உதவி

என் கணவருக்கு சின்னதொரு இன்ப அதிர்ச்சி கொடுக்க, அவருக்கு பிடித்த/முக்கியமான பெண்மணியைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இலங்கையில் வடபகுதி காரைநகரில் யூனியன் கல்லூரியில் படிப்பிக்கிறாவாம். திலகம்/திலகவதி என்ற பெயர். இவவைத் தெரிந்தால், தொலைபேசி இலக்கம் பெற்றுத் தரமுடியுமா? மேலும் விபரத்திற்கு தனிமடல் அனுப்புங்க. நன்றி.

இன்று!


முக்கியமான சிலருக்கு இன்றைக்குப் பிறந்த நாளாம் என்று கேள்விப்பட்டதில் உங்களுக்கும் சொல்லலாம் என்று நினைத்தேன். எங்களூர் பிரதமருக்கு இன்றைக்கு 66 வயதாகிறது. இவருடன் பிரபல எழுத்தாளர் பேர்னார்ட் ஷா, உளவியலாளர் கார்ல் ஜங், இசைக்கலைஞர் மிக் ஜாகர், நடிகர் கெவின் ஸ்பேசி, நடிகை சான்ட்ரா புல்லொக், கிரிக்கெட் வீரர் ஜொன்டி றோட்ஸுக்கும் இன்றைக்குப் பிறந்த நாளாம்.

இவர்களுடன்.. என்னுடைய ஒரு தோழியின் அப்பாவும், தன் பிறந்த நாளை என் அப்பாவுடன் கொண்டாடும் இன்னொரு தோழியின் அப்பாவும் நானும் இன்றைக்கு எங்கள் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். :o)

மெய்ப்பட வேண்டாம்

சினேகிதிக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமானேன். தூக்கியில்(lift) கீழே வந்து இறங்குமுக விரைவுப்படிக்கட்டில் காலை வைத்த படியே பக்கத்தில் வரும் நண்பருடன் அன்றைய நாளைப்பற்றிக் கதைக்கிறேன். இதென்ன...படி 45 பாகை சரிவிலிருந்து 80 பாகை சரிவாகிறதே! பக்கத்தில் வரும் நண்பரிடம் சொல்ல எத்தனிக்கிறேன்..குரல் எழும்புவதாகக் காணோம். அவரோ ஒரு வித சலனமும் இல்லாமல் தனது புதிய செல்லிடப்பேசியின் செயற்பாடுகள் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறார். படிகள் ஆடுகின்றன, அதை உணர்ந்து நிமிர்ந்து அவர் பார்ப்பதற்குள் படிகள் மேலிருந்து இறப்பர் போர்வையைப் பிரித்துக் கொண்டு விழ ஆரம்பிக்கின்றன. இருவரும் பக்கத்திலே செயற்படும் ஏறுமுகப்படிக்கட்டிற்குப் பாய்கிறோம். கால் தடுமாறியதில் அவர் விழுந்து விட்டார். உதவுவதற்காய் கைகளை நீட்டுகிறேன். அவரால் கைகளைப் பிடிக்க முடியவில்லை. படிகள் என்னை மேலே மேலே கொண்டு போகின்றன.

