புதிர்க்காலம்

இருந்து பேசிக் கொண்டிருந்த போது மாமா கதைகள் சொல்லிக் கொண்டே போனார். ஒரே சிரிப்புத்தான். கூடவே இரண்டு புதிர்கள் சொன்னார்... மண்டையை உடைக்காத குறைதான். விடைகள் தெரியவில்லை.. நீங்களாவது சொல்லுங்களேன் (உங்கட புண்ணியத்தில நான் 'கெட்டிக்காரி' என்று பெயரை வாங்கிக் கொள்கிறேன்):

முதலாவது வலு எளிமையான கூட்டல்-கழித்தல் கணக்கு என்றார்.
"29 இல் 32 போனால் எவ்வளவு?"
-3, 29ல 32 போகாது இவையிரண்டும் தான் எங்கள் விடைகளாயிருந்தன. ஆனால் அந்த இரண்டும் பிழையாம். சய (-) இல்லையாம், சக (+) தானாம். 29ல 32 போகுமாம்.. (எங்க போகுமெண்டு கேட்கக் கூடாது)


இரண்டாவது
கொஞ்சம் நீட்டுக் கதை.. புதிர் கடைசியில.
ஓர் ஊரில ஒரு குடியானவன் இருந்தானாம். அவனுடைய மனைவி இனியில்ல எண்டளவு சோம்பேறியாம். (backgroundல யாரப்பா அது....ஷ்!!!!)
குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தாவென்டு கேட்டால் "இப்பத்தான் வேலையெல்லாம் முடிச்சு வந்து கதிரையில குந்துறன்.. எழும்ப வைக்கிறீங்களா!" என்பாவாம்.

திருவாளர் குடியானவன் பார்த்தார்..இது வேலைக்காகாது என்டு, ஒரு வேலைக்காரியை கொணர்ந்தாராம். மனைவிக்கும் ஒரே சந்தோசமாம். என்ன வேலை சொன்னாலும் விரைவாய் முடித்தாளாம். போய் அரிசியைக் களைந்து உலை வை என்றாராம் மனைவி. ஒரே நிமிடத்திலே வந்து நின்றாளாம் "ஆச்சு!" என்று. மனைவிக்கோ வியப்பு. சரி அரிசி வெந்ததும் கஞ்சி வடித்து விட்டுச் சொல்லு என்று பாயிலே சரிந்தாராம் குட்டித் தூக்கத்துக்கு. படுத்துக் கண்ணை மூடவில்லை .. "ஆச்சு அம்மா". மனைவிக்கோ சந்தேகம். போய்ப்பார்த்தால் சோறு அவர் கேட்ட மாதிரியே. இப்படியே என்னத்தைச் செய்யச் சொன்னாலும் நிமிஷமாய் முடித்து விட்டு முன்னால் நின்றாளாம். தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டேஏஏஏ இருக்க வேண்டும். குடியானவன் மனைவிக்குச் சந்தேகம் - இவளைப் பார்த்தால் சாதாரணமாய்த் தெரியவில்லை என்று. கணவனிடம் சொன்னாளாம் தன் சந்தேகத்தை. அவன் மனைவியிடம் கலந்தாலோசிப்பது போலச் சொன்னானாம் "வயல் உழ உதவிக்கு யாருமில்லை.. பெண்ணே உனக்கு உழத்தெரியுமா? நாளைக்காலைக்கிடையில் நாற்றையும் நட்டுவிட வேண்டும்" என்று. ஆமென்று தலையாட்டிய வேலைக்காரி அடுத்த ஐந்தாம் நிமிடம் "ஆச்சு ஐயா" என்றாளாம். இவனுக்கும் சந்தேகம் பிடித்துக் கொண்டது.

இப்படி இருக்கையிலே குடியானவன் வெளியூர்ச் சந்தைக்குப் போக வேண்டி வந்ததாம். வேலைக்காரியிடம் சொன்னானாம் "அம்மாவைப் பார்த்துக் கொள் நான் நாளைக்கு வந்து விடுவேன்". அவனும் போயாச்சு. இரவு இவர்களிருவரும் விளக்கின் திரி குறைத்துப் படுக்கையில் விழுந்தார்கள். மனைவிக்குத் திடீர்ச் சந்தேகம், கதவுக்குத் தாழ்ப்பாள் போட்டதாவென்று. "ஏடி, கதவுக்குத் தாழ்ப்பாள் போட்டதா?" .. கேட்கிறாள். வேலைக்காரிக்கோ தூக்கக் கலக்கம். எழுந்து பார்க்கச் சோம்பலில் (வீட்டுக்காரம்மாவுடன் கொஞ்ச நாளாய் இருக்கிறாளில்லையா.. பழக்க தோசம் போல!) கையை நீட்டுகிறாள். கை நீண்ண்ண்ண்டு போய் கதவுத்தாழ்ப்பாளைத் தடவிப்பார்க்க, வாய் சொல்கிறது, "ஆமாம்மா .. போட்டுத்தான் இருக்கு". கை நீண்டு போனதை குடியானவன் மனைவி அந்த மங்கல் வெளிச்சத்திலும் கண்டு விட்டாள். இது ஏதோ பேயென்று அவள் புரிந்து கொண்டாள். விடியும் வரையும் தூக்கமில்லை. பயம். கணவன் வரும் வரை பார்த்திருந்து அவன் வந்ததும் பிடித்துக்கொண்டாள். (முதலே பிடிச்சதுதானே என்றெல்லாம் சொன்னா நான் அழுதுருவேன்!)

அவனும் பேயைத் துரத்த என்ன வழி / என்ன வேலை கொடுத்தால் பேய் திரும்ப வராது என்டு யோசித்தானாம். பேயாகிய வேலைக்காரியைக் கூப்பிட்டானாம்.. "இந்தா, அம்மாவின் ஒரு தலைமுடி. இதை நெடுக்குவாக்கில் இரண்டாய்ப் பிளந்து கொண்டுவா". வேலைக்காரியும் அதைக் கொண்டு அடுப்படியில் போய் உட்கார்ந்தாளாம். பிரித்தாளாம் பின் கைகள் தட்டுவது (clapping) போல செய்து திரும்ப பிரித்தாளாம் (மாமா செய்து காட்டினார், முடிந்தவரை விளக்கமாய் எழுதியிருக்கிறேன்) .. இப்படியே இன்று வரை செய்து கொண்டே இருக்கிறாளாம்.

புதிர்: அவள் என்ன செய்கிறாள்? ஏன் குடியானவன் கேட்டதைச் செய்து முடிக்க முடியாமற் போயிற்று?

.... சொல்லுங்கப்பா!!! இல்லாட்டி என் தலைமுடிதான் போயிடும்!

பெட்டகம்