என் பார்வையில் கலை ஒலி மாலை 2004

ATBC எனப்படும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 2ம் ஆண்டு நிறைவு விழாவிற்குச் சென்றிருந்தோம். பதின்வயதினரின் கவியரங்கு (யார் எழுதி கொடுத்தார்களோ..நல்லதொரு முயற்சி. அதற்குப் பிறகு வைத்தார்கள் பாருங்கள் ஒரு நடனம்..Fusion Dance என்ற பெயரில் பழைய பாட்டுகளுக்கு (கிட்டத்தட்ட 30) சிறுவர்களைக் கொண்டு நவீன நடனம். முதலாம்/இரண்டாம் பாட்டு..சரி.. பார்க்க இந்த மாதிரி நடனம் வித்தியாசமாகவும் சின்னப்பிள்ளைகள் செய்தது cute ஆகவும் இருந்தது. பிறகு அடுத்தடுத்து 8/9 பாட்டுகள். ஒன்றிரண்டு புதிய பாடல்களுக்கு ஆடினாலும் அதிக நேரம் தொடர்ந்ததால் சலிப்படைய வைத்தது. நல்லதொரு புதுமையான பாணிதான்..அமைக்கும் நடன அசைவுகளை கவனித்து அமைக்க வேண்டும். தமிழ் படங்களில் வரும் suggestive அங்க அசைவுகளும் குலுக்கல்களும் இந்த சிறார்கள் ஆடிய நடனங்களிலும் இடம் பெற்றது வருத்தத்திற்குரிய விடயம்.

ஒரு கடி (ரத்தம் வருமளவுக்கு) நாடகம் இடம் பெற்றது. அதிலே சொன்ன கருத்து எல்லாருடைய மண்டையிலும் ஏறியிருக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன். நாடக நீதி : வம்பு பேச/வளர்க்க வேண்டாம்.

இடையிலே பேச இவ்வானொலி அமைப்பின் நிறைவேற்று அங்கத்தவர்(executive member) ஒருவர் வந்தார்; "I am going to speak in English, please bear with me..my Tamil is not good!!" சரி விடுவோம். அவர் படித்தது ஆங்கிலத்திலாக இருக்கலாம்.

இந்நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தவர்கள் சஹானா தொலைக்காட்சித் தொடரில் வரும் அனுராதா கிருஷ்ணமூர்த்தி என்னும் பாடகியை இதற்காகவே இந்தியாவிலிருந்து அழைப்பித்தார்களாம். அவர் பாவம் மெல்பேண், கன்பராவில் இவர்களது நிகழ்ச்சியில் பாடி களைத்து சிட்னிக்கு வந்திருந்தார். கச்சேரியை வாதாபி கணபதிம்மில் தொடங்கி பாரதியாரின் வந்தே மாதரம், காணக் கிடைக்குமோ, கீர்த்தனைகளும் மற்றும் சஹானா தொடரில் வரும் சில பாடல்களும் பாடிக் கொண்டிருந்தார். நல்லாக காது குளிர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் போது விளம்பர இடைவேளையில் உயிரற்ற மின்கலமுடைய ரிமோட் போல் (எத்தனை நாளைக்குத்தான் சிவ பூசையில் கரடியாய் ..) தொகுப்பாளர் வந்து "குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்"(அதெல்லாம் எதுக்கு..நாங்க வேண்டாமென்றாலும் எப்பிடியோ அறுக்கத்தான் போறீங்க..)"கலைஞர்களை கௌரவிப்பதற்கு --- அவர்களை அழைக்கிறோம்". வந்தார்கள்.பொன்னாடை போர்த்தினார்கள். அத்தோடு விட்டிருக்கலாம். "விழா ஒருங்கிணைப்பாளர் XXX அவர்களை சில வார்த்தைகள் கூறுமாறு கேட்டுக் கொள்கிறோம்". வந்தார் திருவாளர்XXX. "இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் அழைத்து, வருகை தந்திருக்கும் திருமதி அனுராதா கிருஷ்ணமூர்த்திக்கு எமது நன்றிகள்" என்று ஆரம்பித்து ஏதேதோ சொல்லி பிறகு ஒரு முத்தொன்றை உதிர்த்தார்! (அவருக்கு அன்றைக்கு constipation of the mind and diohorrea of the mouth என நினைக்கிறேன்.) "இந்த ப்ரொக்ரம் க்கு இவவை கூப்பிட்டதில் $1000 டெலிபோன் பில் துண்டு". பார்வையாளரில் சிலர் சிரித்தனர். அத்தோடு (foot in the mouth என்று உணர்ந்து) வாயை மூடி கொள்வோம் என்றில்லை...பார்வையாளர் சிரித்தது இன்னும் தூண்டி விட்டதோ என்னவோ..அடுத்த முத்தை உதிர்த்தார் " நாங்க தொலைபேசில ப்ரொக்ராம் விஷயங்கள் மட்டுந்தான் கதைச்சனாங்க"..இப்போது சனம் கொல்லென்று சிரித்து வைத்தது. பாடகிக்கோ முகத்தில் கண நேர மாற்றம். சுதாரித்துக் கொண்டவர் ஒப்புக்கு சிரித்து வைத்தார். இப்படிப்பட்ட நாகரிகமற்ற பேச்சுக்கள் தேவையேயில்லை. பேச முதல் யோசிப்பது அவசியம். இனிமேல் இவர்கள் இந்தியாவுக்கே போய் அழைத்தாலும் அனுராதா வரமாட்டார்.

