தேங்கிய சில - 2

அந்தத் தடுப்பு நிலையத்திற்குப் போவதற்கு கொஞ்சம் ஆயத்தப்படுத்த வேண்டியிருந்தது. துணிமணிகளும், முக்கியமான பொருட்களாக சவர்க்காரக்கட்டிகளும், சானிற்றரி நப்கின் முதலியனவும் வாங்கியும், சேகரித்தும் கொண்டு போனோம். அங்கே போகிற ஒவ்வொரு தடவையும்.

கொண்டு போனவற்றை மேலாளரிடம் கொடுத்துவிடுவோம். அவவிடந்தான் கொடுக்கவும் வேண்டும். அவர்களுக்குப் போய்ச் சேர்ந்ததா என்று மட்டுமே அறிந்து கொள்ளமுடியும். சரியான முறையில் பங்கிடப்பட்டதா என்றறிய இயலாது. மாதத்துக்கு ஒரு சவர்க்காரம். அதுவே உடலுக்கும் துணி துவைக்கவும். எங்கள் போன்று நிறுவனத்தினர் யாரேனும் போனால் மட்டுமே உடலுக்கும் துணி துவைக்கவும் என்று தனித்தனியான ச. கட்டிகள் கிடைக்கும். சமயத்தில் உடுப்பைக் கழுவித் தம்மைக் கழுவாமலும், மாறியும் நடப்பது வழமையென நேர்முகங் கண்ட பெண் சொன்னா. அவ சொல்கையில், குளியலறையில் கரைத்துக் கரைத்து நுரையூதுவது ஞாபகம் வந்தது இப்பவும் ஞாபகமிருக்கிறது. மாதா மாதம் வரும் உபாதைக்குத் துணி பாவிப்பார்களாம். அதைக் கழுவத்தான் சவர்க்காரச் சேமிப்பு மும்முரமாக நடப்பதாம். எப்ப போனாலும், இவர்கள் கேட்பது சவர்க்காரம்! இப்படிப்பட்ட சூழலில் தோல் நோய்கள் பரவலாயிருப்பது ஆச்சரியமில்லை.

[19..20 வயதென்றாலும், அப்போதெல்லாம் சிந்திப்பதில்லை. இங்கிருக்கும் பெண்களின் சுகாதாரம் பற்றிய கேள்விகளோ, அடிப்படைத் தேவைகளினைப்பற்றியோ, அவற்றின் நிலையைப் பார்க்கையில்/அறிகையில் ஏற்படும் அதிர்ச்சி தவிர, என்னிடம் கேள்விகளோ, அவற்றுக்கான பதிலோ, அல்லது அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதகு என்னாலான முயற்சிகளைச் செய்யும் தொடர்ந்த ஆர்வமோ இருக்கவில்லை. இப்போது நினைத்துப் பார்க்க, என்ன மாதிரி ஒரு கிணற்றுத் தவளையாய் இருந்திருக்கிறேன்.. சூழலை/சமூகத்தைப் பற்றிய உணர்வின்றி இருந்திருக்கிறேன் என்பதை நினைக்க வெட்கமாயிருக்கிறது. ஏன் அப்படி இருந்தேன்? இப்பவும் சில வேளைகளில் யோசிப்பது, ஒருவேளை நான் கொஞ்சம் slowவோ என்று. அதாவது 5 வயசில் யோசிக்கிறதை 7இல யோசிப்பது, 15 இல விளங்கியிருக்க வேண்டியது 18இல மண்டையில் உறைப்பது..இப்படிப் பல. அதன் தாக்கமோ? இது என்னைப் பற்றின ஆய்வாகப் போக முதல் நிறுத்துறன்.]

