தேங்கிய சில - 2

அந்தத் தடுப்பு நிலையத்திற்குப் போவதற்கு கொஞ்சம் ஆயத்தப்படுத்த வேண்டியிருந்தது. துணிமணிகளும், முக்கியமான பொருட்களாக சவர்க்காரக்கட்டிகளும், சானிற்றரி நப்கின் முதலியனவும் வாங்கியும், சேகரித்தும் கொண்டு போனோம். அங்கே போகிற ஒவ்வொரு தடவையும்.

கொண்டு போனவற்றை மேலாளரிடம் கொடுத்துவிடுவோம். அவவிடந்தான் கொடுக்கவும் வேண்டும். அவர்களுக்குப் போய்ச் சேர்ந்ததா என்று மட்டுமே அறிந்து கொள்ளமுடியும். சரியான முறையில் பங்கிடப்பட்டதா என்றறிய இயலாது. மாதத்துக்கு ஒரு சவர்க்காரம். அதுவே உடலுக்கும் துணி துவைக்கவும். எங்கள் போன்று நிறுவனத்தினர் யாரேனும் போனால் மட்டுமே உடலுக்கும் துணி துவைக்கவும் என்று தனித்தனியான ச. கட்டிகள் கிடைக்கும். சமயத்தில் உடுப்பைக் கழுவித் தம்மைக் கழுவாமலும், மாறியும் நடப்பது வழமையென நேர்முகங் கண்ட பெண் சொன்னா. அவ சொல்கையில், குளியலறையில் கரைத்துக் கரைத்து நுரையூதுவது ஞாபகம் வந்தது இப்பவும் ஞாபகமிருக்கிறது. மாதா மாதம் வரும் உபாதைக்குத் துணி பாவிப்பார்களாம். அதைக் கழுவத்தான் சவர்க்காரச் சேமிப்பு மும்முரமாக நடப்பதாம். எப்ப போனாலும், இவர்கள் கேட்பது சவர்க்காரம்! இப்படிப்பட்ட சூழலில் தோல் நோய்கள் பரவலாயிருப்பது ஆச்சரியமில்லை.

[19..20 வயதென்றாலும், அப்போதெல்லாம் சிந்திப்பதில்லை. இங்கிருக்கும் பெண்களின் சுகாதாரம் பற்றிய கேள்விகளோ, அடிப்படைத் தேவைகளினைப்பற்றியோ, அவற்றின் நிலையைப் பார்க்கையில்/அறிகையில் ஏற்படும் அதிர்ச்சி தவிர, என்னிடம் கேள்விகளோ, அவற்றுக்கான பதிலோ, அல்லது அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதகு என்னாலான முயற்சிகளைச் செய்யும் தொடர்ந்த ஆர்வமோ இருக்கவில்லை. இப்போது நினைத்துப் பார்க்க, என்ன மாதிரி ஒரு கிணற்றுத் தவளையாய் இருந்திருக்கிறேன்.. சூழலை/சமூகத்தைப் பற்றிய உணர்வின்றி இருந்திருக்கிறேன் என்பதை நினைக்க வெட்கமாயிருக்கிறது. ஏன் அப்படி இருந்தேன்? இப்பவும் சில வேளைகளில் யோசிப்பது, ஒருவேளை நான் கொஞ்சம் slowவோ என்று. அதாவது 5 வயசில் யோசிக்கிறதை 7இல யோசிப்பது, 15 இல விளங்கியிருக்க வேண்டியது 18இல மண்டையில் உறைப்பது..இப்படிப் பல. அதன் தாக்கமோ? இது என்னைப் பற்றின ஆய்வாகப் போக முதல் நிறுத்துறன்.]

நேர்முகங் கண்டவர்களில் ஒரு பெண், திருகோணமலைப் பகுதியிலிருந்து வந்தவர். இரண்டோ மூன்றோ வயதான குழந்தைக்குத் தாயாம். அது நான் இவரிடம் பேச இரண்டு வருடங்களுக்கு முன். வெளிநாடு செல்வதற்காக முகவரான ஒரு தெரிந்த பையனை நம்பி வந்தவர். முகவர் ஒரு விடுதியில் அறையெடுத்து இவரைத் தங்க வைத்து உணவு உடையெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஓரிரவு, பணத்தைத்தா நாளையன்றைக்கு நீ விமானமேறுவாய் என்று சொல்லிப் பணமெடுத்துப் போனது போனதுதான். அதற்குப் பிறகு காணவேயில்லை. பார்த்துப் பார்த்து இருந்திருக்கிறா..இரண்டு நாளாயிற்று. அன்றிரவு பாலியல்தொழிலாலியென்று தவறாக அடையாளங் காணப்பட்டு காவல் நிலையத்தில் ஒரு வாரமிருந்தவர், வெளியில் வந்ததும் விடுதிக்குப் போகப் பிடிக்காமல் ஊருக்குப் போகத் தெரியாமல் தெருவில் அலைந்ததில் உண்மையாகவே பாலியல் தொழிலாளியாக்கப்பட்டார். இடையிடையே இத்தொழிலுக்கேயுரிய காவற்துறைக் கெடுபிடிகளில் காவல்நிலையம் சென்று வந்திருக்கிறார். கடைசி முறை பிடிபட்ட போது அங்கிருந்த அதிகாரியிடம் தன்னைத் திருப்பியனுப்ப வேண்டாமென்று கெஞ்சி, ஊருக்குப் போக உதவுமாறு கேட்டதற்கு அவ்வதிகாரி இங்கு கொணர்ந்து விட்டிருக்கிறார்.

என்னிடம் தனது தொழிலைப் பற்றிப் பேச நிறையக் கஷ்டப்பட்டார். இடையிடையே "சின்னப்பிள்ளைகளுக்கு/திருமணமாகாதவர்களுக்குச் சொல்லும் விசயமில்ல" என்று தணிக்கையும் செய்வா. ஒரு ஆறுதல், இவவின் பா. தொழில் முதலாளி எயிட்ஸ் பற்றி அறிவுறுத்தியிருந்தது. தான் பாவித்த காப்பு முறைகள் பற்றிச் சொன்னா. சில நேரங்களில் பார்வைகள் வெறிக்கும்.

உழைக்கிற பணத்தில் குழந்தைக்குப் பொருட்கள் வாங்கி அனுப்புவதாம். குழந்தை பற்றிப் பேசயில் கண் கலங்கும். வீட்டுக்குப் போகக்கிடைத்தால் போக விரும்பினாலும், எப்படித் தன்னால் கணவனை/குழந்தையை/பெற்றாரை எதிர்கொள்ள முடியும் என்கிற கேள்வி இருக்கிறது. அவ்வளவு கறை படிந்தவராக உணர்கிறார். எவ்வளவு தேய்த்தாலும் படிந்த கறை போகுமா எனக் கேட்பார். சொல்வதற்குப் பதில் தெரிந்ததில்லை. வெளிநாடு போகவென்று முகவரை நம்பி வந்த
இவவினுடையதைப் போன்ற கதையுடன் இன்னுஞ் சிலர் அங்கு இருக்கிறார்கள்.

பெட்டகம்