தொகுப்பாளர் வந்து "தமிழ் பாட்டுக்கள் குறைவாக இருப்பதையிட்டு ATBC தனது மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது" என்றார். என்ன என்று பார்த்தால் பாடகியிடம் சிலர் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட சில பாடல்களுக்கான வேண்டுகோள் (request) விடுத்தபடியால் தமிழ்ப்பாட்டுக்கள் குறைந்து விட்டதாம் என்று கவலைப்பட்டுக் கொண்டார். இவர்களது குறுக்கீடு முடிந்ததும் பாடகி ஒரு பாடல் பாடி விட்டு " உங்க எல்லாருக்கும் நாளைக்கு working day னு தெரியும் அதனால கச்சேரி இன்னும் 8 நிமிஷத்துல நிறைவடையும்" என்று சொல்லி மங்களம் பாடி முடித்து விட்டார். அனுராதா கிருஷ்ணமூர்த்தி வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவரது சினம் புரிந்தது. கடைசியாய் தொகுப்பாளர் வந்து சொன்னார் "தமிழை வளர்க்க தமிழருடன் தமிழில் பேசுவோம்"

ஒரே ஒரு கேள்வி ..தொகுப்பாளரை கேட்கணும்..உங்கள் நிறைவேற்று அங்கத்தவர் தமிழருடன் தமிழில் பேசவில்லையே?

காவல்

ஒருமுறை உறவினர் வீட்டுக்குச் செல்ல புறப்பட்டு, பேருந்திலிருந்து இறங்கும் போது இருட்டிவிட்டது. தரிப்பிடத்திலிருந்து பிரதான வீதியால் 3/4 நிமிடம் நடந்தால் அவர்கள் தெரு வரும். இறங்கி நடக்க முற்படுகையில் தான் அதைக் கவனித்தேன் - கறுப்புமில்லாத பழுப்புமில்லாத ஒரு நிறத்தில், வீதி மூலையில் நின்றது. நான் நடக்க ஆரம்பித்ததும் என் பின்னே ஓடிவந்து, கூடவே நடக்க ஆரம்பித்தது. இந்த உயிரினம் என்றால் நான் எப்போதும் கொஞ்சம் எட்டியே இருப்பேன்.(ஹி..ஹி! சின்ன வயது அனுபவம்தான் காரணம்) வலப்பக்கத்தில் வந்து கொண்டிருந்தது ஒரு வினாடி நின்று, பிறகு இடப்பக்கம் வந்து நடக்கத்தொடங்கியது. நடக்க நடக்க பத்தடிக்கொரு தரம் ஒரு கணம் நிற்பதும், நடக்கும் பக்கத்தை மாற்றி நடப்பதுமாக...அதன் 'நட'வடிக்கை. ஏன் என்னுடன் கூடவே வருகிறது என்று விளங்காமல் அதனுடன் "எனக்கு நாய்களெண்டா பெரிய விருப்பம் எண்டு இல்ல..அதோட கொஞ்சம் பயமும் இருக்கு. நீ ஏன் என்னோடையே வாறாய்?" என்றும் வேறு பலதும் கதைத்துக் கொண்டே நடந்தேன்.(அன்றைக்கு யாராவது பார்த்திருந்தால் பைத்தியம் என்று நினைத்திருப்பார்கள்!)

