அலையே..நீ அலையாதிருக்கக் கடவது!


ஏற்கனவே அலை பாய்ந்த நிலையில் இருக்கின்ற எம்மேல் ஏன் இந்த அலை பாய்ந்தது?

இயலுமான உதவியை இங்கிருந்தே செய்து விட்டு, அது போய் சேரவும், இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்கும், ஏனையோருக்கு இழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்திக்குமாக என்று வேண்டுதல்கள் நிறைந்த கனத்த மனதுடன் வலம் வருகிறோம்.

இலங்கை-இந்தியாவுக்குச் சென்று மீட்பு / நிவாரண பணிகளில் ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? மருத்துவச் சேவை போன்று அத்தியாவசிய துறைகளில் பயிற்சியுள்ளவர்கள் மட்டுமா இங்கிருந்து செல்லலாம்? தயவு செய்து அறியத் தரவும்.

அதிகாலை என்ன வேளை?

தமிழ் மருத்துவ நிதியத்தினர் நடாத்திய முத்தமிழ் மாலை 04 இல் இடம்பெற்ற நாடகத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. "ஆரொடு நோகேன்" என்ற பெயரில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைக்களுக்கு யாரை நோவது என்பதே கருப்பொருள். நகைச்சுவையாக நல்லாக இருந்தது. அதிலே கூடவே நடித்த ஒருவரின் கடி சொல்லி மாளாது. நடிக நடிகையர்(சரி சரி...நீங்க "நினைப்புத்தான்" என்று சொல்வது கேட்கிறது!!) நிகழ்ச்சிக்குப் அடுத்த கிழமை உணவகமொன்றில் ஒன்று கூடினோம். அங்கே வைத்து ஒருவர் கடித்த கடி இருக்கிறதே...

ஒருவர்: அண்ணா, ரிமோட் கொண்டுவந்தனிங்களா?கடியர்: அவவை வீட்ட விட்டிட்டு வந்திட்டனே!!

நாடகத்தின் ஒளிப்பிரதியைப் பார்க்கையில், அதிலே நாடக இயக்குனர் சொன்னார் "இந்த நாடகத்தை உங்கள் முன் அரங்கேற்றுவது என் பாக்கியம்"அதற்கு 'கடி'யர் "அது யாரது பாக்கியம்?".."எங்களுக்குத் தெரியாம எப்பிடி நாடகத்தை மேடையேத்தினவ?"

பாட்டுக் கச்சேரி வைத்தோம்...கடி மன்னன் பாடுகிறார்..."றாவும் கள்ளும் கைகளில் ஏந்தி..."(பாலும் பழமும் கைகளில் ஏந்தி..)"உளுந்து வடையை சட்னியில் தொட்டு சாப்பிட்டு பாரு ஊ .., என் பேரு வடையப்பா,சூடான வடையப்பா...சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாய்ப் போயிற்று.

கடைசியாய் பாடினார் இன்னுமொரு மாற்றிய பாட்டு... இதற்கு சிரிப்பு வரவில்லை..எல்லார் முகத்திலும் அப்பட்டமாய் தெரிந்தது வலி.

'80களில் வந்த பாடலாம்.."அதிகாலை..சுப வேளை..உன் ஓலை வந்தது..."
மாற்றிய பிறகு: "அதிகாலை..கெட்ட வேளை..பொம்பர்(bomber) வந்தது.."

கதவுகளை பூட்டுங்கள்


நீண்ட நாட்களுக்கும் மகவுப்பிரச்சனைகளுக்கும் பிறகு பிறந்த அரிய மகளாய், செல்லத் தங்கையாய் வளைய வந்த 6 1/2 வயது அழகான குட்டிப் பெண் இன்று இல்லை. தன் தகப்பன் மறைவையொட்டி தாயார் மகனுடன் இலங்கை சென்றிருந்த வேளையில் செல்லப்பெண் சிறகடித்துப் பறந்துவிட்டாள். அப்பாவும் மகளுமாய் நண்பர் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். நண்பர் வீட்டில் நீச்சல்குளத்திற்கு போடப்பட்டிருக்கும் பாதுகாப்பு வேலியின் காந்தப்பூட்டு சரியாக அடித்துச் சாத்தாததால் திறந்தேயிருந்திருக்கிறது. பிள்ளையை காணவில்லையெனத் தேடும் போது நீச்சல் குளத்தில் உயிரற்றவளாகத் தான் கண்டிருக்கிறார்கள். cleft pallete குறைபாடு இருந்ததால் நீச்சல் கடினம்.

நேற்று viewing. தாய் விறைத்துப் போய் உட்கார்ந்திருக்க, தந்தையோ தூங்கும் மகளின் கன்னந் தடவி தலை வருடுகிறார். மனம் தாங்கவில்லை. என்னையறியாமலே கன்னத்தில் நீர்க்கோடுகள்.

தயவு செய்து உங்கள் கதவுகளையும் பூட்டுகளையும் சரியாகப் பூட்டுங்கள்.

சிக்குபுக்கு ரயில்

நகருக்குள்ளே எத்தனை விதமான இடங்கள்..அத்தனையும் நடந்தே பார்த்து விடும் தூரம் தான் ...என்றாலும் சிட்னி சிற்றிக்குள்ளேயே 8 - 10 நிமிட நடை தூரத்தில் ரயில் நிலையங்கள். நான் இன்னும் போய் பார்க்காத லண்டனின் நிலக்கீழ் இரயில் போல் இங்கு நகருக்குள்ளே மட்டுந்தான். புறநகர் பகுதிகளில் ஊரிலிருப்பது போல் நிலத்தின்மேல். மேலும் கீழுமாக இரண்டு "மாடிகள்" கொண்ட பெட்டிகள்.

சிற்றிரெயில் என அழைக்கப்படும் ரயில் வலைப்பின்னல். ஒருநாளும் நேரத்திற்கு வருவதில்லை. திடீரென்று சில சேவைகள் இரத்துச் செய்யப்பட்டு "இதனால் ஏற்படும் சங்கடங்களுக்கு சிற்றிரெயில் மனம் வருந்துகிறது" என்று சொல்வார்கள். பிந்தி வருவதால் எற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக குறிப்பிட்ட நிலையத்தில் ரயில் நிற்காமலும் போவதுண்டாம். இவற்றையடுத்து பயணிகளிடம் எழுந்த அதிருப்தி சொல்லில் அடங்காது. தொலைக் காட்சியில் ஒரு பயணி current affairs நிகழ்ச்சியில் சொன்னார் இந்த ரயில் சேவைக்கு பணங் கொடுத்து கடவுச்சீட்டு வாங்கி பயணிப்பது அபத்தமான செயல் என்று. நியு சௌத் வேல்ஸின் முதல்வர் கடந்த திங்கட் கிழமையை இலவச பயண நாளாக அறிவித்தார். இது பயணிகளை அமைதிப்படுத்தும் என நினைத்தாரோ என்னவோ..அவர் நினைப்பில் மண். (இதைப் போலவே முன்னரும் சில ^இதே முதல்வரின் கீழ்^ இலவச பயண நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன). இதற்குப் பிறகாவது ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா பார்க்கலாம்!

சிற்றிரெயிலுக்கு செல்லப்பெயர்கள்: சிற்றிஃபெயில், சிலிரெயில்

மருத்துவமனைகளின் நிலை இன்னும் மோசமானது. அவசர சிகிச்சைப் பிரிவில் கிட்டத்தட்ட 6 மணித்தியாலத்திற்கும் மேலான காத்திருப்பு, இடமின்மையால் நோயாளிகள் திருப்பி அனுப்பப்படும் நிலை என்று பல பிரச்சனைகள். அது பற்றி இன்னொருநாள்.

கண்ணோடு கண்

ஒருவருடன் கதைக்கும் போது அவரது கண்களைப் பார்த்து கதைப்பது எவ்வளவு நேரத்திற்கு சாத்தியம்? அவரிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை/ நீங்கள் பிழை செய்யவில்லை என்றாலும் சில வினாடிகளுக்கு மேல் கண்ணைப் பார்த்துக் கதைக்க முடிவதில்லையே..ஏன்?முகத்தைப் பார்த்து உரையாடுகிறோமே தவிர கண்ணைப் பார்த்து அல்ல. எங்களுடைய விஞ்ஞான ஆசிரியை நேரே கண் பார்த்துத் தான் கதைப்பா. நல்ல அழகான கறுப்புவண்டு போல கண்கள்...மிஞ்சிப் போனால் அவரின் கண்ணை 10 செக்கனுக்கு மிஞ்சி நேரே பார்க்க முடியாது. அவ்வளவு தீவிரம். ஏதோ உள்ளுக்குள் உள்ளதெல்லாம் அவருக்குத் தெரிந்து விடுமோ என்று தோன்றும். x-ray என்று அழைப்போம்.

சரி மீண்டும் கேட்கிறேன்...தொடர்ந்து ஒருவரது கண் பார்த்துக் கொண்டு அவருடன் உரையாடுவது என்பது வலுக்கட்டாயமான தொடர் பயிற்சியின் மூலம் செய்யக் கூடியதாகுமா? விஞ்ஞான ஆசிரியை போன்ற ஒரு சிலர் தவிர ஏனையோர், உரையாடலின் போது மற்றவர் கண்ணைப் பார்த்து கதைப்பதை ஏன் தவிர்க்கிறோம்?? நேர்கொண்ட பார்வையுடன் கூடிய உரையாடல் ஏன் சிறுவயதிலிருந்தே பழக்கத்தில் இல்லை? சிறுவர்களுக்கு அறிவுறுத்தி, பழக்கத்தில் இயல்பான ஒன்றாய் கொண்டுவர முடியாதா?

எட்டிப் பார்த்தேன்

காணாமல் போனவர்கள் என்று ஒரு பட்டியலில் என் பெயரையும் சேர்த்து விட்டுடாதீங்க. ஏதோ கிடைக்கிற சொற்ப நேரத்தில் வலை மேய்கிறேன்..பின்னூட்டம் அளிக்க முயல்கிறேன்..பல வேளைகளில் மின்னஞ்சல் பார்க்க மட்டுமே நேரம் வாய்க்கிறது. விருந்தோம்பல்+அதற்கான நேரம் பற்றி இப்போது தான் முழுமையாக உணர்கிறேன். எப்படியும் இன்னும் 2/3/4 கிழமைகளில் வழமைக்குத் திரும்பிவிடக்கூடும். அது வரை சில தளங்கள் உங்களுக்காக:

  • அலுவலகத்தில் பொழுது போகவில்லையா(!?) இங்கே போங்க.
  • மூளைக்கு வேலை வேண்டுமா..அதற்கு ஓரிடம்.
  • போதைக்கு அடிமையாவதைப் போல கல்லூரியில் கிட்டத்தட்ட ஒன்றிரண்டு மாதங்களுக்கு என்னை தன் அடிமையாக்கியது இது (இப்பிடி நிறைய இங்கே)
  • இணையத்தின் தொல்லை தாங்கவில்லை..ஒருவழி பண்ணனும் என்று நினைத்தால்..வழி இதோ!

அரக்கர்கள்

இங்கே அவுஸ்திரேலியாவில் ஏறத்தாழ 400 அரக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காலத்தில் ஏதடா அரக்கர்கள் என்று பார்க்கிறீர்களா? இந்தப் பாதகர்களை வேறெந்தப் பெயர் கொண்டு விளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்து, அந்தக் கொடுமையை படம் பிடித்து இணையத்தில் தளம் அமைத்து காட்டுகிறார்களாம். இந்த மாதிரியான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்களை கைவசம் வைத்திருந்தனர் என்கிற காரணத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஆசிரியர்கள், வைத்தியர், சட்டத்தணிகள், கணினி இயக்குநர், காவற்துறையினர், மற்றும் பிள்ளை பராமரிப்பாளர்களும் அடங்குவராம்! (இவர்களில் ஐந்தாறு பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்). பாடசாலை கழிப்பிடங்கள்/குளியலறைகளில் கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கொடுமையிலும் கொடுமை 0 - 3 வயதான பாலகரும் குழந்தைக் காப்பகங்களில் அவர்களது nappy, உடைகள் மாற்றும் போது படம் பிடிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களது காமவெறிக்கு அளவில்லையா? தத்தம் குடும்பத்தில் குழந்தைகளுடன் இவர்கள் வாழவில்லையா? தம் குழந்தைகளை வேறொருவர் இப்படிச் செய்தால் பொறுப்பார்களா? எங்கே போகிறது சமுதாயம்?

கண்ணீர்

மரணம் மனித வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத அங்கம் தான் என எனக்கு மீண்டும் ஒரு முறை நினைவுறுத்தப் பட்டிருக்கிறது. அம்மாவைப் போலவே அன்பாயும் ஒரு தோழியைப் போலே நேசமாயும் ஒரு ஆசிரியைக்குரிய ஆதுரத்துடனும் பலர் வாழ்வில் அறியப்பட்ட teacher இன்று இல்லை.

மனது கனக்கிறது.

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு..

குடும்பம் என்பது முதலில் துணையுடன் தான் ஆரம்பிக்கிறது. பிறகு குழந்தைகள் என்று வந்து விட்ட பிறகு குழந்தைகளும் அவர்களது தேவைகளுமே பிரதானமாகி முன்னிலைப்படுத்தப் படுவது இயல்பே. குழந்தைகள் + அவர்களது தேவைகளை நிறைவேற்றுவது முக்கியமானதுதான். ஆனாலும் துணையும் முக்கியமல்லவா? தம்பதியரிடையே பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் உருவாவதற்கு வீட்டு வேலைகளை பங்கிடுவதிலிருந்து பிள்ளை வளர்ப்பு வரை காரணிகள் நிறையவே உண்டு. வாழ்க்கையானது வேலை, குழந்தைகள், தேவைகளை(வீடு வாங்க/கட்ட, சாதனங்கள் வாங்க) நிறைவேற்றுதல் என்பவற்றில் கழிகிறது. இந்தப் பயணத்திலே கூடவே வரும் துணைக்கென மட்டும் தனியே எவ்வளவு நேரத்தை ஒதுக்க முடிகிறது? கல்யாணம் கட்டி xx வருஷமாச்சு /பிள்ளை பெத்தாச்சு, இதுக்கு மேலே என்ன தனிமை என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். இருவரின் தனிமை உடற் சுகத்துக்காகத்தான் என்றில்லை. அதற்கும், அதையும் மீறியதாக மன சுகத்திற்கும், கணவன் மனைவிக்கு இடையிலான புரிந்துணர்தலை வளர்ப்பதற்குமான ஒரு நேரமே அது.

வீட்டுக்குள்ளே தான் என்பதில்லை. கடற்கரையில், பூங்காவில் ஓர் நடை, ஒரு திரைப்படம், உணவகத்தில், அல்லது இருவருக்கும் பிடித்தமான ஒரு பொழுது போக்கு..படகோட்டலாம், கண்காட்சிகளுக்குப் போகலாம். ஒரு 2 மணித்தியாலத்திற்கு அல்லது ஒரு காலை/மாலை வேளைக்கு நண்பர்களிடம் / உறவினர்களிடம் babysittingக்கு கேட்கலாம். (அவர்களதுதிருமண ஆண்டு நிறைவு நாளன்று அவர்களது குழந்தைகளை பார்த்துக் கொள்ள offer பண்ணுங்கள்.. நீங்கள் babysitting க்கு கேட்ட மாத்திரத்திலேயே சரியென்பார்கள்!!)

கணவன் - மனைவி உறவு விசேஷமானது. எல்லா விஷயங்களைப் போலவும் இந்த உறவை வளர்க்கவும் வளப்படுத்தவும் முயற்சி தேவை. அதற்கு செய்யக் கூடிய சில சின்ன விஷயங்கள்:

  • மற்றவர் முன்னிலையில் துணையை சிறுமைப்படுத்தாதீர்கள் மாறாக.. பாராட்டுங்கள் (என் கணவர் எனக்குப் பிடிக்குமென்று --- கற்றுக் கொள்கிறார் / --- செய்தார் ; என் மனைவி ஓவியம் வரைவதில் கில்லாடி etc)
  • இப்படித்தான் இருக்க வேண்டும் / செய்ய வேண்டும் என்று ஒன்றிலும் கட்டாயப்படுத்தாதீர்கள். இருவருமே தனி மனிதர்கள். சேர்ந்து செய்ய என்ன வழி என்று பாருங்கள்
  • சின்னதாய் ஆச்சரியப்படுத்துங்கள் - வெகு நாளாய் நச்சரிக்கப்படும் விஷயத்தை செய்து முடியுங்கள். மனைவி ஒரு shelf போட்டுத்தரச் சொல்லிக் கொண்டே இருக்கிறாரா...அவர் சந்தைக்கு போய் வர முன்னம் செய்து வையுங்கள்)
  • குழந்தைகளுக்குப் போலவே துணைக்கும் செல்லங் கொடுங்கள்.
  • பிடித்த விஷயங்கள், கனவுகள், பயங்கள், மற்றும் என்னென்னவோ அதையெல்லாம் பற்றி கதையுங்கள். (துணை கதைக்க வரும் போது நீங்கள் பிஸியாக இருந்தால் எடுத்துச் சொல்லுங்கள்: "கொஞ்சம் வேலையாக இருகிறேன். இதை முடித்ததும் முதல் வேலை நீ என்ன சொல்கிறாய் என்பதை கேட்பது தான்". சொன்னது போல தேடிப் போய் என்ன விஷயம் என்று கேட்க மறக்கக் கூடாது!!)
  • துணையின் கருத்து கேட்கவோ, உற்சாகப்படுத்தவோ, நன்றி சொல்லவோ, மன்னிப்புக் கேட்கவோ தயக்கம் வேண்டாம்.

இதெல்லாம் நானாக சொல்லவில்லை. பெரியவர்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள். மேலே குறிப்பிட்டது மட்டுமன்றி இன்னும் பல முக்கியமான சின்ன விஷயங்கள் இருக்கின்றன.. நீங்களும் சொல்லுங்களேன்.சின்னச் சின்ன விஷயங்கள் தான்...ஆனாலும் நிறையவே தாக்கத்தை உண்டு பண்ணும். பிறகென்ன , துணை பாத்ரூமில் + எப்போதும் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" என்று பாடிக் கொண்டிருப்பார்!! (வீட்ல இனி காதல் சாம்ராஜ்யம் தான்!!)

பி.கு:- என் உபயமாக:

  • கருத்து வேறுபாடா?தலையே போனாலும் பிள்ளைகளுக்கு முன்னால் சண்டை பிடிக்காதீர்கள்!!
  • காதல் கடிதம் அல்லது ஒரு மடல் அனுப்புங்கள்
  • துணைக்கு கண்ணடித்துப் பாருங்கள்!! இதைப் போல ரொமான்டிக் ஆன விஷயம் வேற ஒன்றுமே இல்ல. (அடடா!!)

