சேய்மை
வகை: இன்றைய தருணம்
என் அரசி
இன்றைக்கு அம்மாவின் 92ம் பிறந்தநாள். மற்றைய ஆண்டுகளை போலல்லாது முதல்முறையாக அம்மாவுக்குரிய வாழ்த்தை நான் மனத்திற்குள்ளே சொல்லிக்கொண்டேன். அவருக்குப் போய்ச் சேர்ந்திருக்கும்.
பூவுலகில் அவரில்லை. ஆனாலும் நிறையப்பேரின் மனங்களில் வாழ்கிறார். கடந்த மாதம் ஏறாவூரில் நடந்த நினைவேந்தல் அதற்கு நல்லதோர் உதாரணம். வேலையொன்றைக் குறிப்பிட்டு, அதனைச் "செய்து தர இயலுமா" என்றே பணியாளர்களிடம் கேட்கிற அம்மா, தன் விளையாட்டுப் பொருள்களாகிய வெற்றுக் குளிசை டப்பாக்களையும் சேலைன் போத்தல்களையும் பெற வேண்டிச் சில மாதங்களுக்கொருமுறை காய்ச்சலால் பீடிக்கப்படும் சிறுவனை அரவணைத்துப் பேசும் அம்மா, அம்மாவே மருந்து என நம்பும் உம்மாக்கள், போர்க்காலத் தட்டுப்பாட்டில், நோயாளர்களுக்குச் சுற்றுச்சூழலில் கிடைப்பதை வைத்துச் சிறப்புறச் சேவை செய்த அம்மா, அம்மாவைக் கண்டதும் இரத்தம் படிந்த ஆயுதங்களைத் தாங்களாகவே கீழே போடும் /மடித்துக் கட்டிய சாரத்தைத் தழைய விடும் ஊரின் கத்தி/வாள் வீசும் 'வீரர்கள்' என்ற கோணங்களில் அம்மாவைப் பார்த்தோம்.
யாருமறியா இரவு மழைக்குக் காலைப் பூந்தோட்டம் சாட்சி என்று ரூமியின் கவிதை சொல்லும்.
எங்கள் ஊர். எங்கள் அம்மா.
அவருக்கு ஏறாவூர் மீதிருந்த அன்பு தெரியும். அப்படியே அம்மா மீது ஏறாவூருக்கும் என்று தெரியும், ஆனால் அது எந்தளவில் என்பதனை நானோ ஏன் அண்ணாவோ கூட நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது என்றே சொல்வேன். அன்றைக்கு ஏறாவூரின் சிம்மாசனமேறி அமர்ந்திருந்தார் அம்மா. பெயரிலும் 'ராணி' அல்லவா.
அம்மா ஒரு ஆளுமை என்று நினைத்ததே இல்லை. ஆனால் இப்போது அது தெள்ளத்தெளிவாய் இருக்கிறது. அன்பும் அரவணைத்தலும் அவரது தனிப்பண்புகள். ஒரு நிபுணர்/திறமைசாலி ஒரு செயலைச் செய்யும் போது அது எளிதாக, 'இவ்வளவு தானா' என்பது போலத் தோன்றி, நாம் முற்படுகையில் கடினமாக இருக்குமல்லவா, அப்படித்தான் இவையும். அம்மாவுக்கு யார் எவர் என்று இல்லை, எல்லாரும் ஒன்றுதான். ஒத்து வரவில்லையா/அவர்களுக்கு விளங்கவில்லையா, பரவாயில்லை, அவர்களுக்கு நல்லது நினைத்து அப்படியே விட்டுவிடு என்பார். அதெப்படி என்றால் மிகவும் லேசான விஷயம் என்று பதில் வரும்.