என் பேச்சை(!?) அது கண்டு கொண்டதாகவே தெரியவில்லை..தன் பாட்டுக்கு நிற்பதும் பக்கம் மாறுவதுமாய் தொடர்ந்தது. இந்த தெருவிலிருந்து பிரியும் ஒரு ஒழுங்கையிலுள்ள 4 வீடுகளில் ஒன்று தான் உறவினர் வீடு. அவ் ஒழுங்கை பிரியும் இடத்திற்கு வந்ததும் நாய் நின்று விட்டது. இனி பத்திரமாய் போய் விடுவாள், துணை தேவையில்லை என்று நினைத்ததோ என்னவோ.. மேற்கொண்டு என்னுடன் வரவில்லை. நான் வீட்டுப் படலையடியில் நின்று திரும்பிப் பார்த்த போது நாய் அங்கிருக்கவில்லை. அங்காலே எங்காவது போயிருக்கலாம்.

என் சந்தேகங்கள்:-

  1. ஏன் வலது-இடது-வலது என்று பக்கம் மாறி மாறி நடந்தது?
  2. ஏன் ஒழுங்கைக்குள் நாய் வரவில்லை? (ஒருவேளை அவ் ஒழுங்கையில் இருப்பவர்கள் யாராவது அதற்கு கல்லெறிந்திருப்பார்களோ?)
  3. ஒருவருக்கு இப்படி நடப்பதற்கான சாத்தியத்தின் நிகழ்தகவு என்ன?( எல்லாம் நான் 1/1000, 1/100000 என்றெல்லாம் சொல்லி பீத்திக் கொள்ளத்தான்..ஹி..ஹி..ஹி!!!!!)
 
பி.கு: இதை நான் மலேசியாவுக்கு படிக்கப் போயிருந்த என் நண்பிக்கு எழுதினேன். அவளிடமிருந்து வந்த பதில் மடலில் (என் கடிதம் கிடைத்து சில நாட்களில்) தனக்கும் ஒரு நாய் துணை வந்ததாகக் கூறியிருந்தாள்.(weird!)

வாங்க..நாட்டுக்கே முன்னுதாரணம் ஆகலாம்

சொந்தக்கார அண்ணனொருவர் சத்தமில்லாமல் 3ம் முறையாக மக்கள் தொகையை உயர்த்திவிட்டிருக்கிறார். அதுக்கென்ன இப்ப என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. அவருக்குத் திருமணமாகி 4 ஆண்டுகள்தான், 3 தனித்தனிப் பிரசவங்களில் 3 பிள்ளைகள். மனைவியின் உடல்நலம் பற்றிக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாது "3ம் குட்டி போட்டாச்சு, அடுத்ததுக்கு plan பண்ணனும்" என்று சாதனையாய்(!?) பேசுகிறார். இந்த அண்ணா வீட்டில் 8 பேர். தன் தாய்தந்தையின் record ஐ உடைப்பது தான் இவரது குறிக்கோள்! கல்யாணமாகிய புதிதில் நாங்களுமிருக்கும் போது மனைவியிடம் இதை சொன்னார்..அந்த அப்பாவிப் பெண் சும்மா புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தா.  சாதனை முறியடிக்கிறாராம்...சாதிப்பதற்கு வேறு ஒன்றுமே இல்லையா? இவரை நினைத்தால் ஒருபக்கம் கோபமாகவும் மறுபக்கம் (அட மடையா! என்று) மனவருத்தமாகவும் இருக்கிறது. வெளிநாடுகளில் இருப்பது போல் பிரசவத்தின் போது கணவனும் கூடவே இருக்க வேண்டும் என்பதை எம்மூர்களிலும் செயலுக்குக் கொண்டு வந்தால் தான் இப்படிப் பட்டவர்களுக்கு பிரசவத்தின் extreme விளங்கும்.