பார்த்தேன்..ரசித்தேன்

Jacquis Perrinன் நெறியாள்கையிலும் Bruno Coulaisன் இசையிலும் வெளிவந்துள்ள ஒரு நேபாள(most likely திபெத்திய) மொழிப்படம் 'ஹிமாலயா'. மனதை வருடும் மெல்லிய இசையும், அழகான காட்சியமைப்பும் கொண்ட இந்தப் படம் டின்லே தாத்தா தானியக் கதிர்களுக்கூடாக நடந்து வருவதுடன் ஆரம்பிக்கிறது. உப்பு வாங்கி வந்து அதை வேறோரிடத்திற்கு கொண்டு சென்று விற்று தானியம் வாங்கும் வாழ்க்கை. உப்பு பெற்று வரும் வழியில் டின்லேயின் மகன் இறந்து விடுகிறான். அவனது தோழனான 'கர்மா'வின் மேல் டின்லே சந்தேகப்படுகிறான். குரோதம் மனதில் கொழுந்து விட்டெரிகிறது. பரம்பரையாக அக்குடியினரின் தலைவர் பதவி டின்லேயின் குடும்பச் சொத்தாகவே இருந்து வருகிறது. டின்லேயின் பேரனோ பாலகன். தலைமைப் பதவிக்காகவே கர்மா தன் மகனை கொன்றான் என் நம்பும் டின்லே இந்த முறை caravanகளுக்கு நானே தலைமேயேற்கிறேன் என்று சொல்லி ஆயத்தப்படுத்துகிறான். சோதிடம் பார்த்து, நல்ல நாளில் புறப்படும் இவர்களது வழக்கத்தையும் மீறி கர்மா தனது இளவட்டத் தோழர்களுடன் முதலே புறப்படுகிறான். டின்லே, பிக்குவாக இருக்கும் தனது 2ம் மகனிடம் சென்று தன்னுடன் வருமாறு உதவி கோருகிறான். மகன் தயங்கவே அவனுக்கு ஏசிவிட்டு ஊருக்கு வந்து ஆயத்தங்களைச் செய்கிறான். மகன் 2 நாட்களில் வந்து சேர்கிறான். சோதிடர்கள் குறித்த நன்னாளில் டின்லேயினதும் அவனது சம வயதான 'கிழ' வட்டங்களினதும் பயணம் தொடங்குகிறது.

கர்மாவின் கூட்டத்தினரை எட்டிப் பிடித்தனரா, அவனுடன் சமாதானம் ஏற்பட்டதா என்பதும், வழியில் அவர்கள் கற்றுக் கொள்ளும் பாடங்களும், டின்லே, பிக்குவான இளைய மகன் , கர்மா, டின்லேயின் மருமகள் பேமா, பேரன் பசாங், . இவர்களது தனிப்பட்ட பயணங்களுமே கதை. சின்னச் சின்ன மனதைத் தொடும் காட்சிகள். மரம் என்றால் என்ன எனக் கேட்கும் பசாங், கர்மாவின் வில்வித்தை மீது அபார பிரமிப்புக் கொண்டவனாக இருக்கிறான். கர்மாவின் சிறுவயது தோழியாக டின்லேயின் மருமகள் பேமா. தான் குற்றமற்றவன் என்பதை டின்லேக்கு எடுத்து சொல்ல முயலுகின்ற,இளமைத் துடுக்கு நிறைந்த வீரனாக கர்மா....

நடித்தவர்கள் பாத்திரமாகவே ஒன்றிப் போயிருக்கிறார்கள். நீண்ட நாட்களின் பின் நிச்சயமாக கண்ணுக்கும் காதுக்கும் மனத்திற்கும் ஒரு விருந்து. கிடைத்தால் எடுத்துப் பாருங்கள்.

பி.கு: படத்தில் பணியாற்றியவர்கள் பற்றி இங்கே...

அழகிய தீயே

மேற்கூறிய படம் பார்த்தேன். கடைசியில் கதாநாயகிக்கு வந்த மிகவும் சினிமாத்தனமான "பூம்" தவிர படம் நல்லாத்தான் இருந்தது. எல்லாரையும் விட "டைசன்" தான் (கதாநாயகி வேற ஊர் போகிறா என்கிற போது) மிகவும் இயல்பாக முகபாவனை(!?) காட்டியிருந்தது!!. நவ்யா நாயரைப் பார்த்தால் கொஞ்சம் சுஹாசினி, கொஞ்சம் மீனா, மீதி தீபா வெங்கட்(தீபா வெங்கட் பகுதி ஒரு வேளை அவங்க பின்னணிக் குரல் கொடுத்ததால் ஏற்பட்ட மாயையாக கூட இருக்கலாம்!!) போல ( எனக்கு) இருந்தது. (யாரப் பார்த்தாலும் "முதல் எங்கியோ கண்ட மாதிரி இருக்கே" என்கிற என் வியாதி பற்றி இன்னொரு நாளைக்கு விரிவா சொல்றேன்! ;o) )

படத்தில் எனக்குப் பிடித்த காட்சி: நுளம்பு மருந்தின் புகை மூட்டத்திற்கூடாக வெள்ளைத் தேவதையாக நவ்யா நடந்து வருவது. வாய்விட்டு சிரித்தேன். நினைக்க நினைக்க சிரிப்பு வருது!

பி.கு 1: அழகான நெருப்பு என்று ஏன் பெயர் வைத்தார்கள்?
பி.கு 2: கதாநாயகி, அப்பா வீட்டில் வளர்த்த சீச்சுக்கு என்ன ஆச்சு?
பி.கு 3: "பாலா" கதாபாத்திரத்தை பார்த்தவுடன் ஏன் இவர் ஞாபகம் வந்தது???


ஒலிம்பிக் தேசம் 4 ஒ.தே 3

பாரசீக போர் :
பரந்து கொண்டிருந்த பாரசீக பேரரசின் அரசனாக முதலாம் டரியுஸ் கிமு 519ல் முடி சூடினான். பாரசீக மன்னன் சைரசினால் வெற்றி கொள்ளப்பட்டு பாரசீக ஆட்சியின் கீழிருந்த அயொனியர்கள் அதிருப்தியடைந்திருந்தனர். கிமு 419ல் மிலெட்டூசைச் சேர்ந்த அரிஸ்டகோரஸ் என்பவன் கரையோரக் குறுநிலங்களை இணைத்து ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தினான். 5 வருடத்தில் டரியுஸ் இதனை அடக்கி விட்டாலும், இந்தப் பிரதேசத்திற்குள் இல்லாதிருந்தும் கொந்தளிப்பிற்கு உதவிய அதென்ஸ் மீது சீற்றம் கொண்டான். "என்னையா சீண்டுகிறாய்..உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று வில்லன் வசனம் பேசி பழிக்குப் பழி வாங்க நினைத்த டரியுஸ் ஸ்பார்ட்டாவிடம் உதவி கோரினான். கிரேக்கத்தையே வெற்றி கொள்ளும் மாஸ்டர் ப்ளான் அவனிடம் இருந்ததை ஸ்பார்ட்டா புரிந்து கொண்டு உதவ மறுத்ததால் டரியுஸ் தன் முயற்சியை கிடப்பில் போட வேண்டியதாயிற்று. ஆனாலும் முற்று முழுதாக தன் திட்டத்தை கை விடவில்லை; கிமு 490ல் பாரசீக இராணுவம் மரதன் என்னும் இடத்தில் வந்து குவிந்தது. 10,000 பேரை மட்டுமே கொண்டிருந்தாலும் கிரேக்கர்கள் பாரசீகத்தை தோற்கடித்தனர். "எங்களூரில் இந்திரவிழா நடக்கிறது" என்று ஸ்பார்ட்டா இந்தப் போரில் பங்கேற்கவில்லை.

இன்னொரு போர் தொடுக்க திட்டம் தீட்டிய டரியுஸ் அது நிறைவேறும் முன்னமே மண்டையைப் போட; தந்தையின் கனவை நனவாக்கும் பொறுப்பு ஸெர்க்ஸீசின் தலையில் சுமத்தப் பட்டது. பரந்து விரிந்த தனது சாம்ராஜ்யத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் போர்வீரர்களை (மொழிபெயர்ப்பாளர்களுக்கு நல்ல மவுசாக இருந்திருக்குமோ...) அழைத்துக் கொண்ட ஸெர்க்ஸீஸ் தரை + கடல் வழிப் போருக்கு ஆயத்தம் செய்தான். பாரசீகர்கள் (தற்போதைய) இயரிசோசிற்கு அருகில், தங்கள் கடற்படை பயணிக்கத் தக்கதாக ஒரு கால்வாயைத் தோண்டினார்கள். இதன் மூலம் அதொஸ் மலையடிவாரத்தில் ஆர்ப்பரிக்கின்ற கொந்தளிப்பான கடலில் பிரயாணம் செய்வதை அவர்களால் தவிர்க்க முடிந்தது. கிரேக்கத்தின் மத்திய மற்றும் தென் குறுநிலங்கள் கொரிந்தில் சந்தித்துக் கொண்டன. பாரசீகர்களை தோற்கடிக்கும் வழிமுறை பற்றிய மந்திராலோசனை நடந்தது. ஸ்பார்ட்டாவின் தலைமையின் கீழ் தரைப்படை+கடற்படையும், இப்படைகளுக்கான தந்திரோபாயங்கள் மற்றும் வியூகங்கள் அமைக்கும் பணிக்கு அதென்ஸின் தலைவனான தெமிஸ்டோக்கிள்சும் என தீர்மானிக்கப்பட்டது. ஸ்பார்ட்டா அரசன் லியோனிடஸ், தெர்மோபைலி எனும் இடத்திலுள்ள கணவாயை காக்கும் பொருட்டு தன் படையினரை அங்கு இட்டுச் சென்றான். குறுகலான இக்கணவாயே கிரேக்கத்தின் வடக்கிலிருந்து மத்திய பிரதேசத்திற்குச் செல்வதற்கான பிரதான வழி. எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் கணவாயைத் தக்க வைத்துக் கொண்டிருந்தனர். எட்டப்பர்களும் காக்கைவன்னியர்களும் அங்கேயும் இருந்தார்கள். எந்தப் பாதையால் மலையைக் கடந்து போவது என்பதை எதிரிக்கு கிரேக்க எட்டப்பன் சொல்லிவிட்டான். கிரேக்க வீரர்கள் பின்வாங்க நேரிட்டது. லியொனிடஸ் தீரத்துடன் சாகும் வரை போராடினான்.

ஸ்பார்ட்டாவும் அதன் ஆதரவாளர்களும் தமது 2ம் நிலை பாதுகாப்புக்குரிய செயற்பாடுகளை முன்னெடுத்த அதே நேரம் பாரசீகர்கள் அதென்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். நகரை விட்டு வெளியேறி தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு தன் குடிகளுக்கு தெமிஸ்டோக்கிள்ஸ் கட்டளையிட்டான். பாரசீக இராணுவம் அற்றிகாவை தரைமட்டமாக்கி அதென்ஸிற்கு தீ மூட்டி எரித்தழித்தது. ஆனாலும், கிரேக்க கடற்படை திறமையான வியூக அமைப்பினால், ஒடுங்கலான சலாமிஸ் கடலில் பாரிய பாரசீக போர்க்கப்பல்களை பொறி வைத்து அழித்தது. கரையிலிருந்து தன் படையினரின் தோல்வியைக் கண்ணுற்ற ஸெர்க்ஸீஸ் இராணுவப் பொறுப்புகளை தனது தளபதி மாடோனியசிடம் கையளித்து விட்டு வெறுப்புடன் தாயகம் திரும்பினான்.

ஒருவருடம் கழித்து ஸ்பார்ட்ட தளபதி போசோனியஸின் (ஒரு வேளை "Pause button" ஐ கண்டு பிடித்தவரோ...) தலைமையில் கிரேக்கம் வெற்றிவாகை சூடியது, அதெனிய கடற்படை மைக்கெலி என்னும் இடத்திற்குச் சென்று அங்கு மீதமிருந்த பாரசீகக் கடற்படையை துவம்சம் செய்ததுடன், பாரசீக ஆட்சியின் கீழிருந்த அயொனிய குறுநிலங்களையும் விடுதலை செய்தது.

தொடரும்

ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா?

கடந்த ஞாயிறன்று(தந்தையர் தினம்) சிட்னி தந்தையருக்கு வானத்திலிருந்து கிடைத்த பரிசு புகைப்படங்களாக. ..(படங்கள் தரவிறக்கப் பட அதிக நேரம் எடுக்கிறது. இன்னொரு வலைமேயும் சாளரத்தைத் திறந்து, வேறு பக்கத்திற்கு ஒரு விசிட்டடித்து வரவும், தரவிறக்கவும் முடியவும் சரியாக இருக்கும். அசௌகரியத்திற்கு மன்னிக்க!)

தடதடவென வந்து விழுந்த சிறு பனிக்கட்டிகள், வெப்பநிலை திடீரென்று தாழ்ந்தமையால் மறுநாள் காலை வரை நிலத்தோடு ரகசியம் பேசின.
கனேடிய, ஐரோப்பிய நகரங்களில் காணக்கிடைக்காததா என்று நீங்கள் நினைக்கக் கூடும். சிட்னிக்கு இது ஒரு "freak storm". இப்படியான நிகழ்வு மிக அபூர்வம். :o)

கேள்விகளுக்குரிய பதில்கள்

சில நாட்களாய் சில கேள்விகள் குடைகின்றன. (ஜே.கே.கிருஷ்ணமூர்த்தியை வாசித்ததன் விளைவு!!) தன்னை அறிதல் என்கிற வகைக்குள் அடங்கும் என்றே நினைக்கிறேன். மிகப் பழைய கேள்விகள் தான்...என்றாலும் புதிதாய் ஒவ்வொருவருக்குள்ளும்.....

1. நீங்கள் யார்?
இந்த உடலா?இத்தனை கேள்விகள் கேட்கும் மனமா?அதற்கும் மீறிய ஒன்றா?

2. நீங்கள், நீங்களே தான் என்பதை எப்படி அறிகிறீர்கள்? (How do you know "you are you'?)
இரவு படுக்கப் போகிறீர்கள். காலையில் எழுந்ததும், "இரவு படுக்கைக்குப் போன அதே ஆள்தான் நான்" என்பதை எப்படி, எதன் மூலம் உணர்கிறீர்கள்?ஞாபகங்கள் மூலமா?இரவு நித்திரையிலே மறதி வந்து விட்டதென்று வையுங்கள்..அப்போது உங்கள் நிலை என்ன? மறதி வந்தவர் தன்னை எப்படி உணர்கிறார்?

3.மகிழ்ச்சி என்பது எந்த நிலையில் ஏற்படும் உணர்வு?போதும் என்கிற மனப்பான்மையில் எழுவதா?பரீட்சையில் சித்தியெய்திய திளைப்பா? சலனமற்ற ஒரு பொழுதில் உணரப்படுவதா? திருப்தி, elation,அமைதி என வெவ்வேறு வார்த்தைகளால் குறிப்பிடப்படும் ஒன்றுதானா மகிழ்ச்சி என்பது? சரி - அப்படியே வைத்துக் கொள்வோம்; இத்தனை வார்த்தகளிருக்க மேலும் ஒரு சொல் ஏன், அதே நிலையை குறிக்க? திருப்தி, திளைப்பு, அமைதி என்பன வெவ்வேறான நிலைகள்/ உணர்ச்சிகள். அவை எப்படி மகிழ்ச்சியாக முடியும்? மேலும் மகிழ்ச்சி என்பது புறக்காரணிகளில் தங்கியிருக்கும் ஒன்றாக(எனக்குத்) தெரியவில்லை. அனேகமான பொழுதுகளில் "சந்தோசமாயிருக்கிறாயா ஷ்ரேயா" என்று என்னையே நான் வினவிக் கொள்ளும் போது, எனக்குள்ளிருந்து ஆமென்ற பதிலே வருகிறது. அந்தக் கணத்தில் நான் எப்படி உணர்கிறேன்?ஆமென்ற பதில் என் மனநிலையை சார்ந்து வருகிறதா அல்லது மகிழ்ச்சியே என் இயல்பு நிலையா?

இவற்றுக்கு பதில் கிடைக்க உள்நோக்கிய பயணம் ஒன்றே வழி என்பது தெரிகின்றது. ஆனாலும் பதில்கள் எனக்குள்ளேயிருக்குமா அல்லது பிரபஞ்சத்தின் ஒரு தகவல்தளத்திலா??

பயணங்கள் முடிவதில்லை

எழுதுற பைத்தியம் விட்டுவிட்டது நாம் தப்பினோம் என்று நினைத்தவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். கொஞ்சம் இடைவெளி விட்டா இப்பிடியெல்லாம் மனக்கோட்டை கட்டக் கூடாதுங்கோ! ;o)

ஜூலையில் போகவிருந்து (Country linkக்கு $240 தானமளித்து)தடைப்பட்ட மெல்பேர்ண் பயணம், சாமத்தியப்பட்ட மருமகளின் புண்ணியத்தில் நிறைவேறிற்று. கணவருக்கு வெள்ளி இரவு விரிவுரைஇருந்தபடியால் விழா நடக்கும் நாளன்றே(சனிக்கிழமை) காலைபுறப்பட்டு அன்றிரவே திரும்புவதாக திட்டமிட்டு விமான பயணஒழுங்கெல்லாம் செய்தோம். காலை 11 இலிருந்து மதியம் 2 வரை விழா. விமானம் புறப்படும் நேரம் காலை 6 மணி. போய்ச்சேர 1 1/2மணித்தியாலம் எடுக்கும். வீட்டிலிருந்து 40 நிமிட ட்ரைவ்+புறப்பட 45 நிமிடத்திற்கு முன்னர் வி. நிலையத்தில் நிற்க வேண்டியது என எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு காலை 3 மணிக்கு அடியேன் எழுந்திருக்கவேண்டி ஏற்பட்டது. முதல் நாளே கொண்டு போக வேண்டிய பொருட்களை எடுத்து வைத்து விட்டதால் பிரச்சனை இருக்கவில்லை. குளித்துவெளிக்கிட்டு கணவரை எழுப்பி வெளிக்கிட வைத்து வழமையான் தேநீர் ஊற்றுதல்+சாமான் எல்லாம் வைத்தாயிற்றா என்ற சரி பார்த்தல்களுடன் நேரம் கழிந்தது.

வீட்டிலிருந்து புறப்பட்டு விமான நிலைய நீண்ட கால தரிப்பிடத்தில் கார் நிறுத்தி 15 நிமிடத்திற்கொரு முறை வரும் Shuttle பேருந்துக்குக் காத்து நின்றோம். ஒரு குடும்பம் வந்தது. 3பையன்களும் அம்மா அப்பாவும். "Come here darling" - சின்னவனைத் (2 - 3வயது)தூக்கி மடியில் இருத்திக் கொண்டா அம்மா. அவன் நழுவி விடுபட்டுஅப்பாவிடம் ஓடிச் சென்றான். அம்மாவுக்கு யாரையாவது தூக்கிவைத்திருக்க வேண்டும் போல..2ம் மகனைக் கூப்பிட்டு "You can't be warm in that" என்று சரியாக இருந்த ஜக்கெற்றைச் சரி செய்து மடியில்இருத்தி கொண்டா. சற்றே வெட்கத்தில் நெளிந்தாலும் தாயின்மடியிலேயே இருந்து கொண்டான். பேருந்து வந்தது. விமான நிலையத்தில் வழமையான பாதுகாப்பு பரிசோதனை. ஒரு மெட்டல் டிடெக்டருக்கூடாக போகவேண்டுமல்லவா..நானும் போனேன்....யப்பா..கீக் கீக் என்று ஒருஅலறல்.பாதுகாப்பு அதிகாரி பயந்து போனார். ஏதாவது உலோகசாமான் அணிந்திருக்கிறாயா என்று கேட்டார்..தாலிக்கொடியையும் தாலிகோர்த்திருந்த சங்கிலியையும் கழற்றி அவர் கையில் கொடுத்து விட்டுமறுபக்கம் வந்து வாங்கிக்கொண்டேன். "நீர் தாலி கோர்த்திருந்த சங்கிலியை கழற்றியிருக்கத் தேவையில்லை. எங்கட கல்ச்சர் படி நான் கழற்றக்கூடாது என்று சொன்னால் அவை உம்மள force பண்ண ஏலாது" என்றுஎன் பாதி மொழிந்தார். (எனக்கு இதிலெல்லாம் பெரிய "இப்பிடித்தான்செய்ய வேணும், இது செய்யக் கூடாது" கள் இல்லை) பாதுகாப்பு அதிகாரிதனது கடமையை செய்ய நான் ஒத்துழைத்தேன்..அவ்வளவுதான்.(உங்கள் கருத்து என்ன?கழற்றலாமா..கூடாதா??)

