சேய்மை

முதலில் அம்மா மட்டுமே இருந்தார். அவருக்குள் நான் இருந்தேன். 
 
பிறகு, அவர் அதே ஊரில் வேலைக்குப் போவார், வீட்டில் எம்மியுடன் பத்திரமாய் நானிருந்தேன். 
அம்மா எப்போதும் இருந்தார் - பாடசாலையில் நானும் வைத்தியசாலையில் மருந்தாய் அம்மாவும் இருக்கையிலும், பக்கத்து நகருக்குப் போன போதும், விடுமுறைக்கு எம்மியுடன் போகும் நாட்களிலும், வண்டியேறி அம்மாவுடன் பயணம் போகையிலும். 
 
போர் எங்களூருக்கும் வந்து கதவைத் தட்டிய பொழுதிலும் அம்மா இருந்தார். பிறகு நாங்கள் அந்தச் சிறு தீவின் கிழக்கிலும் மேற்கிலுமாய் ஆனபோதும் எழுவான்கரையில் சூரியனோடு சேர்த்து அம்மாவும் இருந்தார். 
 
தீவின் படுவான்கரையில் மீண்டும் சேர்ந்து கொண்டோம். பதின்மத்தின் அத்தனையையும் நான் காட்ட, அம்மாவாய் மட்டுமே இருந்தார் அம்மா. அவரில்லாமல் -  தந்தைக்கொப்பான அண்ணனுடனே இருந்தாலும் கூட - நான் தவிப்பேன் என்பதை நோர்வேயிலுள்ள ஒரு கிராமமே  நினைவு தெரிந்த என் இருபதுகளின் ஆரம்பத்தில் முதலில் எனக்குச் சொன்னது. காலப்போக்கில் மனதின் அடுக்கொன்றில்  அந்த அறிதல் மறைந்து போயிற்று. அப்பொழுதும் அம்மா இருந்தார்.
 
குட்டித்தீவிலிருந்து அகன்று பெருந்தீவில் வாழ்வு என்றானது. அப்போதும் அம்மா இருந்தார். தொலைபேசியின் மறுமுனையிலும் கணினித் திரையிலும்.. அல்லாத போதுகளிலும்.
நினைவழிவு நோய் அம்மாவைப் பற்றிக் கொள்ள முன்பு இத்தனை இறுக்கமாய் நான் அம்மாவைப் பற்றிக்கொண்டதில்லை என்றே நினைக்கிறேன். அன்பும் பாசமும் இருந்தன. ஆனால் வாழ்க்கை என்முன் விரிந்து கிடந்தது. என்னிலும் 45 ஆண்டுகள் மூத்த அம்மாவுக்கு வயது போகிறது என்பது பற்றிச் சிந்தித்திராத காலம் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். 
 
அம்மா - சுதந்திரமாய்த் தன்னிறைவாய், எல்லாவற்றையும் தானே கவனிப்பவராயும் மற்றவருக்கும் செய்து தருபவராயும் இருந்தார். 
எங்கேயும் பயணிக்கத் தெரிந்த, 
எந்த அலுவலகத்திற்கும் போய் வேலைகளை முடிக்கத் தெரிந்த, 
பயமில்லாத, 
ஊக்குவிக்கிற, 
எல்லாருடைய பிறந்த நாட்களையும் ஞாபகம் வைத்திருந்து வாழ்த்து மடல் அனுப்பும்,
தொலைபேசுகிற, 
யாரையும் அன்புடனே எப்போதும் பார்க்கும் அம்மா கொஞ்சம் கொஞ்சமாய்க் காணாமல் போகத் தொடங்கினார். 180 பாகை மாற்றம். அவரில் தங்கியிருந்த எம்மில் அவர் சார்ந்து கொண்டார். அது புதியதாய் இருந்தது. அம்மா இருந்தார்.
 
என்னத்தை எப்படி எப்போது எங்கே செய்ய வேண்டுமென்று அம்மாவுக்குத் தெரியாமல் போனால் என்ன செய்வது? யோசித்திருக்கிறேன். 
அப்படியே அம்மா அவற்றைத் தெரியாதவரானார். அதுவும் புதியதாய் இருந்தது. அம்மா இருந்தார்.
 
