பயணங்கள் முடிவதில்லை

எழுதுற பைத்தியம் விட்டுவிட்டது நாம் தப்பினோம் என்று நினைத்தவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். கொஞ்சம் இடைவெளி விட்டா இப்பிடியெல்லாம் மனக்கோட்டை கட்டக் கூடாதுங்கோ! ;o)

ஜூலையில் போகவிருந்து (Country linkக்கு $240 தானமளித்து)தடைப்பட்ட மெல்பேர்ண் பயணம், சாமத்தியப்பட்ட மருமகளின் புண்ணியத்தில் நிறைவேறிற்று. கணவருக்கு வெள்ளி இரவு விரிவுரைஇருந்தபடியால் விழா நடக்கும் நாளன்றே(சனிக்கிழமை) காலைபுறப்பட்டு அன்றிரவே திரும்புவதாக திட்டமிட்டு விமான பயணஒழுங்கெல்லாம் செய்தோம். காலை 11 இலிருந்து மதியம் 2 வரை விழா. விமானம் புறப்படும் நேரம் காலை 6 மணி. போய்ச்சேர 1 1/2மணித்தியாலம் எடுக்கும். வீட்டிலிருந்து 40 நிமிட ட்ரைவ்+புறப்பட 45 நிமிடத்திற்கு முன்னர் வி. நிலையத்தில் நிற்க வேண்டியது என எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு காலை 3 மணிக்கு அடியேன் எழுந்திருக்கவேண்டி ஏற்பட்டது. முதல் நாளே கொண்டு போக வேண்டிய பொருட்களை எடுத்து வைத்து விட்டதால் பிரச்சனை இருக்கவில்லை. குளித்துவெளிக்கிட்டு கணவரை எழுப்பி வெளிக்கிட வைத்து வழமையான் தேநீர் ஊற்றுதல்+சாமான் எல்லாம் வைத்தாயிற்றா என்ற சரி பார்த்தல்களுடன் நேரம் கழிந்தது.

வீட்டிலிருந்து புறப்பட்டு விமான நிலைய நீண்ட கால தரிப்பிடத்தில் கார் நிறுத்தி 15 நிமிடத்திற்கொரு முறை வரும் Shuttle பேருந்துக்குக் காத்து நின்றோம். ஒரு குடும்பம் வந்தது. 3பையன்களும் அம்மா அப்பாவும். "Come here darling" - சின்னவனைத் (2 - 3வயது)தூக்கி மடியில் இருத்திக் கொண்டா அம்மா. அவன் நழுவி விடுபட்டுஅப்பாவிடம் ஓடிச் சென்றான். அம்மாவுக்கு யாரையாவது தூக்கிவைத்திருக்க வேண்டும் போல..2ம் மகனைக் கூப்பிட்டு "You can't be warm in that" என்று சரியாக இருந்த ஜக்கெற்றைச் சரி செய்து மடியில்இருத்தி கொண்டா. சற்றே வெட்கத்தில் நெளிந்தாலும் தாயின்மடியிலேயே இருந்து கொண்டான். பேருந்து வந்தது. விமான நிலையத்தில் வழமையான பாதுகாப்பு பரிசோதனை. ஒரு மெட்டல் டிடெக்டருக்கூடாக போகவேண்டுமல்லவா..நானும் போனேன்....யப்பா..கீக் கீக் என்று ஒருஅலறல்.பாதுகாப்பு அதிகாரி பயந்து போனார். ஏதாவது உலோகசாமான் அணிந்திருக்கிறாயா என்று கேட்டார்..தாலிக்கொடியையும் தாலிகோர்த்திருந்த சங்கிலியையும் கழற்றி அவர் கையில் கொடுத்து விட்டுமறுபக்கம் வந்து வாங்கிக்கொண்டேன். "நீர் தாலி கோர்த்திருந்த சங்கிலியை கழற்றியிருக்கத் தேவையில்லை. எங்கட கல்ச்சர் படி நான் கழற்றக்கூடாது என்று சொன்னால் அவை உம்மள force பண்ண ஏலாது" என்றுஎன் பாதி மொழிந்தார். (எனக்கு இதிலெல்லாம் பெரிய "இப்பிடித்தான்செய்ய வேணும், இது செய்யக் கூடாது" கள் இல்லை) பாதுகாப்பு அதிகாரிதனது கடமையை செய்ய நான் ஒத்துழைத்தேன்..அவ்வளவுதான்.(உங்கள் கருத்து என்ன?கழற்றலாமா..கூடாதா??)

பயணம் இனிதாக இருந்தது.கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்குப் பின்னான விமானப் பயணம். வி.பயணம் ஒரு தனி சுகம்தான்.. இல்லையா??