எல்லாரிடமும் அன்பு காட்டவோ எல்லோரையும் அப்படியே நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்ளவோ நம்மில் அனேகரால் முடிவதில்லை. என்னதான் முயன்றாலும் முட்டி மோதினாலும் அதில் இன்னும் நான் போவதற்கு நிறைய் ...யத் தூரம் இருக்கிறது. என்னைக் குறித்து அம்மா ஏமாற்றமடைந்து விடக்கூடாதே என்று தான் இப்போதெல்லாம் யோசிக்க வருகிறது. அப்படி இருப்பது உதவியாகக் கூட இருக்கிறது என்று சொல்லலாம். பிந்தித்தான் யோசிக்க நேர்ந்தாலும் சற்றாவது யோசிக்கிறேன் என்பது புரிகிறது.
வாழ்தல் என்பது எப்படி என்று ஆற்றுப்படுத்தியிருக்கிறார். வாழலாம்.
பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா.
வகை: இன்றைய தருணம்
காத்திருத்தலின் நிறம்
அரவணைப்பையும் புறக்கணிப்பையும் அறிந்த உணர்ந்த பூ அது. எத்தனை புறக்கணித்தாலும் அரவணைப்பை மட்டுமே பதிலாய்த்தர தர அது விழைகிறது. எரித்தாலும் பதிலுக்குக் குளிர்விக்கத் தயங்காதது. எல்லாமறிந்த காற்றை மென்மையாய் ஏந்துவது.
முற்றுப் பெறாதவொரு உரையாடலின் முழுமையற்ற ஞாபகம் அந்தப் பூ எதிர்பாராதவொரு கணத்தில் எங்கோ அடியாழத்திலிருந்து முகிழ்க்கின்றது . அதன் மீதியைத் தேடி, பிரவகிக்கிற எல்லா நதிகளிலும் பூ நீந்துகிறது. மூழ்குகிறது. நதியை அறிந்து மீன்களோடும் பாசியோடும் கூழாங்கற்களோடும் கரையுமல்லாத நதியுமல்லாத சகதியோடும் தோழமை கொள்கிறது. அவை தம் ரகசியங்களைப் பகிர்ந்து கொண்ட பிறகு பூ கரையேறுகிறது. இருந்த ஞாபகத்தையும் அந்த முடிவு காணா உரையாடலையும் ஒவ்வொரு நதியும் மறக்காமல் எடுத்துக்கொண்டு போய்விடுகிறது. பூவின் நிறத்தையும் கூட.
நதி கழுவிக் கொண்டு போய்விடுகிற வண்ணத்தை மழை அழைத்துவரும் வானவில் மீண்டும் பூவுக்குப் பூசி விடுகிறது. எங்கும் சரியாய்ப் பொருந்தியிருந்தாலும் ஞாபகம் முழுமையற்ற இடத்தில் மட்டும் வண்ணம் இருப்பதில்லை. பவழமல்லி மணக்கிற அவ்விடத்தில்தான் வண்ணத்தை விழுங்குகிற ஒரு வாத்தின் இறகின் தடமும் இருக்கிறது. ஆனாலும் அதனால் விழுங்கமுடியாத நிறமொன்றும் உள்ளது. அது, காத்திருத்தலின் நிறம்.
காத்திருத்தலின் நிறம் நீலம்; அதன் நடனம் தாண்டவம். எனக்குத் தெரிந்த வரை.
வகை: இன்றைய தருணம் , கிறுக்கினது
ஒளித்தலும் வெளித்தலும்
காலை. யன்னற் கண்ணாடியோரம் அமர்ந்திருந்தேன். உள்ளங்காலைச் சூடாக்கிய வெய்யில் கண்ணாடிக்கு வெளியேயிருந்த சிறு செடியின் இலைகளின் நிழல்களோடு சேர்ந்து என்மீது ஓடிப்பிடித்தும் கணுக்கால் முழங்கால் என்று ஏறியும் விளையாடியது. காலை வெய்யில்தான் எத்தனை இதமானது. கண்ணாடிக்கு அப்பாலிருந்த செடிக்கு சில யானாக்களைத் தொடுத்தது போல வளைந்து வளைந்து செல்லும் விளிம்பு கொண்ட இலைகள். அந்தப் பசிய இலைகளில் பட்டு, இதோ தொட்டு உணர்ந்து விடலாம் என்பது போல ஊறியிருந்தது மஞ்சள் வெய்யில். அவற்றின் மிக மெல்லிய நரம்புகள் கூட அப்படியே தெரிந்தன. சில இலைகளுக்குக் கொஞ்சமே வெய்யில் கிடைத்தது. கிடைத்தளவிற்குத தங்களைக் காட்டிக் கொண்டன அவை.