வாழ்க்கையில் சில கேள்விகள் விடாமல் திரும்பத்திரும்பத் தோளில் தட்டும். அம்மா என்னை மறந்து போனால் என்ன செய்வது? இந்தக் கேள்வி என்னைப் பலநாட்கள் துரத்தியபடி இருந்தது. சில நாட்களில் எட்டிப்பிடித்து விடும். சில நாட்களில் அக்கேள்வியை எதிர்கொள்ளாவண்ணம் மனதைத்  திசைதிருப்பி விடுவேன்.  
அப்படியே அம்மா மறந்தும் போனார். அதுவும் புதிதாய் இருந்தது. 
'அம்மாவால் மறக்கப்படுதல்' எனும் பாதைவழியே பயணித்தல் என்பதுவும் விதிக்கப்பட்டதொரு வாழ்வனுபவமாகிற்று. 
அம்மாவே மறந்து விட்டால் குழந்தை என்ன செய்வது? தன்னிரக்கம் வழியும். அம்மாவும் அவரது அன்பும் அரவணைப்பும் ஆறுதலும் அறிவுரையும் தைரியமும் மிகவும் தேவைப்பட்ட காலகட்டத்தை அவையின்றிக் கடந்து கொண்டேன். 
அம்மா இல்லாது போய்க்கொண்டிருந்தார்.. ஆனாலும் இருந்தார்.

எனக்கு மிகவும் பிடித்த 'மொழி பெயர்த்த மௌனம்' கவிதையில் இப்படி எழுதியிருப்பார் கார்த்திக் வேலு: 
"... குழந்தைகளுக்குக் குளிப்பாட்டி, தலை சீவி, 
சட்டை அணிவித்து விடு. 
அவர்களுடன் நடை பயில்.."
தன்னையும் மறந்து காலத்தையும் கடந்து நிகழ்கணத்தில் மட்டும் வாழ்ந்திருந்த அம்மாவுடன் அதைத்தான் செய்தேன். மணிமுடி போன்றும் காதணிகளாயும் பூக்களை அவருக்கு அணிவித்தேன். அவர் அதுவரை ஒருபோதும் இட்டிரா மருதோன்றியையும்.
அதுவும் புதிதாக இருந்தது.  
அம்மா இல்லாதிருந்தார். ஆனாலும் இருந்தார்.
 
நடவாது போனார். படுக்கையிலானார். கையைத் தடவிக் கொடுத்தும், காலுக்கு எண்ணெய் பூசியும், பலருக்கு மருந்தாகவே இருந்தவரின் புண்ணுக்கு மருந்திட்டும், என்ன பேசுவதென்று தெரியாத பகல் வெக்கைப்பொழுதுகளில் சும்மா செல்லம் பொழிந்தும், சில நேரங்களில் வெறுமே கையைப் பற்றியபடியே உறங்கிப் போயும் அவர் அருகிருந்தேன்
புறப்படும் போது கொஞ்சிச் சொன்னேன் "கஷ்டப்படாதீங்க. போகோணுமெண்டா போங்க". 
அப்போதும் இருந்தார்.
 
வழியனுப்பிய போதில், தளைகளற்று, பேரன்பில் திளைத்திருக்கின்றார் அம்மா என்பது போலவும் ஏதோ அடுத்த கட்டத்திற்கு மெதுவாய் நகர்ந்திருக்கிறார் போலவும் தோற்றிற்று. இன்னும் இருக்கிறார் என்பதாய். 
 
அம்மா இல்லாமல்தான் இருந்தார்.. ஆனால் இருந்தார். அம்மா இல்லாது இருத்தல் என்பது புதினமான ஒன்றாக இருக்கிறது. மனம் துழாவுகிறது. பாதுகாப்பாய் உணரக்காணோம். அரண் இருந்த இடம் வெற்றிடமாய் வெறுமையாய் இருப்பது, பெயரறியா உணர்வுகளையும் சேர்த்து மிகவும் புதிதாய் அந்தரிப்பாய் அந்நியமாய் ஒண்ணாமல் இருக்கிறது.
அம்மா காணாமற்றுப் போய்விட்டார். 
இப்போ, சட்டை அணிவித்துத் தலைசீவிப் பூ வைத்துவிட அம்மா இல்லாமல் நான் என்ன செய்யட்டும்?   

என் அரசி

இன்றைக்கு அம்மாவின் 92ம் பிறந்தநாள்.  மற்றைய ஆண்டுகளை போலல்லாது முதல்முறையாக அம்மாவுக்குரிய வாழ்த்தை நான் மனத்திற்குள்ளே சொல்லிக்கொண்டேன். அவருக்குப் போய்ச் சேர்ந்திருக்கும்.  