பயணம் இனிதாக இருந்தது.கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்குப் பின்னான விமானப் பயணம். வி.பயணம் ஒரு தனி சுகம்தான்.. இல்லையா??

விமானம் தரையிறங்கி நாங்கள் வெளியில் கால் பதித்தோம் ஒரு மணம் மூக்கைத் தாக்கியது. என்னடா மணக்குது என்றால்..பச்சைப் புல்!! மெல்பேர்ணின் பிரதான வி.நிலையமன்றி இது இன்னுமொரு சிறிய வி.நிலையம். கட்டடத்துக்குள்ளே வந்து முன்பதிவு செய்த வாகனத்தின் சாவியை பெற்றுக்கொண்டோம். (இணையம் எவ்வளவு வசதிகளை அளிக்கிறது!!). வாகனம் தேடி கதவு திறந்து சில்ல்ல்லென்ற காலைக்குளிருக்கு இதமாய் சூடு பரவ பயணமானோம். டன்டினொங் வந்ததும் அவளுக்கு என்ன கொடுப்பது என்ற பிரச்சனை மீண்டும் தலை தூக்கிற்று. காசு குடுப்பம், விருப்பமானது அவள் வாங்கட்டும், சின்னப்பிள்ளை தானே- இது நான். கணவரோ " நீங்க அத்தை. நகை கொடுக்கிறது தான்பெட்டர்..மற்றது நகையெண்டா வச்சும் பாவிக்கலாம் தானே". இங்கே ஒன்று சொல்ல வேண்டும்..எனக்கும் தங்க நகைக்கும் எட்டாத தொலைவு. ஏனோ வெள்ளி, தகர(இமிட்டேஷனை அம்மா அப்படித்தான் சொல்வா) நகைகளிலிருக்கும் ஆர்வத்தில் துளிதானும் தங்கத்தில் இல்லை. சரி..ஒருமாதிரியாக காசே கொடுப்பதென்று தீர்மானித்து அண்ணா வீடு நோக்கிச் சென்றோம். அழகாய் கோலம் அணிந்து வாசல் வரவேற்றது. அன்பளிப்பைக் கொடுத்து கொஞ்சி விட்டு வெளிக்கிடப் போனேன். ஏற்கெனவே பிளீற்றுகள் எடுத்து மடித்ததால் ..யுரேக்கா!! பிளீற் பிரச்சனை -இல்லவே இல்லை. புறப்பட்டோம் மண்டபத்துக்கு. விழா பற்றி அண்ணா சொன்னதிலிருந்து 2 ஆச்சரியங்கள் எனக்கு.
(1) நிவேக்குட்டி(இந்தமருமகள்)இந்த வெளிக்கிடுதல்கள், மண்டபத்தில்விழாவைத்தல்களுக்கு விரும்பி ஒத்துக் கொண்டது (2) சாமத்தியச் சடங்கு மண்டபம் எடுத்து கொண்டாடும் அளவில்இருப்பது. (ஏன் பழங்காலத்தில் பெரிதாய் விழாவெடுத்துக்கொண்டாடினார்கள்..அந்தக் காலத்தில் அதற்கான தேவை என்பவற்றையெல்லாம் எம்மக்கள் வசதியாக மறந்து விட்டார்கள் போல)
சரி.. விழாவில் அத்தையையும் பெரிய மனுஷியாக மதித்து ஆராத்தி எடுக்கச் சொன்னார்கள். அத்தைக்கும் சந்தோசம்..வடிவாய் எடுத்தா. நன்றாக நடந்தது விழா. என் கணவரும் அண்ணாவும் ஏதோ தேவைக்காக வெளியில் சென்றிருந்தார்கள். தூரத்து உறவினரான ஒரு அண்ணாவிடம் கதைத்துக் கொண்டிருந்தேன். அவரது தங்கைகளும் நானும் நல்ல தோழிகள்.இவரும் நல்ல முஸ்பாத்தியாக கதைப்பார். திருமணம் நிச்சயமாகினது பற்றி, கிட்டடியில் ஊர் போய் வந்தது பற்றி மற்றும்பல விஷயங்களும் சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தோம். ஆனாலும் இருவரும் மறந்து விட்டோம் தமிழனுக்கு குறுக்குப் புத்தியுண்டு என்று!விழா முடிந்து எல்லாம் ஒதுக்கி வைத்து ஆறி அமர்கையில்அதிலிருந்த மாமிகள் இன்னொருவரது சேலையைப்பற்றியும் தத்தமதைப்பற்றியும் மும்முரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.பக்கத்திலிருந்த அக்கா/மாமிஅந்த அண்ணாவைக் காட்டிக் கேட்டா "அவர் உங்களுக்குஎன்னமுறை?அண்ணையோ?". சிரிப்பு வந்தது. இல்லை..தெரிந்தவர் என்றுசொல்லி இன்னும் குழப்பிவிட குறுக்குப்புத்தி யோசித்தது. வாய் "ம்ம்..அண்ணாமுறைதான்" என்றது. மாமி சொன்னா "அப்ப சரி".

அட இதை மறந்து விட்டேனே..மத்தியான சாப்பாட்டு நேரத்தில் கணவருடன் மேல் குறிப்பிட்ட அண்ணா, சந்திரன் அண்ணா,அவரது துணைவி & இன்னும் 3 -4 பேருடன் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் அண்ணாவையும் கணவன் - மனைவி என தவறாகப் புரிந்துகொண்டாவாம் என்று ஒரு மாமி சொல்ல அவவின் தோழி என் கணவரைப் பார்த்து"அப்ப உங்களுக்கு நல்லம் என்ன..வேற பெட்டைகளைப் பார்க்கலாம்" என்றா.என்னவருக்கு "ஏறி" விட்டது. ஆனாலும் அடக்கிக் கொண்டு சீ..எனக்கு என்ரமனிசி போதும்" என்றார்.

விழா முடிந்து வீட்டுக்கு வந்ததும் நான் தூ.உ.அண்ணாவிடம் அந்த மாமி, இவர் என்ன முறை எனக் கேட்டதைச் சொன்னேன். சிரிசிரியென்றுசிரித்தார். பிறகு அவ ஏன் அப்படிக் கேட்டா என்பதன் காரணத்தைச் சொன்னார். அவ அந்த அண்ணாவுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் பெண்ணின் உறவினராம். "தன் உறவினப் பெண்ணைக் கட்டப் போகிறவன் என்ன இன்னோருத்தியோடு சிரித்துக் கதைக்கிறானே" என்ற அக்கறையாம்!! இப்பிடியான கூத்துகளுடன் நன்றாகக் கழிந்தது நாள். கணவரது நண்பர் கனடாவிலிருந்து குடி பெயர்ந்துள்ளார். அவரையும் எங்களின்மெல்பேர்ண் விசிற்றில் அடக்கத் திட்டமிட்டு அங்கே சென்றோம். இரவுச்சாப்பாட்டிற்கு நிற்கவில்லை, அவர்களுடன் செலவழித்த நேரம் காணாது என்று ஒரே முறைப்பாடு. அங்கிருந்து விமான நிலையத்திற்குச் சென்றால் செக்-இன் முடிந்து 12 நிமிடங்கள் ஆகி விட்டது. பயணச்சீட்டில்குறிப்பிட்டிருந்தார்கள் 30 நிமி.க்கு முன்னமே வந்துவிடும்படி. அதையார் பார்த்தது! கணவரோ காரை ஒப்படைக்க பக்கத்துக் கட்டடத்துக்குப் போய் விட்டார். எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் பணிப்பெண் மசியவில்லை. அவளது நிலையும் எனக்கு விளங்கியதால் சரியென்று விட்டுவிட்டு அருகிலிருந்த கதிரையில் அமர, கணவரும் வந்து என்னிடம்விஷயமறியவும் சரியாக இருந்தது. அவளிடம் ஏற்கெனவே நான் முன்னெச்சரிக்கையாக சொல்லி வைத்ததால் என்னவரின் சாம பேத தண்ட உபாயங்களையெல்லாம் இயல்பாகக் கையாண்டாள் அப்பெண். பிறகென்ன..உபரியாக $164 கட்டி மறுநாட் காலை பயணத்திற்குப் பதிவு செய்து, மீண்டும் கார் எடுத்து நண்பர் வீடு நோக்கிப் பயணித்தோம். காலையில் தவறவிட்ட ஓர் விளம்பரம் கண்ணில் பட்டது.(அதை சொல்ல முதல் 3 விஷயம். நாங்கள் போன வி.நிலையத்தின் பெயர் Avalon. நகரிலிருந்து 30 நிமிடம் தள்ளி உள்ளது.இங்கே அவுஸ்திரேலியாவில் Have *** (அட.. wild card!) என்பதை ஸ்லாங் ஆக "avva*** என்பார்கள். உதாரணத்துக்கு: have a good day என்பது 'avva good day" ஆக மாறும்.)

இதுதான் விளம்பரம்: "Avalong flight ahead?next time fly Virgin Blue"

தலைக்கு மேலே ரொம்ப ப்ரைட்டாக பல்ப் ஒளிர்ந்திருக்கு!!

நண்பர் வீடு வந்து, பலகதை பேசி இரவல் இரவாடையில் படுக்கப் போகையில் 12 மணி. 5 மணிக்கு (ஞாயிற்றுக்கிழமையிலும் சாமம் வழியே எழும்ப வேண்டி இருக்கு!!) எழும்பி குளித்து வெளிக்கிட்டு, சரியான நேரத்துக்கு வி.நிலையம் வந்து, உலோகப் பறவையில் ஏறி, சிட்னியில் தரையிறங்கினோம். சிட்னி விமான நிலையத்திலேயே காலையுணவை முடித்துக் கொண்டு ஷட்டில் பஸ் எடுத்து நீ.கா.த.இலிருந்து காரெடுத்து அவனுக்கு $30 அழுது, வீடு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் அத்தானோ கல்லுப்போல உறுதியாய் இருக்க மெல்லியலாள் (என்ன சிரிப்பு?ம்ம்??) நான் பாழும் Flu க்கு விருந்தோம்பினேன். நேற்றுத்தான் கொஞ்சமாய் மீண்டு வந்து வேலைக்குத் திரும்பியுள்ளேன்.

பி.கு: பவித்ரா போல எனக்கும் தொடர் எழுத (90% மொழிபெயர்ப்புத்தான் என்றாலும்) வார்த்தை முட்டுது. நேரமும் வார்த்தையோடு சேர்ந்து கொண்டு இரட்டை முட்டு!! என்றாலும்..ஒலிம்பிக் தேசம் வரும்....வரும்..வரும்..வரும்..வரும்.வரும் வரும் வரும்வரும்வரும்.....


டும் டும் டும்

அப்பாடா.. ஒருமாதிரி திரும்பவும் வலைபதிய வந்துட்டன். வேலை பரவாயில்ல. போய் வாறதுக்குத்தான் eachway கிட்டத்தட்ட 80 நிமிசம் எடுக்குது. வீட்ட வந்து சமைச்சு சாப்பிட்டு படுக்கத்தான் நேரம் சரியா கிடக்கு. 2 கிழமை பயிற்சியெல்லாம் இந்த XPSP2 வெளியீட்டுக்குத் தான். ஒவ்வொருநாளும் 6- 7 handouts. வாசிச்சிட்டு போகோணும். இதுக்கு நடுவில சிட்னியில எனக்குக் கிடைச்ச முதல் நண்பிக்கு கலியாணம். வைச்சாளே கலியாணத்தை..காலம 8 மணிக்கு. விடியப்புறம் 5.15க்கு கிணிகிணியெண்டு சத்தம் போட்ட கடிகாரத்திட(உண்மையாவே "கடி"காரம் தான்) தலையில ஒண்டு போட்டுட்டு திரும்பிப் படுத்தன். 7.30 மணடபத்தில நிக்கச் சொன்னது ஞாபகம் வந்து துலைக்க...2.30 மணிக்கு படுத்து 5.30க்கு எழும்பின 3 மணித்தியால நித்திரை காணாது என்டு சொன்ன உடம்பும் மனமும் வலுக்கட்டாயமா ("V" குடிச்ச மாதிரி ;o) )உசார்ப்படுத்தப்பட்டன.பிறகென்ன...வழமையா நடக்கிற சீலைப்போராட்டம். நேரங்காலம் தெரியாம தலைப்பு பிளீட் வரமாட்டனெண்டு...ஆ!"இந்த சீலையை கண்டு பிடிச்சவன் மட்டும் என்ட கையில கிடைச்சா..."என்று வழமையான வீர வசனம். சரி "அன்புள்ள அத்தானை" எழுப்பி குளிக்க அனுப்பி நேரத்தைப் பாத்தா..ஐயய்யோ 6.30.!! தேத்தண்ணிக்கு தண்ணி வைச்சு, இரவு 2க்கு (பின்னேரம் மண்டபம் சோடிக்கப் போய் வேலைகள் செய்து நல்லா கூத்தடிச்சு,அங்கருந்து பொம்பிளையப் போய் பாத்திற்று வீட்ட வர 10.30- 11மணி, சீலைய அயர்ன் பண்ணி வச்சு{அம்மாவின் அருமை இப்பத்தானே தெரியுது!} வடிவா வெட்டி ஒட்டி கீறி வச்சிருந்ததையெல்லாம் சேர்த்தெடுத்து)செய்து முடிச்ச வாழ்த்து மடலை (scan பண்ண யோசிச்சனான்...பிறகு நித்திரக்களையில மறந்திட்டன்.)அதுக்கெண்டு தனிய விசேசமா செய்த பைக்குள்ள வைச்சு செலொடேப்பால ஒரு ஒட்டு. (அட...என்ன இது இன்னும் இந்த பிளீட் சரி வருதில்லயே..grr!)தென்னாபிரிக்காக்கு குடும்பம் நடத்தப் போறவக்கு வித்தியாசமா என்ட கையாலயே ஒரு மடல் செய்து குடுத்திருக்கிறம்.

மண்டபத்துக்கு வந்து அதில நிண்ட ஒரு அன்ரிய பிடிச்சி ஒருமாதிரி பிளீற்ற வழிக்கு கொண்டு வந்தன். பிறகு வழமையான சின்னச் சின்ன வேலைகள் செய்திட்டு கலியாணம் பாக்க வசதியா நண்பிகள் கூட்டம் முன்னுக்கு போய் இருந்து கொண்டம். இதுக்குள்ள என்னையும் சேர்த்து 4 பேர் தலை மயிர நேராக்கியிருந்தை கண்டு ஆச்சிரியப்பட்டிட்டன்.( தலைமயிரில ஒரு பரிசோதனை முயற்சியும் செய்யப் போறல்ல நான். 3 மாசத்துக்கு ஒருதரம் அடில வெட்டுறதோட சரி. தலை மயிர் நேராக்க வேணுமென்டு கன நாள் ஆசயா கிடந்த.ஒரு மாதிரி நிறைவேத்திட்டன்!) வழமையா எல்லாத்தயும் கதைச்சு கொள்ளுறனாங்க...இந்த முறை ஒத்தரும் தலைமயிர் அலங்காரத்த பத்தி மூச்சும் விடல்ல. சும்மா சொல்லப்படா... எல்லாற்ற ஒசிலும் நல்லாத்தான் இருந்தது. கல்யாணம் நல்லபடியா நடந்துது.

ஒரு சின்ன விசயம்..கூறைத் தட்ட வாங்க முன்னம் மாப்பிள்ளைட காலில கலியாணப்பொம்பிள விழுந்து கும்பிட்டவ. இத நான் ஒரிடத்திலயும் இதுக்கு முதல் காணல்ல. முருகன் கோயில் ரவி ஐயா தான் கலியாணம் நடத்தினவர். ஒரு வேளை இந்திய முறையா இருக்கலாம் என்டு நினைக்கிறன். ஏன் விழுந்து கும்பிடுற? என்னப் பொறுத்த வரையில கொஞ்சம் பிற்போக்காப் பட்டுது. இன்னொண்டு என்னண்டா அருந்ததி காட்டினவங்க. இளஞர் தின விழா இதழ்ல ஒராள், தான் எழுதியிருந்த கட்டுரையில மண்டபத்துக்குள்ள(பகல்ல) நடக்கிற கலியாணத்தில கூரைக்குள்ளால பாக்க முடியாத நட்சத்திரத்தை காட்டுறதப் பற்றி சொல்லிருந்தவர். பொம்பிள இந்த கட்டுரைய வாசிச்சிருக்கிறா போல..சிரித்து விட்டு மாப்பிள்ளையிடம் என்னவோ சொல்ல அவரும் சிரித்தார்.ஐயாவும் சிரித்தார். எங்களுக்கும் கட்டுரை ஞாபகம் வர நாங்களும் சிரிச்சு வச்சம். நல்ல சாப்பாடு. சந்தோசமாக, நல்ல படியா முடிஞ்ச கலியாணம். பொம்பிள-மாப்பிள மனம் நிறைஞ்சு வாழோணும் என்டு வாழ்த்திறன்.

விரைவில் வருவேன்

புதிதாய் வேலை தொடங்கி, பயிற்றுவிக்கப்படுகிறேன். சிலநாளாய் மழையைக் காணவில்லையென்று வானம் பார்க்கிறவர்கள் அடுத்த கிழமை அண்ணாந்து பார்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஒ.தே விரைவில் தொடரும்.