குறைந்த பட்சம் தனியார் வைத்தியசாலைகளிலாவது இதை செயல்படுத்த முனையலாம். உங்கள் குழந்தையை இந்த உலகுக்கு வரவேற்கும் முதலாவது ஆளாய் இருங்கள் என்ற range ல் ஏதாவது catchy யாகச் சொல்லி ஒரு கணவனுக்கு ஆசையைத் தூண்டி விட்டால், அவனுக்கு மனைவியின் அருகேயிருந்து தன் குழந்தையின் பிறப்பைப் பார்க்க ஆசை வரும், பிரசவத்தின் போது மனைவியுடன் கூடவே இருந்து குழந்தையை பெற்றுக் கொள்வான். கொஞ்சமாக தன் நண்பர்களிடையே "என் குழந்தை பிறந்த போது நான் தான் முதலில் தூக்கினேன்..பார்த்தேன்" என்றெல்லாம் சொல்லிக்கொள்கையில் நண்பர்களும் அவன் முன்னுதாரணத்தைப் பின்பற்ற சந்தர்ப்பம் உள்ளது. இது அப்படியே பரவி fashion ஆக மாறிவிட்டால் (கனவு காண்பது பிழையா சொல்லுங்க?) "எங்கம்மா 8 பேரை பெத்தா..நீ எனக்கு 10 பெற்றுக் கொடு" என்கிற மடமைகள் இல்லாமல் போகும்.

பி.கு: இதை வாசிக்கும் ஆண்களில் யார் (இலங்கையில், இந்தியாவில் மற்றும் எங்கு பிரசவத்தின் போது கணவன் கூடவே இருக்கும் வழக்கம் இல்லையோ அந்த நாடுகளில்) பிள்ளையைப் பெறும் போது,  மனைவியுடன் கூடவேயிருந்து உங்கள் குழந்தையை வரவேற்கப் போகிறீர்கள் என்பதை(வைத்தியர் கேட்க முதல் நீங்களாகவே) வைத்தியரிடம் சொல்லி, செயலிலும் காட்டி (நாட்டுக்கே) முன்னுதாரணமாகப் போகிறீர்கள்? 
 

எனக்கு மட்டுமா இப்படி?

பாலர் பாடசாலையில் படிக்கும் போது நானும் தோழியும் சரியான குழப்படி.எப்போதும் ஒன்றாகத் தான் திரிவோம். ஒரு நாள் கையைக் கோர்த்துக் கொண்டு ஓடும் போது சாணியில் கால் வைத்து, சறுக்கி விழுந்து உடுப்பெல்லாம் அழுக்காகி விட்டது.
மேல் கூறினதை நான் எத்தனையோ முறை பலருக்குச் சொல்லியிருக்கிறேன்.எப்போது சொன்னாலும் உருவாக்கிச் சொல்லுகிற(ஏன் அப்பிடி இட்டுக்கட்டி/கற்பனை செய்து சொல்லுகிறேன் என்று தெரியாமலே!!) மாதிரி ஒரு உணர்வு. இந்தத் தோழி கொழும்பு வந்த போது எங்கள் வீட்டிற் தான் தங்கியிருந்தா. ஒருநாள்  என் "கதை"யை யாருக்கோ நான் அவிழ்த்து விட்டுக்கொண்டிருந்தேன். தோழி ஆச்சரியம் மேலிட "உமக்கு அது இன்னும் ஞாபகமிருக்காடா" என்று கேட்டாள். அப்போது தான் உண்மையாகவே நடந்ததைத் தான் நான் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறேன்..கற்பனையில் உருவாகினது அல்ல என்று எனக்கு மண்டையில் உறைத்தது. ஆனாலும் எனக்கு சம்பவம் நடந்த ஞாபகம் இல்லை.ஆழ் மனத்தில் சேகரிக்கப்பட்டுள்ள கணக்கற்ற ஞாபகங்களில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கிறதா? கதையாக வெளிவரத் தூண்டிய காரணி என்ன? யாராவது உளவியல் தெரிந்தவர்கள் விளங்கப்படுத்த முடியுமா? யாருக்காவது இதைப்போன்ற அனுபவம் உண்டா?(அல்லது வழமையாய் என் நண்பர் குழாம்  சொல்வது போல "அது உனக்கு மட்டும் தான் இப்பிடியெல்லாம் நடக்கும்" ஆ? )  :O/


சின்னச் சின்ன ஆசை..

இப்படியொருமுறையெழுதிடவெனக்காசையெழுந்ததையடுத்திவ்வசனமிங்கச்சேறுகிறது.