பூவுலகில் அவரில்லை. ஆனாலும் நிறையப்பேரின் மனங்களில் வாழ்கிறார். கடந்த மாதம் ஏறாவூரில் நடந்த நினைவேந்தல் அதற்கு நல்லதோர் உதாரணம். வேலையொன்றைக் குறிப்பிட்டு, அதனைச் "செய்து தர இயலுமா" என்றே   பணியாளர்களிடம் கேட்கிற அம்மா, தன் விளையாட்டுப் பொருள்களாகிய வெற்றுக் குளிசை டப்பாக்களையும் சேலைன் போத்தல்களையும் பெற வேண்டிச் சில மாதங்களுக்கொருமுறை காய்ச்சலால் பீடிக்கப்படும் சிறுவனை அரவணைத்துப் பேசும் அம்மா, அம்மாவே மருந்து என நம்பும் உம்மாக்கள், போர்க்காலத் தட்டுப்பாட்டில், நோயாளர்களுக்குச் சுற்றுச்சூழலில் கிடைப்பதை வைத்துச் சிறப்புறச் சேவை செய்த அம்மா, அம்மாவைக் கண்டதும்  இரத்தம் படிந்த ஆயுதங்களைத் தாங்களாகவே கீழே போடும் /மடித்துக் கட்டிய சாரத்தைத் தழைய விடும் ஊரின் கத்தி/வாள் வீசும் 'வீரர்கள்' என்ற கோணங்களில் அம்மாவைப் பார்த்தோம். 

யாருமறியா இரவு மழைக்குக் காலைப் பூந்தோட்டம் சாட்சி என்று ரூமியின் கவிதை சொல்லும்.

எங்கள் ஊர். எங்கள் அம்மா.

அவருக்கு ஏறாவூர் மீதிருந்த அன்பு தெரியும். அப்படியே அம்மா மீது ஏறாவூருக்கும் என்று தெரியும், ஆனால் அது எந்தளவில் என்பதனை  நானோ  ஏன் அண்ணாவோ கூட நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது என்றே சொல்வேன். அன்றைக்கு ஏறாவூரின் சிம்மாசனமேறி அமர்ந்திருந்தார் அம்மா. பெயரிலும் 'ராணி' அல்லவா. 

அம்மா ஒரு ஆளுமை என்று நினைத்ததே இல்லை. ஆனால் இப்போது அது தெள்ளத்தெளிவாய் இருக்கிறது. அன்பும் அரவணைத்தலும் அவரது தனிப்பண்புகள். ஒரு நிபுணர்/திறமைசாலி ஒரு செயலைச் செய்யும் போது அது எளிதாக, 'இவ்வளவு தானா' என்பது போலத் தோன்றி, நாம் முற்படுகையில் கடினமாக இருக்குமல்லவா, அப்படித்தான் இவையும். அம்மாவுக்கு யார் எவர் என்று இல்லை, எல்லாரும் ஒன்றுதான். ஒத்து வரவில்லையா/அவர்களுக்கு விளங்கவில்லையா, பரவாயில்லை, அவர்களுக்கு நல்லது நினைத்து அப்படியே விட்டுவிடு என்பார். அதெப்படி என்றால் மிகவும் லேசான விஷயம் என்று பதில் வரும். 

எல்லாரிடமும் அன்பு காட்டவோ எல்லோரையும் அப்படியே நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்ளவோ  நம்மில் அனேகரால் முடிவதில்லை. என்னதான் முயன்றாலும் முட்டி மோதினாலும் அதில் இன்னும் நான் போவதற்கு நிறைய் ...யத் தூரம் இருக்கிறது. என்னைக் குறித்து அம்மா ஏமாற்றமடைந்து விடக்கூடாதே என்று தான் இப்போதெல்லாம் யோசிக்க வருகிறது. அப்படி இருப்பது உதவியாகக் கூட இருக்கிறது என்று சொல்லலாம். பிந்தித்தான் யோசிக்க நேர்ந்தாலும் சற்றாவது யோசிக்கிறேன் என்பது புரிகிறது.

வாழ்தல் என்பது எப்படி என்று  ஆற்றுப்படுத்தியிருக்கிறார். வாழலாம். 

பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா.   