நேர்முகங் கண்டவர்களில் ஒரு பெண், திருகோணமலைப் பகுதியிலிருந்து வந்தவர். இரண்டோ மூன்றோ வயதான குழந்தைக்குத் தாயாம். அது நான் இவரிடம் பேச இரண்டு வருடங்களுக்கு முன். வெளிநாடு செல்வதற்காக முகவரான ஒரு தெரிந்த பையனை நம்பி வந்தவர். முகவர் ஒரு விடுதியில் அறையெடுத்து இவரைத் தங்க வைத்து உணவு உடையெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஓரிரவு, பணத்தைத்தா நாளையன்றைக்கு நீ விமானமேறுவாய் என்று சொல்லிப் பணமெடுத்துப் போனது போனதுதான். அதற்குப் பிறகு காணவேயில்லை. பார்த்துப் பார்த்து இருந்திருக்கிறா..இரண்டு நாளாயிற்று. அன்றிரவு பாலியல்தொழிலாலியென்று தவறாக அடையாளங் காணப்பட்டு காவல் நிலையத்தில் ஒரு வாரமிருந்தவர், வெளியில் வந்ததும் விடுதிக்குப் போகப் பிடிக்காமல் ஊருக்குப் போகத் தெரியாமல் தெருவில் அலைந்ததில் உண்மையாகவே பாலியல் தொழிலாளியாக்கப்பட்டார். இடையிடையே இத்தொழிலுக்கேயுரிய காவற்துறைக் கெடுபிடிகளில் காவல்நிலையம் சென்று வந்திருக்கிறார். கடைசி முறை பிடிபட்ட போது அங்கிருந்த அதிகாரியிடம் தன்னைத் திருப்பியனுப்ப வேண்டாமென்று கெஞ்சி, ஊருக்குப் போக உதவுமாறு கேட்டதற்கு அவ்வதிகாரி இங்கு கொணர்ந்து விட்டிருக்கிறார்.

என்னிடம் தனது தொழிலைப் பற்றிப் பேச நிறையக் கஷ்டப்பட்டார். இடையிடையே "சின்னப்பிள்ளைகளுக்கு/திருமணமாகாதவர்களுக்குச் சொல்லும் விசயமில்ல" என்று தணிக்கையும் செய்வா. ஒரு ஆறுதல், இவவின் பா. தொழில் முதலாளி எயிட்ஸ் பற்றி அறிவுறுத்தியிருந்தது. தான் பாவித்த காப்பு முறைகள் பற்றிச் சொன்னா. சில நேரங்களில் பார்வைகள் வெறிக்கும்.

உழைக்கிற பணத்தில் குழந்தைக்குப் பொருட்கள் வாங்கி அனுப்புவதாம். குழந்தை பற்றிப் பேசயில் கண் கலங்கும். வீட்டுக்குப் போகக்கிடைத்தால் போக விரும்பினாலும், எப்படித் தன்னால் கணவனை/குழந்தையை/பெற்றாரை எதிர்கொள்ள முடியும் என்கிற கேள்வி இருக்கிறது. அவ்வளவு கறை படிந்தவராக உணர்கிறார். எவ்வளவு தேய்த்தாலும் படிந்த கறை போகுமா எனக் கேட்பார். சொல்வதற்குப் பதில் தெரிந்ததில்லை. வெளிநாடு போகவென்று முகவரை நம்பி வந்த
இவவினுடையதைப் போன்ற கதையுடன் இன்னுஞ் சிலர் அங்கு இருக்கிறார்கள்.

நானும் படங்காட்டுறன்


கொஞ்ச நாளாய் [26ம் மாடிக்கு வேலையில் குடி பெயர்ந்ததிலிருந்து என்று வாசிக்கவும் :O) ]கட்டடங்கள்/சாளரங்களைப் படமெடுக்கும் வியாதி வந்திருக்கிறது.

எடுத்தவற்றில் இரண்டு:

கண்ணாடியில் கோபுரம்

பட்டுத்தெறித்ததில் நெளிந்த யன்னல்

சொல்லத்தான் நினைக்கிறேன்

நிறையச் சொல்லோணும் போல, ஆனா என்னத்த எப்பிடி எங்க தொடங்கிச் சொல்லுறதெண்டு தெரியாம முழிச்ச/தவிச்ச அனுபவம் இருக்கா? அப்பிடித்தான் எனக்கு வழமையாவே இருக்கிறது.

nervousஆனா (இல்லாட்டிப் பொய் சொல்லக்குள்ள)தான் நான் வழமையா வளவளவெண்டு அலட்டுறது. இல்லாட்டிக் கொஞ்சம் அமைதியா நல்ல பிள்ளையா (இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ட மாதிரி) இருந்துகொள்ளுவன். ஆனாலும் எப்பவும், ஆரோடையும் பகிர்ந்து கொள்ளோணும் என்டு நினைக்கிறவைகளைப் பற்றிச் சிந்தனை ஓடும். படிச்ச புத்தகமோ, நடந்த விசயங்களோ இல்லாட்டி மனசில வாற எண்ணங்களோ - இப்பிடி நிறைய. என்னதான் நெருங்கின நட்பிருந்தாலும், எதையும் பேசக் கூடியதாயிருந்தாலும் பல விசயங்கள் சொல்லப்படாமலே போய் விடுகின்றன.