மனிதர்களைப் பற்றி நினைத்தேன். இந்த இலைகளைப் போலத்தான் அவர்களும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுகிறார்கள். தம்மை வெளிப்படுத்துகிறார்கள். இரகசியங்கள் எல்லாரிடமும் இருக்கின்றன.
அன்பும்.
வகை: இன்றைய தருணம்
மலர்தல்
எழுதுவதற்கெனக் காலையில் யோசித்து வைத்திருந்ததை ஓரமாய் வைத்துவிட்டு வேறொன்றைக் கையில் எடுத்திருக்கிறேன். புதிதில்லைத்தானே.
இங்கே ஒரு தோழி இருக்கிறார். எதிர்பார்த்தேயிருக்காத விதத்தில் வாழ்க்கை எங்கள் கொஞ்சப் பேருக்குச் சேர்த்து ஓங்கி ஒரு அறை விட்ட தருணத்தின் அடுத்தடுத்த நாட்களில் நாம் சந்தித்தோம். என் பெயரில் எனக்கு என்னைத் தவிர்த்தே இருபதுக்கும் மேற்பட்டோரைத் தெரியும் என்பதால் அரிய பெயர்களில் பெருவிருப்புண்டு. அவர் பெயரில் அவரை மட்டுமே நான் அறிவேன். உதிக்கும் சூரியனின் பெயர் கொண்டவர். நாங்கள் சூரியோதயம் காண்பதற்காக அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் கூட வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறோம். போன ஆண்டின் அநேக வார இறுதிகளை இப்படியான காலை அழகாக்கியது. வேறு இருவரும் வருவார்கள் - மாறி மாறி. ஆனாலும் அதிகம் இவரே. தன்னைத் தானே சந்திக்க அவரை நான் அழைத்துச் செல்கிறேன் என்கிற என் மொக்கை நகைச்சுவையையும் பொறுத்துக் கொண்டு வருவார். அலைவரிசை மிகவும் ஒத்துப் போகும். பேசாது கழிகின்ற பொழுதுகள் கூட இயல்பாகவே இருக்கும். பேச ஒன்றுமில்லாவிட்டால் அந்தரித்துப்போய் ஏதோவொன்றை யோசித்துத் தேடியெடுத்துப் பேசவேண்டிய தேவையொன்றை மனம் உணராமல் இருப்பது எத்தனை சுகம்! என்னவொரு வரம்! அது எங்களுக்கு வாய்த்திருக்கிறது.
கொஞ்சநாள் பரவாயில்லாமல் இருந்துவிட்டுத் திரும்பவும் பழைய பள்ளங்களுக்குள் போகிற மாதிரித்தான் கடந்த சில கிழமைகள் கழிகின்றன. மீள்தல் என்பது விக்கிரமாதித்தனையும் வேதாளத்தையும் ஒத்தது. மடுவுக்குள் மனம் கிடக்கிறதென்பதைப் புறச்சுட்டல்களின்றிக் கண்டு கொள்ளல் என்பதுவே ஒரு பெரிய படிதான். பிறகு தீர்மானித்துக் கொள்ளவேண்டியது கிடப்பதா எழும்புவதா என்று. கிடக்கத்தான் சொல்லும்.. அதுவும் எழுவதற்குத் தேவைப்படும் பலத்தையும் தொடர்முயற்சியையும் உணர்ந்த பிறகு, இன்னும் உரக்கச் சொல்லும்.. "கிட .. கஷ்டம்.. எதற்கு.. யாருக்காக.. ஏன்.. பலனில்லை..". இப்படிப் பல சொல்லும் அதே மனம்தான் விக்கிரமாதித்த முயற்சிகளுக்கு அடிப்படையாக 'எனக்காக' என்றும் கத்தும். அந்த ஒரு சொல்லுத்தான் ஊறும் முதல் ஈரம். அப்படித்தானே எந்தப் பெரிய ஆறு(வது)ம் தொடங்குகிறது.