ஒலிம்பிக் தேசம் 3 ஒ.தே 2

கிமு 1200- 800
டோரியர்கள் கிரேக்கப்பெருநிலத்தில் பரந்த போது குறுநிலங்களைத் தரைமட்டமாக்கி அதன் குடிகளையும் தமக்கு அடிமகளாக்கினர். பின்னர் கிரீட்டையும் ஆசியாமைனரின் தென்மேற்குக் கரையோரப்பகுதியையும் கைப்பற்றினர். தெசலியர் என அறியப்பட்ட ஒரு இந்தோ-ஐரோப்பிய இனத்தவர் தெசலியில் வந்து குடியேறினர். கிரேக்கத்தில் முன்பிருந்தே வசித்து வந்த பழங்குடிகளில் எயோலியர் ஆசியாமைனரின் வடமேற்குக் கரைக்கும்; அயனியர் மத்தியகரைக்கும், லெஸ்போஸ், சமோஸ்(சமோசா அல்ல!!),கியோஸ்(பவித்ராவின் பூனைக்குட்டி அல்ல!!) ஆகிய தீவுகளுக்கும் இடம்பெயர்ந்த போதிலும் இவர்களிற் சிறு பகுதியினர் அவ்வாறு குடிபெயராது அற்றிக்காவிலும் நன்கு பலப்படுத்தப்பட்ட அதென்ஸிலும் தங்கியிருந்தனர். டோரியர்களின் ஆக்கிரமுப்புடன் ஆரம்பிக்கும் அடுத்த 400 வருட காலம் கிரேக்க வரலாற்றின் இருண்ட காலமாக வர்ணிக்கப்பட்டாலும் டோரியர்களை அவ்வளவு எளிதில் உதாசீனம் செய்து விட முடியாது. இவர்கள் தான் இரும்பை கிரேக்கத்திற்குக் கொண்டு வந்தனர். மட்பாண்டங்களை அலங்கரிப்பதில் புதுவிதமான முறையை கொண்டிருந்தன்ர். ஜியொமெட்ரிக் (தமிழில்??) உருவங்களை வரைந்தனர்.இவர்களாக இந்த அலங்கார உருவங்களைக் கண்டுபிடித்தனரா அல்லது அற்றிக்காவின் அயனியர்களிடம் ஏற்கெனவே பழக்கத்திலிருந்த அலங்காரக்கலையை மெருகேற்றினரா என்பது இன்னும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. ஆண் கடவுளரை வணங்கிய டோரியர்கள் பிற்பாடு மைசீனிய கடவுளரில் பொசெய்டொன், ஸீஸ், அப்பொலோவையும் சேர்த்து வணங்கினர். முடியாட்சி முறை கிமு800ம் ஆண்டளவில் முடிவிற்கு வந்து, மைசீனிய நாகரிகத்தில் போன்று நகர் சார்-குறுநில ஆட்சி ஏற்பட்டது. இக்குறுநிலங்களில் ஆட்சியதிகாரம் செல்வந்தரான நிலவுடமைப் பிரபுக்கள் கையில் இருந்தது.

கிமு 800- 480குறுநில ஆட்சி மீளவும் ஆரம்பித்த காலகட்டத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு என்பனவற்றின் உற்பத்தி மிகுந்திருந்தமை கிரேக்கர்களை கடல் வணிகம் நோக்கிச் செலுத்தியது. பினீஷியர்களின் வீழ்ழ்ச்சியாலேற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டு புதிய கிரேக்க குடியேற்றங்கள் வட ஆபிரிக்கா, சிசிலி,இத்தாலி, தென் பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டன.பினீஷிய மூலாதாரங்களைக் கொண்ட எழுத்துக்களும் கிரேக்கர்கள் சேர்த்த உயிரெழுத்துக்களும் கொண்டதாக உருவான கிரேக்க எழுத்து வடிவம் குறுநிலங்களை ஒன்றிணைத்தது. எல்லாக் குறுநிலங்களுக்கும் பொதுவான மைசீனிய வரலாற்றைக் கூறும் ஹோமரின் படைப்புக்கள், எல்லாக் குறுநிலங்களிலுமிருந்து வீரர்கள் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டி, கருத்துப்பரிமாற்றத்திற்கு டெல்ஃபி என்பன கிரேக்கர்களுக்கு ஒரு தேசிய உணர்வை அளித்தன. இக்காலகட்டம் இடைக்காலம் என அறியப்படுகிறது.

குறுநிலங்கள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான அமைப்பில் கட்டப்பட்டன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட அக்ரொபொலிஸ்(அக்ரொ-உயர்ந்த, பொலிஸ்- நகரம்)அந்த நிலத்தின் உயரமான இடத்தில் நிர்மாணிக்கப்பட்டது. இந்த அக்ரொபொலிசில் தான் நாட்டின் திறைசேரி, கோயில்கள் என்பன அமைந்திருந்தன. இதுவே முற்றுக்கைகளின் பொது மக்கள் தஞ்சம் புகுமிடமாகவும் விளங்கியது. அக்ரொபொலிசிற்கு வெளியே ஒரு சந்தையும் அதற்கும் அப்பால் குடியிருப்புகளும் அமைந்திருந்தன. சுயாட்சியின் கீழிருந்ததால் தத்தம் தேவைக்கேற்ப சட்டமியற்றி ஆட்சி நடத்திய குறுநிலங்கள் தம்மிடையே சண்டைகளையும் போர்களையும் ஏற்படுத்திக் கொண்டன.பரம்பரையாக அதிகாரத்தைப் பெற்றதனால் பிரபுக்கள் சாதாரண மக்களால் வெறுக்கப்பட்டனர். சில குறுநிலங்கள் புரட்சிக்காரர்களின் ஆட்சிக்குட்பட்டன.இதனை ஆரம்பித்து வைத்தவர் (கிமு 650)கொரிந்தைச் சேர்ந்த கைப்செலோஸ். பதவிகளைப் பரம்பரையாகப் பெறாது பலவந்தமாகக் கைப்பற்றிய இவர்கள் சாமானிய குடிமக்களின் நன்மையைத் தம் கருத்தில் கொண்டவர்களாக நோக்கப்பட்டார்கள்.

அதென்ஸ்:
புரட்சிக்கார்களின் ஆட்சிக்கு சில குறுநிலங்கள் உட்பட்டாலும் அதென்ஸ் இன்னமும் பிரபுத்துவ அதிகாரத்தின் கீழேயே இருந்தது. ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கப்பட்டு அம்முயற்சி தோற்கடிக்கப்பட்ட நிலையில் ட்ராகோ எனப் பெயர் கொண்ட சட்டவியலாளர் கிமு620 இல் மிகக் கடுமையான சட்டங்களை இயற்றினார். உதாரணம்: காய்கறி திருடினால் மரணதண்டனை. :O( கிமு 594ல் சோலோன் என்பவர் தலைமை சட்டவியலாளராக நியமிக்கப்பட்டார். குடிமக்களின் எல்லாக் கடன்களையும் இரத்துச் செய்ததுடன் கடன் காரணமாக அடிமைப்பட்டிருந்தவர்களையும் விடுதலை செய்தார். எல்லா அதென்ஸ்வாசிகளும் சட்டத்தின் முன் சமமாகக் கருதப்படவேண்டும் என அறிவித்து பரம்பரையாக அதிகாரங்களை சுவீகரிக்கும் வழக்கத்தையும் இல்லாதொழித்தார்.சட்டமியற்றுபவர்களையும் அதை நிலைநிறுத்துபவர்களையும் மக்களே வாக்கு செலுத்துவதன் மூலம் தேர்ந்தெடுக்கும்படி செய்தார். இவரது சீர்திருத்தங்கள் ஜனநாயகத்தின் வருகைக்கு கட்டியம் கூறுபவையாக அமைகின்றன.ஜனாதிபதிகளுக்கு முன்னோடியாக சோலோன் திகழ்கிறார்.

ஸ்பார்ட்டா:
ஐந்து கிராமங்களைக் கொண்டதான ஒரு குறுநிலம் பெலொபொனீஸ் குடாநாட்டில் ஸ்பார்ட்டா என்னும் பெயரோடு விளங்கிற்று. இங்கே முடியாட்சி நிலவியது. டோரியர்களின் வழித்தோன்றல்களான ஸ்பார்ட்டாவாசிகள் லக்கோனியாவின்(பெலொபொனீஸ்) ஒரிஜினல் குடிகளான ஹெலொட்ஸை தம் அடிமைகளாகக் கொண்டிருந்தனர். சமூக ஒழுங்கானது கட்டுப்பாடுகள் நிறைந்த இராணுவ அடிப்படையில் அமைந்திருந்தது.பச்சிளங் குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டு, குறையுடையவர்களாகக் காணப்பட்டால் (இறக்கும் வரை) மலையுச்சியொன்றில் விடப்பட்டார்கள்( பெற்றோர் நிலை..நினைக்கவே மனதைப் பிசைகிறது!). 7 வயதினை அடைந்ததும் சிறுவர் தத்தம் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு கட்டாயமான, கடுமையான இராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டார்கள். சிறந்த போர்வீரரை 'உற்பத்தி' செய்வதற்கு இம்முறை பின்பற்றப்பட்டது. சிறுமியர் இந்தப் போர்ப்பயிற்சியில் ஈடுபடுத்தப்படவில்லையாயினும், பின்னாளில் அவர்கள் சுகதேகிகளாகி, பலசாலிகளான ஆண் மகவுகளைப் பெற்றெடுக்கும் முகமாக சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. விமர்சனம் எதுவும் யாராலும் முன்வைக்க முடியாதபடி நடந்த ஸ்பார்ட்டா ஆட்சியில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லாது போனமையால், மற்ற குறுநிலங்கள் கனவு கண்ட ஒரு ஸ்திரத்தன்மை காணப்பட்டது. அதென்ஸ் வர்த்தக ரீதியாகப் பலம் பெற, ஸ்பார்ட்டா திறம்பட இயங்கும் இராணுவ இயந்திரமாக விளங்கியது. இவ்விரண்டு நகரங்களும் ஏனைய குறுநிலங்களை விட மேலோங்கி நின்றன.

ஒலிம்பிக் தேசம் 2 (ஒ.தே 1)

சைக்ளேட்ஸ் நாகரிகம்

இந்நாகரிகத்தின் வரலாறு (தமிழ்ச்சங்கத்தைப் போன்று) 3 காலகட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. முதல்(கிமு 3000 - 2000), இடை(கிமு 2000 - 1500), கடை(கிமு 1500 - 1100).இந்நாகரிகத்தினர் உலகிற்கு விட்டுச் சென்ற சொத்துகளில் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடிப்பன பரிஸ் மார்பிளிலான சைக்ளேட் சிற்றுருவங்கள். இச்சிற்றுருவங்கள் மட்டுமல்லாது வெண்கலம், எரிமலைக் குழம்பிலிருந்து பெறப்படும் ஒருவகைக் கல்- இவற்றாலான ஆயுதங்கள், தங்கநகைகள், கல் & களிச் சாடிகள் சட்டிகள் போன்றவற்றையும் இக்காலத்திற்குரிய எச்சங்களிலிருந்து நாம் காணலாம். தேர்ச்சி பெற்ற மாலுமிகளான சைக்ளேட்ஸ் நாகரிகத்தினர் மைலோஸ், தேரா(தீரா)(தற்போதைய சன்டோரினி) நகரங்களை மையமாகக் கொண்ட மிகவும் செழிப்பானதோர் கடல்சார் வாணிபத்தை நடத்தினர். அவர்கள் தமது ஏற்றுமதிப் பொருட்களை ஆசியாமைனர், ஐரோப்பா, வட ஆபிரிக்கா,கிரீட், மற்றும் கிரேக்கப் பெருநிலம் ஆகியவற்றிற்கு அனுப்பினர். இவர்கள் ஏஜியன், அயனியன் கடற் துறைமுகங்களை தம் பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களாக கொண்டிருந்தனர். மேலும் இத்தாலி, ஸ்பெயின் போன்ற மேற்கு சந்தைகளுக்குரிய கடல்வழிப்பாதையை பினீஷியர்கள், மினோஅர்களுக்கு முன்னரே பயன்படுத்தினர். மினொஅன், மைசீனியன் நாகரிகங்களின் பாதிப்பு இந்நாகரிகத்தில் காணப்பட்டது. தேராவில் எற்பட்ட எரிமலை வெடிப்பினால் இந்நாகரிகம் அழிவுற்றது என வரலாற்றாசிரியர்கள் நினைக்கின்றனர். இந்த எரிமலை வெடிப்பு என்றுமில்லாத அளவுக்கு பேரழிவை உண்டாக்கியதொன்றாகக் கருதப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட தேரா, காணாமல் போனதாகக் கருதப்படும் "அட்லான்டிஸ்" இன் தலைநகரமாக நம்பப்படுகிறது.

மினோஅன்
கிரீட்டின் மினோஅன் நாகரிகம் கிழக்கிலிருந்த எகிப்திய, மொசப்பொத்தேமிய(ஈராக்) நாகரிகங்களின் தாக்கத்தைக் கொண்டிருந்தது. இதுவரை ஐரோப்பாவிற் காணப்பட்ட எந்த ஒரு நாகரிகத்தையும் விட சிறந்ததாக விளங்கியது. சைக்ளேட்ஸ் நாகரிகத்தைப் போன்றே இத்ன் வரலாற்றையும் தொல்பொருளாராய்ச்சியாளர் 3 காலப்பகுதிகளாகப் பிரிக்கின்றனர். முதல் (கிமு 3000- 2100), இடை(கிமு 2100- 1500), கடை(கிமு 1500- 1100). முதல்(கிமு 3000- 2100) காலகட்டத்தில் நியோலித்திக் வாழ்க்கை முறையின் பல அம்சங்கள் இன்னும் புழக்கத்தில் இருந்தன. படிப்படியாக கிட்டத்தட்ட கிமு 2500ம் ஆண்டளவில் மக்கள், நோசோஸ்சை ஆண்ட மினோஸ் என்ப்படும் புராண அரசனின் பெயரால் அறியப்பட்ட தனித்தன்மை வாய்ந்ததொரு நாகரிகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இடைக்காலத்தை(கிமு 2500 - 1500) மினோஅன் பொற்காலம் எனலாம். அப்போது அவர்கள் அழகிய வேலைப்பாடுகளுடைய மட்பாண்டங்கள், உலோகவேலைகள், என்பனவற்றை தமது தொழிற்திறமை, கற்பனை என்பனவற்றை மூலமாகக் கொண்டு தயாரித்தனர். தனது இறுதிக்காலத்தில் வர்த்தகரீதியாகவும் இராணுவரீதியாகவும் வீழ்ச்சியுற்றது. இதற்குக் காரணமாயிருந்தது கிரேக்கப்பெருநிலத்தைச் சேர்ந்த மைசீனிய நாகரிகத்தின் வளர்ச்சியாகும். டோரியன் ஆக்கிரமிப்பாளர்களும், இயற்கை அனர்த்தங்களும் கிரீட் தீவைச் சூறையாடி அதன் திடீர் அழிவுக்குக் காரணமாயின. சைக்ளேட்ஸ் நாகரிகத்தினரைப் போலவேஇவர்களும் சிறந்த கடல் வல்லரசாக விளங்கினர். பினீஷியர்கள், கிரேக்கர்களுக்கு இவர்களே கடல்துறை முன்னோடிகள். இவர்களது பொருட்களும் மத்தியதரைக்கடற் பிரதேசத்தை தமது சந்தையாக கொண்டிருந்தன. எகிப்தியர்களால் மிகவும் மதிக்கப்பட்ட, போற்றப்பட்ட polychrome கமரெஸ் பாண்டங்களின் உற்பத்தி இடைக்காலத்தில் செழித்தது. கிமு 1700ம் ஆண்டளவில் நொசொஸ், ஃபீஸ்டொஸ், மாலியா, சேக்ரோஸ் எனும் இடங்களீல் பெரும் பூமியத்திர்ச்சி ஏற்பட்டது. இதனால் அழிந்த அரண்மனைகளை மீளக்கட்டும் போது அவற்றை ஒரு சிக்கலான கட்டமைப்பில் பல இரகசியப்பாதைகள், அடுக்குமாடிகள் உடையதாயும், அரச புரங்கள், ஊழியர் தங்குமிடம், வரவேற்புக்கூடங்கள், களஞ்சிய அறைகள், பட்டறைகள் என்பனவற்றுடன் உயர்தரமான, முன்னேற்றமடைந்த கழிவுநீர் அகற்றுவதற்கான கால்வாய் கட்டுமானமும் கட்டப்பட்டது. மினோஅன் ஈரச்சுதை(fresco) ஓவியங்கள் இவ்வரண்மனைகளின் உட்புறங்களை அலங்கரித்தன(இவற்றை தற்போது இராக்லியொன் தொல்பொருளாராய்ச்சி அருங்காட்சியகத்தில் காணலாம்). ஈரச்சுதை ஓவியங்கள் சாதாரணர் வீட்டிலும் காணப்பட்டன. இவ் ஓவியங்களில் சமய ஊர்வலங்கள், விளையாட்டுகள், எருதுச்சண்டை, தாவரங்கள், கடல் என்பன இடம்பெற்றன. இந்நாகரிகத்தினர் வாழ்வில், இயற்கையில் கொண்டிருந்த விருப்பை, ஈடுபாட்டைவெளிப்படுத்துவதிலும் மகிழ்ச்சியான, அமைதியான மக்கள் என்பதைக் காட்டுவதிலும் இந்த ஓவியங்கள் முக்கிய பங்கு வக்கின்றன. மினொஅன் நாகரிகத்தினர் கல்வியறிவுடையவர்களாகத் திகழ்ந்தனர். இவர்களுடைய ஆரம்ப எழுத்து வடிவம் எகிப்திய 'ஹைரோகிளிஃப்' ஐ ஒத்திருந்தது. பின்னர் கோட்டு வடிவ எழுத்திற்கு முன்னேறினர். இதனை தொல்பொருளாய்வாளர் Linear A என அழைக்கின்றனர். இவ் எழுத்து வடிவம் இன்னும் decipher பண்ணப்படவில்லை. இந்த எழுத்து வியாபார ஒப்பந்தங்கள், கொடுக்கல்வாங்கல்கள், அரச களஞ்சியத்திலிருந்த பொருட்களின் பட்டியல் என்பனவற்றை குறித்து வைக்க மட்டுமே பயன்பட்டது எனவும் தனிமனித கருத்துக்கள் இவ்வெழுத்துருவில் பதியப்படவில்லை எனவும் கருதப்படுகிறது. இந்நாகரிகத்தின் கிமு1500க்குப் பின்னான அழிவு மைசீனிய ஆக்கிரமிப்பாளரால் மட்டுமன்றி சைக்ளேட்ஸ் தீவுகளில் ஒன்றான தேராவில் ஏற்பட்ட எரிமலைக் குமுறலால் தூண்டப்பட்டு ஏற்பட்ட பூமியதிர்ச்சி தன்பங்கிற்கு உருவாக்கிய பேரலைகளால் ஏற்பட்டதும் என வரலாற்றாசியர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

மைசீனியர்
மினோஅன் நாகரிகத்தின் வீழ்ச்சியும் மைசீனிய நாகரிகத்தின் அசுர வளர்ச்சியும் சமகாலத்தில் நடந்துள்ளன. கிமு 1900- 1100 வரை ஆயுளை கொண்டிருந்த மைசீனிய நாகரிகத்தின் உச்சகட்டமாக பொற்காலமாக கிமு1500- 1200 வரையான காலத்தைச் சொல்லலாம். இந்நாகரிகத்தின் பெயர்க் காரணம் மைசினீ எனப்படும் புராதன நகரம். ஒரு பொது ஆட்சியாளரின் கீழ் அமைதியாக இருந்ததை குறிப்பதாக நகரங்களை சுற்றி மதில்களோ சுவர்களோ அற்ற மினொஅர்களின் அரசாங்கத்தைப் போலன்றி மைசீனிய நாகரிகத்தில் பல சுதந்திர குறு நில ஆட்சிகள் காணப்பட்டன. கொரிந்த், பைலோஸ், திரைன்ஸ் இவற்றுடன் பலம்மிக்க மைசினீயும் இச்சுதந்திர குறுநிலங்களுக்குள் சில. இலகுவில் தற்காத்துக் கொள்ளக்கூடியதான மலையுச்சிகளிலே மதிலாற் சூழப்பட்ட அரண்மனைகள் காணப்பட்டன. மைசீனியர்களின் முதுசொம் தங்கநகைகள், அழகுக்கலைப் பொருட்கள் என்பன. இவற்றை தற்போது அதென்ஸிலுள்ள தொல்பொருளாராய்ச்சி அருங்காட்சியத்தில் காணலாம். இவர்களுடைய எழுத்து Linear B என அறியப்படுகிறது. இதனை decipher பண்ணிய மொழி ஆய்வாளர்களால் கிரேக்க மொழியின் ஆரம்ப வடிவம் என இது அறியப்பட்டுள்ளது. கிரேக்கக் கடவுளரின் முன்னோடிகளை இம்மக்கள் வணங்கியுள்ளனர். போர்வீரராய் விளங்கிய இந்நாகரிகத்தினர் மறுபிறப்பில் நம்பிக்கை உடையவராய் இருந்தனர். கிமு 1500ம் ஆண்டளவில் மினொஅன் இடங்கள் அழிக்கப்படுகையில் மைசீனியர்களும் ஒரு சில இடங்களைத் தாக்கியுள்ளனர். மைசீனிய குறுநிலங்கள் சேர்ந்து ட்ரோயை எதிர்த்துப் போர் தொடுத்தமை குறிப்பிடத்தக்கது. மைசீனிய நாகரிகத்தின் தாக்கம் கிரீட்டையும் தாண்டி எகிப்து, மொசப்பொதேமியா, இத்தாலி வரை சென்றிருந்தது என்பதற்கு அவ்விடங்களில் தொல்பொருளாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் சான்று பகர்கின்றன. இந்த மைசீனிய நாகரிகம் இத்தாலி, லிபியா, அருகேயிருந்த கிழக்குப் பிரதேசங்கள் என்பனவற்றிற்குப் பரவியது. உள்நாட்டுப் பூசல்களாலும் டோரியர்களின் கிமு1100ம் ஆண்டளவிலான படையெடுப்பினாலும் இந்நாகரிகம் அழிவுற்றது. இதன் மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஏஜியன் தீவுகள், சைப்ரஸ் மற்றும் லிபியாவுக்கு இடம் பெயர்ந்தனர்.