கடந்த சில ஆண்டுகளில இது கூடினாப்போல தான் தெரியுது. புதிதாய் எதையுமே கதைக்ககூடியவர்களின் அறிமுகம் கிடைத்து நல்லாப் பழகியிருந்தாலும், ஏதோ தடுக்கும். இவர்கள் என்ன நினைப்பார்களோ என்டுற நினைப்பாலயோ என்டு நீங்கள் நினைச்சா நான் பொறுப்பில்ல. (அந்த எண்ணம் எப்பவாவவது வருமா என்டு அம்மா ஒரே கேக்கிறவ). என்னெண்டு சொல்லத்தெரியல்ல. ஆனா ஏதோ
ஒன்டு - இதப்பற்றிக் கதைக்காம விடுவம் என்டு எண்ண வைக்கும். அதுவும் சில விசயத்துக்குத்தான். [குழப்புறனா?] அது என்ன, ஏனெண்டு இன்னுந் தெரியாது.

சொல்லாமப் பூட்டிப் பூட்டி வைக்கிறதுகள் நிறைஞ்சு மூச்சு முட்டுமாப் போல வரும் சில நேரம். அப்ப மட்டும், வன்தகடு நிறம்பினா கொஞ்சக் கோப்புகளை அழிச்சு இடமெடுக்கிற மாதிரி, சிலது மட்டும் வெளியில கொட்டும். எனக்கிருக்கிற ஒரு தோழிக்கு இதுக்கு முற்றிலும் எதிர்க்குணம். அவ சொல்லாம உள்ளுக்கு வைச்சுக் கொண்டிருக்கிறதுதெண்டு பாத்தா ஒருகைவிரல் விட்டு எண்ணலாம். அந்தளவுக்குக் கதை. முதலொருக்கா அவவிட்டக் கேட்கப் போக, உள்ளுக்கு வைச்சிருந்து என்ன செய்யிறது? சிந்தனை ஊறுகாய் போடுறதோ என்டு பதில் தந்தவ. எப்பிடி அவவுக்கு ஏலுமாயிருக்கென்டு இப்பவும் யோசிக்கிறனான்.

சரி நேர இன்னொராளிட்டக் கதைக்கத்தானே வேண்டாமெண்ணுது மனம், அப்ப எழுதிப் பாப்பமெண்டாலும் (அதுக்கு ஒரு "இது" வேணுமெண்டதையெல்லாம் கணக்கில சேர்க்காம விடுவம்), ம்கூம், வரமாட்டுதாம். சொல்லல்லண்டா ஒண்டும் குறையப் போறதில்லத்தான். ஆனா எத்தினையோ பேர் ஒரு ரெண்டு வரிக் கவிதையிலையோ, இல்லாட்டி ஒரு கதையிலையோ, கட்டுரையிலயோ தங்களை/ தங்களின்ட எண்ணங்களை எவ்வளவு அழகா வெளிப்படுத்திறாங்க என்டு பாத்தால் ஆசையா இருக்கு. அட, இதை நானும் யோசிச்சனான்/வாசிச்சனான்/பாத்தனான் என்டு மனதில படும். ஆனா அந்தளவுக்கு எளிமையா அழகா வெளிப்படுத்தத் தெரியல்லையே என்டு தோணும். பிறகென்ன, சொல்லத் தெரியாட்டிச் சொல்லத் தேவையில்ல என்டிட்டு இன்னும் சேரச் சேர பூட்டிப் பூட்டி வைக்கிறது தான். அது என்னையுமறியாமலேயே வெளிவாறது தாதிக்கு முன்னால உடைஞ்ச கொட்டின மாதிரிச் சந்தர்ப்பங்களிலதான்.

இனி அப்பிடி ஒரு சந்தர்ப்பம் வேண்டாமெண்டு எழுதத் தொடங்கினன். ஏன் அப்பிடிச் சொல்லவெளிக்கிட்டனான்? என்ட எண்ணங்கள் என்னையறியாம வெளிவாறதை எண்ணி வெட்கப்படுறனா? ஆனா அப்பிடி வெளிவாறது எப்பவும் எல்லாருக்கும் நடக்கிற ஒண்டுதானே.. என்டு யோசிக்கத் தொடங்கி, பதில் இன்னும் கிடைக்காம, கேள்வியையும் சேர்த்துப் பூட்டி வைக்கிறன், இப்போதைக்கு.

