவும் இந்த வாரமே. குட்டிப்பாப்பாவைப் பார்க்கப் போகும் உற்சாகம் மனதில் நிரம்பியிருந்தது. காணும் எல்லாரிடமும் வரப்போகும் குட்டி பேபியைப் பற்றித்தான் கதை. உடனே தூக்குவேன்..வீட்டே கூட்டி வருவேன் தம்பியும் நானும் பேபியுடன் விளையாடுவோம் என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

வெட்டிய கேக்கைக் கொடுக்க வந்த அபிநயாவை இழுத்துப் பிடித்த ரேணு மாமியின் "எப்ப பேபி வரும்?" கேள்விக்கு "She came now, few minutes ago. we are going to see her after the party. we have the same birthday" என்று பதில் சொன்ன அபிநயா ரேணு மாமியின் நச்சு வசனங்களை எதிர்பார்த்திருக்கவில்லை.

"இன்டைக்குத்தான் அவக்கும் birthday. அப்ப இனி உமக்கு ஒரு partiesம் இருக்காது, இனி அவக்குத்தான் எல்லாம். same birthday என்ட படியா இனிமேல் no one will come to your party. everyone will go to her's."

முகஞ் சிறுத்துப் போனது அபிநயாக்கு. ஒன்றும் பேசாமல் நகர்ந்து விட்டாள்.

மருத்துவமனையில் புது வரவு அமுதாக்குட்டி "ஙா ஙா" என்று கை கால் ஆட்டிச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. எல்லாரும் கிட்டே போய்ப் பார்த்தார்கள். அபிநயா மட்டும் தள்ளியே நின்றிருந்தாள். மேரி மாமி "பேபி பாக்கல்லயா? துக்கி மடியில வைச்சிருக்கிறீங்களா?" என்று கேட்டதற்கு அமுதாக்குட்டியை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த அபிநயாவிடமிருந்து இல்லையென்ற தலையாட்டலே கிடைத்தது.

-- கற்பனையல்ல :O(

பெட்டகம்