ஒலிம்பிக் தேசம் 1

கிரேக்க வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.பரந்த கிரேக்கத்தின் பல பகுதிகளிலும் 1.5 - 2 மில்லியன் வருடத்திற்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதை தொல்பொருளாராய்ச்சி மூலம் அறியக் கிடைக்கின்றது. பெட்ரலோனா சல்கிடிகியில் (நாக்கு சுளுக்குதா?) கண்டெடுக்கப் பட்டதைப் போன்று fossilized மண்டையோடுகள், வீட்டுப்பாவனைப் பொருட்களின் மிச்சங்கள், நகைகள், பல்வேறு உலோகங்களினாலான கலைப் பொருட்கள் என்பன தொல்பொருள் ஆராய்ச்சியாளரினால் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவை கற்காலத்திலிருந்து கிரேக்கம் அடைந்த பண்பாட்டு வளர்ச்சிக்கான சாட்சிகளாகக் கருதப்படுகின்றன. நியோலித்திக் காலப் பகுதியில் (கி.மு 6800 - 3200) நிரந்தரக் குடியேற்றங்கள் கிரேக்கத்தில் அமையப்பெற்றன. இவை கால்நடை வளர்ப்பு, விவசாயம், பண்டமாற்று போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்ட சிறந்த பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்டிருந்தனவாம். கலையும் முக்கிய இடம் பெற்றிருந்தது. தொல்பொருளாராய்ச்சியின் போது அறியப்பட்ட/பெறப்பட்ட கட்டடக்கலையின் சிறந்த படைப்புகளின் இடிபாடுகள், கல்லறைகள், மனித்/மிருக உருவச்சிலைகள், நகைகள், நாணயங்கள், முத்திரைகள் மற்றும் அக்காலத்தில் மக்கள் பாவித்த கருவிகள் போன்றன நியோலித்திக் காலத்து நாகரிகத்திற்குரிய அடையாளங்களாகும். இக்குடியேற்றங்கள் அமைந்திருந்த இடங்களில் தற்போது அடையாளம் கணப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஆயிரத்தைத் தாண்டுகிறது. இவற்றிலே காலத்தால் முந்தியதாகக் கருதப்படுவது கி.மு 6000 ஐச் சேர்ந்ததாகும். இவற்றுள் பிரபலமானவை தெசெலியாவில் உள்ள செஸ்க்ளோ & டிமினி, கிரீட்டிலுள்ள வெர்னா, அர்கொலிடா, நொசோஸ் என்பன.

கிட்டத்தட்ட கி.மு 3000 அளவில் அண்மையிலிருக்கும் (துருக்கியில்) ஆசியா மைனரிலிருந்து குடி பெயர்ந்த இந்தோ-ஐரோப்பிய இனத்தவர் கிரேக்கப் பெருநிலத்தில் கால் பதித்து அங்கிருந்த பழைய நியோலித்திக் மக்களை படிப்படியாக வெற்றி கொண்டனர். இந்தோ-ஐரோப்பியரிடம் காணப்பட்ட வெண்கலம் பற்றிய அறிவு தான் கிரேக்கத்தின் வெண்கல யுகத்திற்கு தோற்றுவாயாக அடையாளம் காணப்படுகிறது. வெண்கலத்தின் அறிமுகம் , ஏனைய உலோகங்கள் பற்றிய அறிவு தொழிநுட்பம் என்பன தேசத்தின் அன்றாட வாழ்க்கை, சமூக ஒழுங்கமைப்பு என்பவற்றில் மாற்றத்திற்கும், மற்றும் வர்த்தகத் தொடர்புகளுக்கும் வித்திட்டன. வெண்கலம் ஆயுதத் தயாரிப்பில் முக்கியமானதாகக் கருதப் பட்டதால் கருங்கடலிலிருந்து தெற்கு ஏஜியன் வரை வர்த்தகத் தொடர்புகள் ஏற்பட்டன. இவ்வர்த்தக வலைக்கட்டமைப்பு உலோக வியாபரத்திற்கே பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டது. ஏஜியன் கடற்பிரதேசத்தில் மீன்பிடியும் வணிகமுமே பிரதானமாக இருந்தன. இவையிரண்டிற்கும் ஏதுவாக இருந்ததால் கிரேக்க பெருநிலத்தை விட கரையோரப் பிரதேசங்களும் தீவுகளுமே அதிகளவு மக்கள் குடியேற்றத்தைக் கண்டன. இவ்விடங்களே இதன் மூலம் முதலாவது ஐரோப்பிய நாகரிகத்திற்கு வழி கோலின. வெண்கல யுகம் 3 பிரதான நாகரிகங்களுக்கு கருவறையாகியது. அவை: சைக்ளெடிக், மினோஅன், மைசீனியன் என்பன.

வெண்கல யுகத்தில் உலோக வேலைகள், உலோகச் சேர்க்கைகள் பற்றிய அறிவு வளர்ந்து அபிவிருத்தியடைந்து பல துறைகளிலும், முக்கியமாக விவசாயத்துக்குரிய கருவிகள், கலை வடிவங்கள் என்பவற்றில் எழுச்சிமிகு மாற்றங்கள் கொண்டுவந்தது. மேலும் இந்த காலகட்டத்தில் கால்நடை வளர்ப்பு, வர்த்தகம், விவசாயம், உற்பத்திகள் என்பன ஒரு ஒழுங்கிற்குள் வரையறுக்கப்பட்டு கட்டுக்கோப்புடன் வளர்ச்சியடைந்தன. தொழினுட்பத் திறமை, நகர அபிவிருத்தி,வேலைப்பகிர்வு, சமூக அமைப்பு, கலைவளர்ச்சி இவற்றுடன் (ஆரம்பநிலை) நிர்வாக அறிவும் திறமையும் கிரேக்கப் பெருநிலத்தை ஒரு சிறந்த நாகரிகம் உருவாவதற்கான விளைநிலமாக, அந்நாகரிகம் வளர்வதற்கு ஒரு தொட்டிலாக அடையாளப்படுத்தியது. முன்னே குறிப்பிட்டது போல வெண்கல யுகத்தில் 3 பிரதான நாகரிங்கள் இருந்தன. ஒவ்வொன்றும் தனித்தனி வழியே சென்று பல்வேறு கட்டங்களைத் தாண்டி வளர்ந்தன.

ஏஜியன் பிரதேசத்தில் செழித்ததும், ட்ரோயிலிருந்த துரோஜன் நாகரிகம், வடகீழ் ஏஜியன் தீவுகள் மற்றும் சைக்ளேட்ஸ் தீவுகளைச் சார்ந்த சைக்ளேட்ஸ் நாகரிகம் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டதும், முதலாவதான நாகரிகமாகும். இரண்டாவது கிரீட்டன்/மினோஅன் நாகரிகம். மத்தியகிழக்கு நாடுகளுக்கான கடல்வழிப் பாதையில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிரீட் தீவில் நிலை கொண்டிருந்தது.இதன் முக்கிய நகரங்கள் நோசோஸ், ஃபீஸ்டோஸ், ஸேக்ரோஸ் மற்றும் மாலியா என்பன. ( கி.மு 1500ல் மைசீனியரின் கையில் வரும் வரை மத்தியதரைக்கடற் பிரதேசத்தில் கிரீட் கலாச்சாரமும், வாணிபமுமே ஆதிக்கம் செலுத்தின.) மூன்றாவதாக குறிப்பிடப்பட்ட மைசீனியன் நாகரிகம் ஹெலனிக் அல்லது ஹெலடிக் எனவும் அறியப்படுகிறது. இந்நாகரிகம் கிரேக்கத்துப் பெருநிலத்திலும், குறிப்பாக பெலோபொனீஸ் குடாநாட்டிலும் செழித்தது. இதனுடைய முக்கிய நகரங்கள் மைசீனி,திரைன்ஸ், பைலோஸ்.


என் பார்வையில் கலை ஒலி மாலை 2004

ATBC எனப்படும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 2ம் ஆண்டு நிறைவு விழாவிற்குச் சென்றிருந்தோம். பதின்வயதினரின் கவியரங்கு (யார் எழுதி கொடுத்தார்களோ..நல்லதொரு முயற்சி. அதற்குப் பிறகு வைத்தார்கள் பாருங்கள் ஒரு நடனம்..Fusion Dance என்ற பெயரில் பழைய பாட்டுகளுக்கு (கிட்டத்தட்ட 30) சிறுவர்களைக் கொண்டு நவீன நடனம். முதலாம்/இரண்டாம் பாட்டு..சரி.. பார்க்க இந்த மாதிரி நடனம் வித்தியாசமாகவும் சின்னப்பிள்ளைகள் செய்தது cute ஆகவும் இருந்தது. பிறகு அடுத்தடுத்து 8/9 பாட்டுகள். ஒன்றிரண்டு புதிய பாடல்களுக்கு ஆடினாலும் அதிக நேரம் தொடர்ந்ததால் சலிப்படைய வைத்தது. நல்லதொரு புதுமையான பாணிதான்..அமைக்கும் நடன அசைவுகளை கவனித்து அமைக்க வேண்டும். தமிழ் படங்களில் வரும் suggestive அங்க அசைவுகளும் குலுக்கல்களும் இந்த சிறார்கள் ஆடிய நடனங்களிலும் இடம் பெற்றது வருத்தத்திற்குரிய விடயம்.

ஒரு கடி (ரத்தம் வருமளவுக்கு) நாடகம் இடம் பெற்றது. அதிலே சொன்ன கருத்து எல்லாருடைய மண்டையிலும் ஏறியிருக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன். நாடக நீதி : வம்பு பேச/வளர்க்க வேண்டாம்.

இடையிலே பேச இவ்வானொலி அமைப்பின் நிறைவேற்று அங்கத்தவர்(executive member) ஒருவர் வந்தார்; "I am going to speak in English, please bear with me..my Tamil is not good!!" சரி விடுவோம். அவர் படித்தது ஆங்கிலத்திலாக இருக்கலாம்.

இந்நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தவர்கள் சஹானா தொலைக்காட்சித் தொடரில் வரும் அனுராதா கிருஷ்ணமூர்த்தி என்னும் பாடகியை இதற்காகவே இந்தியாவிலிருந்து அழைப்பித்தார்களாம். அவர் பாவம் மெல்பேண், கன்பராவில் இவர்களது நிகழ்ச்சியில் பாடி களைத்து சிட்னிக்கு வந்திருந்தார். கச்சேரியை வாதாபி கணபதிம்மில் தொடங்கி பாரதியாரின் வந்தே மாதரம், காணக் கிடைக்குமோ, கீர்த்தனைகளும் மற்றும் சஹானா தொடரில் வரும் சில பாடல்களும் பாடிக் கொண்டிருந்தார். நல்லாக காது குளிர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் போது விளம்பர இடைவேளையில் உயிரற்ற மின்கலமுடைய ரிமோட் போல் (எத்தனை நாளைக்குத்தான் சிவ பூசையில் கரடியாய் ..) தொகுப்பாளர் வந்து "குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்"(அதெல்லாம் எதுக்கு..நாங்க வேண்டாமென்றாலும் எப்பிடியோ அறுக்கத்தான் போறீங்க..)"கலைஞர்களை கௌரவிப்பதற்கு --- அவர்களை அழைக்கிறோம்". வந்தார்கள்.பொன்னாடை போர்த்தினார்கள். அத்தோடு விட்டிருக்கலாம். "விழா ஒருங்கிணைப்பாளர் XXX அவர்களை சில வார்த்தைகள் கூறுமாறு கேட்டுக் கொள்கிறோம்". வந்தார் திருவாளர்XXX. "இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் அழைத்து, வருகை தந்திருக்கும் திருமதி அனுராதா கிருஷ்ணமூர்த்திக்கு எமது நன்றிகள்" என்று ஆரம்பித்து ஏதேதோ சொல்லி பிறகு ஒரு முத்தொன்றை உதிர்த்தார்! (அவருக்கு அன்றைக்கு constipation of the mind and diohorrea of the mouth என நினைக்கிறேன்.) "இந்த ப்ரொக்ரம் க்கு இவவை கூப்பிட்டதில் $1000 டெலிபோன் பில் துண்டு". பார்வையாளரில் சிலர் சிரித்தனர். அத்தோடு (foot in the mouth என்று உணர்ந்து) வாயை மூடி கொள்வோம் என்றில்லை...பார்வையாளர் சிரித்தது இன்னும் தூண்டி விட்டதோ என்னவோ..அடுத்த முத்தை உதிர்த்தார் " நாங்க தொலைபேசில ப்ரொக்ராம் விஷயங்கள் மட்டுந்தான் கதைச்சனாங்க"..இப்போது சனம் கொல்லென்று சிரித்து வைத்தது. பாடகிக்கோ முகத்தில் கண நேர மாற்றம். சுதாரித்துக் கொண்டவர் ஒப்புக்கு சிரித்து வைத்தார். இப்படிப்பட்ட நாகரிகமற்ற பேச்சுக்கள் தேவையேயில்லை. பேச முதல் யோசிப்பது அவசியம். இனிமேல் இவர்கள் இந்தியாவுக்கே போய் அழைத்தாலும் அனுராதா வரமாட்டார்.

தொகுப்பாளர் வந்து "தமிழ் பாட்டுக்கள் குறைவாக இருப்பதையிட்டு ATBC தனது மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது" என்றார். என்ன என்று பார்த்தால் பாடகியிடம் சிலர் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட சில பாடல்களுக்கான வேண்டுகோள் (request) விடுத்தபடியால் தமிழ்ப்பாட்டுக்கள் குறைந்து விட்டதாம் என்று கவலைப்பட்டுக் கொண்டார். இவர்களது குறுக்கீடு முடிந்ததும் பாடகி ஒரு பாடல் பாடி விட்டு " உங்க எல்லாருக்கும் நாளைக்கு working day னு தெரியும் அதனால கச்சேரி இன்னும் 8 நிமிஷத்துல நிறைவடையும்" என்று சொல்லி மங்களம் பாடி முடித்து விட்டார். அனுராதா கிருஷ்ணமூர்த்தி வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவரது சினம் புரிந்தது. கடைசியாய் தொகுப்பாளர் வந்து சொன்னார் "தமிழை வளர்க்க தமிழருடன் தமிழில் பேசுவோம்"

ஒரே ஒரு கேள்வி ..தொகுப்பாளரை கேட்கணும்..உங்கள் நிறைவேற்று அங்கத்தவர் தமிழருடன் தமிழில் பேசவில்லையே?

காவல்

ஒருமுறை உறவினர் வீட்டுக்குச் செல்ல புறப்பட்டு, பேருந்திலிருந்து இறங்கும் போது இருட்டிவிட்டது. தரிப்பிடத்திலிருந்து பிரதான வீதியால் 3/4 நிமிடம் நடந்தால் அவர்கள் தெரு வரும். இறங்கி நடக்க முற்படுகையில் தான் அதைக் கவனித்தேன் - கறுப்புமில்லாத பழுப்புமில்லாத ஒரு நிறத்தில், வீதி மூலையில் நின்றது. நான் நடக்க ஆரம்பித்ததும் என் பின்னே ஓடிவந்து, கூடவே நடக்க ஆரம்பித்தது. இந்த உயிரினம் என்றால் நான் எப்போதும் கொஞ்சம் எட்டியே இருப்பேன்.(ஹி..ஹி! சின்ன வயது அனுபவம்தான் காரணம்) வலப்பக்கத்தில் வந்து கொண்டிருந்தது ஒரு வினாடி நின்று, பிறகு இடப்பக்கம் வந்து நடக்கத்தொடங்கியது. நடக்க நடக்க பத்தடிக்கொரு தரம் ஒரு கணம் நிற்பதும், நடக்கும் பக்கத்தை மாற்றி நடப்பதுமாக...அதன் 'நட'வடிக்கை. ஏன் என்னுடன் கூடவே வருகிறது என்று விளங்காமல் அதனுடன் "எனக்கு நாய்களெண்டா பெரிய விருப்பம் எண்டு இல்ல..அதோட கொஞ்சம் பயமும் இருக்கு. நீ ஏன் என்னோடையே வாறாய்?" என்றும் வேறு பலதும் கதைத்துக் கொண்டே நடந்தேன்.(அன்றைக்கு யாராவது பார்த்திருந்தால் பைத்தியம் என்று நினைத்திருப்பார்கள்!)

என் பேச்சை(!?) அது கண்டு கொண்டதாகவே தெரியவில்லை..தன் பாட்டுக்கு நிற்பதும் பக்கம் மாறுவதுமாய் தொடர்ந்தது. இந்த தெருவிலிருந்து பிரியும் ஒரு ஒழுங்கையிலுள்ள 4 வீடுகளில் ஒன்று தான் உறவினர் வீடு. அவ் ஒழுங்கை பிரியும் இடத்திற்கு வந்ததும் நாய் நின்று விட்டது. இனி பத்திரமாய் போய் விடுவாள், துணை தேவையில்லை என்று நினைத்ததோ என்னவோ.. மேற்கொண்டு என்னுடன் வரவில்லை. நான் வீட்டுப் படலையடியில் நின்று திரும்பிப் பார்த்த போது நாய் அங்கிருக்கவில்லை. அங்காலே எங்காவது போயிருக்கலாம்.