சுயசரிதை

தனது ஆய்வுக்காக "உம்மைப் பற்றிச் சிறுகுறிப்பு வரைக" என்று (எல்லாரையும்) கேட்ட மதுமிதாவுக்கு-

முன்குறிப்பு: ஆய்வில் என் பதிவைச் சேர்த்துக் கொள்ள இத்தால் (சுயநினைவுடன் என்று நினைத்துக் கொண்டு..) சம்மதம் அளிக்கிறேன்.

வலைப்பதிவர் பெயர்: ஷ்ரேயா

வலைப்பூ பெயர் : "மழை"

சுட்டி(உர்ல்) : http://mazhai.blogspot.com

ஊர்: எதைக் கேட்கிறீங்க? பிறந்ததா? வளர்ந்தவையையா அல்லது வசிப்பதையா? இல்லாட்டி பிடிச்சதையா???

நாடு: முன்னம் இருந்தது இலங்கையில. இப்ப வசிப்பது அவுஸ்திரேலியாவி
ல.

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நானேதான். (தன் கையே தனக்குதவியாமே!!)

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம்: தமிழ்ப்பதிவிலே.. 01/மார்ச்/2004

இது எத்தனையாவது பதிவு: நூறுகள் - 01, பத்துக்கள் - 04, ஒன்றுக்கள் - 08

இப்பதிவின் சுட்டி: http://mazhai.blogspot.com/2006/05/blog-post_25.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்தது எப்பவுமே நாட்குறிப்பு மாதிரி இருந்தது. வாசித்த தமிழ்ப்பதிவுகளின் உள்ளடக்கம் வித்தியாசமாய் இருந்ததால், முயற்சித்துப் பார்க்க என்று சோதியில் கலந்தேன்.

சந்தித்த அனுபவங்கள்: 90% நல்லவையே

பெற்ற நண்பர்கள்: அருமையானவர்கள்.

கற்றவை: நிறைய. என் பார்வைகள்/கருத்துக்கள் சீர்ப்பட்டிருக்கின்றன

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எப்பொழுதும் இருந்ததுதான். புது ஊடகம், அவ்வளவுதான் வித்தியாசம்.

இனி செய்ய நினைப்பவை: ஆரம்பிப்பதை முடிப்பது. நிறைய இடம் பார்க்க வேண்டும். புத்தகங்களும் வாழ்க்கையும் நிறையப் படிக்க வேண்டியதிருக்கிறது. இன்னும் நிறையச் சிரிக்கவும் வேண்டும்.. நான் சிரிப்பது காணாதாம்!! ஆ!மறந்துவிட்டேன்..தண்ணீரும் குடிக்க வேண்டும் இப்போதையதை விட அதிகமாக.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: எல்லாரையும் மாதிரி ஆசையும் கோபமும் கனவும் ஆதங்கமுமென்று எல்லாம் நிரம்பிய, இன்னும் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறவர்.(<<<"வள்" போடாமல் "வர்" போட்டதன் காரணம்: தன்னைத்தானே முதல்லே மதிக்க வேணுமாமே!)

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: 1)மனிதர்களைப் போலச் சிறந்த ஆசான்கள் யாருமில்லை.(தத்துவம் தத்துவம்!!). 2) நன்றி.. வணக்கம்.

தேங்கிய சில - I

பெண்களுக்கான அரச சார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். அங்கே வரும் பெண்ணொருவர் என்னைக் கூப்பிட்டு, இன்னொரு நிறுவனத்தின் சார்பில் சில பெண்களை நேர்முகங் காணவேண்டியிருக்கிறது. முடியுமா எனக் கேட்டா. சரியென்று ஒத்துக் கொண்டேன். நேர்முகத்திற்குரிய கேள்விகளடங்கிய தாளில் என்னவெல்லாம் இருந்ததென்று ஞாபகமில்லை. ஆனாலும் காணவிருந்த பெண்களிடம், அவர்களைப் பேசவிட்டு, அந்தப் பேச்சோட்டத்தின் இயல்பு மாறாமல் கேள்விகளுக்கு விடைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு பணித்திருந்தார்கள்.