  

 


காத்திருத்தலின் நிறம்

ஒரு பூ மதில் மேல் இருக்கிறது. இளவெயில் கொண்ட  ஒரு மாலைப்பொழுதோடு  கை கோர்த்தபடி புன்னைகையைப் பேசுகிறது அந்தப் பூ. தனதென்றோ இல்லையென்றோ சொல்லிவிட முடியாதவொன்றிற்காய் இதழ் விரிக்கிறது. குளிர்ந்த கைகளால், இதழ்களால்  என்று சொல்ல வேண்டுமோ.. காற்றை அளைகிறது. சொல்லித் தீர்க்க முடியாததொரு உணர்வில் ஒரு fado பாடலைப் போலத் திளைக்கிறது.

அரவணைப்பையும் புறக்கணிப்பையும் அறிந்த உணர்ந்த பூ அது. எத்தனை புறக்கணித்தாலும் அரவணைப்பை மட்டுமே பதிலாய்த்தர தர அது விழைகிறது. எரித்தாலும் பதிலுக்குக் குளிர்விக்கத்  தயங்காதது. எல்லாமறிந்த காற்றை மென்மையாய் ஏந்துவது. 

முற்றுப் பெறாதவொரு உரையாடலின் முழுமையற்ற ஞாபகம் அந்தப் பூ எதிர்பாராதவொரு கணத்தில் எங்கோ அடியாழத்திலிருந்து முகிழ்க்கின்றது . அதன் மீதியைத் தேடி,  பிரவகிக்கிற  எல்லா   நதிகளிலும் பூ நீந்துகிறது. மூழ்குகிறது. நதியை அறிந்து மீன்களோடும் பாசியோடும் கூழாங்கற்களோடும் கரையுமல்லாத நதியுமல்லாத சகதியோடும் தோழமை கொள்கிறது. அவை தம் ரகசியங்களைப்  பகிர்ந்து கொண்ட பிறகு பூ கரையேறுகிறது. இருந்த ஞாபகத்தையும் அந்த முடிவு காணா உரையாடலையும் ஒவ்வொரு நதியும் மறக்காமல் எடுத்துக்கொண்டு போய்விடுகிறது. பூவின் நிறத்தையும் கூட. 
 
ஒரே வாத்து எல்லாக்கரைகளிலும் பவழமல்லியை மிதித்துக்கொண்டு சிறகு உலர்த்தியபடி நடை பயில்கிறதை ஓரக்கண்ணால் பார்த்தபடி ரகசியங்கள் தொடர்ந்து இழைக்கப்படும் துண்டினால் தலை துவட்டிக் கொள்கிறது பூ.

நதி கழுவிக் கொண்டு போய்விடுகிற வண்ணத்தை மழை அழைத்துவரும் வானவில் மீண்டும் பூவுக்குப் பூசி விடுகிறது. எங்கும் சரியாய்ப் பொருந்தியிருந்தாலும்  ஞாபகம் முழுமையற்ற இடத்தில் மட்டும் வண்ணம் இருப்பதில்லை. பவழமல்லி மணக்கிற அவ்விடத்தில்தான் வண்ணத்தை விழுங்குகிற ஒரு வாத்தின் இறகின் தடமும் இருக்கிறது. ஆனாலும் அதனால் விழுங்கமுடியாத நிறமொன்றும்  உள்ளது. அது, காத்திருத்தலின் நிறம்.

காத்திருத்தலின் நிறம்  நீலம்; அதன்  நடனம் தாண்டவம். எனக்குத் தெரிந்த வரை.  
பூ காத்திருக்கிறது. நீல நிறத்தில். அருளல் ஆரம்பிக்கிற கணத்துக்காய். எப்போதும்போலவே எல்லாமுமாய்க் கூடவே  இருக்கிறது மழை.