விமானம் தரையிறங்கி நாங்கள் வெளியில் கால் பதித்தோம் ஒரு மணம் மூக்கைத் தாக்கியது. என்னடா மணக்குது என்றால்..பச்சைப் புல்!! மெல்பேர்ணின் பிரதான வி.நிலையமன்றி இது இன்னுமொரு சிறிய வி.நிலையம். கட்டடத்துக்குள்ளே வந்து முன்பதிவு செய்த வாகனத்தின் சாவியை பெற்றுக்கொண்டோம். (இணையம் எவ்வளவு வசதிகளை அளிக்கிறது!!). வாகனம் தேடி கதவு திறந்து சில்ல்ல்லென்ற காலைக்குளிருக்கு இதமாய் சூடு பரவ பயணமானோம். டன்டினொங் வந்ததும் அவளுக்கு என்ன கொடுப்பது என்ற பிரச்சனை மீண்டும் தலை தூக்கிற்று. காசு குடுப்பம், விருப்பமானது அவள் வாங்கட்டும், சின்னப்பிள்ளை தானே- இது நான். கணவரோ " நீங்க அத்தை. நகை கொடுக்கிறது தான்பெட்டர்..மற்றது நகையெண்டா வச்சும் பாவிக்கலாம் தானே". இங்கே ஒன்று சொல்ல வேண்டும்..எனக்கும் தங்க நகைக்கும் எட்டாத தொலைவு. ஏனோ வெள்ளி, தகர(இமிட்டேஷனை அம்மா அப்படித்தான் சொல்வா) நகைகளிலிருக்கும் ஆர்வத்தில் துளிதானும் தங்கத்தில் இல்லை. சரி..ஒருமாதிரியாக காசே கொடுப்பதென்று தீர்மானித்து அண்ணா வீடு நோக்கிச் சென்றோம். அழகாய் கோலம் அணிந்து வாசல் வரவேற்றது. அன்பளிப்பைக் கொடுத்து கொஞ்சி விட்டு வெளிக்கிடப் போனேன். ஏற்கெனவே பிளீற்றுகள் எடுத்து மடித்ததால் ..யுரேக்கா!! பிளீற் பிரச்சனை -இல்லவே இல்லை. புறப்பட்டோம் மண்டபத்துக்கு. விழா பற்றி அண்ணா சொன்னதிலிருந்து 2 ஆச்சரியங்கள் எனக்கு.
(1) நிவேக்குட்டி(இந்தமருமகள்)இந்த வெளிக்கிடுதல்கள், மண்டபத்தில்விழாவைத்தல்களுக்கு விரும்பி ஒத்துக் கொண்டது (2) சாமத்தியச் சடங்கு மண்டபம் எடுத்து கொண்டாடும் அளவில்இருப்பது. (ஏன் பழங்காலத்தில் பெரிதாய் விழாவெடுத்துக்கொண்டாடினார்கள்..அந்தக் காலத்தில் அதற்கான தேவை என்பவற்றையெல்லாம் எம்மக்கள் வசதியாக மறந்து விட்டார்கள் போல)
சரி.. விழாவில் அத்தையையும் பெரிய மனுஷியாக மதித்து ஆராத்தி எடுக்கச் சொன்னார்கள். அத்தைக்கும் சந்தோசம்..வடிவாய் எடுத்தா. நன்றாக நடந்தது விழா. என் கணவரும் அண்ணாவும் ஏதோ தேவைக்காக வெளியில் சென்றிருந்தார்கள். தூரத்து உறவினரான ஒரு அண்ணாவிடம் கதைத்துக் கொண்டிருந்தேன். அவரது தங்கைகளும் நானும் நல்ல தோழிகள்.இவரும் நல்ல முஸ்பாத்தியாக கதைப்பார். திருமணம் நிச்சயமாகினது பற்றி, கிட்டடியில் ஊர் போய் வந்தது பற்றி மற்றும்பல விஷயங்களும் சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தோம். ஆனாலும் இருவரும் மறந்து விட்டோம் தமிழனுக்கு குறுக்குப் புத்தியுண்டு என்று!விழா முடிந்து எல்லாம் ஒதுக்கி வைத்து ஆறி அமர்கையில்அதிலிருந்த மாமிகள் இன்னொருவரது சேலையைப்பற்றியும் தத்தமதைப்பற்றியும் மும்முரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.பக்கத்திலிருந்த அக்கா/மாமிஅந்த அண்ணாவைக் காட்டிக் கேட்டா "அவர் உங்களுக்குஎன்னமுறை?அண்ணையோ?". சிரிப்பு வந்தது. இல்லை..தெரிந்தவர் என்றுசொல்லி இன்னும் குழப்பிவிட குறுக்குப்புத்தி யோசித்தது. வாய் "ம்ம்..அண்ணாமுறைதான்" என்றது. மாமி சொன்னா "அப்ப சரி".

அட இதை மறந்து விட்டேனே..மத்தியான சாப்பாட்டு நேரத்தில் கணவருடன் மேல் குறிப்பிட்ட அண்ணா, சந்திரன் அண்ணா,அவரது துணைவி & இன்னும் 3 -4 பேருடன் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் அண்ணாவையும் கணவன் - மனைவி என தவறாகப் புரிந்துகொண்டாவாம் என்று ஒரு மாமி சொல்ல அவவின் தோழி என் கணவரைப் பார்த்து"அப்ப உங்களுக்கு நல்லம் என்ன..வேற பெட்டைகளைப் பார்க்கலாம்" என்றா.என்னவருக்கு "ஏறி" விட்டது. ஆனாலும் அடக்கிக் கொண்டு சீ..எனக்கு என்ரமனிசி போதும்" என்றார்.