பெண்களுக்கான தடுப்பு நிலையம். என்னையும், அழைத்த பெண்ணையும் சேர்த்து மூவர் மட்டுமே. பழைய அரச மருத்துவமனைகள் பார்த்திருக்கிறீர்களா? காவி நிறமடித்து, சீமெந்துத் தரைக்குச் சிவப்படித்து, இருக்கையென்ற பெயரிலே இற்றுப் போன வாங்குமாக... அப்படித்தான் இருந்தது நாங்கள் போன இடம். நாலைந்து கதிரைகளும் போடப்பட்டிருந்தன. அவை அந்தச் சூழலுக்குப்
பொருத்தமில்லாமல் திணிக்கப்பட்டவைகளாய்த் தெரிந்தன.

முன்னமே இவர்கள் அனுமதி பெற்றிருந்தார்கள். அதனால், பணிப்பாளரைப் பார்த்ததும் ஒரூ குறிப்பேட்டில் எங்கள் பெயர், அடையாள அட்டை இலக்கம் என்பவற்றைக் குறித்துக் கொண்டு உள்ளே போக அனுமதித்தார்கள். உள்ளிருந்து வெளியே வரவோ, வெளியிலிருந்து உள்ளே போகவோ (எப்படிப் பார்த்தாலும்) ஒரே ஒரு கதவுதான். அந்த மரக் கதவுக்கும் ஒரு கதவு. பூச்சுக்கும் மேலாய் ஆங்காங்கே துரு தலைகாட்டும் இரும்புக் கிராதி போட்டது. மரக்கதவு திறந்திருக்கிறது, இரும்புக் கதவுக்கு ஆமைப் பூட்டு. கதவைத் திறக்கப் போன காவலாளியுடன் கூடவே போகையில், அந்தக் கதவுக்குப் பின்னால் எத்தனை வகை உணர்ச்சிகளைத் தேக்கிக் கொண்ட முகங்கள். புன்னகைக்கும் அங்கே பஞ்சமிருக்கவில்லை. கதவு திறக்கிறது. ஓடி வந்து சூழ்ந்து கொள்கிறார்கள். எங்கேயிருந்து வருகிறோம், எதற்கு, என்ன கொண்டு வந்திருக்கிறோம்... கேள்வி மேல் கேள்வி. பணிப்பாளர் இந்தக் கூச்சலைக் கேட்டு, வந்து போட்ட அதட்டலில் கலைந்து போனார்கள். ஆனாலும் தூண்களுக்குப் பின்னால் நின்று பார்த்தபடி.

ஒரு பெண் எங்களைக் கவனிக்கவேயில்லை. கையில் குழந்தையை வைத்துத் தாலாட்டுவது போன்று பாவனை செய்து கொண்டிருந்தார். திடீரென கைகளை ஆட்டிப் பெருங்குரலெடுத்து "ஐயோ! என் பிள்ளை" என்று கத்தினா. அந்தக் கத்தல் அதிர்வைக் கொடுத்தது எனக்கு மட்டும்தான். மற்றவர்களெல்லாரும் ஒன்றும் நடவாதது போல் தத்தம் வேலை. என்னுடன் வந்தவர்களும் கூட. என்னுடன் வந்த பெண்ணொருவ நாம் அன்றைக்கு வெளியில் வந்ததும் அந்தக் கத்தலிலும் சூழலிலும் என் முகம் வெளிறிப் போனதாகச் சொல்லப் போவது எனக்கு அப்போது தெரியவில்லை.

என்ன ஆயிற்று என்று கேட்டேன். பிறந்து சில நாட்களேயான குழந்தையுடன் தெருவில் அலைந்திருக்கிறா. பிடித்துக் கொண்டு வந்து உடல் நலமின்றி இருந்த குழந்தையை அவரிடமிருந்து பிரித்துத் தனியே வைத்திருந்திருக்கிறார்கள்.

[அவவைப்பார்த்ததும் ஆறாம் வகுப்புப் படிக்கையிலே மட்டக்களப்புப் பேருந்து நிலையத்தில் பைத்தியக்காரி என்று எல்லாராலும் ஏளனஞ் செய்யப்பட்ட பெண்தான் ஞாபகத்திற்கு வந்தார். எப்படியென்று இப்போது ஊகிக்கக்கூடிய நிலையிலே அவர் கருத்தாங்கிக் குழந்தை பெற்றெடுத்து, பிறகு இரண்டு மூன்று மாதங்களுக்குக் காணாமல் போய் மீண்டும் ஒரு சுட்டெரிக்கிற இரண்டு மணி வெயிலில் தேநீர்க் கடையில் வாங்கின கொதிக்கும் தேநீரை அந்தக் குழந்தைக்குப் புகட்ட முயற்சித்து அது வீலென்று அலறியதில் அடி கொடுக்கும் பெண்ணாய் மீண்டும் அதே பேருந்துத் தரிப்பிடத்திற்கே குடிவந்தா. பிற்பாடு என்ன ஆயிற்றென்று தெரியவில்லை.]