ஒளித்தலும் வெளித்தலும்

 

காலை. யன்னற் கண்ணாடியோரம் அமர்ந்திருந்தேன். உள்ளங்காலைச்  சூடாக்கிய வெய்யில் கண்ணாடிக்கு வெளியேயிருந்த சிறு செடியின் இலைகளின் நிழல்களோடு சேர்ந்து என்மீது ஓடிப்பிடித்தும் கணுக்கால் முழங்கால் என்று ஏறியும் விளையாடியது. காலை வெய்யில்தான் எத்தனை இதமானது. கண்ணாடிக்கு அப்பாலிருந்த செடிக்கு சில யானாக்களைத் தொடுத்தது போல வளைந்து வளைந்து செல்லும் விளிம்பு கொண்ட இலைகள். அந்தப் பசிய இலைகளில் பட்டு, இதோ தொட்டு உணர்ந்து விடலாம் என்பது போல ஊறியிருந்தது மஞ்சள் வெய்யில். அவற்றின் மிக மெல்லிய நரம்புகள் கூட அப்படியே தெரிந்தன. சில இலைகளுக்குக் கொஞ்சமே வெய்யில் கிடைத்தது. கிடைத்தளவிற்குத தங்களைக் காட்டிக் கொண்டன அவை.  

மனிதர்களைப் பற்றி நினைத்தேன். இந்த இலைகளைப் போலத்தான் அவர்களும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுகிறார்கள். தம்மை வெளிப்படுத்துகிறார்கள். இரகசியங்கள் எல்லாரிடமும் இருக்கின்றன. 

அன்பும்.

மலர்தல்


எழுதுவதற்கெனக் காலையில் யோசித்து வைத்திருந்ததை ஓரமாய் வைத்துவிட்டு வேறொன்றைக் கையில் எடுத்திருக்கிறேன். புதிதில்லைத்தானே.

இங்கே ஒரு தோழி இருக்கிறார். எதிர்பார்த்தேயிருக்காத விதத்தில் வாழ்க்கை எங்கள் கொஞ்சப் பேருக்குச் சேர்த்து ஓங்கி ஒரு அறை விட்ட தருணத்தின் அடுத்தடுத்த நாட்களில் நாம் சந்தித்தோம்.  என் பெயரில் எனக்கு என்னைத் தவிர்த்தே இருபதுக்கும் மேற்பட்டோரைத் தெரியும் என்பதால் அரிய பெயர்களில் பெருவிருப்புண்டு. அவர் பெயரில் அவரை மட்டுமே நான் அறிவேன். உதிக்கும் சூரியனின் பெயர் கொண்டவர். நாங்கள் சூரியோதயம் காண்பதற்காக அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் கூட வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறோம். போன ஆண்டின் அநேக வார இறுதிகளை இப்படியான காலை அழகாக்கியது. வேறு இருவரும் வருவார்கள் - மாறி மாறி. ஆனாலும் அதிகம் இவரே. தன்னைத் தானே சந்திக்க அவரை நான் அழைத்துச் செல்கிறேன் என்கிற என் மொக்கை நகைச்சுவையையும் பொறுத்துக் கொண்டு வருவார். அலைவரிசை மிகவும் ஒத்துப் போகும். பேசாது கழிகின்ற பொழுதுகள் கூட இயல்பாகவே இருக்கும். பேச ஒன்றுமில்லாவிட்டால் அந்தரித்துப்போய் ஏதோவொன்றை யோசித்துத் தேடியெடுத்துப் பேசவேண்டிய தேவையொன்றை மனம் உணராமல் இருப்பது எத்தனை சுகம்! என்னவொரு வரம்! அது எங்களுக்கு வாய்த்திருக்கிறது.

கொஞ்சநாள் பரவாயில்லாமல் இருந்துவிட்டுத் திரும்பவும் பழைய பள்ளங்களுக்குள் போகிற மாதிரித்தான் கடந்த சில கிழமைகள் கழிகின்றன. மீள்தல் என்பது விக்கிரமாதித்தனையும் வேதாளத்தையும் ஒத்தது. மடுவுக்குள் மனம் கிடக்கிறதென்பதைப் புறச்சுட்டல்களின்றிக் கண்டு கொள்ளல் என்பதுவே ஒரு பெரிய படிதான். பிறகு தீர்மானித்துக் கொள்ளவேண்டியது கிடப்பதா எழும்புவதா என்று. கிடக்கத்தான் சொல்லும்.. அதுவும் எழுவதற்குத் தேவைப்படும் பலத்தையும் தொடர்முயற்சியையும் உணர்ந்த பிறகு, இன்னும் உரக்கச் சொல்லும்.. "கிட .. கஷ்டம்.. எதற்கு.. யாருக்காக.. ஏன்.. பலனில்லை..". இப்படிப் பல சொல்லும் அதே மனம்தான் விக்கிரமாதித்த முயற்சிகளுக்கு அடிப்படையாக 'எனக்காக' என்றும் கத்தும். அந்த ஒரு சொல்லுத்தான் ஊறும் முதல்  ஈரம். அப்படித்தானே எந்தப் பெரிய ஆறு(வது)ம் தொடங்குகிறது.