வெளியில் ஒரே இருட்டாக இருக்கிறது.நின்று சுற்றுமுற்றும் எங்காவது வெளிச்சம் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. காலில் ஏதோ நெருடுகிறது. என்னவென்று தெரியாமல் பயத்தில் உதறுகிறேன். சரேலென விடுபட்டாலும் மீண்டும் மீண்டும் காலில் வந்து பூனையொன்று உடம்பைத் தேய்க்குமாற் போல் உரசுகிறது. அழுத்தம் அதிகரிக்க ஓட ஆரம்பிக்கிறேன். நாலைந்து அடிகளுக்கு மேல் எடுத்து வைக்கமுடியாமல் பாரமாக ஏதோ இழுத்துப் பிடிக்கிறது. தெருவிளக்கின் வெளிச்சத்தில் பார்க்கிறேன். அழுக்குப் பச்சை நிற மெல்லிய கிளைகள். நிற்கும் ஒவ்வொரு கணத்திலும் அவை என்னைச் சுற்றிப்படர்கின்றன. அறுத்தெறிந்து விட்டு தலைதெறிக்க ஓடுகிறேன். என் குளிர்கால coat பாரமாக இருக்கிறது. களைத்தாலும் - முதல் முறை நின்றபோது காலைச்சுற்றிய அக்கிளைகள் என்னைத் துரத்தியபடி ஜுமாஞ்ஜி படத்தில் போல இடையில் இருப்பவற்றையெல்லாம் விழுங்கித் தம் பிடிக்குள் எடுத்துக்கொள்வது போலத் தோன்றுவதால் - நிற்கும் துணிவில்லை. அவற்றிடமிருந்து தப்ப தொடர்வண்டி நிலையத்துக்குள் நுழைகிறேன்.

தொடர்வண்டி நிலையம் பழையதொரு கோட்டை போலக் காட்சி தருகிறது. பயணச்சீட்டு வழங்கும் இயந்திரமும், பூக்கடையும், வாசலிலே நிற்கும் சில இசைக் கலைஞர்களும் வழமையான இடமன்றி வேறிடங்களில். ஒரு கதவு - இதற்கு முதல் கண்டிராதது. திறந்து திறந்து மூடுகிறது. பலரும் சாரி சாரியாக உள்ளே போவதும் வருவதுமாக இருக்கிறார்கள். நானும் எனது பயணச் சீட்டைக் காட்டி உள்ளே ஓடுகிறேன். தொடர்வண்டி வரும் என்று எதிர்பார்த்தால்..அப்படி ஒன்றும் இல்லை. ஒரு சின்ன அறைக்குள்தான் போயிருக்கிறேன். என்னுடன் சேர்த்து அந்த வரவேற்பறைக்குள் ஒரு இருபது, இருபத்தைந்து பேர் இருக்கிறார்கள். ஒரு மூதாட்டி வருகிறா. முகமெல்லாம் சுருக்கங்கள். வயதை சொல்ல முடியவில்லை. 80 - 85 அல்லது 100 - 105..அல்லது அதற்கும் கூட இருக்குமோ தெரியவில்லை. வயதைச் சொல்ல முடியவில்லை. இதற்கு முன் அவவை நான் கண்டதில்லை. ஆனாலும் உடனேயே அவவைப் பிடித்து விட்டது எனக்கு. எல்லாரையும் ஒரு பெரிய கூடத்துக்குள் அழைத்துப் போகிறா. மேசைகளில் விதம் விதமான சாப்பாடுகள். கணத்துக்குக்கணம் அவை முன் இருப்பவர்களின் எண்ணத்துக்கேற்ப மாறிக்கொண்டிருக்கின்றன. ஒரு பொருள் எனக்காக நிறைய நாளாகக் காத்திருப்பதாக அந்த மூதாட்டி சொல்கிறா. ஒரு படிக்கட்டைக் காட்டி அதன் வழியே போய் அப்பொருளை எடுக்கட்டாம். நானும் படியில் ஏறுகிறேன்.

