ஒளித்தலும் வெளித்தலும்

 

காலை. யன்னற் கண்ணாடியோரம் அமர்ந்திருந்தேன். உள்ளங்காலைச்  சூடாக்கிய வெய்யில் கண்ணாடிக்கு வெளியேயிருந்த சிறு செடியின் இலைகளின் நிழல்களோடு சேர்ந்து என்மீது ஓடிப்பிடித்தும் கணுக்கால் முழங்கால் என்று ஏறியும் விளையாடியது. காலை வெய்யில்தான் எத்தனை இதமானது. கண்ணாடிக்கு அப்பாலிருந்த செடிக்கு சில யானாக்களைத் தொடுத்தது போல வளைந்து வளைந்து செல்லும் விளிம்பு கொண்ட இலைகள். அந்தப் பசிய இலைகளில் பட்டு, இதோ தொட்டு உணர்ந்து விடலாம் என்பது போல ஊறியிருந்தது மஞ்சள் வெய்யில். அவற்றின் மிக மெல்லிய நரம்புகள் கூட அப்படியே தெரிந்தன. சில இலைகளுக்குக் கொஞ்சமே வெய்யில் கிடைத்தது. கிடைத்தளவிற்குத தங்களைக் காட்டிக் கொண்டன அவை.  

மனிதர்களைப் பற்றி நினைத்தேன். இந்த இலைகளைப் போலத்தான் அவர்களும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுகிறார்கள். தம்மை வெளிப்படுத்துகிறார்கள். இரகசியங்கள் எல்லாரிடமும் இருக்கின்றன. 

அன்பும்.

மலர்தல்


எழுதுவதற்கெனக் காலையில் யோசித்து வைத்திருந்ததை ஓரமாய் வைத்துவிட்டு வேறொன்றைக் கையில் எடுத்திருக்கிறேன். புதிதில்லைத்தானே.

இங்கே ஒரு தோழி இருக்கிறார். எதிர்பார்த்தேயிருக்காத விதத்தில் வாழ்க்கை எங்கள் கொஞ்சப் பேருக்குச் சேர்த்து ஓங்கி ஒரு அறை விட்ட தருணத்தின் அடுத்தடுத்த நாட்களில் நாம் சந்தித்தோம்.  என் பெயரில் எனக்கு என்னைத் தவிர்த்தே இருபதுக்கும் மேற்பட்டோரைத் தெரியும் என்பதால் அரிய பெயர்களில் பெருவிருப்புண்டு. அவர் பெயரில் அவரை மட்டுமே நான் அறிவேன். உதிக்கும் சூரியனின் பெயர் கொண்டவர். நாங்கள் சூரியோதயம் காண்பதற்காக அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் கூட வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறோம். போன ஆண்டின் அநேக வார இறுதிகளை இப்படியான காலை அழகாக்கியது. வேறு இருவரும் வருவார்கள் - மாறி மாறி. ஆனாலும் அதிகம் இவரே. தன்னைத் தானே சந்திக்க அவரை நான் அழைத்துச் செல்கிறேன் என்கிற என் மொக்கை நகைச்சுவையையும் பொறுத்துக் கொண்டு வருவார். அலைவரிசை மிகவும் ஒத்துப் போகும். பேசாது கழிகின்ற பொழுதுகள் கூட இயல்பாகவே இருக்கும். பேச ஒன்றுமில்லாவிட்டால் அந்தரித்துப்போய் ஏதோவொன்றை யோசித்துத் தேடியெடுத்துப் பேசவேண்டிய தேவையொன்றை மனம் உணராமல் இருப்பது எத்தனை சுகம்! என்னவொரு வரம்! அது எங்களுக்கு வாய்த்திருக்கிறது.