நிறைய நாட்களுக்குப்பின் போன கிழமை நீண்டதூரம் போகலாம் என்று நடக்கச் சென்றேன். வேனிற்காலம். பூத்துக் குலுங்கியும் கொட்டியும் எங்கும் அழகு கடை பரப்பி இருந்தது/இருக்கிறது. அதிலும் ஜக்கராண்டா என்கிற, ஊதாப்பூக்கள் கொண்டதொரு மரம் நான் நடக்கப் போன பகுதியில் நிறைய. சிட்னியில் இக்காலம் இந்த மரத்தின் பூத்திருவிழாவுக்குப் பெயர் பெற்றது. அன்றைக்கு 4 மணித்தியாலங்கள் மட்டுமே நடந்திருப்பேன். இளவெயிலும் குளிர்காற்றும் பூக்களும் மதில் மேலிருந்தபடி என்னைக் கண்ணெடுக்காமல் பார்த்திருந்த பூனையும் மனதை ஆற்றின. நடுவில் ஒரு பூங்காவில் ஊஞ்சலுமாடி, கம்பிவேலிக்கு அப்பால் இருந்த ஒரு செடி வகையையும் அதன் பூக்களையும் ரசித்து, வீசிய காற்றினால் அவற்றைக் கலங்கலில்லாமல் படமெடுக்க முடியாமல் கண்ணிலும் மனதிலும் மட்டும் தேக்கியெடுத்த பின் அந்த குளத்துக்குக் கிட்ட வந்து சேர்ந்தேன். தோழிதான் மனதில் வந்தார். அவருக்கும் பிடிக்கும் என்று தோன்றிற்று. 

தோழியைச் சந்திக்கும் வாய்ப்பு ன்றைக்கு அந்தக் குளத்துக்குக் கிடைத்தது.  அவர் குரலை மட்டுமே  கேட்டிருந்தாற் கூட அறியலாம் அவர் எத்தனை வியந்தும் மகிழ்ந்தும் அந்தக் குளத்திலிருந்த தாமரைகளைப் பார்த்தார் என்பதை. எனக்கு ஒலி-ஒளி இரண்டுமே கிடைத்தன.

உதிக்கும் சூரியனைப் பார்த்து மலரும் தாமரையைத் தெரியும். மாறி நடந்ததை இன்று நான் கண்டேன். மலர்கின்ற சூரியன் என்ன்ன்ன அழகு தெரியுமா?

குவளையைத் தாண்டி வழிகிறது வாஞ்சை

காலையில் மனதில் வருவதையெல்லாம் எழுதுமொரு பழக்கத்தை சில கிழமைகளாகக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கும் எழுதிக்  கொண்டிருக்கையில் தற்செயலாக நிமிர்ந்தபோது என் கண்ணிற்  பட்டது. என்  வழமையான குவளைதான். அறைக்குள் அதை எடுத்து வருவது மிகக்குறைவு. எப்படியோ இன்றைக்கு என்னுடன் கூடவே வந்து  விட்டது. ஒவ்வொரு நாளும் பாவிப்பதுதான்.. ஆனால் பலநாட்களாக நான் நினைத்துச் சுவைக்காத ஒன்றை அது இன்றைக்கு மீட்டியது. 