தலையைப் பிய்த்துக்கொள்ளாதீர்கள், சும்மா, ஒரு சின்ன ஆசை, நிறைவேற்றியுள்ளேன். ;O)
(ஒரு வேளை பிரித்தெழுதியிருக்கலாமோ..இப்படி:-
இப்படியொருமுறை யெழுதிட வெனக்காசை யெழுந்ததை யடுத் திவ்வசன மிங் கச்சேறுகிறது.)

அழுவதா சிரிப்பதா ?

வார இறுதியில் நண்பரொருவரது வீட்டிற்குச் சென்றிருந்த போது, ஒளிப்பதிவு செய்யப்பட்ட (கனடாவில் நடந்த) நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கக் கிடைத்தது. இலங்கையரின் நிகழ்ச்சி தான்..யாழ் அன்பர்கள்தாம். நிகழ்ச்சி என்று ஒன்று நடந்தால், அது யாரால் நடாத்தப்படுகிறது/ஒழுங்கு செய்யப்பட்டது என்று மேடையில் ஒரு 'Banner' இருப்பது வழமை தானே..இங்கு இவர்களும் விதிவிலக்கல்ல. Banner பெரிய விஷயமல்ல..அதில் இருந்ததைப் பார்த்து எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. Banner இப்படிச் சொன்னது:

வட்டுக்கோட்டை
மூளாய் வீதி ஒன்றியம்


வட்டுக்கோட்டை ஒன்றியம் என்று பெயர் இருந்திருந்தால் அது அவ்வூரைச் சேர்ந்தவர்களுக்குரிய ஒன்றியமாக காணப்பட்டிருக்கும். இங்கு இவர்களோ, வட்டுக்கோட்டை என்கிற ஊர் அடையாளத்தையும் தாண்டி தாங்கள் வசித்த வீதியின் பெயராலே ஒன்றியமொன்றை அமைத்திருக்கிறார்கள். நல்ல காலம், வட்டுக்கோட்டை, மூளாய் வீதி, இல:46 ஒன்றியம் என்று ஒரு சங்கம் அமைக்காமல் விட்டுவிட்டார்கள்.அந்த மட்டில் தப்பினோம். (அப்படி இதுவரை நடக்காமல் காப்பாற்றிய பிள்ளையார் இந்த வீதியில் கோயில் கொண்டிருக்கிறாராம்.அதற்கு நிதி சேர்க்கத்தான் இந்நிகழ்ச்சி நடத்தப் பட்டுள்ளது.)

பி.கு 1: வட்டுக்கோட்டை, மூளாய் வீதி, இல:46 என்பது ஒரு எழுமாற்றான முகவரி. இங்கே வசித்த/வசிக்கிற யாரையும் எனக்குத் தெரியாது.

பி.கு 2: இது யாரையும் (குறிப்பாக - வட்டுக்கோட்டை- மூளாய் வீதி ஒன்றியத்தினரை) புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல.

மழையாமே...அதென்னது?

மழை - வரைவிலக்கணம்: வளி மண்டலத்தில் ஆவி வடிவில் காணப்படும் நீரானது ஒடுங்கி, வானிலிருந்து பூமிக்கு துளித்துளியாய் விழும்போது மழை எனப்படும்.