படிக்கட்டுச் சுழன்றுபோய், தலைகீழாக இருக்கும் இன்னொரு படிக்கட்டுடன் சேர்ந்து கொள்கிறது. அதன் வழியேயும் ஏறுகிறேன். வழியெல்லாம் விதம் விதமான சிற்பங்கள். சில, தாம் உருவாக்கப்பட்டது பற்றிய ஆவணப்படங்களை சலனப்படங்களாகக் காட்டுகின்றன. சிலவேளைகளில் படிகள் திடீரென முடிந்துவிடும்.பக்கத்திலிருக்கும் சுவரைத் தாண்டிக்குதித்து பயணம் தொடர வேண்டியிருந்தது. நடுநடுவில் இது வரை சந்தித்திராத பலரும், நிறைய நாட்களுக்கு முன் சந்தித்து பெயரும் முகமும் மறந்து போனவர்களும் வழியில் வந்து கதைத்துப் போகிறார்கள். சின்ன வயது ஞாபகங்களில் இருந்து உயிர் பெற்ற இடங்களும் இடையில் வருகின்றன. ஆனால் அங்கே போக முடியவில்லை. காவலர்கள் நின்று தடுக்கிறார்கள். ஞாபங்களில் மட்டுந்தான் இனிமேல் அங்கே போக அனுமதியாம். என்னைப்போலவே பல இடங்களூக்கு முன்னால் காவலர்களுடன் தர்க்கித்துக் கொண்டிருக்கும் பலரைக் காண்கிறேன். என்னையும் அவர்களையும் யோசித்துப் பார்க்கும் போது பாவமாக இருக்கிறது. கடைசியில் தூரத்தில் பல இழுப்பறைகள் கொண்ட ஒரு மரச்சுவர் தெரிகிறது. ஓடிப்போய் என் பெயர் சொல்லும் இழுப்பறையைத் திறக்கிறேன். அதற்குள் இதுவரை நான் காணாத ஒரு பூ. வேறொன்றுமில்லை..அந்தப் பூ மட்டும்தான். பூவைக் கையில் எடுத்து மூதாட்டியிடம் கேட்கிறேன் "இதை வைத்து நான் என்ன செய்வது?"

"கடற்கரையில் கொண்டு போய் நடு" என்று அவ சொன்னதைச் செய்ய கடற்கரைக்குப் போகிறேன். டார்லிங் ஹாபரோ மான்லியோ ஏன் வெள்ளவத்தைக் கடற்கரையோ அல்ல...மாறாக ஒரு நிழல் போலே ஞாபகமிருக்கும் பாசிக்குடாக் கடற்கரைக்கு. பூவுக்கு வளர்வதற்குத் தண்ணீர் வேண்டுமே என நினைத்து அலை படும் இடத்தில் நடுகிறேன். அலை பெருக்கெடுத்து வருகிறது. மூழ்கிவிடுவேனோ என்கிற பயத்தில் ஓடிப்போய் பக்கத்தில் உள்ள குகைக்குள் நுழைகிறேன். விளக்குடன் நிற்கும் அம்மா "வெள்ளம் வரமுன் வா" என்று சொல்லி ஆயத்தமாய் வைத்திருக்கும் கயிறொன்றையும் என்னிடம் வீசுகிறா. கயிறு காற்றில் பறந்து போகிறது. அம்மாவையும் காணவில்லை.தனித்து நிற்கிறேன். வெள்ளம் முழங்காலளவு வந்து விட்டது. தப்புவதற்காக உயரே உயரே கால் நோக நோக ஏறுகிறேன்.

குகைக் கூரையில் ஒருவனை நாலைந்து குள்ள மனிதர்கள் இழுத்துக் கொண்டு போகிறார்கள். இறந்து விட்டானாம்.அவன் யாரெனத் தெரிகிறது... படியில் தவறி விழுந்த என் நண்பன். இதோ எட்டிவிடும் என்றபடியே கொஞ்சம் கொஞ்சமாக கைகளை நீட்டி நுனிக்காலில் நின்றுகொண்டு "விளையாட்டுப்போதும்" என்று அவனைத் தட்டியெழுப்ப முயல்கிறேன். . இதென்ன .. அவனைபோலவே எனக்கும் கால் தடுமாறி, மீண்டு வரமுடியாத ஒரு இருண்ட பள்ளத்துக்குள்ளே...

திடுக்கிட்டுக் கண்விழிக்கிறேன்..அப்பாடா..கனவு மட்டுமே!