மனவழுத்தமும் உடைவும் நெருங்கிய இரு இளையோர்களின் இறப்பும் 2019 இனை மறக்க முடியாத ஆண்டாக மாற்றியிருந்தன. அவுஸ்திரேலியாவில் 'granny flat ' என்று சொல்லப்படும் வீட்டோடு (பெரும்பாலும்)இணைந்த ஒரு பகுதியில் குடியிருந்தேன். அந்தச் சிறுவீடு வசதி மிக்கது. வெளிச்சம் மிக்கது. படுக்கையறையின் உட்கூரை சாதாரணமாக இங்கு  இருப்பதை விட உயர்ந்தது. 'பெரிய' வீட்டையும் என் பகுதியையும் ஒரு  கதவுதான் பிரிக்கும். இந்தப்பக்கம் ஒரு சீவன்.  மற்றப்பக்கம் 3 சீவன்கள். அவற்றில் ஒன்றிடம் என்னைச்  சனி ஞாயிற்றுக்கிழமைகளில் எழுப்பும் அலாரம் இருந்தது. கட்டிலில் எழும்பி இருந்து என் கால் நிலத்தில் பட்டவுடன் அலாரம் ஓய்ந்துவிடும். அதற்கு நாலுகாலும் ஒரு வாலும்  என்று சொல்லத் தேவையில்லைத்தானே? நான் எழும்பி விட்டேன் என்று எப்படித்தான் தெரியுமோ...வீட்டில் மற்ற இருவரும் இந்த நாலு கால் ஆளின் மனிதப் பெற்றோர் - ஹானியே (அம்மா) +ஆதில் (அப்பா).  நன்றாகத்தான் எல்லாம் இருந்தன. 2020 மார்ச் மாதம் ஆதில் என்னிடம் வந்தான். நான் வசிக்கும் பகுதியில் இன்னும் ஒரு மாதத்தில் குழந்தைப் பராமரிப்புச் சேவையைத் தொடங்க முடிவெடுத்திருப்பதால் எனக்கு ஒரு மாதம் தவணை தர வந்திருந்தான். அந்தரப்பட்டுச் சொல்வது புரிந்தது. நானும் ஓம், பிரச்சனையில்லை இடம் பார்க்கிறேன், சங்கடப்படாதே என்று சொல்லி அனுப்பினேன். பிறகு ஒரு இருபது நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்து கதவைத் தட்டி, "உன்னை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வீட்டில் ஒரு அறையில் நீ வாடகைக்கு இருக்கலாம், இப்போதுள்ள பகுதியினைப் பிள்ளைகள் இல்லாதபோது பாவித்துக்கொள்" என்றும் சொன்னான். கொஞ்சநாள் இருந்து பார்த்துவிட்டு எனக்குச் சரிப்படவில்லையென்றால் நான் வேறிடம் பார்ப்பதென்று முடிவெடுத்தேன். ஒத்துக்கொண்டான்.

இரண்டு கிழமைகளின்பின் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய வேண்டி வந்தது. கோவிட். முதல் மூன்று வாரங்களும் பகலிலே அந்தப்பக்கம் திருவாளர் நாலுகால் ஒருவால் சார்லியும் இந்தப்பக்கம் இரண்டுகால் நானுமாய் இருந்தோம். தெருவில் போகிறவர்களை பார்த்து அவன் குரைக்க அதனால் அவன் மீது நான் குரைக்க என்றும் (தனிமையினால் ஏற்படுகிறது என்று நான் உணர்ந்து கொள்ளாத) ஒரு வித அரியண்டமான உணர்வு என்றும் வேலையோடு சேர்ந்து நிரம்பின பொழுதுகள்.

முதலில் வந்தவள் ஸோயி. இரண்டு வயது. இந்தோனேசியப் பெற்றோர். இளஞ்சிவப்பு நிறம் மட்டுமே கொண்டவை அவளது ஆடைகள். நிறத்தின் கடுமை கூடிக்குறையுமே தவிர மாறவே மாறாது. அப்பா காலையில் அழைத்து வருவார். கத்தியழுது வழியனுப்புவாள். பிறகு ஹானியேவை ஒரு நாய்க்குட்டியைப் போலத் தொடர்ந்தபடி இருப்பாள். காலை விளையாடி, மதியம் சாப்பிட்டுத் தூங்கி எழுந்து மறுபடியும் விளையாடி முடித்துக் கொறிப்புக்கள் சாப்பிட்டு ஹானியேவுடன் வண்டியில் ஏறித் தன் வீடு செல்லும்மட்டும் என்னைப்  பார்ப்பாள் அன்றிப் பேச மாட்டாள். என்னுடன் பேச நிறைய நாட்கள் எடுத்தது அவளுக்கு. பிறகு இழுத்து வைத்துக் கதை சொல்வாள். வேறு எவரோடும் பேசக்கூட முடியாது.