கொஞ்சநாள் பரவாயில்லாமல் இருந்துவிட்டுத் திரும்பவும் பழைய பள்ளங்களுக்குள் போகிற மாதிரித்தான் கடந்த சில கிழமைகள் கழிகின்றன. மீள்தல் என்பது விக்கிரமாதித்தனையும் வேதாளத்தையும் ஒத்தது. மடுவுக்குள் மனம் கிடக்கிறதென்பதைப் புறச்சுட்டல்களின்றிக் கண்டு கொள்ளல் என்பதுவே ஒரு பெரிய படிதான். பிறகு தீர்மானித்துக் கொள்ளவேண்டியது கிடப்பதா எழும்புவதா என்று. கிடக்கத்தான் சொல்லும்.. அதுவும் எழுவதற்குத் தேவைப்படும் பலத்தையும் தொடர்முயற்சியையும் உணர்ந்த பிறகு, இன்னும் உரக்கச் சொல்லும்.. "கிட .. கஷ்டம்.. எதற்கு.. யாருக்காக.. ஏன்.. பலனில்லை..". இப்படிப் பல சொல்லும் அதே மனம்தான் விக்கிரமாதித்த முயற்சிகளுக்கு அடிப்படையாக 'எனக்காக' என்றும் கத்தும். அந்த ஒரு சொல்லுத்தான் ஊறும் முதல்  ஈரம். அப்படித்தானே எந்தப் பெரிய ஆறு(வது)ம் தொடங்குகிறது.

நிறைய நாட்களுக்குப்பின் போன கிழமை நீண்டதூரம் போகலாம் என்று நடக்கச் சென்றேன். வேனிற்காலம். பூத்துக் குலுங்கியும் கொட்டியும் எங்கும் அழகு கடை பரப்பி இருந்தது/இருக்கிறது. அதிலும் ஜக்கராண்டா என்கிற, ஊதாப்பூக்கள் கொண்டதொரு மரம் நான் நடக்கப் போன பகுதியில் நிறைய. சிட்னியில் இக்காலம் இந்த மரத்தின் பூத்திருவிழாவுக்குப் பெயர் பெற்றது. அன்றைக்கு 4 மணித்தியாலங்கள் மட்டுமே நடந்திருப்பேன். இளவெயிலும் குளிர்காற்றும் பூக்களும் மதில் மேலிருந்தபடி என்னைக் கண்ணெடுக்காமல் பார்த்திருந்த பூனையும் மனதை ஆற்றின. நடுவில் ஒரு பூங்காவில் ஊஞ்சலுமாடி, கம்பிவேலிக்கு அப்பால் இருந்த ஒரு செடி வகையையும் அதன் பூக்களையும் ரசித்து, வீசிய காற்றினால் அவற்றைக் கலங்கலில்லாமல் படமெடுக்க முடியாமல் கண்ணிலும் மனதிலும் மட்டும் தேக்கியெடுத்த பின் அந்த குளத்துக்குக் கிட்ட வந்து சேர்ந்தேன். தோழிதான் மனதில் வந்தார். அவருக்கும் பிடிக்கும் என்று தோன்றிற்று. 

தோழியைச் சந்திக்கும் வாய்ப்பு ன்றைக்கு அந்தக் குளத்துக்குக் கிடைத்தது.  அவர் குரலை மட்டுமே  கேட்டிருந்தாற் கூட அறியலாம் அவர் எத்தனை வியந்தும் மகிழ்ந்தும் அந்தக் குளத்திலிருந்த தாமரைகளைப் பார்த்தார் என்பதை. எனக்கு ஒலி-ஒளி இரண்டுமே கிடைத்தன.

உதிக்கும் சூரியனைப் பார்த்து மலரும் தாமரையைத் தெரியும். மாறி நடந்ததை இன்று நான் கண்டேன். மலர்கின்ற சூரியன் என்ன்ன்ன அழகு தெரியுமா?

குவளையைத் தாண்டி வழிகிறது வாஞ்சை

காலையில் மனதில் வருவதையெல்லாம் எழுதுமொரு பழக்கத்தை சில கிழமைகளாகக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கும் எழுதிக்  கொண்டிருக்கையில் தற்செயலாக நிமிர்ந்தபோது என் கண்ணிற்  பட்டது. என்  வழமையான குவளைதான். அறைக்குள் அதை எடுத்து வருவது மிகக்குறைவு. எப்படியோ இன்றைக்கு என்னுடன் கூடவே வந்து  விட்டது. ஒவ்வொரு நாளும் பாவிப்பதுதான்.. ஆனால் பலநாட்களாக நான் நினைத்துச் சுவைக்காத ஒன்றை அது இன்றைக்கு மீட்டியது. 