காதல் தோல்வியா

சனிக்கிழமை படமொன்று பார்த்தேன். பலருக்கும் பல நினைவுகளைக் கிளறிவிட்ட "ஆட்டோகிராஃப்". நல்ல படம்தான். ஆனாலும் ஒரு சின்ன மனவருத்தம். என்னவா? லத்திகாவைக் காதலித்து அது தோல்வி(!?)அடைந்ததினால் சேரன் புகைபிடித்து மது அருந்துவதாகக் காட்டியிருந்தார்கள் தானே. இந்தப்படம் மட்டுமல்ல நிறைய தமிழ்ப்படங்களில் இப்படித்தான் காட்டுகிறார்கள். கொஞ்சம் நெருடலாகக் கூட இருந்தது. காதல் தோல்வியா "பிடி சிகரெட்டை..குடி சாராயத்தை" என்று default ஆக்கப்பட்டிருக்கிறது தமிழ்த் திரைப்படங்களில். அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. கேட்டால் உணமையைத்தானே சொல்கிறோம்..காட்டுகிறோம் என்பார்கள். கொஞ்சம் வித்தியாசமாக யோசியுங்களேன்!! வேறே உதாரணம் காட்டுங்களேன்!!

மது குடித்து/புகைபிடிப்பதால் மனதில் ஏற்பட்ட காயம் ஆறிவிடுமா? சரி..காதல் தோல்வியடைகிறான் கதாநாயகன் என்று வைத்துக் கொள்வோம் - அவன் ஏன் அந்தக் கவலையை மறக்க ஏதாவது உழைப்பைத் தேடிக்கொள்வதாக/செய்வதாகக் காட்டக் கூடாது? அநேகமான கதாநாயப் பாத்திரங்கள் கல்லூரி மாணவர்கள். பகுதி நேர வேலை செய்வது போலக் காட்டலாம் தானே? உடலை வருத்தி வேலை செய்து அதிலே ஒன்றிப் போகின்ற வேளைகளில் மன ஆறுதல் பெறுவதாகக் காட்டலாம் தானே????? இதைப் பார்த்தாவது கொஞ்சம் முயற்சி செய்ய வேணும் என்கிற உந்துதல் இளைஞர்களுக்கு வராமலா போய்விடும்?

நீங்க என்ன நினைக்கிறீங்க?

ஆண்களின் புத்தகம்

கைக்குக் கிடைக்கும்.. கிடைக்கும் என்று நூலகத்திலுள்ள பிரதியை எதிர்பார்த்து அலுத்துப் போய் தள்ளுபடியில் $12.95க்குப் போட்டிருந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். என்ன புத்தகம்? ஆண்டு தொடங்கியது முதல் (ஒரு வேளை அதற்கும் முன்னரே??) தொடர்வண்டியில் 60% பேர் வாசித்த புத்தகம்.

டா வின்சி கோட் தான். பிரபலமான புத்தகம். புத்தகமே வாசிக்காத என் சக பணியாளருக்கே இப்புத்தகத்தைப் பற்றித் தெரிந்திருந்தது. "ஒரு நாளும் நான் வாசிக்க மாட்டேன் : இது ப்ளாஸ்ஃபெமி (blasphemy)" என்று சொன்னா!!

வார இறுதியில் வாசிப்போமென்றால்..எங்கே? நேரம் கிடைத்தால் தானே! வெள்ளிக்கிழமை வாங்கியதை திங்கட் கிழமை தான் வாசிக்க ஆரம்பித்தேன். தொடர்வண்டியில் காலைநேரக் கோழித்தூக்கம் போடும் நேரம் (லிட்கமிற்கும் பேர்வூடுக்கும் இடையிலான 10 - 15 நிமிடம்! ) தவிர மீதி நேரமெல்லாம் இந்தப் புத்தகம் தான். நேற்றுப் பின்னேரம் வண்டியில் வாசித்துக் கொண்டிருந்தேனா..யாரோ தட்டுகிறார்கள் என் தோளில். நிமிர்ந்து பார்க்கிறேன். ஒரு நண்பி. கதைத்துக் கொண்டே பயணம் தொடர்ந்தது.

"என்ன புத்தகம் வாசிக்கிறீங்க"

"டா வின்சி கோட்"

"ஆ??? அப்பிடியெண்டா?"