நிறைய நாட்களுக்குப்பின் போன கிழமை நீண்டதூரம் போகலாம் என்று நடக்கச் சென்றேன். வேனிற்காலம். பூத்துக் குலுங்கியும் கொட்டியும் எங்கும் அழகு கடை பரப்பி இருந்தது/இருக்கிறது. அதிலும் ஜக்கராண்டா என்கிற, ஊதாப்பூக்கள் கொண்டதொரு மரம் நான் நடக்கப் போன பகுதியில் நிறைய. சிட்னியில் இக்காலம் இந்த மரத்தின் பூத்திருவிழாவுக்குப் பெயர் பெற்றது. அன்றைக்கு 4 மணித்தியாலங்கள் மட்டுமே நடந்திருப்பேன். இளவெயிலும் குளிர்காற்றும் பூக்களும் மதில் மேலிருந்தபடி என்னைக் கண்ணெடுக்காமல் பார்த்திருந்த பூனையும் மனதை ஆற்றின. நடுவில் ஒரு பூங்காவில் ஊஞ்சலுமாடி, கம்பிவேலிக்கு அப்பால் இருந்த ஒரு செடி வகையையும் அதன் பூக்களையும் ரசித்து, வீசிய காற்றினால் அவற்றைக் கலங்கலில்லாமல் படமெடுக்க முடியாமல் கண்ணிலும் மனதிலும் மட்டும் தேக்கியெடுத்த பின் அந்த குளத்துக்குக் கிட்ட வந்து சேர்ந்தேன். தோழிதான் மனதில் வந்தார். அவருக்கும் பிடிக்கும் என்று தோன்றிற்று.
தோழியைச் சந்திக்கும் வாய்ப்பு இன்றைக்கு அந்தக் குளத்துக்குக் கிடைத்தது. அவர் குரலை மட்டுமே கேட்டிருந்தாற் கூட அறியலாம் அவர் எத்தனை வியந்தும் மகிழ்ந்தும் அந்தக் குளத்திலிருந்த தாமரைகளைப் பார்த்தார் என்பதை. எனக்கு ஒலி-ஒளி இரண்டுமே கிடைத்தன.
உதிக்கும் சூரியனைப் பார்த்து மலரும் தாமரையைத் தெரியும். மாறி நடந்ததை இன்று நான் கண்டேன். மலர்கின்ற சூரியன் என்ன்ன்ன அழகு தெரியுமா?
வகை: இன்றைய தருணம்
குவளையைத் தாண்டி வழிகிறது வாஞ்சை
காலையில் மனதில் வருவதையெல்லாம் எழுதுமொரு பழக்கத்தை சில கிழமைகளாகக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கும் எழுதிக் கொண்டிருக்கையில் தற்செயலாக நிமிர்ந்தபோது என் கண்ணிற் பட்டது. என் வழமையான குவளைதான். அறைக்குள் அதை எடுத்து வருவது மிகக்குறைவு. எப்படியோ இன்றைக்கு என்னுடன் கூடவே வந்து விட்டது. ஒவ்வொரு நாளும் பாவிப்பதுதான்.. ஆனால் பலநாட்களாக நான் நினைத்துச் சுவைக்காத ஒன்றை அது இன்றைக்கு மீட்டியது.
வகை: இன்றைய தருணம்
ஆறும் மீனும்
வகை: கிறுக்கினது