விழா முடிந்து வீட்டுக்கு வந்ததும் நான் தூ.உ.அண்ணாவிடம் அந்த மாமி, இவர் என்ன முறை எனக் கேட்டதைச் சொன்னேன். சிரிசிரியென்றுசிரித்தார். பிறகு அவ ஏன் அப்படிக் கேட்டா என்பதன் காரணத்தைச் சொன்னார். அவ அந்த அண்ணாவுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் பெண்ணின் உறவினராம். "தன் உறவினப் பெண்ணைக் கட்டப் போகிறவன் என்ன இன்னோருத்தியோடு சிரித்துக் கதைக்கிறானே" என்ற அக்கறையாம்!! இப்பிடியான கூத்துகளுடன் நன்றாகக் கழிந்தது நாள். கணவரது நண்பர் கனடாவிலிருந்து குடி பெயர்ந்துள்ளார். அவரையும் எங்களின்மெல்பேர்ண் விசிற்றில் அடக்கத் திட்டமிட்டு அங்கே சென்றோம். இரவுச்சாப்பாட்டிற்கு நிற்கவில்லை, அவர்களுடன் செலவழித்த நேரம் காணாது என்று ஒரே முறைப்பாடு. அங்கிருந்து விமான நிலையத்திற்குச் சென்றால் செக்-இன் முடிந்து 12 நிமிடங்கள் ஆகி விட்டது. பயணச்சீட்டில்குறிப்பிட்டிருந்தார்கள் 30 நிமி.க்கு முன்னமே வந்துவிடும்படி. அதையார் பார்த்தது! கணவரோ காரை ஒப்படைக்க பக்கத்துக் கட்டடத்துக்குப் போய் விட்டார். எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் பணிப்பெண் மசியவில்லை. அவளது நிலையும் எனக்கு விளங்கியதால் சரியென்று விட்டுவிட்டு அருகிலிருந்த கதிரையில் அமர, கணவரும் வந்து என்னிடம்விஷயமறியவும் சரியாக இருந்தது. அவளிடம் ஏற்கெனவே நான் முன்னெச்சரிக்கையாக சொல்லி வைத்ததால் என்னவரின் சாம பேத தண்ட உபாயங்களையெல்லாம் இயல்பாகக் கையாண்டாள் அப்பெண். பிறகென்ன..உபரியாக $164 கட்டி மறுநாட் காலை பயணத்திற்குப் பதிவு செய்து, மீண்டும் கார் எடுத்து நண்பர் வீடு நோக்கிப் பயணித்தோம். காலையில் தவறவிட்ட ஓர் விளம்பரம் கண்ணில் பட்டது.(அதை சொல்ல முதல் 3 விஷயம். நாங்கள் போன வி.நிலையத்தின் பெயர் Avalon. நகரிலிருந்து 30 நிமிடம் தள்ளி உள்ளது.இங்கே அவுஸ்திரேலியாவில் Have *** (அட.. wild card!) என்பதை ஸ்லாங் ஆக "avva*** என்பார்கள். உதாரணத்துக்கு: have a good day என்பது 'avva good day" ஆக மாறும்.)

இதுதான் விளம்பரம்: "Avalong flight ahead?next time fly Virgin Blue"

தலைக்கு மேலே ரொம்ப ப்ரைட்டாக பல்ப் ஒளிர்ந்திருக்கு!!

நண்பர் வீடு வந்து, பலகதை பேசி இரவல் இரவாடையில் படுக்கப் போகையில் 12 மணி. 5 மணிக்கு (ஞாயிற்றுக்கிழமையிலும் சாமம் வழியே எழும்ப வேண்டி இருக்கு!!) எழும்பி குளித்து வெளிக்கிட்டு, சரியான நேரத்துக்கு வி.நிலையம் வந்து, உலோகப் பறவையில் ஏறி, சிட்னியில் தரையிறங்கினோம். சிட்னி விமான நிலையத்திலேயே காலையுணவை முடித்துக் கொண்டு ஷட்டில் பஸ் எடுத்து நீ.கா.த.இலிருந்து காரெடுத்து அவனுக்கு $30 அழுது, வீடு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் அத்தானோ கல்லுப்போல உறுதியாய் இருக்க மெல்லியலாள் (என்ன சிரிப்பு?ம்ம்??) நான் பாழும் Flu க்கு விருந்தோம்பினேன். நேற்றுத்தான் கொஞ்சமாய் மீண்டு வந்து வேலைக்குத் திரும்பியுள்ளேன்.

பி.கு: பவித்ரா போல எனக்கும் தொடர் எழுத (90% மொழிபெயர்ப்புத்தான் என்றாலும்) வார்த்தை முட்டுது. நேரமும் வார்த்தையோடு சேர்ந்து கொண்டு இரட்டை முட்டு!! என்றாலும்..ஒலிம்பிக் தேசம் வரும்....வரும்..வரும்..வரும்..வரும்.வரும் வரும் வரும்வரும்வரும்.....


பெட்டகம்