இந்தப்புத்தகம் பற்றித் தெரியாமல் கூட யாராவது இருக்கிறார்களா! என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் "கிட்டத்தட்ட ஒரு துப்பறியும் கதை மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம்" என்றேன்.

புத்தகத்தை வாங்கி, பின்புறம் திருப்பி பின்னட்டையில் இருந்த கதைச்சுருக்கத்தை வாசித்தா.

"ஆணகளின் புத்தகம் வாசிக்கிறீர்களே"

இப்போது நான் "ஙே!". "ஆண்களுக்குரிய புத்தகமா? அப்படியென்றால்??" விளங்காமல் கேட்கிறேன்...புத்தகங்களிலும் ஆண்களுக்குரியது பெண்களுக்குரியது என்று இருக்கிறதா என்ன!

கேட்டதற்குப் பதிலாக அவ சொன்னது: "இந்த மாதிரிக் கதைகள் ஆண்கள் வாசிப்பதற்குத்தான் உகந்தது. அவர்கள் தான் இதை அதிகம் விரும்புவார்கள். பெண்கள் வாசிக்க எத்தனையோ "நைஸ் சப்ஜெக்ட்ஸ்" புத்தகங்கள் இருக்கின்றனவே".

அந்த " நைஸ் சப்ஜெக்ற்ஸ்" என்னென்ன என்று நான் கேட்கப்போகவில்லை. இந்த மாதிரி ("ஆண்கள்") புத்தகம் எனக்கும் பிடிக்கும் எனச் சொல்லிவிட்டுப் பேசாமலிருந்து விட்டேன்.

படைப்பில்(புத்தகமோ, சலனப்படமோ, ஓவியமோ எதுவென்றாலும்)ஆண்களுக்குரியது பெண்களுக்குரியது என்று வேறுபாடு எங்கிருந்து முளைத்தது?

அலுமினியப்புழு


கொழும்பிலோடும் ஒற்றை டபிள்டெக்கர் போல் - இதுவும்
இரு தட்டில், பலதும் காவும் மனிதர்களைக் காவும்
நல்லவற்றைக் கண்டால் திறந்து கொள்ளும் மனது போல
ஒவ்வொரு நிறுத்தத்திலும் கதவு திறக்கும்,
புதிதாய் உள்வாங்கியும்,
முதல் வாங்கியதில் சிலதைத் துப்பியும் ஆன பிறகு
காது கிழிக்கும் சீழ்க்கை ஒலி தரும் அனுமதியுடன் கதவு பூட்டி
அலுமினியப்புழுப்போல ஊர்ந்து போகும்.

ஈழம்+தமிழர்+போராட்டம்

இலங்கையில் 'தமிழர்' எனப்படுவோர் தென்னிந்தியப் படையெடுப்புகளின் போது இலங்கை வந்து அங்கேயே தங்கிவிட்ட தமிழ்நாட்டவர்கள் என்பது என்னுடன் பணிபுரியும் (முன்னாள் இந்திய ராணுவ) நண்பரின் கருத்து.

அந்நண்பர் இன்றைக்கு என்னிடம் கேட்டார் "உனது பாட்டன் பாட்டி எங்கே.. இலங்கையிலா?"

நான்: "இப்போது அவர்கள் உயிருடனில்லை..என்னுடைய உறவினர்களில் சிலர்தான் அங்கே இருக்கிறார்கள்"
அவர்: "இந்தியாவிலுள்ள உறவினர்களோடு தொடர்பற்றுப் போயிருக்கும் என நினைக்கிறேன்"

எனக்கு முதலில் விளங்கவில்லை & இலங்கைத்தமிழர் பற்றிய அவரது கருத்தையும் மறந்து போயிருந்தேன்.