தடுப்பு நிலையப் பெண், குழந்தை இறந்ததைச் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாதளவிற்கு மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறா. காண்பவர்களிடம் போய் "என் குழந்தையைக் கண்டாயா" என்பதும், பதில் சொல்லாவிடில் அவர்களைத் திட்டுவதுமாக இருந்தவவின் அறிமுகத்துடன் அந்த தடுப்பு நிலையத்தின் கதவு அன்றைக்குத் திறந்து கொண்டது.

புதுசு


யாகூ மின்னஞ்சல் புது வடிவமா புதுசா வடிவா வந்திருக்கு என்று போன வாரம் கிட்டத்தட்ட 2 மாசத்துக்குப் பிறகு யாகூவை எட்டிப்பார்த்த போது கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன். நேற்றுப் பார்த்தா "சுடு அஞ்சல்" அந்த ஐடியாவத் தானும் சுட்டு புதுப் பிறவி எடுத்திருக்கு! எல்லாரும் கூகிளின் "சுயமாகப் புதுப்பிக்கிற" விளையாட்டுத்தான்.

ஹொட்மெயிலில், அவுட்லுக்கில் செய்வது போல வலதுசொடுக்கில் செய்கைகளுக்கான தெரிவும், சொடுக்கி, ஒன்றிலிருந்து இன்னொரு ஃபோல்டருக்கு (இதுக்குத் தமிழ் என்ன? "கோப்புப் பை"யா?) இழுத்துப் போடவும், அஞ்சலின் உள்ளடக்கத்தைப் பார்க்க ஒரு பகுதியுமென்று நல்லாத்தானிருக்கிறது.


யாகூ தனது இணையத்தளத்தையும் புது வடிவமாக்கியுள்ளது. அஞ்சல் கணக்கில் நுழைந்தால் கிறுக்குவதற்கு கிறுக்கற்புத்தகமும் தருகிறார்கள்.

ஆறுதலாய் ஆராய்ந்து பார்த்து ஒரு ஒப்பீடு எழுதணும்.

என்ன விலை

திரு(க்)கோணமலைப் படுகொலை சம்பந்தப்பட்ட கட்டுரைகளிரண்டுடன் படங்களும் கைக்குக் கிடைத்தன. பார்த்த பின் ஏன் பார்த்தோமென்று இருந்தது. தாங்கவே முடியவில்லை. மண்ணில் அரைவாசி புதைந்து கிடந்த உடல், தாயின் சடலத்தினருகே தலையின்றிக் குழந்தை... எழுதும் போதே மனம் பதைக்கிறது. நேரிற் பார்த்தவருக்கும் படமெடுத்தவருக்கும் எப்படி இருந்திருக்குமென்று கற்பனை பண்ணவே தயக்கமாயிருக்கிறது.

இலங்கை சென்று, போன கிழமை திரும்பிய நண்பரிடம் (அவருக்கு நான் அந்தக் கட்டுரை இணைப்பினை அனுப்பியிருந்தேன்) இதைப்பற்றிப் பேசுகையில், "நீங்க அனுப்பினதெல்லாம் பார்த்தா வெளிநாடுகளிலே இருக்க்கிறவர்களுக்குத்தான் மனம் வருத்தப்படும். ஏனென்றால் வெளிநாடுகளிலே குறிப்பாகத் தொலைக்காட்சிகளிலே காட்டுபவைக்கெல்லாம் பார்ப்பவர் மனதைக் கருத்தில் கொண்டு viweer advice என்று வன்முறைக் காட்சியா, சிறியவருக்கு உகந்ததா, பயப்படும்படியானதாய்க் காட்சியமைப்பு இருக்குமா என்றெல்லாம் நிகழ்ச்சி/செய்தி தொடங்க முன்னமே போடுவார்கள்.அங்கே இதெல்லாம் இல்லை. எடுத்தவுடன் இரத்தக்களறியாய்க் காட்டுவது சாதாரணம். இலங்கை ஊடகங்களில் இவற்றை விடக் கொடூரமான காட்சிகள் படங்கள் காட்டப்படுகின்றன/ பிரசுரிக்கப்படுகின்றன" என்கிறார் அவர்.

