என்னுடன் இருக்கும் நீ

உன்னோடு பேசுவது தான் எவ்வளவு இதமாய் இருக்கிறது. உன் வீட்டு முற்றத்து நித்தியகல்யாணியைப் போல எப்போதும் புன்னகைக்க வைக்கிறாய். எனக்கு எப்போது தொலைபேச வேண்டும் என்பதை எப்படியோ உன்னால் அறிய முடிகிறது. எப்படியடி? இன்றைக்கும் எடுத்தாய் - வேறு சில ஆற்றாமைகள் கோபங்களுடன் கூடவே ஒரு மணி நேரமாய் எல்லாப் பெட்டிகளுக்குள்ளும் தேடிக் கிடைக்காத ஆனாலும் வீட்டிற்குள்ளே கட்டாயம் இருக்கிற 3 காமாட்சி விளக்குகளிலும் எரிச்சல் தோன்றி, அதை இறக்க வழியின்றி, ஒரு சுவர் அலுமாரிக்குள் அடைத்து வைத்திருக்கிற பிள்ளையாரை நான் முறைத்து திட்ட ஆரம்பிக்கையில்.

நீயென்று ஸ்கைப்பில் கண்டதும் இயலாமையில் வந்த அழுகை எட்டிப்பார்த்தது உண்மை. "என்னடி செய்ற" என்ர ஒரு கேள்வி போதுமாக இருக்கிறது என் விளக்குத் தேடல் எரிச்சல்களைக் கொட்டிவிட. உன்னுடன் பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஒரு சிறு பெட்டியைத் திறந்ததில் 2 விளக்குகள் கிடைத்தன. சிரிக்கிறாய் நீ. எனக்கு எப்படி இதமாய் இருக்கிறாயோ, அப்படி உனக்கு நானுமிருக்கிறேன் என நம்பிக் கொள்கிறேன்.

அடுத்து மற்றவரால் என்ன சொல்லப்படும் என என்னாலும் உன்னாலும் சொல்ல முடியும். எப்படி அது சாத்தியம் என்பதும், எப்படி உன்னிடம் சொல்லும் போது மட்டும் உப்புச் சப்பில்லாத விதயங்களும் சுவையானவையாகின்றன என்பதும் எனக்குப் புரிவதேயில்லை. எலி பிடித்த அதிமுக்கியமான கதை சொல்லத் தொடங்குகிறேன், என்னைத் தவிர உன் உலகத்தில் வேறு யாருமில்லை என்ற பாவனையில் கதை கேட்கிறாய். வேறெவருக்கும் சொல்லும் போது சிரிப்பே வராத எலி பிடித்த கதை உன்னிடம் சொல்லப்படும் போது மட்டும் வயிறு வலிக்கும் படியான நகைச்சுவையாகிப் போகிற மாயம் என்ன? அன்றைக்கொருநாள் உன்னுடன் கதை பேசிச் சிரித்த ஞாபகம் என் முன் வந்தமர்ந்திருக்கிறது. எதற்கோ உனக்குக் கண் கலங்க அதைப் பார்த்து நானும் அழ பிறகு நாம் அழுவதைப் பார்த்து நாமே சிரித்துக் கொண்டதொரு அழகிய பொழுது. உலகம் முழுவதிலும் எல்லாத் தோழிகளுக்கிடையிலும் இருப்பது போலவே எங்களுக்கேயான பிரத்தியேக சிரிப்புக்கள், பேச்சுக்கள். இதை எழுதுகையில் கூட உன் சீரியல் கனவு சிரிக்க வைக்கிறது. வீட்டிற்குள் பின்கதவால் நுழைவதற்குக் கள்ளன் எடுக்கும் முயற்சியைக் கனவாக, அதுவும் தொடர்ந்த கனவாகக் கண்டவள் நீயாய்த்தானிருப்பாய்.

பதின்ம வயதின் இறுதியிலும் இருபதுகளின் ஆரம்பத்திலும் நடந்தவைகளை இப்போது நினைத்தால் வேறெவருக்கோ நடந்தது போலத் தோன்றுகின்றன.
கண்ணீராலேயே ஒரு கடிதம் போட்டேன் உனக்கு, கல்யாணமாகின பிறகு ஒரு முறை வந்த போது அதைக் காட்டினாய். இன்னும் வைத்திருப்பாயோ என்னவோ!! உன் கணவன் உன் காதலனாயிருந்த காலத்தில் என்னால் "மிரட்ட"ப்பட்டதற்கு மன்னித்துக் கொள்; எக்காரணங் கொண்டும் உனக்கு வலித்து விடக் கூடாதென்பதே என் நோக்கமாய் இருந்தது. அதை நீயும் தெரிந்து கொண்டிருந்தாய். என் மீதான அவன் பயங் குறித்துப் பேசிச் சிரித்திருக்கிறோம். என்னிடம் பயப்பட்ட ஒரே சீவன் - அவனிடம் பேசிக் கொள்ள வேண்டும் ஏன் அப்படி இருந்தது என்பதை. உன் விருப்பமான படிப்பை முடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டாய் என எனக்குத் தெரியும். ஒன்றுமே செய்யாமல் வீட்டில் இருப்பதன் அலுப்புப் புரிகிறது. ஆனால் கண்ணம்மா இந்த நேரத்தை உன்னை அறிந்து கொள்ளப் பயன்படுத்து. உனக்கான நேரம் வரும். நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கொழும்பின் ஏதாவதொரு வீதியில் மழையில் நனைந்தபடி ஒருவரையும் சட்டை செய்யாமல் உன்னோடு மீண்டும் நடக்கத் தோன்றுகிறது.
இன்றைக்கு ஏனோ உன்னிடம் பேசிக் கொண்டேயிருக்க வேண்டும் போல இருக்கிறது. பபிள் கரைசலுடன் வருகிறாயா மஞ்சள் வெயிலோடு ஒரு புல்வெளிக்கு?

love u டி..

பெட்டகம்