"எனக்குத் தெரிந்து இந்தியாவில் எங்கள் குடும்பத்தினர் யாரும் மணமுடிக்கவில்லை, அதனால் உறவினர்களும் இல்லை" என்று சொல்லவே, அவர் என்னை ஆமோதித்து "உறவினர்கள் இருந்தாலும் உங்களுக்குத் தெரிந்திருக்காது, சில நூற்றாண்டுகளுகளாயிற்றே இலங்கையில் குடியேறியும்! அதனால் தொடர்புகள் அற்றுப் போயிருக்கும்"என்றார்.

நான் மீண்டும் விளங்கப்படுத்த வேண்டியதாயிற்று - விசயன் வந்து குடியேற முதலே இலங்கையில் மனிதர்கள் இருந்தார்கள். அவர்களது வழித்தோன்றல்கள்தான் நாங்கள் என்று. அவருக்கோ தாளாத ஆச்சரியம்; "உண்மையா" என்று பலதடவை கேட்டுக் கொண்டார்.

பிறகு சொன்னாரே ஒன்று! "அப்படியானால்(அதாவது விசயன் வரமுதல் இலங்கையில் (வடபாகத்திலெல்லாம்) மனிதர்கள் இருந்தபடியால்) பிரபாகரன் செய்வது சரி. புலிகள் சொந்தமல்லாத இடத்தைக் கேட்பதாக நான் நினைத்திருந்தேன்".


இந்த இடத்தில் முகமூடி, எனது ச்சரியான ஹொட்டா இருக்கப்பா! பதிவில் கேட்ட கேள்வி ஞாபகம் வருகிறது. அவர் கேட்டது:

//... ஆரம்பித்த பொழுது இருந்த போராட்ட வீரியம் அடுத்த தலைமுறையினரிடம் அதே அளவு உள்ளதா? (களத்தில் இருப்பவரிடம்... வெளியிலிருந்து ஆதரவு தருபவர்களிடம் அல்ல) //


(எந்தப் போரிலென்றாலும்) களத்திற்குச் சென்றிருப்பவரைப் பற்றிக் கதைக்க எனக்குத் தகுதியில்லை. அதற்குத் தேவையான மனத்திடமும் துணிச்சலும் நினைத்தும் பார்க்க முடியாதவை.

முகமூடியின் கேள்விக்கு எனது அறிவுக்கு எட்டியவரை பதில்:
முதல் தலைமுறை பாராட்டத்தில் குதித்ததற்கான காரணம் எல்லாருக்கும் தெரியும். இளைய தலைமுறைப் போராளிகள் முதல் தலைமுறையினரின் அதே காரணங்களுக்காகவும் அத்துடன் அக்காரணங்களுக்கான போராட்டம் தம்மில்/தம் (குடும்ப /கல்வி /பொருளாதார/இன்னபிற) சூழலில் ஏற்படுத்திய தாக்கங்கள், மாற்றங்களால் உந்தப்பட்டும் களத்தில் குதித்தவர்கள். இரு தலைமுறையினருக்கும் போராட்டத்தின் காரணங்கள் சற்றே வேறுபட்டாலும் போராட்ட வீரியம் சமமானதே. இன்னும் சொல்லப்போனால் இளைய தலைமுறைப் போராளிகளுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்றே எனக்குப் படுகிறது. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

கவிதை...கவிதை!!