என் சந்தேகங்கள்:-

  1. ஏன் வலது-இடது-வலது என்று பக்கம் மாறி மாறி நடந்தது?
  2. ஏன் ஒழுங்கைக்குள் நாய் வரவில்லை? (ஒருவேளை அவ் ஒழுங்கையில் இருப்பவர்கள் யாராவது அதற்கு கல்லெறிந்திருப்பார்களோ?)
  3. ஒருவருக்கு இப்படி நடப்பதற்கான சாத்தியத்தின் நிகழ்தகவு என்ன?( எல்லாம் நான் 1/1000, 1/100000 என்றெல்லாம் சொல்லி பீத்திக் கொள்ளத்தான்..ஹி..ஹி..ஹி!!!!!)
 
பி.கு: இதை நான் மலேசியாவுக்கு படிக்கப் போயிருந்த என் நண்பிக்கு எழுதினேன். அவளிடமிருந்து வந்த பதில் மடலில் (என் கடிதம் கிடைத்து சில நாட்களில்) தனக்கும் ஒரு நாய் துணை வந்ததாகக் கூறியிருந்தாள்.(weird!)

வாங்க..நாட்டுக்கே முன்னுதாரணம் ஆகலாம்

சொந்தக்கார அண்ணனொருவர் சத்தமில்லாமல் 3ம் முறையாக மக்கள் தொகையை உயர்த்திவிட்டிருக்கிறார். அதுக்கென்ன இப்ப என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. அவருக்குத் திருமணமாகி 4 ஆண்டுகள்தான், 3 தனித்தனிப் பிரசவங்களில் 3 பிள்ளைகள். மனைவியின் உடல்நலம் பற்றிக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாது "3ம் குட்டி போட்டாச்சு, அடுத்ததுக்கு plan பண்ணனும்" என்று சாதனையாய்(!?) பேசுகிறார். இந்த அண்ணா வீட்டில் 8 பேர். தன் தாய்தந்தையின் record ஐ உடைப்பது தான் இவரது குறிக்கோள்! கல்யாணமாகிய புதிதில் நாங்களுமிருக்கும் போது மனைவியிடம் இதை சொன்னார்..அந்த அப்பாவிப் பெண் சும்மா புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தா.  சாதனை முறியடிக்கிறாராம்...சாதிப்பதற்கு வேறு ஒன்றுமே இல்லையா? இவரை நினைத்தால் ஒருபக்கம் கோபமாகவும் மறுபக்கம் (அட மடையா! என்று) மனவருத்தமாகவும் இருக்கிறது. வெளிநாடுகளில் இருப்பது போல் பிரசவத்தின் போது கணவனும் கூடவே இருக்க வேண்டும் என்பதை எம்மூர்களிலும் செயலுக்குக் கொண்டு வந்தால் தான் இப்படிப் பட்டவர்களுக்கு பிரசவத்தின் extreme விளங்கும்.

குறைந்த பட்சம் தனியார் வைத்தியசாலைகளிலாவது இதை செயல்படுத்த முனையலாம். உங்கள் குழந்தையை இந்த உலகுக்கு வரவேற்கும் முதலாவது ஆளாய் இருங்கள் என்ற range ல் ஏதாவது catchy யாகச் சொல்லி ஒரு கணவனுக்கு ஆசையைத் தூண்டி விட்டால், அவனுக்கு மனைவியின் அருகேயிருந்து தன் குழந்தையின் பிறப்பைப் பார்க்க ஆசை வரும், பிரசவத்தின் போது மனைவியுடன் கூடவே இருந்து குழந்தையை பெற்றுக் கொள்வான். கொஞ்சமாக தன் நண்பர்களிடையே "என் குழந்தை பிறந்த போது நான் தான் முதலில் தூக்கினேன்..பார்த்தேன்" என்றெல்லாம் சொல்லிக்கொள்கையில் நண்பர்களும் அவன் முன்னுதாரணத்தைப் பின்பற்ற சந்தர்ப்பம் உள்ளது. இது அப்படியே பரவி fashion ஆக மாறிவிட்டால் (கனவு காண்பது பிழையா சொல்லுங்க?) "எங்கம்மா 8 பேரை பெத்தா..நீ எனக்கு 10 பெற்றுக் கொடு" என்கிற மடமைகள் இல்லாமல் போகும்.

பி.கு: இதை வாசிக்கும் ஆண்களில் யார் (இலங்கையில், இந்தியாவில் மற்றும் எங்கு பிரசவத்தின் போது கணவன் கூடவே இருக்கும் வழக்கம் இல்லையோ அந்த நாடுகளில்) பிள்ளையைப் பெறும் போது,  மனைவியுடன் கூடவேயிருந்து உங்கள் குழந்தையை வரவேற்கப் போகிறீர்கள் என்பதை(வைத்தியர் கேட்க முதல் நீங்களாகவே) வைத்தியரிடம் சொல்லி, செயலிலும் காட்டி (நாட்டுக்கே) முன்னுதாரணமாகப் போகிறீர்கள்? 
 

எனக்கு மட்டுமா இப்படி?

பாலர் பாடசாலையில் படிக்கும் போது நானும் தோழியும் சரியான குழப்படி.எப்போதும் ஒன்றாகத் தான் திரிவோம். ஒரு நாள் கையைக் கோர்த்துக் கொண்டு ஓடும் போது சாணியில் கால் வைத்து, சறுக்கி விழுந்து உடுப்பெல்லாம் அழுக்காகி விட்டது.
மேல் கூறினதை நான் எத்தனையோ முறை பலருக்குச் சொல்லியிருக்கிறேன்.எப்போது சொன்னாலும் உருவாக்கிச் சொல்லுகிற(ஏன் அப்பிடி இட்டுக்கட்டி/கற்பனை செய்து சொல்லுகிறேன் என்று தெரியாமலே!!) மாதிரி ஒரு உணர்வு. இந்தத் தோழி கொழும்பு வந்த போது எங்கள் வீட்டிற் தான் தங்கியிருந்தா. ஒருநாள்  என் "கதை"யை யாருக்கோ நான் அவிழ்த்து விட்டுக்கொண்டிருந்தேன். தோழி ஆச்சரியம் மேலிட "உமக்கு அது இன்னும் ஞாபகமிருக்காடா" என்று கேட்டாள். அப்போது தான் உண்மையாகவே நடந்ததைத் தான் நான் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறேன்..கற்பனையில் உருவாகினது அல்ல என்று எனக்கு மண்டையில் உறைத்தது. ஆனாலும் எனக்கு சம்பவம் நடந்த ஞாபகம் இல்லை.ஆழ் மனத்தில் சேகரிக்கப்பட்டுள்ள கணக்கற்ற ஞாபகங்களில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கிறதா? கதையாக வெளிவரத் தூண்டிய காரணி என்ன? யாராவது உளவியல் தெரிந்தவர்கள் விளங்கப்படுத்த முடியுமா? யாருக்காவது இதைப்போன்ற அனுபவம் உண்டா?(அல்லது வழமையாய் என் நண்பர் குழாம்  சொல்வது போல "அது உனக்கு மட்டும் தான் இப்பிடியெல்லாம் நடக்கும்" ஆ? )  :O/


சின்னச் சின்ன ஆசை..

இப்படியொருமுறையெழுதிடவெனக்காசையெழுந்ததையடுத்திவ்வசனமிங்கச்சேறுகிறது.

தலையைப் பிய்த்துக்கொள்ளாதீர்கள், சும்மா, ஒரு சின்ன ஆசை, நிறைவேற்றியுள்ளேன். ;O)
(ஒரு வேளை பிரித்தெழுதியிருக்கலாமோ..இப்படி:-
இப்படியொருமுறை யெழுதிட வெனக்காசை யெழுந்ததை யடுத் திவ்வசன மிங் கச்சேறுகிறது.)

அழுவதா சிரிப்பதா ?

வார இறுதியில் நண்பரொருவரது வீட்டிற்குச் சென்றிருந்த போது, ஒளிப்பதிவு செய்யப்பட்ட (கனடாவில் நடந்த) நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கக் கிடைத்தது. இலங்கையரின் நிகழ்ச்சி தான்..யாழ் அன்பர்கள்தாம். நிகழ்ச்சி என்று ஒன்று நடந்தால், அது யாரால் நடாத்தப்படுகிறது/ஒழுங்கு செய்யப்பட்டது என்று மேடையில் ஒரு 'Banner' இருப்பது வழமை தானே..இங்கு இவர்களும் விதிவிலக்கல்ல. Banner பெரிய விஷயமல்ல..அதில் இருந்ததைப் பார்த்து எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. Banner இப்படிச் சொன்னது:

வட்டுக்கோட்டை
மூளாய் வீதி ஒன்றியம்


வட்டுக்கோட்டை ஒன்றியம் என்று பெயர் இருந்திருந்தால் அது அவ்வூரைச் சேர்ந்தவர்களுக்குரிய ஒன்றியமாக காணப்பட்டிருக்கும். இங்கு இவர்களோ, வட்டுக்கோட்டை என்கிற ஊர் அடையாளத்தையும் தாண்டி தாங்கள் வசித்த வீதியின் பெயராலே ஒன்றியமொன்றை அமைத்திருக்கிறார்கள். நல்ல காலம், வட்டுக்கோட்டை, மூளாய் வீதி, இல:46 ஒன்றியம் என்று ஒரு சங்கம் அமைக்காமல் விட்டுவிட்டார்கள்.அந்த மட்டில் தப்பினோம். (அப்படி இதுவரை நடக்காமல் காப்பாற்றிய பிள்ளையார் இந்த வீதியில் கோயில் கொண்டிருக்கிறாராம்.அதற்கு நிதி சேர்க்கத்தான் இந்நிகழ்ச்சி நடத்தப் பட்டுள்ளது.)

பி.கு 1: வட்டுக்கோட்டை, மூளாய் வீதி, இல:46 என்பது ஒரு எழுமாற்றான முகவரி. இங்கே வசித்த/வசிக்கிற யாரையும் எனக்குத் தெரியாது.

பி.கு 2: இது யாரையும் (குறிப்பாக - வட்டுக்கோட்டை- மூளாய் வீதி ஒன்றியத்தினரை) புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல.

மழையாமே...அதென்னது?

மழை - வரைவிலக்கணம்: வளி மண்டலத்தில் ஆவி வடிவில் காணப்படும் நீரானது ஒடுங்கி, வானிலிருந்து பூமிக்கு துளித்துளியாய் விழும்போது மழை எனப்படும்.

முன்னொரு காலத்தில் காணப்பட்டதும் இனிமேல் இருப்பதற்கான சாத்தியமும் இல்லையென நம்பப்பட்டதுமான "மழை" எனப்படும் ஒரு வானிலை, நாளை சிட்னிக்கு எதிர்வுகூறப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட இவ்வறிக்கையானது இவ்வானிலையை எதிபர்க்காத, இதற்கு ஆயத்தமற்ற குடிமக்களைத் தயார்ப்படுத்தும் பணியில் வரலாற்றாசிரியர்களைத் தீவிரமாக ஈடுபடுத்தியுள்ளது. இந்த மழையானது இதைப் போலவே பரிச்சயமற்ற "மேகங்கள்" எனப்படுவனவற்றின் தோற்றத்தின் பின் ஏற்படுமென வளிமண்டலவியற் திணைக்களத்தின் வானிலையாளர் சத்யா கிஷோர் தெரிவித்தார். திரு. சத்யா தெரிவித்ததற்கிணங்க, கரையோரப் பகுதிகளில் மழையை வினியோகிப்பற்கு முன்பதாக மேகங்கள் நாளை விடியலில் சிட்னியின் மேல் கூடுமென அறியப்படுகிறது. இம்மேகங்கள் கலைந்த பின்னர் மீண்டும் காணக் கிடைக்கும் என்பதால் பாதிக்கப்பட்ட இடங்களில் வதிவோர் 'காணாமற் போன நிழல்கள்' தொடர்பாக காவற்துறையினரை அணுக வேண்டாமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதே போன்றே வீட்டுரிமையாளர்களும் தாம் வளர்க்கும் தாவரங்கள் இம் மழை காரணமாக பச்சை போன்றதொரு நிறத்தில் காணப்பட்டால் அவற்றிற்கு நோயேற்பட்டுள்ளதோவென அஞ்ச வேண்டாமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மழை நேரடியாகப் படும் போது ஆட்களோ, கட்டடங்களோ ஈரமாகலாம். வாகன ஓட்டுநர்கள் தம் வாகனத்தில் காணப்படும் மழைத்தடுப்புச் செயலியை பரிச்சயப் படுத்திக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். ஒருவித பயனுமின்றி அமைந்திருப்பதால் வாகனத்தின் குடல்வால் எனச் செல்லமாக அழைக்கப்படும் கண்ணாடித்துடைப்பான் அனேகமான ஊர்திகளில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கருவி கண்ணாடியிற் படிகின்ற மழைத் துளிகளை அதனின்று நீக்குவதன் மூலம் சாரதிக்கு பாதையை தெளிவாகப் பார்க்க வழி செய்கிறது.

*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*


மழை என்று பெயர் வைத்து விட்டு, பதிவில் மழை பற்றி எழுதாமல் இருப்பது சரியாகப் படவில்லை. அதுதான், நேற்றைய The Daily Telegraph இல் ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையை என்னாலான வரைக்கும் மொழி பெயர்க்க முயற்சித்திருக்கிறேன். இதன் ஆங்கில (அசல்) வடிவம் இங்கே.

அன்னை என்னும் ஆலயம்

ஒரு ஊரிலே ஒரு சின்னப் பெடியன் இருந்தான்.பள்ளிக்கூடம் போவதென்றால் வேப்பங் கொழுந்தை விடக் கசக்கும் அவனுக்கு. பள்ளிக்குப் போகும் வழியில் வயலுக்கூடாகவும் போக வேண்டி வரும். ஒருநாள் பள்ளிக்குப் போகும் போது வரம்பில் தடுக்கி விழுந்து விட்டான். வெள்ளைச் சீருடையில் சேற்றோவியம்.வீடு திரும்பி, நடந்தது சொல்லி, வேறு சீருடை மாற்றி மீண்டும் பள்ளி நோக்கிய பயணம். மனதில் மின்னலாய் ஓர் எண்ணம். 30 நிமிடத்தில் பழைய சேற்றோவியக் கோலத்தில் வந்து நின்ற மகனைப் பார்த்த அம்மாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. "மகன்..உங்களுக்கு இருப்பது 3 சீருடைதான், இதுதான் சுத்தமானதும் கடைசியும், ஆகவே பத்திரமாகப் போ" என்று சொல்லி வழியனுப்புகிறா. மகனோ அடுத்த 30வது நிமிடத்தில் திரும்பி வந்தானாம்..இம்முறையும் சீருடையில் சேற்றோடு.பாடசாலைக்கும் நேரமாகி, சுத்தமான வேறு சீருடையும் இல்லாமற் போகவே அவன் அன்றைக்குப் பாடசாலைக்குப் போகவில்லை.

பெரிய சாதனையாக தன் 4 வயது தம்பியிடம் சொன்னானாம் "முதலாம் தரம் உண்மையாத்தான் விழுந்தனான், பிறகு வேணுமெண்டு தான் விழுந்தனான்" என்று. இதைக் கேட்ட தாயார் அவனது புத்தியை சிலாகித்துக் கொன்டாலும் வெளியே காட்டாமல் இவனை அழைத்து பள்ளிக்குப் போக வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினாராம்.

இச் சம்பவத்தில் வரும் சின்னப் பெடியன்: என் அண்ணா, தாயார்: எங்கள் செவிலித் தாயார்.

இப்படி நிறைய கதை சொல்லும் எங்கள் செவிலித் தாயார் ஒரு சிங்களப் பெண்மணி. 1963ம் ஆண்டு தொடக்கம் எங்கள் குடும்பத்தவர். இனப் பிரச்சனையின் போதும், கொழும்பிற்கு இடம் பெயர்கையிலும் இவர் காட்டிய மனவுறுதி அளப்பரியது. பல இராணுவத்தினர் கேட்டனர்.."நீ ஏன் இந்த தமிழ் ஆட்களுடன் இருக்கிறாய்?" என்று. அதற்கு அவரது மாறாத பதில் "என் குடும்பத்தினரோடு நான் இருக்கிறேன்..உனக்கு அதனால் ஏதாவது பிரச்சனையா?" அவனுக்கு அதற்குப் பதில் சொல்ல வராது.வாயடைத்துப் போய் நிற்பான்.

இவரது சமையல் எம் குடும்ப நண்பர்களிடையேயும், அம்மா வேலை செய்த வைத்தியசாலைகளிலுள்ள ஊழியர்களிடையேயும் மிகவும் பிரபலம். அண்ணாமார் விடுதியிற் தங்கிப் படித்த போது ஒவ்வொரு வார இறுதிக்கும் பல விதமான உணவுப் பண்டங்களோடு அவர்களைப் பார்க்கப் புறப்பட்டுவிடுவாராம். ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் எப்படிப்பட்டவர் என்பதை கணிக்கும் திறனுடையவர். அவர் சொல்லும் போது சிரிக்கும் நாம், அக்கூற்று பலருக்கும் மிகச் சரியாகப் பொருந்துவதை கண்டு வியந்துள்ளோம். வருடத்துக்கு ஒரிருமுறை ஊருக்குப் போய் வருவா. அம்மாவை விட்டு எத்தனை நாளும் இருக்க முடிகிற எங்களால், இவவை விட்டு இருக்க முடிவதில்லை. வழியனுப்பப் போகும் போது "என்னட்டயும் ticket இருக்கு, என்னையும் கூட்டிப் போங்க" என்று தன் கையிலுள்ள platform ticket ஐக் காட்டி அழுவாராம் பெரியண்ணா. ஊரிலிருந்து திரும்பும் போது, சமையல் சாகசங்களின் பலனாக அம்மாவின் கையில் குறைந்தது 2 வெட்டுக்காயமாவது இருக்கும். வந்தவுடன் எங்களைப் பார்த்து விட்டு "சூட்டி/புத்தாலா கெட்டு வெலா" (சின்னவள்/மகன்மார் மெலிந்து விட்டார்கள்) என்பார்("ஏதோ நான் சாப்பாடு குடுக்காத மாதிரி"<--அம்மா). அப்பாவின் கோபத்திற்கு ஆளாகும் போது அண்ணாக்கள் வேண்டிக் கொள்ளும் தெய்வமும் இவதான்.அன்னபூரணி + ஆபத்பாந்தவி / அனாதரட்சகி.