முன்னொரு காலத்தில் காணப்பட்டதும் இனிமேல் இருப்பதற்கான சாத்தியமும் இல்லையென நம்பப்பட்டதுமான "மழை" எனப்படும் ஒரு வானிலை, நாளை சிட்னிக்கு எதிர்வுகூறப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட இவ்வறிக்கையானது இவ்வானிலையை எதிபர்க்காத, இதற்கு ஆயத்தமற்ற குடிமக்களைத் தயார்ப்படுத்தும் பணியில் வரலாற்றாசிரியர்களைத் தீவிரமாக ஈடுபடுத்தியுள்ளது. இந்த மழையானது இதைப் போலவே பரிச்சயமற்ற "மேகங்கள்" எனப்படுவனவற்றின் தோற்றத்தின் பின் ஏற்படுமென வளிமண்டலவியற் திணைக்களத்தின் வானிலையாளர் சத்யா கிஷோர் தெரிவித்தார். திரு. சத்யா தெரிவித்ததற்கிணங்க, கரையோரப் பகுதிகளில் மழையை வினியோகிப்பற்கு முன்பதாக மேகங்கள் நாளை விடியலில் சிட்னியின் மேல் கூடுமென அறியப்படுகிறது. இம்மேகங்கள் கலைந்த பின்னர் மீண்டும் காணக் கிடைக்கும் என்பதால் பாதிக்கப்பட்ட இடங்களில் வதிவோர் 'காணாமற் போன நிழல்கள்' தொடர்பாக காவற்துறையினரை அணுக வேண்டாமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதே போன்றே வீட்டுரிமையாளர்களும் தாம் வளர்க்கும் தாவரங்கள் இம் மழை காரணமாக பச்சை போன்றதொரு நிறத்தில் காணப்பட்டால் அவற்றிற்கு நோயேற்பட்டுள்ளதோவென அஞ்ச வேண்டாமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மழை நேரடியாகப் படும் போது ஆட்களோ, கட்டடங்களோ ஈரமாகலாம். வாகன ஓட்டுநர்கள் தம் வாகனத்தில் காணப்படும் மழைத்தடுப்புச் செயலியை பரிச்சயப் படுத்திக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். ஒருவித பயனுமின்றி அமைந்திருப்பதால் வாகனத்தின் குடல்வால் எனச் செல்லமாக அழைக்கப்படும் கண்ணாடித்துடைப்பான் அனேகமான ஊர்திகளில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கருவி கண்ணாடியிற் படிகின்ற மழைத் துளிகளை அதனின்று நீக்குவதன் மூலம் சாரதிக்கு பாதையை தெளிவாகப் பார்க்க வழி செய்கிறது.

*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*


மழை என்று பெயர் வைத்து விட்டு, பதிவில் மழை பற்றி எழுதாமல் இருப்பது சரியாகப் படவில்லை. அதுதான், நேற்றைய The Daily Telegraph இல் ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையை என்னாலான வரைக்கும் மொழி பெயர்க்க முயற்சித்திருக்கிறேன். இதன் ஆங்கில (அசல்) வடிவம் இங்கே.

அன்னை என்னும் ஆலயம்

ஒரு ஊரிலே ஒரு சின்னப் பெடியன் இருந்தான்.பள்ளிக்கூடம் போவதென்றால் வேப்பங் கொழுந்தை விடக் கசக்கும் அவனுக்கு. பள்ளிக்குப் போகும் வழியில் வயலுக்கூடாகவும் போக வேண்டி வரும். ஒருநாள் பள்ளிக்குப் போகும் போது வரம்பில் தடுக்கி விழுந்து விட்டான். வெள்ளைச் சீருடையில் சேற்றோவியம்.வீடு திரும்பி, நடந்தது சொல்லி, வேறு சீருடை மாற்றி மீண்டும் பள்ளி நோக்கிய பயணம். மனதில் மின்னலாய் ஓர் எண்ணம். 30 நிமிடத்தில் பழைய சேற்றோவியக் கோலத்தில் வந்து நின்ற மகனைப் பார்த்த அம்மாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. "மகன்..உங்களுக்கு இருப்பது 3 சீருடைதான், இதுதான் சுத்தமானதும் கடைசியும், ஆகவே பத்திரமாகப் போ" என்று சொல்லி வழியனுப்புகிறா. மகனோ அடுத்த 30வது நிமிடத்தில் திரும்பி வந்தானாம்..இம்முறையும் சீருடையில் சேற்றோடு.பாடசாலைக்கும் நேரமாகி, சுத்தமான வேறு சீருடையும் இல்லாமற் போகவே அவன் அன்றைக்குப் பாடசாலைக்குப் போகவில்லை.

பெரிய சாதனையாக தன் 4 வயது தம்பியிடம் சொன்னானாம் "முதலாம் தரம் உண்மையாத்தான் விழுந்தனான், பிறகு வேணுமெண்டு தான் விழுந்தனான்" என்று. இதைக் கேட்ட தாயார் அவனது புத்தியை சிலாகித்துக் கொன்டாலும் வெளியே காட்டாமல் இவனை அழைத்து பள்ளிக்குப் போக வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினாராம்.

இச் சம்பவத்தில் வரும் சின்னப் பெடியன்: என் அண்ணா, தாயார்: எங்கள் செவிலித் தாயார்.