குழந்தைகளும் வயது போனவர்களும், சட்டென்று பயப்படும் இயல்புடையவர்களும் பாதிக்கப்பட மாட்டார்களா என்று கேட்டோம். பதிலாய்க் கிடைத்தது:
"ஊடகங்களுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. செய்தியை எவ்வளவு graphicக் காட்ட முடியுமோ அப்படிக் காட்டுவார்கள். பரபரப்புத்தான் அங்கே விலைபோகிறது. மற்றது, மக்களும் பயப்பட்டு என்ன ஆகப்போகுது? அவங்களுக்கு, தெருவோரத்தில் சுடப்பட்டு இறந்தவர் பிணம் என்பது தினப்படி காணும் ஒன்றாகவே இருக்கிறது. அங்கே, ஒருத்தர் இறந்து விட்டாரென்றால் அது மிகச் சாதாரணமான ஒன்றாகவே இருக்கிறது. இறப்பு எப்போதும் வரக்கூடும் என்பதை ஞாபகப்படுத்தவே தேவையில்லை. நன்கு அதை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். ஏதேனும் ஒரு சம்பவத்தில் நான்கு பேர் இறந்து விட்டர்களென வைத்துக்கொள்வோம். அதைச் செய்தியில் சொன்னால், 'நாலு பேர்தானாமே செத்தது. அன்டைக்கு 15 பேர் செத்தவங்க' என்று ஏதோ க்ரிக்கற் ஸ்கோர் சொல்வது போலச் சொல்லிப் போவார்கள். பத்திரிகையில் வரும் படங்களிலுள்ள காட்சிகளுக்கும் அதே கதியே. கழுத்தில் துப்பாக்கிச் சூட்டோடுள்ள சடலத்தின் படத்தைப் பார்க்கிலும் தலை சிதறிய சடலத்தில் படம் அதிகமாய்ப் பேசப்படும். சில வேளைகளில் இவ்வளவுதான் காயமா என்கிற ஏமாற்றத் தொனியும் தென்படும்."

கழுத்தில் பாய்ந்து உயிர் குடித்ததுவும், தலையைச் சிதறடித்து உயிர் எடுத்தததும் அதே சன்னம் தான், போனதும் உயிர்தான். ஆனாலும் அவற்றிலே வித்தியாசம் பார்த்து, எது வலித்திருக்கும் அதிகமென்று ஆராய்ச்சி செய்யுமளவுக்குக் குரூரர்களாகிப் போனோமா? :O(

மதிப்பில்லா உயிருக்கு மதிப்பேயில்லாத சூழலில், வன்முறகளின் தாக்கங்களைத் தம்மில் நிறைத்துக் கொண்டு வளரும் பிள்ளைகள் தாமே வன்செயலாளராவதில் வியப்பில்லை. உளவியல் பாதிப்புத்தானே அதுவும்! "பைத்தியம்" என்பதை மட்டுமே உளநலக்குறைவாய் அறிந்த சமூகத்தில், யுத்தத்தின் போது ஏற்படும் பாதிப்புக்கு மருந்தில்லை. (யாழிலிருந்த சகலருக்கும் ஒரே ஒரு உளவியல் மருத்துவர்/நிபுணர் மட்டுமே இருப்பதாக 2001/2002ல் அறிய வந்தது ஞாபகம் வந்து தொலைக்கிறது).

அடுத்த கேள்வியாய் எழுவது, ஊடகச் செய்தியாளரது உளநலம். கருத்தில் கொள்ளப்படுகிறதா? ஆமென்றால் என்ன விதத்தில் பேணப்படுகிறது? நேரே போய் இரத்தமும் சதையுமாய் தெறித்துக் கிடக்கிறதை, இலக்கின்றி வெறிக்கிற கண்களை.. என்று இன்னும் எத்தனையையுமோ தம் கருவிகளால் பதிவு செய்யும் தம் ஊழியரைப் பற்றிச் செய்தி நிறுவனங்களுக்கு அக்கறையுண்டா? செய்தியும் அதற்குப் படமும் கிடைத்தால் சரி என்கிற நிலைதானே நிலவுகிறது? இது சரியானதுதானா?

பெட்டகம்