எல்லாரும் கவிதை எழுதிறாங்க, நானும் எழுதுவம் என்டு முயற்சி செய்து பாக்கிறன் ..ஒன்டும் வருதில்ல.(முயற்சி இல்லாம வாறதுதான் கவிதை என்டு எனக்கும் தெரியும்..என்டாலும் மேதாவிலாசம் காட்டிற ஆசை யாரை விட்டது!!) இப்ப போன வாரக்கடைசியில் 2 - 3 பெட்டி தேவையில்லாத புத்தகம், சில/பல தாளுகள் என்டு கொஞ்சம் குப்பை (குப்பைதான்) ஒதுக்கியெடுத்து, எறிய முதல் ஆராய்ஞ்சதில ( பெரிய ஹரப்பா அகழ்வாராய்ச்சி என்டு நினைப்பு..உங்களுக்குத் தெரியுமோ, நான் அஸ்கொ பர்போலாக்கு மின்னஞ்சல் அனுப்ப, அவர் பதிலும் போட்டவரெண்டு கொஞ்ச நாள் ஆனந்தக் கூத்தாடி கொண்டிக் கொண்டு திரிஞ்சன். சரி சரி..பெருமைய விட்டிட்டு கதைக்கு..இல்லல்ல கவிதைக்கு வாறன்) என்ன சொன்னனான்..பெட்டிய ஆராய்ஞ்சன் தானே. அதிலே ஒரு சின்ன குறிப்புப் புத்தகத்தில இருந்தது .. ஒஸ்ரேலியாக்கு வந்த புதிசில மனம்/புத்தி பேதலிச்சுப் போய்(இப்பவும் கொஞ்சம் லூஸ்தான்!) எழுதின "கவிதை". ஒரு பகிடி தெரியுமா...எழுதினது 2001ம் ஆண்டு யூலை மாதம் 3ம் திகதி!! சரியா 4 வருசம்.


உணராமல் வழிந்தோடும் மழைநீரைப்போல,

என்னையறியாமல் கால் இயங்கும்

மனம் நிரம்பித் தளும்பி ஞாபங்களால் கலங்கலடைந்து

கடந்து போவோரில் அறிந்த முகம் தேடும்

நிறுத்து போதும்! என்று கடிவாளம் நிகழ்காலம் போட

மனம் இன்னும் இன்னும் எனக் கேட்டு

அடங்காக் குழந்தை போல் அலை மோதும்.


'எழுதின' கவிதாயினி எனக்கே தெரியாது...அதால ஒருத்தரும் என்னெ அர்த்தமெண்டெல்லாம் கேட்கக்கூடாது. ஒன்டு மட்டும் நல்லாத் தெரியுது, அன்டைக்கு நான் பனியில நனைஞ்சிருக்கிறன்!!

ச்சரியான ஹொட்டா இருக்கப்பா!


இன்றைக்கு காலையில் வேலைக்கு வரும்போது தொடர்வண்டியில் கேட்டது:

ஒருவ: ஹா…ய்! எப்ப ஸ்ரீலங்காவிலயிருந்து வந்தனீங்கள்?

மற்றவ: லாஸ்ட் சற்றடே. இன்னும் டயேர்டா இருக்கப்பா.

ஓருவ: அது அப்பிடித்தான் இருக்கும், நேரமும் டிஃபரன்ட் தானே

மற்றவ: ஓம். அங்க போனா ஏளியா முழிக்கிறம். இங்க வந்ததுக்கு இன்டைக்குத்தான் லேட் பண்ணாம வந்திருக்கிறன்.

ஓருவ: ட்ரிப் எல்லாம் எப்பிடி?

மற்றவ: ஐயோ..சன்னுக்கும் டோட்டருக்கும் ச்சரியான ஹாட்(hard) ஆ இருந்தது.

ஓருவ: ஏன்? பிள்ளைகள் அங்கையெல்லோ பிறந்தவை?

மற்றவ:ரெண்டு பேரும் ஸ்ரீலங்கா போண் தான். ஆனாலும் இங்கே வந்து இப்ப 7 இயர்ஸ் ஆகீட்டுது த்தானே. அவை பாவம்.. மொஸ்கிட்டோஸ் தான் ச்சரியா கஷ்டப்படுத்தீட்டுது. பிறகு உள்ள க்றீமெல்லாம் பூசித்தான் நைட்ஸ்ல படுக்க விட்டது.

ஓருவ: சீ.. ஜஃப்னா போன்னீங்களோ?