இப்படி நிறைய கதை சொல்லும் எங்கள் செவிலித் தாயார் ஒரு சிங்களப் பெண்மணி. 1963ம் ஆண்டு தொடக்கம் எங்கள் குடும்பத்தவர். இனப் பிரச்சனையின் போதும், கொழும்பிற்கு இடம் பெயர்கையிலும் இவர் காட்டிய மனவுறுதி அளப்பரியது. பல இராணுவத்தினர் கேட்டனர்.."நீ ஏன் இந்த தமிழ் ஆட்களுடன் இருக்கிறாய்?" என்று. அதற்கு அவரது மாறாத பதில் "என் குடும்பத்தினரோடு நான் இருக்கிறேன்..உனக்கு அதனால் ஏதாவது பிரச்சனையா?" அவனுக்கு அதற்குப் பதில் சொல்ல வராது.வாயடைத்துப் போய் நிற்பான்.

இவரது சமையல் எம் குடும்ப நண்பர்களிடையேயும், அம்மா வேலை செய்த வைத்தியசாலைகளிலுள்ள ஊழியர்களிடையேயும் மிகவும் பிரபலம். அண்ணாமார் விடுதியிற் தங்கிப் படித்த போது ஒவ்வொரு வார இறுதிக்கும் பல விதமான உணவுப் பண்டங்களோடு அவர்களைப் பார்க்கப் புறப்பட்டுவிடுவாராம். ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் எப்படிப்பட்டவர் என்பதை கணிக்கும் திறனுடையவர். அவர் சொல்லும் போது சிரிக்கும் நாம், அக்கூற்று பலருக்கும் மிகச் சரியாகப் பொருந்துவதை கண்டு வியந்துள்ளோம். வருடத்துக்கு ஒரிருமுறை ஊருக்குப் போய் வருவா. அம்மாவை விட்டு எத்தனை நாளும் இருக்க முடிகிற எங்களால், இவவை விட்டு இருக்க முடிவதில்லை. வழியனுப்பப் போகும் போது "என்னட்டயும் ticket இருக்கு, என்னையும் கூட்டிப் போங்க" என்று தன் கையிலுள்ள platform ticket ஐக் காட்டி அழுவாராம் பெரியண்ணா. ஊரிலிருந்து திரும்பும் போது, சமையல் சாகசங்களின் பலனாக அம்மாவின் கையில் குறைந்தது 2 வெட்டுக்காயமாவது இருக்கும். வந்தவுடன் எங்களைப் பார்த்து விட்டு "சூட்டி/புத்தாலா கெட்டு வெலா" (சின்னவள்/மகன்மார் மெலிந்து விட்டார்கள்) என்பார்("ஏதோ நான் சாப்பாடு குடுக்காத மாதிரி"<--அம்மா). அப்பாவின் கோபத்திற்கு ஆளாகும் போது அண்ணாக்கள் வேண்டிக் கொள்ளும் தெய்வமும் இவதான்.அன்னபூரணி + ஆபத்பாந்தவி / அனாதரட்சகி.

எம் குறைகள் அவர் கண்களுக்குத் தெரிவதேயில்லை. அவரைப் பொறுத்தவரையில் எங்களைப் போல் Angels இந்த உலகத்தில் யாருமில்லை. அவவுக்குத் தன் பிள்ளைகளை (என்னை, அண்ணாமாரை) யாரும் ஒன்றும் சொல்லக் கூடாது..அது அம்மாவேயாயினும்.அதே போலத்தான் எங்களுக்கும் - அவரிடம் குறை யாதுமில்லை;யாரும் வேறு மாதிரிச் சொன்னார்களோ, தொலைந்தார்கள். வீட்டிலே பண்டிகைக்கோ அல்லது வேறு எதற்காவதோ புதுத் துணி அல்லது பொருட்கள் வாங்குவது என்றால் அவவுக்கு என்ன வாங்கலாம் என்பதையே நாங்கள் முதலில் தீர்மானிப்போம். சில விஷயங்கள் நேரடியாக அம்மாவிடம் கேட்க முடியாதுவிடின் இவர் காதில் போட்டால் போதும், காரியம் 90% முடிந்தமாதிரித்தான். சகோதரிகள் (அம்மாவும் அவவும்) என்னதான் கதைப்பார்களோ, கிசுகிசுப்பாய் இரகசியக் கதைகளும் வயிறு குலுங்கும் சிரிப்புமாய்...இரவிரவாய்த் தொடரும்.

