என் பார்வையில் கலை ஒலி மாலை 2004

ATBC எனப்படும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 2ம் ஆண்டு நிறைவு விழாவிற்குச் சென்றிருந்தோம். பதின்வயதினரின் கவியரங்கு (யார் எழுதி கொடுத்தார்களோ..நல்லதொரு முயற்சி. அதற்குப் பிறகு வைத்தார்கள் பாருங்கள் ஒரு நடனம்..Fusion Dance என்ற பெயரில் பழைய பாட்டுகளுக்கு (கிட்டத்தட்ட 30) சிறுவர்களைக் கொண்டு நவீன நடனம். முதலாம்/இரண்டாம் பாட்டு..சரி.. பார்க்க இந்த மாதிரி நடனம் வித்தியாசமாகவும் சின்னப்பிள்ளைகள் செய்தது cute ஆகவும் இருந்தது. பிறகு அடுத்தடுத்து 8/9 பாட்டுகள். ஒன்றிரண்டு புதிய பாடல்களுக்கு ஆடினாலும் அதிக நேரம் தொடர்ந்ததால் சலிப்படைய வைத்தது. நல்லதொரு புதுமையான பாணிதான்..அமைக்கும் நடன அசைவுகளை கவனித்து அமைக்க வேண்டும். தமிழ் படங்களில் வரும் suggestive அங்க அசைவுகளும் குலுக்கல்களும் இந்த சிறார்கள் ஆடிய நடனங்களிலும் இடம் பெற்றது வருத்தத்திற்குரிய விடயம்.

ஒரு கடி (ரத்தம் வருமளவுக்கு) நாடகம் இடம் பெற்றது. அதிலே சொன்ன கருத்து எல்லாருடைய மண்டையிலும் ஏறியிருக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன். நாடக நீதி : வம்பு பேச/வளர்க்க வேண்டாம்.

இடையிலே பேச இவ்வானொலி அமைப்பின் நிறைவேற்று அங்கத்தவர்(executive member) ஒருவர் வந்தார்; "I am going to speak in English, please bear with me..my Tamil is not good!!" சரி விடுவோம். அவர் படித்தது ஆங்கிலத்திலாக இருக்கலாம்.

இந்நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தவர்கள் சஹானா தொலைக்காட்சித் தொடரில் வரும் அனுராதா கிருஷ்ணமூர்த்தி என்னும் பாடகியை இதற்காகவே இந்தியாவிலிருந்து அழைப்பித்தார்களாம். அவர் பாவம் மெல்பேண், கன்பராவில் இவர்களது நிகழ்ச்சியில் பாடி களைத்து சிட்னிக்கு வந்திருந்தார். கச்சேரியை வாதாபி கணபதிம்மில் தொடங்கி பாரதியாரின் வந்தே மாதரம், காணக் கிடைக்குமோ, கீர்த்தனைகளும் மற்றும் சஹானா தொடரில் வரும் சில பாடல்களும் பாடிக் கொண்டிருந்தார். நல்லாக காது குளிர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் போது விளம்பர இடைவேளையில் உயிரற்ற மின்கலமுடைய ரிமோட் போல் (எத்தனை நாளைக்குத்தான் சிவ பூசையில் கரடியாய் ..) தொகுப்பாளர் வந்து "குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்"(அதெல்லாம் எதுக்கு..நாங்க வேண்டாமென்றாலும் எப்பிடியோ அறுக்கத்தான் போறீங்க..)"கலைஞர்களை கௌரவிப்பதற்கு --- அவர்களை அழைக்கிறோம்". வந்தார்கள்.பொன்னாடை போர்த்தினார்கள். அத்தோடு விட்டிருக்கலாம். "விழா ஒருங்கிணைப்பாளர் XXX அவர்களை சில வார்த்தைகள் கூறுமாறு கேட்டுக் கொள்கிறோம்". வந்தார் திருவாளர்XXX. "இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் அழைத்து, வருகை தந்திருக்கும் திருமதி அனுராதா கிருஷ்ணமூர்த்திக்கு எமது நன்றிகள்" என்று ஆரம்பித்து ஏதேதோ சொல்லி பிறகு ஒரு முத்தொன்றை உதிர்த்தார்! (அவருக்கு அன்றைக்கு constipation of the mind and diohorrea of the mouth என நினைக்கிறேன்.) "இந்த ப்ரொக்ரம் க்கு இவவை கூப்பிட்டதில் $1000 டெலிபோன் பில் துண்டு". பார்வையாளரில் சிலர் சிரித்தனர். அத்தோடு (foot in the mouth என்று உணர்ந்து) வாயை மூடி கொள்வோம் என்றில்லை...பார்வையாளர் சிரித்தது இன்னும் தூண்டி விட்டதோ என்னவோ..அடுத்த முத்தை உதிர்த்தார் " நாங்க தொலைபேசில ப்ரொக்ராம் விஷயங்கள் மட்டுந்தான் கதைச்சனாங்க"..இப்போது சனம் கொல்லென்று சிரித்து வைத்தது. பாடகிக்கோ முகத்தில் கண நேர மாற்றம். சுதாரித்துக் கொண்டவர் ஒப்புக்கு சிரித்து வைத்தார். இப்படிப்பட்ட நாகரிகமற்ற பேச்சுக்கள் தேவையேயில்லை. பேச முதல் யோசிப்பது அவசியம். இனிமேல் இவர்கள் இந்தியாவுக்கே போய் அழைத்தாலும் அனுராதா வரமாட்டார்.

தொகுப்பாளர் வந்து "தமிழ் பாட்டுக்கள் குறைவாக இருப்பதையிட்டு ATBC தனது மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது" என்றார். என்ன என்று பார்த்தால் பாடகியிடம் சிலர் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட சில பாடல்களுக்கான வேண்டுகோள் (request) விடுத்தபடியால் தமிழ்ப்பாட்டுக்கள் குறைந்து விட்டதாம் என்று கவலைப்பட்டுக் கொண்டார். இவர்களது குறுக்கீடு முடிந்ததும் பாடகி ஒரு பாடல் பாடி விட்டு " உங்க எல்லாருக்கும் நாளைக்கு working day னு தெரியும் அதனால கச்சேரி இன்னும் 8 நிமிஷத்துல நிறைவடையும்" என்று சொல்லி மங்களம் பாடி முடித்து விட்டார். அனுராதா கிருஷ்ணமூர்த்தி வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவரது சினம் புரிந்தது. கடைசியாய் தொகுப்பாளர் வந்து சொன்னார் "தமிழை வளர்க்க தமிழருடன் தமிழில் பேசுவோம்"

ஒரே ஒரு கேள்வி ..தொகுப்பாளரை கேட்கணும்..உங்கள் நிறைவேற்று அங்கத்தவர் தமிழருடன் தமிழில் பேசவில்லையே?

பெட்டகம்