மற்றவ: ஓமோம், தேவையில்ல என்டுதான் முதல் நினைச்சுக் கொண்டிருந்தனாங்க. ஸன் ச்சொல்லிப் போட்டார் கட்டாயம் போய் தன்ட பழைய ஸ்கூல் எல்லாம் பாக்க வேணுமென்டு. அவற்ற பெஸ்ற்றரிங் தாங்காம ஃபிளை பண்ணினாங்க. ச்சரியான ஹொட்(hot) அங்க. ஊத்தை சரௌண்டிங்ஸ். எங்கட பீப்பிள் எப்ப சேஞ்ச் பண்ணுவினமோ தெரியாது. நான் ச்சொல்லிப்போட்டன் த்றீ டேய்ஸ்தான் நிக்கிறதெண்டு. பிள்ளைகளுக்கு கொஞ்சம் டிஸப்பொயின்மன்ட் ஆக்கிட்டுது. ஜஃப்னா போன நாளிலயிருந்து என்ட ஹஸ்பண்ட் ஒரே ஆகியுமண்ற் – க்ளீன் இல்லை, ஏன் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு போன்னீர் என்டு. அதுக்குள்ள சன்னும் சொல்லுக் கேட்ட பாடில்லை என்ன..போய் கௌ.. கோட்(goat) என்டு உள்ள அனிமல்ஸ் எல்லாத்தையும் அளைஞ்சு கொண்டு.

ஒருவ: இங்கே காணுறேலைத்தானே…அதுதான். ஹொலிடேஸ் என்டாப் பிள்ளைகளை எஞ்சோய் பண்ணவிட வேணும்.

மற்றவ: ஓம், அதுக்காண்டி உள்ள அனிமல்சைத் தொட்டுக் கொண்டோ..உள்ள கேம்போய் அது இதெண்டு எத்தினைய பக் பண்ணிக் கொண்டு போன்னான். அற்லீஸ்ட் புக்ஸை வாசிச்சிருக்கலாம். சன் தான் மோசம். டோட்டர் பாத்துக் கொண்டிருப்பா, கிட்டப் போறேல. என்னை மாதிரி.அவ மாட்டுச் சாணியைக் கண்டதிலயிருந்து அனிமல்சுக்குக் கிட்டப் போறேல்ல. சோ டேட்டி என்டு பேசாமல் இருந்திடுவா. நானும் அப்பிடியே விட்டிட்டன். அங்க என்னப்பா டிவியுமில்ல, கேபிளும் இல்லை..ச்சனத்துக்கு எப்பிடி டைம் போகுதோ. டோட்டருக்கு கட்டாயம் டிஸ்னி சனல் வேணும். அங்க அதுகள் இல்லையெண்டு கூட்டிக் கொண்டு போன என்னில அவக்கு கோவம். கொழும்பு மச் பெற்றர் தான் ஜஃப்னா. நல்ல காலம் போய் ஹொட்டேல்ல ஸ்டே பண்ணினது. இல்லாட்டி இன்னும் ஹார்ட்(hard) ஆ இருந்திருக்கும்.

ஓருவ: எவ்வளவு நாள் நின்டனீங்க?

மற்றவ: 2 வீக்ஸ். பிறகு இண்டியாக்குப் போய் வன் வீக் நின்டனாங்க. இனிமேல் போறதில்லயெண்டு டிசைட் பண்ணீட்டன். அந்த ஹீட், டஸ்ட் எல்லாம் ச்சரிவராது. நல்ல காலம் டோட்டரும் அதையே சொல்லீட்டா. ஐ ஆம் நெவ கோயிங் பக் டு தட் கன்ட்றி என்டு. சன் தான் கேட்டுக்கொண்டிருக்கிறார் திரும்ப ஒருக்கா போகப் போறன் என்டு.


இப்படியே தொடர்ந்த உரையாடலின் முடிவைக் கேட்க முன் நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. இலங்கைக்கு மீண்டும் போக வேண்டும் எனக் கேட்கும் மகனுக்கு என்னென்ன அர்ச்சனைகளோ!

இப்படியும் இருக்கிறார்கள்! வெளிநாடு வந்து 7 வருடத்தில் சொந்த பீப்பிள் க்ளீன் இல்லாமலும், வளர்ந்த சூழல் டேட்டியாகிவிடுகிறதும் என்ன விந்தை!

பெட்டகம்