எம் குறைகள் அவர் கண்களுக்குத் தெரிவதேயில்லை. அவரைப் பொறுத்தவரையில் எங்களைப் போல் Angels இந்த உலகத்தில் யாருமில்லை. அவவுக்குத் தன் பிள்ளைகளை (என்னை, அண்ணாமாரை) யாரும் ஒன்றும் சொல்லக் கூடாது..அது அம்மாவேயாயினும்.அதே போலத்தான் எங்களுக்கும் - அவரிடம் குறை யாதுமில்லை;யாரும் வேறு மாதிரிச் சொன்னார்களோ, தொலைந்தார்கள். வீட்டிலே பண்டிகைக்கோ அல்லது வேறு எதற்காவதோ புதுத் துணி அல்லது பொருட்கள் வாங்குவது என்றால் அவவுக்கு என்ன வாங்கலாம் என்பதையே நாங்கள் முதலில் தீர்மானிப்போம். சில விஷயங்கள் நேரடியாக அம்மாவிடம் கேட்க முடியாதுவிடின் இவர் காதில் போட்டால் போதும், காரியம் 90% முடிந்தமாதிரித்தான். சகோதரிகள் (அம்மாவும் அவவும்) என்னதான் கதைப்பார்களோ, கிசுகிசுப்பாய் இரகசியக் கதைகளும் வயிறு குலுங்கும் சிரிப்புமாய்...இரவிரவாய்த் தொடரும்.

அண்ணாவின் மகள், பார்த்த மாத்திரத்திலேயே தன்னிடம் ஒட்டிக் கொண்டது(அம்மாவிடம் அவள் சேர 1 மணித்தியாலம் எடுத்தது) அவருக்கு தனி மகிழ்ச்சி/பெருமை. தனது சுருங்கிய தோலை அவள் தொட்டுப் பார்ப்பதையும் பத்திரிகை வாசிக்கும் போது கைக்கும் பத்திரிகைக்குமுள்ள இடைவெளிக்குள்ளால் தலை புகுத்தி அவள் தன்னைப் பார்ப்பதையும் நிறையவே ரசித்தார். ஸ்ரியானி எனும் இயற்பெயர் கொண்டாலும் நாங்களும், எம்மூடாக அவரைத் தெரிந்தவர்களும் அண்ணா அவருக்குச் சூட்டிய "எம்மி" என்கிற பெயராலே தான் அவரை விளிப்போம்.

3 பிள்ளைகளையும் சோடியாகப் பார்க்கக் கிடைக்கும் என்பதனால் 2001 இல் நடந்த என் திருமணம் அவருக்கு விசேடமான மகிழ்ச்சியைக் கொடுத்தது. என் திருமணத்திற்கு முதல் நாளன்று எம்மிடையேயிருந்து, இந்த மண்ணிலிருந்து மறைந்த எம் எம்மிக்கு என் அஞ்சலிகள்.

அவவைத் தந்த கடவுளுக்கு நன்றி.

"அன்னை என்னும் ஆலயம்...அன்பில் வந்த காவியம்"

இங்கே சாத்திரம் பார்க்கப்படும்

கைரேகை சாத்திரம் என்று சொல்லப்படுவது கையிலே காணப்படும் ரேகைகளைப் பார்த்துச் சொல்லப்படுவது(அதனால் தான் அதுக்கு கைரேகை சாத்திரம் என்று பெயர்!!). உள்ளங்கையின் தன்மை, வடிவம், முக்கியமாக அதிலே குறுக்கும் மறுக்கும் தலை போகும் வேலையாய் ஓடித் திரியும் கோடுகள்..இவை எல்லாமாய்ச் சேர்ந்து சாத்திரம் சொல்பவருக்கு வீட்டிலே சோற்றுக்கு வழி செய்கின்றன. உங்கள் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லக் கூடியனவாம் இக் கோடுகள். முக்கியமான 3 ரேகைகளாவன..ஆயுள்(life), தலை(head),இருதயம்(heart).இவையே ஒருவரின் உடல்நலம், வாழ்நாள்,முக்கிய(ஆளுமை) குணங்கள், வாழ்விலேற்படும் முக்கிய மாற்றங்கள் என்பவற்றைக் குறிக்கின்றன. கையில் காணப்படும் மெல்லிய அல்லது தெளிவற்ற கோடுகளும் ஒருவரின் வாழ்வைப் பற்றிய முழுமையான விளக்கத்தைப் பெற கவனமாக (சாத்திரக்காரரால்) பார்க்கப்படும்.

என்னடா திடீரென்று கைரேகை சாத்திர விளக்கம் சொல்கிறேனே என்று பார்க்கிறீர்களா?என்ன நடந்தது என்றால் என் தோழி(ப.கு.க.தி தோழி) ஒரு கைரேகைச் சாத்திரம் சொல்லும் தளத்திற்கு சுட்டி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தாள். சரி online இல் எப்படி கணிக்கப் போகிறார்கள் என்று பார்க்கப் போனேனா..போய் முதலாவது submit ஐ அழுத்தியவுடனேயே பிரச்சனை. என்ன..அதிலே கேட்டிருந்தது என் கையில் இல்லை, அவ்வளவுதான். சரி, உங்களுக்கு என்ன சொல்கிறார்கள் என்று பின்னூட்ட ரேகையில் தெரிவிக்கவும்.

பி.கு: கைவிரல் ரேகை ஒவ்வொருத்தருக்கும் வேறுவேறுதானே..அது போல உதட்டு ரேகையும் ஆளுக்காள் வேறுபடுமாம்.(ரொம்ப அவசியம்! என்று நீங்க சொல்வது கேட்கிறது!!) ;O)

கள்ளனும் காசிநாதரும்

என்னுடைய அண்ணாமார் படித்தது, மட்டக்களப்பில் Central College என அறியப்படும் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் தான் . சின்ன வயதிலிருந்தே அவர்கள் விடுதியில் தங்கிப் படிக்க நேரிட்டது. அவர்கள் படிக்கும் போது தலைமையாசிரியராய் இருந்தவர் பிரின்ஸ் காசிநாதர். (1990 களில் பாராளுமன்றத்திற்கு மட்டக்களப்பு பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டவர்). இவரைப் பற்றி இலங்கை நண்பர்கள் அறிந்திருக்கக்கூடும். மிகவும் கண்டிப்பானவர். ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது எனக்கு இவரை யாரெனத் தெரியாது. நான் உள்ளே விடவில்லையாம். "உங்களை யாரென்று தெரியாது, அம்மா வரும் வரைக்கும் உங்களை உள்ளுக்கு விட முடியாது" என்று சொல்லி அவரை வெளியில் காக்க வைத்த 'பெருமை' என்னையே சாரும்.(நன்றி! நன்றி!!)

சொல்ல வந்ததை விட்டு விட்டு என் பெருமை பேசிக் கொண்டிருக்கிறேன். காசிநாதர் கண்டிப்பானவர் என்று சொன்னேன் தானே..விடுதியில் தங்கிப் படித்த ஒரு மாணவன் சரியான தெறிப்பாம்.( தெறிப்பு: குழப்படி என்றும் சுண்டுதல் என்றும் இரு பொருள்படும். கிழக்கின் வட்டார வழக்கு). ஒரு நாள் விடுதி மேலாளருக்குத் தெரியாமல் திரைப்படம் பார்க்கச் சென்றுவிட்டான் என்பதை யாரோ ஒரு 'நலம் விரும்பி' மேலாளருக்குத் தெரிவிக்க, அதை அவர் போய் காசிநாதரிடம் அறிவிக்க.. வந்தது வினை. ஐயா ஆறுதலாக படமெல்லாம் பார்த்துவிட்டு விடுதிக்கு திரும்பினாரா, அடுத்த நாள் தலைமையாசிரியரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது.

"டேய்! நீ படம் பாக்க போனியாமே?"
"ஐயோ! இல்ல சேர்!"
"உண்மையைச் சொல்லு...எந்தத் தியேட்டருக்கு போனனீ?"
"நான் போகல்ல சேர்!"
"படம் நல்லா இருந்ததா?"
"எனக்கு தெரியா சேர், நான் போகல்ல"

எத்தனையோ விதமாகக் கேட்டும் மாணவன் பிடி கொடுக்கவில்லை. "சரி! உன்னை நம்புறன்.. நீ போ!" என்றதுதான் தாமதம், தப்பினோம்! என்று மாணவன் வெளியேறும் போது

"படத்துக்கு போனது போனனீ..ஏன்டா செருப்பில்லாம போனாய்?"
"இல்ல சேர்..செருப்பு போட்டுட்டுத் தான் போனனான்"

அன்றைக்கு பிரம்புக்கு வேலை தான்! =O)

கவிதை என்ற பெயரில்..

பள்ளிக்கூடத்தில் தமிழ் மன்றம் நடத்தி வந்தோம். A/L படிக்கும் போது தமிழ் மீடியத்துக்குப் பொறுப்பான ஆசிரியையிடம் கெஞ்சி கூத்தாடி அனுமதி வாங்கி , பிறகு அவவையே தலைமையாசிரியையிடம் தூது அனுப்பி ஒருமாதிரி கஷ்டப் பட்டு அனுமதி எடுத்து ஒரு கலைவிழா நடத்தினோம். அதிலே ஒரு புத்தகம் வெளியிடுவது என்று முடிவெடுத்து அதற்கு கதை கவிதை கட்டுரை என்றெல்லாம் சேகரித்து வெளியிட்டோம். அதிலே பெரிய கவிஞி என்ற நினைப்பில் நான் எழுதிக் கொடுத்து வெளிவந்தது தான், எனக்கு நினைவு தெரிந்து முதல் முதலாய் நான் கிறுக்கிய கவிதை. அண்ணா சொல்வார் நான் சின்ன வயதிலேயே(அடடா...child prodigy!) கவிதை ஒன்று சொன்னேன்/எழுதினேன் என்று. எனக்கு ஞாபகமில்லை. 'எனக்குப் பசிக்குது, கடையில சாப்பாடு இருக்குது' என்று தொடருமாம், மீதி மறந்து விட்டார் (நல்ல காலம்...சின்ன அண்ணாவைக் கேட்க வேண்டும் என்று சொல்லவில்லை!!)

கலைவிழாவின் ஞாபக இதழில் வந்த என் 'கவிதை' எதைப் பற்றி என்று மறந்து விட்டேன்..புத்தகமும் கைவசமில்லை பார்த்து இங்கே தட்டச்ச.(தப்பினேன் என்று யாரோ சொல்வது கேட்பது போல ஒரு பிரமை!) =O)

பள்ளிக்கூடத்தில் கடைசி நாளுக்குச் சற்று முன், A/L பரீட்சைக்கு முன், எல்லோரும் ஆட்டோகிராஃப் பரிமாறிக் கொள்வது வழக்கம். அதிலே எழுதும் போது எல்லோருக்கும் தாங்கள் பெரிய கவிதாயினிகள் என்ற நினைப்புத் தான் (நானும் விதி விலக்கல்ல). உரியவரிடம் திரும்பி வரும்போது நிறைய 'நிலாப் பெண்'களும், 'உன் ஆயிரத்தொரு ஞாபகத்திலே என்னையும் ஒன்றாக்கு!' என்று கேட்பவர்களும் 'மரணப் படுக்கையிலும் பழகிய மணித்துளிகளை மறக்காத இன்னுயிர்த் தோழி'களும் அந்தச் சின்னப் புத்தகத்துக்குள்ளே குடி வந்திருப்பார்கள். உணர்வுகளையெல்லாம் தெரிவிக்கத் துடிக்கின்ற காலமும் வயதும் அது.

பள்ளிகூடத்திலிருந்து விலகுகிறோம் என்பதே எனக்கும் இன்னும் பலருக்கும் பெரிய தாக்கமாய் இருந்தது. கவிதையா இல்லை வசன நடையா என்ற தெளிவில்லாத ஒரு நடையில் அப்போது நான் எழுதியதுதான் இது:

பள்ளி வாழ்க்கை பருவ காலம்
பாதி வாழ்க்கையின் வசந்த காலம்
வசந்தம் தரு நாள் மாறிய போதும்
வாடாமலராய் நினைவுகள் நிலைக்கும்
பள்ளியில் பயின்ற காலங்கள்
வாழ்க்கைச் சோலையின் இனிய கோலங்கள்
காலங்கள் மாறலாம்...கோலங்கள் அழியுமா?
குறும்புடன் பேசி, குழப்படிகள் செய்து
கூடி மகிழ்ந்த அந்த மின்னல் வாழ்க்கை -
இனியும் வருமா? இன்பங்கள் தருமா?
எத்தனை எத்தனை நினைவு மீன்கள்
என் ஞாபக நீரோடையில்!
இதய உதட்டில் மென்வருடலாய்
வண்ணத்துப்பூச்சிகள் - MC யின்
ஞாபக வர்ணங்கள் என்றும் எனக்குள்ளே.



இதற்குப் பிறகு நான் கவிதை என்ற பெயரில் ஒரு முயற்சியும் செய்ததாய் ஞாபகமில்லை.

என்ன சத்தம் இந்த நேரம்..அரட்டை ஒலியா?

கோயிலுக்கு போனால் சில/பல வேளைகளில் அங்கே சிலர் நடந்து கொள்ளும் விதம் இருக்கிறதே..சீ! என்று ஆகி விடும். பூசை நடந்து கொண்டிருக்கும்...இவர்களோ பக்கத்திலிருக்கும் தோழியிடம் நேற்றுப் போன கல்யாண வீட்டைப் பற்றியோ மகன்/மகள் செய்யும் வேலைகள் பற்றியோ அளந்து கொண்டிருப்பார்கள்.(வயது வந்தவர்களில் இந்த அநியாயத்தைச் செய்பவர்கள் 99.9% பெண்களே என்பது வருத்தத்துக்குரியது!). பதின் வயதினரைக் (teenagers) கேட்கவே வேண்டாம்..அம்மா நேற்று ஷொப்பிங் போக விடவில்லை என்பதிலிருந்து யாரை சைட் அடித்தார்கள் என்பது வரை அங்கே அரங்கேறும்(இவ்வயதினர்க்கு எதை எங்கே கதைப்பது என்கிற விவஸ்தையே இல்லை..திருவிழாவின் போது ஒருநாள் நடந்தது...முற்றிலும் உண்மை: ஒரு பெண் தன் தோழியிடம் சொன்னாளாம் "can you believe I'm still a virgin" என்று!! அவளுக்குப் பக்கத்தில் நின்று கொன்டிருந்த என் கணவரின் நண்பர் திரும்பி அவளைப் பார்த்து "Good for you" என்று சொன்னாராம். இயல்பாகவே இவர்களைப் பற்றிய கவலை எழுகிறது!). இவர்களுக்கு ஒரு விஷயத்தைக் கதைத்தே தீர வேண்டிய அவசியம் இருந்தால்:
(1) கோயிலில் வெளியே போய் கதைக்கலாம்.
(2) வீட்டிற்குப் போய் தொ(ல்)லைபேசியில் அலட்டலாம்.

மற்றவர்களும் கோயிலில் இருக்கிறார்களே, பூசை நடக்கிறதே மௌனமாக இருந்து கும்பிடுவோம் என்று ஏன் இவர்கள் நினைப்பதில்லை? எத்தனையோ முறை நான் திரும்பிப் பார்த்து "பூசை நடக்கிறது" என்று சொல்லியிருக்கிறேன். ஏதோ வேற்றுக்கிரகத்திலிருந்து வந்த ஒரு புதினமான உயிரினத்தைப் பார்ப்பது போல ஒரு பார்வை வீசுவார்கள்..பிறகு பூசை முடியும் வரை அல்லது சில வேளைகளில் கோயிலை விட்டுப் போகும் வரையும் கூட நான் ஏதோ செய்யக் கூடாததைச் செய்து விட்ட மாதிரி முறைத்துக் கொண்டேயிருப்பார்கள்!! சொல்லியும், ஒரு நிமிஷம் கடமைக்கு பேசாதிருந்து விட்டு மீண்டும் "கச்சேரியை" ஆரம்பிக்கிறவர்களும் உண்டு.

எப்படி, என்னத்தைச் சொன்னால் நம்மவர் இந்த மாதிரி நடந்து கொள்வது குறையும்? யாருக்காவது தெரியுமா?

சூ! மந்திரக்காளி

வேலையில் இருந்தபடியே "இரவுச் சாப்பாடு என்ன" என்று இந்த மனம் முன்னோக்கி (அடடா..!!) சிந்திக்க (சமையல் என்றாலே 'ஒவ்வாமை' <--அதான் allergy!!; அதுக்குள்ளே planning வேறே!) காளான் குழம்பு, முருங்கைகாய் வெள்ளை/பால் கறி, முட்டைப் பொரியல் செய்யலாம் என்று (கஷ்டப்பட்டு) நினைத்து வைத்திருந்தேன். வேலையிலிருந்து pick பண்ணும் போதே அன்புக் கணவர் திருவாய் மலர்ந்தார் "எனக்கு இன்றைக்கு 'ஜனனி'யில மீன் மசாலா தோசை தான் வேணும்"

மனதிற்குள் "அப்பாடா! இன்றைக்கு சமைக்கிறதிலிருந்து தப்பினோம்"
(என்றாலும் காட்டிக் கொள்ளாமல்) வெளியே சத்தமாக : "நான் இன்றைக்கு இதெல்லாம் சமைக்க என்று நினைச்சனான்"...list வாசித்தேன்
கணவர் திடீரென்று வெளியில் தலை நீட்டிப் பார்த்து "மழைக்கு இருட்டுதம்மா" ( நான் "நற நற")

வேலையிலிருந்து கிட்டத்தட்ட ஒரு 20 நிமிட drive இல் தான் (என் வயிற்றில் பால் வார்த்த)ஜனனி உணவகம் இருக்கிறது. driving....

அங்கே போனால்...பூட்டப்பட்டிருக்கிறது என்று சொல்லும் பலகை தொங்குகிறது. ஜனனி உட்பட பல இலங்கை உணவகங்கள் திங்கட் கிழமைகளில் திறப்பதில்லை. மனக்குரல் "ஐய்யய்யோ...சமைக்கணுமோ??"

கணவர் முகம் =O( . "சரி, உன் நண்பி சொன்னாளே, அந்த 'ராம்ஸ்' கடைக்குப் போவம்"
(வயிற்றில் மீண்டும் பால்+தேன் ;O) )

ராம்ஸை தேடியதுதான் மிச்சம்...கண்டே பிடிக்க முடியவில்லை (அட ராமா!!). பிறகென்ன..."மந்திரக்கோல் ஒன்று என்னிடம் இருந்தால் அதை ஒரு "விசுக்கு" விசுக்கி விதம் விதமா சாப்பாடு வரச் செய்யலாம் என்ன!" என்று நிறைவேறாத ஆசையெல்லாம் வெளிப்பட 3 மாடி (மூச்சு வாங்க) ஏறி, கதவு திறந்து, வீட்டிற்கு வந்து அவர் அரிசி போட... நான் கறி சமைக்க...(என்ன சிரிப்பு?)

நல்லா சாப்பிட்டு வந்து கணினிக்கு முன்னாலிருந்து இதை தட்டச்சுகிறேன்.
மனம்:" நாளைக்கு சமைக்கணுமே...என்ன கறி வைக்கலாம்?"
நாளைய பிரச்சனை நாளைக்கு! என்று யாராவது இந்த "மனத்துக்கு" சொல்லுங்களேன்!

மீண்டும் ஒரு முறை சந்திப்போமா...