மனவழுத்தமும் உடைவும் நெருங்கிய இரு இளையோர்களின் இறப்பும் 2019 இனை மறக்க முடியாத ஆண்டாக மாற்றியிருந்தன. அவுஸ்திரேலியாவில் 'granny flat ' என்று சொல்லப்படும் வீட்டோடு (பெரும்பாலும்)இணைந்த ஒரு பகுதியில் குடியிருந்தேன். அந்தச் சிறுவீடு வசதி மிக்கது. வெளிச்சம் மிக்கது. படுக்கையறையின் உட்கூரை சாதாரணமாக இங்கு  இருப்பதை விட உயர்ந்தது. 'பெரிய' வீட்டையும் என் பகுதியையும் ஒரு  கதவுதான் பிரிக்கும். இந்தப்பக்கம் ஒரு சீவன்.  மற்றப்பக்கம் 3 சீவன்கள். அவற்றில் ஒன்றிடம் என்னைச்  சனி ஞாயிற்றுக்கிழமைகளில் எழுப்பும் அலாரம் இருந்தது. கட்டிலில் எழும்பி இருந்து என் கால் நிலத்தில் பட்டவுடன் அலாரம் ஓய்ந்துவிடும். அதற்கு நாலுகாலும் ஒரு வாலும்  என்று சொல்லத் தேவையில்லைத்தானே? நான் எழும்பி விட்டேன் என்று எப்படித்தான் தெரியுமோ...வீட்டில் மற்ற இருவரும் இந்த நாலு கால் ஆளின் மனிதப் பெற்றோர் - ஹானியே (அம்மா) +ஆதில் (அப்பா).  நன்றாகத்தான் எல்லாம் இருந்தன. 2020 மார்ச் மாதம் ஆதில் என்னிடம் வந்தான். நான் வசிக்கும் பகுதியில் இன்னும் ஒரு மாதத்தில் குழந்தைப் பராமரிப்புச் சேவையைத் தொடங்க முடிவெடுத்திருப்பதால் எனக்கு ஒரு மாதம் தவணை தர வந்திருந்தான். அந்தரப்பட்டுச் சொல்வது புரிந்தது. நானும் ஓம், பிரச்சனையில்லை இடம் பார்க்கிறேன், சங்கடப்படாதே என்று சொல்லி அனுப்பினேன். பிறகு ஒரு இருபது நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்து கதவைத் தட்டி, "உன்னை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வீட்டில் ஒரு அறையில் நீ வாடகைக்கு இருக்கலாம், இப்போதுள்ள பகுதியினைப் பிள்ளைகள் இல்லாதபோது பாவித்துக்கொள்" என்றும் சொன்னான். கொஞ்சநாள் இருந்து பார்த்துவிட்டு எனக்குச் சரிப்படவில்லையென்றால் நான் வேறிடம் பார்ப்பதென்று முடிவெடுத்தேன். ஒத்துக்கொண்டான்.

இரண்டு கிழமைகளின்பின் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய வேண்டி வந்தது. கோவிட். முதல் மூன்று வாரங்களும் பகலிலே அந்தப்பக்கம் திருவாளர் நாலுகால் ஒருவால் சார்லியும் இந்தப்பக்கம் இரண்டுகால் நானுமாய் இருந்தோம். தெருவில் போகிறவர்களை பார்த்து அவன் குரைக்க அதனால் அவன் மீது நான் குரைக்க என்றும் (தனிமையினால் ஏற்படுகிறது என்று நான் உணர்ந்து கொள்ளாத) ஒரு வித அரியண்டமான உணர்வு என்றும் வேலையோடு சேர்ந்து நிரம்பின பொழுதுகள்.

முதலில் வந்தவள் ஸோயி. இரண்டு வயது. இந்தோனேசியப் பெற்றோர். இளஞ்சிவப்பு நிறம் மட்டுமே கொண்டவை அவளது ஆடைகள். நிறத்தின் கடுமை கூடிக்குறையுமே தவிர மாறவே மாறாது. அப்பா காலையில் அழைத்து வருவார். கத்தியழுது வழியனுப்புவாள். பிறகு ஹானியேவை ஒரு நாய்க்குட்டியைப் போலத் தொடர்ந்தபடி இருப்பாள். காலை விளையாடி, மதியம் சாப்பிட்டுத் தூங்கி எழுந்து மறுபடியும் விளையாடி முடித்துக் கொறிப்புக்கள் சாப்பிட்டு ஹானியேவுடன் வண்டியில் ஏறித் தன் வீடு செல்லும்மட்டும் என்னைப்  பார்ப்பாள் அன்றிப் பேச மாட்டாள். என்னுடன் பேச நிறைய நாட்கள் எடுத்தது அவளுக்கு. பிறகு இழுத்து வைத்துக் கதை சொல்வாள். வேறு எவரோடும் பேசக்கூட முடியாது.