அண்ணாவின் மகள், பார்த்த மாத்திரத்திலேயே தன்னிடம் ஒட்டிக் கொண்டது(அம்மாவிடம் அவள் சேர 1 மணித்தியாலம் எடுத்தது) அவருக்கு தனி மகிழ்ச்சி/பெருமை. தனது சுருங்கிய தோலை அவள் தொட்டுப் பார்ப்பதையும் பத்திரிகை வாசிக்கும் போது கைக்கும் பத்திரிகைக்குமுள்ள இடைவெளிக்குள்ளால் தலை புகுத்தி அவள் தன்னைப் பார்ப்பதையும் நிறையவே ரசித்தார். ஸ்ரியானி எனும் இயற்பெயர் கொண்டாலும் நாங்களும், எம்மூடாக அவரைத் தெரிந்தவர்களும் அண்ணா அவருக்குச் சூட்டிய "எம்மி" என்கிற பெயராலே தான் அவரை விளிப்போம்.

3 பிள்ளைகளையும் சோடியாகப் பார்க்கக் கிடைக்கும் என்பதனால் 2001 இல் நடந்த என் திருமணம் அவருக்கு விசேடமான மகிழ்ச்சியைக் கொடுத்தது. என் திருமணத்திற்கு முதல் நாளன்று எம்மிடையேயிருந்து, இந்த மண்ணிலிருந்து மறைந்த எம் எம்மிக்கு என் அஞ்சலிகள்.

அவவைத் தந்த கடவுளுக்கு நன்றி.

"அன்னை என்னும் ஆலயம்...அன்பில் வந்த காவியம்"

இங்கே சாத்திரம் பார்க்கப்படும்

கைரேகை சாத்திரம் என்று சொல்லப்படுவது கையிலே காணப்படும் ரேகைகளைப் பார்த்துச் சொல்லப்படுவது(அதனால் தான் அதுக்கு கைரேகை சாத்திரம் என்று பெயர்!!). உள்ளங்கையின் தன்மை, வடிவம், முக்கியமாக அதிலே குறுக்கும் மறுக்கும் தலை போகும் வேலையாய் ஓடித் திரியும் கோடுகள்..இவை எல்லாமாய்ச் சேர்ந்து சாத்திரம் சொல்பவருக்கு வீட்டிலே சோற்றுக்கு வழி செய்கின்றன. உங்கள் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லக் கூடியனவாம் இக் கோடுகள். முக்கியமான 3 ரேகைகளாவன..ஆயுள்(life), தலை(head),இருதயம்(heart).இவையே ஒருவரின் உடல்நலம், வாழ்நாள்,முக்கிய(ஆளுமை) குணங்கள், வாழ்விலேற்படும் முக்கிய மாற்றங்கள் என்பவற்றைக் குறிக்கின்றன. கையில் காணப்படும் மெல்லிய அல்லது தெளிவற்ற கோடுகளும் ஒருவரின் வாழ்வைப் பற்றிய முழுமையான விளக்கத்தைப் பெற கவனமாக (சாத்திரக்காரரால்) பார்க்கப்படும்.

என்னடா திடீரென்று கைரேகை சாத்திர விளக்கம் சொல்கிறேனே என்று பார்க்கிறீர்களா?என்ன நடந்தது என்றால் என் தோழி(ப.கு.க.தி தோழி) ஒரு கைரேகைச் சாத்திரம் சொல்லும் தளத்திற்கு சுட்டி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தாள். சரி online இல் எப்படி கணிக்கப் போகிறார்கள் என்று பார்க்கப் போனேனா..போய் முதலாவது submit ஐ அழுத்தியவுடனேயே பிரச்சனை. என்ன..அதிலே கேட்டிருந்தது என் கையில் இல்லை, அவ்வளவுதான். சரி, உங்களுக்கு என்ன சொல்கிறார்கள் என்று பின்னூட்ட ரேகையில் தெரிவிக்கவும்.

பி.கு: கைவிரல் ரேகை ஒவ்வொருத்தருக்கும் வேறுவேறுதானே..அது போல உதட்டு ரேகையும் ஆளுக்காள் வேறுபடுமாம்.(ரொம்ப அவசியம்! என்று நீங்க சொல்வது கேட்கிறது!!) ;O)

பெட்டகம்