நான் 4 பள்ளிக்கூடங்களில் படித்திருக்கிறேன். பள்ளிக்கூடத்தில் என்னோடு ஒன்றாகப் படித்த சில தோழிகளை தேடிப் பிடிக்க வேண்டும்; அவர்கள் இப்போது எங்கே, எப்படி இருக்கிறார்களோ , மீண்டும் ஒரு முறை அவர்களச் சந்திக்கக் கிடைத்தால் எவ்வளவு நல்லாக இருக்கும் என்றெல்லாம் மனம் கற்பனை வளர்க்கிறது. இனி, காணாமல் போனவர் விபரம் =O)

தோழி 1:

தேடுகின்ற முதல் தோழிக்கு பிரசாந்தி என்று பெயர்.(அவர்கள் சாய் பாபா பக்தர்கள்).என்னோடு முதல் பள்ளிகூடத்தில் முதலாம் ஆண்டு முதல் 4ம் ஆண்டு வரையும், பிறகு 2ம் பள்ளிக்கூடத்தில் 7ம் ஆண்டு வரையும் படித்தவள். 1990ம் ஆண்டு, பிரச்சனையால் நாங்கள் கொழும்புக்கு குடிபெயர்ந்தோம். ஊருக்குத் திரும்பவும் 1994ம் ஆண்டு ரயிலில் போய் விட்டு வரும் போது நடுவில் ஒரே இரயில் நிலையத்தில் கொழும்பு-->மட்டக்களப்பு & மட்டக்களப்பு-->கொழும்பு இரண்டு புகைவண்டியும் நிறுத்த நேர்ந்தது. தண்ணீர் / உடல் உபாதை என்று பலரும் இறங்கி ஏறிக் கொண்டிருந்த போது நாங்கள் சந்தித்துக் கொண்டோம். (காதல் கதையில் எழுதுற மாதிரி இருக்கு lol) அவசர நலவிசாரிப்புகளின் பரிமாற்றம். அவளைக் கடைசியாகக் கண்டது நான் மீண்டுமொருமுறை ஊருக்குப் போன போது(ஆண்டு சரியாக ஞாபகமில்லை). ஆனாலும் நான் அறிமுகப்படுத்தாமலே சரியாக அடையாளம் தெரிந்து கொண்டாள். 1999 இல் கேள்விப்பட்டேன் அவள் லண்டனில் தன் சகோதரி(கள்)உடன் வசிப்பதாக. விபரம் தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்?

தோழி 2:

இவள் பெயர் யசோதா ('யசோதரா'வாக கூட இருக்கலாம்). இவள் தொடர்பற்றுப் போனது 1990ம் ஆண்டுடன். ஒழுங்காக, சினேகமாய்த் தான் பழகினோம். எங்கள் வகுப்பில் 4/5 பிள்ளைகள்...ஒருவருடன் ஒருவர் கோபம். இவள் இந்தப் பக்கம் வந்தால், அவள் வகுப்பின் மற்றப் பக்கத்தால் செல்வாள்.(இதற்கும், தோழிக்கும் என்ன சம்பந்தம் என்று எரிச்சல் படாமல்...வாசியுங்கள்) அப்போது 11/12 வயது இருக்கும். ஒருவருடன் கோபம் போடுவது fashion என்று நினைத்தேனோ என்னவோ..இதுவரை காரணம் ஞாபகமில்லை...யசோதாவுடன் கண்ணைக் கட்டி கோபம். (நல்ல காலம் பாம்பு வந்து கொத்தவில்லை!! =O)) . பிரச்சனையும் வந்து கொழும்பிற்கும் வந்தாயிற்று. திரும்ப ஊருக்குப் போன சமயத்தில் இன்னொரு நண்பியிடம் கேட்டேன்..."யசோ எப்பிடி?". ஏன்டா கேட்டோம் என்று ஆகிவிட்டது.......1990ம் ஆண்டுப் பிரச்சனையில் அம்மாவையும் அப்பாவையும் அந்தப் பெண் இழந்து விட்டாளாம், அவளும் தங்கையும் மாமாவுடன் தான் இப்போது வசிக்கிறார்கள் என்றும் அறிந்தேன். இந்தத் தோழியை எப்படியாவது சந்தித்து விட வேண்டும்...

ஏன்??

ஒரு ஊரிலே ஒரு மாடு இருந்ததாம். ஒரு நாள் அது ஊரைச் சுற்றி வரும் போது ஒரு கடையின் கதவின் முன் நின்று கதவை நக்கிற்றாம், ஏன்??

நன்றி: லவன், 1999

மாமியும் மருமகளும்

வந்தியத் தேவன் 55 சொற்களில் எழுதியதை வாசித்த போது மாமி அம்மாவுக்குச் சொன்னது ஞாபகம் வந்தது.மாமி கனடாவால் 8/10 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருந்த சமயம் அது. கனடா வர்ணனை முடிந்து என் மச்சா(ள்+ன்), கனடாவிலே இருக்கும் மாமியின் சகோதரியின் பிள்ளைகளைப் பற்றிக் கதை வந்தது. மச்சானின் திருமணம் நடந்து ஒரு வருடமும், மச்சானுடைய சித்தி மகளுக்கு திருமணம் முடிந்து 8 - 9 மாதங்களும் ஆகியிருந்தது. மருமக்களை பற்றிக் கேட்டதற்கு மாமி சொன்னா:

"என்னத்த சொல்றது?தங்கச்சிட மருமகன் தங்கமான பெடியன். சுதாவை ஒரு வேலையும் தனியா செய்ய விடுறதில்லை.எல்லா வேலைக்கும் உதவி செய்வார். காலையில தேத்தண்ணி போட்டு குடுக்கிறதும் அவர்தான். அதுக்கு இருக்குது எனக்கு வந்த மருமகள்...ஒரு வேலையும் செய்யாது. அவவுக்கு காலை coffee பிரசாத் போட்டு குடுத்து எழுப்புவான். சமையலும் அரைவாசி அவன் தான்."

சுதாவுக்கு கணவர் செய்வதை சிலாகிக்கும் மாமியால், அதையே தான், தன் மகன் மருமகளுக்குச் செய்கிறான் என்று உணர முடியவில்லை. பாசம் கண்ணை மறைப்பது என்பது இதுதானா?

(இத்தனைக்கும் மாமி ஒரு ஆசிரியை!)

மழை வருது..மழை வருது...குடை கொண்டு வா!!

அன்று மாமா,மாமி ஊரிலிருந்து வருவதாக இருந்தது. ஆனால் இரவு 8.30 ஆகியும் வரவில்லை. நாங்கள் நாடகம் பார்க்க தொ.கா.வின் முன்னால் இருந்து விட்டோம்.வழமையாக தொடர்ந்து பார்க்கின்ற நாடகம்...அம்மா அதிலேயே ஒன்றிப் போயிருந்தா. ஒரு கதா பாத்திரம் எங்கோ சென்று திரும்பும்பொழுது பலத்த மழை பெய்கிறது. ஒரு கொட்டிலில் அவசரத்திற்கு ஒதுங்குகிறார்.
அப்போது பார்த்து gate இல் தட்டிச் சத்தம் கேட்டது. அப்போது நாங்கள் இருந்த வீட்டில் வாசல்கதவோடு தான் TV யை வைத்திருந்தோம்.TVக்குப் பக்கத்திலேயே ஒரு சின்ன மேசை. அதில் தான் அம்மாவின் Handbag குடை எல்லாம் வைப்பது வழக்கம். gate இல் தட்டிச் சத்தம் கேட்டது தான் தாமதம் அம்மா TV யிலிருந்து பார்வையை விலக்காமலே வாசலுக்குப் போனார்.திடீரென்று எதோ ஞாபகம் வந்தவர் போல ஓடி வந்து TV பக்கத்திலிருந்த மேசையில் வைத்திருந்த தன் குடையை எடுத்து விரித்துக் கொண்டு gate ஐ திறக்கப் போனார். உள்ளே வந்த மாமா மாமிக்கோ ஏன் அம்மா மழை பெய்யாத போது "நனைந்து விடுவீர்கள்" எனக் குடை விரித்துப் பிடிக்கிறார் என விளங்கவில்லை...அம்மாவிடம் கேட்டார்கள், அப்போது தான் அம்மாவுக்கு உறைத்தது..தான் TVயில் மழை பார்த்து விட்டு உண்மையாகவே பெய்கிறது என நினத்துக் குடை பிடித்திருக்கிறா என்று. பிறகு அங்கே பெய்தது சிரிப்பு மழைதான்!

சரவணபவனில் மகாராஜா

ஒரு நாள் சதீசும் மற்றைய 4/5 நண்பர்களும் நல்லாக பியர்+வேறு உற்சாக பானங்கள் அருந்தி விட்டு, கொழும்பு-வெள்ளவத்தையில் இருக்கும் சரவணபவன் சைவ உணவகத்திற்கு போனார்களாம். அங்கே உணவு பரிமாறுபவர்கள்(waiters) தமிழ்ப் படங்களில் வரும் அரச சேவகர் போல் தலைப்பாகை அணிந்திருப்பார்கள். நண்பர் கூட்டத்திற்கு நல்ல பசி+வெறி. waiter வருவார் என்று பொறுமையாய் காத்திருக்க, கூட்டத்தில் ஒருவன் கையைத் தட்டி "யாரங்கே" என்று சொல்லவும், waiter வரவும் சரியாய் இருந்திருக்கிறது.

"அரசன் நான் வந்து எவ்வளவு நேரம் காத்திருப்பது, உடனே 10 தோப்புக்கரணம் போடு!" என்று சொல்லியிருக்கிறான். waiter ம் இவர்களை humour பண்ண நினைத்து "சரி மகாராஜா" என்று ஒரு தோப்புக்கரணம் மட்டும்போட்டிருக்கிறார். பிறகு "என்ன உணவு வேண்டும்" எனக் கேட்டு எல்லோரது ஓடரையும் எடுத்துக்கொண்டிருக்க, மீதி தோப்புக்கரணம் போடவில்லையென்று மகாராஜாவுக்கு கோபம் வந்துவிட்டது. ரகளை பெரிதாக முன்பு இதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முகாமையாளர் ஒடி வந்து waiterஐ காப்பாற்றி விட்டராம். "எனக்கே சாப்பாடு தராமல் துரத்தி விட்டார்களே"என்று திரும்பி வருகையில் மகாராஜா ஒரே புலம்பலாம்!

இப்போது இந்தக் கூட்டத்திலுள்ள ஒருவருக்கும் அங்கே அனுமதி இல்லை என்று கேள்வி =O).

ஹலோ... யார் கதைக்கிறது?

இது நடந்து இப்ப ஒரு 10 / 11 வருசம் இருக்கும். ஒரு நாள் என் நண்பி வீட்டில் (வழக்கம் போல் முழு நாளும்) இருந்து "சல்"லடித்துக் கொண்டு இருந்தோம். திடீரென தொலைபேசி சிணுங்க தோழியின் தம்பி எடுத்தான். நண்பிக்கு அழைப்பு. நாங்கள் இருந்த அறைக்குள் வந்தான்,

தம்பி: ஷ்ரேயா அக்கா ....நீங்க போன்ல
நண்பி: என்ன?

(நண்பியும் நானும்...!?!?!?) (ஏனென்றால் அவளது நண்பியர் கூட்டத்தில் ஷ்ரேயா என்ற பெயரில் 2 பேர் தான். என் பெயர் + அப்பா பெயர் = "ஷ்ரேயா மழைப்பெண்" என்று வைத்துக் கொள்வோம்)

நண்பி "இவன் என்ன உளறுறான்" என்ற படியே போய் தொலைபேசியை எடுத்து,

நண்பி: ஹலோ யார் கதைக்கிறது?

தொ.பே.குரல் என்ன சொல்லிற்றோ.. நண்பி ரிசீவரை பொத்திக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள். சிரித்த சிரிப்பில் அவளுக்கு கண்ணீர் வந்து விட்டது.என்னிடம் தொலை பேசியை நீட்டினாள்.

நான்: ஹலோ

தொ.பே குரல்: ஹலோ...

நான்: யாரோட கதைக்க வேணும்?

தொ.பே குரல்: கௌரியோட

நான்: நீங்க யார் கதைக்கிறது?

தொ.பே குரல்: ஷ்ரேயா கதைக்கிறன்

நான்: ஷ்ரேயாவா? எந்த ஷ்ரேயா?

தொ.பே குரல்: ஷ்ரேயா மழைப்பெண்

நான்: நான் ஷ்ரேயா மழைப்பெண் கதைக்கிறன்...

தொ.பே.யை வைத்து விட்டார்கள். அன்றைக்குச் சிரித்த சிரிப்பிற்கு அளவு கணக்கில்லை. பிறகு தான் தெரிய வந்தது - என் நண்பியோடு சினேகமாக விரும்பிய (காதலிக்க அல்ல!) பையன் தான் தனது அக்காவிடம் சொல்லி அப்படி தொலைபேசியிருக்கிறான் என்று!! இப்போது அவன் எங்கள் நல்ல நண்பன்.

இப்போதும் இதைச் சொல்லி அவனைக் கடிப்போம், எனக்கு ஒரு ஆசை..இதை அவன் மனைவியிடம் சொல்லிச் சிரிக்க!!

ப்ரில்லியன்ட் டியூப் லைட்?

தோழி வீட்டிற்குப் போயிருந்தேன். கெட்டிக்காரர்களைப் பற்றி கதை வந்தது. சில வேளைகளில் அவர்களுக்கு மிக இலகுவான விஷயத்தையும் விளங்கிக் கொள்ள சிரமமாக இருக்கிறது என்பதைப் பற்றி தோழியின் தங்கை சொன்னாள். அவளது வகுப்பில் ஒருத்தி இருக்கிறாளாம்...பேச்சுக்கு அவள் பெயர் கவிதா என்று வைத்துக் கொள்வோம்.

உதாரணம் 1:
மாணவி 1: என் அம்மாக்கு ஸ்பீடிங் டிக்கெட் வந்திருக்கு
கவிதா: ஏன்?என்ன செய்தாங்க?


உதாரணம் 2:
மாணவி 1: நான் தலை மயிரை ப்ளீச் பண்ணப் போகிறேன்
கவிதா:என்ன கலர்க்கு?

நம்மிடையே நிறைய கவிதாக்கள்.

நானும் இந்த டியூப் லைட் கேள்வியெல்லாம் கேட்டு சிரிப்புக்கு ஆளாகியிருக்கிறேன்.(நான் brilliant என்று சொல்லவில்லை!) என் அனுபவம் ஒன்று:

தோழி: இந்த புதன்கிழமை என் பேரன்ட்ஸ் வெடிங் அனிவசரி.
நான்: அம்மாவுக்கும் அப்பாவுக்குமா?
(சுற்றியிருந்த நண்பர் கூட்டம் "கொல்" சிரிப்பு!)(நானும் ஒப்புக்கு சிரித்து வைத்தேன்! வேறென்ன செய்ய?)

நானும் மைக்கல் ஜாக்சனும்

9ம் ஆண்டில் நான் வேறு ஒரு பாடசாலையில் சேர்ந்தேன்.
எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது - என் வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகளில் சிலர் ஒரு கூட்டமாக இருந்து ஆங்கிலத்தில் கதைத்துக் கொண்டிருந்தார்கள். நான் அது வரை படித்திருந்தது தமிழில்."என்னடா இது, அம்மா திடீரென்று English medium இல் கொண்டு வந்து சேர்த்து விட்டாவே" என்று எனக்குள்ளேயே நினைத்துப் பயந்து போனேன்.அம்மாவை ஏசாத குறை! ஆசிரியர் வந்து தமிழில் பாடம் நடத்தத் தொடங்கிய பின்தான் நிம்மதியாயிற்று.


அன்றே இன்னொரு சம்பவமும் நடந்தது.
எனக்குப் பக்கத்திலிருந்த பெண் "do you listen to English songs?" என்று கேட்டாள். ஏனோ "yes "என்று சொல்லி விட்டேன்.அடுத்த கேள்வி வந்தது..." Do you have black or white?"
நான் யோசிக்கிறேன் - என்னத்தில் கறுப்பா வெள்ளையா இருக்கிறது எனக் கேட்கிறாள் இவள் என்று!(அப்போது எனக்குத் தெரியாது என்னிடம் Michael Jackson பாடிய Black or white பாட்டைப் பற்றித் தான் கேட்கிறாள் என்று!!) இல்லை என்று சொன்னால் என்ன நினைப்பாளோ என்பதற்காக "white" என்னிடம்இருக்கிறது என்று சொன்ன ஞாபகம்.என்னை ஒரு மாதிரிப் பார்த்தாள். வேறு ஒன்றும் சொல்லவில்லை. நாள் போகப் போக நாங்கள்நல்ல நண்பிகளாகி விட்டோம்.இந்தச் சம்பவம் அவளுக்கு நினைவிருக்குமோ தெரியவில்லை. (என்னத்தைக்
கேட்டாள் எனக்குத் தெரியவில்லையே என்ற வீராவேசத்திலும், இவள் கேள்வி கேட்டால்சொல்வதற்கும் என்றே வீட்டில் ஆங்கிலப் பாட்டு கேட்டதும் வானொலியில் english station பிடித்து வைத்திருந்ததும் தனிக்கதை.)

பழைய குருடி கதவைத் திறடி

என் தோழிக்கு தங்கிலீஷ் தான் தாய்மொழி. நாங்கள் "suம்மா" என்றால் அவள் "Chuம்மா" என்பாள். இதனாலேயே கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவதுண்டு. ஒருமுறை எங்கோ போயிருந்த போது அளவான உயரத்துடனிருந்த வாசலைக் கடக்கையில் ஐந்தடி உள்ள அவள் தன் தலையைக் குனிந்து கொண்டதைக் கண்ட நான் சொன்னேன் "நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கிறது" என்று. அவளுக்கு நான் சொன்னது விளங்கவில்லை...

தோழி: What is பிழைப்பு?

நான்: Living / life

தோழி: What does that have to do with my rememberance?

நான்: ???

முழித்த அனுபவத்தில் உவமை சொல்வதையே நிறுத்தி விட்டேன். நேற்று மின்னஞ்சல் பண்ணும்போது "Pazhaya kurudi kathavai thiradi" (பழைய குருடி கதவைத் திறடி) என்று எதற்காகவோ எழுதி அனுப்பினேன்...வந்ததே பதில்...ஆகா!
"why is the old blind person stealing the door? pleae explain"
எனக்கும் முதலில் விளங்கவில்லை....

ப.கு.க.திறடி என்பதை ப.கு.க.திருடி என்று வாசித்ததால் வந்த வினை!

திருவிழா

திருவிழாவின் 6ம் நாள் இன்று. எங்களுடைய, பக்கத்திலிருக்கும் , ஊர்க்கள் தான் இன்றைய உபயகாரர்கள். ஒவ்வொரு நாளும் மேள, நாதஸ்வரக் கச்சேரி சுவாமி வீதிவலத்திற்குப் பின் நடக்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்திற்கு தொடராதா என ஏங்க வைப்பதிலேயே குறியாய்
இருக்கிறhர்கள். நான் இவர்களிடம் வைத்திருப்பது பிரமிப்புக் கலந்த மரியாதை.

எனக்குப் பிடித்த பலவற்றில் முதலிடம் வானத்திலிருந்து நீளும் வெள்ளித் துளிச்சரங்களுக்கே!

அடடா கவிதை மாதிரி எல்லாம் வருதே!!LOL =O)

பெட்டகம்