இவளுக்குப் பின் வந்தாள் ஏழு மாதத்து ஆர்ட்டமிஸ் - பாரசீகத்து ஹானியேவின் மருமகள். பெயரைத் தட்டச்சும் போதே ஒரு பென்னாம் பெரிய புன்னகை விரிகிறது - முகத்திலும் நெஞ்சிலும். அடுத்த மாதம் வந்தது ஒரு வயதுடைய லூனா. நிலா. லெபனானும் இத்தாலியும் அவள் பூர்வீகத்தில். அழகிய பெரிய கண்கள். அடர்ந்து நீண்ட இமை. வாரத்தில் இடைவெளி விட்டு இரண்டு நாட்கள் மட்டுமே வருவாள். முதலிரண்டு நாட்கள் வீறிட்டு அழுது சிவந்த கண்களும் நனைந்து ஒட்டிய  இமைமயிர்களும் கமறிய குரலும் இன்னும் ஞாபகமிருக்கின்றன. இரண்டு பைகள் வைத்திருந்தாள். அணிந்துகொள்ளும் தூங்கும் பைகள்.

இப்படி ஒவ்வொருத்தராய் இன்னும் சிலரும் என் தோட்டத்துக்குள் புதிது புதிதாய்ப் பூத்தார்கள்.

அவர்கள் நித்திரை கொள்ளும் அறையாகிய என் முன்னாள் படுக்கையறைக்கு ஒரு அகன்ற வழுக்கிக் கதவு (sliding door ) இருந்தது. அதன் நிலையான கண்ணாடிக்கருகில் என் மேசை. இரண்டு தொட்டில்களையும் காணாதவண்ணம் சேணம் கட்டியது போல இருக்க வேண்டும். தப்பித் தவறிப் பார்த்துவிட்டால் போதும். கைகளைத் தூக்கிக் கொண்டு ஒரு மயக்கும் சிரிப்பை அள்ளித் தெளித்தபடி சிறை மீட்கச் சொல்வார்கள். மீட்காவிட்டாலும் மன்னித்தருளுவார்கள்.

ஒரு நாள், முதல் பந்தியில் சொன்ன என் குவளையில் இருந்ததெல்லாம் தீர்ந்து போக அதை நிரப்புவதற்காய் எழ முற்பட்டேன். அப்போதுதான் எழும்பி இருந்த லூனா ஒளிரும் என் திரையைத் தொட்டிலில் சட்டத்தைப் பிடித்தபடி நின்று பார்ப்பதைக்  கண்டேன். அப்படித்தான் நினைத்தேன். ஒள என்றாள். எனக்கு விளங்கவில்லை. திரையைப் பார்த்தேன். எக்ஸெல் என்னைப் பார்த்தது. குவளையைக் கையில் எடுத்ததும் அதைக் காட்டி மீண்டும் ஒள என்றாள். என்னடா இது வடிவேலுக்கு வந்த போட்டி என்று நினைத்துக் கொண்டது ஞாபகமிருக்கிறது. நீருக்குரிய அவளது சொல்லுமல்ல அந்த ஒள. அவள் மீண்டும் சொன்ன போதுதான்  எனக்கு ஓடி வெளித்தது அவள் குவளையில் குடியிருக்கும் ஆந்தைகளைச் சொல்கிறாள் என்று(owl). அந்தக் குவளையின் வெளிப்புறம் முழுதிலும் இருபத்திச் சொச்ச ஆந்தைகளும் பலவண்ண இலைகளும் மரக்கிளைகளில் அசையாதிருக்கின்றன.

அவ்வாந்தைகளுக்கு அன்று அதியற்புதமானதொரு நாள். நிலவு அவற்றைத் தொட்டது. ஒள ஒள என்று கண்கள் விரிய தன் பட்டான சுட்டுவிரல் கொண்டு ஒவ்வொன்றாய் அடையாளம் கண்டு அன்பைப் பூசியது. நிலவு தடவித்தரும் என்று எந்த ஆந்தைதான் யோசித்திருக்கும்?

பெட்டகம்