இவளுக்குப் பின் வந்தாள் ஏழு மாதத்து ஆர்ட்டமிஸ் - பாரசீகத்து ஹானியேவின் மருமகள். பெயரைத் தட்டச்சும் போதே ஒரு பென்னாம் பெரிய புன்னகை விரிகிறது - முகத்திலும் நெஞ்சிலும். அடுத்த மாதம் வந்தது ஒரு வயதுடைய லூனா. நிலா. லெபனானும் இத்தாலியும் அவள் பூர்வீகத்தில். அழகிய பெரிய கண்கள். அடர்ந்து நீண்ட இமை. வாரத்தில் இடைவெளி விட்டு இரண்டு நாட்கள் மட்டுமே வருவாள். முதலிரண்டு நாட்கள் வீறிட்டு அழுது சிவந்த கண்களும் நனைந்து ஒட்டிய  இமைமயிர்களும் கமறிய குரலும் இன்னும் ஞாபகமிருக்கின்றன. இரண்டு பைகள் வைத்திருந்தாள். அணிந்துகொள்ளும் தூங்கும் பைகள்.

இப்படி ஒவ்வொருத்தராய் இன்னும் சிலரும் என் தோட்டத்துக்குள் புதிது புதிதாய்ப் பூத்தார்கள்.

அவர்கள் நித்திரை கொள்ளும் அறையாகிய என் முன்னாள் படுக்கையறைக்கு ஒரு அகன்ற வழுக்கிக் கதவு (sliding door ) இருந்தது. அதன் நிலையான கண்ணாடிக்கருகில் என் மேசை. இரண்டு தொட்டில்களையும் காணாதவண்ணம் சேணம் கட்டியது போல இருக்க வேண்டும். தப்பித் தவறிப் பார்த்துவிட்டால் போதும். கைகளைத் தூக்கிக் கொண்டு ஒரு மயக்கும் சிரிப்பை அள்ளித் தெளித்தபடி சிறை மீட்கச் சொல்வார்கள். மீட்காவிட்டாலும் மன்னித்தருளுவார்கள்.

ஒரு நாள், முதல் பந்தியில் சொன்ன என் குவளையில் இருந்ததெல்லாம் தீர்ந்து போக அதை நிரப்புவதற்காய் எழ முற்பட்டேன். அப்போதுதான் எழும்பி இருந்த லூனா ஒளிரும் என் திரையைத் தொட்டிலில் சட்டத்தைப் பிடித்தபடி நின்று பார்ப்பதைக்  கண்டேன். அப்படித்தான் நினைத்தேன். ஒள என்றாள். எனக்கு விளங்கவில்லை. திரையைப் பார்த்தேன். எக்ஸெல் என்னைப் பார்த்தது. குவளையைக் கையில் எடுத்ததும் அதைக் காட்டி மீண்டும் ஒள என்றாள். என்னடா இது வடிவேலுக்கு வந்த போட்டி என்று நினைத்துக் கொண்டது ஞாபகமிருக்கிறது. நீருக்குரிய அவளது சொல்லுமல்ல அந்த ஒள. அவள் மீண்டும் சொன்ன போதுதான்  எனக்கு ஓடி வெளித்தது அவள் குவளையில் குடியிருக்கும் ஆந்தைகளைச் சொல்கிறாள் என்று(owl). அந்தக் குவளையின் வெளிப்புறம் முழுதிலும் இருபத்திச் சொச்ச ஆந்தைகளும் பலவண்ண இலைகளும் மரக்கிளைகளில் அசையாதிருக்கின்றன.

அவ்வாந்தைகளுக்கு அன்று அதியற்புதமானதொரு நாள். நிலவு அவற்றைத் தொட்டது. ஒள ஒள என்று கண்கள் விரிய தன் பட்டான சுட்டுவிரல் கொண்டு ஒவ்வொன்றாய் அடையாளம் கண்டு அன்பைப் பூசியது. நிலவு தடவித்தரும் என்று எந்த ஆந்தைதான் யோசித்திருக்கும்?

ஆறும் மீனும்


எங்கோ ஒரு தொட்டியிலிருந்தபடி ஆற்றைக் கனவு காண்கிறது மீன்.
மழையைக் கரைத்தும் படுகையை வளைத்தும் 
ஆற்றை நீட்டிக்கும் மீன் அறியாததல்ல
ஆறு கடல் சேரும் நியதி.
நீச்சலில் அதன் அழகும்
செதிலிடுக்கில் அதன் வெம்மையும் என 
ஆற்றைக் கொண்டலைகிறது மீன்.
வெயில் தொட்டு ஆவியாகிற  ஆற்றையும் 
அது சேரப்  போகிற கடலையும்  கனவில் கேட்டு விதிர்க்கிறது.
கலைந்த கனவில் சுழித்தோடுகிறது அதன் ஆறு.

பெட்டகம்